சனி, 2 அக்டோபர், 2010

தேசிகப்ரபந்தம்–ஆர்.கேசவ அய்யங்கார் முன்னுரை

தேசிகமாலை: சிறப்புமறை: முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு

    திருமாலடியார்க்குச் சிறப்புமறையாய்த் திகழும் இம்மாலையில் கௌத்துவம் போல் விளங்கும் அதிகார ஸங்க்ரஹத்தில் “திருவுடன் வந்த” என்று தொடங்கும் பாடல்முதலாக “செப்பச்செவிக்கமுதம்... முப்பத்திரண்டிவை முத்தமிழ் சேர்ந்தமொழித்திருவே” என்ற பாடலளவாக உள்ள பாக்கள் முப்பத்திரண்டையும் ‘முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு’ என்று ஓதினார். அவை முப்பத்திரண்டு அதிகாரங்கள் கொண்டுள்ள ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் இம்மஹாதேசிகர் அருளிய உத்தமரகசிய நூலாகிய திருமந்திரஸார நூலின் ஒவ்வோரதிகாரப் பொருளின் சுருக்காகும். ரஹஸ்யத்ரயஸாரத்தை ‘முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு’  என்று “தேற இயம்பினர்”. இது இம்மாலைப்ரபந்தங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.  ஆதலால் ரஹஸ்யத்ரயஸாரத்தை ஆன்றோர் ஸாரசாஸ்த்ரம் என்பர்.  ஸாரசாஸ்த்ரச்சுருக்காகிய இம்முப்பத்திரண்டு பாடல்களும் ஸாரசாஸ்த்ரத்தின் ஸாரமாகும். `ப்ரபந்தஸாரம்  என்றதும் இம்மாலையின் மற்றோர் ஸாரநூல். திருமாறன் கருணை1 என்றதே ஸாரசாஸ்த்ரஸாரம், ப்ரபந்தஸாரம்.  அஃதே உபயவேதாந்தஸாரம், திருவாய்மொழியாகிய திருமந்த்ரஸாரம்.  அந்தஸாரப்ரபந்தமே தேசிகப்ரபந்தம்.  ஆதலால் உயர்வறஉயர்நல ஸாரநூலாகிய (ஸாரதமம் சாஸ்த்ரம்2 என்ற) இம்மாலை முற்றுமே முத்தமிழ்சேர்ந்த மொழித்திருமாலையாகும்.  மேற்கூறிய முப்பத்திரண்டு பாடல்களும் முறையே முப்பத்திரண்டு அதிகாரங்களின் ஸாரமாகும்.  ஒவ்வொரு அதிகாரத்திலும் விரித்து விளக்கித் தெளிய உரைத்த நுண்பொருளின் ஸாரமாய் ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. “திரு'”  என்று தோற்றுவாயதிகாரத்தில் தொடங்கி “திருவே” என்று தலைக்கட்டதிகாரத்தில் முற்றித் திருவந்தாதியாய் மறைமுடி மங்கலம் மல்கும் திருநூலே ஸாரநூல், திருமந்திரநூல்.  “தமிழ்த்தலைவராகிய” பேயாழ்வார்3 அருளிய மூன்றாம் திருவந்தாதி “திரு” என்று தொடங்கி, “திரு” என்று அந்தாதியாய்  முற்றுகின்றது.  முத்தமிழ்த் தேவராகிய சடகோபர் “உயர்வற”  என்று தொடங்கி “உயர்ந்தே”  என்று திருமந்திரமறையாகிய திருவாய் மொழியை அந்தாதியாய்த் தலைக்கட்டினார்.  உகரம் திருச்சுட்டு.  அவ்வாறே இம்முத்தமிழ்த் தேசிகரும் “திரு” என்று தொடங்கி “திருவே” என்று அந்தாதியாய்த் திருமந்திரநூலைத் தகைகட்டினார்.  முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு என்றதின் நயமும் நலமும் காண்க.  “ரஹஸ்யத்ரயஸாரம்4 என்று இம்மஹாதேசிகர் இட்டருளிய தமது திருமந்திரநூலின் திருநாமத்துக்கு “முத்தமிழ் சேர்ந்தமொழித்திரு” என்று தமிழிட்டருளிய சீர்மை ஓர்க.  முத்தமிழ்ப் பொருளைக் காட்டித்தரும் தருமவரும்பயனாகிய இந்த ஸாரசாஸ்த்ரத்திருக்காண்டலே உபயவேதாந்தத் திருக்காண்டலாகும்.  “தேற இயம்பினர் சித்துமசித்து மிறையுமென, வேறுபடும் வியன் தத்துவமூன்றும் ........... அருளால் மறைநூல் தந்த ஆதியரே”.  என்று இந்த ஸாரநூலில் ஐந்தாவது அதிகாரமாகிய தத்துவமும்மையதிகாரத்தில், உணர்தற்கு அரிதாகிய உபநிடதப் பொருளாகும் சித்து அசித்து இறை என்னும் முத்தத்துவங்களின் உண்மையை அருளால் மறைநூல் என்னும் திருவாய்மொழியை நல்கிய ஆதிகுலபதியாகிய சடகோபரே தேற இயம்பினர் என்று காட்டினார்.  முப்பத்திரண்டாவதாகிய தலைக்கட்டதிகாரத்தில்:- “ஒப்பற்ற நான்மறையுள்ளக் கருத்திலுரைத்துரைத்த, முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே”  என்றார்.  இதன் பொருள்:-  உபநிடத உள்ளக்கருத்தாகிய சித்து அசித்து இறை என்னும் அற்புதமான முத்தத்துவ உண்மையை விளக்கும் திருமந்திரத்தமிழே முத்தமிழ் என்னும் மறைநூல்: அது ஆதியராகிய சடகோபர் திருவாய்மொழி: அது சேர்ந்த மொழித்திருவே ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் திருமந்திரநூல் என்றபடி.  ஐந்தாம் அதிகாரத்தில் முத்தமிழ் அருளிய ஆதியரைப் போற்றினார்.  முப்பத்திரண்டாம் அதிகாரத்தில் ஆதியர் அருளிய முத்தமிழைப் போற்றினார்.  இங்கு முத்தமிழை அங்கு மறைநூல் என்றார்.  அங்கு மறைநூலை இங்கு முத்தமிழ் என்றார்.  “மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி”5  யருளிய திருமந்திரமறை ஆதலால், சித்தசித்திறைப் பொருளுண்மையை விளக்கும் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழே திருவாய்மொழி என்று உபநிடத உள்ளக்கருத்தில் உரைத்துரைத்த இம்மாலை “எழிற்குருகை வருமாறன்6 அருளிய முத்தமிழ்ச் சேர்த்தியில் பேரெழில் காட்டும் அருமையை நோக்கிக் காண்க.  உபநிடதமும் திருவாய்மொழியும் ஒன்றெனக்காட்டும் கட்டழகு திகழும் திருமந்திரஸாரநூலை “ரஹஸ்யத்ரயஸாரம்”7 என்றார்.  அதன் தமிழாக “முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு” என்றார்.  அதனையே “யதிராஜ மஹாநஸ பரிமள பரீவாஹ வாஸநா”8 என்றார்.  அதன் தமிழாக “எதிவரனார் மடைப்பள்ளிவந்த மணமெங்கள் வார்த்தையுள் மன்னியதே”9. என்றார்.  “வேதாந்த உதயநர் (கடாம்பி ஆச்சான் என்னும் பெரும்புகழ்ப்புனிதராகிய ப்ரணதார்த்திஹர ஆசார்யர்) சம்பிரதாய அமுதம்”10 என்றும் “ஞானப் பெருந்தகவோர் சம்பிரதாய மொன்றிச் சதிர்க்கும் நிலைசார்ந்தனமே”11 என்றும், ஞானப் பெருந்தகவோராகிய கடாம்பி ஆச்சான் திருமரபில் பரிமளம் பொதிந்து வெள்ளமெடுத்துப் பெருகிவரும் “எதிவரனார் மடைப்பள்ளி” முத்தமிழமுதமொழியே தமது திருமந்திர நூலாம் “ரஹஸ்யத்ரயஸாரம்” என்று விளக்கினார்.  “இப்படி ரஹஸ்யத்ரயத்தைப் பற்றின கீழும் மேலுமுள்ள பாசுரங்களெல்லாம், வேதாந்தோதயநஸம்ப்ரதாயமான (கடாம்பி ஆச்சான் சம்பிரதாயமான) மடைப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலேதாம் கேட்டருளினபடியே, கடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாற்போலே பழக்குவிக்க, அவர் திருவுள்ளத்தில் இரக்கமடியாகப் பெருமாள் தெளிய ப்ரகாசிப்பித்து (விளங்கவைத்து) மறவாமற்பண்ணிச் சேர்த்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்”12 என்று பின்னும் ஆதரம் பெருக இப்பொருளை விளக்கினார்.  “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய்”13 என்ற பாடற்கு இது விளக்கமாதல் காண்க.  “காவலரெங்கள் கடாம்பிக்குலபதி அப்புளார்தம், தேமலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர் தம்மருளால், நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி! காவல! தூப்புற்குலத்தரசே! எம்மைக் காத்தருளே”14 என்று பிள்ளையந்தாதி இப்பொருளைப் பின்னும் விளக்கிற்று. இதனால், சித்தசித்தீச்வர தத்துவமும்மையை விளக்கும் முத்தமிழ்த் திருத்திகழும் மொழித்திருவே ரஹஸ்யத்ரயஸாரம் என்னும், ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம் நல்கிய திருமந்திரநூல் என்ற உண்மை காண்க.  உபநிடத உட்பொருளாகிய சித்து, அசித்து, இறை என்னும் முத்தத்துவங்களை விளக்கும் தமிழாதலால் சடகோபர் திருவாய்மொழிக்கு முத்தமிழ் என்றது பெயர் என்ற உண்மையை விளங்கக்காட்டும் இம்மொழித்திருவே முத்தமிழ் சேர்ந்த மொழித்திருவாய்த் திகழாநின்றது. “நம்பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்த பகவர்களே”15 என்று இம்மஹாதேசிகர், திருவாய்மொழியை “நம் தமிழ்வேதம்” என்று விளம்பிய அருமைப்பாட்டையும் உரிமைப்பாட்டையும் உற்றுநோக்குக.  இவ்வாறே “சந்தமிகுதமிழ்மறையோன் தூப்புல்தோன்றும் வேதாந்தகுரு”16 என்ற இம்மஹாதேசிகருடைய ப்ரபந்தஸாரப் பாடலின் நறுமை காண்க.  “சந்தமிகுதமிழ்மறையோன்” என்றதற்கு முத்தமிழ் மரபினன், அதாவது திருவாய்மொழி மரபினன், என்றது பொருள்.  ப்ரபந்தஸார உரையில் இப்பொருள் விரித்து விளக்கப்பெறும்.


1.ப்ரபந்தஸாரம், 18;  2. ரஹஸ்யத்ரயஸாரம் 2;  3.இராமாநுச நூற்றந்தாதி 10; 4. ரஹஸ்யத்ரயஸாரம் 32;
5. கண்ணிநுண். 9; 6. ப்ரபந்தஸாரம் 6; 7.ரஹஸ்யத்ரயஸாரம் 32. 8. ௸ ௸; 9. பரமபதஸோபாநம் 1;
10. ரஹஸ்யத்ரயஸாரம் 32 (தமிழ் செய்தது); 11. அமிர்தரஞ்சனி 1; 12. ரஹஸ்யத்ரயஸாரம் 30;
13. அதிகாரஸங்க்ரஹம் 56; 14. பிள்ளையந்தாதி 17; 15. அதிகார.22; 16. ப்ரபந்தஸாரம் 18;.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

தேசிகப்ரபந்தம்–ஆர்.கேசவ அய்யங்கார்

;     “திடமுதற் கேள்வி கொண்டே திறங்கொளா மூர்க்கர் தன்மத், திடமது தெளியா ரந்தோ.....”1. என்று இந்நீதியின் நறுமையும் அருமையும் விளங்குமாற்றை ரஹஸ்யத்ரயஸாரத்தில் எடுத்துக்காட்டினார். “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி.  கொண்டதுபற்றல் பொதுவாக ஒருசிறிதளவில் அறிஞராகிய சித்தாந்திகளிடத்தில் இருத்தல் இயல்பே.  ஆயினும் அறிஞர் என்பார் கொண்டது விடாமை என்ற ஒன்றையே கோட்பாடாகக் கொள்ளாது நல்லகோட்பாட்டின் நலம்கண்டு அதைக் கடைப்பிடிக்கும் சால்புடையார் என்று மீமாம்ஸாபாதுகையில்.  இம்மஹாதேசிகர் காட்டியிருத்தலை நோக்குக:-

     “பண்புடைமதியின் மிக்கார் மிக்கார் பழையதோ புதியதோவாம், ஒண்பொரு ளொன்று மந்நற் பொருளையே கடைப்பிடிப் பார்”2 என்றும் “குமரிலம் போன்ற நூலே கொள்ளுமா தரமிகுந்த, அமயமின் றுமது நூலை யார் கொள்வார்? முன்னம் கேட்ட, தமதுளப் பாட்டின் பற்றில் தானொரு வேறு நீதி, அமையுமோ? என்னில், அன்று, நன்றுடன் படுவர் நல்லார்.....”3. என்றும் மீமாம்ஸாபாதுகையில் கூறினார்.  இவ்வாறு அறிஞருடைய சான்றாண்மைத்தகைமையை இவர் போற்றியுள்ள பெருமனவள்ளன்மையைப் போற்றுக.  எம்பெருமானார் தரிசநம் என்னும் ராமாநுஜஸித்தாந்தம் இம்மஹாதேசிகருடைய சமயம்.  கீழே விளக்கப்பெறும் தத்துவமும்மையை அடியாகக் கொண்டுள்ள திருமாலின் ஸர்வசரீரித்தன்மை என்னும் இறைமை இந்த சித்தாந்தத்துக்கு ப்ரதாநப்ரதிதந்த்ரம் ஆகும். ஆயினும் அது சித்தாந்தியர் பிறர்க்கும் ஓரளவிலேனும் உடன்படுசித்தாந்தமாய்க் கைக்கொள்ளத்தக்க நன்னெறியில் தூய்மையும் இனிமையும் ஒன்றிய செந்தமிழ்ச் சொற்களாலமைத்து இம்மாலையை நல்கியுள்ளார்.  சான்றோர் பணிக்கும் சிறப்புமறை நூல்களை உணரும் முறையும் அவை உணர்த்தும் நுட்பமும் நயமும் ஓர்ந்து தெளியப்பட வேண்டும்.  சிறப்பு மறைநூல்கள் அறிஞர் அனைவர்க்குமே ஓரளவில் பொதுமறையாயே இருக்கும்.  ஒருபடியிலேனும் பொது மறையாகா நூல் எப்படியிலும் சிறப்புமறையாகாது.  ஒரு சமயத்தாருடைய சிறப்பு நூலை மற்றோர் சமயத்தார் மறுக்குங்கால் இருவர்க்கும் உடன்பாடாகிய பொதுச் சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு வாதம் நிகழ்த்தி உண்மை தெளிய வேண்டும்.  சொற்சான்றை உடன்படாத சாருவாக சமயத்தார் வைதிக சமயத்தைத் தாக்குங்கால், கண்கூடு ஒன்றையே சான்றாகக் கொண்ட சாருவாகர்களை, கண்கூடும் ஒருசான்று என்று உடன்பட்ட வைதிக சமயத்தினர் அவ்வொரு சான்றுகொண்டே சாருவாக சமயத்தை மறுத்துத் தமது சமயத்தை நிறுவல் வேண்டும்.  பரமத பங்கத்தில் இவர் சாருவாக சமயத்தை மறுத்துள்ள சுருக்குப் பாக்களை இங்கு எடுத்துக்காட்டுவாம்.
”கண்டது மெய்யெனிற் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டத லாத திலதெனிற் கண்டிலம் குற்றமிதில்
கண்டது போன்மறை காட்டுவதுங் கண்ட தொத்ததனால்
உண்டது கேட்கு முலோகா யதரின்று மீறுவதே”4
“கண்டதனாற் காணாத தனுமிக் கின்றார்
கண்டொருத்த னுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசி கெடுமென்றே யுணர்ந்துண் கின்றார்
ஒன்றாலே யொன்றைத்தாம் சாதிக்கின்றார்
பண்டுமுலை யுண்டதனால் முலையுண் கின்றார்
பார்க்கின்றார் பலரல்லாத் தம்மை மற்றும்
பண்டுமதி கெட்டநிலை காண கில்லார்
காணாதொன் றிலதென்று கலங்கு வாரே”5
என்பன, கண்கூட்டுக்கும் முரண், தம்முள்ளும் முரண் என்ற இருவகை முரண்பாடும் உற்றுள்ளதால் சாருவாக மதம் சான்றோர்க்குக் கொள்ளற்பாலதன்று என்று துணிந்தார்.  பொதுச் சான்றோடு முரணுதலும், தம்முள் ஒன்றோடொன்று முரணுதலும் சித்தாந்தங்களுக்கு இழுக்கு என்றது சித்தாந்திகள் அனைவரும் உடன்பட்டுள்ள வாத நீதி.  சான்றோடு முரணுதல் தன்னிலும் தம்முள் ஒன்றோடொன்று முரணுதலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும் என்ற குறிப்பைக் காண்க. தம்முள்முரணல் சான்றோடு முரணற்கு அறிகுறியாகும்.  சான்றுகளான அனைத்தோடும் (அதாவது காட்சி, ஊகம், சொல் என்ற முச்சான்றுகளோடும்) முரணாக் கோட்பாடே தம்முள் முரணாக் கோட்பாடு ஆகும் என்ற தருக்க நீதியைக் காட்டியுள்ள நயம் காண்க.  சொற்சான்றை உடன்பட்ட பெருஞ்சமயத்தாருள்ளும் வாதங்கள் நிகழும்.  அது நிகழுங்கால் சொற்சான்று கொண்டு வாதத்தை  நெறியிற் பரிந்து தத்துவத்தைத் துணிய வேண்டும் என்றார்.  பொதுச்சான்றோடு முரணுதலையும் தம்முள் ஒன்றோடொன்று முரணுதலையும் காட்டி மறுக்க வேண்டும்.  இங்கும் தம்முள் ஒன்றோடொன்று முரணலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும்.  ஒரே சிறப்புச் சமயத்தாருள்ளும் வாதம் நிகழுங்கால் அவர்கட்கு உடன்பாடாகிய சிறப்புச்சான்று கொண்டே துணிதல் வேண்டும்.  இங்கு, பொதுச்சான்று தன்னிலும் சிறப்புச்சான்று வலிமிக்கதாதலால் சிறப்புச்சான்று கொண்டே துணிதல் முறையாகும்.  இம்முறைகளை இவர் ஸங்கல்பசூர்யோதயத்தில்6 விளக்கியிருத்தல் காண்க.  இம்முறைகளால் உரியசான்றுகளைக் கொண்டு, எழும்வாதத்துக்கும் எழுப்பும்வாதியர்க்கும் தக உண்மையை ஓர்ந்து தெளிதல் அறிஞர்க்கு அழகாகும்.  மூதறிஞர்களின் சிறப்புமறைநூல்களில் மற்றுமோர் நயமும் காணப்பட வேண்டும்.  அந்நூல்களுள், சிலகருத்து வலியுறுத்தப் பெற்றும், சில மறுக்கப்பெற்றும், சில உதாசீனமாய் விடப்பட்டும் உள்ளன. உதாசீநம் என்பது விருப்பும் வெறுப்புமின்மையாகும்.  உடன்படாதும் மறுக்காதும் உள்ள கருத்து உதாசீனத்தின் பாற்படும்.  அவற்றின் சுவடு நன்கு அறியப்பட வேண்டும்.  வேதக்கருத்தை உணர்த்துதற்கே தோன்றிய ஜைமிநி முதலிய பேரிருடிகளும் இம்மஹாதேசிகர் போன்ற பேராசிரியர்களும் இவ்வுண்மையைக் காட்டியுள்ளது நன்கு உள்ளித் தெளியற்பாலது.  இச்சுவடு அறிந்தார்க்கே தெளிவு.  அறியாதார்க்குக் கலக்கமே.  இந்நலம் உணராதார், தாமும் கலங்குவார் பிறரையும் கலக்குவார்.  இந்நெறி நுட்பத்தை:-

“யாங்குசை மிநிமு தல்வர் நன்றுதா சீந நின்றார்
யாங்கலைந் ததுக லக்க வாதர்தம் வாய்வ லிப்பார்”7

என்று ந்யாயபரிசுத்தியிலும்,

“உளபொருள் விருத்தி யாவு முள்ளவா றுள்ளு கோணத்
தளவுதா சிநவி கற்போ டடைத்தெனுண் ணறும தத்தே”8

என்று தத்த்வமுக்தாகலாபத்திலும் இம்மஹாதேசிகர் காட்டினார்.  நன்மதி, நன்னெறி, நன்மொழி, நல்லருள், நன்னீப்பு முதலிய நலங்களுக்கு வித்தாயும் அவற்றின் விளைவாயும் விளங்கும் நன்மாலையே இம்மாலை.  இவ்வாறு மக்களனைவர்க்கும் நலம் பயக்கும் பொதுமறைநூலாயும் ஒருபடி சிறப்புமறை நூலாயும் திருமாலடியார்க்கு முற்றும் உபயவேதாந்த ரஹஸ்யத்திருமந்திர நூல் என்னும் சிறப்புமறைநூலாயும் இம்மாலை விளங்குதல் ஒருவாறு கூறப்பட்டது.



1ரஹஸ்யத்ரயஸாரம் 23 (தமிழ் செய்தது) ;  2 மீமாம்ஸாபாதுகா 8 (தமிழ்செய்தது); 3 மீமாம்ஸபாதுகா 7 (தமிழ் செய்தது); 4 பரமதபங்கம் 12;  5 பரமதபங்கம் 13 ; 6  ஸங்கல்ப.2; 7  ந்யாயபரிசுத்திப்ரமேயாத்யாயம், ஆஹ்நிகம் 2(தமிழ்செய்தது); தத்வமுக்தகலாபம் 495(தமிழ் செய்தது)

Visit Mysore

There are many unfortunate people like adiyen who never visited Mysore. Even amongst those visited, many might not have the opportunity to visit the Royal Palace. And needless it is to say that to enjoy room by room at Mysore palace one must be a VVIP like our President or Prime Minister. Then how to enjoy? Somebody has thought over this and brought out a beautiful panorama on this palace. Sri Suryakannan has found this link and provided this at his blog. Since it is most intersting adiyen also want to share the link with all. Please visit http://www.mysorepalace.tv/360_Eng/index.html

You may observe some camera and pointer icons there. Clicking on them shows you different views also. Better allow the site to have its own way of displaying and then you may go page by page to click on icons. Thank you Suryakannan.