சனி, 10 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தரகாண்டம் 5

பத்தாவது ஸர்க்கம்

[ராவணாதியர் தவமியற்றி, பிரம்மதேவனிடமிருந்து

வரம் பெறுதல்]

இப்படி அகஸ்தியர் கூறக் கேட்ட ஸ்ரீராமச்சந்திரன் அவரைப் பார்த்து, 'முனிச்ரேஷ்டரே! மஹாபலிஷ்டர்களான அவ்வரக்கர்கள் எப்படிப்பட்ட தவத்தைச் செய்தனர்?' என்று கேட்க அகஸ்தியர் கூறலாயினர் - குதூகலமுள்ள ராகவ! அம் மூவரில் கும்பகர்ணன். எப்போதும் அறநெறி தவறாமல் கோடைக் காலத்தில் ஐந்து அக்னியின் மத்தியில் (நான்கு புறங்களிலும் தீயை வளர்த்தி மேலே சூரியன் எரிய) நின்று தவம் புரிந்தான். மழைக் காலத்தில் இருந்த இடம் விட்டு அசையாமல் வீராஸனமிட்டும் (வலது காலை இடது துடைமீது போட்டுக்கொண்டு உட்காருதல்) வீற்றிருந்தனன். பனிக் காலத்தில் ஜலத்தினிடையே நின்று கொண்டு தவம் புரிந்தனன் இப்படியாகப் பத்தாயிரம் வருஷங்கள் கழிந்தன.

தர்மமூர்த்தியான விபீஷணன் மிகவும் பரிசுத்தனாய் ஒரே காலை ஊன்றி நின்று ஐயாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தான். அப்போது (ஐயாயிரமாண்டு முடிவில்) அப்ஸரஸ்திரீகள் நர்த்தனமாடினர். பூமாரி பொழிந்தது. தேவதைகள் தோத்திரம் செய்தனர். மறுபடியும் ஐயாயிரம் ஆண்டுகள், முன்போலவே ஒரு காலில் நின்றுகொண்டு. சூரியனை நோக்கியவனாய், தலைக்கு மேல் இரு கைகளையும் தூக்கிக்கொண்டு, வேதமோதிக்கொண்டு ஸ்வர்க்கலோகத்தில் நந்தவனத்தில் நின்றுகொண்டு அவனும் பத்தாயிரம் வருஷங்கள் தவமியற்றினான்.

தசானனன் பதினாயிரம் வருஷங்கள் ஆஹாரமின்றிக் கடுந்தவம் புரிததான். அவன் ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் தனது தலைகளில் ஒன்றை அக்கினியில் ஹோமம் செயது வந்தான். இப்படியாக ஒன்பதாயிரம் ஆண்டுகள் முடிய அவனது ஒன்பது தலைகள் ஹோமம் செய்யப்பட்டன. பிறகு பத்தாவது ஆயிரம் முடிந்ததும் பத்தாவது தலையையும் வெட்டி ஹோமம் செய்ய விரும்பியபோது பிரம்மதேவன் தேவர்களுடன் அவர் முன் அவனைப் பாரத்து, 'தசக்ரீவ! உனது தவத்தால் மிகவும் மகிழ்ந்தோம். சீக்கிரமாக உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ கஷ்டப்பட்டுத் தவஞ் செய்தது போதும்” என்றார்.

அதைக் கேட்ட தசானனன் அகங்குளிர்ந்து பிரம்மதேவனை வணங்கி ஸந்தோஷத்தால் தழுதழுத்த குரலுடன், 'பிரபோ! எல்லாப் பிராணிகளுமே மரணத்தைக் கண்டு அஞ்சுகிறாகள். மிருத்யுவைப் போல சத்ரு வேறொருவரும் இலா். எனவே நான் மரணமடையாமல், அமரனாக இருக்க வரமருள்வீராக' என வேண்டினான். அதற்குப் பிரம்மா, 'அது இயலாத கார்யம். அதைத் தவிர வேறு

வரத்தைக் கேள்' என்றர். உலகத்தைப் படைக்கும் பிரம்மன் இப்படிச் சொல்ல ராவணன் மறுபடி அவரை வணங்கிக் கை கூப்பியவனாய் முன் நின்றுகொண்டு, 'தேவனே! கருடன், நாகங்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள், தேவதைகள் இவர்களால் எனக்கு மரணம் உண்டாகக்கூடாது. தேவர்களால் பூஜிக்கப்படும் பிரமனே! இதரப் பிராணிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மனிதர்களை நான் அற்பப் புல்லுக்குச் சமானமாக எண்ணுகிறேன் என்றான். இப்படி ராவணன் வேண்ட, பிதாமஹன் அவ்வாறே ஆகுக என்று அருளினான். மேலும் அவனைப் பார்தது, 'தசக்ரீவனே! செய்த தவத்தால் மிகவும் ப்ரீதனான நான் உனக்கு மேலும் சில வரங்களைக் கொடுக்கிறேன். அதாவது உன்னால் அறுப்புண்டு ஹோமம் செய்யப்பட்ட உனது தலைகள் மறுபடி உனக்கு உண்டாகக் கடவன. அதே போல் நீ எப்போது எந்த விதமான உருவத்தை அடைய விரும்புகிருயோ அப்போது அவ்விதமான உருவமும் உனக்கு உண்டாகும். என மொழிந்தனன். உடனே அவனது தலைகள் உண்டாயின

பிறகு விபீஷணனைப் பார்த்து, 'குழந்தாய்! தர்மத்திலேயே நிலைகொண்ட நீ உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக, உனது தவம் என்னை மகிழச் செய்துள்ளது' என்றான் பிதாமஹன். குளிர்ந்த கிரணங்களால் நிரம்பப்பெற்ற பூர்ணசந்த்ரன் போல் நற்குணங்கள் நிறைந்த விபீஷணன், கைகூப்பியவனாய் பிரம்மாவை வணங்கி, 'ஸ்வாமி! உனது தவத்தால் ஸந்தோஷமடைந்தேன் என்று திருவாய் மலர்ந்தருளியதாலேயே தன்யனானேன். மேலும் அடியேனை அநுக்ரஹித்து வரமளிக்க விரும்புவீரேயாகில் -

परमापद्गतस्यापि धर्मे मम मतिर्भवेत् ।

अशिक्षितं च ब्रह्मास्त्रं भगवन् प्रतिभातु मे ॥

பரமாபத்கதஸ்யாபி தர்மே மம மதிர் பவேத்|

அசிக்ஷிதஞ்ச ப்ரஹ்மாஸ்த்ரம் பகவந! ப்ரதிபாதுமே |

ஹே பகவானான தேவனே! நான் எந்த விதமான ஆபத்தை அடைந்தபோதிலும் எனது மனம் தர்மத்திலேயே நிலைபெற்றிருக்குமாறு அருள்புரிய வேண்டும். தவிரவும் அப்யாஸம் இல்லாமலேயே பிரம்மாஸ்திரம் எனக்கு விளங்க வேண்டும். அத்துடன் நான் எந்த எந்த (ப்ரம்மசர்யம் முதலிய) ஆச்ரமத்தை அடைந்தாலும் அந்த அந்த ஆச்ரமத்திற்கான தர்மங்களை அநுஷ்டிப்பதிலும் நிலையான புத்தியை உடையவனாகவும் இருக்க வேண்டும். இவையே எனது உயர்ந்த வரங்கள்; எனக்குப் பிடித்தமானவை; அருள்புரியவும்' என்றான். (இங்கு 'தர்மே, மம' என்கிற இடத்தில் தர்மே- நாராயணே. நாராயணனிடத்திலேயே என்று வ்யாக்யானித்துள்ளார்கள். 'ராமோ விக்ரஹவாள் தர்ம:' என்று தர்மசப்தத்தினால் ராமன் கூறப்படுகிறன் அல்லவா? தர்மத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு அடைய முடியாதது ஒன்று உண்டா?

பிரம்மதேவன் அவன் விரும்பிய வரங்களை அளித்ததுடன், அரக்கயோனியில் பிறந்திருந்தும் நீ தர்மாத்மாவாக விளங்குகிறபடியால் 'சிரஞ்சீவி'யாக இருக்கும் படியான வரத்தையும் கொடுத்தோம் என்றார்.

பிறகு பிரம்மா, கும்பகர்ணனுக்கு வரமளிக்க விரும்பியபோது, தேவர் அவரைப் பார்தது அஞ்ஜலி ஹஸ்தர்களாய், 'பிரம்மதேவரே! கும்பகர்ணனுக்குத தாங்கள் வரமளிக்காதீர்கள். ஏனெனில் மூர்க்கனான அவன் மூவுலகங்களையும் நடுங்கும்படி செய்துகொண்டிருப்பதைத் தாங்களே அறிந்துள்ளீர். இவன் வரமேதும் பெறாமலிருக்கும் போதே நந்தனவனத்தில் ஏழு அப்ஸரஸ்தரீகளையும், தேவலோகாதி பதியான இந்த்ரனின் வேலைக்காரர் பததுப் பேரையும், அநேக ரிஷிகளையும் மானிடர்களையும் கொன்று தின்றுள்ளான். வரங்களையும் பெற்றுவிட்டானானால் மூவுலகங்களையுமே பக்ஷித்துவிடுவான். ஆகவே, இவனுக்கு வரமென்கிற வ்யாஜத்தால் மோஹத்தை (மயக்கத்தை)க் கொடுக்கவும். இப்படிச் செய்தீரேயாகில் உலகிற்கு நன்மை செய்ததாகவும் ஆகும். இவனுக்கு வரங்கொடுத்து ஸம்மானம் செய்ததாகவும் இருக்கும். (லோகோநாம ஸ்வஸ்தி சைவம் ஸ்யாத் பவேதஸ்ய ச ஸம்மதி:) என்றனர்.

தேவர்களால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்ட பிரம்மா ஸரஸ்வதியை மனத்தால் நினைத்தார். அந்தத் தேவியும் உடன் பிரமன் பக்கல் வந்தாள். அவளைப் பார்த்துப் பிரமன் பின்வருமாறு கூறினார்- •தேவி! நீ கும்பகர்ணனுடைய வாயில் தங்கி தேவர்களுக்கு விருப்பமான வாக்காக (மொழியாக) அவனது நாவினின்றும் வெளி வருவாயாக' என்று. அவ்வாறே என்ற ஸரஸ்வதி கும்பகர்ணன் நாவில் உறைந்தான்.

பிறகு சதுர்முகன் கும்பகர்ணனைப் பார்த்து, 'பெரிய கைகளை உடைய கும்பகர்ண ! தீ விரும்பும் வரம் யாது? கேள், கொடுக்கிறேன்'' என்று சொல்ல, அவனும், 'தேவதேவனே! யான் அநேகம் ஆண்டுகள் துயில் கொள்ள விரும்புகிறேன்' என்றான். பிரம்மாவும் அவ்வாறே ஆகுக என உரைத்து, தேவர்களுடன் தமதிருப்பிடம் சென்றார்.

ஸரஸ்வதி தேவியும் கும்பகர்ணனை விட்டகன்றாள். ஸரஸ்வதி அவனது வாக்கை விட்டகன்றதும் தன் தினைவைப் பெற்றான். மிகவும் துக்கத்தை அடைந்து, “நான் உயர்ந்த வரங்களையன்றோ கேட்கவிருந்தேன்? எனது நாவு ஏன் இப்படிப் பகன்றது? இதெல்லாம் தேவர்களின் சூழ்ச்சி என எண்ணுகிறேன்” எனச் சிந்தித்து முடிவு செய்தான்.

பிறகு அந்த மூன்று ஸஹோதரர்களும் மிகுந்த தேஜஸ்ஸை உடையவர்களாய் பிரம்மாவின் அனுக்கிரஹத்தைப் பெற்றவர்களாய்க்கொண்டு, தங்களது பிதா தவம் செய்யும் ச்லேஷ்மாதக வனத்தை அடைந்து சுகமாக வசிக்கலாயினர்.

ராமாயணம் -- உத்தரகாண்டம் 4

ஒன்பதாவது ஸர்க்கம்

[ராவணாதிகளின் பிறப்பும், அவர்கள் தவமியற்றச் செல்வதும்]

 

        சில காலம் சென்றது. ஒரு ஸமயம் ஸுமாலி என்ற அரக்கன் நீலமேகம் போன்ற உருவமுள்ளவனாவும், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஸ்வர்ணமயமான குண்டலங்களை அணிந்தவனாகவும். தாமரைமலரை விட்டு வெளிவந்த மகாலக்ஷ்மி போன்ற தன் பெண்ணான கைகஸீயுடனும் பாதாள லோகத்தை விட்டுப் பூலோகத்தில் ஸஞ்சாரம் செய்தான். அப்படி அவன் ஸஞ்சாரம் செய்யும்போது, குபேரன் ஆச்சர்யமான புஷ்பக விமானத்திலேறி, தனது தந்தையான விச்ரவஸ முனிவரைத் தரிசிக்கச் செல்வதைக் கண்டான். அமார்களுக்கொப்பானவனும், சூர்யன்போல் ப்ரகாசிப்பவனுமான குபேரனைக் கண்டு பொறாமை அடைந்தவனாய்ப் பின்வருமாறு ஆலோசித்தான் - எதை நாம் செய்தால் அரக்கர்களுக்கு நன்மையுண்டாகும், நாம் எப்படி மறுபடி வளர்ச்சி பெறுவோம்? என்று. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய், தனது அழகிற் சிறந்த கன்யகையைப் பார்த்து, கைகஸீ! நீ இப்போது மணப் பருவத்தை அடைந்துள்ளாய். உன்னை மணம் செய்துகொள்ள விரும்பும் வரர்கள். நான் மறுத்துவிடுவேனோ என்றே பயத்தால் கிட்டிக் கேட்டார்களில்லை போலும். உனக்குத் தகுந்த பதியைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் மிகுந்த ப்ரயாஸை கொண்டுள்ளோம். ஏனென்றால் நீ ஸகல நற்குணங்களுக்கும் நிலமாயும், ஸாக்ஷாத் மகாலக்ஷ்மியே போன்றும் விளங்குகிறாய். ஹே பெண்ணே! எந்தப் பெண்ணை எந்த மணாளன் அடைவானோ யார் கண்டார்கள்! பொதுவாகவே பெண்ணுக்குத் தந்தையாக இருப்பதென்பது, மானமுள்ள எல்லோருக்குமே அஸஹ்யம்; து:ககரமே .

 

        "கன்யாபித்ருத்வம்!து:கம் ஹி ஸர்வேஷாம் மாநகாங்க்ஷிணாம். தாயின் குலம், தகப்பனின் குலம், அடைந்திடும் பர்த்தாவின் குலம் ஆகிய மூன்று குலங்களையுமே இவள் எப்படிச் செய்திடுவாளோ என்கிற சங்கையில் ஆழ்த்தி விடுகிறாள் பெண்,

'மாது:குலம் பித்ருகுலம் யதிர சைவ ப்ரதீயதே!

குலதரயம் ஸதா கன்யா ஸம்சயே ஸ்தாப்ய திஷ்டதி || '

ஆகையால் நீ ப்ரம்மாவின் குலத்தில் தோன்றிய புலஸ்த்ய முனிவரது குமாரரான விச்ரவஸ முனிவரை நண்ணி அவரை ஸ்வயம்வரமாக வரித்துக்கொள். அவரது அருளால் இந்தக் குபேரனைப்போன்ற பெருமையுடையவர்களும், சூர்யனுக் கொப்பான ஒளி பெற்றவர்களுமான புத்திரர்கள் உனக்குப் பிறப்பார்கள். இதில் சிறிதும் ஸந்தேஹமில்லை என்றான்.

        அவளும் தகப்பனாருடைய வார்த்தையில் கௌரவபுத்தியுள்ளவளாய் எந்த இடத்தில் விச்ரவஸ முனிவர் தவம் செய்கிறாரோ அங்கே சென்று நின்றாள்.

        அந்த ஸமயத்தில் முனிவர் அக்நிஹோத்ரம் செய்துகொண்டிருந்தார். அங்கே சென்ற அவள் முனிவரின் முன்சென்று தலைகுனிந்து கொண்டும் கால் கட்டைவிரல் நுனியால் பூமியில் கிறுக்கிக் கொண்டும் இருந்தாள். இப்படி நிற்கும் கன்யகையைப் பார்த்த முனிவர், 'துடியிடையையும், பூர்ண சந்திரனுக்கொப்பான முகத்தையுமுடைய பெண்ணே! நீ யாருடைய புதல்வி? எங்கிருந்து இங்கு வந்துள்ளாய்? யாது காரணமாக இங்கு வந்துள்ளாய்? உண்மையாகச் சொல்வாயாக' என்றார்.

        இப்படி முனிவரால் கேட்கப்பட்ட கைகஸீ கைகளிரண்டையும் கூப்பிக் கொண்டு பின்வருமாறு கூறினாள்-முனிவரரே! எனது விருப்பத்தைத் தேவரீரே தபோமஹிமையால் அறிந்துகொள்ளும். ஆனால் நான் எனது தந்தையின் ஆஜ்ஞையினால் இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கைகஸீ என்பதாம். மற்றவற்றைத் தாங்களே அறியக்கடவீர் என்றாள்.

        அவளுடைய வார்த்தையைக் கேட்ட முனிவர் தியானயோகத்தால் அவளது அபிலாஷையை அறிந்தார். பிறகு அவளைப் பார்த்து 'கல்யாணியே! உனது மனோரதத்தை நான் அறிந்தேன் என் மூலமாக நீ புத்ரபாக்யத்தை அடைய விரும்புகிருய். உண்டாகும். ஆனால் நீ வந்த வேளை ஸரியானதல்ல, உக்ரமான ப்ரதோஷகாலம். அதற்கு அநுகுணமாக, கொடியவர்களாயும். பயங்கர ஸ்வரூப முடையவர்களாயும், கொடியவர்களிடத்தில் அன்புடையவர்களாயும், க்ரூரமான செய்கையை உடையவர்களுமான ராக்ஷஸர்கள் பிறப்பார்கள்'என்றார்.

 

        அதைக் கேட்ட கேகஸீ முனிவரைப் பணிந்து, 'மகரிஷியே!] ப்ரம்மவித்தான தேவரீரிடமிருந்து அடியாள் தீய ஒழுக்கமுள்ள புதல்வர்களைப பெற்றுக்கொள்வதா? வேண்டாம் ஸ்வாமி ! அடியாளிடம் அருள்புரிக" என வேண்டினாள்.

        இப்படிக் கைகஸீயால் ப்ரார்த்திக்கப்பட்ட விச்ரவஸர் மறுபடியும் அவளைப் பார்த்து, 'பெண்ணே! கடைசியாக உனக்குப் பிறக்கும் புதல்வன் என் குலத்திற்குத் தக்கவனாகவும் தர்மாத்மாவாகவும் இருப்பான்'' என்று அருள் புரிந்தார்.

        ஹே ராம! சில காலஞ் சென்றபின் அந்த கைகஸீ விகாரமான உருவமுள்ளவனும், அரக்கனாயும், கொடூர ஸ்பாவமுள்ளவனும், பத்துத் தலைகளை உடையவனும், கோரப்பற்களை உடையவனும், கருமையானவனும், சிவந்த உதடுகளை உடையவனும், இருபது கைகளை உடையவனும், பெரிய வாயை உடையவனும், பெரிய முடிளை உடையவனுமான பிள்ளையைப் பெற்றாள். அந்தப் பிள்ளை பிறந்தபோது. குள்ள நரிகள் அனலை கக்கி ஊளையிட்டன. கொடிய பறவைகள் இடமாக வட்டமிட்டுக்கொண்டு எங்கும் ஸஞ்சரித்தன. ஆகாயத்திலிருந்து மேகங்கள் இரத்த மழையைப் பொழிந்தன. சூர்யன் ப்ரகாசிக்கவில்லை. ஆகாசத்திலிருந்து கொள்ளிக்கட்டைகள் சிதறி விழுந்தன மூவுலகமும் நடுங்கியது. பேய்க் காற்று அடித்தது. கலங்காத கடலும் கலக்கமுற்றது.

        பிரம்மதேவருக்கு ஒப்பானவரான அவனது பிதா, அந்தப் பிள்ளைக்கு. 'தசக்ரீவன்' எனப் பெயரிட்டார். ஏனெனில் பத்துத் தலைகளுடன் அவன் பிறந்தானல்லவா அதனாலாம்.

        அவனை அடுத்து. பலசாலியாயும், மிகப் பெரிய உருவத்தை உடையவனுமான கும்பகர்ணன் பிறந்தான். பிறகு விகாரமான உருவத்தையுடைய சூர்ப்பணகை என்கிற பெண் பிறந்தாள். கடைசியாக தர்மாத்மாவான விபீஷணன் பிறந்தான் விபீஷணன் பிறந்த போது பூமாரி பொழிந்தது. ஆகாசத்தில் தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்கின. மேலும் ஆகாயத்தில் 'நன்று, நன்று’ என்கிற சப்தம் உண்டாயிற்று.

        ராவண கும்பகர்ணர்கள், மஹாபராக்ரமசாலிகளாய் ஜனங்களுக்கு உபத்ரவங்களைச் செய்பவர்களாய் அந்த மஹாரண்யத்தில் வளர்ந்து வந்தனர். அதிலும் கும்பகர்ணன் மிகவும் மதம் கொண்டவனாய், தர்மிஷ்டர்களான ரிஷிகளையும் ஜனங்களையும் பிடித்துப் புசித்துக்கொண்டு எங்கும் திரிந்தனன்,

        தர்மாத்மாவான விபீஷணன் எப்போதும் தர்ம காரியத்திலேயே ஈடுபட்டவனாயும். வேதாத்யயனத்தைச் செய்துகொண்டும், இரண்டு வேளை மட்டுமே உண்பவனாகவும், இந்த்ரிய நிக்ரஹம் செய்தவனாகவும் இருந்து வந்தான்.

        இவ்வாறிருக்க - ஒரு ஸமயம் குபேரன் தனது புஷ்பக விமானத்திலேறித் தந்தையைத் தரிசிக்க அவ்விடம் வந்தான் தேஜோமயமாய் விளங்கும் அந்தக் குபேரனைக் கண்ட கைகஸீ தனது குமாரனான தசக்ரீவனைப் பார்த்து, 'பராக்ரமசாலியான குமாரனே! உனது ஸஹோதரனான இந்தக் குபேரனைப் பார். இவன் எவ்வளவு பெருமை பெற்று விளங்குகிறான்! நீயும் இவனுக்குச் சமானமாக விளங்கும் படிக்கான பிரயத்தனத்தைச் செய்' எனறாள்.

        தாயின் வார்த்தையைக் கேட்ட பராக்கிரமசாலியான அந்த ராவணன் வைராக்யத்துடன், 'அம்மா! அப்படியே ஆகட்டும். பராக்கிரமத்தாலும் தேஜஸ்ஸாலும் குபேரனுக்கு நிகராகவோ அல்லது மேம்பட்டவனாகவோ ஆகிறேன். இது ஸத்தியம். நீ சோகத்தை விட்டுவிடவும்' என்று கூறினான்.

        தவம் புரிந்து வேண்டிய வரங்களைப் பெற மனவுறுதி பூண்டு செயற்கரிய செய்கைகளைச் செய்ய வேண்டும் என்ற ஆசையை யுடையவனாகித் தனது ஸஹோதரா்களுடன் கோகர்ண க்ஷேத்திரம் சென்று பிரம்மாவைக் குறிததுத் தபஸ் செய்யலாயினன்.

        தனக்கு நிகரற்ற பராக்கிரமசாலியான ராவணன் தம்பிமார்களுடன் கடுந் தவமியற்றிச் சதுர்முகனை ஸந்தோஷிப்பித்து வேண்டிய வரங்களைப் பெற்றான்.

உத்தர ராமாயணம் 3

எட்டாவது ஸர்க்கம்

[ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் மால்யவான் சுமாலீ தோற்று ஓடுவதும்.

அரக்கர்களுடன் பாதாளம் அடைவதும்,

ஒருவருமற்ற லங்கையில் குபேரன் குடிபுகுதலும்.)

இப்படியாக ஓடும் அரக்கர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் நாராயணனைப் பார்த்து, கரைமீது மோதித் திரும்பும் கடலலை போல, மால்யவான் சடக்கெனத் திரும்பியவனாய். கோபத்தினால் இரத்த மெனச் சிவந்த கண்களை உடையவனாயும் கொண்டு பின்வருமாறு கூறினான்.

நாராயண! ந ஜாநீஷே க்ஷாத்ரதர்மம் ஸநாதநம் |

அயுத்தம நஸொ பீதாந் அஸ்மாந் ஹந்த்ஸி யதேதர:1

பராங்முக வத பாபம் ய: கரோத்யஸுரேதர :

ஸ ஹந்தா ந கத: ஸ்வர்கம் லபதே புண்யகர்மணணாம் ||

ஹே நாராயண! நீ க்ஷத்ரியர்களின் யுத்ததர்மத்தை அறியாயா?அது மிகப் பழமையான தர்மமல்லவா? யுத்தத்திலிருந்து, யுத்தகளத்திலிருந்து பயந்து புறமுதுகிட்டு ஓடுபவர்களைத் தொடர்ந்து அடிப்பது பாபமன்றோ? யுத்தம் செய்வதிலிருந்து நிவிருத்தர்களாய் பயந்து ஓடும் எங்களை ஒன்றுமறியாதவனே போல் தொடர்ந்து கொன்று குவிக்கின்றாயே! புறமுதுகிட்டோடுபவர்களைக் கொல்பவன், புண்யாத்மாக்கள் அடைந்திடும் ஸ்வர்க்கத்தை ஒருபோதும் அடையமாட்டான்.

        சங்க சக்ர கதைகளைத் தாங்கிய உனக்கு யுத்தம் செய்ய வேண்டுமென்கிற ஆஸ்தை குறையாது இருந்தால், நான் இருக்கிறேன், இதோ, என்னிடம் உனது ஸாமார்த்யத்தைக் காட்டு என்றான்.

 

        இதைக்கேட்ட. பலசாலியும், உபேந்தரனுமான ஸ்ரீமந்நாராயணன், மால்யவானைப் பார்த்து, 'அரக்கர் தலைவ! -

யுஷ்மத்தோ பயபீதாநாம் தேவாநாம் வை மயாபயம்

ராக்ஷஸோத்ஸாதநம் தத் ததேததநுபால்யதே ||

ப்ராணைரபி ப்ரியம் கார்யம் தேவா நாம் ஹி ஸதா மயா

ஸோஹேம் வோ நிஹநிஷ்யாமி ரஸாதலகதாநபி ||

உங்களிடமிருந்து பயந்த தேவர்களின்பொருட்டு ராக்ஷஸர்களைக் கொன்று உங்களை ரக்ஷிக்கிறேன் என்று நான் அபயப்ரதானம் செய்துள்ளேன். அதைத்தான் இப்போது நான் செய்கிறேன். ப்ராணன்களனைத்தாலும் நான் தேவர்களின்பொருட்டு எப்போதும் ப்ரியத்தைச் செய்யக் கடமைப்பட்டவனாக உள்ளேன். ஆகையால் நீங்கள் பாதாள லோகம் சென்றாலும் தொடர்ந்து துரத்தியடிப்பேன்" என்று கூறினார்.

        சிவந்த தாமரைப்பூப் போன்ற கண்களையுடைய தேவ தேவனான ஸ்ரீமந் நாராயணன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது மால்யவான் பெரிய கதையினால் பகவானுடைய மார்பில் அடித்தான். மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த கதாயுதமானது ஓசை எழுப்பிய வண்ணம் பகவானது மார்பில் பதிந்து, கருமேகத்தில் பளிச்சிடும் மின்னலென விளங்கியது. பககவான் அதே கதையைத் தம் மார்பிலிருந்து எடுத்து மால்யவான் மீது வீசினார். அதனால் அடிபட்ட மால்யவான் நிலை குலைந்தாள். ஆச்வாஸமடைந்து, பிள் அவன் முட்கள் நிறைந்ததும், கறுத்த இரும்பிலானதுமான சூலாயுதத்தினால் பகவானின் மார்பில் அடித்ததோடல்லாமல் வஜ்ராயுதத்திற்கொப்பான தனது முஷ்டியினாலும் அங்கு அடித்துவிட்டு வில்லடி தூரம் பின் நோக்கி நகர்ந்தாள். அப்போது ஆகாசத்தில் 'நன்று நன்று' என்று சப்தம் உண்டாயிற்று. கருடனையும் ஓடிவந்து அடித்தான்.

        மிகுந்த கோபம் கொண்ட கருடன் தனது இறக்கைக் காற்றினால் மால்யவானை, உலர்ந்த புல்லைப் பெருங்காற்று தூக்கிச் சென்று தள்ளுமாப் போல் வெகு தூரத்திற்கு அப்பால் தூக்கிச் சென்று தள்ளினான். பக்ஷிராஜனுடைய பக்ஷக் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட தமையனைக் கண்ட தம்பி சுமாலி தனது ஸைன்யத்துடன் லங்கையைக் குறித்துச் சென்றான். அதைக் கண்ட மால்யவானும் தன் ஸைன்யத்துடன் லங்கையை அடைந்தான்.

        ஹே கமலக்கண்ணனே! இவ்வாறு விஷ்ணுவினால் தோல்வியுற்ற ராக்ஷஸக் குழாங்கள் அவருக்குப் பயந்து அகங்குலைந்து லங்கையை விட்டுப் பாதாளலோகம் சென்று தந்தாம் மனைவி மக்களுடன் வஸிக்கலாயினர்.

        ஹே ரகுஸத்தம! ஸாலகடங்கரையின் வம்சத்தில் உதித்தவர்களான அரக்கர்கள் விஷ்ணுவால் விரட்டப்பட்டவர்களாவார்கள். உன்னால் அழிக்கப்பட்ட ராவணாதிகள் புலஸ்த்ய வம்சத்தில் உதித்தவர்கள். இவர்களை விடவும் அவர்கள் மஹாபலசாலிகள் தேவதைகளுக்கு விரோதிகளான ராக்கதர்களை வதைக்க வல்லவர், சங்க சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு ஒருவருமில்லை. ஸ்ரீராம!

 

பவாந் நாராயணோ தேவ: சதுர்பாஹு: ஸநாதந:|

ராக்ஷஸாந் ஹந்துமுத்பந்ந: ஹ்யஜேய: ப்ரபு வ்யய: [[

நஷ்டதர்மவ்யவஸ்தாதா காலேகாலே ப்ரஜாகர: |

உதபத்யதே தஸ்யுவதே சரணாகதவத்ஸல: ||

தேவரீரே நான்கு கைகளையுடையவரான ஸ்ரீமந்நாராயணன் என்பதை நாங்கள் அறிவோம், புராணபுருஷரான தேவரீர் ராக்ஷஸர்களை அழிப்பதற்காகவே ராமனாகத் திருவவதாரம் செய்துள்ளீர் இவ்வாறாகவே அவ்வோ ஸமயங்களில், தர்மம் நலிவுறும்போது அதை மறுபடி நிலைபெறச் செய்வதற்காகவும், கொடியவர்களை வதைப்பதற்காகவும், அடியார்களிடம் அருள்புரிந்து அவர்களை ரக்ஷிக்கவும் நீர் அவதாரம் செய்கின்றீர்,

        ஹே ஸ்ரீராமசந்த்ர! இவ்வாறாக முந்தைய அரக்கர்களின் உத்பத்தி உள்ளபடி என்னால் சொல்லப்பட்டது. இனி ராவணன் முதலானவர்களுடைய பிறப்பு, பலம் முதலியவைகளைக் கூறுகிறேன்.

        இவ்வாறு அவ்வரக்கர்கள் இலங்கையை விட்டோடி விட்டபடியால் அது சூன்யமாயிருந்தது. அங்குதான் குபேரன் தனது பரிஜனங்களுடன் குடிபுகுந்து வஸித்து வந்தான்.

உத்தரகாண்டம் 2

நேற்றைய ஆறாவது சர்க்கத்தின் தொடர்ச்சி

இப்படித் தேவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டதையும், அவர் அரக்கர்களை வதம் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்ததையும் அறிந்த மால்யவான் தனது ஸஹோதரர்களான ஸுமாலி, மாலி இவர்களை அழைத்துப் பின்வருமாறு கூறினான்- ஸஹோதர்களே! தேவர்களும் ரிஷிகளும் ஒன்றுசேர்த்து சங்கரனிடம் சென்று, நம்மை அழிக்க வேண்டினர், அவர் நம்மைத் தம்மால் அழிக்க முடியாது என்றும், திருமாலிடம் சென்று பிரார்த்தியுங்கள். அவர் ஆவன செய்வார் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்களும் அவ்வாறே திருமாலிடம் சென்று முறையிட அவரும் நம்மை வதம்செய்வதாக வாக்களித்துள்ளார். எனவே இவ் விஷயத்தில் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயிக்க வேண்டும். அந்த மஹாவிஷ்ணு. ஹிரண்யகசிபு, நமுசி, காலநேமி, மஹாவீரனான ஸம்ஹ்ராதன், ராதேயன், மாயையில் வல்லவனான லோகபாலன் அவன் தர்மிஷ்டனுங்கூட, யமளார்ஜுனர்கள், ஹார்திக்யன், சும்ப நிசும்பர்கள், முதலான அசுரர்களை அழித்துள்ளார். அவர்களெல்லாரும் மஹாசூரர்கள் அநேக யாகங்களைச் செய்து புஜபலங்களைப் பெற்றவா்கள் மாயாவிகள். அவர்கள் அனைவரும் விஷ்ணுவோடு யுத்தம் செய்து, மடிந்துள்ளார்கள். இவ் விஷயத்தில் நமது நிலையை நாம் நன்கு ஆலோசிக்க வேண்டும் என்று.

ஸுமாலியும் மாலியும் மால்யவானின் வார்த்தையைச் செவியுற்று - 'அண்ணாவே! நாம் வேதங்கள் அனைத்தையும் அத்யயனம் செய்துள்ளோம். உயர்ந்த வரங்களைப் பெற்றுள்ளோம். நீண்ட ஆயுளையும் பெற்றுள்ளோம். சிறந்த தர்மங்களையும் செய்துள்ளோம் யாராலும் வெல்ல முடியாத தேவ ஸைன்யத்தையும் தோற்று ஓடும்படிச் செய்துள்ளோம். அப்படிப்பட்ட நமக்கு மரணபயமேது? இந்த நாராயணனோ பரமசிவனோ தேவேந்திரனோ யமனோ எல்லோரும் நம்மை எதிர்க்கப் பயப்படுவார்களே! ஹே பராக்ரமசாலியான ப்ராதாவே! தலைவனே! நம்மிடம் அந்தத் திருமாலுக்கு விரோதம் ஏற்படக் காரணம் ஏதுமில்லையே? தேவர்களுடைய தூண்டுதலினாலேயே அவருடைய மனத்தில் நம்மீது த்வேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே நாம் ஸைன்யத்துடன் சென்று தேவர்களையே வதைசெய்ய முற்படுவோம். விஷ்ணுவின் கோபத்திற்கு இவர்களேயன்றோ காரணம்' என்று கூறினார்கள்.

இப்படியாக ஆலோசனை செய்து முடித்து மஹாபலிஷ்டர்களான அவ்வரக்கர்கள் போர் செய்யப் பறையறைந்து புறப்பட்டனர். அவர்கள் எல்லோருமே சூரர்கள், ரதங்களிலும், யானைகளிலும், குதிரைகளிலும் கழுதைகளிலும் ஓட்டகங்களிலும் மலைப் பாம்புகளிலும் முதலைகளிலும் ஆமைகளிலும் கருடனுக்கொப்பான பக்ஷிகளிலும் ஸிம்ஹங்களிலும் புலிகளிலும் பன்றிகளிலும், காண்டாமிருகங்களிலும், மான்களிலும் ஆரோஹணித்து லங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர். தேவலோகத்தை நோக்கி அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது லங்கையிலுள்ள தெய்வங்களெல்லாம் லங்கைக்கு ஏற்பட இருக்கும் அபாயத்தை உணர்ந்து மனமொடிந்து போயின. 'லங்காவிபா்யயம் திருஷ்ட்வா யாநி லங்கா லயாந்யத| . பூதாதி பயதர்சீதி விமநஸ்காநி ஸர்வசா|| மேலும், அரக்கர்கள் சென்ற வழியே அங்குள்ள தெய்வங்களும் சென்றுவிட்டன. ரக்ஷஸா மேவ மார்கேண தைவதாந்யபசக்ரமு:|

அந்த ஸமயத்தில் ராக்ஷஸர்களுக்கு அழிவு உண்டாவதற்கு அறிகுறியாய் அநேக கெட்ட சகுனங்கள் உண்டாகத் தொடங்கி அதாவது - மேகங்கள் எலும்புகளுடன் கூடிய இரத்த மழையை பெய்தன. ஸமுத்திரம் கரை கடந்து பெருக்கெடுக்கலாயிற்று மலைகள் நிலை குலைந்தன. குள்ளநரிகள் கூட்டங் கூட்டமாக அனைவரும் அஞ்சுமாறு ஊளையிட்டன. ஆகாயத்தினின்றும் கொள்ளிக்கட்டைகள் விழுந்தன. ஆகாயத்தில் கழுகுக் கூட்டங்கள் கொள்ளியை வாயினால் உமிழ்ந்துகொண்டு, ராக்ஷஸர்களின் தலைக்கு மேலாக நெருப்புச் சக்கரம் போல் வானத்தில் வட்டமிட்டுப் பறந்தன. காக்கைகள் கொடூரமாகச் சப்தித்தன. பூனைகளும் குறுக்கே ஓடின. இப்படி உண்டான அபசகுனங்களைச் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல், மிகுந்த கர்வத்துடன், காலபாசத்தால் கட்டுண்டவர்களாகச் சென்று கொண்டேயிருந்தனர். அந்த அரக்க ஸேனையின் முன்னால், மால்யவான், சுமாலி, மாலி என்கிற மூவரும் சென்றனர். மால்யவான் என்கிற மலைக்கு ஒப்பான மால்யவானை, பிரம்மதேவனை ஆச்ரயித்துள்ள தேவர்போல் பின்தொடர்ந்தனர் அரக்கர்கள்.

இந்தச்செய்தியைத் தேவதூதர்கள் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாராயணன் அவர்களை (அரக்கர்களை) அழிக்க விரும்பி, கோடிசூர்ய பிரகாசமான திவ்ய கவசமணிந்து அளவற்ற அம்புகள் நிறைந்த அம்பறாத் தூணிகளைத் தரித்து சங்கம் சக்ரம் தண்டம் வாள் வில் முதலிய ஆயுதங்களும் பூண்டு, பொன்மலை போல விளங்கும் கருத்மான் மீதேறி வெகு விரைவாக அரக்கரின் ஸேனையருகே சென்றார். அப்போது அந்த நாராயணன் பொன்மலையின் மீது மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தார். அப்போது கருடனின் சிறகு வீசிய வேகத்தினால் உண்டான காற்றுத் தாக்கி அவ்வஸுரர் படை சிலைகள் சிதறிய மலை போன்று சிறிது சலன முற்றது. ஆயினும் அவர்கள் சிறிதும் பயமடையவில்லை. மிகுந்த உத்ஸாஹத்துடன் பற்பலவிதமான பகழிகளாலும் மிகச் சிறந்த ஆயுதங்களாலும் பகவானைச் சூழ்ந்து கொண்டு பலவாறு துன்புறுத்தலாயினர்.

ஏழாவது ஸர்க்கம்

[ஸ்ரீமந்நாராயணனால் அனேக அரக்கர்கள் அழிக்கப்பட்டதும் மாலியின் வதமும் இந்த ஸர்க்கத்தில் கூறப்படுகிறது.)

மேகங்கள் மிகப் பெரிய மலை மீது மழை பொழிவது போல் ராக்ஷஸர்களரகிய மேகங்கள் மஹாவிஷ்ணுவாகிய நீலமலை மீது பாண வர்ஷம் வர்ஷிக்கலாயின. பரிசுத்தனான ஸ்ரீமந்நாராயணன் நீல உருக் கொண்ட அரக்கர்களால் சூழப்பட்டு மழை பொழியும் மேகங்களால் சூழப்பட்ட அஞ்ஜன (நீல) மலை போல் காட்சியளித்தார். அரக்கர்களால் விடப்பட்ட பாணங்கள், நெற்பயிரையடைந்த வெட்டுக்கிளிகள் போன்றும். மலையை மொய்க்கும் கொசுக்கள் போலவும், தேன் குடத்தைச் சுற்றி நிற்கும் தேனீக்கள் போலவும், ஸமுத்திரத்தில் உள்ள முதலைகள் போலவும் பகவானின் சரீரத்தில் புகுந்து, பிரளய காலத்தில் பிராணிகள் அவர் உடலில் புகுவது போல் காணப்பட்டன தேரின்மீது அமர்ந்தவர்களும், யானைகளின் மீது அமர்ந்தவர்களும், குதிரைகளின் மீது ஏறியவர்களும், காலாட்படையினருமான அனைவரும் ஆகாயத்தில் இருந்து கொண்டு, சக்தி கதை அங்குசம் பாணம் இவைகளால் பகவானை அடித்து, மூச்சு விட முடியாதபடி செய்தனர். இப்படி அரக்கர்களால் மூச்சு விட முடியாதபடி அடிக்கப்பட்ட ஸ்ரீமந் நாராயணன் சார்ங்கமென்னும் தனது வில்லை வளைத்து, வஜ்ராயுதத்திற்கு நிகரான பாணங்களைத் தொடுத்து அவ்வசுரர்களை நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் கொன்றும் ஓட விரட்டியும், பாஞ்சஜன்யம் என்கிற சங்கத்தை ஊதிப் பெருங்கோஷம் உண்டாக்கினார். பகவானால் ஊதப்பட்ட அந்தச் சங்கநாதமானது மூவுலகங்களையும் நடுங்க வைத்தது. அந்தச் சங்கத்வனியைக் கேட்ட அரக்கர்கள். காட்டில் சிம்ம கர்ஜனையைக் கேட்ட யானைகளைப் போல் நடுங்கினர். குதிரைகளும் பயந்தோடின, தேரின் மீது வீற்றிருந்த வீரர்களும் மூர்ச்சையடைந்து வீழ்ந்தனர். சார்ங்கமென்னும் வில்லிலிருந்து விடப்பட்ட பாணங்கள் வஜ்ராயுதம் போல் அரக்கர்களின் உடல்களைப் பிளந்துகொண்டு பூமியில் பிரவேசித்தன. நாராயண பாணங்களால் அடியுண்ட அரக்கர்கல் உடல்கள் வஜ்ராயுதத்தால் அடியுண்ட மலைகள் போல் பூமியில் வற்றி விழுந்தன. அவற்றிலிருந்து இரத்த தாரைகள் பெருக்கெடுத்தோடின. சங்கத்தின் நாதமும் சார்ங்கத்தில் நாணொலியும் அசுரர்களின் கூச்சலினாலுண்டான பெரும் சப்தத்தை அடக்கிவிட்டன. அப்போது பகவான் அவ்வரக்கர்களுடைய வில் வாள் ரதங்கள் கொடிகள் முதலியவற்றை அழித்து அவர்களையும் கொன்று குவித்தார். அவருடைய வில்லிலிருந்து வெளிவந்த பாணங்கள் எவ்வாறு இருந்தன எனில் சூர்யனிடமிருந்து கோடை காலத்தில் வெளிப்படும் கிரணங்கள் போன்றும், ஸமுத்திரத்திலிருந்து உண்டாகும் அலைகள் போலவும், மலைகளினின்றும் வெளிக் கிளம்பும் ஸர்ப்பங்கள் போன்றும், நீருண்ட மேகத்திலிருந்து வெளிவரும் மழை தாரைகள் போன்றும், கடுமையாகவும், ஓய்ச்சலொழிவு இன்றியும் ஹிம்ஸிக்குமவையாகவும் இருந்தன. அவ்வரக்கர்கள் ஸ்ரீமந் நாராயணனால் அடிபட்டவர்களாய் சரபம் என்கிற மிருகத்திற்கு பயந்து ஓடும் சிங்கம் போலவும், சிங்கத்திற்குப் பயந்து ஓடும் யானை போலவும், யானைக்குப் பயந்து ஓடும் புலி போலவும், புலிக்குப் பயந்து ஓடும் க்ஷுத்ர மிருகம் போன்றும், க்ஷுத்ர மிருகத்திற்கு பயந்து ஓடும் நாய் போலவும், நாய்க்குப் பயந்து ஓடும் பூனை போலவும், பூனைக்கு பயப்படும் பாம்பு போலவும், பாம்புக்குப் பயப்படும் எலி போலவும் பயந்து ஓடினர். இப்படி அவர்கள் ஓடும்போது மறுபடியும் பகவான் சங்கநாதம் செய்தார். பகவானுடைய பாணவர்ஷத்தாலும், சங்க நாதத்தாலும் பயந்த அரக்கர் ஸைன்யம் லங்காபுரியைக் குறித்து ஓட ஆரம்பித்தது.

இது கண்டு அரக்கர்களின் நடுவனான சுமாலி என்பவன் ஸ்ரீமந் நாராயணனை பாணவர்ஷங்களால் மறைத்தான் அது எப்படி இருந்ததெனில் சூரியனைப் பனிமூட்டம் மறைப்பது போன்றிருந்தது. இதைக் கண்ட ராக்ஷஸ ஸைன்னியம் மறுபடி உத்ஸாஹமடைந்து ஓடுவதினின்றும் திரும்பி வந்து யுத்தத்தில் ஈடுபட்டது. மேலும் உத்ஸாஹம் கொண்ட சுமாலீ ஓடுகின்ற ராக்ஷஸர்களை ஒன்றுசேர்த்தான். தான் அணிந்துகொண்டிருந்த நீண்டு தொங்கும் ஆபரணங்களைத் தூக்கி எறிந்து கொண்டும், யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு ஓடி வருவது போல் தனது கையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டும், சப்தம் செய்து கொண்டு பகவானைக் குறித்து ஓடி வந்தான். இப்படிக் கூச்சலிட்டுக்கொண்டு வரும் சுமாலியின் தேர்ப்பாகனது தலையைப் பகவான் கூரிய பாணத்தால் அறுத்துத் தள்ளினார். குண்டலங்கள் ஜ்வலிக்கும் அந்தத்தலை பூமியில் விழுந்து உருண்டது. தேர்ப் பாகனின்றிக் குதிரைகள் அங்குமிங்குமாகக் கட்டுக்கு அடங்காமல் மிரண்டோடின. தேரிலிருந்த சுமாலி, மனம் முதலிய இந்த்ரியங்களால் அலைக்கழிக்கப்படும் கபிபோல் யுத்தபூமியில் அலைக்கழிக்கப்பட்டுத் தடுமாற்றமடைந்தான்.

இப்படிச் சுமாலி தவிப்பதைக் கண்ட மாலி என்பவன் தேரின் மீதேறிக்கொண்டு மிகப் பெரிய வில்லேந்தியவனாய், பகவானைக் குறித்து அநேக பாணங்களை ப்ரயோகித்தான். ஸ்வர்ணங்களாலிழைக்கப்பட்ட அந்த பாணங்கள் பகவானின் சரீரத்தில் குதித்துக்கொண்டு க்ரௌஞ்ச மலை மீதமர்ந்த பக்ஷிகள் போல் விளங்கின. அந்தப் பாணங்களால் அடிக்கப்பட்டிருந்த போதிலும் மஹாவிஷ்ணு சிறிதும் பீடிக்கப் பட்டவராகக் காணப்படவில்லை. எப்படி இருந்ததெனில் இந்த்ரிய நிக்ரஹம் செய்துள்ளவன் மனோவ்யாதிகளால் எப்படிச் சிறிதும் க்லேசப்படமாட்டானோ அப்படி இருந்தது.

சுக்ஷுபே நரணே விஷ்ணு: ஜிதேந்த்ரிய இவாதிபி.'

பிறகு சத்ருக்களை வெல்ல வல்ல பகவான் மாலியின் மீது ஆயிரக் கணக்கான பாணங்களை ப்ரயோகித்தார். அந்தப் பாணங்கள் மாலியின் சரீரத்தைக் குடித்தன. அதைப் பார்க்கும்போது பாம்புகள் அம்ருதரஸத்தைப் பருகுவது போன்றிருந்தது. இப்படி அவனை அடித்து மயக்கமுறச் செய்த பகவான் அவனது கிரீடத்தையும் த்வஜத்தையும் வில்லையும் தேர்க்குதிரைகளையும் அடித்து வீழ்த்தினார். மயக்கம் தெளிந்த மாலி தேரிலிருந்து குதித்தெழுந்து மிகப் பெரிய கதாயுதத்தைக் கையிலேந்தியவனாய் மலையிலிருந்து பாய்ந்து வரும் சிங்கம் போன்று ஓடி வந்து பக்ஷிராஜனான கருடனின் நெற்றியின் மீது ஓங்கியடித்தான். அது ஒரு காலத்தில் அந்தகன் (யமன்) சிவனின் தலைமீது அடித்தது போன்றும், இந்திரன் வஜ்ராயுதத்தால் மலையை அடித்தது போன்றுமிருந்தது. மாலியினால் இவ்வாறு அடிக்கப்பட்ட கருடன் மிகவும் துன்பப்பட்டு அந்த வேதனையைத் தாங்க மாட்டாமல் பகவானைப் போர்க்களத்தினின்றும் பின்புறம் கொண்டு சென்றான்.

இப்படி ஆனது கண்ட அரக்கர் ஸைன்யம். ஆனந்தக் கூச்சலிட்டது. அரக்கர்களின் ஆனந்தக் கூச்சலைச் செவியுற்ற பகவான் மிகவுங் கோபம் கொண்டு யுத்தகளத்திற்குக் குறுக்காகத் திரும்பி, கருடன் மீதமர்ந்தவாறே மாலியைக் கொல்லக் கருதி தனது சக்ராயுதத்தை ப்ரயோகித்தார். அநேகமாயிரம் சூரியனது ஒளிக்கு ஒப்பான ஒளியையுடைய அந்த சக்ராயுதம் காலசக்ரம் போன்று மாலியினது சிரஸ்ஸை அறுத்துத் தள்ளியது. அந்த மாலியின் சிரஸ்ஸானது மிகப் பயங்கரமாய் ரக்தத்தை வாரியிறைத்துக்கொண்டு பூமியின் கண் விழுந்தது. அது, முன்பு அம்ருத பானஞ் செய்யும் போது தேவர்களின் மத்தியில் அமர்ந்து அம்ருதபானம் செய்ய முயன்ற ராகுவின் தலை மஹாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு எவ்வாறு பூமியில் விழுந்ததோ அது போன்றிருந்தது. இது கண்ட தேவர்கள் 'பகவானே! நன்று செய்தீர், நன்று செய்தீர்' என்று கொண்டாடினர்

மாலி மடிந்ததைக் கண்ட மால்யவானும் சுமாலியும் மிகவும் வருத்தமடைந்தனர். தங்களது ஸைன்யத்துடன் லங்காபுரியை நோக்கித் திரும்பி ஓடிச் செல்ல ஆரம்பித்தனர்

அதற்குள்ளாக, கருடன் ச்ரமம் தீர்ந்து திரும்பியவனாய், மிகவும் கோபம் கொண்டு முன்பு போலவே தனது இறக்கைகளிலிருந்து உண்டாகும் காற்றின் வேகத்தினால் அடித்தோட்டினார். அந்த யுத்தத்தில் அரக்கர் சிலர் தலையறுப்புண்டும், கதையினால் அடிபட்டு முறிந்த மார்பையுடையவர்களாவும், கலப்பையினால் வாடிய (முறிந்த) கழுத்தையுடையவர்களாகவும், உலக்கையால் மண்டை பிளக்கப்பட்டவர் களாகவும், கத்தியால் இரண்டு துண்டானவர்களாயும், பாணங்களால் பீடிக்கப் பட்டவர்களாயும் ஆகாயத்திலிருந்து ஸமுத்திரத்தில் வீழ்ந்தனர்.

ஸ்ரீமந்நாராயணன் தமது வில்லிலிருந்து வெளிவரும் வஜ்ராயுதத்திற்குக் கொப்பான பாணங்களால் அரக்கர்களை. தலைத் தெறித்து ஓடும்படி விரட்டினார். அப்பொழுது அவ்வரக்கர் ஸேனை குடைகளொடியவும், அஸ்திரங்களொழியவும், பாணங்களால் உரு மாறியும், குடல்கள் வெளிப்பட்டு, பயத்தினால் மருள மருள விழித்துக்கொண்டு பெருங் கூச்சலுடன் பைத்தியம் பிடித்தது போல் ஆயிற்று. ஓடிற்று இப்படி அடிதாங்காமல் கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் வேகத்தையும் பார்த்தால், சிங்கத்தினால் விரட்டப்படும் யானை போலவும், முன்பொரு ஸமயம் நரஸிம்ஹனால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கூச்சலிட்டு வேகமாக ஓடிய அரக்கர்கள் போலவும் இருந்தது'  'ராவா: ச வேகா: சசமம் பபூவு : புராணஸிம்ஹேந விமர்திநாம்.'

விஷ்ணு தேவனின் கூர்மையான வாளிகளால் அடியுண்ட இராக்கதர்கள் நசுங்குண்ட சரீரமுடையவர்களாய் மலைகள் போல ஆகாசத்திலிருந்து பூமியில் விழலாயினர். இப்படிப் பகவானால் அடியுண்ட இராக்கதர்கள் ஓயாது தரையில் வந்து விழுவது நீலமலைகள் மடிந்து மண் மீது வீழ்வது எனத் தோன்றியது.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பலரும் படிக்காத ராமாயணம்

பலர் படிக்காத

ராமாயண கதைகள்

(உத்தர காண்டம்]

உப. வித்வான் அத்தி நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி -திருவுள்ளூர்

முன்னுரை:-

ஸ்ரீவால்மீகி மஹர்ஷி அருளிச் செய்தது ஸ்ரீமத்ராமாயணம். . இது ஆதிகாவ்யம் என்று ப்ரஸித்தி பெற்றது. வேத வேத்யனான பரமபுருஷன் ஸ்ரீராமபத்ரனாக அவதரித்ததும் வேதமானது வால்மீகி மூலமாக ஸ்ரீராமாயண ரூபமாக அவதரித்ததாம். அந்த ஸ்ரீமத் ராமாயண ரூபமான வேதம் ஏழு காண்டங்களாக விளங்கி வருகிறது. அதில் முதல் ஆறு காண்டங்களில் ஸ்ரீராமனின் அவதாரம் முதல் பட்டாபிஷேக பர்யந்தமான சரிதம் வர்ணிக்கப் பட்டுள்ளன. இந்தக் கதாபாகங்கள் அநேகமாகப் பலரால் அறியப்பட்டும். ப்ரவசனம் செய்யப்பட்டும் வழக்கத்திலும் கடைசிக் காண்டமான உத்தர காண்டம் சிலர் அறியப்படாமலேயே ப்ரஸசனத்திலும் கையாளப்படாமலேயே அநேகமாக இருக்கிறது. இதை யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஸ்ரீவால்மீகி அருளியபடி கதை எழுதப் படுகிறது.

முதல் ஸர்க்கம்

ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகம் செய்துகொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் போது ஸ்ரீராமபிரானைக் கொண்டாடும் பொருட்டு மஹரிஷிகளின் வருகையும் ஸம்பாஷணமும் மேலே தொடங்குகின்றன.

ராவணனை வதம் செய்து, அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு சுகமாக ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த ஸ்ரீராம சந்திரனைப் புகழ்வதற்காக மஹர்ஷிகள் பலர் அயோத்யா பட்டணத்திற்கு வந்தனர். அவர்களாவர்-கௌசிகர், யவக்ரீதர், கார்க்யர், காலவர், கண்வர் (மேதாதிதியின் புதல்வர்). இவர்கள் கிழக்குத் திக்கு வாஸிகள்; ஸ்வஸ்த்யாத்ரேயர் நமுசி, ப்ரமுசி, அகஸ்த்யர், அர்ரி, சுமுகர், விமுகர் இவர்கள் தென்திசை வாஸிகள். மேற்குத் திக்வாஸிகளான ந்ருஷத், கவஷர், தெளம்யர், கௌஷேயர் இவர்கள் தத்தம் சிஷ்யர்களுடனும், வடக்குத் திக்கிலுள்ள வசிஷ்டர், கச்யபர், விச்வாமித்ரர், ஜமதக்நி, பரத்வாஜர் முதலியவர்களும் வந்திருந்தார்கள்.

அகஸ்தியர் தலைமையிலான இந்தமஹர்ஷிகள் ஸ்ரீராமனது அரண்மனை வாயிலை அடைத்ததும் வாயிற்காப்பானிடம் அகஸ்த்யர் “என் ப்ரதீஹாரியே! நீ ராமபிரானிடம் சென்று 'உமது தர்சனத்திற்காக ஸ்ரீராகவனிடம் மஹர்ஷிகள் வந்திருக்கிறர்கள்' என்று தெரிவிக்கவும்' என்று கூறினார். வாயிற்காப்போனும் உடனடியாக ஶ்ரீராகவனிடம் சென்று மஹர்ஷிகனின் வருகையை விஜ்ஞாபித்தான். நீதிமானாயும் ஸமயமறிந்து கார்யம் செய்வதில் நிபுணராயும், ஸமர்த்தராயும், தைர்யசாலியுமான ராமன். ப்ரதீஹாரியின் வார்த்தையைக் கேட்டதும் முனிவர்களின் வருகையை அறிந்து ஸந்தோஷமடைந்தவராய் அவர்களை அழைத்து வர ஆஜ்ஞாபித்தான். ப்ரதீஹாரியும் அந்த மஹர்ஷிகளை உள்ளே அழைத்து வந்தான்--முனிவர்களைக் கண்டதும் ஸ்ரீராமன் ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து கைகளைக் கூப்பிக்கொண்டு நல்வரவு கூறியும். அவர்களுக்குப் பாத்யம் அர்க்யம் முதலியவைகனால் உபசரித்தும், மதுபர்க்கம் ஸமர்ப்பித்தும். ப்ரீதியுடனும் வணக்கத்துடனும் நின்றுகொண்டு அவர்களை ஆஸனங்களில் அமரச்செய்தார். அந்தமஹர்ஷிகளும் ஸ்வர்ணமயமாயும், பெரியதும், உயர்ந்ததும், தர்பவிஸ்த்ருத மாயும், மான்தோல் அமைக்கப்பட்டதுமான ஆஸனங்களில் ஸந்தோஷத்துடன் அமர்ந்தனர்..

பிறகு ஸ்ரீராகவன் மஹர்ஷிகளின் குசலத்தை விசாரிக்க அவர்களும், நாங்கள் அனைவரும் ஸர்வ விதத்திலும் க்ஷேமம் உள்ளவர்கனாக இருக்கிறோம், மேலும் நாங்கள் அனைவரும் பெரிய பாக்ய விசேஷத்தால் தங்களை ஜயசீலனாகக் காண்கிறோம். சத்ருக்களை எல்லாம் வென்றுவிட்டாய். உன்னால் உலகுக்கெல்லாம் கஷ்டத்தைக் கொடுத்து வந்த ராவணன் வெல்லப்பட்டான். கையில் கோதண்டத்தைக் கொண்ட நீ மூவுலகங்களையுமே அழிக்க ஸமர்த்தனே. இதை நாங்கள் அனைவருமே அறிவோம். இதில் ஸந்தேஹமே இல்லை தெய்வாநுக்ரஹத்தால் நாங்கள் செய்த புண்யபலத்தால், ஸீதாதேவியுடனும், உனது ஹிதத்தையே தனது ஹிதமாகக் கொண்ட லக்ஷ்மணனுடனும் பரத சக்ருக்னர்களுடனும், கௌஸல்யை சுமித்ரை கைகேயி இவர்களுடனும் கூடிய உன்னை நாங்கள் இப்போது கண்டு களிக்கும் பாக்யத்தைப் பெற்றோம்.

உனது பராக்ரமத்தால், ப்ரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன் மஹோதரன், அகம்பனன் முதலான அரக்கர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரீரத்தாலும் பலத்தாலும் மேம்பட்டவர்கள். மிக்க பராக்கிரமசாலியான கும்பகர்ணனும் உன்னால் கொல்லப்பட்டான். திரிசிரஸ், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் முதலிய மேலும் மிக்க பராக்ரமசாலிகளும் அழிக்கப்பட்டனர். மிக பயங்கர உருவமுள்ள கும்பன் நிகும்பன் என்கிற கும்பகர்ணனின் மகன்களும், யஜ்ஞகோபன் தூம்ராக்ஷன் முதலானவர்களும் வதம் செய்யப்பட்டனர்.

நேருக்கு நேர் என்கிற கணக்கில் யுத்தம் செய்து தேவர்களாலும் ஜயிக்க முடியாத ராவணனை ஜயித்தாய். இதில் எல்லாம் எங்களுக்கு ஆச்சரியப்பட விசேஷம் எதுவுமில்லை. பின்னே எது ஆச்சர்யகரம் என்றால் ராவணனின் புதல்வனான இந்த்ரஜித்தை லக்ஷ்மணனைக் கொண்டு வதம் செய்தாயே, அதுதான் மிக மிக ஆச்சர்யகரமாக உள்ளது. அவனுடன் யுத்தம் செய்த காலனே தோற்று ஓடிப் போன விஷயம் அனைவரும் அறிந்ததே. நேராக நின்று யுத்தம் செய்யாமல் மாயாயுத்தம் செய்வதில் அவன் மிகவும் ஸமர்த்தன். அப்படிப்பட்டவனை நேரடியாக யுத்தம் செய்வித்து மாண்டு போகும்படிச் செய்வித்தாய். அப்படிப்பட்ட இந்த்ரஜித்தினுடைய வதத்தைக் கேள்விப்பட்ட நாங்கள் மிக மிக மகிழ்ந்தோம். இப்படிக் கொடிய அரக்கர்களைக் கொன்று எங்களுக்கும் உலகிற்கும் அபய ப்ரதானம் செய்து விளங்கும் நீ என்றும் மங்களத்துடன் வாழவேண்டும் என்றனர்.

இப்படி ரிஷிகள் கூறக் கேட்ட ரகுநந்தனர் மிகவும் ஆச்சர்யத்துடன் இருகரம் கூப்பி ரிஷிகளை வணங்கிப் பின்வருமாறு கூறினார் - ரிஷிகளே! மஹாபராக்ரம சாலிகளான ராவணன், கும்பகர்ணன், மஹோதரன், ப்ரஹஸ்தன், விரூபாக்ஷன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் முத்தலையன், தூம்ராக்ஷன் இவர்களைக் கொண்டாடிப் பேசாமல், ராவணனின் பிள்ளையான இந்த்ரஜித்தை உயர்த்திப் பேசு கிறீர்களே. ஏன்? இந்த இந்த்ரஜித் எப்படிப்பட்டவன்? அவனுடைய ப்ரபாவம் எப்படிப்பட்டது? அவனது பலம் என்ன? அவனது பராக்ரமம் எப்படிப்பட்டது? எதனால் அவன் ராவணனைவிட மேற்பட்டவனானான்? இவையெல்லாம் நான் அறியக்கூடு மாகில் தேவரீர்கள் க்ருபை செய்து எனக்கு அருளிச்செய்ய வேண்டும். அடியேனது ஆஜ்ஞையன்று, விஜ்ஞாபனம். தேவேந்த்ரனும் தோற்று ஓடிப் போனான் என்பது வியப்பாக உள்ளது. எப்படி அப்படிப்பட்ட வரத்தைப் பெற்றான்? மகன் பலவானாகவும் தகப்பன் அவனுக்கு நிகரில்லாதவனாக இருந்ததும் வியப்பாக உள்ளது என்று.

இரண்டாவது ஸர்க்கம்

(இப்படி ஸ்ரீராமன் கேட்டதும் அகஸ்த்யர் அதற்கு உபோத்காதரூபமாக ராவண குல மூலபுருஷர்களைக் கூறுகிறார்.)

ஸ்ரீராமபிரான் இப்படிக் கேட்டதும் அகஸ்த்ய மஹர்ஷி “ஸ்ரீராகவ! இந்தரஜித்தினுடைய வரலாறு கூறப்படுவதற்கு முன்பு ராவணனுடைய குலம், பிறப்பு அவன் பெற்ற வரம் முதலியவற்றைக் . கூறுகிறேன்.

முன்பு க்ருதயுகத்தில் பிரம்ம தேவனுக்குப் 'புலஸ்த்யர்' என்ற புதல்வர் இருந்தார். பிரம்மரிஷியான அவர் பிரம்மாவைப் போலவே விளங்கினார். அவருடைய குணங்கள் வர்ணிக்கைக்கு நிலமற்றிருந்தன. அநுஷ்டானமும் பழுதற்றிருந்தது. பிரம்மபுத்ரன் என்று மட்டுமே புகழ இருந்தார். பிரம்மபுத்ரரானபடியால் தேவர்களும் அவரை விரும்பினர். தனது நற்குண நல்லொழுக்கங்களால் எல்லோராலும் போற்றப்பட்டவராய் விளங்கினார்.

அவர் மேருமலைச் சாரலில் த்ருணபிந்து... என்ற மஹர்ஷியின் ஆச்ரம எல்லையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு வேதபாராயண சீலராய்த் தவம் செய்து வந்தார். அந்த ஆச்ரமத்தைச் சார்ந்த வனம் எப்போதும் பூத்துக் குலுங்கும் புஷ்பச் செடிகளுடனும், ஸதாகாலமும் பழம் கொடுக்கும் வ்ருக்ஷங்களுடனும் விளங்கி வந்தது.

எனவே அங்கே தேவ கன்யகைகள், நாக கன்யகைகள், ராஜரிஷி கன்யகைகள். அப்ஸரஸ்த்ரீகள் முதலிய ஸ்த்ரீகள் வந்து ஆடிப் பாடி இந்த மஹரிஷியின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தனர்.

இது கண்ட புலஸ்த்ய முனிவர் மிகவும் கோபம் கொண்டு இவ்விடத்தில் எவரேனும் இனி எனது தவத்தின்போது என் கண்களுக்கு இலக்காவீராகில் அவர்கள் கர்ப்பவதியாவீர்கள் என்று சாபமிட்டார். அது கேட்ட கன்யகைகள் பயந்தவர்களாய் அங்கே செல்வதைத் தவிர்த்தனர்.

த்ருணபிந்து மஹர்ஷிக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் இந்த விஷயத்தை அறியாதவள். ஒரு நாள் அவள் தன் தோழியுடன் விளையாடச்சென்றாள், தோழி எங்கோ சென்றமையால் அவளுடைய வரவிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அது ஸமயம் அங்கே தபஸ் செய்துகொண்டிருந்த புலஸ்த்யர் வேதத்தை ஓத ஆரம்பித்தார். அந்தச் சப்தத்தைக் கேட்ட ரிஷிகுமாரி அவ்விடத்திற்குச் - சென்று அவரைக் கண்டாள். அவருடைய தர்சனத்தால், அவர் இட்ட சாபப்படி இவளுடைய சரீரத்தில் கர்ப்பஸ்த்ரீகளுக்கு உண்டாகும் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதாவது சரீரம் வெளுத்தல் முதலியன. இப்படித் தன் சரீரத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு பயந்த அந்தப் பெண் தன் தந்தையினுடைய ஆச்ரமத்தை அடைந்து நின்றாள். தன் மகளின் சரீர மாறுதலைக் கண்ட த்ருணபிந்து மஹரிஷி ஏனம்மா என்று கேட்டார். அதற்கு அவள் இருகைகளையும் கூப்பிக்கொண்டு தந்தையிடம் பின்வருமாறு கூறினாள் - பிதாவே! இதற்கான காரணத்தை நான் அறியேன். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் எனது தோழியைத் தேடிக்கொண்டு புலஸ்தியருடைய ஆச்ரம ஸமீபம் சென்றேன். ஆனால் தோழியைக் காணமுடியவில்லை எனது சரீரம் இவ்வாறு மாறுபாட்டை அடைந்து விட்டது என்று.

இதைச் செலியுற்ற த்ருணபித்து மஹர்ஷி, தியானத்தால் நடந்ததை அறிந்தார். உடனே தனது குமாரியை அழைத்துக்கொண்டு புலஸ்த்யரிடம் சென்றார். அவரைப் பார்த்து, "மஹர்ஷே! இதோ நிற்கும் இவள் எனது குமாரி. உமக்கு அநுகுணமான குணநலன்களை உடையவள். இவளை பிக்ஷையாக உமக்கு ஸமர்ப்பிக்க விரும்புகிறேன். ஸ்வீகரிக்க வேண்டும். தபஸ்செய்து களைப்புறும்போது உமக்குப் பணிவிடைகளை இவள் செய்து உம்மைக் களிப்புறச் செய்வாள்' என்றார். இதைக்கேட்ட புலஸ்த்யர் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். பிறகு த்ருணபிந்து மஹர்ஷி முறைப்படி அவருக்கு மகளை விவாஹம் செய்து கொடுத்துவிட்டுத் தமது ஆச்ரமத்தை அடைந்தார்.

அந்தப் பெண் புலஸ்த்யருடைய கருத்திற்கொப்பப் பணிவிடைகளைச் செய்து பர்த்தாவைக் களிப்புறச் செய்து வந்தாள். அவளுடைய குணங்களாலும் நடத்தையாலும் ஸந்தோஷமடைந்த புலஸ்த்யர் அவளை நோக்கி '”அழகியவளே! உனது நன்னடத்தையால் நான் மிகவும் ஸந்தோஷமடைந்துள்ளேன். எனவே நம்முடைய குலம் விளங்க, எனககுச் சமமான புத்திரன் ஒருவன் உனக்கு உண்டாக வரமளிக்கிறேன். எனது வேதகோஷதைக் கேட்டு நீ கர்ப்பம் தரித்த படியால் உனக்குப் பிறக்கப்போகும் புதல்வன் விச்ரவஸ் என்ற பெயருடன் உலகில் ப்ரஸித்தனாக இருப்பான்'' என்றார். அவளும் இதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். தகுந்த காலத்தில் அவள் ஒரு புதல்வனைப் பெற்றாள். அந்தப் புதல்வன் (விச்ரவஸ் எனகிற அவன்) மூவுலகங்களிலும் பேரும் புகழுங்கொண்டு, வேதமனைத்தையும் கற்றவனாகவும், தந்தையைப் போல் அருந்தவத்தோனாகவும், எல்லா ப்ராணிகளிடத்தும் ஸமநோக்குடையவனாகவும் விளங்கினான்.

மூன்றாவது ஸர்கம்

(விச்ரவஸ்ஸிடமிருந்து குபேரனின் -பிறப்பு. அவன் இலங்கையில் குடிபுகுந்தது முதலியன)

புலஸ்த்யரின் புதல்வனான விச்ரவஸ், தபஸ்வியாயும் ஸத்ய ஸந்தனாகவும் விளங்கி வருவதை அறிந்த பரத்வாஜ முனிவர் தனது புதல்வியும், அப்ஸரஸ் ஸ்த்ரீ போன்று அழகுடையவளுமான தேவவர்ணிநீ என்பவளை அவருக்கு மணஞ் செய்வித்தார். விச்ரவஸும் ஸந்ததியை விருத்தி செய்வதற்காக அப்பெண்ணை மணந்தார். உசித காலத்தில் அவளிடத்தில் சிறந்த புத்திரன் பிறந்தான். அக் குழந்தையின் பிறந்த கால நிலையை நன்கு கணிசித்த பிதாமஹரான புலஸ்த்யர் இவன் பிற்காலத்தில் தனாதிபதியாக ஆவான் என்பதை உணர்ந்தார். பிறகு தேவர்கள் ரிஷிகளின் முன்னிலையில் - இந்தக் குழந்தை விச்ரவஸ்ஸுக்குப் பிறந்தபடியாலும், தந்தையைப் போல் உருவ ஒற்றுமை இருப்பதாலும் இவன் வைச்ரவணன் என்று பெயர் பெற்று விளங்குவான் என்று கூறினார்.

அந்த வைச்ரவணனும் தவம் செய்ய விரும்பிக் காநகமேகினாள், அங்கு அவன் ஆயிரம் வர்ஷ காலம், கடும் தவம் புரிந்தான். சில ஸமயம் தண்ணீரையே ஆஹாரமாகவும், சில ஸமயம் காற்றையே ஆஹாரமாகவும், சில ஸமயம் ஆஹாரமேதுமின்றியும் கடுந்தவம் புரிந்த அவனது தவத்தால் ப்ரீதியடைந்த ப்ரம்ஹதேவன் இந்த்ராதி தேவர்கள் புடைசூழ அவன் முன் தோன்றினார். அவனைப் பார்த்து ''குழந்தாய், உனது தவத்தினால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கொடுக்கிறேன். கேட்கவும்" என்று கூறினார். இதைக் கேட்ட வைச்ரவணன். ப்ரம்மதேவனை வணங்கி "ஸ்வாமிந் நான் லோக பாலகர்களில் ஒருவனாகவும் தனாதிபனாகவும் ஆக விரும்புகிறேன், அநுக்ரஹிக்கவும்'' என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மாவும் "அப்படியே ஆகக்கடவது, நானே நான்காவது லோக பாலகனை ஸ்ருஷ்டிக்க விரும்பியிருந்தேன். யமன்-இந்த்ர வருணன் ஆகிய மூவருடன் சேர்ந்து நீ நான்காவது-லோக பாலகனாக விளங்குவாய். தனத்திற்கு அதிபதியாகவும் ஆகக் கடவாய். மேலும் இந்த புஷ்பகம் என்னும் விமானத்தையும் உனக்கு அளிக்கிறேன். இது சூரியனைப் போல் ப்ரகாசமுடையது. இதில் அமாந்து கொண்டு தேவதைகளைப் போல் இஷ்டப்படி ஸஞ்சரிப்பாய்" என்று சொல்லி ஆசீர்வதித்து தேவர்களுடன் சென்று விட்டார்.

பிறகு ஸந்துஷ்டனான வைச்ரவணன் தன் தந்தையிடம் சென்றன். அவரை வணங்கி "பிதாவே! ப்ரம்மதேவன் நான் வேண்டியபடி வரத்தை அளித்து புஷ்பகம் என்ற விமானத்தையும் அளித்தார். ஆயினும் நான் வஸிப்பதற்கான ஸ்தானத்தை நியமிக்கவில்லை. ஆகையால் தேவரீரே எங்கு நான் வஸிக்கலாம், எனது வாஸத்திற்குத தகுந்த ஸ்தலம் எது? எனது வாஸத்தினால் இதரப்ராணிகளுக்கு இடையூறுகளிலிருக்கக் கூடாது, அப்படிப்பட்ட ஸ்தானத்தை நிர்தேசிக்க வேண்டும்'' என்று ப்ரார்த்தித்தான்.

அதற்கு விச்ரவஸ் - “வைச்ரவண! நீ வாஸம் செய்ய ஒரு ஸ்தலத்தைக் கூறுகிறேன் - தெற்கு ஸமுத்திரத்தின் கரையில் த்ரிகூடம்' என்றொரு பர்வதமிருக்கிறது. அந்த மலையின் உச்சியில் விசாலமானதும், தேவலோகமான அமராவதிக்கு ஒப்பானதுமான பட்டணமொன்று உள்ளது, அதன் பெயர்தான் லங்காபுரி என்பதாகும். அது முன்னொரு காலத்தில் தேவதச்சனான விச்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது. ராக்ஷஸர்கள் வஸிப்பதற்காகக் கட்டப்பட்ட அந்த நகரம் பொன் மயமான மதிள்களை உடையதும், வஜ்ர வைடூரியங்களிழைக்கப்பட்டதும், யந்த்ரரூபங்களான அஸ்த்ர சஸ்த்ரங்கள் நிறைந்து ரமணீயமாக விளங்கியது. அங்கு வஸித்து வந்த ராக்ஷஸர்களனைவரும் ஒரு ஸமயம் மஹாவிஷ்ணுவின் தாக்குதலுக்கு அஞ்சி அந்நகரத்தை விட்டுப் பாதாள லோகத்திற்குச் சென்று ஒளிந்தனர். இப்போது அந்நகரம் வஸிப்பவரின்றியிருக்கிறது. ஆகையால் நீ அங்கு சென்று சுகமாக வஸிப்பாயாக என்று கூறினார்.

அதைக் கேட்ட வைச்ரவணன் மிகவும் ஸந்தோஷமடைந்தான். அநேகமாயிரம் நைருதர்களுடன் கூட லங்காபுரியை அடைந்து அதில் வஸிக்கலானான். சீக்கிரமாகவே அவனுக்கு அங்கே ஸகல விதமான ஐஸ்வர்யங்களும் வேண்டிய அளவு உண்டாயின. தனாதிபதியான வைச்ரவணன் இவ்வாறு கடலால் சூழப் பெற்ற இலங்காபுரியில் நைருருதர்களானவர்க்கும் தலைவனாய் ஸந்தோஷமாக வாழ்ந்து வருமபோது அடிக்கடி புஷ்பகமேறி தேவர்களும் கந்தர்வர்களும் போற்றிப் புகழவும், அப்ஸரஸ்ஸ்த்ரீகள் ஆடிப்பாடி அழகு செய்யவும், கிரணங்கள் சூழப் பெற்ற சூரியனை விளங்குவனாகிதாய், தந்தையரை நாடி அடிபணிந்து அவரகமகிழச் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தான்.

நான்காவது ஸர்கம்

(குபேரனுக்கு முன்பே இலங்கையில் ராக்ஷஸர்கள் வஸித்து வந்தார்களென்று கூறக் கேட்ட ராமன் அது விஷயமாக ப்ரச்நம் செய்வதும். அவ்விருத்தாந்தமும் இதில் கூறப்படுகிறது.)

இப்படி அகஸ்த்தியர் கூறக்கேட்ட ராமன் மறுபடியும் அகஸ்த்தியரைப் பார்த்து- ஸ்வாமிந் இந்த லங்காபுரி, முன்பும் அரக்கர் வசமிருந்தது என்பதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரிய முண்டாகிறது. ஏனெனில், அரக்கர் குலம் புலஸ்த்யரை மூலமாக உடையது என்று மட்டுமே நானறிவேன். இப்போது வேறு விதமாகவும் உள்ளது அறியப்படுகிறது. யார் அந்த அரக்கர்கள்? அவர்கள் ராவணன் கும்பகர்ணன்-ப்ரஹஸ்தன்-விகடன் இந்த்ரஜித் இவர்களைக் காட்டிலும் பலசாலிகளா? அவர்களுக்கெல்லாம் மூலருபுஷன் யார்? அவனுடைய ஸாமர்த்யம் எப்படிப்பட்டது? அவர்கள் எந்த விதமான. தவற்றைச் செய்து மஹாவிஷ்ணுவால் துரத்தப்பட்டனர்? இவைகளை விஸ்தாரமாகக் கூறவும், என்று வேண்டினார்.

ஸ்ரீராகவனுடைய இந்த வேண்டுதலைக் கேட்ட அகஸ்த்தியர் புன்சிரிப்புடையவராய் பின்வருமாறு கூறினார். ரகுநந்தன! ஆதிகாலத்தில் மஹாவிஷ்ணுவின் நாபீகமலத் துதித்த ப்ரம்மா முதன் முதலாக தண்ணீரைப் படைத்தார். அதைப் பாதுகாப்பதற்காக அநேகம் ப்ராணிகளையும் படைத்தார். அவ்வாறு படைக்கப் பட்ட ப்ராணிகள் மிகுந்த பசிதாக முடையவர்களாகி தங்களைப் படைத்த பிரமனிடஞ் சென்று, நாங்கள் செய்ய வேண்டிய கார்யம் யாது? என்று வினவினர். ப்ரம்மாவும் அவைகளை நோக்கிப் புன்னகையுடன் -ப்ராணிகளே! நீங்கள் இந்த ஜலத்தை யத்நத்துடன் - ஜாக ரூகர்களாக ரக்ஷிக்கக் கடவீர்'' என்று கூறினார். இதைக் கேட்ட ப்ராணிகளிற் சிலர் பசியில்லாதவர்கள் ரக்ஷாம-ரக்ஷிக்கிறோம் என்றும் கூறினர். இதைச் செவியுற்ற பிரமதேவன் - உங்களில் யார் ''ரக்ஷிக்கிறோம்'' என்றீர்களோ அவர்கள் ராக்ஷஸர்கள் ஆகுக என்றும், எவர் பக்ஷிக்கிறோம் என்றீர்களோ அவர்கள் யக்ஷர்களாகுக என்று கூறினார். அவர்களுமப்படியே ஆயினர். (இங்கு பக்ஷாம் என்றவர்கள் பக்ஷர்களாகத்தானே சொல்லப்பட வேண்டும், எப்படி யக்ஷர்களெனப்படுகிறார்கள் என்கிற சங்கை உண்டாகலாம்.இங்கு- ச்லோகம் பின்வருமாறு. ஜக்ஷாம இதி யை ருக்தம் யக்ஷா ஏவ பவந்து வ:, யை: ஜக்ஷாமேத்யுக்தம் தே யக்ஷா பவந்து; . வர்ண வ்யத்யய: ஆர்ஷ:'' ஜ என்கிற எழுத்தின் ஸ்தானத்தில் "ய" என்று மாறுதல் ரிஷிப்ரோக்தம்'' என்று ஸ்ரீ கோவிந்த ராஜீய வ்யாக்யாநம், யஜயோர பேதஸ்ய தாந்த்ரிகத்வாத் யக்ஷேதி ஜக்ஷணே இத்யுக்தி, என்று மொரு வ்யாக்யாநம்)

அந்த ராக்ஷஸர்களில் ஹேதி -ப்ரஹேதி என்று இரு ராக்ஷஸர்கள் ஸஹோதரர்களாக இருந்தனர். அவ்விருவரும் மது கைடபாஸுரர்களுக் கொப்பானவர்களாக விளங்கினர். சத்ருக்களை அழிப்பதில் ஸமர்த்தர்களாகவுமிகுந்தனர். ப்ரஹேதி என்பவன் தர்மிஷ்டனாகவுமிருந்தான். அவன் தபஸ் செய்ய நினைத்துக் கானகம் சென்றான். ஹேதி என்பவன் இல்லறத்தை விரும்பி யமனுடைய ஸஹோதரியான பயை என்பவளை மணந்து கொண்டான். தானே விரும்பி மணந்து கொண்டவளோ பெயருக்கேற்ப பயங்கரியாகவே இருந்தான். அந்த ஹேதி என்கிற அரக்கன் பயையினிடத்தில் விதயுத்கேசன் என்கிற புத்ரனை உண்டு பண்ணினான். அந்த புத்ரனும் சூரியன் போன்ற தேஹ காந்தியை உடையவனாயும், ஜலமத்யத்தில் உருப் பெரும் மேகம் போலவும் வளர்ந்து வந்தான். யௌவனப் பிராயத்தை அடைந்தவளவில் பிதாவான ஹேதி அவலுக்கு மணம் செய்விக்கக் கருதினான். ஸந்த்யை என்பவளின் பெண்ணான *ஸாலகடங்கடை"யை அவனுக்கு மனைவியாக்கினான். அவளை மணம் புரிந்து கொண்ட வித்யுத்கேசன் அவனுடன் இந்த்ராணியுடன் இந்த்ரன் மகிழ்வது போல மகிழ்ந்தான். சில காலங் கழிந்ததும் ஸாலகடங்கடை கர்ப்பமுற்றாள். ப்ரஸவ காலம் நெருங்கியதும் மந்தர மலைச் சாரலை யடைந்து அங்கே ப்ரஸவித்தாள். அழகான ஆண் குழந்தையாகப் பிறந்த அதை, அங்கேயே விட்டு விட்டு, பர்த்தாவுடன் இன்ப சுகமனுபவிக்கச் சென்று விட்டாள்.

அவளால் விடப்பட்ட அந்த சிசு சரத்கால மேகம் போன்ற சோதியை உடையதாகி வாயில் விரலை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது. ஆகாசத்தில் வ்ருஷபாரூடராய் பார்வதீதேவியுடன் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இக்குழந்தையின் அழுகையைக் கேட்டு மனமிரங்கியவராய். அக்குழந்தையின் தாயாருக்கு அப்போது என்ன வயதோ அதே வயது அந்தக் குழந்தைக்கு அப்போதே உண்டாக வேண்டுமென்றும், தேவர்கள் போல அக்குழந்தை என்றும் மரணமில்லாதிருக்குமாறும் அநுக்ரஹித்து, பின்னும் பார்வதீ தேவியின் ப்ரீதிக்காக ஆகாசத்தில் எழுந்து செல்லக்கூடிய பட்டணமொன்றையும் அளித்தார். அப்போது பார்வதியும் "ராக்ஷஸ ஸ்த்ரீகள் கருவுற்ற உடனேயே கர்ப்பம் முற்றி ப்ரஸவ முண்டாகவும், ப்ரஸவித்த போழ்தே குழந்தை தாயின் வயதிற்குச் சரியான வயதுள்ளதாகவும் ஆகவேண்டும்” எனவும் அரக்கர்களுக்கு வரமளித்தாள்.

சுகேசன் என்று பெயர் பெற்ற அவ்வரக்கன் இவ்வாறு பரமசிவ தம்பதிகளருள் பெற்று, அதனால் அஹங்காரம் கொண்டு, வானவீதியில் எழுந்து செல்லும் தனது நகரத்துடனே தேவேந்த்ரன் போல் எங்கும் ஸஞ்சரிக்கலாயினன்.

ஐந்தாம் ஸர்க்கம்

[சுகேசனின் விவாகம், அவனது புத்ரோத்பத்தி, அவர்களின் லங்காப் ரவேசம் முதலியன கூறப்படுகின்றன]

சிவபெருமானருள் பெற்றவனும் தர்மிஷ்டனுமான சுகேசனுக்கு, விச்வாவஸுக் கொப்பான க்ராமணி என்னும் கந்தர்வன், மஹாலக்ஷ்மி போன்ற தேவவதீ என்கிற தனது பெண்ணைக் கன்யகாதானம் செய்து கொடுத்தான். அவளும் தனமற்றவன் மிகுந்த தனத்தை அடைந்தது போல் அவனை அடைந்து மிகவும் ஸந்தோஷத்தை அடைந்தாள். சுகேசனும் அவளை அடைந்து மிகவும் மகிழ்ந்தான் இவ்விருவர். களுக்கும் மூன்று குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் மால்யவான், சுமாலீ, மாலீ என்று அழைக்கப்பட்டனர். இம்மூவரும் மிகுந்த பலசாலிகளாகவும். முக்கண்ணன் (சிவன்) போன்ற பராக்ரமசாலிகளாகவும், மூவுலகங்களைப் (பூர்-புவ:-ஸுவ:) போல் ப்ரஸித்தர்களாகவும், மூன்று அக்கினி (கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி) களைப் போல் தேஜஸ்விகளாவும்,மூன்று மந்த்ரங்களைப் (மூன்று வேதங்கள் அல்லது- மந்த்ர சக்தி, ப்ரபு சக்தி, உத்ஸாஹ சக்தி) போல் ஸமர்த்தர்களாகவும், மூன்று வ்யாதிகளைப் (வாதம்,பித்தம், ச்லேஷ்மம்) போல் பயங்கரர்களாகவும் வளர்ந்து வந்தனர்.

அந்த மூவரும் தனது தகப்பனாருக்கு ஈச்வரனுடைய அநுக்ரஹம் பெறக் கருதி மேருமலைக்குச் சென்று கடுந்தவம் புரிந்தனர். அவர்கள் செய்த தவத்தைக் கண்டு ஸகலமான ப்ராணிகளும் நடுங்கின. ஏன், மூவுலகங்களுமே நடுங்கின.

அவர்களுடைய கடும் தவத்தால் ப்ரீதியடைந்த நான்முகன் இவர்கள் முன் தோன்றி, வேண்டும் வரங்களைப் பெறும்படி அருளினார்.

அவர்களும் நான்முகனை வலம் வந்து வணங்கி, "ஸ்வாமிந்! எங்களுடைய தவத்தினால் தேவரீர் ப்ரீதியடைந்தவராயின் நாங்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாகவும், சத்ருக்களை வெல்லச் சக்தியுள்ளவர்களாகவும். சிரஞ்ஜீவி களாகவும், மிகுந்த பராக்ரமமுள்ளவர்களாகவும், நாங்கள் ஒருவர்க்கொருவர் அன்பு மாறாதவர்களாகவும் விளங்கும்படி வரமளிக்க வேண்டும்" என ப்ரார்த்தித்தனர். பிரம்மாவும் 'அவ்வாறேயாகுக' என்று வரமளித்து, தாம் வந்தபடியே இந்த்ரன் முதலான தேவர்களுடன் சென்றுவிட்டார்.

ப்ரம்மாவினால் அளிக்கப்பட்ட வரத்தினால் மிகவும் கர்வமடைந்த அம் மூவரும் எவரிடத்திலும் பயங் கொள்ளாமல், தேவர் அசுரர் ஆகிய அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினர். (ஸுராஸுராந் ப்ரபாதந்தே ) அவர்களால் துன்புறுத்தப் பட்ட தேவர்கள், சாரணர்கள், ரிஷிகணங்கள் ஆகிய அனைவரும் தம்மை ரக்ஷிப்பவரின்றி வருந்தலாயினர்.

ஹே ராகவ! பிறகு அவ்வரக்கர்கள் சில்பிகளுள் ச்ரேஷ்டனான விச்வகர்மாவை அழைத்து, மிகுந்த ஸந்தோஷத்துடன்,' "விச்வ கர்மாவே! பெரியோர்கள், பலசாலிகள். ச்ரேஷ்டர்கள், மஹான்கள் இவர்களுக்குத் தக்கபடி வாஸ ஸ்தானத்தை நிர்மாணம் செய்வதில் நீரே ஸமர்த்தரென்று யாம் அறிவோம். எனவே நீர் நாங்கள் வாஸம் செய்வதற்குத் தகுந்தபடியாக ஹிமயமலையிலோ மேருமலையிலோ மந்தர பர்வதத்திலோ உமது புத்தி ஸாமர்த்யத்தை ப்ரயோகித்து உயர்ந்த ஸ்தானத்தை (க்ருஹத்தை) நிர்மாணம் செய்யவும் அந்த வாஸ ஸ்தானமானது கைலாஸத்திற் கொப்பானதாக இருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர் .

இப்படி ஆஜ்ஞாபிக்கப்பட்ட விச்வகர்மா அவர்களைப் பார்த்து. 'தலைவர்களே! தெற்கு ஸமுத்திரக் கரையிலே த்ரிகூடம்' என்றொரு பர்வதம் இருக்கிறது அம்மலையின் சிகரத்தின் மத்யத்தில் பக்ஷிகளாலும் உட்புக முடியாதபடியுள்ளதும், ஈட்டி முதலிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட மதிள்சுவரை உடையதாயும் உள்ள நகரமொன்று முன்பே என்னால் இந்திரனுடைய உத்தரவினால் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. அதன் பெயர் இலங்கை என்பதாகும். அது முப்பது யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உள்ளது. அது ஸ்வர்ண மயமான மதிள்களையுடையதாயும். ரத்தினங்களிழைக்கப்பட்ட தோரணங்களை உடையதாகவும் விளங்குகிறது. சத்துருக்களை அழிப்பதில் ஸமர்த்தர்களே! நீங்கள் அங்கே சென்று, உங்களது படைகள் சூழ வாழ்ந்து வாருங்கள். எப்படித் தேவேந்திரன் தேவலோகமான அமராவதியில் குறைவற வாழ்கிறானோ அவ்வாறே நீங்களும் இலங்காபுரியில் வாழலாம்” என்று கூறினான்.

இவ்வாறான விச்வகர்மாவின் வார்த்தையைக் கேட்ட அரக்கர்கள் ஆயிரக் கணக்கான பந்துமித்ரர்களுடன் குடிபுகுந்து வஸிக்கலாயினர்.

ஹே ராகவ! இப்படி இவர்கள் அங்கு வஸிக்கும் காலத்தில் நர்மதை என்ற பெயரையுடைய கந்தர்வ ஸ்திரீ, தனது அழகிற் சிறந்த மூன்று பெண்களையும் மூன்று ராக்ஷஸர்களுக்கும் முறைப்படி விவாஹம் செய்வித்தாள். அம் மூன்று பெண்களும். ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி இவர்களுக்கொப்ப அழகு வாய்ந்தவர்கள். விவாஹம் நடைபெற்ற தினம் உத்தரபல்குனீ நக்ஷத்திரம் கூடிய சுபதினமாயிருந்தது. மூவரும் அழகிய மனைவியரை அடைந்து அப்ஸரஸ்திரீகளுடன் கூடி மகிழும் தேவர்களைப் போல் கூடிக் களித்தனர்.

மூத்தவனான மால்யவானுக்கு அவனுடைய மனைவியான சுந்தரியினிடத்தில் வஜ்ரமுஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், யஜ்ஞகோபன், மத்தன், உன்மத்தன் என்கிற புதல்வர்களும், அனலை என் று பெயருடைய ஒரு பெண்ணும் பிறந்தனர். சுமாலியின் மனைவியான கேதுமதீ என்பவள் ப்ரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகார்முகன், தூராக்ஷன், தண்டன், ஸுபார்ச்வன். மஹாபலன், ஸம்ஹ்ராதி. ப்ரகஸன், பாஸகர்ணன் என்கிற புதல்வர்களையும், ராகா-புஷ்போத் கடா - அழகிய இடையையுடையவளான கைகஸீ, கும்பீநஸீ என்கிற கன்யகைகளையும் பெற்றாள். மாலிக்கு அவன் மனைவியான வசுதை என்பவளிடத்தில் அநலன் அநிலன், ஹரன், ஸம்பாதி என்று நான்கு புதல்வர்கள் பிறந்தனர், அந்த நால்வரே, விபீஷணனுடைய மந்த்ரிகளாக விளங்கினார்கள்.

இவ்வாறு மூன்று ராக்ஷஸர்களும் பல மக்களைப் பெற்ற பின்னர் தமக்கு உள்ள பலத்தினால் கர்வம் கொண்டவர்களாய், தேவர்களையும் ரிஷிகளையும் ஹிம்ஸித்துக் கொண்டும், யாகங்களை அழித்துக் கொண்டும் உலகில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

ஆறாம் ஸர்க்கம்

[அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பரமசிவனைச் சரண மடைவதும், அவர் நாராயணனைச் சரணமடையும்படி கூறுவதும் முதலியன.)

இப்படி அரக்கர்களால் துன்பமடைந்த தேவர்களும் ரிஷிகளும் மிகவும் பயந்தவர்களாய், மஹேச்வரனான சங்கரனைச் சரணமடைந்து அஞ்ஜலிஹஸ்தர் களாய், 'காமனை அழித்தவனே! முப்புரமெரித்தவனே! முக்கண்ணனே! பிரம்மதேவனின் வரத்தினால் கர்வமடைந்த சுகேசபுத்திரர்களால் நாங்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறோம். எங்கள் வாஸஸ்தானங்களெல்லாம் அபஹரிக்கப்பட்டு அழிக்கப் பட்டன. ஸ்வர்க்கலோகத்திலிருந்து தேவர்கள் விரட்டப் பட்டனர். அங்கு அரக்கர்கள் கொட்டமடிக்கின்றனர். மேலும் அவர்கள், 'நானே விஷ்ணு, நானே ருத்ரன், பிரமனும் நானே. தேவேந்திரனும் யமனும், வருணனும், சந்திரனும், சூர்யனுங்கூட நாங்களே' என்றெல்லாம் கூறித் திரிகின்றனர். ஆகவே பயந்தவர் களான எங்களுக்கு அபயமளிக்கவும். சிவனான (மங்கள ஸ்வரூபனான) தேவரீர் அசிவனாக (ரௌத்ரரூபியாக) ஆகி அவர்களை அழிக்க வேண்டும்" என்று தழுதழுத்த குரலில் வேண்டி நின்றனர்.

இப்படிப் பிரார்த்திக்கப்பட்ட கபர்தியானவர் அவர்களைப்பார்த்து 'ஹே தேவரிஷிகளே! நான் அவர்களை வதம் செய்யச் சக்தியற்றவன். ஏனெனில், அவர்கள் என்னால் கொல்லப்படக் கூடாதவர்களாக உள்ளனர். அப்படி ஒரு வரம் என்னால் சுகேசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்களை வெல்லும் உபாயத்தைக் கூறுகிறேன். நீங்களெல்லோரும் இப்படியே ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் அடையுங்கள். அவர் அவர்களை ஸம்ஹரித்து உங்களை ரக்ஷிப்பார்'' என்று கூறினார்.

அதைக் கேட்ட தேவரிஷிகள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் சென்று வணங்கித் துதித்து, "ஹே சங்க சக்ர கதாபாணியே! சுகேசனின் புதல்வர்கள் மூவராலே நாங்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறோம். த்ரிகூட மலை மீதுள்ள லங்காபுரியை வாஸஸ்தானமாகக் கொண்ட அவர்களை நீர்தாம் ஸம்ஹரித்து எங்களை ரக்ஷிக்க வேண்டும். உம்மைத் தவிர வேறு யார் உள்ளனர் எங்களை ரக்ஷிக்க? 'தேவரீர் சக்ராயுதமேந்தி அவர்களை யமனுக்கு அதிதிகளாக அனுப்பி வைக்கவும். இப்படி அவர்களை ஸம்ஹரித்து எங்களை ரக்ஷிக்கவும். எங்களுடைய பயத்தைப் போக்கவும்' என்று வேண்டினர்.

சத்ருக்களுக்குப் பயத்தைக் கொடுப்பவனும், சரணமடைந்தவர்களுக்கு அபயத்தைக் கொடுப்பவனுமான ஸ்ரீமந்நாராயணன், தேவர்களுக்கு அபயமளித்து தேவர்களே! நீங்கள் இனி வருந்த வேண்டாம். சுகேசனைப் பற்றியும் அவனது புதல்வர்களைப் பற்றியும் நான் நன்கு அறிந்துள்ளேன். வரம்பு மீறி அட்டூழியம் செய்யும் அவர்களை நான் நிச்சயமாக தண்டிக்கிறேன். நீங்கள் இனிப் பயமற்றவராக இருங்கள்’ என்றார். நாராயணனிடமிருந்து அபயம் பெற்ற தேவரிஷிகன் ஸந்தோஷத்துடன் தம்தம் இருப்பிடம் சென்றனர்.