சனி, 27 ஜூன், 2009

மீண்டும் உ.வே.சா. பிறக்க வேண்டும்.

ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் ?
அதுவே கனிந்து அங்கிருந்து
அதுவே நழுவிஅது விழுந்து
அதுவே கவியாய் நற்சீராய்
அதுவே அமைந்ததென் றக்கால்
முதுமா மறைக்கு முதல்வோனும்
முகுந்தன் எனுமிந் திரனும்
புதிதாம் என்ன அதிசயிப்பார்
புத்தகத் தைக்கற் றோரே.
(விலக்ஷணானந்த ஸ்வாமிகள்)
அந்தக் கவிதை எப்படி உருவாகிறது? அதன் பயன் என்ன?
பாடிய பாடகன் ஓடி மறைந்தும்
பாட்டால் அவனை நாட்டார் அறிவார்
அதுவே கவியின் அழியா உயிராம்
..... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆர்வத் தீயால் அன்புள் ளுருகி
அருவி போல வருவது பாட்டாம் !
குரலும் சுருதியும் கூடிக் குழைந்து
கமகமும் தாளமுங் கனிவுறப் பொருந்தி
பாட்டின் கருத்துப் பளிச்சென விளங்கக்
கேட்டா டுள்ளங் கிளர்ச்சி கொள்ள
உணர்ச்சி ததும்ப உள்ளங் குழைய
நவரஸ பாவனை நயமுற நாட்டி
பரவையும் வசந்தப் பறவையும் போலக்
கலையின் னுள்ளம் கடவுளைக் காட்ட
வீடு திருந்த நாடு சிறக்கவே
இயல்பா யிசைத்தல் இசையென லாமே !
இன்பப் பொருளே இசையின் பயனாம் !
(கவியோகி சுத்தானந்த பாரதி)
எல்லாராலும் ஏற்றப் படும் கவிதை உலகிலே ஒப்பார் மிக்கார் இன்றி நினைத்தநேரத்திலே,நினைத்தபொருளைப்பற்றி அருவியாய், கவிதைகள் ஆயிரம் ஆயிரமாய்ப் பொழிந்தவர் கம்பம் அனுமந்தன்பட்டி மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார். (ஆசு கவி எனப் படாமல் மதுரகவி விருது மட்டும் கொடுத்ததும் ஏனோ தெரிய வில்லை. ) மேலே சொன்னபடி இவரது ஒரு லக்ஷத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் அமைந்திருப்பது பிரமிக்க வைப்பது. படைத்தவன் அவரை அந்த நாள் மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே படைத் திருந்தால் அவர் உலகப் பெருங் கவிகளுள் முதல்வராகி, இன்று நமக்குத் தெரிந்த சக்கரவர்த்திகளையும், பேரரசுகளையும் வெறும் குறுநில மன்னர்கள் ஆக்கியிருப்பார். ஆனால், இவர் பிறந்து வாழ்ந்ததோ, அவரே வருத்தப்பட்டபடி ஆங்கில மோகத்தால் நம்மவர்கள் தமிழைப் புறக்கணிக்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் ! பாடியவைகளோ படைத்தவனைப் பற்றியே ! அவ்வப்போது வைத்தியம், சோதிடம் பற்றியும் ! ஆனால் மறந்தும் மானிடர் பற்றிப் பாடவே யில்லை . பட்டங்கள் வேண்டிப் பாடினாரா என்றால் அதுவும் இல்லை! யாராவது அவரை அணுகி பெருமாளைப் பற்றிப் பாடச் சொன்னால் அந்த இடத்திலேயே பாடல்களை இயற்றி கேட்டவர்களிடமே கொடுத்து மகிழ்ந்த அற்புதர். தான் இயற்றியவற்றை நகலைக் கூடத் தன்னிடம் வைத்துக் கொள்ளாத விந்தைக் கவிஞர். அதனால், அவர் இயற்றிய பாடல்களில் பாதியைக் கூட அவர் வாரிசுகளால் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. கிடைத்தவற்றையும் முழுமையாக அச்சேற்ற இயல வில்லை. மத்திய அரசு உதவி பெற்று சில நூல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன. [மத்திய அரசின் உதவி பெறுவதற்கு யாஹூ குழுமங்களிலும், கூகுள் சந்தவசந்தம் குழுவிலும் நன்கு அறிமுகமான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி பங்கும் குறிப்பிடத் தக்கது]

அவர் இயற்றியதாகத் தெரிந்தவற்றுள் தங்களிடம் இல்லாதது அல்லது கிடைக்காதவை என்று அவர் வாரிசுகளுக்குத் தெரிந்திருப்பதன் பட்டியல் இது ! நூல் பெயருக்கு அருகில் இருப்பது நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

1. அயக்கிரீவர் மாலை 10
2. அலங்காரக் கிருஷ்ணன் பதிகம் 11
3. அலர்மேலு மங்கை நாச்சியார் மாலை 10
4. அவதார ரகசியங்கள் 20
5. அன்பில் மாலை 30
6. அனுமன் அந்தாதி 110
7. அனுஷ்டான மாலை 30
8. அஷ்ட ஐஸ்வர்ய மாலை 10
9. ஆசாரியன் அருளமுதம் 1250
10. ஆண்டாள் கல்யாணம் 10
11. ஆண்டாள் மாலை 10
12. ஆதிகேசவன் மாலை 10
13. ஆராவமுதன் மாலை 30
14. ஆழ்வார்கள் அமுதம் 4000
15. இரகுநாதன் தூதன் கோவை 100
16. இராசக் கிரீடை 16
17. இராதாகிருஷ்ண தத்துவமாலை 21
18. இருக்கை இருந்த பெருமாள் மாலை 10
19. உருக்குமணி கல்யாணம் 16
20 உலகளந்த உத்தமன் பதிகம் 15
21. ஒப்பில்லா அப்பன் மாலை 10
22. திரிகூடல் திரு அந்தாதி 105
23. திருக்கோஷ்டியூர் மாலை 10
24. திருத்தங்கல் அப்பன் மாலை 10
25. திருநாராயணபுரம் செல்லப் பிள்ளை பதிகம் 10
26. திருப்பதி மாலை 10
27. திருவில்லிப்புத்தூர் மாலை 10
28. திருமாலிருஞ்சோலைப் பலசந்தமாலை 110
29. திருவரங்கன் நீரோஷ்டக கொம்பில்லாயமகவந்தாதி 101
30. திருவரங்கப் பதிகம் 10
31. திருவள்ளூர்த் திருப்பதி மாலை 20
32. திருவில்லிபுத்தூர் மான்மியம் 1250
33. தினசரி வாழ்வு 200
34. தேர்வண்டிக்கால் சரித்திரம் 410
35 தேசிகன் மாலை 10
36. தேவநாதன் மாலை 10
37. நவதிருப்பதி மாலை 10
38. நாராயண வெண்பா 3000
39. நாரத கானம் 30
40. நாமக்கல் ஆஞ்சநேயர் பதிகம் 21
41. நூற்றெட்டுத் திருப்பதி சிலேடை வெண்பா 110
42. பத்மநாபன் மாலை 10
43. பத்திரிப் பதிகம் 10
44. பழமுதிர்ச் சோலைப் பதிகம் 10
45. பத்ராசலப் பெருமாள் பதிகம் 10
46. பரிமளரங்கன் பதிகம் 10
47. பக்தி யோகம் 50
48. பார்த்தசாரதி மாலை 10
49. பாகவத வெண்பா 3501
50. பிரபத்தி மார்க்கம் 50
51. பிரபந்த சாரம் 10
52. பிருந்தாவனப் பேறு 1250
53. புத்தூர்ப் புராணம் 1250
54. மதுராபுரி மாயக் கண்ணன் மாலை 10
55. மங்களா சாசன மகிமை 121
56. மகாபாரத சாரம் 501
57. வாக்குண்டாம் மாலை 103
58. விவாக மாலை 10
59. வில்லிபுத்தூர் வெண்பா 225
60. வியூக சுந்தர ராஜப் பெருமாள் சந்திரகலாமாலை 17
61. வைணவ வைபவம் 101
62. வைணவ இரகசியம் 401

இவை தவிர 1653 பாடல்கள் அடங்கிய 11 அனுபவ சோதிட நூல்கள், 8020 பாடல்கள் கொண்ட 21 சித்த வைத்திய நூல்கள் என இவர் இயற்றி இப்போது கிடக்காத நூல்களின் பட்டியல் விரிகிறது. மேலும் வடமொழியிலிருந்து தமிழாக்கிய பாதுகா சஹஸ்ரம் (506), கிருஷ்ண கர்ணாமிருதம் (105) , கோதாஸ்துதி(123), அஷ்டபதி (25), கீதை வெண்பா (601), தயாசதகம் (105) என இன்னொரு பட்டியல் .

இவையெல்லாம் யாரிடம் எங்கே உள்ளனவோ ? ஒருவேளை இதைப் படிக்கும் உங்கள் வீட்டுப் பரணில் கூட இருக்கலாம். ஆனால் யார் இவற்றின் பெருமை அறிந்து தேடி வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போகிறார்கள்! மீண்டும் தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்து வந்தால்தான் உண்டு. அவர் மீண்டும் பிறக்க தமிழ்த் தாயையே பிரார்த்திப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக