சனி, 19 டிசம்பர், 2009

மழையே! மழையே! வா, வா!

4. மழையே ! மழையே! வா, வா!

மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்றால், நாட்டுக்கு விளையும் நலங்கள் குறித்து ஆயச் சிறுமியர் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மழைக்கடவுளும், ‘இவ்வளவு கிருஷ்ண பக்தியுள்ள இவர்களுக்குக் கொஞ்சம் நம்மால் ஆன பணியும் புரிவோம்,புரிந்து பேறு பெறுவோம்’ என்று தானும் ஆலோசிக்கத் தொடங்கி னானாம். இப்படி ஆலோசித்து,’நான் உங்கள் விஷயமாக என்ன பணி செய்யவேண்டும் என்பதை நீங்கள் தயவு செய்து தெரிவிக்கவேணும்’ என்று இவர்களைக் கேட்கிறானாம். இவர்கள் மழைக்கடவுளைப் பிரார்த்திக்க வில்லை; அவன்தான் இவர்களைப் பிரார்த்தித்துப் பாக்கியம் அடைய விரும்புகிறானாம். இப்படி யெல்லாம் தோன்றுகிறது இவர்களுக்கு, நீண்ட வானத்திலே கரும் புள்ளிபோல ஒரு மேகத்தைப் பார்க்கும்போது.

‘மழைக்கடவுளே! நீ ஒன்றும் கையிருப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாத வள்ளல் போல் பொழிய வேணும்’ என்று இவர்கள் சொல்லுகிறார்கள். விண்ணப்பம் செய்து கொள்ளவில்லை; கட்டளை யிடுவதுபோல் பேசுகிறார்கள். ‘கடலுக்குள் புகுந்து அந்த வெள்ளத்தை அப்படியே முழுதும் முகந்துகொண்டு நன்னீராகக் கொட்டவேணும்’ என்கிறார்கள். ‘கொஞ்சமும் லோபம் செய்யக் கூடாது, தெரியுமா?’ என்கிறார்கள்.

மேகத்தினிடையே தோன்றிய அந்த மழைக்கடவுள் தங்களிடம் அடங்கி ஒடுங்கிப் பணி கேட்பதைப் பார்த்து, ‘நீ பொழியும்போது இந்த அடக்க ஒடுக்கங்களை விட்டுவிட வேணும்’ என்கிறார்கள். கடல்நீரை முகந்து கொண்டதும் பெரு முழக்கத்துடன் கம்பீரமாக வான வீதியில் செல்லவேணும் என்கிறார்கள்.

‘உன் அஞ்சன மேனியில் அழகு கறுத்து விளங்க வேண்டும்’ என்கிறார்கள். “ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து” என்கிறார்கள். கண்ணனுடைய கறுப்பழகு பெற்றுத் திகழ வேண்டுமாம் மழைக்கடவுள்.

கண்ணனை ‘ஊழி  முதல்வன்’  என்கிறார்கள்;’பத்மநாபன்’என்கிறார்கள். ’வாராய் மழைக்கடவுளே! நீ எங்கள் பெருமானது திருமேனி போலக் கருமை யழகு பூண்டு, அவனது வலது கையிலுள்ள சக்கராயுதம் போல் பளிச் பளிச்சென்று மின்னவேண்டும்’ என்கிறார்கள். ‘பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி’ என்பது இவர்கள் வாக்கு. வலிமையும் அழகும் பொருந்திய தோள் அந்தப் பத்மநாபன் தோளையும் வருணிக்கிறார்கள்.

கண்ணனுடைய அழகிலும் இவர்களுக்கு ஆசை; வலிமையிலும் ஆசை. கண்ணனுடைய மேனி நிறத்தை மேகத்தினிடம் காண ஆசை. வலிமைக்கு அறிகுறியாக அவன் கையிலுள்ள சக்கராயுத த்தை மேகத்தினிடையே மின்னி வரும் மின்னலிடம் காண ஆசை. அப்படியே எம்பெருமானின் இடது கையிலுள்ள வலம்புரிச் சங்கின் முழக்கம் போன்ற இடி முழக்கத்தையும் கேட்க ஆசைப்படுகிறார்கள். “பாழிஅந் தோள்உடைப் பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து” மழையைக் கொட்டவேணும் மழைக்கடவுள் என்கிறார்கள்.

மழை அடித்துச் சொரியவேணும் அடைத்துப் பெய்யவேணும் என்றும் ஆசைப்படுகிறார்கள். எப்படி? கண்ணபிரானுடைய கையில் சார்ங்கம் என்ற வில் இருக்கிறதல்லவா? அந்த வில் அம்புகளை உதிர்க்கவில்லை, உதைத்துத் தள்ளுகிறது! ‘மழைக்கடவுளே! நீயும் மழைத்துளிகளை உதிர்த்தால் போதாது’ என்கிறார்கள். துஷ்ட நிக்கிரகம் செய்வதற்காக இறைவனது வில் அம்புமழையை உதைத்துத் தள்ளுகிறதல்லவா?—அப்படித் தள்ள வேண்டும் வானத்திலிருந்து மழைவெள்ளத்தை என்கிறார்கள்.

மழை வளத்தை வரும்புகிறவர்கள் கண்ணனுடைய அம்பு மழையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன? கண்ணனுக்கு அம்பு மழையும் அன்பு மழைதான்! அசுர சுபாவத்தை வேறுவிதமாகத் திருத்த முடிய வில்லை யென்றால் அழித்துத்தானே திருத்த வேண்டியிருக்கிறது! இதைத்தான் ‘மறக்கருணை’ என்கிறார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்க்கும் இறைவன் முடிவில் பயங்கரமான நாச வழிகளாலும் உலகத்தை வாழ வைக்கிறான் என்பர்.

தென்றலாக வீசுகிறவன் சண்டமாருதமாகவும் சீறியடிக்கிறான். சாதுவுக்குத் தென்றல், அசுரனுக்குப் புயல் – புரட்சி! “தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல், வாழ உலகினில் பெய்திடாய்!” என்றுதானே மழைக்கடவுளுக்குக் கட்டளை யிடுகிறார்கள்.

அம்பு மழைபோல் அழியப் பெய்திடாய் என்று சொல்லவில்லை; இறைவனுடைய அம்பு மழைபோல் உலகம் வாழப் பெய்திடாய் என்று இவர்கள் கூறுவது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. “வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழிநீர் ஆட, மகிழ்ந்துஏலோர் எம்பாவாய்” என்றுதான் பாடுகிறார்கள்.

கண்ணனுடைய அருள்போல் – மறக்கருணை போலவும்--- மழை இறங்கி வரவேணும் என்று கூறுகிறவர்கள், கண்ணனுடைய அருளும் இத்தகைய மழைபோல் இறங்கி வரவேணும் என்று ஆசைப்படுகிறார்கள்.

வாழ உலகினில் பெய்திடாய்!

ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்துஏறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழிஅந் தோள்உடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழிநீர் ஆட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்.

மழைக்கு அண்ணலாகிய தேவதையைக் குறித்துச் சிறுமியர்கள் பாடுகிறார்கள். இவர்கள் மழைக் கடவுளைப் பிரார்த்திக்கவில்லை. அக் கடவுளுக்குக் கட்டளையிடுவது போலப் பேசுகிறார்கள். ஆம்! ‘தாழாதே .... பெய்திடாய்’ என்று கட்டளை யிடுகிறார்கள்.

‘மழையே! உலகம் வாழவும், நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் பெய்வாயாக!’ என்று கட்டளையிடுகிறார்கள். கிருஷ்ண பக்தர்களானதால் கண்ணனுடைய மேனி நிறம், சங்கு சக்கரங்கள், வில் அம்பு மழை ஆகியவற்றை நினைவூட்டி, அப்படிப் பெய்யவேணும் என்கிறார்கள். கண்ணனுடைய அம்பு மழைகூட அன்பு மழைதான் என்பது குறிப்பு.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வளம் சுரக்கும், நலம் பெருகும்

3. வளம் சுரக்கும், நலம் பெருகும்

முதல் முதல் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று பாடி வந்தவர்கள் பிறகு, 'பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி'னார்கள். 'ஆதிப் பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல்மீதினில், நல்ல ஜோதிப்பணாமுடி ஆயிரம் கொண்ட தொல் அறிவு என்னும் ஓர் பாம்பின்மேல் ஒரு போதத்துயில்' கொண்டிருக் கிறான் என்றும், அந்தப் பரம்பொருளே உலகத்தில் அவதரிக்கிறார் என்றும், புதுமைக் கவியாகிய பாரதியாரும் பாடியிருக்கிறார். இப்படி அவதரித்த அவதாரங்களில் வாமனாவதாரத்தைக் குறித்து இப்போது பாடுகிறார்கள் கோபியர்கள்.

குள்ளனைக் குள்ளனாகப் பாடவில்லை; 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று பாடுகிறார்கள். திருநெடுமால் எப்படி வாமனன் என்று விசித்திரக் குள்ளன் ஆகிவிட்டான் தெரியுமா? நூற்றுக்கணக்கான மக்களுக்கோ பிராணிகளுக்கோ தங்க நிழலும் இடமும் தரக்கூடிய பிரம்மாண்டமான ஆலமரம் அதன் விதைக்குள் அடங்கித்தானே கிடந்தது? அப்படி அடங்கிக் கிடந்தானாம் வாமன வடிவத்தில் 'ஓங்கி உலகளந்த உத்தமன்'

இந்த 'உத்தமன் பேர்பாடி' நாம் நம் பாவை நோன்பிற்கு அங்கம் என்று சொல்லிப் பனி நீராடுவோம் என்கிறார்கள். இப்படி நீராடி நோன்பு நோற்றால், அதன்பயனாக, "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" செழிப்படையும் என்கிறார்கள்.

நெற்பயிர் வளர்ந்தோங்கும் என்கிறார்கள்.'ஓங்கி உலகளந்த உத்தமன்' கிருபையால் 'ஓங்கு பெருஞ்செந் நெல்' செழித்து வளரும் என்கிறார்கள். வயல்வளமும் நீர்வளமும் பாடுகிறார்கள். "ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள" என்று அந்தப் பயிர்களினூடே கயல் மீன்கள் துள்ளுவதையும் குறிப்பிடுகிறார்கள்.

வளத்துடன் அந்த வனப்பையும் குறிப்பிடுகிறார்கள். வயல்களில் களை என்று பறித்து எறியப்படும் குவளை மலர்களின் அழகை வருணிக்கிறார்கள். 'பூங்குவளைப்போது' என்கிறார்கள். வரப்புகளில் காணப்படும் இந்தப் பூங்குவளை மலர்களில் வண்டுகள் தேனுண்டு மயங்கி உறங்குகின்றனவாம். "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்று தேனூறும் தமிழில் அந்த அழகை வருணிக்கிறார்கள்.'பொறிவண்டு' என்று அந்த வண்டுகளின்மேல் உள்ள புள்ளிகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இங்கே இயற்கை நாடகம் ஒன்று நடக்கிறது. குவளைப் பூவில் வண்டு மதுபானம் பண்ண வந்து படிந்த நிலையிலே, கயல் மீன்கள் ஊடே சஞ்சரிக்கின்றனவாம்; துள்ளுகின்றனவாம். அதனால் செந்நெலும் குவளையும் ஒக்க அசைகின்றன. வண்டுக்குத் தன் பூம்படுக்கை இப்போது தூங்குமஞ்சம் போல் அசைந்தாடுகிறது. தூங்கு மஞ்சத்தில் மதுவுண்டு அரசிளங் குமரர் உறங்குவது போல் வண்டுகள் உறங்குகின்றனவாம். இந்த நாடகத்தைச் சொல்லியும் சொல்லாமலும் நமக்குக் காட்டி விடுகிறார்கள் இப்பெண்மணிகள்.

இப்போது வேறொரு காட்சி நமது கண்ணைக் கவர்கின்றது. பசுமாடு கறக்கும் சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால் என்ன மாடு! எவ்வளவு பால்! கறப்பவர்கள் தாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்! ஒரு நிலையாக இருந்து சலியாமல், ஏங்காமல் பசுக்களின் பருத்த மடிகளைப் பற்றி இழுக்கிறார்கள். பால் பெருகுகிறதா, அல்லது வெள்ளம்தான் பெருகி வருகிறதா? குடம் நிறைந்து விடுகிறது. ஒரு குடமா? குடங்கள் நிறைந்து விடுகின்றன பால் வெள்ளத்தால்! இந்தப் பசுக்களைப் 'பெரும் பசுக்கள்' என்று கூறுவதுடன் திருப்தி அடையாமல் 'வள்ளல் பெரும் பசுக்கள்' என்கிறார்கள். வள்ளல்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இந்தப் பசுக்களிடம்!

இப்படியெல்லாம் வருணித்து,'நீங்காத செல்வம் நிறைந்து விடும்' என்கிறார்கள். பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்துகொண்டே நீராடி நோன்பு நோற்றால் க்ஷேமம் பெருகும். க்ஷாமம் (வறட்சி) நீங்கிவிடும் என்கிறார்கள். நீர்வளம் நில வளம் நெல் வளம் பால் வளம் ஆகிய எல்லா வளங்களும் நிறைந்து தீங்காத செல்வம் பெருகும் என்கிறார்கள்.

'திங்கள் மும்மாரி' என்றால் மூன்று நாள் அல்லும் பகலுமாக மழை அடித்துச் சொரிந்து வெள்ளக் காடாக்கி விடும் என்பது பொருளல்ல. இருபத்தேழு நாள் வெயில் கொளுத்தி ஹிம்ஸித்தபின் மூன்று நாள் மழையும் ஓயாது ஒழியாது பெய்து ஹிம்ஸிப்பதானால், கஷ்டம் ஏற்படத்தானே செய்யும்? எனவே ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்த் தீங்கின்றி மும்மாரி பெய்யும் என்கிறார்கள். "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" என்று பாடும்போது, 'தீங்கின்றி' என்பதைச் சற்று அழுத்தி உச்சரிக்கிறார்கள்; எதுகையில் அமைந்திருக்கிறதல்லவா?

வள்ளற் பெரும் பசுக்கள் ஞானத்தை வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைவூட்டுகின்றன. வள்ளல்களுக்குப் பாடம் கற்பிப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் – ஆம், பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக் கும் --- இப்பசுக்கள் ஒரு பாடம் – முக்கியமான பாடம் – கற்பிக்கத்தான் செய்கின்றன.

மடியைக் கறப்பதுபோல் ஆசிரியனின் திருவடியைப் பற்றிக் கொண்டு ஞானப்பால் கறக்க முயல்பவன் தானே சீடனும். வள்ளற்பெரும்பசு குடம் நிறைப்பது போல் ஆசிரியனும் ஞானத்தை நிறைய வழங்கிச் சீடனின் உள்ளத்தை நிறைக்கிறான்; நிறைக்கவேண்டும் – இல்லையா?

இனி இப்பாட்டு முழுமையும் நோக்கி இன்புறுவோம்.

உள்ளபடி நோற்றால் உலகம் செழிக்கும்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்

தீங்குஇன்றி நாடுஎல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்குஇருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்.

உத்தமன் பேர்பாடி நாங்கள் பாவை நோன்பை வியாஜமாகக் கொண்டு நீராடினால், திங்கள் மும்மாரி பெய்து நாடு செழிக்கும்; நீர்வளம்,நெல் வளம், பால் வளம் ஆகிய வளங்களெல்லாம் கிடைக்கும் என்கிறார்கள்.

கடவுளை உத்தமன் என்று இங்கே குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. தன்னை அழியமாறி யாகிலும் பிறர் வாழ வேண்டும் என்று பணிபுரிகிறவனே உத்தமன் என்கிறார் வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை.நெடுமால் தன் வடிவைக் குறுகச் செய்து தேவர்களையும் மனிதர்களையும் வாழ்வித்ததால் ‘உத்தமன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.

பிறரும் வாழவேணும், நாமும் வாழவேணும் என்று இருப்பவனை ‘மத்தியமன்’ என்கிறார். பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க விரும்புகிறவனை ‘அதமன்’ என்கிறார்.

‘வள்ளல் பெரும்பசுக்கள்’ ஞானத்தை மக்களுக்கு வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைப்பூட்டுகின்றன.

வியாழன், 17 டிசம்பர், 2009

விரதமும் விருந்தே

2. விரதமும் விருந்தே

எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கும்போது, 'இவைகளை நான் செய்யமாட்டேன், இவைகளைச் செய்வேன்' என்று சில நியமங்களை மேற்கொள்கிறோமல்லவா? காரியசித்திக்காகச் சில பழக்கங்களை விடுகிறோம்: சில பழக்கங்களைப் பற்றிக் கொள்ளுகிறோம். இதைக் காரியசித்திக்கு உரிய நோன்பு என்று சொல்லலாம். ஆய்க்குலச் சிறுமிகளும் இத்தகைய சில விதிகளையும் விலக்குகளையும் பாவை நோன்பை முன்னிட்டுஅனுஷ்டிப்பதாகத்தீர்மானிக்கிறார்கள்.
'பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடு'வோம் என்பதை அதிமுக்கிய விதியாகக் கொள்கிறார்கள். 'நாட்காலை நீராடி' என்பது இரண்டாவது விதி. அடிபாடி அன்பு நீராடி அகத்தைத் தூய்மை செய்துகொண்டு, புறத்தூய்மைக்காக நாட்காலை நீராடுகிறார்கள். இவர்கள் மூன்றாவது விதி யாக "ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி" என்பதைக் கொண்டிருக்கிறார்கள். இந்த விதிகளை 'உய்யுமாறு எண்ணி உகந்து' மேற்கொள்கிறார்கள்.

விதிகளுடன் விலக்குகளும் வேண்டுமல்லவா? நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்கிறார் கள். 'மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்' என்கிறார்கள். நோன்பு முடியும்வரை நெய்யும் பாலும் உண்பதில்லை என்ற விரதம் பூண்டவர்கள், கண்ணுக்கு மை எழுதியும் கூந்தலுக்குப் பூச்சூட்டி யும் அலங்கரித்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கிறார்கள். ஆபரணங்களாலும் அழகு செய்துகொள்வதில்லை என்ற விலக்கு நியமத்தை நாம் உய்த்துணர வைக்கிறது இந்தச் செய்யுட் பகுதி.

அலங்காரம் செய்து கொள்ளாதது மட்டுமா? –அகத்தின் அழகை அலங்கோலமாக்கிக் கெடுத்துக் கொள்வதில்லை என்றும் தீர்மானிக்கிறார்கள். 'செய்யாதன செய்வோம்' –அதவது பெரியோர்கள் செய்யாதவற்றைச் செய்யமாட்டோம்—என்கிறார்கள். 'தீக்குறளைச் சென்று ஓதோம்' – அதாவது , தீமை விளைக்கும் கோட்சொற்களைச் சென்று சொல்லமாட்டோம் – என்கிறார்கள். இவையெல்லாம் விலக்கும் நியமங்கள்.

அலங்காரம் செய்துகொள்ளமாட்டோம் என்பது தாற்காலிக விலக்கு. 'செய்யாதன செய்யோம்' என்பதும், 'கோள் சொல்லமாட்டோம்' என்பதும் எப்போதும் விலக்கத்தக்க நியமங்களாகவே இவர்களால் மேற் கொள்ளப் பட்டன என்று ஊகிக்கலாம்.

இப்படியெல்லாம் தாங்கள் கொண்டாடும் பாவை நோன்பிற்குச் சில நியமங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் இந்தப் பெண்கள். இவற்றைக் 'கிரிசைகள்' (கிரியைகள்') என்கிறார்கள். இவை இவர்களுடைய நோன்பிற்குரிய கிரியைகள். இவற்றைச் 'செய்யும் கிரிசைகள்' என்று சொல்கிறார்கள். 'செய்யும் கிரிசை'களில், மேற்கொள்ளும் கிரியைகளுடன் விடும் கிரியைகளையும் சேர்த்துப் பேசுகிறார்கள். விடும் கிரியைகள் மட்டுமா? ஒரே அடியாக விட்டு விட வேண்டிய கிரியைகளும் (செய்யாதன செய்யாமல் இருப்பதும், கோள் சொல்லாமலிருப்பதும்) 'செய்யும் கிரிசை'களில் சேர்த்துப் பேசப்படுவதைக் காண்கிறோம்.

வாழ்வதற்கு மேற்கொள்ளும் நோன்பு இது. நல்ல கணவனை அடையவேண்டும் என்பதும், நாடு செழிக்க மழை பெய்யவேண்டும் என்பதும் இந்த நோன்பின் இரட்டை நோக்கம். குடும்பம் நடத்துவதற்கு இல்லாளுக்கு இசைந்த நல்ல கணவன் வேண்டுமல்லவா? நாடு ஒரு விரிந்த குடும்பம்தான். நாட்டில் செழிப்பு இல்லாவிட்டால் வீட்டிலும் செழிப்பு இல்லை. நாடும் வீடும் ஒருங்கே நலம் பெறுவதற்கு நோற்கப்படும் இந்த நோன்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களை, "வையத்து வாழ்வீர்காள்!" என்று இப்பெண்கள் அழைக்கிறார்கள்.

வாழும் முறை தெரிந்து உலகத்தில் வாழவேண்டும். அப்படி வாழ்கிறவன் மண்ணுலகை விண்ணுலகாக்கிக் கொள்வான் என்றும், வானுறையும் தெய்வம்போல் வாழ்க்கை நடத்துவான் என்றும் திருவள்ளுவர் சொல்லுகிறார். இந்தப் பாவை நோன்பில் கலந்து கொள்ளும் ஆய்க்குலச் சிறுமியர் கண்ணன் தோழமையால் ஆய்ப்பாடியைச் சொர்க்கம் ஆக்குகிறார்கள் – ஆண்டாள் தன் பாவனையின் முதிர்ச்சியால் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாய் ஆக்கிக் கொண்டதுபோல!

இந்தப் பெண்களுக்கு விதிவிலக்குகளோடு கூடிய இந்த நோன்பில் சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. 'நெய் உண்ணோம், பால் உண்ணோம்' என்கிறார்களே, இத்தகைய உண்ணாவிரதமும் இன்பம்தானா? –என்று கேட்கலாம். உண்ணும் சோறும் பருகும் நீரும் இவர்களுக்குக் கண்ணனாக இருப்பதால், உண்டவர்கள் 'உண்ணா விரதம் பூண்டோம்' என்று கூறுவது போன்றதுதான் இந்நிலையும் எனலாம். உண்டார்க்கு உண்ண வேண்டுமா?

உண்மை என்னவென்றால், இவர்கள் இந்த நோன்பையும் இதற்குரிய விதிவிலக்குகளையும் அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். துறவும் போகம்தான் இவர்களுக்கு! 'அடிபாடி......நெய்யுண்ணோம்' என்ற போக்கில்தான் இவர்கள் பேச்சு அமைந்திருக்கிறது. பரமன் அடி பாடியதும் 'எல்லாம் கண்ணன்!' என்ற மனநிலை வாய்த்துவிடுகிறது. எனவே, நெய்யுண்ணாமலிருப்பதும் பால் பருகாமலிருப்பதும் இவர்களுக்குத் துறவும் அல்ல, தியாகமும் அல்ல! கண்ணன் அடிமலரே தலைக்கு அணி என்று கருதுபவர்களுக்கு மலர் சூடுவதும் ஆபரணம் அணிவதும் அலங்காரமாவதுதான் எப்படி? இனி இப்பாட்டை நோக்குவோம்.

வாழப்பிறந்தவர்களே ! நோன்பு நோற்போம் !

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றுஒதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்.

இந்தப்பாட்டில், பாவை நோன்பு நோற்பதற்கு உரிய நியமங்கள் தெரிவிக்கப் படுகின்றன. எந்தப் பெருங் காரியத்தில் ஈடுபடுவோரும் அந்தக் காரியம் கைகூடும்வரையில் சில நியமங்களை மேற்கொள்ளுவது பிரசித்தம். இந்த நியமங்களில், பற்றிக் கொள்வன சில; விடவேண்டியவை சில. இந்தப்பெண்களும் அத்தகைய சில நியமங்களைச் சங்கற்பித்துக் கொள்கிறார்கள்.---அதாவது பற்றும் கிரியைகளையும் விடும் கிரியைகளையும்.

இவர்கள் பற்றிக்கொள்வன: (1) பரமன் அடி பாடுதல், (2) காலை நீராடுதல், (3) ஐயமும் பிச்சையும் கைகாட்டுதல், (4) உய்யும் வழியை எண்ணி உகந்திருத்தல். இவர்கள் விட்டுவிடுவன: (1) நெய், பால் உண்ணாதது, (2) மையாலும் மலராலும் அலங்கரித்துக் கொள்ளாதது, (3) செய்யத் தகாத காரியங்களைச் செய்யாமல் இருப்பது, (4) கோள் சொல்லாமல் இருப்பது. இவற்றுள் முதல் இரண்டும் தாற்காலிகமானவை.

புதன், 16 டிசம்பர், 2009

திருப்பாவை 1

1. விருப்பம் உள்ளவர் அனைவரும் நீராட வரலாம்.

ஆய்ப்பாடி ஆகிறது ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாளுடைய மனோபாவத்தால், கால வெள்ளத்தில் எதிர்த்துச் செல்லும் ஓர் இன்பப் படகுபோல் சென்றது ஆண்டாளின் உள்ளம். கண்ணன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே போய்ச் சேர்ந்துவிட்டாள் கோதை என்ற ஆண்டாள். ஆய்க்குலச் சிறுமியருடன் அபேதமாய்க் கலந்து கொண்டாள். கண்ணனைத் தலைவனாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் கோபியரோடு தானும் ஒரு கோபியாகச் சேர்ந்து விட்டாள்.

வடபெருங்கோயில் – அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி என்ற பெருமாளுடைய சந்நிதி – நந்த கோபர் மாளிகை ஆகிவிட்டது. கோயிலில் உள்ள பெருமாள் கண்ணனாகக் காட்சி வழங்கினான். கோபியர்கள் பாவை நோன்பு நோற்றுக் கண்ணனை அடையவேண்டும் என்று தீர்மானித்து, 'மார்கழி நீராட்டத்திற்கு வாருங்கள்' என்று , உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் கூவி அழைத்துக் கொண்டு, இறைவனது திருவடிகளையும் பெயர்களையும் பாடிக்கொண்டே வீதி வழியாகப் போகிறார்கள். ஆண்டாளும் இந்தக் கூட்டத்தில் 'இடைநடையும் இடைமுடியும் இடைப்பேச்சும் முடைநாற்றமுமாய்'க் கலந்துகொண்டு கிருஷ்ணாநு பாவம் செய்வதைக் காண்கிறோம்.

மார்கழி மாதம். 'வரப் போகுது, வரப்போகுது' என்று எதிர்பார்த்திருந்த சுக்கிலபட்ச பௌர்ணமியும் வந்துவிட்டது. காலத்தைக் கொண்டாடுகிறார்கள்: ஆம், 'மார்கழித் திங்கள்' என்று மாதத்தைக் கொண்டாடுகிறார் கள். 'மதி நிறைந்த நன்னாள்' என்று பௌர்ணமி தினத்தையும் கொண்டாடுகிறார்கள். 'மார்கழி நீராட்டம்' என்ற பனி நீராட்டத்தில் விருப்பம் உள்ள பெண்களையெல்லாம், 'வாருங்கள்,வந்து சேருங்கள், களிகூர்ந்து அன்பையும் அருளையும் பெற்று வாழுங்கள்' என்று பொருள்பட அழைக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் முகம் கண்டு மகிழ்வதற்கும் இந்த முழு மதி நாள் பொருத்தமானது: எல்லாரும் கூடிக் கண்ணனைத் துயிலெழுப்பி அந்த அழகனைக் கண்ணாரக் காண்பதற்கும் பொருத்தமான நன்னாள்தான் இது. எனவே இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகிறார்கள். 'நீராட வாருங்கள்' என்ற அழைப்பின் உட்பொருள் 'கண்ணனைக் கண்டு அன்பு நன்னீராடி ஆறுதலும் ஆனந்தமும் பெறுவீர்!' என்பதுதான்.

'வருகிறவர்கள் எல்லாரும் வரலாம்' என்று முழக்கிக் கொண்டு சிலர் புறப்படுகிறார்கள். இவர்கள் ஆபரணங்கள் அணிந்திருக்கிறார்கள். ஆபரணங்களுக்கும் ஆபரணமாகிய அழகன் கண்ணன். அவனைக் காணலாம் என்ற உவப்பே மேனியெல்லாம் ஆபரணம் பூண்டது போன்ற அழகை இவர்களுக்கு அளித்து விடுகிறதாம்.

ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமியர்கள் இவர்கள். ஆய்ப்பாடியோ 'சீர்மல்கும் ஆய்ப்பாடி'. – அதாவது, பால்வளம் முதலான செல்வங்கள் நிறைந்திருக்கும் கோகுலம். இந்த ஆய்ப்பாடியின் செல்வத்துள் செல்வமாக வளர்கிறார்கள் இந்தச் சிறுமியர்கள். கிருஷ்ணபக்தி இவர்கள் போற்றும் செல்வம்.

நந்தகோபன் குமரனும் யசோதை இளஞ் சிங்கமுமாகிய கண்ணனை அகக்கண்ணால் பார்த்தாலும் இவர்களுக்கு அழகு பொங்குகிறது. கண்ணனைப் பார்த்துப் பார்த்துத்தான் யசோதையும் கண்ணழகு வாய்ந்த வளானாள் என்பது இவர்கள் கருத்து. எனவே, "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று சொல்கிறார்கள்.

கண்ணனது மேனியைக் காணும்போது, மழைமுகம் கண்ட பயிர்போல் தழைக்கிறது இவர்கள் முகம். நினைத்தாலும் தாபம் போகிறது – கார்முகிலைக் கண்ட பயிர்பச்சை போல. கண்ணன் திருமேனியையும், திருமுகத்தையும் நினைத்து நினைத்து, " கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்" என்று அந்த அழகில் ஈடுபட்டுப் பேசுகிறார்கள். ஒளிக்குக் கதிரவன் குளிர்ச்சிக்கு முழுமதி என்கிறார்கள்.

பாவை நோன்பிற்கு ஓர் உறுப்பாகிய பறை என்ற வாத்தியத்தைக் கண்ணனிடம் பெற்றுக் கொண்டு நோன்பு நோற்போம் என்று புறப்பட்டிருக்கிறார்கள். 'பறை, பறை' என்று சொல்லிக் கொண்டு இப்படிப் போவது வியாஜம்தான். உள்ளுக்குள்ளே கிருஷ்ண பக்தியும் கைங்கரிய விருப்பமும்தான்.

நோன்பு நோற்றால் மழை பெய்யும், நாடு செழிக்கும் என்பது ஆய்ப்பாடித் தலைவர்களின் நம்பிக்கை. 'ஆ! பெண்கள் நோற்று மழை பெய்தது' என்று அவர்கள் புகழ்வார்கள். அப்படி அவர்கள் புகழும்போது, உலக மெல்லாம் புகழுவதாக இவர்கள் மகிழ்ந்து போவார்களாம். எனவே, 'பாரோர் புகழப்படிந்து' (நோன்பிலே ஊன்றி) நீராடுவோம் என்கிறார்கள்.

உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆய்ப்பாடிதான் இவர்கள் உலகம்! ஆனால் உலகத்தை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் கண்ணபிரானின் தோழமை அல்லவா இவர்கள் குறிக்கோள் ?

நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

என்று பாடிக்கொண்டே போகிறார்கள்.

வாருங்கள், தாபம் தீர அன்பு நீராடுவோம் !

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீர்ஆடப் போதுவீர்! போதுமினோ, நேர்இழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

ஆய்ப்பாடிச் சிறுமியர்களே! நாராயணனாகிய கண்ணனே நமது நோன்பிற்கு வேண்டியவற்றைத் தந்து நமது விருப்பத்தை நிறைவேற்ற சித்தமாய் இருக்கிறான். மார்கழித் திங்களில் மதி நிறைந்த இந்நாள் நன்னாள். விருப்பம் உள்ளவர்கள் எல்லாரும் நீராட வந்து சேரலாம் என்று ஆய்ப்பாடிக் கன்னியர்களில் சிலர் மற்றைக் கன்னிமார்களை அழைக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முகம் கண்டு களிக்கவும், எல்லாரும் சேர்ந்து போய்க் கண்ணனைத் துயில் எழுப்பிக் கண்டு களிக்கவும், இம்முழுமதி நிறை நாள் நன்னாளாக வாய்த்திருக்கிறது.

நீராட வாருங்கள் என்ற அழைப்பிலே, கண்ணனைப் பிரிந்திருந்த தாபம் ர அவனுடைய அன்பையும் அருளையும் பெற்று மகிழ்வோம் என்ற குறிப்பையும் காண்கிறோம்.

பார் உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆய்ப்பாடியைக் குறிக்கும்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

மார்கழியே வா


மார்கழி பிறக்கப் போகிறது. தெருவெங்கும் திருப்பாவை ஒலிக்கப் போகிறது போலவே இணையமெங்கும் நிறையப் போகிறது. நிறைய காலக்ஷேபங்கள் கேட்டு, பூர்வாசார்யர்கள் உரைகளை ஆழங்கால்பட்டு அனுபவித்த பலர் பல விளக்கங்களை சென்ற பல வருடங்களைப் போலவே அளிக்கத் தயாராயிருப்பார்கள். மிக கனமான விஷயங்களையும் தங்களது எழுத்து நடையாலே இளைஞர்களை ஈர்த்துப் படிக்கவைத்து அவர்களையும் நல்ல விஷயங்களைத் தேடி அனுபவிக்க வைக்கின்ற "மாதவிப் பந்தல்காரர்கள்" "கண்ணன் பாட்டுக்காரர்கள்" போன்றோரெல்லாம் தங்களது சுய சிந்தனைகளால்  திருப்பாவை உரைகளுக்கு மெருகூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கப் போகிறார்கள். அடியேன் இவ்விரு பிரிவுகளில் எதையும் சேராதவன். சாஸ்த்ர , சம்ப்ரதாய ஞானமோ, பெரியோரைப் பணிந்து பெற்ற கேள்வி ஞானமோ எதுவும் இல்லாதவன். குறைகள் தெரிந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த மார்கழி மாத திருப்பாவை கைங்கர்யங்களில் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளவன். ஆசை இருக்கு தாஸில் பண்ண அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்ற இரகத்தில் இருக்கும் அடியேனுக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒன்றான பழைய நூல்களை வலையேற்றுகின்ற வழியிலேயே 1959ல் வெளியான ஒரு விளக்க நூலை தினம் ஒரு பாசுரமாக இங்கு பகிர்ந்து கொள்வேன். அதில் மிக கனமானவை ஏதுமில்லை. சற்று ஜனரஞ்சகமாக எழுதப்பட்டிருக்கிறது. 115 பக்கங்களுடன் வெறும் 0.30 பைசா விலையில் வெளியிடப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் அட்டைப் படம் இங்கு உள்ளது. ஆசிரியர் பெயரை மறைத்துள்ளேன். அட்டையைப் பார்த்தவுடனேயே நிறையப் பேர் ஆசிரியர் "..... ஸ்ரீ....." தானே என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்நாளில் பிரபலமாக இருந்தவர் அவர்.