சனி, 10 செப்டம்பர், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்


இரண்டாம் அங்கம்  ஆறாம் களம்
தொடர்கிறது



இராமர்:-- அப்படி என் மனமறிய நான் ஒரு குற்றமும் செய்ததில்லையம்மா.
கோசலை:-- ஆனால், உன்மீது மிகவும் பிரியம் வைத்திருந்த அவர், திடீரென்று உன்னை வெறுக்க நேரிட்ட காரணம் என்ன?
இராமர்:-- அம்மா அவர் என்னை வெறுக்கவுமில்லை; நான் தங்களிடம் அவ்வாறு கூறவுமில்லையே!
கோசலை:-- மைந்தா! நாட்டிலிருந்து அரசு செலுத்தச் சொல்லியவர் திடீரென்று காட்டிற் சென்று கொடிய தவஞ் செய்யச்சொன்னதற்கு வேறு காரணந்தானென்ன?
இராமர்:-- அம்மணீ! முன்னமே நான் கூறியவாறு மகரிஷிகளுடைய அனுக்கிரகத்தை நான் பெற்றுவர வேண்டு   மென்பதே.
கோசலை:-- என்ன விந்தையடா இது! நேற்றைய தினம் பட்டாபிஷேகம் செய்வதாகத் தீர்மானிப்பது, அதற்காக அரசரும் அந்தணரும், நகர மாந்தரும் வந்து காத்திருப்பது, சாமக்ரியைகளெல்லாம் சித்தமாயிருப்பது, இரவெல்லாம் நீயும் ஜானகியும் உபவாசமிருந்து தருப்பைப் புல்லில் நித்திரை செய்கிறது, பட்டாபிஷேக முகூர்த்த காலத்தில் மகரிஷிகள் அனுக்கிரகம் பெற உன்னைக் காட்டுக்கனுப்புவது! அதுவும் ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, பதினான்கு வருஷம்! இராமச்சந்திரா! உனது தந்தையின் கருணை நன்றாயிருக்கிறது! உன்னைப் புதல்வனெனப் பெற்றுப் படுகுழியில் வீழ்த்த எத்தனை நாளடா காத்திருந்தார உன் தந்தை!
இராமர்:-- அம்மணீ! பட்டாபிஷேகப் பிரயத்தனம் செய்வதற்கு முன்னம் தந்தையார் வழக்கம்போல கைகேயி அன்னையாரை ஆலோசியாமல் போய்விட்டார். இல்லாவிட்டால், நான் சிலகாலம் காடுறைந்து வருவதற்குமுன் பட்டாபிஷேக யத்தனம் சிறிதுமிருந்திராது.
கோசலை:-- ஆனால், உன் சிற்றன்னையின் ஆலோசனையின் பிறகுதான் நீ காடு செல்லவும், பரதன் நாடாளவும் தீர்மானிக்கப்பட்டதோ?
இராமர்:-- ஆம் அம்மணீ! கைகேயி அன்னை சம்பராசுர யுத்தத்தில் தந்நையார்க்கு ஏதோ உதவி செய்தார்களாம். அதற்காகத் தந்தை மனமகிழ்ந்து இரண்டு வரங்கள் கொடுத்தனராம். அவை இதுவரையில் பெற்றுக் கொள்ளப்படவில்லை. இப்பொழுது அவைகளை அன்னையார் கேட்டார். தந்தையும் தருவதாக வாக்களித்தனர். பிறகு அன்னையார் என் க்ஷேமாபிவிருத்தியைக் கருதி அவ்வரங்க ளிரண்டிலொன்றால் நான் பதினான்கு வருஷம் வனவாசஞ்செய்து மகரிஷிகள் அநுக்கிரகத்தைப் பெற்று வரவும் மற்றொரு வரத்தால் பட்டாபிஷேகப் பிரயத்தனம் வீணாகாமல் பரதனுக்கு முடிசூடும்படியும் கேட்டுக்கொண்டார்கள். இதில் என்ன தோஷம்? ஏன் வருந்துகிறீர்கள்? பதினான்கு வருஷங்களும் பதினான்கு நாட்களாகக் கழிந்துவிடும். அதுவரையும் ஆற்றியிருங்கள். இப்பொழுது எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள்.
கோசலை:-- (இராமருடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு) ஹா! என் கண்மணீ! இனி நான் என்ன செய்வேன்? மைந்தா ! இராகவா! நீ பிறவாதிருந்தால், பிள்ளையில்லாத ஒரே துயரத்தோடிருப்பேன். இப்பொழுது இந்தத் துயரத்தையெல்லாம் அறுபவிக்க நேர்ந்திராது. உன் தந்தை கைகேயியை விவாகஞ் செய்துகொண்ட நாள்முதல், என்னை அதிகமாகக் கவனிப்பதில்லை. பேர்மட்டும் மூத்த பட்டஸ்திரீ யென்பதேயொழிய, அந்தக் கொடியாளாகிய கைகேயியே சகல அதிகாரங்களையும் செலுத்திக்கொண்டு வந்தாள். எனக்குப்பின் வந்தவளும் இளையாளுமாகிய ஒருத்தி என் கண்ணெதிரே அதிகாரஞ் செலுத்திவர நான் அதை எவ்வாறு சகித்து வருவேன்? இருந்தபோதிலும், கொண்ட கணவர்க்கு மனம் வருந்துமென்று அஞ்சி என் துயரத்தையெல்லாம் வெளிக்காட்டாது அடக்கி வந்தேன். பிறகு நீ பிறந்தாய். உன் முகத்தைப் பார்த்துச்சிறிது ஆற்றியிருந்தேன். உனக்கு வயதுவந்து பட்டாபிஷேகமாகி விட்டால் என் துயரம் மாறிவிடுமென் றெண்ணியிருந்த அந்த எண்ணமும் பாழாய்ப் போயிற்று. இனி நான் துக்க சாகரத்தில் மூழ்கியவளானேன். குழந்தாய்! உனக்குப் பட்டமாகாவிட்டாலும், என் கண்ணெதிரேயேனும் இருப்பையேல், என் துயரம் சிறிது தாழும். என்னைவிட்டு நீ பிரிந்து போவாயானால் என் கதி என்னாகுமோ? எனக்கே தெரியவில்லை. பர்த்தாவினால் அவமதிக்கப்பட்ட நான், உன்னையும் விட்டுப் பிரிவேனானால், கைகேயியின் வேலைக்காரிகளுக்கும் தாழ்ந்தவளாவேன். என் மனம் மகா கடினமானது. உன் பிரிவைக்கேட்டும் பிளவாமலிருக்கிறதே. மகன் வனஞ்செல்கிறான்என்ற கொடிய சொல்லைக் கேட்டும் மடியாத என் நெஞ்சம் கல்லோ, மரமோ, இரும்போ வேறென்னவோ தெரியவில்லையே!
இராமர்: -- அம்மணீ! தெரியாதவர்கள்போல் நீங்களும் இப்படி வருந்தலாமோ? இப்பொழுது என்ன குறை வந்துவிட்டது?
சிறந்த தம்பி திருவுற வெந்தையை
மறந்தும் பொய்யில னாக்கி வனத்திடை
உறைந்து தீரு முறுதிபெற் றேனிதிற்
பிறந்து நான்பெறும் பேறென்ப தியாவதோ
.
உத்தம குணங்களுக்கு உறைவிடமான என் தம்பி பரதன் இராச்சிய பரிபாலனம் செய்யப் போகின்றான். சத்தியம் தவறாத எனது தந்தையின் வாக்கைக் காக்க நான் கானகஞ் செல்லப் போகின்றேன். இதைவிட நான் பிறந்ததால் அடைந்த பலன்தானென்ன? ‘இராமன் பிறந்து தந்தையின் சத்தியத்தை நிலைநிறுத்தினான்என்று உலகோர் புகழ உடம்பெடுப்பதா? இராமன் கட்டளையை மீறியதால் அறுபதினாயிர வருஷம் சத்தியந் தவறாது அரசாண்ட மன்னர் சத்தியந்தவற நேர்ந்தது என்று உலகோர் தூற்ற உடம்பெடுப்பதா?பரதன் யார்? என்னைப் போலவே சக்கரவர்த்திக்கு உரிய புத்திரன்தானே! நான் முற்பிறந்தேன், அவன் பின் பிறந்தான். இதனால் அவனுக்கு அரசுரிமை இல்லாமல் போய்விடுமோ? தந்தையின் செல்வம் பிள்ளைகள் அனைவர்க்கும் உரியதுதானே ! இராஜ குடும்பங்களில் பல பிள்ளைகள் பிறப்பார்களானால் அவர்கள் எல்லார்க்கும் பங்கிட்டு இராச்சியத்தை உரிமைப்படுத்தினால் அது சிதறுண்டு போகுமென்ற கருத்தால் பெரியோர் மூத்தவர்க்கே பட்டமுரியதென்று விதித்தார்களே யொழிய வேறல்ல. இளையவர்களில் எவருக்கேனும் பட்டமாவது வழக்கத்துக்கு விரோதமாகலாமே யொழிய நியாயத்துக்கு விரோதமாகாது. ஆதலால் அரசர் பரதனுக்குப் பட்டங்கட்டுவது அநியாயாமுமாகாது; பரதன் அதைப் பெற்றுக்கொள்வது அநீதியுமாகாது. தாங்கள் வருந்துவது வீண்.
கோசலை:-- இராமச்சந்திரா! பரதனுக்குப் பட்டமாவதை நான் தடுக்கவில்லை. உன்னைக் காட்டுக்கனுப்ப நான் எவ்வாறு சம்மதிப்பேன்? பரதனே அரசாளட்டும். நீ காட்டிற்குச் செல்லாதேயடா கண்மணீ.
இராமர்:-- அம்மணீ!
விண்ணு மண்ணு மிவ்வேலையு மற்றும்வே
றெண்ணும் பூதமெ லாமிறந் தேகினும்
அண்ண தேவன் மறுக்க வடியனேற்
கொண்ணு மோஇதற் குள்ளழியே லன்னாய்.
என்ன வார்த்தை கூறுகிறீர்கள்? ஆகாயமே அழிந்தாலும், பூலோகமே போயொழிந்தாலும், கனைகடலே கரை கடந்தாலும், வெங்கதிர்க் கனலியும், தண்மதியமும், தம்கதி வழுவினாலும், வேறு எவை எவ்வாறானாலும், தந்தையிட்ட கட்டளையை மீறி நடப்பது அடியேனுக்கு அடுக்குமோ? தாங்கள் வீணேவருந்துவது தகாது. தந்தை சொல்லைத் தடுத்துப் பெருமை யடைந்தவர்கள் ஒருவருமில்லை. தந்தை சொல்லைக் கேட்டுக் குறைவடைந்த வர்களும் ஒருவருமில்லை. ஆதலால், என்னைத் தடுக்க வேண்டாமென்று தலைவணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயை செய்து எனக்கு விடை கொடுங்கள்.
கோசலை:-- ஐயோ, தெய்வமே! என் கதி இப்படியா ஆயிற்று! கொண்ட கணவர் எனக்குக் கொடுமை செய்துவிட்டார். பெற்ற பிள்ளையும் என்னைப் பரிதவிக்க விடுகின்றது. இனி நான் இருந்தென்ன இறந்தென்ன? இவ்வுயிர் ஏன் என்னைவிட்டுப் போக மாட்டேனென்கிறது? இன்னும் நான் ஏன் இவ்வுயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்? ஈசா!இக்கணம் இந்த இயமன் கூசாதெனை யழைத்தால் நான் வாய்பேசாது வந்துவிடுவேனே ! வஞ்ச நமனே! என் நெஞ்சுறுதியைக் கண்டு என்னை அணுக நீயும் அஞ்சுகின்றனையோ?
ஆகி னைய வரசன்ற னாணையால்
ஏக லென்ப தியானு முரைக்கிலேன்
சாகலா வுயிர் தாங்கவல் லேனையும்
போகி னின்னொடுங் கொண்டனை போவையே?
இராமச்சந்திரா! என் உயிர் மாளாது. என்னால் இனி இங்கிருக்கவும் ஏலாது. வலியற்ற பசு தனது இளங்கன்றைத் தொடர்வது போல உன்னோடு நானும் காட்டுக்கு வருகிறேன். நான் அரண்மனையில் நோற்ற நோன்புகளும், செய்த தவங்களும் வீணாயின. இனி உன்னோடு அரணியத்துக்கு வந்து அங்கே தவஞ் செய்கிறேன். அதனால் ஏதேனும் பலன் கிட்டுகிறதா பார்ப்போம். நீ செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்.
இராமர்:-- அம்மா, இதுதானோ அழகு?
என்னை நீங்கி யிடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுடன்
துன்னு கானந் தொடரத் துணிவதோ
அன்னையே யறம் பார்க்கிலா துரைத்தனை.
தங்கள் கணவர் என்மீதி அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். நான் காட்டுக்குச் செல்வதால் மிகவும் துயரத்தி லாழ்ந்திருப்பார். என்னைவிட்டுப் பிரிய மனந்தேற மாட்டார். தாங்கள் இங்கிருந்தால் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டிருப்பீர்கள். கணவர் மனங்கலங்க நிற்கும்போது அவரை விட்டுப் பிரிதல் தங்களுக்குத் தர்மமா? அவர் பரதனுக்கு முடிசூட்டி வைத்துவிட்டத் தவஞ் செய்யப்போவார். அப்பொழுது நீங்கள், அவருடன் சென்று உங்கள் விருப்பப்படி தவஞ் செய்யலாம். இப்பொழுது என்னைத் தொடர்ந்து வருவது நீதியாகாது. நான் போவதைக் குறித்தும் மனங்கலங்க வேண்டாம்.
சித்த நீதிகைக்கின்றதென் தேவரும்
ஒத்த மாதவஞ் செய்துயர்ந் தாரன்றே
எத்த னைக்குள வாண்டுக ளீண்டவை
பத்து நாலும் பகலல வோவம்மா.
எதற்காகத் தாங்கள் திகைக்க வேண்டும்? தேவர்களும் தவம் செய்துதானே சிறப்படைந்தார்கள்? நான் தவஞ் செய்வதால் எனக்குச் சிறப்பு வருமே ஒழியத் தாழ்வு வராது. அப்படி நான் அதிக காலம் தங்கிவிடப் போகிறதில்லை. பதினான்கே வருஷம். இந்தப் பதினான்கு வருஷங்களும் பதினான்கு நாட்களாகக் கழிந்து விடும். கழிந்ததும் நான் நல்ல ஞானத்தையும், பெரியோர்களுடைய அனுக்கிரகத்தையும் பெற்று க்ஷேமமாய்த் திரும்பி வருவேன். தாங்கள் அதைப் பார்ப்பீர்கள். மேலும் தந்நை எனக்கிட்ட கட்டளை அவ்வளவு கஷ்டமானதல்ல. ஒவ்வொருவர் தம் தந்தை சொல்லைக் காக்கவேண்டி எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்திருக்கின்றனர். சகரர் தம் தந்தையால் உயிரை விட்டார்; பரசுராமர் தந்தை சொற்படி தாயைக் கொலை செய்தார். எனக்கவ்விதமான கொடுங்கட்டளைகள் ஒன்றும் எனது தந்தை கொடுக்கவில்லை. நான் செய்யப்போகும் காரியமும் அருமை யானதல்ல. ஆதலால் தாங்கள் தனயன் சொல்லைத் தட்டாது தந்தையிடம் சென்று அவரைத் தேற்றுங்கள். எனக்கு விடை கொடுங்கள்.
கோசலை:-- இராமா! உனது இங்கிதமும் இன்மொழியும் யாருக்கடா வரும்? இத்தகைய நயமொழியும் நற்குணமும் நிறைந்த என் உயிரினுமினிய அருமந்த மைந்தனை விட்டுப் பிரிந்து நான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?பரதனே நாட்டையாளட்டும். நான் உனது விருப்பப்படி தந்தையிடம் செல்லுகிறேன். அவரைத் தேற்றி அவர் மனத்தை மாற்ற முயலுகிறேன். (போகிறாள்

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


அபீதிஸ்தவம்

சுலோகம்  20

भयं शमय रङ्गधामनि अनितराभिलाषस्पृशां
श्रियं बहुलय प्रभो श्रितविपक्षमुन.मूलय ।
स्वयं समुदितं वपुस्तव निशामयन्तः सदा
वयं त्रिदशनिर्वृतिं भुवि मुकुन्द  विन्देमहि ॥

ப⁴யம் ஶமய ரங்க³தா⁴மநி அநிதராபி⁴லாஷஸ்ப்ருஶாம் 
ஶ்ரியம் ப³ஹுளய ப்ரபோ⁴ ஶ்ரிதவிபக்ஷமுந்மூலய | 
ஸ்வயம் ஸமுதி³தம் வபுஸ்தவ நிஶாமயந்த: ஸதா³ 
வயம் த்ரித³ஶநிர்வ்ருதிம் பு⁴வி முகுந்த³ விந்தே³மஹி ||


ப்ரபோ -- ப்ரபுவே; ரங்கதாம்நி -- அரங்கமாநகரில்; அநிதரபிலாஷ  ஸ்புருஶாம் -- மற்றொன்றில் ஆசையைத் தொடாத பரமைகாந்திகளுடைய; பயம் -- பயத்தை; ஶமய – தீரும்படி செய்யவேணும்; ஶ்ரிதவிபக்ஷம் -- ஆச்ரிதருக்கு விரோதிகளை; உந்மூலய – வேரறுக்க வேண்டும்; (புவி) முகுந்த – இப்புவியிலுள்ளபோதே; முக்திச்சுவையை அளிப்பவரே; வயம் -- நாங்கள்; தவ – உம்முடைய; ஸ்வயம் ஸமுதிதம் -- ஸ்வயம் வ்யக்தமான; வபு  -- திருமேனியை;  (ரங்கதாம்நி -- அரங்கமாநகரிலேயே) ஸதா -- எப்பொழுதும்; நிஶாமயந்த – ஸாக்ஷாத்தாக அனுபவித்துக்கொண்டு; புவி -- பூலோகத்தில்; த்ரிதஶநிர்வ்ருதிம் -- நித்யஸூரிகளின் அனந்தத்தை ; விந்தேமஹி -- அடைவோமாக.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

நினையன்றி வேறெதையும் நாடாத அடியார்கள்
தம்நெஞ்சில் தோன்றியுள்ள தடையாகும் பேரச்சம்
தனையொழித்து நீயருள்வாய்! திருவரங்க நகரத்தில்
திருவைணவ செல்வத்தை செழிப்படையச் செய்தருள்வாய்!
உனைவணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகைதன்னை
வேரோடு களைந்தருள்வாய்! தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடனிருந்து வணங்கியராய்
உயர்தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே! 20. 

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

இதுதான் கோரிய பலம். மீமாம்ஸையின் இருபதாவது அத்தியாயத்தில் எல்லையற்ற மோக்ஷானந்தமான நித்ய ஸூரிகளின் ஆனந்தத்தைக் காட்டியுள்ளது. இவரும் இருபதாவது சுலோகத்தில் மோக்ஷச் சுவை போன்ற இச்சுவைக்கு அபாயமில்லாமல் நித்யாநுபவத்தை ப்ரார்த்திக்கிறார். இந்த பரஸமர்ப்பணமே இந்த அபீதி ஸ்தவத்தின் விஷயம். இதை 'இதி பரஸமர்ப்பித:’ என்று அடுத்த சுலோகத்தில் அநுவதிப்பதாலும் இது தெரிகிறது.
பயம் ஶமய – கீழ் ஒவ்வொரு சுலோகத்திலும் 'பயம்' ‘பீதி' என்று பயத்தையே ப்ரஸ்தாவித்தார். இதில் அந்த பயத்தின் சாந்தியைச் செய்யும் என்கிறார்.
அநிதர அபிலாஷ ஸ்ப்ருஶாம் -- மற்றொரு பொருளின் ஆசையைக்கூடத் தொடமாட்டார்கள்; வஸ்துவைத் தொடுவது எங்கே?
ஶ்ரியம் பஹுளய -- ‘ஸ்ரீரங்கஸ்ரீ பெருகவேண்டும்' என்றல்லவோ எங்கு வஸிப்பவர்களும் ஆசாஸிப்பது! ஸ்ரீசங்கரரும் ததநுஸாரிகளும்  इदं श्रीरङ्गम् (இதம் ஸ்ரீரங்கம்)  என்று தினமும் த்யானம் செய்கிறார்கள்.
ப்ரபோ -- இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்ற நீர் ஸமர்த்தரல்லவோ!
ஶ்ரித விபக்ஷம் உந்மூலய – न मे द्वेष्योऽस्ति  (ந மே த்வேஷ்யோ அஸ்தி) என்றபடி உமக்கு விபக்ஷமில்லாவிடினும், எங்கள் விபக்ஷத்தை இனிக் கிளம்பாதபடி வேருடன் பிடுங்கி எறியவேணும்.  (विपक्ष = hostile, inimical, adverse, contrary த்வேஷம்)
ஸ்வயம் ஸமுதிதம் வபு -- यत् यत् धिया त ऊरुगाय विबावयन्ति तत् तत् वपु प्रणयसे मदनुग्रहाय (யத் யத் தியா த உருகாய விபாவயந்தி தத் தத் வபு : ப்ரணயஸே  மதநுக்ரஹாய ) என்ற பாகவத வசனத்தையும், ‘தமர் உகந்த தெவ்வுருவம் தானாய்' என்பதையும், (इच्छागृहिताभिमतोरुदेहऔ) என்பதையும் இங்கு நினைக்கிறார். இதனால் பராசர சுகாதிகள் ஸம்ப்ரமாயமும் இதுவே என்று காட்டப்படுகிறது.
நிஶாமயந்த: ஸதா -- सदा पश्यन्ति सूरयः (ஸதா பஶ்யந்தி ஸூரய) என்பதுபோல அடியோங்களும் உம்மை அரங்கத்தில் ஸதா ஸேவித்து 'ஜிதம்தே', ‘பல்லாண்டு' என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும். ‘நிஸமயந்த' என்றால் கேட்பதைச் சொல்லும். “அரங்கத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறார்" என்று கதை கேட்பது போறாது. “நிஶாமயந்த" என்றால் பார்ப்பது. நாங்கள் நேரில் பார்த்து ஸேவிக்கும்படி நீர் அநுக்ரஹிக்க வேண்டும்.  
த்ரிதஶ நிர்வ்ருதிம் -- (இந்த்ரலோகத்தியதான அச்சுவையை) பரமபத சுவையை
புவிமுகுந்த – இங்கேயே எல்லையற்ற வைகுண்ட ஸுகத்தைக் கொடுக்குமவர்.
விந்தே மஹி -- அடைவோமாக.  இதை ஆத்மநே பதமாகப் பிரயோகித்திருப்பதால், பெருமாளுக்கு  இதனால் வரும் ப்ரயோஜனத்தில் விருப்பமில்லாவிட்டாலும் அவர் அடியார்களின் ப்ரயோஜனத்தைக் கருதி அவர் செய்யவேண்டும் என்பது ஸூசிப்பிக்கப் படுகிறது.

வியாழன், 8 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம் 


சுலோகம் 19

कयाधुसुत वायस द्विरदपुङ्गव द्रौपदी
विभीषण भुजङ्गम व्रजगणाम्बरीषादयः
भवत्यमाश्रिता भयविमुक्तिमापुर्यथा
लभेमहि तथा वयं सपदि रङ्गनाथ त्वया

கயாது⁴ஸுத வாயஸ த்³விரத³புங்க³வ த்³ரௌபதீ³
விபீ⁴ஷண பு⁴ஜங்க³ம வ்ரஜக³ணாம்ப³ரீஷாத³: |
ப⁴வத்யமாஶ்ரிதா ப⁴யவிமுக்திமாபுர்யதா²
லபே⁴மஹி ததா² வயம் ஸபதி³ ரங்க³நாத² த்வயா ||

அரக்கர்மகன் பிரகலாதன் அக்காகம் முதலையிடம்
அகப்பட்ட மதக்களிறு ஐமன்னர் அருந்துணைவி
அரக்கர்கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீசன் முதலானோர் உன்றனது இணையடியைச்
சரணடைந்து பயந்தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே!
திருவரங்க நாயகனே! நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன்தன்னால் அச்சத்தின் பிடியிருந்து
விடுதலையை அடைந்திடவே வழிகாட்டி அருள்வாயே! 19.

ரங்கநாத -- ரங்கநாதனே; யதா -- எப்படி; கயாதுஸுத -- கயாதுதேவியின் புத்ரனான ப்ரஹ்லாதன்; வாயஸ -- (ஜயந்தன் என்னும்) காகம்; த்விரதபுங்கவ -- கஜேந்த்ரன், த்ரௌபதி, விபீஷணன்; புஜங்கம -- ஸுமுகன் என்னும் நாகம்; வ்ரஜகண --கோப ஜனங்கள்; அம்பரீஷாதய -- அம்பரீஷன் முதலியவர்கள்; பவத்பதஸ்மாஶ்ரிதா -- உம் திருவடிகளை நன்றாக ஆச்ரயித்து; பயவிமுக்திம் -- பயத்திலிருந்து விமோசனத்தை; ஆபு -- அடைந்தார்களோ; ததா -- அப்படியே; வயம் -- நாங்களும்; ஸபதி -- உடனே; த்வயா -- உம்மாலே; லபேமஹி -- (பய விமோசனத்தை) அடைவோமாக.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

பெருமாள் தன் அபயப்ரதான வ்ரதத்தை உத்கோஷித்ததைப் பேசினார். உத்கோஷணம் இருக்கட்டும். கோடிக்கணக்கான உம் அனுஷ்டானங்களை நீர் அனுஸரிக்க வேண்டாவோ என்கிறார்.
கயாதுஸுத -- முதலில் அஸுரசிசுவான ப்ரஹ்லாதாழ்வான். கயாது என்ற தாயின் பெயரையிட்டு அவரையே காயாதவர் என்பர். அவர் ஸாதுக்களில் தலைவர் வைஷ்ணவர்களுக்கு முதலானவர். பகவானுடைய அகடிதகடனாஶக்தியை வெளிப்படுத்துகிறது என்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுக்கிறார். மஹாஸுரன் வீட்டுத்தூண்தான் வேண்டுமோ? இங்கோர் மண்டபத்தில் ஆயிரம் தூண்களில் ஒன்றும் நீர் அவதரிக்க உதவாததோ? அஸுரனின் சிறுவனுக்காகத்தான் அவதரிக்க வேண்டுமோ? தலை நரைத்த கிழவனானால் அடியேனுக்காக ஆகாதோ என்று திருவுள்ளம்.

வாயஸ -- ஜகன்மாதாவான பிராட்டியிடம் அபசாரப்பட்ட இந்த்ர புத்ரனான ஜயந்தன். இந்த்ரன் 'ஹவிர்புக்'; அவன் பிள்ளை 'பலிபுக்' (பலியைச் சாப்பிடும் காக) ரூபத்துடன் வந்தான். நீர் கிருபை செய்வதற்கு ஒரு வாயஸமாயே இருக்க வேண்டுமோ? (பரம) ஹம்ஸர்கள் இத்தனை பேர் கதறுகிறார்களே?

த்விரத புங்கவ -- கஜேந்த்ரன் ஒரு நீர்ப்புழுகல்ல, परमापदमापन्नः (பரமாபதம் ஆபந்ந:) என்று ஆர்த்தியின் காஷ்டையில் இருந்தவன். 'நீர் உண்டு; வேக ஸம்ரம்பத்திற்கு கருடனுண்டு; கூர் நேமியுண்டு; ரக்ஷிக்க நானுண்டு. அத்திகிரியரசே! நீர் எல்லா ஜந்துக்களுக்கும் பொதுவாயிருக்க, யானையென்றும் மனிதன் என்றும் பேதம் கூடுமோ?' என்று பேரருளாளனைக் கேட்டார். ब्राह्मणे गवि हस्तिनि ...... पण्डिताः समदर्शिनः (ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி .... பண்டிதா: ஸமதர்ஶிந:) என்று பாடவில்லையோ? 'விபஶ்சித்'தான நீர் பண்டிதராய், ப்ராஹ்மணனான உம் வேதாந்தாசிரியனையும் ஒரு பசுவையும் ஒரு யானையையும் ஸமமாகப் பார்க்கவேண்டாமோ? புங்கவ என்று ச்ரேஷ்டத்தைச் சொல்லும் பதம் மாடு ஜாதியையும் சொல்லுமாதலால் அதையும் எடுப்பதுபோல் அமைந்திருக்கிறது.

த்ரௌபல -- 'நிர்தீஜ்ஜர் ஸபை நடுவே லஜ்ஜையைத் துறந்து சரணாகதி சாஸ்த்ரத்தை மூதலிப்பித்துப் பெற்ற மஹாபாக்யவதி' என்று ஸ்ரீலோக தேசிகன் புகழ்ந்தார். ரங்கமத்யத்தில் எங்கள் உயிரான உம் திருமேனியின் நித்யஸேவையைத் தந்தருள வேணும்.

விபீஷண -- பாரதத்திற்கு த்ரௌபதியைப்போல ராமாயணத்திற்கு விபீஷணன்.

புஜங்கம -- காளியன் என்னும் ஸர்ப்பம், உம் திருவடி அவன் தலை மேலேயிருந்த ஸம்பந்தத்தினால் அவனுக்கும் உம் பத ஸமாஶ்ரயணம் உண்டு. அவன் பத்னிகள் சரணம் புகுந்தார்கள். 'ஸுமுகன்' என்னும் நாகம் என்றும் சொல்வார்கள். 'ஒருக்கால் பகவான் பெரிய திருவடிமேல் ஏறியருளி ஸஞ்சரிக்கும்போது பெரிய திருவடி பசியால் பூமியில் ஸஞ்சரித்த 'ஸுமுகன்' என்கிற ஸர்ப்பத்தைப் பக்ஷிக்கவர, ஸுமுகன் பயாக்ரந்தனாய் பெருமாளை சரணம் புக, அவர் வைந்தேயன் ஸர்ப்பத்தை புஜிக்கவொட்டாமல் மேலே இழுக்க, அதற்குள் ஸுமுகன் புற்றில் நுழைந்து விட்டான்' என்று பெரியார் வ்யாக்யானத்திலுள்ளது. 'புஜங்கம விஹங்கம' என்று மேலே 25வது சுலோகத்தில் பேசுகிறது வேறு. இந்த ஸுமுக வ்ருத்தாந்தத்தில் ஒருவாறு இரண்டும் இங்கு சேரும்.
வ்ரஜ கண -- கோகுல வாஸிகளான ஆண் பெண் அடங்கலும் व्रज जनार्त्तिहन् (வ்ரஜ ஜநார்த்திஹந்) என்று கோபிகா கீதைக்கு "வ்ரஜ ஜன" என்ற பாடம் பொருந்தும். அங்கு கோபர்கள் ஐந்து லக்ஷம்; இங்கு கோடிக்கணக்காக எல்லா ஜாதிகளான ஆண் பெண்கள் ப்ரார்த்திக்கின்றனர்.
அம்பரீஷ -- 'அம்பரீஷ சக்கரவர்த்தியினிடம் துர்வாஸ மஹரிஷி த்வாதசியன்று பிக்ஷைக்கு வருகிறோம் என்று சொல்லி ஸ்நானத்திற்குச் சென்று விளம்பித்து வர, பாரணாகாலம் கழிவதைக் கண்டு, ஜலபாரணம் பண்ணி அம்பரீஷன் துர்வாஸருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். துர்வாஸர் வந்து ஜலபாரணம் பண்ணின ராஜாவைப் பார்த்துக் கோபித்து அவரை ஸம்ஹரிக்கத் தொடங்க, ஸுதர்னாழ்வானும் பகவதாக்ஞையால் துர்வாஸஸ்ஸைத் துரத்தி ராஜாவின் காலிலே விழும்படி செய்து அவ்வரசனைக் கொண்டே ரக்ஷித்தார்.
பக்தனுக்கு வந்த பயம் எதிரியான மஹரிஷி பேரிலேயே திரும்பி, அவரை புவனத்ரயமும் ஓட வைத்தது. ரிஷி பகவானைச் சரணம்புக, 'நாபாக புத்ரனான அம்பரீஷனையே சரணமடையும்; நான் பக்த பாரதீனன். அஸ்வதந்த்ரன்போல இருக்கிறேன்' என்று நீர் அவரைத் திருப்பி விட்டீர். 'பக்த பராதீனன்' என்பதை எங்கள் ஆசை விஷயத்திலும் உண்மையாக்க வேண்டும்.
பய விமுக்திம் ஆபு -- ஸம்ஸார பயத்திலிருந்து விமோசனம் என்னும் மோக்ஷத்தை இப்போது ப்ரார்த்திக்கவில்லை. எங்கள் உயிரான உம்மைப் பற்றிய பயத்தின் நிச்சேஷ நிவ்ருத்தியையே கோருகிறோம். भयकृत् भयनाशनः பயக்ருத் பயநாஶன: என்கிறபடி பயத்தைச் செய்வித்த நீரே எங்கள் பயத்தைப் போக்க வேண்டும்.
ஸபதி -- உடனே பயம் நீங்கவேண்டும். त्रिटिर्युगायते त्वामपश्यतां (த்ருடி யுகாயதே த்வாம் அபஶ்யதம்) என்று கோபீஜனங்களின் விரஹதாகம். क्षणं युगशतमिव यासां येनविना अभवत् (க்ஷணம் யுக ஶதம் இவ யாஸாம் யேந விநா அபவத்) என்றார் சுகர். அப்படியே உம் விரஹம் எங்களுக்கு துஸ்ஸஹமாயிருக்கிறது.

ரங்கநாத ரங்கம் ஓரிடம் நாதன் ஓரிடமாயிருப்பது நீங்கி, ரங்கத்தின் நாதன் ரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அடுத்த சுலோகத்தில் ப்ரார்த்திப்பது இங்கே அழகாக வ்யஞ்ஜிக்கப் படுகிறது.

திங்கள், 5 செப்டம்பர், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்தவம் 


சுலோகம் 18

निसर्गनिरनिष्टता तव निरंहसः श्रूयते
         
ततस्त्रियुग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम्
तथाऽपि शरणागतप्रणयभङ्गभीतो भवान्
         
मदिष्टमिह यद्भवेत् किमपि मास्म तज्जीहपत् 

நிஸர்க³நிரநிஷ்டதா தவ நிரம்ஹஸ: ஶ்ரூயதே
ததஸ்த்ரியுக³ ஸ்ருஷ்டிவத் பவதி ஸம்ஹ்ருதி: க்ரீடி³தம் |
ததா²
பி ஶரணாக³தப்ரணயபங்க³பீதோ பவாந்
மதி³ஷ்டமிஹ யத்³வேத் கிமபி மாஸ்ம தஜ்ஜீஹபத் ||

த்ரியுக -- (கலியுகம் தவிர மற்ற) மூன்று யுகங்களில்  விபவாவதாரம் செய்பவரே! ஷாட்குண்யபூர்ணரே!; நிரம்ஹஸ -- பாபமற்றவரான; தவ -- உமக்கு; நிஸர்க நிரநிஷ்டதா -- எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வபாவமானது; ஶ்ரூயதே -- சுருதியில் கூறப்பட்டிருக்கிறது. தத: -- ஆகையால்; ஸ்ருஷ்டிவத் -- ஸ்ருஷ்டியைப் போல; ஸம்ஹ்ருதி -- ஸம்ஹாரமும்; தவ -- உமக்கு; க்ரீடிதம் -- விளையாட்டாக; பவதி -- இருக்கிறது; ததாபி -- அப்படியிருந்தும்; பவாந் -- நீர்; ஶரணாகத ப்ரணய பங்க பீத -- சரணாகதனுடைய உம் விஷயமான பரிவைத் திரஸ்கரிக்க பயப்படுகிறவர் இஹ -- (ஆகையால்) இவ்வுலகில்; யத் கிமபி -- எது ஒன்று; மதிஷ்டம் -- எனக்கு இஷ்டமாகுமோ; தத் -- அதை; மாஸ்ம ஜீஹபத் -- நழுவ விடக்கூடாது..

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

இழிவேதும் அற்றவன்நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் எனவுன்னை இயம்பிடுமே அருமறைகள்!
செழிப்பான அறுகுணங்கள் நிறைந்தவனாம் உன்றனுக்கு
சிருட்டியைப்போல் அழித்தலுமோர் திருவிளையாட் டெனவாகும்!
வழிபட்டுன் அடியடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனமஞ்சி நீயென்றன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேற்கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனையுற்ற எனைக்காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய்! 18.

 அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

         'என் விக்ரஹத்தை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று நீர் ப்ரார்த்திக்கிறீர் என்று தெரிகிறது. ஆனால் என்னுடையதை நான் ரக்ஷித்துக் கொள்ளாமல் விடுவேனா? வராஹ நாரஸிம்ம ராமாத்யவதாரங்களில் சத்ருக்கள் என் விக்ரஹத்தை ஹிம்ஸிக்கும்படி விட்டேனா? ஆதலால் நீர் ப்ரார்த்திப்பானேன்?' என்று பெருமாள் சங்கை ஸூசிதமாக, அந்த ஆக்ஷேபத்தை அழகாகப் பரிஹரிக்கிறார். 'உமக்கு ஸ்ருஷ்டியைப்போல, ஸம்ஹாரமும் விளையாட்டே. தன்னுடையதைத் தான் அழிப்பானோ என்று உம் விஷயத்தில் கேட்க முடியாது. நீர் ஸம்ஹாரம் செய்வதும் உம்முடையதைத்தானே! உமக்கு அநிஷ்டத்தை நீர் தடுப்பீர். விரோதிகள் உம் விக்ரஹத்தை உதைத்தாலும் அது உமக்கு அநிஷ்டமாகாது. உம்மைப் பற்றி निरनिष्टोनिरवध्य:(நிரநிஷ்டோ நிரவத்ய:) என்று ஏகாயந சுருதி கூறுகிறது. निरनिष्टो निरंहसः (நிரநிஷ்டோ நிரம்ஹஸ:) என்றும் சுருதி. ஒரு பொருள் அநிஷ்டமாவதற்கு பாபமே காரணம்; காரணமான பாபமில்லாத முக்தனுக்கு ஒரு வஸ்துவும் அநிஷ்டமில்லை, எல்லாம் ஸுகரூபமே. இது முக்தனுக்கு நீர் கொடுக்க வந்தது. உமக்கு இது ஸ்வபாவம். உலகத்தில் பயமேயில்லாத உமக்கு ஆச்ரிதனுடைய இஷ்டத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒரு பயமுண்டு. உம்முடைய திருமேனி ரக்ஷை என் இஷ்டம் (மதிஷ்டம்). உம் திருமேனியின் லயம் எனக்கு அநிஷ்டம். உமக்கு ஸ்வயம் இஷ்டாநிஷ்டங்கள் இல்லாது போனாலும், ஆச்ரிதனான எனக்கு இஷ்டபங்கம் வராதபடி உம்மை ஸதா ஸேவித்துக் கொண்டிருக்கும்படி உம் திருமேனியை ரக்ஷித்தருள வேண்டும். அதனால் ஆச்ரிதர்களுடைய ப்ரணயபங்கம் வந்துவிடுமோ என்கிற பயம் உமக்கும் ஏற்படாது.

         இங்கும் ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் வார்த்தையையே அநுஸரிக்கிறார்.