வெள்ளி, 5 ஜனவரி, 2007

செவ்வாய், 2 ஜனவரி, 2007

புத்தாண்டு சிந்தனைகள்

இன்று எந்த நாளிதழைப் புரட்டினாலும் பக்கம் பக்கமாகப் படங்கள். தமிழகத்தின் ப்ரசித்தி பெற்ற பெறாத அனைத்துக் கோவில்களிலும் கூட்டமோ கூட்டம். மணிக்கணக்கில் வரிசையில் நின்று சில நிமிடநேர தரிசனமாம். 2007 நல்லபடியாகப் பிறந்து அனைவரும் நலமாக இருக்க ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளாம். இன்று எல்லாரும் ஆங்கில காலண்டரையே பின்பற்றுவதால் இதில் பெரிய தவறு இல்லை. சந்தோஷம்தான். ஆனாலும், தமிழ் வருடப் பிறப்பன்றும் மக்கள் இப்படி கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் -- குறைந்த பக்ஷம் தமிழ்நாட்டின் நகரங்களிலாவது-- நன்றாயிருக்கும். ஆனால் பாருங்கள் அன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் நடிகர்கள் பேட்டி வருகிறதே! புது திரைப் படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்புவார்களே! தவற விடமுடியுமா? மறுபடியும் குடும்பத்துடன் கண்டு களிக்க முடியுமா? ஆலயங்களில் ஸ்வாமி எங்கே போய்விடப் போகிறார்? அப்புறம் போய்க் கொள்ளலாம். பரவாயில்லை !

ஏகாதசி மரணம் த்வாதசி தகனம் விசேஷமாம். பெரியவர்கள் சொல்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியோ மிக விசேஷம். திரு சதாம் ஹுசைன் என்ன புண்ணியம் பண்ணினார்? அவரைத் தூக்கிலிட்டது வைகுண்ட ஏகாதசி அடக்கம் செய்தது மறுநாள் த்வாதசியாயிற்றே?

திங்கள், 1 ஜனவரி, 2007

தத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌ



இராமனுக்கு பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசத்துக்குக் காரணம் சொன்ன ஆசார்யர் க்ருஷ்ணன் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசத்தைப் பற்றி மேலே சொல்வது என்ன? பார்ப்போமா?
நேற்றைய தொடர்ச்சி.....

" க்ருஷ்ணாவதாரத்திலேயும் தேவகீ கர்ப்பத்தில பன்னிரண்டு மாசமாம். ஆழ்வார் சொல்றார்.

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என்னிளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
(பெரியாழ்வார் திருமொழி 3-2-8)
யசோதை அழறா. காட்டுக்குப் போகணும்கிறான்.குழந்தையை மாடு மேய்க்கறதுக்காக அனுப்பிச்சாளாம். 'சீக்கிரம் கட்டு சாதத்தை கொடுத்து அனுப்பு. மாடு மேய்க்கப் போகட்டும். இடைச்சாதியில் பிறந்து மாடு மேய்க்காட்டா என்ன ப்ரயோஜனம். அனுப்புன்னு', நந்தகோபர் சொன்னார். "ஐயோ! இந்தக் குழந்தையையா காட்டுக்கு அனுப்பறது!"

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊர்ந்து வெம்பரல்களுடை
கடிய வெங்கானிடை காலடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே
(பெரியாழ்வார் திருமொழி3-2-9)

மாடு மேய்க்கறதுக்கா ஒரு கொடை வாங்கிகொடுக்கக்கூடாதா கொழந்தைக்கு. செருப்பு கொடுக்கக்கூடாதா. "செருப்பு" ன்றது பாதரக்ஷையைச் சொல்றதூன்றது ஆழ்வார் பாசுரத்துலதான் அழகா இருக்கு.வேறே எங்கேயும் இல்லை.

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊர்ந்து வெம்பரல்களுடை

பெரிய காடா இருக்கு. சின்ன சின்ன கல்லுகளா இருக்கு. காலை அறுக்கறது. திருவடி நோகும்படியாக காட்டுக்கு அனுப்பினேனே. "எல்லே பாவம்" என்ன என் பாவம் பாருன்னு ! யசோதை. குடையும் செருப்புமா? அவன் (நந்தகோபன்) சொல்றான். மாடு மேய்க்கறதுக்கு குடையும் செருப்பும்னா என்ன விலையாச்சு? இப்போ எல்லாரும் போட்டுக்க ஆரம்பிச்சுட்டா. ஏக விலையா போச்சு. அறவத்தஞ்சு ரூபாய்க்கு கொறஞ்சு செருப்பு கிடையாதாம். செருப்புக்கு இந்த விலையானா .....
"குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்"

தோழி கேட்கறா. ஏன் இப்படி அழறே?ன்னா.
யசோதை சொல்றா
"பன்னிருதிங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்" பன்னிரண்டு மாசம் என் வயிற்றில் வைத்து சுமந்தேன். அதனால் கொழந்தையோட கஷ்டம் தெரியறது. புருஷாளுக்கு எங்க தெரியறது. அவாளுக்கு என்ன? வருத்தம் தெரியறதான்னா? பன்னிரண்டு மாசம்...

பன்னிருதிங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்
என்னிளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே

அதாவது "பன்னிரு திங்கள்" கர்ப்பவாசம் பண்ணினார் பெருமாள்னு காட்டறார் பெரியாழ்வார். அந்தப் பத்து பாட்டும் நன்றா இருக்கும்.

"பிழைக்கத்தெரியவேண்டாமா? மாடு மேய்க்கத்தெரிய வேண்டாமா? எப்படி ஜீவிக்கறது?"ன்னா. யசோதை சொல்றாளாம். என் கொழந்தைக்கு ஒண்ணும் ஜீவனம் தெரிய வேண்டாம். ஒரு ஆத்துக்கு ஒரு நாள்னா கூட என் கொழந்தை பொழச்சுப்பான். என் குழந்தை பொழைக்கறதுக்கு என்ன வேணும்? க்யூவிலே நின்று குழந்தையை ஆத்துக்கு அழைச்சுண்டு போறாளாம். ஆத்துலேயே இருக்காது. ராமன்தான் ஆத்துலேயே இருப்பர். ராஜாவா, பட்டாபிஷேகத்துக்கு மூத்தவனா, காவல், கட்டு, போக்குவரத்து. அந்தண்டை, இந்தண்டை போறதில்லை. தசரதர் அனுப்பமாட்டார்.திருவாய்ப்பாடியிலே க்யூல நின்று அழைச்சுண்டு போயிடுவாளாம். ராத்திரிதான் திரும்பி ஆத்துக்கு வரும் குழந்தை. அதைத்தான் அங்க சொல்றா.
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்!

நந்தகோபாலனை கேழ்க்கிறோம். க்ருஷ்ணனை நோன்புக்காக. லோபியின் வாசலில் வந்தேனோ? லோபி காலணா கொடுக்காதவன் வாசலிலா வந்து நிற்கிறேன்? அம்பரமே அறம் செய்யும் தண்ணீரே அறம் செய்யும் சோறே அறம் செய்யும் நந்தகோபாலனின் வாசலிலே நிற்கிறோம். லோபி வாசலிலா நிற்கிறோம். லோபி யாருன்னா? தசரதனாம். அடுத்தாப்பல தெரியப்போறதே. ஒருத்தர் வந்து கேட்கிறார். பன்னிரண்டு வயசுக்கப்பறமா. கொடுக்கமாட்டேங்கறாரே! நந்தகோபன் அப்படியில்லையாம். எல்லாராத்துக்கும் அனுப்புவாராம் பிள்ளையை. ஆகையினால ஒரு ஆத்துக்கா போனா சாப்பிட்டு வந்துடுவான் பிள்ளை. அது எப்படின்னு கேட்டா. "என் பிள்ளை வளர்ந்தது எப்படி?ன்னு" சொல்றா யசோதை.

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைந்து எங்கும் தீமை செய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேடர் கானிடை கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே!

அந்த நாளில கொழந்தைகளுக்கெல்லாம் மஞ்சள் பூசறது. பொண் கொழந்தைகளுக்கு மாத்திரமல்ல. ஆண்குழந்தைகளுக்கும் ஒரு வயசு, ரெண்டு வயசு வரைக்கும் உடம்பெல்லாம் மஞ்சள் பூசறது.மஞ்சள் பூசினா சொறி, சிறங்கு எல்லாம் வராது."பற்று மஞ்சள் பூசி" பெண்களும் மஞ்சள் பூசிப்பா. எல்லாரும் அந்த நாளில மஞ்சள் வாங்கித் தரதூன்னு, சுமங்கலிகளுக்கு மஞ்சள் வாங்கித் தரது. காவேரில தீர்த்தமாடச்ச அந்த மஞ்சளை கல்லிலே தேச்சுட்டு உடம்பெல்லாம் பூசி தேச்சுப்பா. அதுல பத்தற மஞ்சள், பத்தாத மஞ்சள்னு உண்டு. சில மஞ்சள் பத்தாது. பத்தாத மஞ்சள் வாங்கிக் கொடுத்தா "என்ன இப்படி பத்தாத மஞ்சளை வாங்கிக் கொடுத்து ப்ராணனை வாங்கறேளேன்னு அந்த நாளில வெய்வா.அந்த வெசவு இந்த நாளில கிடையாது. இந்த கோபஸ்த்ரீகளுக்கெல்லாம் மஞ்சள் வாங்கிக் கொடுத்திருப்பாளாம். யமுநா நதிக்கரையில ஸ்நாநத்துக்காக வருவாளாம்.க்ருஷ்ணன் அங்கே நிற்பாராம்."கொடுத்திருக்கற மஞ்சள் பத்தறதா இல்லையா பாரு. கல்லுல தேச்சுப் பாரு"ன்பராம். ஒரு கோபி சொல்லுவாளாம்.கல்லுல தேய்ப்பானேன்? இதோ க்ருஷ்ணன் இருக்கானே முதுகுல தேய்ச்சு பார்ப்போம்'ம்பாளாம்.கல்லுல தேய்ச்சுப் பத்தற மஞ்சளா இருந்தா வேஸ்ட்டாத்தானே போறது. அதுக்காக அது பத்தறதா இல்லையான்னு பார்க்கறதுக்காக கண்ணன் முதுகுல தேய்ப்பாளாம். முதுகுல தேய்ச்சுப் பார்க்கற அந்த மஞ்சள் தேய்ச்சே வளர்ந்து போச்சாம் அந்தக் குழந்தை.பத்தறதா இல்லையான்னு தேய்க்கிற மஞ்சளையே தேய்ச்சு வளர்ந்தாப்போல ஆத்துக்கு ஒரு ஆமா சாப்பிட்டு வளர்ந்தா போறது. பத்தறதா இல்லையான்னு sample பார்க்கிற மஞ்சளிலேயே கண்ணன் வளர்ந்துட்டானாம்.பல்பொடி விலைக்கு வந்தா, sample பல்பொடியிலேயே life தள்ளிடுவான். sample கொடு பார்ப்போம்னு வாங்கியே life தள்ளிடுவான். அது மாதிரி பத்தறதான்னு பார்க்கற மஞ்சள் தேய்ச்சே வளந்துட்ட குழந்தைக்கு வ்ருத்திக்கு மாடு மேய்க்கத் தெரிஞ்சு இருக்கணுமா என்ன?ன்னு ஹோன்னு அழறாளாம். காட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பினேனேன்னு அழறாளாம். "பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட" பன்னிரண்டு மாசம் வயத்துல சுமந்து கண்ணனைப் பெத்தாளாம்.
ஆகையினால பரமபுருஷன் மனுஷ்யனாப் பொறக்கறதுன்னா பனிரண்டு மாசம் வயத்துல இருந்து பிறக்கறதனால புருஷாள், ஸ்த்ரீன்னு ரெண்டு இடத்துல வசிக்கறதுக்கு பதிலா ஒரு இடத்துல வசிச்சுடறேன்னு "தத: ச த்வாதஸே மாஸே" -ராமன் திருத்தாயார் வயத்துல பன்னிரண்டு மாசம் இருந்தாராம்.

ஞாயிறு, 31 டிசம்பர், 2006

"தத: ச த்வாதஸே மாஸே"

ஸ்ரீ ராமனும், கண்ணனும் பன்னிரண்டு மாதங்கள் தாய் வயிற்றில் கர்ப்ப வாசம் செய்தார்களாம். நமக்குத் தெரிந்ததெல்லாம்கர்ப்பம் என்றால் ஒன்பது மாதம்தான்(நாள் கணக்கில்). ஆனால் அவர்களுக்கு மட்டும் ஏன் பன்னிரண்டு மாதம்?
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச் ரமத்தின் ஒன்பதாவது பீடாதிபதி ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் அருளிய காரணம் காண்போமா! (ஸ்ரீ ரங்கநாத பாதுகா அவ்யய மார்கழி மாத இதழிலிருந்து)

"தத: ச த்வாதஸே மாஸே" பனிரெண்டு மாஸம் கர்ப்பத்தில இருந்தாராம்.
பனிரெண்டு மாஸம் கழிச்சு கௌஸல்யை திவ்ய லக்ஷணத்தோடு கூடிய பகவானைப் பெற்றெடுத்தான்னார். பனிரெண்டு மாஸம் என்ன தனியா கணக்கு? அப்படீன்னா, அதுல ஒரு ஸாஸ்த்ரார்த்தம் சொல்றா. பத்து மாஸம் இருந்தா போறாதா? ஸாவகாஸமா பொறக்கலாம்னு பனிரெண்டு மாஸம் கழிச்சு அவதரித்தாரா?
ஸ்வேதகேதுன்னு ஒருத்தன். ஸாஸ்த்ரம் எல்லாம் வாசிச்சுட்டு ப்ரவாஹணன்ன்ற பாஞ்சால ராஜாகிட்ட போனானாம்.
அந்த ராஜா அஞ்சு கேள்வி கேட்டான். "எல்லாம் வாசிச்சிருக்கேன்னு சொன்னாயே, இந்த ஜீவன் மரணத்தை அடைஞ்சா அது மேல் போகிற இடம் எதுன்னு தெரியுமா? 'அது தெரியாது'ன்னுட்டான். போறவா திரும்பி வராளே அது எந்த ப்ரகாரத்துலே?அது தெரியுமா? "அது தெரியாது"ன்னுட்டான். போறவாளுக்கு தேவயாநம்னும், பித்ருயாநம்னும் ரெண்டு வழி இருக்காமே -- அது வித்யாஸம் கேள்விப்பட்டிருக்கியா?ன்னான்."அது தெரியாது"ன்னான். மேல் லோகத்துக்குப் போகாதவாளைப் பத்தித் தெரியுமா?ன்னான்.---அது தெரியாது'ன்னான். மேல் லோகத்துக்குப் போய் திரும்பி வரானே திரும்பி வரச்சே அஞ்சு எடத்திலே ஆஹூதி பண்ணப்பட்டு வரானே? அது தெரியுமா? வேத்த யதா பஞ்சம்யாம் ஆஹூதாவாப: புருஷவசஸோ பவந்தீதி (சாந்தோக்யம் 5-3-3) ந்ருஸிம்ஹப்ரியாலவந்ததோல்லியோ நாலுமாஸத்துக்கு முன்னாலே.
இங்கேர்ந்து போறவன் இருக்கானே திரும்பி வரச்சே என்னன்னு தேசிகன் எழுதியிருக்கார். தூமாதி மார்க்கம்னு பேர்.புண்யமும் பாபமும் கலந்து வரான். தூமாதிமார்க்கம்னா தூமத்தை முதலாகக்கொண்ட மார்க்கம்.
தூமம் ராத்ரிம் ச பக்ஷம் திமிர கலுஷிதம் தக்ஷிணாவ்ருத்தி மாஸாந்
பஸ்சாத் லோகம் பித்ரூணாம் ககநமபி ம்ருத: சந்த்ரம் அப்யேதி கர்மீ!
ஜல தரபதிம் தேவாதீஸம் ப்ரஜாபதிம் ஆகத:
தரதி விரஜாம் தூரே வாச: தத: பரம் அத்புதம் !!
(கதிசிந்தநாதிகார: ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார:)
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வைகுண்டத்துக்குப் போறதுக்கும் சொல்லியிருக்கார். தமிழ்லையும் அதையே பாசுரம் பண்ணியிருக்கார்.
இது வந்து தூமாதி மார்க்கம் "ப்ரத்யாவ்ருத்தௌது சந்த்ராத்", முதல்ல த்யுலோகமான அக்னியிலே ஹோமம் பண்ணப்பட்டு ஸோமன் ஆகிறான். சந்த்ரன்ல இருக்கான். இரண்டாவது அக்நி பர்ஜன்யம். மேகம். அதிலே ஹோமம் பண்ணப்பட்டு வர்ஷம் ஆறான். மழை ஆறான். மூணாவது அக்நி ப்ருதிவி. இதிலே ஹோமம் செய்யப்பட்டு வ்ரீஹியாகிறான். அதாவது தான்யாதிகள் ஆகிறான். நாலாவது அக்நி புருஷன். புருஷனுடைய வயித்திலேர்ந்து ஸ்த்ரீகளுக்குப் போறான். ஸ்த்ரீ அஞ்சாவது அக்நி. அவளிடமிருந்து பொறக்கறான். நாமெல்லாம் பிறக்கிறது இப்படித்தான். நமக்கு வேணாத் தெரியாதே ஒழிய எல்லாரும் பிறக்கிறது இப்படித்தான்னு சொல்றா. அஞ்சு இடத்திலே கீழே தள்ளப்பட்டு வரான். த்யுலோகம் ஒரு அக்நி.பர்ஜந்யம் ஒரு அக்நி. பர்ஜந்யம்னா மேகம். அங்கிருந்து ஜலதாரையா விழுந்து தான்யத்தில் வரான்.தான்யத்தின் வழியா போய் புருஷனுடைய வயத்துக்குப் போறான். புருஷனுடைய வயத்துலேர்ந்து ஸ்த்ரீ வயத்துக்குப் போறான். இப்படி அஞ்சு அக்நியா நிரூபிச்சு இப்படி அஞ்சு இடத்துல இருக்கான்னு சொன்னா. புரியறதா?
இப்படி ஒவ்வொரு இடத்துலேயும் எத்தனை நாள் இருக்கான்னு கேட்டா "அதோ வை கலு துர்நிஷ்ப்ரபததரம்" (சாந்தோக்யம்5-10-6) இந்த வ்ரீஹி-- தான்யத்திலேர்ந்து போறதுக்குத்தான் கொஞ்ச நாளாறது. மத்ததெல்லாம் சீக்ரம். உடனே உடனே வந்துடுவான். மழையிலே வரான். அது தான்யத்துலே போய்ச் சேரது. வ்ரீஹின்னா நம்ம பக்கத்திலே அரிசி, வடக்கே கோதுமை. இப்படி தான்யத்தைச் சாப்பிடறானோல்லியோ. கேழ்வரகு கஞ்சி சாப்டா கேழ்வரகு. அதிலேர்ந்து புருஷன் வயத்துக்குப் போறான். அதுதான் கஷ்டம். ஏன்னு கேட்டா, அந்த தான்யம், நெல் விளையறதுன்னு வெச்சுக்கோ. அந்த நெல்லுலே வர ஜீவன் இருந்தா நம்மாத்துக்கு வர நெல்லுலே வரணும். வழியில் வண்டிலே சிந்தாத இருக்கற நெல்லுக்கு வரணும். இந்த நெல்லு அரிசியாகச்சே அதிலே போயிடாத நம்மாத்துல பானைக்குள்ள வர அரிசிலே வரணும். இந்த அரிசியைக் களையறச்சே ஜலத்துலே அரிசி போறது பார்க்கா; களையச்சே பாதி போறது பார்க்கா அதிலே போகாத இருக்கணும். அதுவும் தளிகை பண்ணின சாதத்துலே வரணும். அதுவும் இவன் பாகத்துலே வரணும். தளிகை பண்ணின சாதத்தை எடுத்து அதிலேயும் மேல் பருக்கை எடுத்துட்டு அப்புறம் ஸம்பந்திகளுக்குப் போடறா. சில இடத்துலே மேல் பருக்கை எடுக்காம....... ப்ருஷனுடைய வயத்துக்கு அப்புறம் புருஷனுடைய வயத்திலேர்ந்து ஸ்த்ரீவயத்துக்கு. அதுதான் உங்களுக்குத் தெரியும்.இந்த புருஷன் வயத்திலே மூணு மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஸ்த்ரீகள் வயத்துலே ஒன்பது மாஸம் இருக்கறதா சொல்லியிருக்கு. ஆகப் பனிரெண்டு மாஸம் வயத்துல இருந்தாத்தான் புருஷனா பொறக்கறான். ஸ்த்ரீகள் வயத்துல ஒன்பது மாசம்னு சொல்லியிருக்கு. இதெல்லாம் புண்ய பாபம் பண்ணின கர்மிகள் நமக்குத்தான். பெருமாள் வந்து அவதரிச்சாரானா அவருக்கு அதெல்லாம் கிடையாது.
ராவணன் கேட்டிருக்கான். மத்தவாளாலே அவனுக்கு சாவு இல்லை. அதனால அவனுக்கு மனுஷ்யனாலத்தான் சாவு. மனுஷ்யன்னா கர்பத்துலேர்ந்து வரணும். இங்க மூணு மாசம், அங்க ஒன்பது மாசம் இருந்து வரணும். வந்தாத்தான் அவனைக் கொல்லலாம். இல்லாமல் போன அவனைக் கொல்ல முடியாது. அதுக்காகப் பார்த்தாராம். புருஷாளா இருந்தா என்ன ஸ்த்ரீயா இருந்தா என்ன ? ஒரேயடியா பனிரெண்டு மாசம் இருந்துடுவோம்னு இருந்துட்டாராம். தத: ச த்வாதஸே மாஸே -- ராவணனைக் கொல்றதுக்காக மநுஷ்யாளா பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிப் பொறக்கலன்னா ராவணனைக் கொல்ல முடியாது. அதனால் தத: ச த்வாதஸே மாஸே சைத்ர நாவமிகே திதௌன்னு ராமனுடைய அவதாரத்தைச் சொல்றார்.

க்ருஷ்ணனுக்கு ஏன் பன்னிரண்டு மாதம்? ஆசார்யன் திருவாக்கினை நாளை காண்போம்