சனி, 19 நவம்பர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 30

வினா 31.- அப்பொழுது யார்‌ ஸபைக்கு வந்தது? அங்கு அப்பொழுது என்ன நடந்தது?

விடை.- விதுரர்‌, வியாஸரையும்‌ காந்தாரியையும்‌ அங்கு கூட்டிக்கொண்டு வர, வியாஸர்‌ ஸஞ்சயரை நோக்கி, திருதிராஷ்டிரனுக்கு அவசியம்‌ சொல்ல வேண்டியவைகளைச்‌ சொல்லும்படி கட்டளையிட்டார்‌. உடனே ஸஞ்சயர்‌, கிருஷ்ண பகவானது ஸவரூபத்தை திருதிராஷ்டிரன்‌ அறியும்படி சொல்லி, “எங்கே ஸத்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ இருக்கின்றனவோ, அங்கே கிருஷ்ண பகவான்‌ இருப்பார்‌. அவர்‌ இருக்கும்‌ பக்கத்திற்கே ஜயம்‌ நிச்சயம்‌” என்று. சொல்லி முடித்தார்‌. இதன்‌ பின்பு ஸஞ்சயர்‌ பகவானது குணாதிசயங்கள்‌, நாம விசேஷங்களைப்பற்றி விஸ்தரித்தார்‌.

வினா 32.- இவ்வாறு பகவானது குனாதிசயங்களைக்‌ கேட்ட திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? கடைசியில்‌ என்ன நடந்தது?

விடை... திருதிராஷ்டிரன்‌ துர்யோதனனை நோக்கிப்‌ பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்து கொண்டு பரம்பொருளாகிய கிருஷ்ணபகவானது கிருபைக்கு ஆளாகும்படி எவ்வளவோ மறுபடியும்‌ சொல்லிப்‌ பார்த்தான்‌. துர்யோதனன்‌, அப்பொழுதும்‌ பிடிவாதமாய்‌ ஸமாதானமாக இடங்கொடுப்பதில்லை என்று சொல்லிவிட்டான்‌. அப்பொழுது வெகு கோபத்தோடு காந்தாரி “பீமஸேனனால்‌ நீ அடிபட்டு விழும்போது, எங்கள்‌ புத்திமதியின்‌ சிறப்பு உனக்குத்‌ தெரியவரும்‌" என்று சொன்னாள்‌. உடனே அவரவர்கள்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ சென்றனர்‌.

வினா 33- இவ்வாறு ஹஸ்தினாபுரியில்‌ காரியங்கள்‌ நடந்து வருகையில்‌, பாண்டவர்கள்‌ உபப்லாவ்யத்தில்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... தர்மபுத்திரர்‌, கிருஷ்ணபகவானை நோக்கி, “ஸஞ்சயரோ திருதிராஷ்டிரனது எண்ணத்தை தமக்குத்‌ தெரிவித்து விட்டார்‌. நாம்‌ இப்பொழுது சண்டைக்குப்‌ போவதா? போனால்‌ எல்லோரும்‌ அநியாயமாய்‌ மாண்டு போக வேண்டிவருமே. சண்டையிடாதும்‌ இராஜ்யம்‌ கேட்காதுமிருந்தால்‌, நம்மைக்‌ கெளரவர்கள்‌ பரிஹாஸம்‌ செய்வார்களே. இதற்கு என்ன செய்வது” என்று கேட்டார்‌. அப்பொழுது கிருஷ்ணபகவான்‌ தாமே இந்த ஸமாதான விஷயத்தில்‌ கெளரவர்களிடம்‌ பாண்டவர்களுக்காகத்‌ தூது செல்வதாக ஒப்புக்கொண்டார்‌. அப்பொழுது "எங்களுக்கு நியாயவிரோதமாய்‌ ஐந்து கிராமங்கள்‌ கொடுப்பதாகக்‌ கெளரவர்கள்‌ சொன்னாலும்‌, அதை ஒப்புக்கொண்டு ஸமாதானம்‌ பண்ணிக்கொண்டு வேண்டும்‌" என்று தர்மபுத்திரர்‌ பகவானிடம்‌ சொன்னார்‌.

வினா 34.- பகவான்‌ தூதுசெல்வதைப்பற்றி மற்றைய பாண்டவர்களுக்கும்‌, இன்னும்‌ மற்றவர்களுக்கும்‌ என்னென்ன அபிப்பிராயம்‌?

விடை.- தர்மபுத்திரர்‌, அர்ஜுனன்‌, நகுலன்‌ ஆகிய இவர்களுக்கு கிருஷ்ணபகவான்‌ துர்யோதனனிடம்‌ போய்‌ எப்படியாவது ஸமாதானம்‌ செய்துகொண்டு வரவேண்டும்‌ என்பதும்‌, போரைத்‌ தடுத்துவரவேண்டும்‌ என்பதுமே. பீமனுக்கு மனதில்‌ சண்டை செய்ய வேண்டும்‌ என்ற ஆசை இருந்தபோதிலும்‌, வெளிப்படையாய்‌ அவன்‌ ஸமாதானத்தையே விரும்புவதாகச்‌ சொன்னான்‌. ஸஹாதேவன்‌ மாத்திரம்‌ அவசியம்‌ சண்டைக்கு வேண்டிய ஏற்பாடுகளைப்‌ பண்ணிக்கொண்டு பகவான்‌ திரும்பவேண்டும்‌ என்று அபிப்பிராயப்பட்டான்‌. ஸாத்யகி (பகவானது தம்பி)யும்‌, திரெளபதியும்‌ ஸஹாதேவன்‌ சொல்வது நியாயம்‌ என்று ஒப்புக்கொண்டார்கள்‌. அர்ஜுனன்‌ கடைசியாகப்‌ பகவானை நோக்கிப்‌ "பாண்டவர்களுக்கும்‌, கெளரவருக்கும்‌ எது ஹிதமோ அதைச்‌ செய்துவரவேண்டும்‌' என்று சொல்ல அவ்வாறே செய்து வருவதாகப்‌ பகவான்‌ ஒப்புக்கொண்டு புறப்பட்டார்‌.

வினா 35.- இவ்வாறு கிருஷ்ணபகவான்‌ புறப்பட்டுப்‌ போகையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... பகவான்‌ புறப்படும்பொழுது அநேக அபசகுனங்கள்‌ காணப்பட்டன. அனேக ரிஷீச்வரர்கள்‌ பகவான்‌ கண்ணில்பட, அவர்‌ “நீங்கள்‌ யாது காரணத்தால்‌ இங்கு வந்தீர்கள்‌” என, அவர்கள்‌ “பகவானாகிய தாங்கள்‌ இராஜஸபையில்‌ உட்கார்ந்து ஸமாதானத்திற்காகப்‌ பேசும்‌ அழகிய பேச்சுக்களை கேட்கவந்தோம்‌" என்று மறுமொழி கூறினார்‌.

வினா 36.- பகவான்‌ தூது வருகிறார்‌ என்று திருதிராஷ்டிரன்‌ முதலியவர்கள்‌ கேட்டதும்‌, இராஜ ஸபையில்‌ அவர்கள்‌ என்ன ஆலோசனை செய்தார்கள்‌?

விடை.- கிருஷ்ண பகவானுக்குத்‌ தகுந்த மரியாதை செய்து, அவரை வெகுமானப்‌ படுத்தவேண்டும்‌ என்றும்‌ திருதிராஷ்டிரன்‌ சொல்ல, அதை பீஷ்மர்‌ அங்கீகரித்தார்‌. விதுரர்‌, உடனே எழுந்து “பகவான்‌ பாண்டவ ஸகாயர்‌, அவருக்கு மரியாதை செய்து, அவரை நமக்கு அனுகூலராக்கவேண்டும்‌ என்ற மோசக்கருத்தோடு ஒரு மரியாதையும்‌ செய்யாது, மனதாரப்‌ பக்தியோடு செய்யவேண்டும்‌' என்று திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌. இதைக்கேட்ட துர்யோதனன்‌, 'விதுரர்‌ சொல்லியது உண்மை, நமக்கு விரோதியாய்‌ இருக்கும்‌ கிருஷ்ணனை நாம்‌ மரியாதை செய்யலாகாது. சண்டையைத்‌ தொடங்குவதிலேயே நாம்‌ கருத்துடையவராய்‌ இருக்கவேண்டும்‌' என்றான்‌. உடனே துர்யோதனனை நோக்கிப்‌ பீஷ்மர்‌ 'பகவான்‌ சிறந்தவர்‌. அவர்‌ உனது நன்மையையே எடுத்துக்‌ கூறுவார்‌. ஆகையால்‌ நீ அவர்‌ சொல்லுவதை சிரத்தையோடு கேட்டு, அதின்படி நடக்க முயலவேண்டும்‌' என்று புத்திமதி கூறினார்‌. துராத்மாவான துர்யோதனனுக்கு நல்ல புத்தி தோன்றாமல்‌, 'கிருஷ்ண பகவானை யான்‌ சிறைபிடிக்கப்‌ போகிறேன்‌. இது ஸித்தித்தால்‌ பாண்டவர்கள்‌ என்னை எதிர்த்து வரமாட்டார்கள்‌. நான்‌ ஸுகமாய்‌ அரசாளலாம்‌' என்று தனது கெட்ட எண்ணத்தை வெளியிட்டான்‌. இது தர்ம விரோதம்‌ என்று எவ்வளவோ திருதிராஷ்டிரன்‌ சொல்லிப்‌ பார்த்தும்‌ துர்யோதனன்‌ கேட்கவில்லை. இதைக்கண்டு பீஷ்மருக்குக்‌ கோபம்‌ வர 'இந்த மூர்க்கனோடு என்ன பேச்சு? என்று சொல்லி ஸபையைவிட்டுப்‌ போய்‌ விட்டார்‌.

வினா 37.- இங்கு இப்படியிருக்க பகவான்‌ வந்து யார்‌ வீட்டில்‌ தங்கினார்‌?

விடை.- பகவான்‌ ஹஸ்தினாபுரிக்கு வரும்பொழுது துர்யோதனனைத்‌ தவிர மற்றைய எல்லோரும்‌ அவரை எதிர்கொண்டு அழைக்கவந்தனர்‌. ஊரிலிருந்தவர்கள்‌ எல்லோரும்‌, கண்கொட்டாது பகவானது தூத அவஸரத்தை நோக்கி ஆநந்தித்தனர்‌. இப்படி ஸகலரையும்‌ ஸுகப்படுத்திக்கொண்டு, பகவான்‌ இராஜஸபை வர, அங்கு யாவரும்‌ எழுந்து மரியாதை செய்தனர்‌. திருதிராஷ்டிரன்‌ பகவானுக்கு உபசாராதிகள்‌ செய்தான்‌. இதைப்‌ பெற்றுக்கொண்டு பகவான்‌ விதுரர்‌ வீடு சென்றார்‌. தாம்‌ ஹஸ்தினாபுரியில்‌ இருந்த வரையில்‌, பகவான்‌ அங்கேயே தங்கியிருந்தார்‌.

வினா 38.- விதுரர்‌ வீட்டில்‌ இருந்துவிட்டு, பகவான்‌ யாரைப்‌ பார்க்கப்‌ போனார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- அன்று பிற்பகலில்‌ தமது அத்தையாகிய குந்தியைப்‌ பார்க்கப்‌ போனார்‌. கிருஷ்ணனைக்‌ கண்டதும்‌, குந்தி முதலில்‌ தன்‌ பிள்ளைகள்‌ பட்ட கஷ்டங்களை எண்ணிக்‌ கண்ணீர்‌ பெருக்கினாள்‌. பின்பு பிள்ளைகளின்‌ க்ஷேமஸமாசாரத்தை விசாரித்தாள்‌. கடைசியாய்‌, பீமனும்‌ அர்ஜுனனும்‌ இருக்கையில்‌, போர்க்களத்தி லிருந்து தமது இராஜ்யத்தை மீட்டுக்கொள்ளாது வீட்டுக்குத்‌ திரும்பக்கூடாது என்று பிள்ளைகளிடம்‌ தான்‌ சொன்னதாகச்‌ சொல்லும்படி பகவானிடம்‌ சொல்லி அனுப்பினாள்‌. பகவான்‌, பாண்டவர்களுக்குத்‌ தான்‌ கடைசியில்‌ ஜயம்‌ வரும்‌ என்று சொல்லிக்‌ குந்தியைத்‌ தேற்ற, குந்திக்கு அஞ்ஞானமும்‌ துக்கமும்‌ நீங்கப்‌ பகவானை மனதாரத்‌ துதித்தாள்‌.

வினா 39.- ஸாயங்காலம்‌ பகவான்‌ எங்கே போனார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- இதன்‌ பின்பு, பகவான்‌ துர்யோதனன்‌ ஸபைக்குச்‌ சென்றார்‌. அங்கு இவருக்கு மரியாதைகள்‌ ஒருவாறு நடக்க துர்யோதனன்‌, பகவானை சாப்பாட்டிற்கு அழைத்தான்‌. பகவான்‌ ஒத்துக்கொள்ளவில்லை. இதற்குத்‌ துர்யோதனன்‌ காரணம்‌ கேட்கப்‌, பகவான்‌, 'தூதர்கள்‌ தாங்கள்‌ வந்த காரியத்தைத்‌ தமக்கு அனுகூலமாய்‌ முடித்தால்‌ அல்லது, தாம்‌ வந்திருக்கும்‌ எஜமானன்‌ வீட்டில்‌ சாப்பிடுவதில்லை. ஆகையால்‌ என்‌ மனதை முதலில்‌ திருப்தி செய்துவிட்டுப்‌ பின்பு என்‌ வயிற்றைத்‌ திருப்திசெய்‌' என்றார்‌. இது துர்யோதனனுக்குத்‌ தகுந்த காரணமாகப்‌ படாதது கண்டு, பகவான்‌ தமது உண்மைக்‌ கருத்தைப்‌ பின்வருமாறு வெளியிட்டார்‌. அன்போடு இடாத அன்னத்தைப்‌ புஜிக்கலாகாது. அதை, ஒருவேளை கஷ்டகாலத்தில்‌ மாத்திரம்‌ புஜிக்கலாம்‌ என்பது சாஸ்திரவிதி. என்னிடம்‌ உனக்கு அன்பும்‌ இல்லை, நானும்‌ இப்பொழுது கஷ்ட ஸ்திதியிலும்‌ இல்லை. பாண்டவர்மேல்‌ உனக்குப்‌ பிறந்த நாள்‌ முதல்‌, ஏன்‌ இவ்வளவு அகாரணமான பொறாமை இருக்கவேண்டும்‌. பாண்டவர்கள்‌ மஹாதர்மாத்மாக்கள்‌. அவர்களைக்‌ குற்றங்கூற ஒருவராலும்‌ முடியாது. இக்குணம்‌ வாய்ந்த பாண்டவர்களை வெறுத்தவர்கள்‌ என்னையும்‌ வெறுத்தவர்கள்‌ தான்‌. தர்மாத்மாக்களைக்‌ கெடுக்க எண்ணுபவன்‌ மஹா பாபி. அவனுக்கு மேலான நிலை நிலைக்காது. நீ கொடுக்கும்‌ வஸ்துக்கள்‌ யாவும்‌ உனது குணங்களால்‌ அசுத்தமாயி ருக்கின்றன. இவ்வூரில்‌ எனக்குச்‌ சுத்தபோஜனம்‌ அளிக்க வல்லவன்‌ விதுரன்‌ ஒருவனே என்று சொல்லிவிட்டுப்‌ பகவான்‌ விதுரர்‌ வீடு சென்றார்.

வினா 40- விதுரர்‌ வீடு சென்று பகவான்‌ அன்று மிஞ்சிய பகலையும்‌, இரவையும்‌ எவ்வாறு கழித்தார்‌.

விடை.- விதுரர்‌ வீடு சென்று ஸாயங்காலம்‌ வந்து சேர்ந்ததும்‌, பகவானைத்‌ தரிசிக்கப்‌ பீஷ்மர்‌ முதலிய தர்மாத்மாக்கள்‌ அங்கு வந்து பகவானைத்‌ தமது திவ்ய மாளிகைகளில்‌ வந்து வஸிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்‌. பகவான்‌ அவர்கள்‌ செய்த மரியாதைகளை ஒத்துக்கொண்டு அவர்களைத்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ போகும்‌ படி அனுப்பி விட்டார்‌. அதன்பின்‌, விதுரர்‌ பக்தியோடு அளித்த போஜனத்தை வயிறார உண்டு, பகவான்‌ ஓரிடத்து வந்து உட்கார்ந்தார்‌. அப்பொழுது விதுரர்‌ 'துர்யோதனன்‌ ஸ்வபாவமாகவே துராத்மா, மேலும்‌ அவனுக்கு பீஷ்மர்‌, துரோணர்‌ முதலியவர்களது ஸகாயமிருக்கையில்‌, தன்னை ஒருவராலும்‌ ஜயிக்க முடியாது என்ற எண்ணமுண்டாயிருக்கிறது. அவனை அநேகம்‌ கொடியவர்கள்‌ சூழ்ந்திருக்கிறார்கள்‌. இப்படி முரட்டுத்தனமுள்ளவனிடம்‌ பேசத்‌ தாங்கள்‌ வருவானேன்‌. ஆனால்‌ தங்களைக்‌ கண்டு நான்‌ கிருதார்த்தனானேன்‌. தாங்கள்‌ வந்தது எனக்கு மாத்திரம்தான்‌ நன்மையாக முடியும்‌' என்று தன்‌ எண்ணத்தை வெளியிட்‌டார்‌. அதற்குப்‌ பகவான்‌, நீ சொல்லியது உண்மைதான்‌. அப்படி இருந்தபோதிலும்‌, நான்‌ ஸமாதான விஷயத்தில்‌ என்னால்‌ கூடியவரையிலும்‌ நயமாய்ச்‌ சொல்லிப்‌ பார்க்கிறேன்‌. இது நான்‌ அவசியம்‌ செய்யவேண்டியது தான்‌. இதற்குப்‌ பின்னும்‌, துர்யோதனன்‌ முரட்டுத்தனமா யிருப்பானாயின்‌, அவனை நாசம்‌ செய்யத்தக்க யுத்தத்தைத்‌ தொடங்குவேன்‌' என்று மறுமொழி கூறினார்‌. இவ்வாறு பேச்சிலேயே அன்றிரவு கழிந்தது.

வினா 41.- மறுநாட்‌ காலையில்‌ பகவான்‌ என்ன செய்தார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- பகவான்‌ எழுந்து, காலைக்‌ கடன்களை முடித்துக்‌ கொண்டு, திருதிராஷ்டிரனது ஸபைக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தார்‌. அங்கு யாவரும்‌ எழுந்து, பகவானுக்கு ஏற்பட்ட ஆஸனத்தில்‌ அவர்‌ உட்கார்ந்ததும்‌, எல்லோரும்‌ உட்கார்ந்தார்‌கள்‌. பகவானது வாக்சாதுர்யத்தைக்‌ கண்டு ஆனந்திக்க, நாரதரை முன்னிட்டுக்‌ கொண்டு அனேக ரிஷீசுவரர்கள், திருதிராஷ்டிரன்‌ ஸபைக்குவர, அவர்களையும்‌ தகுந்த ஆஸனங்களில்‌ பீஷ்மர்‌ முதலியோர்‌ உட்காருவித்தார்கள்‌. விதுரர்‌, பகவான்‌ பக்கத்தில்‌ உட்கார்ந்தார்‌. ஸபையானது மிக அழகாய்‌ விளங்கியது.

வினா 42.- பகவான்‌ துர்யோதனாதியரை நோக்கி என்ன சொன்னார்‌?

விடை.- பாண்டவர்களுக்கும்‌ கெளரவர்களுக்கும்‌ ஸமாதானம்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌, சண்டை நேர்ந்தால்‌ இருதிறத்தாருக்கும்‌ மிகுந்த அபாயம்‌ வரும்‌ என்றும்‌, திருதிராஷ்டிரன்‌ நினைத்தால்‌ சண்டை வராமல்‌ தடுக்கலாம்‌ என்றும்‌, பாண்டவ கெளரவர்கள்‌ ஒற்றுமையாய்‌ இருந்தால்‌ அவர்களை ஒருவராலும்‌ ஜயிக்க முடியாதென்றும்‌, இருதிறத்தாருக்கும்‌ ஸுகமுண்டாகும்‌ என்றும்‌, அத்தருணத்தில்‌ திருதிராஷ்ரனுக்குப்‌ பாண்டவர்கள்‌ தகப்பனை சிறுவயதில்‌ இழந்தவர்கள்‌ என்ற எண்ணம்‌ வந்தால்‌, அன்பு உண்டாகும்‌ அதனால்‌ சண்டை தடைபடும்‌ என்றும்‌, வெகு விஸ்தாரமாக பகவான்‌ ஸமாதான விஷயத்தில்‌ பேசினார்‌. அதன்‌ பின்பு பாண்டவர்கள்‌, "நாம்‌ உமது கட்டளைப்படி எமது உறவினரோடு கஷ்டங்களை அனுபவித்தாய்‌ விட்டது. ஆகையால்‌ உங்கள்‌ வாக்குப்படி இப்பொழுது நீங்கள்‌ நடந்து எங்களை தர்ம மார்க்கத்தில்‌ நடக்கும்படிச்‌ செய்ய வேண்டும்‌. உம்மை நாம்‌ எங்கள்‌ தகப்பனாராகப்‌ பாவிக்கிறோம்‌' என்று திருதிராஷ்ரனுக்குச்‌ சொல்லிவிட்ட ஸமாசாரத்தைப்‌ பகவான்‌ ஸபையோர்‌ முன்னிலையில்‌ வெளியிட்டார்‌. தர்மபுத்திரர்‌ மஹாத்மா என்றும்‌, ஆகையால்‌ திருதிராஷ்டிரன்‌ தனது பிள்ளைகளை அடக்கி ஆண்டு ஸமாதானத்தையே செய்து கொள்ளவேண்டும்‌ என்றும்‌, தமது அபிப்பிராயத்‌தைப்‌ பகவான்‌ வெளியிட்டார்‌. இதைக்‌ கேட்டதும்‌ எல்லோரும்‌ இதற்கு விரோதமாய்‌ ஒன்றும்‌ சொல்ல முடியாமல்‌ மெளனமாய்‌ இருந்தனர்‌.

வினா 43.- இவ்வாறு பகவான்‌ சொல்லி முடித்ததும்‌, யார்‌ ஸபையில்‌ எழுந்திருந்து என்ன சொன்னார்கள்‌?

விடை.- ஸபையில்‌ மஹரிஷிகளோடு பரசுராமர்‌ எழுந்து டம்போத்பவராஜன்‌ உலகத்தை ஜயித்து, மேலும்‌ ஜயிக்க ஒருவருமில்லாததைக்‌ கண்டு பிராம்மணர்களிடம்‌ கேட்டு அடிக்கடி கஷ்டப்படுத்தினதையும்‌, அப்பொழுது அவர்கள்‌ நரநாராயண யோகிகள்‌ பதிரிகாசிரமத்திலிருக்கிறார்கள்‌, அவர்களைப்போய்‌ ஜயித்துவா என்று அனுப்பியதையும்‌, இந்த அரசன்‌ சென்று யோகிகளது தர்ப்பையில்‌ மந்திரித்து விடப்பட்ட அஸதிர வேகத்தைக்‌ தாங்கமுடியாது தத்தளித்ததையும்‌ எடுத்துச்‌ சொல்லி, அந்த நரநாராயணாளே கிருஷ்ணார்ஜுனாள்‌ என்றும்‌ சொன்னார்‌. இந்தக்‌ காரணத்தால்‌ பாண்டவர்களோடு கெளரவர்கள்‌ ஸமாதானம்‌ செய்துகொள்வதே நலம்‌ என்று பரசுராமர்‌ வற்புறுத்தினார்‌.

வினா 44... இதன்‌ பின்பு யார்‌ ஸபையில்‌ எழுந்து தமது அபிப்பிராயத்தை எவ்வாறு வெளியிட்டது?

விடை.- கண்வ மஹாரிஷி எவ்வளவு பலவானாயினும்‌, தேக பலம்‌, மனோபலத்தின்‌ முன்பும்‌, நியாயத்தின்‌ முன்பும்‌, நிற்கமாட்டாது. ஆகையால்‌ பாண்டவரோடு ஸமாதானம்‌ செய்தலே நலம்‌ என்று எடுத்துரைத்துக்‌ கருடன்‌ கர்வ பங்கப்பட்ட கதையைச்‌ சொன்னார்‌. இந்திரனது ஸாரதியான மாதலி தன்‌ பெண்ணுக்குத்‌ தகுந்த நாயகனை, நாரத ஸஹாயத்தால்‌ தேடி வருகையில்‌, நாகலோகத்தில்‌ ஒரு நாகனைக்கண்டு அவனுக்குத்‌ தன்‌ பெண்ணைக்‌ கொடுப்பதாக எண்ணியதையும்‌, அப்பொழுது அந்த நாகன்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கருடனால்‌ மாளப்போகிறதை அறிந்து, அவனை மாதலி தேவலோகம்‌ அழைத்துப்‌ போய்‌ விஷ்ணுவும்‌ இந்திரனும்‌ இருக்கையில்‌ அவர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ அமிருதம்‌ உண்பித்ததும்‌ இதை அறிந்த கருடன்‌ விஷ்ணுவிடம்‌ சென்று, தன்‌ பலத்தைப்பற்றிப்‌ பெருமை பேசுங்கால்‌, பகவான்‌ தமது கையை அதன்மேல்‌ வைக்க, அதைத்‌ தாங்கமுடியாது கருடன்‌ தத்தளித்து நின்றதையும்‌, விஸ்தாரமாகக்‌ கண்வர்‌ எடுத்துரைத்தார்‌.

வினா 45.- இதன்‌ பின்பு யார்‌ துர்யோதனனுக்கு இவ்விஷயத்தில்‌ புத்திமதி எவ்வாறு கூறியது?

விடை.- நாரதர்‌, நல்ல விஷயத்திலேயே முரட்டுத்தனம்‌ அதிகமாயிருந்தால்‌ கேடுவிளையும்‌ என்பதைக்‌ காலவரிஷி உபாக்கியானத்தால்‌ வெளியிட்டு, துர்யோதனனை நோக்கி அவன்‌ கெட்ட விஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌ இருந்தால்‌ அதிகக்கேடு உண்டாகும்‌ என்று பயமுறுத்தினார்‌.

வினா 46.- காலவ ரிஷி யார்‌? இவர்‌ எந்த நல்லவிஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌

இருந்தார்‌? என்ன கெடுதி இவருக்கு உண்டாயிற்று?

செவ்வாய், 15 நவம்பர், 2022

ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை 29

வினா 21.- அன்றிரவை திருதிராஷ்டிர மஹாராஜா எவ்வாறு கழித்தார்‌?

விடை... திருதிராஷ்டிரன்‌, எவ்வளவுதான்‌ தூங்க முயன்றும்‌, முடியாது அவன்‌ மனம்‌ குழம்பியது. தன்‌ பிள்ளைகள்‌ பாண்டவர்களால்‌ மாண்டுபோகப் போகிறார்களே என்ற ஏக்கத்தால்‌ அவனுக்குத்‌ தூக்கம்‌ பிடிக்கவில்லை. உடனே அவன்‌ விதுரரை அழைப்பித்துத்‌ தன்னிடம்‌ ஸஞ்சயர்‌ வந்து பாண்டவர்கள்‌ சொல்லியனுப்பிய விஷயத்தை மறுநாள்‌ ஸபையில்‌ சொல்லுவதாகச்‌ சொல்லித்‌ தன்னைப்‌ பலவாறாக நிந்தித்து பயமுறுத்திப்‌ போய்விட்டதாகவும்‌, அதனால்‌ தனக்கு தூக்கம்‌ வராது மனம்‌ குழம்புகிறதாகவும்‌, ஆதலால்‌ ஏதாவது விஷயத்தைப்பற்றிச்‌ சொல்லி அன்றிரவைக்‌ கழிக்கவேண்டும்‌ என்றான்‌. விதுரர்‌ யுதிஷ்டிரரது மேன்மையையும்‌, ஒற்றுமையின்மையால்‌ வரும்‌ கேட்டையும்‌, ஒரு முடிவை யடைவதற்கு ஏற்பட்ட நல்லது, மிச்சிரம்‌, கெட்டது ஆகிய மூன்று வழியையும்‌, ஸநேகிதர்கள்‌ ஸம்பத்‌ காலத்திலும்‌, ஆபத்காலத்திலும்‌ இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்‌ என்பதையும்‌, சித்த நிரோத இந்திரிய நிரோதங்களால்‌ வரும்‌ பலன்களையும்‌, எந்தக்‌ கஷ்ட காலத்திலும்‌ பொய்‌ சொல்லக்‌ கூடாது என்பதையும்‌, மேலான குணங்களோடு கூடி இருத்தலே உயர்குடிப் பிறந்ததற்கு அடையாளம்‌, கெட்ட குணங்களோ மனிதனது ஆயுளைக்‌ குறைக்கும்‌ என்பதையும்‌, ஆசிரம தர்மங்களையும்பற்றி வெகு விஸ்தாரமாக எடுத்துரைத்துக்‌ கடைசியில்‌ பாண்டவர்களோடு எப்படியாவது ஸமாதானம்‌ செய்துகொள்ள வேண்டியது என்று வற்புறுத்தினார்‌. திருதிராஷ்டிரன்‌ 'விதியை எவ்வாறு மதியால்‌ வெல்லுவது' என்று சொல்லி சும்மா இருந்தான்‌. (இப்பாகத்திற்கு விதுரப்பிரஜாகரம்‌ என்று பெயர்‌.)

வினா 22.- இதன்‌ பின்பு யார்‌ திருதிராஷ்டிரனுக்கு எதைச்‌ சொன்னது? ஏன்‌ விதுரர் இதைப்பற்றிக்‌ கூறவில்லை?

விடை... திருதிராஷ்டிரன்‌, விதுரரை ஆத்மஞான விஷயத்தைப்பற்றிச்‌ சொல்லும்படி தூண்ட, தாம்‌ அதைப்பற்றிச்‌ சொல்லத்‌ தகுந்தவரல்லர்‌ என்று சொன்னார்‌. மேலும்‌ திருதிராஷ்டிரன்‌ இதைப்பற்றிக்‌ கேட்கவேண்டும்‌ என்று சொல்ல, விதுரர்‌ தமது தியான விசேஷத்தால்‌ அந்த நடூ இரவில்‌ அந்தப்புரத்திற்குப்‌ பிரம்மாவினது மானஸ புத்திரராகிய ஸனத்குமாரரை அழைப்பித்துத்‌ தமது தமயனுக்கு ஆத்மஞானத்தை உபதேசிக்கச்‌ சொன்னார்‌. ஸனத்குமாரர்‌ புண்ணிய பாப ரகஸியம்‌, லோகாந்தரங்‌களின்‌ ரகஸியம்‌, மெளனநிலையின்‌ ஸவரூபம்‌, வேதங்களின்‌ நோக்கம்‌, ஸந்நியாஸதர்ம விசேஷம்‌, ஸந்நியாஸத்திற்கு விரோதமாக இருக்கும்‌ குற்றங்கள்‌, பிரம்மசரியத்தின்‌ ஸ்வரூபம்‌, பிரம்மஸ்வரூப லக்ஷணம்‌ ஆகிய இவைகளை 'உள்ளங்கை நெல்லிக்கனிபோல' விளக்கி மறைந்தருளினர்‌. இதற்குள்‌ பொழுது விடியத்‌ திருதிராஷ்டிரனும்‌ விதுரரும்‌ தமது காலைக்கடனை முடிக்க வெளியிற்‌ சென்றனர்‌.

வினா 23.- மறுநாட்காலையிற்‌ ஸஞ்சயர்‌ இராஜ ஸபையில்‌ என்ன வெளியிட்டார்‌?

விடை.- நான்‌ ஒருவனே கெளரவ ஸேனையை யமலோகத்திற்கு அனுப்பி இராஜ்யத்தைக்‌ கைப்பற்றிக்‌ கொள்ளுவேன்‌. என்னிடத்தில்‌ அவ்வளவு சிறந்த அஸ்திரங்கள்‌ இருக்கின்றன. மேலும்‌ ஜோதிஷத்தில்‌ சிறந்தவர்கள்‌ எங்களுக்கு ஜயம்‌ வரும்‌ என்றும்‌, கெளரவருக்குத்‌ தோல்வி வரும்‌ என்றும்‌ சொல்லி இருக்கிறார்கள்‌. கிருஷ்ணபகவானும்‌ இதை உண்மை என்று ஒத்துக்கொள்ளுகிறார்‌. ஆகையால்‌ நாங்கள்‌ சண்டைக்குவரத்‌ தயார்தான்‌. எப்படி இருந்தபோதிலும்‌ நாங்கள்‌ இந்த விஷயத்தில்‌ பீஷ்மர், துரோணர்‌, கிருபர்‌ முதலிய மஹாத்மாக்கள்‌ என்ன சொல்லுகிறார்களோ அதன்படி நடக்கத்‌ தயாராய்க்‌ காத்திருக்கிறோம்‌, என்று அர்ஜுனன்‌ சொல்லிவிட்டதாக ஸஞ்சயர்‌ ஸபையில்‌ சொன்னார்‌.

வினா 24.- ஸஞ்சயர்‌ இவ்வாறு சொன்னதும்‌ ஸபையில்‌ இதைப்பற்றி என்ன ஆலோசனை நடந்தது?

விடை.- இதைக்‌ கேட்டதும்‌ பீஷ்மர்‌, அர்ஜுனன்‌, கிருஷ்ண பகவான்‌ ஆகிய இவர்கள்‌ நரநாராயணாள்‌ என்றும்‌, இவர்கள்‌ யுகங்கள்‌ தோறும்‌ துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனார்த்தம்‌ உலகத்தில்‌ அவதரிப்பவர்கள்‌ என்றும்‌, அவர்களோடு ஸமாதானமாக நடக்காவிட்டால்‌, துர்யோதனன்‌ முதலிய கொடியவர்களுக்கும்‌ கேடு இவர்களால்‌ விளையும்‌ என்றும்‌ விஸ்தாரமாக எடுத்துச்‌ சொன்னார்‌. துரோணரும்‌ பீஷ்மர்‌ சொல்லியதே நியாயம்‌ என்றார்‌. இதன்‌ பின்பு திருதிராஷ்டிரர்‌ பாண்டவர்கள்‌ எவ்வாறு யுத்தத்திற்குத்‌ தயாராய்‌ இருக்கிறார்கள்‌ என்று கேட்க, பாண்டவர்களது கஷ்டம்‌ ஸஞ்சயருக்கு ஞாபகம்‌ வந்தது. உடனே அவர்‌ மூர்ச்சையாய்‌ விழுந்தார்‌. சற்று நாழிகையான பின்பு ஸஞ்சயர்‌ எழுந்து அநேக பலமான ராஜாக்கள்‌ தர்மபுத்திரரது உத்தரவை எதிர்பார்த்திருக்கிறார்கள்‌ என்றும்‌, அவர்‌ யுத்தம்‌ செய்யலாம்‌ என்று சொல்லவேண்டியது தான்‌, கெளரவ ஸேனையைத்‌ சின்னா பின்னப்‌ படுத்துவார்கள்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌. திருதிராஷ்டிரனுக்கு பீமன்‌ முன்‌ சொக்கட்டானாடிய காலத்தில்‌ செய்த சபதம்‌ ஞாபகம்வர, வெகுவாக அவன்‌ துக்கப்‌ படத்தொடங்கினான்‌. இதுதான் ஸமயம்‌ என ஸஞ்சயர்‌ திருதிராஷ்டிர ராஜனை பாண்டவர்களிடம்‌ இதுகாறும்‌ அசட்டையாய்‌ இருந்ததைப்பற்றி மிகவும்‌ நிந்தித்துப்‌ பேசினார்‌.

வினா 25.- இவ்வாறு ஸமாதான விஷயமாய்‌ எல்லாம்‌ நடந்து வருகையில்‌ யார் இதை எவ்வாறு தடுத்தார்கள்‌?

விடை.- துர்யோதனனே ஸபையில்‌ வந்து, பீஷ்மர்‌, கர்ணன்‌ முதலிய யுத்தவீரர்கள்‌ தனது பக்கத்திலிருப்பதாகவும்‌, ஆகையால்‌ பாண்டவ பலத்தைக்‌ கண்டு மனமழிய வேண்டியதில்லை என்றும்‌, தன்‌ தகப்பனைத்‌ தேற்றினான்‌. இதன்‌ பின்பு துர்யோதனன்‌ தர்மபுத்திரரது செய்கைகளையும்‌, அர்ஜுனனது குதிரைகளையும்‌ பற்றி ஸஞ்சயரை விசாரித்தான்‌. தர்மபுத்திரருக்கு யுத்தம்‌ வரப்போகிறது என்று தெரிந்த போதிலும்‌, அவர்‌ வெகு உத்ஸாகத்தோடுதான்‌ இருக்கிறார்‌ என்றும்‌, அர்ஜுனனது குதிரைகளுக்கு ஈடு உலகில்‌ வேறு குதிரைகள்‌ இல்லை என்றும்‌ ஸஞ்சயர்‌ சொன்னார்‌.

வினா 26.- இதைக்‌ கேட்டதும்‌ திருதிராஷ்டிரன்‌ கதி என்னமாயிற்று? யார்‌ அவனை எவ்வாறு தேற்றியது? மேல்‌ என்ன நடந்தது?

விடை... திருதிராஷ்டிரனுக்குப்‌ பாண்டவர்களது பலத்தைக்‌ கேள்விப்பட்டதும்‌ பயம்‌ அதிகரிக்க, பித்துப்பிடித்தவன்‌ போலானான். அப்பொழுது துர்யோதனன்‌ மறுபடியும்‌ தனது பக்கத்திலிருந்து போர்செய்ய வந்திருக்கும்‌ அரசர்கள்‌ பலத்தை எடுத்துச்‌ சொல்லி தன்‌ தகப்பன்‌ மனதைத்‌ தேற்றினான்‌. உடனே தகப்பன்‌ பிள்ளையை நோக்கிப்‌ பாண்டவர்களுக்கு அவர்களது பாகத்தைக்கொடுக்கும்படி தன்னால்‌ கூடிய மட்டும்‌ சொல்லிப்பார்த்தான்‌. அப்பொழுதும்‌ துர்யோதனன்‌, தான்‌ பீஷ்மர்‌ முதலியவர்கள்‌ பலத்தை உத்தேசித்திருக்கவில்லை என்றும்‌, கர்ணனை ஸஹாயமாய்‌ வைத்துக்கொண்டு யுத்தத்தை நடத்துவதாகப்‌ பெருமை பேசினான்‌. அப்பொழுது திருதிராஷ்டிரன்‌, கிருஷ்ணார்ஜுனர்கள்‌ இருவரும்‌ என்ன சொன்னார்கள்‌ என்று ஸஞ்சயரைக்‌ கேட்டான்‌. அதற்கு ஸஞ்சயர்‌, அவர்கள்‌ இருந்தவிடம்‌, தான்‌ மஹா பயபக்தியோடு சென்ற பொழுது, அவர்கள்‌ ஸ்நேகிதர்கள்‌ போல வெகு ஸஹஜமாய்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌ என்றும்‌, அப்பொழுது அவர்கள்‌ தன்னை ஒரு தங்க ஆஸனத்தில்‌ உட்காரவைத்து, திருதிராஷ்டிரன்‌ முதலியவர்களை க்ஷேமம்‌ விசாரித்துவிட்டு, அவர்களிடம்‌ அர்ஜுனனை எதிர்க்க வல்லார்‌ ஒருவருமில்லை என்று சொல்லச்‌ சொன்னார்கள்‌ என்றும்‌ பதில்‌ சொன்னார்‌. அர்ஜுனனது பலத்தைக்‌ கேள்விப்பட்டதும்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ பழையபடி மனோவியாகூலம்‌ வந்துவிட்டது.

வினா 27 .- இதைத்‌ துர்யோதனன்‌ தீர்க்க முயலுங்கால்‌ ஸபையில்‌ என்ன விபரீதம்‌ ஏற்பட்டது?

விடை... திருதிராஷ்டிரனைத்‌ தேற்றுவதற்காக துர்யோதனன்‌ தனது பெளருஷத்தை எடுத்துப்‌ பலர்‌ அறியய்‌ பேசினான்‌. அப்பொழுது கர்ணனும்‌ தனது பெளருஷத்தைச்‌ சொல்லி தன்னைத்தானே துதித்துக்கொண்டான்‌. இதைக்கேட்டதும்‌ பீஷ்மர்‌, இவர்கள்‌ விராட நகரத்தில்‌ மாடுபிடி சண்டையில்‌ அர்ஜுனன்‌ கையில்‌ அகப்பட்டு பட்டபாடுகளைச்‌ சொல்லி, இவர்களை நிந்தித்துப்‌ பரிஹாஸம்‌ செய்தார்‌. உடனே கர்ணனுக்கு அதிகக்‌ கோபம்‌ வர, அவன்‌ பீஷ்மர்‌ கீழே விழும்‌ வரை, தான்‌ யுத்தம்‌ செய்வதில்லை என்று சபதம்‌ செய்துகொண்டு அவன்‌ ஸபையைவிட்டு வெகு கோபத்தோடு வெளியே சென்றான்‌.

வினா 28.- இவ்வாறு கர்ணன்‌ கோபித்துக்கொண்டு சென்றதும்‌, திருதிராஷ்டிரறுக்கு யார்‌ எவ்வாறு புத்திமதி கூறியது?

விடை.- விதுரர்‌ இத்தருணத்தில்‌ முன்‌ வந்து, அரசனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌. ஒருவனுக்கு ஜயம்‌ முதலியவைகள்‌ வேண்டுமானால்‌, மனோ நிரோதம்‌, சாந்தம்‌, அடக்கம்‌ முதலிய நற்குணங்கள்‌ இருக்கவேண்டும்‌. மேலும்‌ ஒற்றுமை அவசியம்‌ வேண்டும்‌. ஒருவேடன்‌ பட்சிகளைப்‌ பிடிக்க வலையை வீசினான்‌. கொஞ்ச நாழிகையில்‌, அதில்‌ இரண்டு அந்நியோந்நியமான பறவைகள்‌ பிடிபட, அவைகள்‌ ஒற்றுமையாய்‌ வலையைத்‌ தூக்கிக்கொண்டு ஆகாயத்தில்‌ பறந்தன. அப்பொழுது வேடன்‌ அவைகளைப்‌ பின்தொடர்ந்து போனான்‌. கொஞ்ச தூரம்‌ போகையில்‌ பறவைகள்‌ தம்முள்‌ சண்டை வர, அவைகள்‌ வலையோடு கீழே விழுந்து, வேடன்கையில்‌ அகப்பட்டுக்‌ கொண்டன. ஆகையால்‌, துர்யோதனாதியர்‌ சண்டை போட்டுக்‌ கொள்ளுதல்‌ தகாது, கேடே நேரிடும்‌. மேலும்‌, நாங்கள்‌ கந்தமாதன மலைக்குப்‌ போயிருக்கையில்‌, அங்குக்‌ குபேரனுக்கு, பாம்புகளால்‌ காவல்‌ காக்கப்‌ பட்டும்‌, உண்போருக்கு யெளவனம்‌ உண்டாக்கும்‌ திறனுடையதாயும்‌ வைக்கப்‌ பட்டுள்ள தேன்‌ இருப்பதைக்‌ கண்டோம்‌. அது மலை உச்சியில்‌ இருந்தது. இதன்‌ மேன்மையைக்‌ கேள்விப்பட்டு, இதைக் குடிக்கவேண்டும்‌ என்ற ஆசையோடு, சில வேடர்‌ அங்கே போய்க்‌ கீழே விழுந்து பாம்புகளால்‌ மாண்டார்கள்‌. அதுபோல துர்யோதனன்‌, ஜயத்தை எண்ணுகிறானே ஒழிய, அர்ஜுனனது பலத்தால்‌ தனக்கு உண்டாகும்‌ அபாயத்தைக்‌ கவனியாதிருக்கிறான்‌. இவனுக்கும்‌ அந்த வேடர்கள்‌ கதிவரும்‌ என்று விதுரர்‌ திருதிராஷ்டிரனுக்கு நல்ல புத்திமதி கூறினார்‌.

வினா 29.- இவ்வாறு விதுரர்‌ புத்திமதி கூறியதும்‌, திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை.- இந்தக்‌ கதைகளைக்‌ கேட்டதும்‌, திருதிராஷ்டிரன்‌ துர்யோதனனை பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்து கொள்ளும்படி எவ்வளவோ சொல்லிப்‌ பார்த்தான்‌. இதன்‌ பின்பு ஸஞ்சயரை நோக்கி, "கிருஷ்ணபகவான்‌ அர்ஜுனனைப்‌ புகழ்ந்து பேசியதன்‌ பிறகு, உன்னிடம்‌ அர்ஜுனன்‌ என்ன சொல்லி அனுப்பினான்‌” என்று கேட்க அவர்‌ தம்மிடம்‌ “கெளரவர்‌ பக்கத்தில்‌ ஸகாயம்‌ செய்ய வந்திருக்கும்‌ அரசர்கள்‌ எல்லோருக்கும்‌ முடிவுகாலம்‌ வந்திருக்கிறது. அவர்கள்‌ எல்லோரையும்‌ யுத்தமாகிற அக்கினியில்‌, துர்யோதனனே சேர்த்து ஆகுதி செய்யப்போகிறான்‌” என்று சொன்ன வாக்கியத்தை ஒளியாது ஸபையோர்‌ அறியச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்டதும்‌ துர்யோதனன்‌, அசட்டையாய்‌ இருப்பதையும்‌, மற்றையவர்‌ பேசாதிருப்‌பதையும்‌ கண்டு, ஸபையிலிருந்த அரசர்கள்‌ யாவரும்‌ எழுந்திருக்க, ஸபை கலைந்தது.

வினா 30.- ஸபை கலைந்ததும்‌ திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை. ஸபை கலைந்ததும்‌ திருதிராஷ்டிரன்‌ ஸஞ்சயரை நோக்கி தன்‌ ஸேனைக்கும்‌ பாண்டவஸேனைக்கும்‌ உள்ள விசேஷபாகங்களைப்பற்றி வினவினான்‌. அதற்கு ஸஞ்சயர்‌, திருதிராஷ்டிரனிடம்‌ ரகஸியமாய்த்‌ தாம்‌ ஒன்றும்‌ சொல்வதில்லை; பலரறியத்தான்‌ எல்லாம்‌ சொல்லுவதாகச்‌ சொன்னார்‌.