வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள்

வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்தவிசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது" என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது" என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு' என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன்எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல்பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.