சனி, 7 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தரகாண்டம் 20

முப்பத்து மூன்றாவது சர்க்கம்.

[ ராவண குமாரனான மேகநாதனுக்கும், இந்திரகுமாரனான ஜயந்தனுக்கும் யுத்தம், தோல்வியைத் தழுவிய ஜயந்தனை, அவனது மாதாமஹன் எடுத்துக்கொண்டுபோய் ஸமுத்திரத்தில் மறைதல், ராவணனுக்கும் தேவேந்திரனுக்கும் நடைபெற்ற யுத்தம்.]

          ஸுமாலி கொல்லப்பட்டதும், ராவண ஸைன்யம் நான்கு பக்கங்களிலும் ஓடி ஒளிந்தது. அதைக்கண்ட ராவண குமாரனான மேக நாதன் மிகுந்த கோபத்துடன் தனது பெரும்படையைக் கொண்டு தேவஸேனையை எதிர்த்தான். அக்கினியைப் போல் ஜ்வலிப்பதாயும். இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் தன்மையை உடையதுமான உயர்ந்த ரதத்தில் அமர்ந்த மேகநாதன், தேவர்களின் படையில் புகுந்து, உயர்ந்த மரக்காட்டை அக்கினியானது அழிப்பது போல் தேவர்களை நாசஞ்செய்ய ஆரம்பித்தான். அனேக விதங்களான அஸ்த்ர சஸ்த்திரங்களைப் பிரயோகிக்கின்ற அவனை எதிர்க்கச் சக்தியற்றவர்களாகத் தேவர்கள் பயந்து ஒடினர். இப்படி ஓடுபவர்களைக் கண்ட தேவேந்திரன். "வீரர்களே! ஓடாதீர்கள், பயப்படாதீர்கள், திரும்பி வாருங்கள். இதோ எனது குமாரனான ஜயந்தன் போர்முனைக்கு வருகிறான். அவன் பிறரால் ஜயிக்க முடியாதவன் என்பதை அறிந்திடுங்கள்" என்று கூறினாள்.

          உடனே ஜயந்தனுடன் கூடின தேவஸேனையானது. திரும்பி வந்து மேகநாதனை எதிர்த்தது.  இரு படைகளுக்கும் பயங்கரமான போர் நடந்தது. மேகநாதன் மாயாயுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவன் விடுத்த மாயையினால் மயங்கியப் படையினர் தம்மைச் சேர்ந்தவர் - பிறரைச் சேர்ந்தவர் என அறிய முடியாதவர்களாக ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். மாயையால் மோகத்தை அடைந்த இந்திரகுமாரனான ஜயந்தனை அவனது மாதாமஹனான புலோமா என்பவன் தூக்கிக்கொண்டு சென்று, ஸமுத்திரத்தில் பிரவேசித்து விட்டான். இவன் இப்படி எடுத்துச் செல்லப்பட்டதை அறியாத தேவர்கள், ஜயந்தன் காணப்படாததால் அவன் நாசத்தை அடைந்தான் என்று நினைத்தவர்களாய், மனக்லேசமடைந்தவர்களாக யுத்த களத்தை விட்டுச் சென்றனர். இப்படி ஓடுகின்ற தேவர்களை, மேன் மேலும் பாண வர்ஷங்களால் துன்புறுத்திக்கொண்டே பின்தொடர்ந்தான் மேகநாதன்.

          தனது குமாரன் காணப்படாததையும், மேகநாதனின் செய்கையையும் கண்ட தேவேந்திரன், வேகத்துடன் மாதலியை அழைத்து ரதத்தை ஸித்தப்படுத்தச் சொல்லி அதன்மீது அமர்ந்து யுத்தத்திற்குப் புறப்பட்டான். அப்போது மின்னலுடன் கூடிய மேகங்கள் இடி முழக்கம் செய்தன. தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும், நர்த்தனம் செய்தனர். ருத்ரர்களும், ஆதித்யர்களும், வசுக்களும், ஸாத்யர்களும், மருத்துக்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். அனேக ஆயுதம் தரித்து வீரர்களும் உடன் சென்றனர்.

          அதே சமயம் கடுங்காற்று உண்டாயிற்று.  சூரியன் ஒளியிழந்து காணப்பட்டான்.. ஆங்காங்கே கொள்ளிக் கட்டைகளும் விழுந்தன.

          ராவணன் தனது மகனான மேகநாதனைத் தடுத்துவிட்டுத் தானே இந்திரனை எதிர்க்கச் சென்றான். விச்வகர்மாவால் நிர்மாணம் செய்யப் பட்டதும், உத்தமமானதும், பயங்கரமான பக்ஷிகளாலும், பெரிய பாம்புகளாலும் சூழப்பட்டதுமான தேரில் ஏறியவனாய் அனேக வீர ராக்ஷஸர்களுடன் கூடி ஸமரபூமியை அடைந்தான். இரு ஸைன்யங்களும் ஒன்றையொன்று எதிர்த்தன. கும்பகர்ணன் யுத்த வெறி கொண்டவனாகி நம்மவர் பிறர் என்று அறிந்திடாமல் எதிர்ப்பட்ட அரைவரையும் கால்களால் நசுக்கியும், கைகளால் கிழித்தும், பற்களால் கடித்தும் வதைத்தான்; கொன்றும் குவித்தான். மஹாகோரமாக ஹிம்ஸிப்பவனான கும்பகர்ணனை ருத்ரர்கள் எதிர்த்து வந்து யுத்தம் செய்தார்கள். அவர்களுடைய ஆயுதங்களால் அடிக்கப்பட்ட கும்ப கர்ணன், உடலில் பதிந்து காணப்படும் அஸ்திரங்களுடனும், இரத்தம் பெருக்குடனும், கர்ஜிப்பவனுமாக, பெரிய மழைத் தாரையைப் பொழிந்துகொண்டு கர்ஜிக்கும் நீலமேகம் போன்று காணப்பட்டான்.

          மருத்துக்களால் நானாவித சஸ்திரங்களால் தாக்கப்பட்ட அஸுரர்கள் கலக்கமடைந்தனர். சிலர் வெட்டுண்டவர்களாகக் கீழே விழுந்து துடித்தனர். வாகனத்தின் மீது அமர்ந்தவர்களாகவே சிலர் மாண்டனர். சிலர் கைகளால் தேரைப் பிடித்தவர்களாகவும், யானையைப் பற்றியவர்களாகவும், சிலர் குதிரைகளைக் கட்டி யணைத்தவராகவும் பட்டார்கள். தேவர்களுடைய தாக்குதலை ஸஹிக்கமாட்டாத சிலர் சுற்றிச் சுற்றி ஓடினர். அரக்கர்களுடைய இந்தச் செய்கை காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இரத்த நதியானது அங்கே பிரவகித்தது.

          யுத்தத்தில் தனது ஸைன்யம் நாசமடைவதைக் கண்ட தசானன் மிக்க கோபங் கொண்டவனாகத் தேவர்களை எதிர்த்து அதிவேகமாக இந்திரன் முன்னே வந்தான். ராவணனைக் கண்ட தேவேசன் தனது பெரிய வில்லில் பரணங்களை பூட்டி, அக்கினிக்கு நிகரான அவைகளால் ராவணனுடைய தலைமீதுப் பிரயோகித்தான். ராவணனும் அனேக பாணங்களால் தேவேந்திரனை அடித்தான். இப்படி ஒருவருக் கொருவர் செய்த பாணப்ரயோகங்களால் திக்குகள் மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது.

முப்பத்து நான்காவது ஸர்க்கம்

(யுத்தத்தில் தேவேந்திரன் ராவணனைக் கட்டுதல், அது கண்டு கோபமடைந்த மேகநாதன் இந்திரனைக் கட்டி இலங்காபுரிக்குக் கொண்டு செல்வது.]

          இருள்சூழ்ந்த அந்தச் சமரபூமியில், ராவணன், தேவேந்திரன், மேகநாதன், ஆகிய மூவர் மட்டுமே மற்றவர்களைக் கண்டனர். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள முடியவில்லை. அந்த யுத்தத்தில் ராக்ஷஸ ஸைவ்யத்தில் பத்தில் ஒரு பாகமே மிகுந்தது. மற்றவை அழிக்கப்பட்டு விட்டன. அது கண்ட ராவணன் மிகுந்த கோபம் உடையவனாகி, ஸாரதியைப் பார்த்து, " ஸாரதியே ! நீ இப்பொழுது எனது ரதத்தை இந்தத் தேவ ஸைன்யத்தின் முடிவு பாகத்தைக் குறித்துச் செலுத்து. இந்த ஸேனையின் ஆரம்ப ஸ்தலம் இதுவாகும். முடிவு ஸ்தலமாவது 'உதயகிரி'யாகும். அவ்விடம்செல், சீக்கிரம் செல'' என்றான். இந்திரனின் கண்களிற்படாமல் நின்று கொண்டு தேவஸேனையைத் தாக்கி அழிக்கலாம் என்பது அவனுடைய எண்ணம்.  இதைக் கேட்ட ஸரதியும் அவ்வாறே செய்தான்.

          ராவணனுடைய இந்தத் தீர்மானத்தை அறிந்து தேவேந்திரன் தேரின் மீது அமர்ந்தவாறே தேவர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்.

          "தேவர்களே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இந்த வாரணள் கொல்லப்படத்தகாதவன். இவனை உயிருடனேயே பிடிக்கவேண்டும். இவன் அதிவேகத்துடன் தேரில் செல்கிறான். நீங்கள் ஸாவதானர்களாக இருங்கள். பலி சக்ரவர்த்தி அடக்கப்பட்ட பிறகு நான் எவ்வாறு திரைலோக்யாதிபதியாகக் கவலையற்று இருக்கிறேனோ அவ்வாறே ராவணணையும் பிடித்துக் கட்டிக் கவலையற்று வாழ்ந்திருப்பேன். இது எனது எண்ணம்" என்று.

          பிறகு இந்திரன் ராவணனைப் பின் தொடராமல் ராக்ஷஸ ஸைன்யத்தை எதிர்த்து யுத்தம் செய்தான். ராவணன் வடப்புறமாக சென்று ஸேனையின் கடைசிப் பாகத்தை அடைந்தான். இந்திரன் தென்புறமாகச் சென்று செருச் செய்தான். ராவணன் நூறு யோஜனை  தூரம் சென்று திரும்பியவனாய் தேவஸேனையை ஹதம் செய்தான். இதைக் கேட்ட இந்திரன், அப்படியே தென்புறமாகவே உதய பர்வதத்தை அடைந்து ராவணனை எதித்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான். தேரின்மீது ஏற்றி வைத்துக்கொண்டான்.

தொடர்ந்து படித்துக் கொண்டு வருபவர்களுக்காக!

இந்தப் பகுதியின் கடைசிப் பத்தியில் கடைசி வரிகளில் “ராவணனை எதிர்த்துப் போரிட்டு அவனைப் பிடித்துக் கட்டிவிட்டான்” என்றிருப்பதில் ஏதோ சில வரிகள் விடுபட்டிருக்கின்றன. மூலத்தில் அச்சுப் பிழை. அடுத்த அத்யாயம் இந்திரனை மேகநாதன் கட்டிவைத்தான் என்று வருகிறது.  கவனித்துக் கொள்ளவும்.

வியாழன், 5 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 19

முப்பத்தோராவது ஸர்க்கம்

[ராவணன் ரம்பையை பலாத்காரம் செய்ததும்,
அதனால் கோபமடைந்த தளகூபரன் அவனை சபிப்பதும்]

          அன்றைய ராத்திரியை அந்த உபவனத்தில் ராவணன் கழிக்க நினைத்தான் நடுநிசி சந்திரன் தனது பூர்ண கிரணங்களையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஸந்தோஷிப்பித்துக்கொண்டிருந்தான் அந்த ரம்யமான வேளையில் அவ்வழியாக அப்ரஸ்ஸுக்களுள் உயர்ந்த அழகியாகக் கருதப்படும் 'ரம்பை உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவளாகவும், திவ்யகந்தபுஷ்பங்களை தரித்தவளாகவும் தோழிகளுடன் சென்று கொண்டிருந்தாள் அவளைக் கண்ட ராவணன் அவளுடைய அழகில் மயங்கியவனாய் அவனை வழிமறித்து, ''அழகியே! நீ யார்? எங்கே செல்கிறாய்? உன்னுடைய இந்த அழகிய மேனியின் சுகத்தை அநுபவிக்கும் பாக்யவான் யார்? என்னைக்காட்டினும் உயர்ந்த புருஷன் இவ்வுலகினில் இல்லை என்பதை நீ அறிவாயா? என்னை அதிக்ரமித்து. நீ வேறொருவனை நாடிச் செல்வது நல்லதல்ல, வா, இப்படி உட்கார். எனது காமத்தைப் பூர்த்தி செய்யவும்" என்றான்

          இப்படி வேண்டுகிற ராவணனைப் பார்த்து ரம்பையானவள் நடுங்கியவளாய், கைகளிரண்டையும் கூப்பிக்கொண்டு "தாங்கள் இப்படிக் கூறுவது உசிதமல்ல. தாங்கள் எனது குரு, என்னை இதரர் கெடுக்க நினைத்தால் தங்களால் ரக்ஷிக்கப்படத் தகுந்தவள் நான் தங்களது மருமகள் உண்மையைக் கூறினேன் " என்று சொன்னாள்

          இதைக் கேட்ட ராவணன், "நீ எனது மருமகளானால் நீ சொல்வது ஏற்கத்தக்கதே" என்றான் அதற்கு ரம்பை, "நான் கூறியது உண்மையே ராக்ஷஸ ச்ரேஷ்டரே! உமது ஸஹோதரர் குபேரன் அவரது தர்மபுத்திரர் நளகூபரன் அவர் உமது குமாரர் அல்லவா? அவரால் வரிக்கப்பட்டு அவருடைய இச்சையைப் பூர்த்தி செய்விக்கவே இப்பொழுது சென்று கொண்டிருக்கிறேன் அந்த நளகூபரர் தர்மத்தினால் பிராம்மணராகவும். பலத்தினால் க்ஷத்ரியராகவும், கோபத்தில் அக்கினியாகவும், பொறுமையில் பூமிக்குச் சமமானவர் என்றும் பிரஸித்தி பெற்றவர் என அறியவும்" என்றாள்

          ரம்பையினால் இவ்வாறு பதில் அளிக்கப்பட்ட ராவணன் மறுபடியும் அவளைப் பார்த்து, "நீ சொல்லும் மருமகள் முறை பதிவ்ரதைகளுக்கு ஏற்றது இரு உலகங்களிலும் ஏற்புடையதே ஆனால் அப்ஸரஸ் ஸ்த்ரீகளுக்குப் பதிவ்ரதத்வம் ஏது? அவர்கள் ஒரே பர்த்தாவைக் கொண்டவர்களல்லவே இதை நான் அறிவேன் எனவே உனது வாதம் ஸரியாணதல்ல” என்று கூறி அவளை பலாத்காரமாக அநுபவித்துத் தனது இச்சையைப் பூர்த்தி செய்துகொண்டான்

          இப்படி ராவணனால் பலாத்கரிக்கப்பட்ட ரம்பையானவள் துக்கமடைந்தவளாய் கலைக்கப்பட்ட அலங்காரத்தை உடையவளாய் நளகூபரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள் இதைக் கேட்ட நளகூபரன் மிகவும் கோபமடைந்து, கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதை முறைப்படி அபிமந்த்ரணம் செய்து, "தன்னை விரும்பாத எந்த ஸ்திரீயையாவது இவன் பலாத்காரம் செய்தால் இவனது தலை ஏழு சுக்கல்களாக வெடித்தும் போகக்கடவது'' என்று சாபமிட்டான்

          ஜ்வலிக்கும் அக்கினி போன்று விளங்கிய நளகூபரன் இப்படிச் சாபமிட்டதும் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது பிரம்மா முதலிய தேவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள் ரிஷிகளும் பித்ருக்களுங் கூட அகமகிழ்ச்சி கொண்டனர் இதைச் செவியுற்ற  ராவணனும் தன் செய்கையில் வெறுப்புற்றான் பயந்தான் அவனால் பலாத்காரமாக அபஹரித்து வரப்பட்ட ஸ்த்ரீகளும் இதை அறிந்து பயமற்றவர்களாக ஆனார்கள் நளகூபரனையும் மனமாற வாழ்த்தினர்

முப்பத்திராண்டாவது ஸர்க்கம்

[ராவணன் தனது பெரும் படையுடன் கைலாசமலையில் இருந்து புறப்பட்டு தேவலோகம் செல்லுதல், தேவாஸுரயுத்தம், அதில் வசுக்களில் எட்டாமவனான ஸாவித்ரனால் கதையால் அடிக்கப்பட்டு ஸுமாலியின் வதம்)

          கைலாஸமலையிலிருந்து தனது பெரும்படையுடன் ராவணன் தேவ லோகத்தை நோக்கிப் புறப்பட்டான் அந்தப் படையினர் இட்ட கோஷமானது கடையப்படும் பெருங்கடலின் கோஷம் போன்று மேலே கிளம்பித் தேவலோகத்தை அடைந்தது இதை அறிந்த தேவேந்திரன் சிந்தை கலங்கினான் ஆஸனத்தினின்றும் எழுந்து அங்குக் கூடியுள்ள ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வேதேவர்கள் மருத்துக்கள் முதலிய தேவர்களைப் போருக்கு ஆயத்தமாகும்படிக் கட்டளையிட்டான் அவனது உத்திரவுப்படி அவர்களும் யுத்த ஸந்நத்தரானார்கள் அப்படி இருந்தும் ராவணனிடத்திலுண்டான பயத்தினால் இந்திரன் ஶ்ரீமன் நாராயணனைச் சரணம் அடைந்து, "பிரபோ! பலவானான ராவணன் யுத்தத்திற்கு வந்துவிட்டான் அவனோ பிதாமஹனுடைய வரதானத்தால் கர்வம் கொண்டவன் அவனுடன் நான் எவ்வாறு போரிட முடியும்? எனவே தேவரீரே. நமுசி, விருத்ராஸுரன், பலி, நரகாஸுரன், சம்பராஸுரன் முதலியவர்களை அடக்க உபாயம் செய்தது போல ஏதேனும் செய்து அவனை அழிக்கவும்” என்று பிரார்த்தித்தான்

          இப்படி இந்திரனால் வேண்டப்பட்ட நாராயணன். “நீ பயத்தை விட்டொழிக்கவும், நான் சொல்வதைக் கேட்கவும் துஷ்டாத்மாவான ராவணன் தேவர்களாலோ அஸுரர்களாலோ கொல்லப்படத் தகாகதவன் மிகுந்த பலசாலியாகவும் உள்ளான் மேலும் அவன் தனது புத்திரனான மேகநாதனுடன் கூடியவனாக வந்துள்ளான் உன்னை வைத்துக்கொண்டு இப்பொழுது அவனுடன் போரிட முடியாதவனாக உள்ளேன் ஏனெனில் அவன் நம்மால் கொல்லப்படத் தகாதவன் என்பதை நீயும் அறிவாய் “நாராயணன் போரிட்டு எதிரியைக் கொல்லாமல் திரும்பினான்" என்ற சொல் ஏற்படக் கூடாது எனவே உனக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேள் "ஒரு காலத்தில் இ வனுடைய வதத்திற்கு நானே காரணமாவேன் இதை உறுதியாக நம்பவும் இப்பொழுது நீயே உனது பரிவாரங்களுடன் சென்று போர் செய்" என்று கூறினார்

          அதைக் கேட்ட தேவேந்திரன் தனது சேனைகளுடன் சென்று ராவணனை எதிர்த்தான் அப்போது ராவணனுடைய மந்திரிகளான மாரீசன், பிரஹஸ்தன். மஹாபார்ச்வன். மஹோதரன், அகம்பனன் ஜம்புமாலி விரூபாக்ஷன், நிகும்பன், சுகன், ஸுப்தக்னன், யஜ்ஞ கோபன், துர்முகன், கரன் தூஷணன். த்ரிசிரஸ், மஹாகாயன், அதிகாயன், தேவாந்தகன். நராந்தகன் ஆகிய மஹாவீரர்கள் கூடி ராவணனது பாட்டனான "ஸுமாலி" என்பவனைத் தலைவனாகக் கொண்டு தேவர்களை எதிர்த்தனர் அந்த அரக்கர் படையானது, அனேகவித ஆயுதங்களால் தேவர்களின் படைகளைத் தாக்கிப் பெருங் காற்றானது மேகக் கூட்டங்களைச் சிதற அடிப்பது போல, நான்கு பக்கங்களிலும் சிதறியோடும்படிச் செய்தது

          இப்படி அடிபட்டு ஓடும் ஸேனையைக் கண்டு வசுக்களில் எட்டாமதானவனும்,மிக்க பராக்கிரமசாலியுமான ஸாவித்ரன் என்பவன் மிக்கச் சினம் கொண்டவனாகிச் சேனைகள் புடை சூழச் சென்று, அந்த ஸுமாலியை எதிர்த்துப் போர் செய்தான் அவன் பெரிய- கோபங் கொண்ட ஸிம்ஹமானது சிறிய மிருகங்களைத் தாக்கியடிப்பது போல அரக்கர் படையைத் தாக்கி அழித்தான்

          அதே ஸமயத்தில் ஆதித்யர்களில் ஒருவரரன த்வஷ்டா பூஷா என்பவர்களும் யுத்தபூமியில் பிரவேசித்து அசுரப் படைகளைத் தாக்கினர் அப்போது இரு தரத்துப் படைகளுக்கும் மிக்க பயங்கரமான யுத்தம் உண்டாயிற்று அந்த யுத்தத்தில் ஸுமாலியின் தலைமையிலான அரக்கர் படையினால் தேவர்களின் படையானது நன்கு அடிக்கப்பட்டு நிலைநிற்க முடியாமல் நாலு பக்கங்களிலும் ஓடியது

இப்படியான நிலைமையைக் கண்ட எட்டாவது வஸூவானவன் ஓடும் தன் படைவீரர்களைக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தி, மூர்க்கத்தன்மையுடன் போரிடும் ஸுமாலியை எதிர்த்துப் போரிட்டான் ஸுமாலிக்கும் வஸு விற்கும் மிகக் கடுமையான சண்டை நடந்தது அப்போது வஸுவானவன் கொடூரமான பாணத்தால் ஸுமரலியினுடைய ரதத்தை நாசம் செய்தான் உடனே ஒரு மிகப் பெரிய கதையைக் கையில் எடுத்துக்கொண்டான் ஜ்வலிக்கும் நுனியை உடையதும், மற்றொரு காலதண்டம் போன்றதுமான அந்தக் கதையால் ஸுமாலியின் தலையில் ஓங்கி அடித்தான் அந்தக் கதையானது கொழுந்து விட்டு எரியும் பெரிய கொள்ளிக்கட்டை போல் அவண் தலைமீது விழுந்தது அந்த க்ஷணமே அவனது தலையோ கால்களோ கைகளோ ஏதுமே காணப்படாமல் சூர்ணமாகிவிட்டது அவன் மடிந்ததைக் கண்ட அஸுரப்படை பயத்துடன் திரும்பி ஓடி விட்டது,

செவ்வாய், 3 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 18

இருபத்தி ஒன்பதாம் ஸர்க்கம்

[ராவணனால் அபஹரித்து வரப்பட்ட ஸ்திரீகளின் ப்ரலாபம், அவர்கள் இட்ட சாபம், சூர்ப்பணகையைச் சமாதானப்படுத்தல் ] 

          மிகுந்த குதூகலத்துடன் தன் இருப்பிடமான இலங்கைக்குத் திரும்பும் வழியில் ராவணன், தன் முன் காணப்பட்ட அழகிய பெண்கள் அனைவரையும் பிடித்து வந்தான். எதிர்த்த அந்தப் பெண்களின் பந்து ஜனங்கள் அனைவரையும் கொன்று குவித்தான். நாக- ராக்ஷஸ-கந்தர்வ - மானுஷ - ரிஷி - தேவ - கிந்நர - மாதர்களால் அந்த விமானம் நிரப்பப்பெற்றது. அந்த ஸ்திரீகளின் அழுகையினால் விமானமே அழுவது போன்று இருந்தது. சில பெண்கள், நீண்ட கூந்தல்களை உடையவர்களாயும், சிலர் பொன்னிற மேனியராகவும் சிலர் முழுமதி போன்ற முகத்தினராகவும், சிலர் பெருமுலைகளை உடையவர்களாயும், நுண்ணிடையுடைய சிலரும், எல்லோருமே சோகமும் பயமு முடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸிம்ஹத்தினிடம் சிக்கிக்கொண்ட மான்களைப் போல் பயந்து நடுங்கினர்.

          ஒருத்தி, இவன் நம்மைச் சாப்பிட்டுவிடுவானோ? என்றும் வேறெருத்தி என்னைக் கொன்றுவிடுவானோ? என்றும், மற்றொருப் பெண் இவன் என்னை என்ன செய்ய நினைத்துக்கொண்டு வந்துள்ளானோ என்றும் எண்ணி அழுதனர். ஒரு ஸ்திரீ, ஐயோ! இப்போது என் குழந்தை என்னைக் காணாமல் எப்படி அழுகிறதோ என்றும் எனது தாய் தந்தையர் என்னைக் காணாமல் எப்படித் துடிக்கின்றனரோ என்றும், ஐயோ! எனது கணவனை விட்டு நான் எப்படி உயிர் வாழ்வேன் என்றும் புலம்பினார்கள்

          இப்படியாகப் பல ஸ்திரீகளும் மனம் வருந்தி, 'ஸ்திரீயினாலேயே இவன் மரணமடைய வேண்டும் என்று சபித்தனர். அப்பொழுது ஆகாயத்தில் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. இப்படியாக ராவணன் அந்த ஸ்த்ரீகளுடனும் புஷ்பக விமானத்துடனும் இலங்கையை அடைந்தான்.

          ராவணன் தனது அரண்மனையினுள் நுழைந்ததும் ஸஹோதரியான சூர்ப்பணகை ஓடிவந்து அவன்முன் விழுந்து புலம்பி அழ ஆரம்பித்தாள். ராவணன் மிகுந்த வாஞ்சையுடன் அவளைத் தூக்கியணைத்து அவளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவள், 'ராஜனே, உன்னால் நான் விதவையாக்கப்பட்டேன்.  நீ காலகேயர் என்ற அஸுரர்களை வதம் செய்தாயே. அவர்களில் ஒருவரல்லவா என் கணவர்? வித்யுஜ்ஜிஹ்வர் என்ற எனது பர்த்தா என் உயிருக்கும் மேற்பட்டவர். அவரை நீ உனது பலத்திமிரால் கொன்றுவிட்டாயே, இனி நான் என்ன செய்வேன்? எனக்கு யார் கதி? உன்னாலேயே எனக்கு வைதவ்யம் ஏற்பட்டதே. இது நியாயமா?” என்று பலவாறு புலம்பினாள்.

          இப்படிச் சத்தமிட்டுப் புலம்பும் தங்கையைச் சமாதானப்படுத்திய ராவணன், ' நீ இதற்காக வருந்த வேண்டாம். நடந்தது நடந்து போயிற்று - யுத்தமென்று வந்து விட்டால் ஜயமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். நம்மவர், பிறர் என்று கண்டு கொள்ளவே மாட்டேன். எனது ஸ்வபாவம் இது. உன்னைப் பலவிதத்திலும் ஸந்தோஷப் படுத்துவது எனது கடமை. எனவே நீ நமது சிறிய தாயாரின் பிள்ளையான 'கரன்' என்பவனோடு வஸிப்பாயாக. அவனுடன் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்களுக்குச் சேனாதிபதியாகத் தூஷணன் என்பவன் இருப்பான். நீங்கள் எல்லோருமாக உடனே புறப்பட்டு தண்டகாரண்யத்திற்குச் சென்று, அங்கு உங்களது ராஜ்யத்தை நடத்துங்கள்" என்று உத்தரவு இட்டான்.

          உடனே, அதன்படியே கரன் அரக்கர்  பதினாலாயிரவருடன் சூர்ப்பணகையை அழைத்துக்கொண்டு தண்டகாரண்யத்தை அடைந்து அங்கே தங்களுக்கு அனுகுணமாக நகரை அமைத்துக் கொண்டு வளித்து வந்தான்.




முப்பதாவது ஸர்க்கம்

          பிறகு ஒரு ஸமயம் ராவணன் தன் மந்திரிகள் புடை சூழ, லங்காபுரியின் மேற்குப் பக்கத்திலுள்ள நிகும்பிலை என்ற வனத்திற்குச் சென்றான். அங்கு அவன் அனேக யூபஸ்தம்பங்களுடனும் கோயிலுடனும் வேதிகைகளுடனும் கூடிய யாசாலையைக் கண்டான். தனது குமாரனான மேகநாதன் மான்தோலைத் தரித்துக், கமண்டலம் தண்டம் சிகை இவற்றையுடையவனாய் விளங்குவதையும் கண்டான். அவனருகிற் சென்று, இருகைகளாலும் கட்டி அணைத்துக்கொண்டு, "குழந்தாய், நீ என்ன கார்யம் செய்துகொண்டிருக்கிறாய்?'' என்று வினவினாள். யாகதீக்ஷை பெற்றுள்ள அவன் பேசக் கூடாததை உணர்ந்த, புரோஹித சீரேஷ்டரான சுக்ராசாரியர் ராவணனைப் பார்த்து, "அரசே! நான் சொல்லுகிறேன், கேட்கவும்" என்று பின்வருமாறு கூறினார்--

          "உமது குமாரனான இவனால் அக்னிஷ்டோமம், அச்வமேதம், பஹு ஸுவர்ணகம், ராஜஸூயம், கோமேதம், வைஷ்ணவம், என்ற யாகங்கள் செய்து முடிக்கப்பட்டன. ஒருவராலும் செய்ய முடியாத ஏழாவதான மாஹேச்வர யாகத்தையும் செய்து பசுபதியில் அருளால் உயர்ந்ததாயும், நினைத்தபடி செல்லக் கூடியதாயும், ஆகாய மார்க்கத்திலும் செல்லக்கூடிய சக்தியையுடையதுமான தேரையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புப் பெட்டிகளையும், பிறரால் துண்டிக்கப்பட முடியாததான தநுஸ்ஸையும், யுத்தத்தில் சத்ருக்களை அழிக்கக்கூடியவைகளான உயர்ந்த அஸ்திரங்களையும் பெற்றுள்ளான். மேலும் 'தாமஸீ' என்கிற மாயையையும் பெற்றுள்ளான். யுத்தபூமியில் இந்த மாயையைப் பிரயோகித்த அளவில் நெருக்கமான இருள் சூழ்ந்து, இவனிருக்கும் இடம், சத்ருக்களுக்குப் புலப்படாதபடிச் செய்துவிடும். இப்படியான யாகம் முடியப் போகிறது. முடிந்ததும் நாங்கள் இருவருமே உன்னிடம் வருவதாக இருந்தோம்'' என்றார்.

          இதைக் கேட்ட ராவணன், “ஆசார்யரே! இதற்காக யாகம் செய்திருக்க வேண்டாம். நம்மால் ஜயிக்கப்படத்தக்க இந்திரன் முதலியவர்களுக்குப் பூஜை ஏன் செய்ய வேண்டும்? தவமியற்றி இவற்றைப் பெற்றிருக்கலாமே, ஸரி, நடந்தது நடந்து விட்டது. இனி இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை" என்று கூறி, மந்திரிகளுடன் தனது அரண்மனையை அடைந்தான்.

          அப்பொழுது, ராவணனால் கவர்ந்து வரப்பட்ட ஸ்த்ரீகளைக் கண்டு தர்மாத்மாவான விபீஷணன். "அண்ணா தாங்கள் செய்தது தர்மமல்ல. இதைக் கண்ட பெரியோர்கள் நகைக்கின்றனர். இந்த அதர்மத்திற்குப் பலன் இப்பொழுதே நமக்குக் கிடைத்துவிட்டது. அதாவது நம்முடைய ஜ்யேஷ்ட மாதாமஹன் மால்யவான் எனப் படுபவர்.  அவருடைய பெண் அனலை என்பவள். அவளுடைய பெண் கும்பீநஸி எனப்பெயர் கொண்டவள். அவள் நமது ஒன்றுவிட்ட ஸஹோதரி அவள் இங்கு நம் அரண்மனையில் வஸித்து வந்தவள். . அவளை கர்வம் கொண்டவனான 'மது' என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான். அது ஸமயம் உமது குமாரன் யாகத்தில் ஈடுபட்டிருந்துவிட்டான்.  நான் தவத்தில் ஈடுபட்டு ஜலத்தின் மத்தியில் இருந்துவிட்டேன். கும்பகர்ணனோ தூங்கிக் கொண்டிருந்தான். இதுவே தருணம் என்று கண்ட அவன் இங்குள்ளவர்களை நாசம் செய்துவிட்டு அந்தத் துஷ்ட கார்யத்தைச் செய்து சென்றான் என்று சொன்னான்.

          இதைக் கேட்ட ராவணன் கோபத்தினால் சிவந்தவனாய். "எனது ரதத்தை ஸித்தப்படுத்துங்கள். வீரர்கள் கிளர்ந்தெழுங்கள். எல்லோருமாகச் சென்று மதம் பிடித்த மதுவைக் கொன்றுவிட்டுத் தேவலோகத்திற்குச் செல்வோம். அதை நம் வசம் செய்துகொள்வோம். பிறகு பயமற்றவர்களாக எங்கும் ஸஞ்சரிப்போம்' என்றான்.

          அதன்படியே நாலாயிரம் அக்ஷெளஹிணீ ஸைன்யமானது ஆயுதங்களுடன் புறப்பட்டது. அந்த ஸேனையின் முகப்பில் இந்திரஜித்தும், மத்தியில் ராவணனும், கடைசியில் கும்பகர்ணனும் ரஷகர்களாகச் சென்றனர். தர்மாத்மாவான விபீஷணன் இலங்காபுரியின் ரக்ஷகனாக இருந்தான்.

          மதுபுரியை அடைந்த ராவணன் அரண்மனையின் உள்ளே சென்று மது அரக்கனைத் தேடினான்.  அங்கு அவன் காணப்படவில்லை. அவனது மனைவி இவனது ஸஹோதரி - கும்பீநஸியையே கண்டான்.  ராவணனிடத்தில் பயந்த அவள் கைகளைக் கூப்பிக்கொண்டும். அவனது கால்களைப் பிடித்துக் கொண்டும் நடுங்கியவளாக நின்றாள். அவனைக் கண்டு ராவணன், "தங்கையே! பயப்பட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? தைரியமாகக் கேட்கவும" என்றான். இதைக் கேட்ட அவள், "உமக்கு என்மீது அன்பு இருக்குமேயாகில் எனது பர்த்தாவைக் கொல்லாமல் விட்டு எனக்கு மாங்கல்ய பிக்ஷை கொடுங்கள்; பயப்பட வேண்டாம்! என்று சொன்ன சொல்லை மெய்ப்பித்துக் காட்டுங்கள்; உண்மையுரைத்தவராக ஆகுங்கள்'' என்றாள்.

          இதைக் கேட்டு ஸந்தோஷமடைந்து ராவணன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவனை அழைத்து வரும்படிச் சொன்னாள் கேகஸியும் உடனே உள்ளே சென்று நித்ரையிலாழ்ந்திருந்த மதுவை எழுப்பி அழைத்து வந்தாள். ராவணன் அவனுடன் நட்புக் கொண்டு அவனையும் கூட அழைத்துக்கொண்டு கைலாஸ மலையிலுள்ள குபேரப் பட்டணத்தை அடைந்து அதன் உபவநத்தில் தனது ஸைன்யத்தை அடைவித்து அமரச் செய்தான்.