வெள்ளி, 30 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 17

இருபத்தெட்டாவது ஸர்க்கம்

[பிறகு ஒரு ஸமயம் ராவணன், மேற்கு ஸமுத்திரத்தில் ஒரு த்வீபத்தில் கபிலரைக் கண்டது. அவரை யுத்தத்திற்கு அழைப்பது,அவரால் அடிபட்டு விழுவது, பிறகு அவரைத்தேடி பாதாள லோகம் செல்வது முதலியன இதில் உள்ளன.]

பின்பொரு ஸமயம் ராவணன் தனது மந்திரிகளுடன் யுத்த மதம் கொண்டவனாய் மேற்கு ஸமுத்திரத்தின் பக்கமாகச் சென்றான்.  அங்குள்ள ஒரு தீவில் அக்கினிக்கொப்பான தேஜஸ்ஸை உடையவரும், உருக்கிய தங்கம் போன்ற நிறமுடையவரும், ஊழிக் காலத்தீயினுக்கு நிகரானவரும், தேவர்களில் இந்திரன் போன்றவரும். க்ரஹங்களில் சூர்யன் போலவும், காட்டு மிருகங்களுள் ஸிம்ஹம் போலவும், யானைகளுள் ஐராவதம் போலவும், மலைகளுள் மஹாமேரு போலவும் உள்ள ஒரு புருஷனைக் கண்டான்.

          மிகவும் கம்பீரமாகவும் மிகுந்த பாஹுபலமுள்ளவராகவும் காணப்பட்ட தன்னந்தனியரான அந்த மஹாபுருஷர் அருகில் சென்ற ராவணன், “ என்னுடன் போர் புரிய வருக" என்று கர்ஜித்தான். அவனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அந்த மஹாபுருஷன் சிறிதும் கலக்கமின்றித் தமது கையினால் விளையாட்டாக ஓர் அடி அடித்தார்.  அந்த அடியைத் தாங்க முடியாத ராவணன் மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தான். ராவணன் கீழே சாய்ந்ததும் மற்றவர்களை அதட்டி ஓடச் செய்து, பத்மமாலையை அணிந்த அந்த மஹாபுருஷர் மலைபோல அசைந்து சென்று பாதாளத்தை அடைந்தார்.

          சிறிது நேரம் கழிந்தவாறே ராவணன் தன்னிலையை அடைந்து மந்திரிகளைப் பார்த்து, "இங்கு நின்ற புருஷன் எவ்வழிச் சென்றான்?'" என வினவினான், அவர்கள் வாயிலாக அந்தப்புருஷன் பாதளலோம் சென்றதை அறிந்து, வேகத்துடன் உருவிய கத்தியைக் கைக்கொண்டவனாய், பிரம்மவரத்தினால் கர்வமுற்றவனாகிப் பாதாள லோகம் சென்றான். அங்கு அவன், நீலமலை போன்றவர்களும், தோள்வளைகளை அணிந்தவர்களும், செஞ்சந்தனம் பூசியவர்களும், அநேக வித பூஷணங்களை உடையவர்களும்; நான்கு கைகளை யுடையவர்களும், முன்பு கண்ட புருஷளைப் போன்ற உருவத்தை உடையவர்களுமான மூன்று கோடிப் புருஷர்களைக் கண்டான். அவர்களைக் கண்டதும் ராவணனுடைய மயிர்கள் குத்திட்டு நின்றன. அவர்கள் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தனர். அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் தேடி வந்த புருஷன் எங்கு உள்ளான் என்று அறியும் பொருட்டு அங்கிருந்து மறுபுறம் சென்றான்.

          " அங்கோர் இடத்தில், பாம்பணையில் பள்ளி கொண்டவனும் உயர்ந்த கௌஸ்துபமணியை அணிந்தவனும், நெருப்பால் (ஜ்வாலையால்) சூழப் பட்டவனுமான ஒரு புருஷனைக் கண்டான். அவனருகில் உயர்ந்த மாலையை அணிந்தவனும், அநேக ஆபரணங்களால் அலங்க்ருதையாயும், மூவுலகங்களுக்கும் அணிகலம் போன்று விளங்குபவளும் விசிறியைக் கையிற்கொண்டு அந்தப் புருஷனுக்குப் பணிவிடை புரிகிறவளுமான ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் கண்டான்.

          மஹாலக்ஷ்மியைக் கண்டதும் ராவணன் மதிமயக்கம் கொண்டவனாகி, அந்தத் தேவியை அபஹரிக்க எண்ணி அருகிற் சென்றான். இவனது கெடுமதியை அறிந்த பரமபுருஷன், அவனை நோக்கிக் குலுங்க நகைத்தான். ராவணன் அந்தப் புருஷனது தேஜஸ்ஸினால் தஹிக்கப் பட்டு. அவனது மூச்சுக்காற்றினால் தூக்கியெறியப்பட்டு வேரற்ற மரமெனக் கீழே சாய்ந்தான். ஒரு முஹுர்த்த காலஞ் சென்றபின் தெளிந்தெழுந்த ராவணன், அந்தப் புருஷனிடம் பயந்து, அகங்குலைந்து, "ஹே புருஷ! இவ்வளவு உயர்ந்த சௌர்யமும் தேஜஸ்ஸும் உடையவரான தேவரீர் யாவர்? கருணை கூர்ந்து அருளுக" என வேண்டினான்.

          அந்த மஹாபுருஷன் அவனை நோக்கி, ராக்ஷஸனே! நீ இப்போதே என் கையால் கொல்லப்பட விரும்புகின்றனையா?"எனக் கேட்டான். ராவணன் அந்தப் புருஷனை நோக்கி, “ ஸ்வாமி! நான் பிரம்மதேவனிடம் பெற்ற வரத்தின் பெருமையால் மரணமடைந்தேன் அல்லேன், எனக்கு இணையான ஒருவன் தேவர்களிலும் இதுவரை பிறந்த வனல்லன். இனியும் பிறக்கப்போவதுமில்லை. ஆதலால் எனக்கு எவராலும் மரணம் உண்டாகாது. அப்படி ஒருகால் மரணம் ஏற்படினும், அது தேவரீராலேயே ஏற்படும்.. வேறொருவரால் நேரிடாது. தேவரீரால் எனக்கு மரணம் ஏற்படுமாயின் அது எனக்குப் புகழும் பெருமையுமாகும்" என்று மொழிந்தான். இப்படி அவன் கூறியபோது, ராவணன், அந்த மஹாபுருஷனது திருமேனியில் மூவுலகங்களும் ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துக்கள்,அச்வினீ தேவர்கள், சித்தர்கள், யமன் குபேரன், கடல்கள் மலைகள் அக்னிகள் வேதங்கள், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள் சூரிய சந்திரர்கள் முனிவர்கள், கருடன், தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலியவர்களும், சூக்ஷ்ம ரூபங்களாக இருப்பதைக் கண்டு, அந்தப்புருஷன் ஸாக்ஷாத், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே என்றும், ஆங்கு அவன் கண்ட மூன்று கோடி புருஷர்களும் நித்யஸூரிகளே என்றும் தேர்ந்து உடனே இலங்கைக்குத் திரும்பினான் என்று அகஸ்திய முனிவர். கூறியதும், ராமன் அகஸ்த்யரைப் பார்த்து, ''ஸ்வாமி! உண்மையிலேயே அந்தப் புருஷன் எவன்? பாம்பணையான் யாவன்?" என வினவினார்.

          அதற்கு அகஸ்தியர், "ராம! பரம புருஷனான ஸ்ரீமந்நாராயணனே தீவில் நின்றவன். கபிலன் எனப் புகழ் பெற்றவன். அவனே பாம்பணையானாகவும் காணப்பட்டவன்" என்றார்.

          இதைக் கேட்ட ஸ்ரீராமனும் கூட இருந்தவர்களும், ஆச்சரியம், ஆச்சரியம் எனக் கொண்டாடினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் இதைச் செவியுற்று, "முன்பு நடந்தவற்றை இப்போது மறுபடியும் சொல்லக் கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என்று கூறினான்.

புதன், 28 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 16

இருபத்தாறாவது அத்தியாயம்

[ராவணன் சந்திரலோகம் செல்லும் வழியில் மாந்தாதாவுடன் போர் புரிந்தது.)

          அன்றிரவை மேருமலையில் கழித்த ராவணன் மறு நாள் காலையில் சந்திர லோகம் செல்லலானான். வழியில் ஒரு மஹாபுருஷன் உயர்ந்த மாலைகளை அணிந்தவனாகவும், திவ்யமான சந்தனத்தைப் பூசியவனாகவும், அப்ஸரஸ்த்ரீகளால் சூழப்பட்டவனாகவும், உயர்ந்த ரதத்தில் அமர்ந்தவனாகவும் வானவீதியில் செல்வதைக் கண்டான். அவனைக் கண்டு ஆச்சரியமடைந்த ராவணன், அங்கு வந்த "பர்வதா’ என்ற முனிவரை வணங்கி, ''ஸ்வாமி! இவன் யார்?'' என வினவினான், பர்வதர் - ராவண! இவன் உயர்ந்த தவத்தைச் செய்துள்ளான். புண்யலோகங்கள் இவனால் ஜயிக்கப்பட்டுள்ளன. இவன் பிரம்மதேவனைத் தவத்தால் மகிழ்வித்து அவனது அருளால் மோக்ஷலோகத்திற்குச் செல்கிறன் என்றார். அதே ஸமயம் அங்கு மற்றெரு ரதத்தில், மிக்க காந்தியுள்ளவனாகவும், ஸுவர்ண ஆபரணங்களை அணிந்தவனாயும், அனேக வாத்யகோஷங்களுடன் செல்கிறவனைக் கண்டு, “தேவரிஷியே! இவன் யாவன்?” எனக் கேட்டான். அதற்குப் பர்வதர் -- "இவன் மஹாவீரன். யஜமான விச்வாஸமுள்ள இவன் யுத்தத்தில் பல வீரர்களைக் கொன்று வீர மரணமடைந்தவன், இவன் ஸ்வர்க்க லோகம் செல்கிறான்'' என்றார். இவற்றைக் கேட்ட ராவணன் ---“மகரிஷியே! இவை இருக்கட்டும். இங்கு அனேகம் பேர்கள் செல்கிறார்களே, இவர்களில் யாராவது என்னோடு யுத்தம் செய்பவர்களாக இருக்கிறார்களா? சொல்லும்'' என்றான். அதற்கு அவர், "ராவண! இவர்கள் அனைவரும் செய்த புண்யத்தின் பலனை அனுபவிக்க ஸ்வர்க்கம் செல்கின்றனர். உன்னுடன் போர் புரியமாட்டார்கள். நீ யுத்தத்தை விரும்புகிறபடியால் ஒன்று சொல்கிறேன், கேள் - ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியான மாந்தாதா என்ற அரசன் ஒருவன் இருக்கிறான் அவன் மகாவீரன் அவன் உன்னோடு போர் செய்யத் தக்கவன்'' என்றார்.

          இதைக் கேட்டதும் ராவணன், "அப்படியா? அவன் எங்கேயிருக்கிறான்? உடனே அவனிருப்பிடம் செல்கிறேன். சீக்கிரமாகக் கூறும்' என்றான். அதற்குப் பர்வதர், 'ராவண! யுவனாச்வனின் குமாரனான மாந்தாதா இதோ உயர்ந்த ரதத்தில் செல்கிறவன்தான். ஸமுத்ர பர்யந்தங்களான ஏழு த்வீபங்களையும் ஜயித்து 'இப்போது ஸ்வர்க லோகத்திற்குச் செல்லுகிறானென்று மாந்தாதாவைச் சுட்டிக் காட்டினார்;

          பிரம்மதேவனின் வர பலத்தால் கர்வம் கொண்ட ராவணன் உயர்ந்த ரதத்தில் அமர்ந்து செல்பவனும், மகாவீரனும், ஸ்வர்ண வஜ்ர வைடூர்ய முக்தாமணி கணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான மாந்தாதாவின் எதிரில் சென்று, ''என்னுடன் யுத்தம் செய்" என்று கூறினான். இதைக் கேட்ட மாந்தாதா பெரிதாகச் சிரித்து "உயிரின்மீது உனக்கு ஆசை இல்லையேல் என்னோடு யுத்தம் 'செய்'' என்றான்.

          மாந்தாதாவின் இந்த வார்த்தையைக் கேட்ட ராவணன் “வருணன் குபேரன் யமன் :இவர்களுடன் போர் புரிந்து நான் கொஞ்சமும் வருத்தமடையவில்லை. அப்படியிருக்க மானுடனான உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னிடம் எனக்கு என்ன பயம்?'” என்று கூறி, தன் மந்திரிகளை மாந்தாதாவுடன் போரிடச் செய்தான். அவர்கள் மாந்தாதாவின் மீது அநேக பாணங்களை பொழிந்தனர். அவற்றை மாந்தாதா தடுத்து, அவர்கள் மீது கூரான நாராசங்களைப் பிரயோகித்து ஹிம்ஸித்தான். அவர்கள் அனைவரும் தீயினால் தஹிக்கப்பட்ட விட்டிற்பூச்சிகள் போலக் கஷ்டப்பட்டனர்.

          பிறகு மாந்தாதா ஐந்து தோமரங்களால் ராவணனை அடித்தான். அது முன்பு ஸ்கந்தன் க்ரௌஞ்சாஸுரனை அடித்தது போலிருந்தது. உடனே ஓர் உலக்கை என்ற ஆயுதத்தை எடுத்து சுழற்றி ராவணன் மீது ப்ரயோகித்தான். அதனால் அடிக்கப்பட்ட ராவணன் மயங்கி இந்த்ரத்வஜம் போல் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். அதைக் கண்ட மாந்தாதா சந்திர கிரணங்களால் தொடப்பட்ட ஸமுத்ரஜலம் போல ஆனந்தக் கூத்தாடினான்.

          ராக்ஷஸர்கள் அனைவரும் மயங்கிய ராவணனைச் சூழ்ந்து நின்றனர் வெகு நேரங் கழித்து ஆச்வாஸப்படுத்தப்பட்ட ராவணன் தெளிந்து எழுந்தான்.

          பிறகு கோபம் கொண்ட ராவணன் அநேக பாணங்களால் மாந்தாதாவை அடித்துப் பீடித்தான். அவனது தேரையும் அழித்தான், உடனே மாந்தாதா வேறொரு ரதத்தில் அமர்ந்துகொண்டு, ராவணன் மீது சக்த்யாயுதத்தைப் பிரயோகித்தான். ராவணன் அதைச் சூலத்தினால் அழித்தான். அத்துடனல்லாமல் ராவணன் யமனிடமிருந்து பெறப்பட்ட நாராசத்தினால் மாந்தாவைக் கடுமையாக அடித்தான். அடிபட்ட மாந்தாதா மூர்ச்சையடைந்து தேர்த்தட்டில் விழுந்தான். அதைக் கண்ட அரக்கர்கள் ஸந்தோஷ ஆரவாரம் செய்தனர். ஒரு முஹூர்த்த காலத்தில் மூர்ச்சை தெளிந்த மாந்தாதா ராவணனை பாணவர்ஷங்களால் மறைத்தான். இருவருக்கும் மறுபடி மிக்க கோரமான யுத்தம் நடைபெற்றது. பிறகு கோபம் கொண்ட ராவணன், பிரம்மாஸ்திரத்தை மாந்தாதாவின் மீது பிரயோகிக்க நினைத்து, தநுஸ்ஸில் ஸந்தானம் செய்தான். அதைக் கண்ட மாந்தாதா அதற்குப் பிரதியாக பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்க எடுத்தான். மிக்க பயங்கரர்களான இருவரும், பயங்கரங்களான இரு அஸ்த்ரங்களையும் பிரயோகிக்கக் கைக்கொண்டவளவில் மூவுலங்களும் நடுங்க ஆரம்பித்தன! தேவர்களும் நாகர்களும் 'அழிந்தோம்' என அஞ்சினர். இந்தக் கொடுமையை ஜ்ஞானபலத்தினால் கண்டறிந்த காலவரும் புலஸ்த்யரும் அங்கு வந்து அவ்விருவரையும் சாந்தப்படுத்தி அனுப்பினார்கள். இருவரும் சாந்தர்களாய் வந்த வழியே திரும்பினர்.

இருபத்தேழாவது ஸர்க்கம்

          [ராவணன் சந்திரமண்டலம் செல்வதும், அங்கே சந்திரனுடைய சீதகிரண ஸ்பர்சத்தை ஸஹிக்க முடியாமல் அவனது மந்திரிகள் பயப்படுவதும், சந்திரனோடு போரிட நினைத்த ராவணனை பிரமன் நல்லது கூறித் தடுப்பதும்.)

          புலஸ்த்ய காலவ ரிஷிகளால் ஸமாதானப்படுத்தப்பட்ட ராவணன், முதலாவதான வாயுமார்க்கத்தை யடைந்தான். அது பத்தாயிரம் யோஜனை உயரமுள்ளது. அதில் பரமஹம்ஸர்கள் குடி கொண்டுள்ளனர். புஷ்பக விமானத்தின் மூலம் அதைக் கடந்து இரண்டாவதான வாயு மார்க்கத்தையடைந்தான். அங்கு ஆக்னேயம், பக்ஷஜம் பிராம்மம் என்று மூன்று விதங்களான மேகங்கள் ஸஞ்சரிக்கின்றன. அதுவும் பத்தாயிரம் யோஜனை உயரம் கொண்டது. அதையும் தாண்டிச் சென்றான். அதற்கும் மேலாக மூன்றாவதான வாயு மார்க்கம், அங்கு ஸித்தர்களும் சாரணர்களும் நித்யவாஸம் செய்கிறார்கள். அதுவும் முன்போன்ற உயரமுள்ளதே. அதற்கும் மேலே நான்காவதான மண்டலம், அதில் பூதங்களும் விநாயகர்களும் வஸிக்கிறார்கள்.. இதுவும் முன்போன்ற அளவுள்ளதே. அதற்கும் மேலாக ஐந்தாவது மண்டலம். அங்கு நதிகளுள் ச்ரேஷ்டையான கங்கையும், நாகங்களும் இருக்கின்றன. மலை போன்ற அந்த நாகங்கள் (யானைகள்) தங்களது துதிக்கைகளால் கங்காஜலத்தை வாரி இறைக் கின்றன. அவற்றின் துதிக்கைகளினின்றும் வெளிவிழும் கங்கா ஜல லவங்கள் (திவலைகள்) காற்றில் கலந்து பனியாக ஆகின்றன. அதற்கு மேலே ஆறாவது வாயு மண்டலம். அங்கேதான் கருடவாஸம். அதற்கும் மேலே ஏழாவது ஸ்தானம். அதில் புண்யக்ருத்துக்களான மகரிஷிகள் வஸிக்கிறார்கள். அதற்கும் மேலே எட்டாவது வாயு ஸ்தானம். அதில் ஆகாச கங்கை நித்யமாக உள்ளது. அது சூரிய மார்க்கத்தை அடைந்துள்ளது. அதை வாயுபகவான் தரித்துள்ளார். மிக்க வேகமுடையதும் சப்திப்பதுமாக உள்ளது. அதற்கும் மேலாக எண்பதாயிரம் யோஜனை உயரத்தில் சந்திரமண்டலமுள்ளது. அங்கு தான் சந்திரன் க்ரஹங்களுடனும், நக்ஷத்ரங்கள் புடை சூழவும் அமர்ந்துள்ளான். அவனுடைய நூறு நூறாயிரம் கிரணங்கள் உலகில் பரவி ஒளியூட்டுகின்றன; பிராணிகளை மகிழ்விக்கின்றன.

          அந்த இடத்தை அடைந்து நின்றான் தசக்ரீவன், தனது மந்திரிகளுடன்.

          இவர்களைக் கண்ட சந்திரன் மிகவும் கோபத்துடன் தனது சீத கிரணங்களால் அவர்களை நடுக்கமுறச் செய்தான். ராவணனின் பரிவாரங்கள் அதைச் சகிக்க முடியாமல் கஷ்டப்பட்டன. பிரகஸ்தன் ராவணனைப் பார்த்து, '' அரசே! இந்தக் குளிரைக் தாங்க முடியவில்லை. ஆகவே இங்கிருந்து திரும்பிச் சென்று விடுவோம்" என்றான். இதைக் கேட்ட ராவணன் மிகவும் கோபமடைந்து பாணங்களால் சந்திரனை ஹிம்ஸிக்க ஆரம்பித்தான்.

          அது கண்ட சதுர்முகன் அவ்விடம் வந்து "ராவண! நீ செய்வது நன்றன்று, உலகிற்கு நன்மையைச் செய்யும் சந்திரனைப் பீடிக்காதே. உனக்கு நான் ஓர் உயர்ந்த மந்தரத்தை உபதேசிக்கிறேன். பிராணனுக்கு ஆபத்து நேரிடுங்கால் அதை அநுஸந்தானம் செய்தால் மரணம் நேரிடாது'' என்றார். இதைக் கேட்ட ராவணன், பிரமனைக் கைகூப்பி வணங்கி, 'அப்படியே ஆகட்டும், எனக்கு அந்த மந்த்ரத்தை உபதேசியுங்கள்'' என்றான். பிறகு பிரம்மா அவனுக்கு சிவநாம அஷ்டோத்ரத்தை உபதேசித்து, "இதைப் பிராண ஆபத்து நேரும் காலத்தில் மட்டுமே ஐபிக்க வேண்டும்'' என்று கூறினார்,

          இப்படியான வரத்தை அளித்து, பிரம்மா தனது லோகத்திற்குச் சென்றார். ராவணன் மிகுந்த ஸந்தோஷத்துடன் தன் இருப்பிடம் ஏகினான். வரும் வழியில் தனது கண்களுக்கு இலக்கான மானிட, தேவ, ரிஷி கன்யகைகளை அபஹரித்துக்கொண்டும் சென்றான்.

வியாழன், 22 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 15


இருபத்தைந்தாவது ஸர்க்கம்.

(ராவணன் சூரியனிடம் செல்வதும், அவனை வென்றதாகத் தானே நினைப்பதும்)

       பிறகு ஆலோசனை செய்து ராவணன் சூரியனை ஜயிக்க நினைத்து, ஸூர்யலோகம் சென்றான். அங்கு அவன் ஒளிமயமானவனும், மங்களகரனும், உயர்ந்த கர்ண குண்டலங்களால் விளங்கிய முகமண்டலத்தை உடையவனும், உயர்ந்த ஸ்வர்ணமயமான தோள்வளைகளைத் தரித்தவனும், சிவந்த மாலையை அணிந்தவனும், செஞ்சந்தனம் பூசிய மேனியை உடையவனும், ஆயிரம் கிரணங்களோடு கூடியவனும், விபுவும், ஸப்தாச்வ வாஹனனும், ஆதி மத்ய அந்த ரஹிதனும், தேவதேவனுமான ஆதித்யனைக் கண்டான். அவனுடன் வந்த மந்திரிகள் சூரியனுடைய தாபத்தை ஸஹிக்க மாட்டாதவர்களாக நின்றனர்.

    அப்போது ராவணன் தனது மந்திரியான ப்ரஹஸ்தனைப் பார்த்து, “ ப்ரஹஸ்த! நீ உடனே சூரியனிடம் சென்று, ராவணன் வந்துள்ளான். நீ அவனுடன் போர் புரிகிறாயா? அல்லது தோற்றேன் என ஒப்புக் கொள்கிறாயா? என்று நான் கேட்டதாகச் சொல்லி , அவனது மறுமொழியை அறிந்து வா” எனக் கூறினான். அவனும் அவ்வாறே சூரியனிருக்குமிடம் சென்றான். அங்கே பிங்கன், தண்டீ என்ற இரண்டு த்வார பாலகர்களைக் கண்டு, அவர்கள் மூலமாக ராவணனின் விருப்பத்தைத் தெரிவிக்கச் செய்து, சூரியனிடம் தான் நெருங்க முடியாதபடியால் வெளியிலேயே நின்றான்.

      தண்டீ என்பவன் உள்ளே விஷயத்தைச் சூரியனிடம் கூறினான். அதற்கு, சூரியன் நன்கு ஆலோசித்து, “ நீ சென்று ராவணனை எதிர்த்து யுத்தஞ் செய்து வெற்றி பெறினும் பெறுக! அது முடியாதாகில் நான் தோற்றேன் என்று கூறினாலும் கூறுக. உனக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்க. எனக்கு வீண்பொழுது போக்க நேரமில்லை” என்று கூறினான். தண்டீ ராவணனிடம் சென்று சூரியன் சொன்னவற்றை விளங்கக் கூறினான். அது கேட்ட ராக்ஷஸ ராஜன் தான் வெற்றி கொண்டதாக எண்ணி ஜயகோஷம் செய்துகொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 14

இருபத்து மூன்றாம் ஸர்க்கம்


[ராவணன் நிவாதகவசர்களுடன் நட்புக் கொள்ளல்;
காலகேய வதம்; வருண புத்திரர்களை ஜயித்தல்.]


            யமபுரியிலிருந்து திரும்பிய ராவணனை அவனது மந்திரிகளான மாரீசன் முதலானோர் வந்தடைந்தனர். ராவணனது உடம்பிலுள்ள காயங்களையும், அவற்றிலிருந்து பெருக்கெடுத்தோடும் ரத்தத்தையும் கண்டு நெகிழ்ந்தவர்களாய் 'ஜய விஜயீ பவ' என்று வாழ்த்தி மகிழ்வித்தனர். எல்லோருமாக மறுபடி புஷ்பக விமானத்தில் அமர்ந்து கொண்டு ரஸாதல லோகம் சென்றனர். அங்கே தைத்யர்கள் நாகங்கள் இவற்றுக்கு இருப்பிடமாயும், வருணனது ஆளுகைக்கு உட்பட்டதுமான 'போகவதி' என்கிற நகரத்தை அடைந்தான். அந்த நகரத்தை வாஸுகி என்கிற ஸர்ப்பராஜன் ஆண்டுவந்தான். ராவணன் அவனைத் தன் வசமாக்கிக்கொண்டான். பிறகு அங்கிருந்து ‘மணிமயீ’ என்கிற நகரத்தை அடைந்தான். அங்கே நிவாத கவசர்கள் என்கிற அரக்கர்கள் வஸித்து வந்தனர். அவர்கள் கடுந் தவம் புரிந்து பிறரால் ஜயிக்க முடியாதபடி வரம் பெற்றவர்களாக விளங்கி வந்தனர். அவர்களிடம் சென்ற ராவணன் அவர்களை யுத்தத்திற்கு அழைத்தான். அவர்களும் மஹாபலசாலிகளானபடியால் பலவித ஆயுதங்களுடன் கூடியவர்களாய் ராவண ஸைன்யத்துடன் யுத்தம் செய்தனர். இவ்விரு ஸைன்யங்களுக்கும் ஒரு வருஷகாலம் யுத்தம் நடைபெற்றது. இருதரப்பினரும் ஐயத்தையோ தோல்வியையோ அடையவில்லை.
        இப்படியான நிலையில் பிரம்மதேவன் அங்கே தோன்றி நிவாத கவசர்களிடம் "நீங்கள் இப்படிச் சமர் புரிவது நன்றன்று. ராவணனை வெல்வது என்பது அரிதானது. நீங்கள் இருவரும் ஒரே குலத்தவர்கள். நீங்கள் அழிவதை நான் விரும்பவில்லை. எனவே ராவணனுடன் நீங்கள் நட்புக் கொள்ளுங்கள்'' என்று உரைத்தார். அதன்படியே ராவணனும் அவர்களுடன் அக்னி ஸாக்ஷியாக நட்புச் செய்துகொண்டான். அவர்களும் ராவணனை ப்ரீதீயுடன் உபசரித்தனர். ஒரு வருட காலம் ராவணன், அவர்களுடன் அங்கே தங்கினான். தனது சொந்த நகரத்தைக் காட்டிலும் அங்கு நடைபெற்ற உபசரிப்பினால் மிகவும் மகிழ்ந்தான். அங்குள்ளபோது நூற்றுக்கும் மேலான மாயாஜால ப்ரயோகங்களைக் கற்றறிந்தான்.
          பிறகு அங்கிருந்து வருண பட்டணத்தைத் தேடிப் புறப்பட்டான். ‘அச்மபுரீ” என்கிற நகரத்தை அடைந்தான். அதைக் காலகேயர்கள் ஆண்டு வந்தனர். அவர்களை யுத்தத்தில் வென்றான். அவர்களில் ஒருவனாயும், தனது உடன்பிறந்த சூர்ப்பணகையின் கணவனும், மஹா பலசாலியும், கர்வியும், தனது நாக்கின் வலிமையினாலேயே சத்ருக்களை அழிப்பவனுமான வித்யுஜ்ஜிஹ்வனையும் விட்டு வைக்கவில்லை. அத்துடன் நிற்காமல் நானூறு அரக்கர்களையும் வென்றான்.
         பிறகு கைலை மலை போல் பிரகாசமுள்ளதும் உயர்ந்ததுமான வருண பட்டணத்தை அடைந்தான். அங்கு ஸதாகாலமும் பாலைப் பொழிந்துகொண்டும், அதனாலேயே பால்ஸமுத்திரம் எனப் பெயர் பெற்றதோ என்னலாம்படி விளக்க ஹேதுபூதமாக உள்ளதுமான 'ஸுரபி' என்கிற (காமதேனுவை) பசுவையும் கண்டான். குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரன் உதிக்கும் ஸ்தானத்தையும் கண்டான். ஸமுத்திர அலைகளிலுண்டாகும் நுரைகளை உண்டு தவம் புரியும் ரிஷிகளையும் கண்டான். அம்ருதம் உண்டான ப்ரதேசத்தையும் பித்ருக்களுக்குத் திருப்தி தரும் 'ஸ்வதை’ உண்டான பிரதேசத்தையும் கண்டான். அங்கே பிரகாசித்து நின்ற ஸுரபியை வலம் வந்து வணங்கினான்.
         பிறகு அனேக படர்களால் ரக்ஷிக்கப்பட்டதான வருணனுடைய அரண்மனையை ஆடைந்து அதன் பாதுகாவலர்களை வென்று மீதமுள்ளவர்களிடம் “உள்ளே சென்று, உங்கள் அரசனிடம் ராவணன் யுத்தம் செய்ய வந்துள்ளான்; யுத்தத்திற்கு வா, அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள் என்று கூறி அழைப்பதாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
         இப்படி இங்கே கோலாஹலம் உண்டாயிருக்கும்போதே வருணனுடைய புத்திரர்களும் பெளத்திரர்களும் ஸைன்யத்துடன் கூடியவர்களாய். இஷ்டப்படி ஸஞ்சரிக்கும் தன்மையையுடைய தேரில் அமர்ந்தவர்களாய்க்கொண்டு, ராவணனை எதிர்த்தனர். க்ஷணகாலத்திலேயே லருணனுடைய ஸைன்யம் ராவணபலத்தால் அழிக்கப்பட்டுவிட்டது.

     ஆகாசத்தில் புஷ்பக விமானத்தின்மீதமர்ந்து யுத்தம் செய்யும் ராவணனைக் கண்ட வருணபுத்திரர்கள் தாங்களும் தேரிலமர்ந்து ஆகாசத்தில் சென்று ராவணனுடன் போரிட்டனர். அநேக விதமான ஆயுதங்களால் ராவணனை அடித்துத் துன்புறுத்தினர்.
      இப்படி இவர்கள், ராவணனை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்ட, ராவணனின் மந்திரிகளில் ஒருவனான, மஹோதரன் என்பவன் மிகவும் கோபமடைந்தவனாய் மிகப் பெரிய கதையைக் கையில் ஏந்தியவனாய் ஆகாயத்தில் கிளம்பி இவர்களின் தேர்க்குதிரைகளையும் ஸாரதிகளையும் அடித்துக் கொன்றான். தேரையும் குதிரைகளையும் இழந்து நிற்கும் இவர்களைப் பார்த்து ஸிம்ஹநாதம் செய்தான். தேரையிழந்த அவர்களும் சிறிதும் கவலை கொள்ளாமல் ஆகாயத்தில் நின்று கொண்டே இருவர்மீதும் பாணப் பிரயோகம் செய்து துன்புறுத்தினர். இவர்களுடைய தீரச் செயல்களைக் கண்ட ராவணன் மிக மிகக் கோபம் கொண்டவனாய் அநேக விதமான பாணங்களால் இவர்களை மர்ம ஸ்தானங்களில் அடித்தான். மேல்மேலும் பலபல விதங்களான  ஆயுதங்களினால் அடித்துத் துன்புறுத்திப் பூமியிலும் விழச் செய்தான். கீழே விழுந்தவர்களின் மீதும் பல ஆயுதங்களைப் பிரயோகித்துத் துன்பமடையச் செய்தான். சேற்றில் சிக்கிய யானைகள் போலாயினர் இவர்கள். இப்படித் துன்புறும் இவர்களை இவனது ஸைனிகர்கள் அரண்மணைக்கு எடுத்துச் சென்றனர்.
        இது கண்ட ராவணன் ஸிம்ஹநாதம் செய்தவனாய் வருண ஸைனிகர்களைப் பார்த்து, உள்ளே சென்று வருணனிடம் எனது வருகையைக் கூறுங்கள்" என்றான்.
     அதற்கு வருணனின் மந்திரிகளில் ஒருவனான ப்ரஹாஸன் என்பவன் அங்கே தோன்றி, வருணன் தேவகார்யார்த்தமாக ப்ரஹ்ம லோகம் சென்றதாகக் கூறி, மேலும் "அவனது குமாரர்களைத்தான் நீ ஜயித்துவிட்டாயே, இனி என்ன?" எனக் கூறினான்.

          இதைக் கேட்டுக் களிப்புற்ற ராவணன் தன் புகழைப் பாடிக் கொண்டே தான் வந்த வழியாகவே லங்கா பட்டணத்தை அடைந்தான்.


இருபத்து நான்காவது ஸர்க்கம்

[ராவணன் மஹாபலியிடம் செல்வது, அங்கு அவமானமடைவது முதலியன.]


       வருண  பவனத்தினின்றும் வெற்றிக் களிப்புடன்  திரும்பிய ராவணன் தனது பரிவாரங்களுடன் யுத்தமதம் கொண்டவனாக அச்ம நகரத்தையே சுற்றி வந்தான். அப்போது அங்கே ஸ்வர்ண மயமானதும், வஜ்ர வைடூர்ய கோமேதக மரதகக் கற்களாலான படிக்கட்டுக்களையும் ஸ்தம்பங்களையும், முத்துக்களாலான தோரணங்களை உடையதும். மஹேந்திர பவனத்திற்கொப்பானதும் மிக்க ஒளி பொருந்தியதுமான அழகியதொரு மாளிகையைக் கண்டான். உடனே அருகிலுள்ள ப்ரஹஸ்தனை அழைத்து, "ப்ரஹஸ்த! நீ சீக்கிரமாகச் சென்று மேருபர்வதமும் மந்திரமலையும் போன்று விளங்கும் இந்த மாளிகை யாருடையது என்று சீக்கிரமாக அறிந்து வா' எனக் கூறினான்.
      உடனே ப்ரஹஸ்தன் அந்த மாளிகையை அடைந்து முதற்கட்டில் பிரவேசித்தான். அங்கு ஒருவரும் இன்றி சூன்யமாய் இருந்தது இப்படியாக ஒருவருமற்றிருந்த ஆறு கட்டுகளையும் தாண்டி ஏழாவது கட்டில் செல்ல நினைக்கையில் அங்கே மிகப் பெரிய அக்னிஜ்வாலை உண்டாயிற்று. அதன் மத்தியில். யமனுக்கு நிகரானவனும், ஸ்வர்ணமாலையைத் தரித்தவனும், சூரியனைப் போலக் காண முடியாத ஒளியையுடையவனுமான ஒருவன் நின்று அட்டஹாஸமாகச் சிரித்தான். அவனைக் கண்டு பயந்த ப்ரஹஸ்தன் உடனே திரும்பி வந்து தான் கண்டனத ராவணனிடம் கூறினாள்.
        இதைக் கேட்டதும் ராவணன் தனது விமானத்தினின்றும் கீழே இறங்கி, மாளிகையினுள் பிரவேசித்தான். அப்போது அங்கே நீல மேனி மணிவண்ணனும், கிரீடதாரியும் மிகப் பெரிய உருவமுள்ளவனுமான புருஷன் ஒருவன் ஜ்வாலாமத்தியில் நின்றுகொண்டு வழிமறித்தான். அந்தப் புருஷனது உருவம், மிக்க பயத்தை உண்டுபண்ணுவதாகவும் சிவந்த கண்களையுடையதும், வெளுத்த முகத்தையும் சிவந்த உதடுகளையுடையதும், மேல்நோக்கிய முடியையுடையதும், மூச்சு விடும் போது பயங்கரமான மூக்கையுடையதும், சங்கம் போன்ற கழுத்தையுடையதும், பெரிய தாடைகளை (கன்னங்களை) உடையதும், (உடலில்) ஓர் எலும்புகூடத் தெரியாதபடி சதைப்பற்றுடையதாகவும் காணப்பட்டது அந்தப் புருஷன் தனது கையில் திருடமான இரும்புத் தடியைக் ஏந்தியவனாய் வழி மறித்து நின்றான்.

       அவனைக் கண்ட ராவணன் மயிர்க் கூச்சமுண்டானவனாகவும் மனநடுக்கமுற்றவனாகவும் அசைவற்று நின்றுவிட்டான். இப்படி நின்ற ராவணனைக் கண்ட அந்தப் புருஷன் “வீரனே ஏன் இப்படி நிற்கிறாய்? என்ன ஆலோசனை செய்கிறாய்? உனக்கு யுத்தமாகிற அதிதி பூஜையைச் செய்ய நான் ஸித்தமாக இருக்கிறேன். உள்ளே (இவ்வரண்மனையின் உள்ளே) பலிச்சக்ரவர்த்தியுடன் யுத்தம் செய்ய விரும்புகிறாயா? அல்லது என்னுடன் மோத விரும்புகிறாயா?" என்று கேட்டான், இதைக் கேட்ட ராவணன் கொஞ்சம் தைரியத்தை யடைந்து, "உள்ளிருப்பவனோடேயே (க்ருஹாதிபதியுடனேயே) யுத்தம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
         அதற்கு அந்தப் புருஷன் 'உள்ளே இருப்பவரைப்பற்றிக் கூறுகிறேன். பிறகு உன் இஷ்டப்படிச் செய்" என்று கூற ஆரம்பித்தான். "உள்ளே உள்ளவர் தானவச்ரேஷ்டர்; மிக்க கொடையாளி; உண்மையான பராக்ரமத்தையுடையவர், வீரபுருஷர், குணங்களால் நிரம்பப் பெற்றவர், பாசக்கயிற்றைக் கைக்கொண்ட யமனுக்கு நிகரானவர்; இளஞ்சூரியன் போன்ற ஒளியுள்ளவர்; யுத்தத்தில் பின்னடையாதவர்; மிக்க கோபம் கொண்டவர்; பிறரால் ஜயிக்க முடியாதவர்; நற்குணங்களுக்கு இருப்பிடம்; நன்மையையே பேசுபவர்; குரு, பிராம்மணர் இவர்களிடத்தில் அன்பு பூண்டவர்; பலிஷ்டர், உண்மையையே பேசுபவர்; அழகிய உருவம் கொண்டவர், வேதமோதுபவர், நல்லவர்களுக்குத் தென்றல் போன்றவர், கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அக்னி ஜ்வாலை போல் காணப்படுபவர், எதிரிகளுக்குக் கொளுத்தும் நெருப்புப் போல் தகித்திடுபவர்; தேவர்கள், பூத கணங்கள் நாகங்கள், மகரிஷிகள் ஆகியவர்களிடமும் பயமற்றவர். அப்படிப்பட்ட மஹாபலியிடமா நீ யுத்தம் செய்ய விரும்புகிறாய்? நல்லது உள்ளே செல், அவருடன் யுத்தம் செய்'' என்று.
          அந்தப் புருஷனுடைய வார்த்தையைக் கேட்டு ராவணன் உள்ளே சென்றான். அங்கு உயர்ந்த ஆஸனத்தில் அமர்ந்திருந்த மஹாபலி, தசக்ரீவன் உள்ளே வருவதைக் கண்டு பெரிதாகச் சிரித்தான். பிறகு மத்யாஹ்ன ஸமயத்தில் காண முடியாத ஒளியுள்ள சூரியனைப் போல விளங்கும் மஹாபலி தனது ரூபத்தைப் பெரிதாகச் செய்து கொண்டு, ராவணனைக் கையால் பிடித்துத் தன் மடிமீது அமரச் செய்தான். அவனைப் பார்த்து, “தசக்ரீவனே! தோள்வலிமை மிக்கவனே! இங்கு நீ வந்த காரணம் யாது? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லவும்” என்று கேட்டான்,
      அதற்கு ராவணன், ''மஹாபாக்யசாலியே! நீர் முன்பு விஷ்ணுவினால் அடக்கப்பட்டு இங்குள்ளதாக அறிந்துள்ளேன். உம்மை விடுவிக்க என்னால் முடியும். இதில் 'உமக்கு ஸம்சயம் வேண்டாம்” என்றான்.
       இப்படிக் கூறிய ராவணனைப் பார்த்து, பலிச்சக்ரவர்த்தி பெரிதாகச் சிரிப்பொலி செய்து கூறலானார்  ----
             ராவண! நீ யாரை மிகச் சாமான்யராக நினைக்கிறாயோ அவரைப் பற்றிச் சொல்லுகிறேன், கேட்கவும். பச்சை மாமலை போன்ற மேனியனான ஒரு புருஷன் இம்மாளிகையின் வாயிலில் காவல் புரிகிறான் அல்லவா? மிக்க பலசாலியான இ்வன், பல அசுரர்களையும், பலம் மிக்க மற்ற தானவர்களையும் எளிதாகக் கொன்றவன், இவனாலேயே நானும் வஞ்சிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டேன். ஹே தசானன! இவனை வஞ்சித்துக் கொல்லும் ஸாமர்த்யம் யாருக்குமே கிடையாது. இவனை நீ யாரென்று நினைக்கிறாய்? ஆக்கல்-காத்தல்- அழித்தல் என்கிற மூன்று தொழில்களுக்கும் மூலகர்த்தாவான ஜகந்நாதனே இவன்.
           இவனைப் போன்ற மஹாபுருஷன் உலகத்தில் வேறு யாருமில்லை. இவன் பலவாறாக உருக் கொண்டு பலரை வீழ்த்தியுள்ளான். எனவே இவன் ஸாமான்யனல்லன் என அறிந்துகொள்.” இப்படிக் கூறிய மஹாபலி ராவணனைப் பார்த்து, “நீ பராக்ரமசாலியாயின் அதோ ஒரு சக்கரம் அக்னி போல் எரிந்துகொண்டு ஆச்சர்யமாக விளங்குகிறதே! அதன் அருகில் சென்று அதை எடுத்து கொண்டு எனது அருகில் வா. அதன் பிறகு நீ என்னை விடுவிக்கும் மார்க்கத்தைக் கூறுகிறேன்' என்றும் சொன்னான்.
       இதைக் கேட்டதும் ராவணன் பரிஹாஸமாகச் சிரித்துவிட்டு அந்தச் சக்கரத்தின் அருகில் சென்றான். விளையாட்டாக அதை எடுக்க முயன்றான். முடியாமற் போகவே வெட்கமடைந்தவனாகி, தனது வலிமையெல்லாம் கொண்டு அதை எடுக்க முயன்றபோது அவனது உடலெல்லாம் இரத்த வெள்ளம் பெருக, வேரற்ற மரம் போல் பூமியில் விழுந்தான். இதைக் கண்ட அவனது மந்திரிகள் பெரும் கூச்சலிட்டனர் ஒரு முஹூர்த்த காலம் கழித்து ராவணன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். வெட்கத்தினால் தலைகுனிந்து நின்ற அவனைப் பார்த்து, பலி கூறினான்- 'ராக்ஷஸச்ரேஷ்ட! நீ எடுக்க முயன்ற இந்த மணிகுண்டலமானது எனது பாட்டனாரான ஹிரண்யகசிபுவினுடைய காதின் குண்டலம். அவர் இறந்தபோது இங்கு வந்து வீழ்ந்தது. மற்றொன்று இந்தப் பர்வதத்தின் தாழ்வரையில் விழுந்துள்ளது. அவர் யுத்தம் செய்தபொழுது கிரீடமானது தலையிலிருந்து சிதறிச் சேதி தேசத்தருகே சென்று வீழ்ந்தது. தசானன்! அந்த ஹிரண்யகசிபு தபஸ் செய்து எவரும் பெறுதற்கரியனவான வரங்களைப் பெற்றவர். அவருக்கு மரணபயமே கிடையாது. வியாதி அவரைப் பீடிக்காது. மருத்யு நெருங்கமாட்டான். பகலிலும் இரவிலும் மரணம் ஸம்பவிக்காது, உலர்ந்த அல்லது ஈரமுள்ள ஆயுதங்களாலும் ம்ருத்யு உண்டாகக்கூடாது, இவை முதலானவை அவர் பெற்ற வரங்கள். அப்படிப்பட்ட மஹாவீரரான ஹிரண்யகசிபு தமது மகனான பிரஹ்லாதனிடம் மிக்க கடுமையான வாதம் செய்து அவனுக்குத் தீங்குகள் பல செய்தார். விஷ்ணு பக்தனான அவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டு பொறுக்காதவரான மஹாவிஷ்ணு, நரசிங்க உருக்கொண்டு தனது கூரிய நகங்களால் அவரைக் கொன்றார். அந்தப் பரமபுருஷனான வாஸுதேவனே நீல மேனியுடையவனாய்  எனது மாளிகையின் வாசலில் காவலனாக நிற்கிறான். அவருடைய பெருமையும் புகழும் யாராலும் வர்ணிக்க முடியாதவை, ஜகத் காரணபூதனும் ஆதியந்தமில்லாதவனுமான அந்தப் புருஷனுடைய மஹிமையை மேலும் அறிந்திடுவாயாக. ஆயிரம் தேவேந்திரர்களும், பதினாயிரம் தேவர்களும், நூற்றுக்கணக்கான ரிஷிகளும் இவருடைய வசத்தில் உள்ளனர். அதிகமாகச் சொல்லி என்ன? இவ்வுலக மனைத்துமே இவனுக்கு உட்பட்டது. அப்படிப்பட்ட மஹாபுருஷனே எனது அரண்மனை வாசலிலுள்ளான்” என்று.
         மஹாபலியின் வார்த்தையைக் கேட்ட ராவணன். "யமன், வருணன், வித்யுஜ்ஜிஹ்வன், தம்ஷ்ட்ராகராளன், ஸர்ப்பம். தேள் இவைகளையே ரோமங்(மயிர்)களாக உடைய மஹரஜ்வாலன், ரக்தாக்ஷன் முதலான பலருடன் போர்புரிந்து அவர்களை ஜயித்துள்ளேன். எனக்குக் கிஞ்சித்தேனும் பயமில்லை. நீ சொல்லுமவனை நான் இதுவரை அறிந்ததில்லை. அவனைப்பற்றிக் கூற வேண்டும்" என்று கேட்க, மறுபடி மஹாபலி கூறுகிறார் "ராவண! இவர்தாம் மூவுலகங்களையும் தரிப்பவர். ஸமர்த்தர், இவரையே ஹரி, நாரயணன், அனந்தன் என்றும் சொல்லுவார்கள். மோக்ஷார்த்திகளான ரிஷிகள் மற்றும் பலபடியாக ஸ்தோத்ரம் செய்வார்கள். இவரை உள்ளபடி அறிந்தவர்கள் பாபங்களிலிருந்து விடுபட்டவர்களாவார்கள். இவரை நினைத்துத் துதித்துப் பூஜித்துப் பலரும் தங்கள் தங்கள் இஷ்டங்களை அடைந்துள்ளார்கள்" என்று.
         இதைக் கேட்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கையில் ஆயுதங்களை ஸித்தமாகக் கொண்டு வெளியே வந்தான்.
       இப்படி வந்த ராவணனைக் கண்டு, வாசலில் நின்ற புருஷன், பிரம்மதேவன் இவனுக்குக் கொடுத்த வரத்தை மனத்தில் கொண்டு இப்போது இவனைக் கொல்வது தகாது என்று நினைத்து மறைந்து போனான். புருஷன் அங்கில்லாததைக் கண்ட ராவணன் மனமகிழ்ச்சி யடைந்தவனாய் ஐயமடைந்தேன் என்று கூவிக் கொண்டு, சென்ற வழியே திரும்பினான்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 13


21வது ஸர்க்கம்


[ராவணன் யமலோகம் செல்வது, அங்கு ராவணன் யம ஸைன் யத்துடன் யுத்தம் செய்வது]


       இப்படி எண்ணிய நாரதர் வேகமாக யமனின் பட்டிணத்தை அடைந்தார். அங்கு அக்னிக்கொப்பானவனும், எந்த எந்த ப்ராணிகள் எந்தெந்த கர்மாக்களைச் செய்தனரோ, அவரவர்க்கு, அததற்கனுகுணமான தண்டனைகளை விதித்துக் கொண்டிருப்பவனுமான தர்மராஜனைக் கண்டார். நாரதரின் வருகையை அறிந்து அவனும் முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து ஆஸனத்தில் அமரச் செய்து, “மஹர்ஷே! தாங்கள் க்ஷேமமாக உள்ளீர்களா? இங்கு தாங்கள் எழுந்தருளியதன் காரணமெதுவோ? தயை கூர்ந்து அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
       அதற்கு நாரதர்- “பித்ருராஜனான யமதர்மனே! நான் வந்த காரணத்தைக் கூறுகிறேன். செவிமடுத்து, அதற்கானதைச் செய்யவும். தசக்ரீவன் என்கிற அசுரன் உன்னை ஜயித்து அவனுக்கு அடங்கியவனாக உன்னைச் செய்து கொள்ள விரும்பி வருகிறான். இதை முன் கூட் டியே உனக்கு தெரிவிக்க ஓடோடி வந்தேன்” என்று கூறினார்.
      இப்படி இவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெகு தூரத்தில் ராவணனது வருகை தெரிந்தது. அவனது விமானமான புஷ்பகத்தின் ஒளியால் அங்கிருந்த இருள் அகன்றது. அந்த விமானத்தின் மீதமர்ந்தவாறே ராவணன் - யமதர்மராஜனையும் அவனது பரிவாரங்களையும் ஸைன்யங்களையும் கண்டான். மற்றும் அங்கு ஸுக துக்கங்களையும் கண்டான் யம படர்களால் கடுமையாக தண்டிக்கப் படுபவர்களையும். அந்த தண்டனைகளை ஸஹிக்க முடியாமல் ஓலமிடுபவர்களையும், பாம்பு-முதலை - செந்நாய்கள் இவைகளால் கடித்துக் குதறப்படுகிறவர்களையும், வைதரிணீ நதியைக் கடந்து செல்லக் கடப்பவர்களையும், மிகவும் காய்ந்து சூடேறிய மணல்களின்மீது படுக்க வைத்துப் புரள்பவர்களையும் அபத்ரவனம் என்கிற தீட்டப்பட்ட கத்திகளையே இலைகளாக உடைய  மரங்கள் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் பெருகும் உடல்களை  உடையவர்களையும். ரெளரவம் எனப்படும் கொடிய நரகத்தில் ஓலமிடுபவர்களையும், உப்பங்கழிகளில் தள்ளப்பட்டு "குடிக்கத் தண்ணீர் - தண்ணீர் தண்ணீர்" என்று பரிதாபக் குரலிடுபவர்களையும். பசித்தவர்களையும் மெலிந்தவர்களையும், அலை குலைந்த கேசங்களை . உடையவர்களையும், பயந்து அங்குமிங்குமாக ஓடுபவர்களையும். இப்படி அநேகவிதமாக கஷ்டப்படுபவர்களையும் கண்டான். மற்றோரிடத்தில் உயர்ந்த மாளிகைகளில் பாட்டையும் பரதத்தையும் கேட்டும் கண்டும் ஆனந்தமடைந்தவர்களையும கண்டான். கோதானம் செய்தவர்கள் பாலைப் பருகி மகிழ்வதையும் அந்நதானம் செய்தவர்கள் உயர்ந்த அந்நத்தை புஜித்து மகிழ்வதையும், க்ருஹதானம் செய்தவர்கள் அழகிய க்ருஹத்தில் உள்ளதையும், இப்படியாக அவரவர் செய்த நல்ல காரியங்களுக்கொப்ப நல்ல பலன்களை அனுபவிப்பதையும் கண்டான்.
           இப்படியாகக் கண்ட ராவணன் கஷ்டப்படுபவர்களை அவர்கள வாட்டியெடுக்கும் யம படர்களிடமிருந்து தனது பலத்தினாலே விடுவித்தான். அப்போது ஒரு முஹூர்த்த காலம் அங்கு யமயாதனையே இல்லாமல் போயிற்று.
         இதைக் கண்டு வெகுண்டனர் யம படர்கள். அவர்கள் ஆயிரக் கணக்காக ஒன்று சேர்ந்து, அநேக ஆயுதங்களால் ராவணனை அடித்தனர். புஷ்பக விமானத்தையும் சேதப் படுத்தினர். அவர்களால் அநேக விதமாக சேதப்படுத்தப்பட்டாலும் அவ்விமானம் மறுபடி மறுபடி பழையது போலவே பொலிந்து விளங்கியது.
        யம படர்கள் சூழ்ந்து கொண்டு ராவணனை எதிர்த்தனர். பாறைகளாலும், மரங்களாலும் மற்றும் பற்பல அஸ்த்ரங்களாலும் ராவணனைத் துன்புறுத்தினர். அவனது கவசத்தைப் பிளந்தனர். சற்றே களைப்புற்று, உணர்ச்சி பெற்ற ராவணன். புஷ்பகத்திலிருந்து கீழே குதித்தான். மிகப் பெரியதான வில்லைக் கையிலெடுத்துக் கொண்டு எதிர்த்து நிற்கும் படர்களைப் பார்த்து-"நில்லுங்கள், இந்த அடியைப் பெற்றுக் கொள்ளுங்கள்'” என்று கூறி "பாசுபதாஸ்த்ரத்தை" அபிமந்த்ரணம் செய்து பிரயோகித்தான். அதானது த்ரிபுராஸுர ஸம்ஹாரத்தின்போது ருத்ரனால் விடப்பட்ட அஸ்த்ரம் போன்று விளங்கியதாம்.. அந்த க்ரூரமான அஸ்த்ரமானது வனங்களையும், செடி கொடிகளையும் தஹித்தது. அதனின்றும் அநேகமாயிரம் கொடியவர்கள் தோன்றி யமனது ஸைன்யங்களை அழித்தனர். அதைக் கண்டு தசானனனும் அவனது மந்திரி முதலானோரும் களிப்படைந்து ஸிம்மநாதம் செய்தனர். அதைக் கேட்டு பூமியே அதிர்ந்தது.

22 ஆவது ஸர்க்கம்


[யமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம்,

ராவணனைக் கொல்வதற் காக யமன் காலதண்டத்தை ப்ரயோகம் செய்ய முற்படுதல்,

ப்ரம்ஹ தேவன் அதைத் தடுத்தல், ராவணனது வெற்றி முழக்கம்.]


        ராவணனது ஸிம்ஹநாதத்தைச் செவியுற்றான் யமன். தனது சைன்யம் அழிவுற்றது- ராவணன் வெற்றி பெற்றானெனவறிந்து மிகுந்த கோபம் அடைந்தான். உடனே ஸாரதியை விளித்து யுத்தத்திற்காக தனது ரதத்தை ஸந்நத்தம் செய்ய உத்திரவிட்டாள். ரதம் ஸஜ்ஜமானதும் ஸமஸ்த ஆயுதங்களுடன் அதன் மீது அமர்ந்து கொண்டான். அவனது முன்பாக பிராஸாதம், தோமரம் என்கிற ஆயுதங்களையேந்திய ம்ருத்யு நின்றான். மூவுலகங்களையும் அழித்திடும் சக்திமானன்றோ இவன் ! யமனது பார்ச்வ பாகத்தில் உருவமுள்ள காலதாண்டமானது விளங்கியது. அதன் பக்கலில் யமபாசங்கள் சூழ்ந்து நின்றன. இவையெல்லாம் நெருப்பைக் கக்கிக் கொண்டவைகளாய் விளங்கின. அதன் ஸமீபத்தில் முள்மயமான உலக்கை (ஆயுதம்) விளங்கியது.
    இப்படி ஆயுததரனாகவும் மிகுந்த கோபமுடையவனுமான யம தர்மராஜனைக் கண்ட தேவர்களனைவரும் பயமடைந்தனர். ஸாரதி ரதத்தை ராவணனின் முன் செலுத்துகின்றான்.
    தனது பரிவாரத்துடன் கோபிஷ்டனாக வந்து நின்ற யமதர்மனைக் கண்ட ராவணனது மந்த்ரிகள் மிகவும் பயம் கொண்டவர்களாய் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ஆனால் ராவணன் மட்டும் கொஞ்சமும் பயமடையவில்லை - மனக்கலக்கமுமடையவில்லை. இருவருமாகக் கடும் போர் புரிந்தனர். ஏழு தினங்கள் இவர்களுடைய யுத்தம் நடைபெற்றது. இந்த மஹாயுத்தத்தைக் காண பிரம்ஹதேவனுடன் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.
      ராவணன் மிகவும் கோபமடைந்தவனாய், மிருத்யுவை நான்கு பாணங்களாலும், ஸாரதியை ஏழு பாணங்களாலும் அடித்துத் துன்புறுத்தினான் யமனையும் அநேகமாயிரம் பாணங்களால் மர்மஸ்தானங்களில் அடித்துப் பீடித்தான்.

      இப்படி அடிபட்ட யமனில் வாயிலிருந்து புகையுடன் கூடிய கோபாக்னியானது வெளிக்கிளம்பியது. அதைக்கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.  "ம்ருத்யுவும் காலனும் யமனது கோபத்தைக் ண்டு குதூஹலித்தனர். அப்போது மிருத்யு மிகுந்த  கோபத்துடன் யமனைப் பார்த்து தலைவ! என்னை ஏவி விடுங்கள். மஹா பாபியான இந்த அரக்கனை நான் ஸம்ஹாரம் செய்கிறேன். என்னால் முடியுமா? என்று சங்கை வேண்டாம் – ஹிரண்யகசிபு - ஸம்பரன் -- நமுசி -- நிஸந்தி - தூமகேது-(மஹா) பலி – விரோசனன் - - சம்புவரக்கன் -- வ்ருத்ரன்-பாணாஸுரன் - அநேக ராஜரிஷிகள்-மதம் கொண்ட கந்தர்வர்கள் - இன்னும் எத்தனையோ பலசாலிகளை நான் என் வசமாக்கி யுள்ளேன். இறக்கச் செய்வது எனது தொழில் சங்கைப்படாமல் என்னை பிரயோகியுங்கள்.  இவனது உயிரை நான் அபஹரிக்கிறேன்'' என்று உறுதி கூறினான்.
     இப்படி ம்ருத்யு கூறக் கேட்ட யமன் – “ம்ருத்யுவே! சற்று நீ இருப்பாயாக, இந்த துஷ்டனை யுத்தத்தில் நானே வதம் செய்கிறேன்”. என்று கூறி மிகுந்த கோபத்துடன் - பக்கத்தில் இருந்த கால தண்டத்தை பிரயோகம் செய்யக் கையில் எடுத்தான். அந்த தண்டத்தைச் சூழ்ந்து கால பாசங்கள் பிரகாசித்தன. அதன் பக்கலில் வஜ்ராயுதத்திற் கொப்பான முத்கரம் என்கிற ஆயுதம் பிரகாசித்தது.  கண்டமாத்ரத்தாலேயே உயிர்களைப்  பறித்திடும்  சக்தி பெற்றது அவ்வாயுதம்.
        இப்படிப்பட்ட காலதண்டத்தை, யமதர்மன் ராவணன் மீது பிரயோகிக்க நினைத்தமாத்ரத்தில் ஸகல பிராணிகளும் - தேவர்களும் பயந்தனர். என்ன நேரிடுமோ என்று அஞ்சி ஓடினர்.
         அது ஸமயம் ப்ரம்ஹதேவன் யமனிடம் வந்தார்.
        அவனைப் பார்த்து-"அளவிடற்கரிய பராக்ரமமுடையவனே! கால தண்டத்தை பிரயோகித்து நீ ராவணனைக் கொல்ல நினைக்காதே இவனை நீ கொன்றால் நான் இவனுக்குக் கொடுத்த வரம் பொய்த்து விடும். அதாவது "தேவர்களால் நீ கொல்லத்தகாதவன் என்பது எனது (நான் கொடுத்த) வரம். அந்த எனது வார்த்தையை நீ பொய்யாக்குவது உனக்குத் தகாது இந்த கால தண்டமும் என்னால் உண்டாக்கப்பட்டதேயாகும். இதை யார் மீது பிரயோகித்தாலும் அவனைக் கொன்றே தீரும், வ்யர்த்தமாகாது. இதன் பிரயோகத்தால் ராவணன் அழிந்தாலும் எனது வார்த்தை பொய்த்துப் போகும். அப்படி ராவணன் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தால், இந்தக் கால தண்டத்திற்கு நான் கொடுத்த சக்தி பொய்த்துப் போம். இரண்டு விதத்திலும் எனக்கு அபகீர்த்தியே உண்டாகும். எனவே நீ இம் முயற்சியைக் கைவிடவும்" என்றார்.  

        இப்படிக் கூறிய பிரம்மதேவனை வணங்கிய யமன், "ஸ்வாமி! தேவரீரே எங்கள் தலைவர். உமதிஷ்டப்படியே ஆகட்டும். நான் இனி என் செய்வது. தண்டப்பிரயோகம் செய்வதிலிருந்து  நிருத்தனாகிறேன். இனி இவன் முன் நில்லாமல் மறைவதைத் தவிர நான் வேறொன்றும் செய்வதற்கில்லை" என்று சொல்லி ரதத்துடன் அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டான்.
       யமன் மறைந்ததும் ராவணன், தான் ஜயம் அடைந்ததாகக் கோஷித்துக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு யம லோகத்திலிருந்து திரும்பச் சென்றான்.
         யமதர்மராஜனும் பிரம்மா முதலிய தேவர்களுடன் தன் இருப் பிடம் அடைந்தான். நாரதரும் கண்டு களித்து ஸ்வர்க்கலோகம் சென்றார்.

வியாழன், 15 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 12

பத்தொன்பதாவது ஸர்க்கம்


[ராவணன் பல அரசர்களை வெல்வதும்,
அயோத்யாதிபதியான அநாணியனிடமிருந்து சாபம் பெறுவதும்]


மருத்தனை ஜயித்த ராவணன் பூவுலகில் பல அரசர்களை வென்றும், பலரால் "ஜிதோஸ்மி' என்று ஒப்புக்கொள்ளப்பட்டவராகவும் உலாவி வந்தான். அவர்களில் துஷ்யந்தன் ஸுரதன். காதி, புரூரவஸ் முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பிறகு அநரண்யன் என்பவரால் பரிபாலிக்கப்பட்டும், அமராவதிக்கு ஒப்பானதுமான இந்த அயோத்யா நகரத்திற்கு வந்தான். அரசனிடம் சென்ற ராவணன் அவனைப் பார்த்து, "என்னுடன் சமர் புரிகிறயா? அல்லது தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறாயா?" என்று கேட்டான்..
மஹாபாபியான ராவணனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அநரண்யன் மிகுந்த கோபத்துடன், ''துஷ்டனே! உன்னுடன் நான்  யுத்தமே செய்கிறேன்" என்று கூறினார். பத்தாயிரம் யானைகளுடனும் இருபதாயிரம் குதிரைகளுடனும் அநேகமாயிரம் வீரர்களுடனும் கூடியவராய் ராணைனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். மிகவும் உக்ரமாகப் போர் நடைபெற்றது. ராவண ஸைன்யத்துடன் மோதிய அரசர் படைகள் வெகு சீக்கிரமாகவே அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸ்ஸைப் போலவும் ஸமுத்திரத்தை அடைந்த நதிகள் போலவும் நாசத்தை அடைந்தன. இப்படித் தமது படைகள் அழிவதைக் கண்ட அரசர் மிகவும் கோபம் கொண்டவராய் இந்திரனுடைய தநுஸ்ஸிற்கு ஒப்பான தமது வில்லில் நாணேற்றி மிகக் கடுமையான பாணங்களால் ராவணனது அமாத்யர்களான மாரீசன் முதலானவர்களை அடித்தார். அவரது பாணவர்ஷத்தின் முன் நிற்க மாட்டாதவர்களான அவர்கள் பயந்து ஓடினர். பிறகு அநரண்யன், நூற்றெட்டுப் பாணங்களால் ராவணனுடைய சிரஸ்ஸின் மீது அடிததார். ஆனால் அந்த பாணங்கள் ராவணனது தலையில் சிறு கீரல்களைக்கூட உண்டாக்கவில்லை.
அது எப்படி இருந்ததெனில் மேகத்திலிருந்து வெளிப்படும் மழைத் தாரைகள் மலைமுகட்டில் விழுந்து எப்படிச் சிதறிப்போமோ அவ்வாறு இருந்தது. இப்படியாகத் தனது அமாத்யர்கள் ஓடுவதையும் தனது தலை மீது பாணங்கள் விழுவதையும் கண்ட ராவணன் மிகுந்த கோபத்துடன், அநரண்யனது சிரஸ்ஸின் மீது ஓங்கி (கையால்) அடித்தான். வஜ்ராயுதத்தின் தாக்குதல் போன்ற அந்த அடியினால் பீடிக்கப் பட்ட அரசர் ரதத்திலிருந்து கீழே விழுந்தார். இடியினால் தாக்குண்ட பனை மரம் போல் கீழே விழுந்த அநரண்யனைப் பார்த்து ராவணன். 'அரசனே! என்னை எதிர்த்து நின்றாயே, இப்போது நீ அடைந்ததென்ன? அரச சுகத்தில் ஈடுபட்டிருந்த நீ என்னைப்பற்றியும், எனது பராக்ரமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்க மாட்டாய் என நினைக்கிறேன். என்னை எதிர்த்து நிற்பவன் இவ்வுலகினில் எவருமில்லை’ என்று கூறினான்.
இப்படி ராவணன் கூறக்கேட்ட அநரண்யன். ''ராவண! காலத்தின் கோலத்தை யாராலும் மாற்ற முடியாது. தற்பெருமை கூறிக் கொள்ளும் உன்னால்  நான் கொல்லப்பட்டதாக கர்வம் கொள்ளாதே. காலதேவனாலேயே நான் ஜயிக்கப்பட்டேன். நீ அதற்குக் காரணபூதனாக மட்டுமேயாகிறாய் என்பதை உணரவும். உன்னுடன் யுத்தம் செய்த நான் தோற்று ஓடினேனா? இக்ஷ்வாகு வம்சத்தையே நீ அவமதித்துவிட்டாய். ஒன்று மட்டும் கூறுகிறேன் கேட்டுக் கொள். நான் , செய்த தான தர்மங்கள், தவங்கள், ப்ரஜைகளின் பரிபாலனம் இவை நேர்மையுடன் செய்யப் பட்ட தாயிருப்பின் இதே எனது வம்சத்தில் பிறக்க இருக்கும் தசரதகுமாரனால் உனது உயிர் பறிக்கப்படும். இது ஸத்யம்'' என்று கூறிப் ப்ராணனை விட்டார்.
இப்படி அநரண்யன் கூறி முடித்தபோது வானில் தேவ துந்துபிகள் முழங்கின. ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது, இப்படிச் சாபத்தைப் பெற்றான் ராவணன்.


இருபதாவது ஸர்க்கம்
[நாரத ராவண ஸம்வாதம். ராவணன் யமனை ஜயிக்க யமபுரம்
செல்லுதல்.]


இப்படியாக ராவணன் பூவுலகில் உள்ளவர்களைப் பயமுறுத்திக் கொண்டு ஆகாசமார்க்கமாக ஸஞ்சரித்தான். அப்போது ப்ரம்ம புத்திரரான நாரத மகரிஷி அவனை அணுகினார். ராவணனும் அவரை வணங்கி உபசரித்து அவருடைய வருகையின் காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், "ராவண! மஹாவிஷ்ணு அரக்கர்களை வதம் செய்வது போல் நீயும் கந்தர்வர், நாகர் முதலானவர்களை வென்று வருவதைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளேள். ஆயினும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். அதைக் கேட்ட பிறகு உன் மனத்திற்குத் தோன்றியதைச் செய்வாயாக. அதாவது இந்த நிலவுலகத்தில் உள்ளவர்கள் உன்னால் வதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இவர்கள் எப்போதுமே ம்ருத்யுவுக்கு வசப்பட்டவர்கள். தானே அழிவுறும் இயல்பினர்கள். தெய்வத்தால் வெல்லப்பட்டவர்கள், பசி வியாதி துன்பம் இவைகளுக்கு உட்பட்டவர்கள். ஆதலால், இலங்கேச்வர! இவ்வுலகத்துப் பிராணிகளைக் கொண்டு செல்லும் யமதர்மனை ஜயிப்பாயாகில் ஸர்வத்தையும் ஜயித்ததாக ஆகும்” என்று கூறினார்.
இதைக் கேட்ட ராவணன் மந்தஹாஸத்துடன் நாரதரைப் பார்த்து, ''தேவகந்தர்வ பாடகர்களுக்கு விருப்பமானவரே! சண்டையைக் காண விரும்புமவரே! நாரத! நான் இப்போது ரஸாதலத்தை வெல்வதற்காகப் புறப்பட்டுள்ளேன். பிறகு மூவுலகங்களையும் ஜயித்து என் வசமாக்கிக்கொள்வேன். பிறகு ஸமுத்திரத்தைக் கடைந்து அமுதத்தையும் எடுக்க முயற்சி செய்வேன்' என்றான்.
இப்படிக் கூறக் கேட்ட நாரதர் ராவணனிடம், "இதோ இந்த மார்க்கமாகச் செல். மிக்க கஷ்டமான இந்த வழிதான் யமபட்டணத்திற்குச் செல்வது” என்றார். இதைச் செவியுற்ற ராவணன், “நாரதரே, இதோ இப்போதே செல்கிறேன். வெல்கிறேன் யமதர்மனை. பிறகு லோகபாலகர்களையும் முன்பு ப்ரதிஜ்ஞை செய்தபடி வதைக்கிறேன்'' என்று கூறி வணங்கித் தென்திசை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான் மந்திரிகளுடன்.
மஹாதேஜஸ்வியான நாரதமகரிஷி, ஒரு முஹூர்த்த காலம் பின்வறுமாறு   ஆலோசித்தார்—"இந்த மூவுலகங்களும் ஆயுஸ்ஸின் முடிவின் தர்மப்படி எந்தக் காலனால் தண்டிக்கப் படுகின்றனவோ அந்தக் காலன் இந்த ராவணனால் எவ்வாறு தண்டிக்கப்படப் போகிருன்? அவரவர் கொடுத்த - செய்த கார்யங்களுக்கு அநுகுணமான பலாபலன்களைக் கொடுக்கும் கடமை வீரனான காலனை எவ்வாறு வெல்வான்? ஸகலத்திற்குமே ஸாதனமான அக்காலனையும் வெல்வதற்குரிய சக்தி இந்த ராவணனிடம் இருக்கிறதா? இதனைக் காண எனக்கு மிக்க ஆசையாக இருக்கிறது. எனவே அவர்களது யுத்தத்தைக் கண்டு களிப்புறுவேன்'' எனத் தீர்மானித்து ராவணன் அங்கு செல்வதற்கு முன்பாகவே அங்கே சென்று விஷயத்தைக் கால தேவனிடம் தெரிவிக்கக் கருதிச் சம்யமபுரம் போய்ச் சேர்ந்தார்.



38


37

செவ்வாய், 13 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 11

பதினேழாவது ஸர்க்கம்


(வேதவதியின் கதை, அவளால் ராவணன் பெற்ற சாபம் முதலியன ]


            ஹே ராமசந்திர ! பிறகு ஒரு ஸமயம் ராவணன் தனது விமானத்தில் அமர்ந்து கொண்டு ஹிமயமலையடிவாரத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தான். அங்கு மிகவும் அழகுள்ளவளும், மான்தோலைத் தரித்தவளாயும், சடை முடியையுடையவளும், தேவகன்யகை போல்  விளங்குகிறவளும் தவம் செய்து வருபவளுமான ஒரு கன்யையைக் கண்டான். அவளைக் கண்டதும் காமவயப்பட்டவனாய் அவளருகிற் சென்று, புன்சிரிப்புடன் "பெண்ணே! மங்களமானவளே! உனது யெவளனப் பருவத்திற்குத் தக்க கார்யமல்லவே நீ செய்வது ! உனது அழகிற்கு உற்றதல்ல உனது செயல். கண்டவரனைவரும் மயங்கும் விதமானது உனது ரூபம். மங்களகரியானவளே! இந்த நியமம் பிரயோஜனமற்றது. நீ யார் ? நீ செய்வது யாது? உன்னை வளர்ப்பவா் யார்? உன்ளைப் புணர்பவர் மிகவும் புண்யம் செய்தவரேயாவர். இந்த எனது கேள்விகளுக்கு பதில் கூறவும், எதற்காக இந்தக் கடினமான தவக்கோலம்?'' எனக் கேட்டான்.
         இவ்வாறு ராவணனால் கேட்கப்பட்ட அந்தப் பெண், அவனை முறைப்படி உபசரித்து. "நான் ப்ருஹஸ்பதியின் புதல்வரும், அவரைப் போலவே புத்திசாலியுமான குசத்வஜர் என்பவரின் புதல்வி. இடையறாது அவர் செய்த வேதாப்யாஸத்தின் பயனாகப் பிறந்து வளர்ந்தவள் நான். எனவே எனது பெயரே "வேதவதீ" என்பதாம். மிக்க ரூபவதியான என்னை மணந்துகொள்ளத் தேவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்-ராக்ஷஸர், நாகர்கள் என்றெல்லோரும் விரும்பிக் கேட்டனர். ஆனால் எனது பிதா அவர்களில் யாருக்கும் என்னைக் கன்யகாதானம் செய்து கொடுக்க விரும்பவில்லை. ஹே நிசாசரனான ராவணனே! ஏன் மறுத்து விட்டார் என்பதையும் கூறுகிறேன், கேட்டுக் 'கொள்! மூவுலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமந் நாராயணனையே அவரது ஜாமாதாவாக ஆக்கிக் கொள்ள விரும்பினார். ஆகவேதான் மற்றவரை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

          'இப்படி அவர் மறுத்துவிட்டதனால் கோபம் கொண்ட தம்பன் என்னும் அரக்கன், இரவில் அவர் உறங்கும்போது அவரைக் கொன்று விட்டான். மஹாபதிவ்ரதையான எனது தாயார் இறந்த கணவரின் உடலைத் தழுவியவாறே தீக்குளித்துவிட்டாள். இறந்த எனது தந்தையின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்விக்கக் கருதி, நாராயணனையே பதியாக்கிக்கொள்ள விரும்பி, ப்ரதிஜ்ஞை செய்துகொண்டு, கடுந் தவம் புரிந்து வருகிறேன். ஹே ராக்ஷஸச்ரேஷ்டனே! இதுதான் எனது சரிதம். நீ கேட்டபடி அனைத்தையும் கூறிவிட்டேன். ஸ்ரீமந் நாராயணனே எனது பர்த்தா. புருஷோத்தமனான மற்றெவரும் எனக்கு பர்த்தாவல்ல. அந்த மஹாநுபாவனை அடைவதற்காகவே கடுந்தவத்தை மேற்கொண்டுள்ளேன்.' ஹே ராஜன்! பௌலஸ்த்ய நந்தனனான உன்னையும் நான் அறிவேன். ஏன், எனது தவ வலிமையால் இவ்வுலகிலுள்ள அனைத்தையுமே நான் அறிவேன், சென்று வா' என்றாள்.
           கடுமையான தவ வலிமையுள்ள வேதவதி இவ்வாறு கூறியதும் ராவணன் விமானத்திலிருந்து கீழே இறங்கி வந்து, காமவயப்பட்டவனாக அவளைப் பார்த்து, “ஹே அழகிய இடையையுடையவளே! நீ மிகவும் கர்வமுள்ளவளாக இருக்கிறாய். ஆகையால் தான் உன்னுடைய புத்தியும் இப்படியாயிற்று, மான்போன்ற கண்களை யுடையவளே! நற்குண ஸம்பந்தையான நீ இவ்வாறு கூறுவது தகாது. மூவுலகிலும் சிறந்த வடிவழகுள்ள நீ இவ்வாறு ப்ரதிஜ்ஞை பூண்டு கடுந்தவம் புரிந்து வந்தால் உனது யௌவனந்தான் பாழாகும். நான் சொல்வதைக் கேள். நான் இலங்காபுரிக்கு அதிபதி. என் பெயர் தசக்ரீவன் என்பதாம். என்னைப் பர்த்தாவாக அடைந்து நீ ஸகல போகங்களையும் அநுபவிப்பாயாக. ஹே அழகியவளே! நீ "விஷ்ணு" என்று கூறுகிறாயே; அவன் யார்? அவன் தவத்தாலோ பலத்தாலோ ஐச்வர்யத்தாலோ எனக்கு ஸமானமாகமாட்டான். அவனை நீ விரும்பாதே" என்றான்.
     இதைக் கேட்டுக் கடுங்கோபமடைந்த வேதவதியானவள் ராவணனைப் பார்த்து, "ஹே அரக்கர் தலைவனே! எல்லோராலும் வணங்கத்தக்கவனும். மூவுலகங்களுக்கும் அதிபதியாகவுமுள்ள மஹாவிஷ்ணுவைக் குறித்து இவ்வாறு பேசாதே. உன்னைத் தவிர்த்து வேறு யாரும் அவரை அவமதிக்க மாட்டார்கள். புத்திமான்களுக்கு இது அழகல்ல" என்று உரைத்தாள்.
                  இப்படிக் கூறிய வேதவதியை ராவணன் கடுங்கோபம் கொண்டவனாய்த் தனது கையினால் அவளது தலைமயிரைப் பற்றினான்.

            அவனது கைவிரல்கள் தன் தலைமயிரில் பட்டதும் கோபமடைந்த வேதவதி தனது கையைக் கத்தியாகச் செய்து அந்தக் கூந்தலை வெட்டிவிட்டாள். பிறகு அவனைப் பார்த்து. ஜ்வலிக்கும் அக்னி போன்றவளாய் நின்றுகொண்டு, "துஷ்டனே! உன்னால் தீண்டப்பட்ட நான் உயிர்வாழ விரும்பவில்லை. உன் எதிரிலேயே அக்னியில் பிரவேசிக்கப் போகிறேன். ஆயினும் உனது மரணத்தின் பொருட்டு நான் மறுபடியும் உண்டாகப்போகிறேன் நான் ஸ்திரீயானபடியால் புருஷனான உன்னைக் கொல்வது தகாதது. உனக்குச் சாபம் கொடுப்பதும் நல்லதல்ல. அதனால் எனது தபஸ்ஸிற்கு ஹானி ஏற்பட்டுவிடும். நான் செய்த தபஸ் ஸத்யமானதாக இருந்தால் நான் அயோநிஜையாகப் பிறந்து தர்மாத்மாவால் வளர்க்கப்பட வேண்டும்" என்று கூறி அக்கினியில் பிரவேசித்து விட்டாள். அந்தச்சமயத்தில் தேவதைகள் பூமாரி பொழிந்தனர்.
       அவளே பிறிதொரு ஸமயம் தாமரைமலரில் பெண்குழந்தையாக உண்டானாள். அந்தக் குழந்தையை ராவணன் கண்டெடுத்துத் தனது அரண்மனைக்குச் சென்றான், மந்திரிகளிடம் இந்தக் குழந்தையைக் காண்பித்தான். ஸாமுத்ரிகா லக்ஷணமறிந்த மந்திரி இக்குழந்தையைக் கண்டதும் ராவணனைப் பார்த்து, "அரசே! இந்தக் குழந்தை இங்கிருந்தால் உனக்கும் இலங்கைக்குமே நாசம் ஏற்படும். எனவே இதை ஸமுத்திரத்தில் விட்டுவிடவும்" என்று சொன்னான். அதன்படியே ராவணன் அந்தக் குழந்தையைப் பெட்டியில் வைத்து ஸமுத்ரத்தில் விட்டான். அந்தக் குழந்தைதான் ஜனக மஹாராஜன் யாகார்த்தமாகப் பூமியைக் கலப்பையால் கர்ஷணம் (உழும்பொழுது) செய்யும் போது கண்டெடுக்கப்பட்டவள். ஆகையாலேயே ஸீதை என்றும் பெயர் பெற்றாள். உனக்கு மனைவியாகவுமானாள். நீ மஹாவிஷ்ணுவன்றோ? முன்பே அவளுடைய கோபாக்னியால் தஹிக்கப்பட்ட தசானனன் உனது பராக்கிரமத்தால் அழிவை அடைந்தான்.
     முன்பு க்ருதயுகத்தில் வேதவதி என்ற பெயருடன் இருந்தவளே. இந்தத் த்ரேதாயுகத்தில் ராவணனின் அழிவிற்காக ஜனக மஹாராஜனின் இல்லத்தில் உண்டாகி வளர்ந்தாள். மேலும் இவள் உனக்காக மனுஷ்ய லோகத்தில் உண்டாகப்போகிறாள் என்றார்.

பதினெட்டாவது ஸர்க்கம்


[ராவணன் மருத்தன் என்ற அரசன் செய்த வேள்வியை அழிக்கச் செல்லுதல்,
அங்குகூடியிருந்த தேவர்கள் பயந்து ஓடுதல் முதலியன,]


      இப்படி வேதவதி அக்கினியில் புகுந்தவளவில் ராவணன் தனது விமானத்திலேறிச் சென்றான். உசீரபீஜம் என்கிற தேசத்தின் வழியாகச் செல்லும்போது, அந்தத் தேசத்தரசனான மருத்தன் என்பவன் அங்கு யாகம் செய்வதைக் கண்டான். அந்த யாகத்தை ப்ருஹஸ்பதியின் ஸஹோதரரும் ப்ரஹ்மரிஷியுமான ஸம்வர்த்தர் என்பவர் முன்னின்று நடத்தினார். அதில் ஹவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்திரன் முதலான தேவர்களே நேரில் வந்திருந்தனர்.
        அந்த யாகபூமியை அடைந்த ராவணனைக் கண்ட தேவர்கள், மிகவும் பயந்தவர்களாய், விலங்குகளாகவும், பறவைகளாகவும், உருப் பெற்றவர்களாக ஓடி ஒளிந்தனர்.
           இந்த்ரன் மயிலாகவும், யமன் காக்கையாகவும், குபேரன் ஓணானாகவும், வருணன் ஹம்ஸமாகவும் வடிவெடுத்தனர். மற்றத் தேவர்களும் ஓடி மறைந்தனர்.
        சத்ருக்களை வெல்லும் ஆற்றல் பெற்ற ராவணன் நேராக யஜமானனான மருத்தனிடம் சென்றான். இது எப்படி இருந்ததெனில் நாயானது யாகசாலையில் புகுந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு இருந்தது.
     அப்போது ராவணன் அவ்வரசனைப் பார்த்து, ' நீ என்னுடன் சமர் புரிய வா அல்லது தோற்றேன் என்று ஒப்புக் கொள். எதைச் செய்யப் போகிறாய்? என்றான்.
        இப்படிப் பேசக் கேட்ட மருத்தராஜா. 'யார் நீ?" எனக் கேட்டான். அதற்கு ராவணன் பெரிதாகச் சிரித்துக்கொண்டு பின் வருமாறு கூறினான்-
     "ஏ அரசனே! உன்னுடைய இந்த வார்த்தை என்னைப் பிரீதி யடையச் செய்கிறது. என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேட்கவும்- நான் குபேரனின் தம்பி ராவணன் என்னை நீ தெரிந்து கொள்ளவில்லை. இம்மூவுலகிலும் என்னை அறிந்திராதவன் நீ ஒருவனே யாகிறாய். உடன்பிறந்தவனை ஜயித்து அவனிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டதே இந்தப் புஷ்பக விமானம்'' என்றான்,

      இதைக் கேட்ட மருத்தன் ராவணனைப் பார்த்துப் பரிஹாஸத்துடன் “அப்படியா? நீ மிகவும் தன்யனாகிறாய். ஏனெனில் ஜ்யேஷ்டனான உடன்பிறந்தோனை யுத்தத்தில் ஜயித்தாயல்லவா? செய்யக் கூடாததைச் செய்து அதையே பெருமையாகவும் கூறிக்கொள்வது மிக மிக மெச்சத்தக்கது! எப்படிப்பட்ட தனத்தைச் செய்து இப்படியான வரத்தைப் பெற்றனையோ? இந்த உனது பௌருஷம் கேட்கக் கூட அஸஹ்யமாக உள்ளது. “என்று கூறியதுடன், 'நில் நில்!  இங்கிருந்து நீ உயிருடன் திரும்பமாட்டாய்” என்றும் கூறிக்கொண்டு ராவணனுடன் யுத்தம் செய்ய விரும்பினான்.
    அப்போது அங்கு ஆசாரியராக இருந்த ஸம்வர்த்த முனிவர். அரசனைப் பார்த்து ஸ்நேஹபாவத்துடன், "ராஜன்! நான் சொல்வதைக் கேட்கவும். இப்போது யுத்தம் செய்வது தகாது. ஏனெனில் இது மாஹேச்வர யாகம். (மஹேச்வானை உத்தேசித்துச் செய்யப் படும் யாகமாகும்.) இது பூர்த்தியாகாமற் போனால் குலத்திற்கே நாசம் உண்டாகும். யாகத்தில் தீக்ஷை பெற்றவன் கோபப்படுவதோ யுத்தம் செய்வதோ கூடாது. மேலும் யுத்தத்தில் ஜயிப்பது என்பது நிச்சயமற்றது. ராவணனே வரத்தினால் மேம்பட்டவனாக உள்ளான்" என்று கூறினார்.
            ஆசார்யருடைய வார்த்தையைக் கேட்ட அரசனும் யுத்தம் செய்வதிலிருந்து நிவ்ருத்தனானான்.

           இதைக் கண்ட ராவணன் மிகவும் களிப்புற்று 'ஜயித்தேன்' எனக் கூறிக்கொண்டே,. அங்கு யாகத்தைக் காண வந்திருந்த முனிவர்களை வதம் செய்து அவர்களுடைய ரத்தத்தால் யாகசாலையை அசுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
         இப்படியாக ராவணன் அவ்விடத்தை விட்டகன்றதும், ஓடி ஒளிந்த தேவர்கள் மறுபடி தங்கள் ஸ்வயரூபத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். மயிலுருவெடுத்த இந்த்ரன் நீலவர்ணமுள்ள மயிலைப் பார்த்து, "உனக்கு இனி ஸர்ப்பங்களிடமிருந்து பயம் வேண்டாம். அவை உன்னைத் தீண்டா. மேலும் நீலமான உனது தோகைகளில் பல வர்ணங்களுடன் கூடிய கண்கள் பல விளங்கும். மழை பொழியும் போது நீ நர்த்தனம் செய்து களிப்பாயாக" என்று வரத்தை அளித்தான். அதற்கு முன்பெல்லாம் மயில்கள் நீலவர்ணங்களாக மட்டுமே இருந்தன இந்திரனுடைய வரபலத்தாலேயே இப்போது அவ்வினங்கள் அனைத்துமே பல வர்ணத் தோகைகளை உடையவையாக விளங்குகின்றன.

           அதே போல் தர்மராஜனும் தான் உருக் கொண்ட காக்கையினிடம் அன்புடையவனாக, 'ஹே காக்கையே! உன்னிடத்தில் எனக்கு மிகவும் அன்பு ஏற்பட்டுள்ளது. நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். அதாவது என்னால் ஸகல பிராணிகளும் அநேகவிதமான நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நோய் ஏதும் உனது குலத்தாருக்கு உண்டாகாது மேலும் உங்களுக்கு மரண பயமும் வேண்டாம். மனிதர்கள் உங்களைக் கொல்லாத வரையில் நீங்கள் உயிர் வாழலாம். மேலும் என் வசத்திலுள்ள (யமலோகத்திலுள்ள) மனிதர்கள், பூலோகத்திலுள்ளவர்கள் கொடுக்கும் பலிப்ரஸாதத்தை நீங்கள் புஜித்ததும் தாங்கள் பசி தீர்ந்தவர்களாவார்கள்” என்றும்
            ஹம்ஸ உருவெடுத்த வருணன் ஹம்ஸத்தைப் பார்த்து “கங்கா ஜலத்தில் ஸஞ்சரிக்கும் ஹம்ஸமே! உனது நிறம் சந்திரமண்டலம்போல் வெளுப்பாக இருக்கும். எனக்கு இருப்பிடமான தடாகம், நீர் நிலைகளை அடைந்து சுகமாக ஸஞ்சரித்து மகிழ்வாயாக” என்று வரம் அளித்தான்.  அதற்கு முன் ஹம்ஸங்கள் வெளுத்த நீலவர்ணங்களாகவும், இறக்கைகளின் நுனிப் பாகம் நீலவர்ணங்களாகவும், நடு வயிறு சிறுபசுமையுடையதாகவும் இருந்தனவாம்.
           பிறகு வருணன் ஓணானைப் பார்த்து, (தான் உருக் கொண்டது) 'ஓணானே! உனக்கு ஸ்வர்ணவர்ணமான உரு உண்டாக வரம் அளிக்கிறேன். உனது தலை எப்போதுமே அவ்வாறாகவே விளங்கும்'' என வரமளித்தான்.
       இவ்வாறாகத் தாங்கள் தாங்கள் அபிமானித்தவைகளுக்கு வரமளித்து தேவர்கள் மருத்தனுடைய யாகம் முடிவுற்றதும் தந்தாம் உலகம் அடைந்தனர்,

ராமாயணம்–உத்தர காண்டம் 10

பதினாறாவது ஸர்க்கம்


[நந்திதேவனின் சாபம், கைலாஸமலையை ராவணன் அசைத்தல்,

அதன்கீழ் அவனது கைகள் சிக்கிக் கொள்வது, சிவனைத் துதித்தல்,

'ராவணன்' என்று பெயர் பெறுதல் முதலியன.]

  
         கைலாஸ பர்வதத்தின் ப்ரதேசமாயும், ஸ்கந்தன் பிறந்த இடமுமான சரவணம் என்கிற ஸ்தானத்திற்குச் சென்றான் தசக்ரீவன் புஷ்பக விமானத்துடன்.  அந்த வனமானது ஸ்வர்ண மயமாகக் காட்சியளித்தது. ஒளிமயமான அந்தப் பிரதேசம் இரண்டாவது சூர்ய மண்டலம் போல் விளங்கியது. அவன் அந்த வனம் அமைந்த மலை மீது புஷ்பகத்துடன் செல்ல விரும்பினான். ஆனால் அந்த விமானம் மேலே செல்லவில்லை. தடைப்பட்டு நின்றுவிட்டது. இதைக் கண்ட தசக்ரீவன், மந்திரிகளைப் பார்த்து, "நமது விருப்பப்படி செல்லக் கூடிய இந்த விமானம், ஏன் மேலே செல்லாமல் நின்றுவிட்டது? இந்த மலை மீதுள்ள யாரோ ஒருவன் இதைச் செல்லவொட்டாமல் தடுத்திருப்பானா?" என்று கேட்டான். 

          இதைக் கேட்டு மந்திரிகளுள் ஒருவனும் புத்திசாலியுமான மாரீசன் என்பவன், "ராஜாவே! இந்த விமானம் காரணமேதுமின்றித் தடைப்பட்டு நிற்காது. ராஜராஜனான குபேரனாலாவது தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படியின்றேல், குபேரனுக்குச் சொந்தமான இது தலைவன் இல்லாமையால்,    தானேயாவது செல்லாமல்  இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே-அங்கு கருப்பு கலந்த மஞ்சள் நிறத்தவனாயும் மொட்டைத் தலையனும், மஹாபலிஷ்டனுமான நந்திதேவன் அவர்கள் பக்கம் தோன்றி, சிறிதும் பயமின்றி தசக்ரீவனைப் பார்த்து. "நான் மஹாதேவனான சங்கர பகவானின் வேலைக்காரன். இந்த மலை மீது சங்கரன் க்ரீடை செய் (விளையாடு)கிறார். தேவர்களோ யக்ஷர்களோ மனுஷ்யர்களோ கந்தவர்களோ பக்ஷிகளோ ஸர்ப்பங்களோ மற்றவர்களோ இதன் மீது செல்லக் கூடாது. ஆகவே புத்தி கெட்டவனே! நீ இதன் மீது செல்ல விரும்பாதே. திரும்பிச் சென்றுவிடு. மீறினால் நாசத்தையடைவாய்" என்றனன்.
         இப்படி நந்திதேவன் கூறக் கேட்ட தசானனன் - புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி கோபத்தால் சிவந்த கண்களை உடையவனாயும், அசைகின்ற கர்ண குண்டலங்களை உடையவனுமாகி "யாரவன் சங்கரன்?'' என்று கூறிக்கொண்டே மலையடிவாரத்தை யடைந்தான். அதே ஸமயம் அங்கு மலையடிவாரத்தில் தசானனன் முன்பாக, பளபளக்கும் கூர்மையையுடைய சூலத்தைக் கையிலேந்திய வனாக நந்திதேவன் இரண்டாவதான பரமசிவனைப் போல் நின்று கொண்டிருந்தான்.
      அப்படி நின்ற நந்தியைக் கண்ட தசானனன், "குரங்குமுகமுடையவனே!" என்று உரக்கச் சொல்லிச் சிரித்தான். இவ்வாறு கூறிச் சிரித்ததைக் கண்ட நந்திதேவன் மிகவும் கோபமடைந்து அவனருகில் சென்று, "கெட்ட புத்தியுடையவனே! 'குரங்கு முகமுடையவன்' என்று என்னை நீ பரிஹஸித்தபடியால், என் போன்ற உருவமுடையவர்களும், எனக்கு நிகரான பராக்ரமத்தை உடையவர்களுமான பலர் உண்டாகப்போகிறார்கள். குரங்குகளான அவர்கள் நகங்கள் பற்கள் இவற்றினை ஆயுதங்களாக உடையவர்களாகவும், மிகவும் கொடியவர்களாயும், மனத்தைப் போல் வேகமாகச் செல்பவர்களாயும், சண்டை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும், மலைகள் போன்றவர்களாயும் இருக்கப்போகுமவர் களால் உனக்கும் உனது குலத்திற்கும்  உனது ராஜ்யத்திற்கும் அழிவு  உண்டாகப்போகிறது.  இப்போதேகூட நான் உன்னை அழித்திடுவேன். ஆனால் நீயே கெட்ட நடத்தைகளால் அழிந்து போயுள்ளாய்" என்று எச்சரித்தான். இப்படி நந்திதேவன் கூறியதும் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவதுந்துபி வாத்யங்கள் முழங்கின.
   இவற்றினை லக்ஷ்யம் செய்யாத தசானனன் அந்த மலையருகில் சென்று, "ஹே பசுபதியே! இந்த மலைதானே எனது புஷ்பக விமானத்தை மேலே செல்லவிடாமல் தடுத்தது. இதன் மீதுதானே சங்கரன் க்ரீடை செய்கிறான். இந்த மலையையே இல்லாமற் செய்துவிடுகிறேன். அரசன் போல் இதன் மீது அமர்ந்துள்ளவனின் ப்ரபாவம் எப்படிப் பட்டதென்று காண்கிறேன். தனக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை அவன் உணரட்டும்" என்று சொல்லிக்கொண்டு தனது கைகளை மலையினடியிற் செலுத்தியவனாய் அதை அசைத்தான். அப்போது அந்த மலை அசைந்தாடியதால் அதிலுள்ள சிவ கணங்கள் அசைந்து ஆடின. சிறிதே ஆட்டம் கண்ட பார்வதிதேவியும் மஹேச்வரனை அணைத்துக்கொண்டாள்.
       ஹே ராம சந்த்ர ! அப்போது தேவச்ரேஷ்டரான ஹரன் விளையாட்டாக, தனது காலின் பெருவிரலினால் அந்த மலையை அழுத்தினான். சிறிது சலனமற்று ஸ்திரமாக நின்ற மலையின் கீழே அகப்பட்டுக்கொண்ட ராவணனது கைகள் சக்தியற்றுப் போயின இதைக் கண்ட தசானனது மந்த்ரிகள் ஸ்தம்பித்துப் போயினர். அப்போது அவன் கைகளை விடுவிக்க முடியவில்லையே என்கிற கோபத்தாலும், அவற்றில் உண்டான வலியினாலும் பீடிக்கப்பட்டவனாய்ப் பெருங்கூச்சலிட்டான். அந்தப் பெருங்கூச்சலினால் (சப்தத்தால்) மூவுலகங்களும் பயந்து நடுங்கின. மனிதர்களனைவரும் உலகுக்கே நாசமுண்டாயிற்று என்று நடுங்கினர். நடுவானில் ஸஞ்சரித்துக்கொண்டிருந்த தேவர்கள் தமது மார்க்கத்தை விட்டு வழுவிச் சென்றனர். மலைகள் வெடித்துச் சிதறின. யானைகள் பிளிறின. பிராணிகள் அனைத்தும் பயந்து நின்றன. ஸமுத்திரம் கொந்தளித்தது. பூமியும் அசைந்தது. ஹே ராம! நாகங்கள் கந்தவர்கள் இப்படி அனைவருமே பயந்தனர். இப்படியாக அனைவருமே எதனால் இப்படியாச்சுது என்று அறியாவண்ணம் இருந்தனர். 

          இப்படி ரோஷத்துடனும் வலியுடனும் சத்தமிடும் தசானனனைக் கண்ட அவனது மந்த்ரிகள். ''ஹே தசானன! இப்போது நீ செய்ய வேண்டியது யாதெனில் உமையின் கணவனும், நீலகண்டனுமான அந்தச் சங்கரனை திருப்தி செய்விப்பதொன்றே. அந்தச் சங்கரனைத் தவிர்த்து வேறு யாரும் உன்னை ரக்ஷிக்க சக்தரல்லர், நீ வணக்கத்துடன் அவனை ஸ்தோத்ரம் செய்யவும். கருணாமூர்த்தியான அவன் உன்னை நிச்சயாக ரக்ஷிப்பான்" என்றனர்.
       மந்திரிகளால் உணர்த்தப்பட்ட தசக்ரீவன், மஹேச்வரனை அநேக விதமான **ஸாமாக்களால் ஸ்தோத்ரம் செய்தனன். இப்படியாக ராவணன் ஆயிரம் வருஷங்கள் ஸ்தோத்ரம் செய்தான்.
ஸந்தோஷமடைந்த சங்கரன் அந்த மலையின் சிகரத்தில் தோன்றியவராய் தசானனனைப் பார்த்து 'உனது கைகளை விடுவித்தேன் உனது துதியால் மனமகிழ்ச்சி யடைந்தேன். மலை அழுத்தியபோது நீ இட்ட சப்தத்தினால் மூவுலகங்களுமே பயந்து நடுங்கின. அந்த நடுக்கத்திற்குக் காரணம் உனது கத்தலே. 'சத்தமிட்டு உலகத்தை நீ நடுங்கி வைத்தபடியால் உனக்கு இது முதல் 'ராவணன்' என்கிற பெயர் உண்டாகட்டும். நீ உன் இஷ்டப்படிச் செல்லலாம். தேவர்களோ மனிதர்களோ யக்ஷர்களோ மற்றும் இவ்வுலகிலுள்ள அனைவருமே உன்னை ராவணன் என்றே அழைக்கக்கடவர். நான் உனக்கு அனுமதியளித்துவிட்டேன். இனி நீ உன் இஷ்டப்படிச் செல்லலாம்” என்று அருளிச்செய்தார்.
           இவ்வாறு சம்புவினால் அநுக்ரஹிக்கப்பட்ட ராவணன், அவரைப் பார்த்து,"மஹாதேவனே! உமக்கு என்னிடம் ப்ரீதி இருக்குமேயாகில் யான் வேண்டும் வரத்தை அளித்திட வேண்டும். அதாவது தேவர்கள், கந்தர்வர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் இவர்களால் எனக்கு மரணம் உண்டாகக்கூடாது என்கிற வரத்தைப் பிரம்மதேவனிடமிருந்து பெற்றுள்ளேன். மனிதர்களை நான் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எனக்கு நீண்ட ஆயுளையும் உயர்ந்ததான "சஸ்த்ரத்தையும் அளித்திடவும்" என்று பிரார்த்தித்தான். சங்கரனும் உனது மிகுதியுள்ள ஆயுளை உன் இஷ்டப்படி கழித்திடுவாய் என்று ஆசி கூறி, உயர்ந்த சந்த்ரஹாஸம் என்கிற கத்தியை அவனுக்கு அளித்துப் பின்வருமாறு கூறினார் "ராவணா இதை நீ அநுதினமும் பூஜித்து வரவேண்டும். இதை அவஜ்ஞை செய்யக்கூடாது. அப்படி ஏதாவது நேர்ந்தால் இது மறுபடி என்னிடமே திரும்ப வந்துவிடும்''
        இப்படி மஹேச்வரனால் பெயரிடப்பட்ட ராவணன் அவரை வணங்கி விடைபெற்றுப் புஷ்பக விமானத்தில் அமர்ந்து உலகத்தில் ஸஞ்சாரம் செய்தான்,   அவனது பராக்ரமத்தை அறியாத பலர் . அவனுடன் சண்டையிட்டுத் தோற்றுப் போயினர்.  அவனது வலிமையை அறிந்த பலர் அவனிடம் தோழமை கொண்டு வாழ விழைந்தனர்.
                   இவ்வாறாகக் கர்வம் கொண்ட ராவணன் உலகங்களைப் பயமுறச் செய்து வாழ்ந்து வந்தான்.



திங்கள், 12 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 9

பதினான்காம் ஸர்கம்
[ராவணன் தனது ஸைன்யத்துடன் குபேர புரம் சென்று அங்கே யுத்தஞ் செய்தல்.]


இலங்கையிலிருத்து புறப்பட்ட ராவணன் மிகவும் பலிஷ்டர்களாயும், சண்டை செய்வதையே விரும்பியுள்ளவர்களுமான, மஹோதரன் ப்ரஹஸ்தன், மாரீசன், சுகன், ஸாரணன், தூம்ராக்ஷன் என்கிற ஆறு மந்த்ரிகளுடனும் பெருஞ்சேனையுடனும் கூடினவனாய், கைலாஸமலையிலுள்ள குபேரபுரியை அடைந்தான். யுத்த ஸந்நாஹத்துடன் வந்துள்ள ராவணனைக் கண்ட குபேர ஸைனிகர்கள் தனது அரசனின் ஸகோதரன் என்கிற கௌரவபுத்தியுடன் உடனடியாக எதிர்க்காமல், குபேரனிடம் சென்று முறையிட்டனர். குபேரனும் இதையறிந்து அவர்களுக்கு ராவணனுடன் யுத்தம் செய்ய அநுமதி அளித்தான். பிறகு இரு ஸைன்யங்களுக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்றது. குபேர ஸைனியங்களால் அடிக்கப்பட்ட ராவணன் மந்திரிகள் மிகவும் ச்ரமப்பட்டனர். இதைக் கண்ட ராவணன் சிம்மநாதஞ் செய்து கொண்டு யக்ஷஸைன்யத்தினுள் புகுந்தான். யக்ஷர்கள் லக்ஷக்கணக்கில் சேர்ந்துகொண்டு மந்த்ரிகளைச் சூழ்ந்தடித்தனர். ஸைன்யத்தின் நடுவில் புகுந்த ராவணனையும். சக்தி கதை முஸலம் முதலிய ஆயுதங்களால் அடித்தனர். இப்படி அடிபட்ட ராவணன் கொஞ்சமும் வ்யஸனப்படாமல் கதை என்கிற ஆயுதத்தைக் கையிலேந்தியவனாய் யக்ஷர்களை ஆயிரக்கணக்கில் வதம் செய்தான். காற்றுடன் கூடிய அக்னியானது எவ்வாறு உலர்ந்த புல்சுமையை - உலர்ந்த விறகுக் கட்டைகளைச் சீக்கிரமாகக் கொளுத்திவிடுமோ அவ்வாறு இருந்தது. ராவணாதிகளால் இவ்வாறு அழிக்கப்பட்ட யக்ஷ ஸைன்யத்தில் பலர் ஓடி ஒளிந்தனர். பலர் மாண்டனர். சிலர் கைகால்களை இழந்தனர். வெள்ளப் பெருக்கால் நதியின் கரை எவ்வாறு பாதிக்கப்படுமோ அவ்வாறு யக்ஷஸைனிகர்கள் பாதிக்கப்பட்டனர்.
              இதைக் கண்ட குபேரன் ஸம்யோத கண்டகன் என்கிற ஸேனாதிபதியைப் பல யக்ஷர்களுடன் தசக்ரீவனை எதிர்க்க அனுப்பிவைத்தாள். அவனும் மாரீசன் என்கிற ராவணனின் மந்த்ரியைத் சக்ராயுதத்தால் அடித்தான். மாரீசன் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தான். சற்றைக்கெல்லாம் மூர்ச்சை தெளிந்தெழுந்து ஸம்யோதகண்டகனைப் புறமுதுகிட்டோடும்படி அடித்து விரட்டினான். இவ்வாறாக யக்ஷஸைந்யம் ஒடியொளிந்ததும், ராவணன் தனது ஸைன்யத்துடன் குபேரப்பட்டிணத்தின் முகத்வாரத்தை அடைந்தான். அதனுள் ப்ரவேசிக்க முற்பட்ட ராவணனை அங்கே காவலாளனாக நின்ற சூர்யபானு என்பவன் அங்குள்ள தோரணதண்டத்தை எடுத்து அடித்தான். அதனால் அடிபட்ட ராவணன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு, கைரிக தாது வழிந்கோடும் மலை போலக் காட்சியளித்தான். ஆயினும் சிறிதும் கலங்கினானில்லை பிரம்மதேவனின் வர மகிமையே இதற்குக் காரணம், உடனேயே அவன் அதே தோரண தண்டத்தைக் கொண்டு, அடித்தவனையே திரும்ப அடித்தான். அந்த அடியால் காவலனான யக்ஷன் இருந்த இடம் தெரியாமல் சூர்ணமாக்கப்பட்டு இறந்து போனான். இதைக் கண்ட அங்கு இருந்த ஸைனிகர்களும் நதிகளையும் குகைகளையும் தேடியோடி ஒளிந்தனர்.


பதினைந்தாவது ஸர்க்கம்

[ராவண குபேர யுத்தமும், புஷ்பகவிமான ஹரணமும்]


             பயந்தோடும் யக்ஷர்களைக் கண்ட குபேரன் மணிபத்ரன் என்னும் யக்ஷர்தலைளை விளித்து, “வீரனே! நீ நமது ஸைன்யத்துடன் சென்று கெட்ட நடத்தையை உடையவனும் மஹாபாபியுமான ராவணனை அடக்குவாயாக, நமது வீரர்களைக் காத்திடுவாய்" என்று கட்டளையிட்டு அனுப்பினான், தன்னிகரற்ற பராக்ரமசாலியான அவனும் நாலாயிரம் யக்ஷர்களுடன் சென்று அரக்கர் ஸைன்யத்துடன் மோதினான், அந்த யுத்தத்தைக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் கந்தர்வர்களும் மிகவும் வியப்படைந்தனர். அப்போது அந்த யுத்தத்தில் ப்ரஹஸ்தனனால் ஆயிரம் யக்ஷர்களும், மஹோதரனால் ஆயிரம் பேரும், கோபமடைந்தவனும் யுத்தத்தையே விரும்புபவனுமான மாரீசனால் நிமிஷ காலத்தில் ஈராயிரம் யக்ஷர்களும் கொல்லப்பட்டனர். நேர்மையுடன் யுத்தம் செய்யும் யக்ஷபலம் மாயாயுத்தம் செய்யும் அரக்கர் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியுயாமற் போனது விந்தையன்றே?
                தூம்ராக்ஷன் என்பவன் உலக்கையாகிற ஆயுதத்தால் மணிபத்ரனுடைய மார்பில் அடித்தான். அந்த அடியினால் சிறிதும் கலங்காத மணிபத்ரன், தூம்ராக்ஷனை கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியைத் தாங்கமாட்டாமல் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு தரையில் விழுந்தான் தூம்ராக்ஷன். இவன் அடிபட்டு வீழ்ந்ததைக் கண்ட தசக்ரீவன் மணிபத்ரனைக் குறித்து ஓடி வந்தான்.
           அவன் ஓடி வருவதைக் கண்ட மணிபத்ரன் மூன்று சக்தி ஆயுதங் கொண்டு தசானனனை அடித்தான். தசக்ரீவனும் மணிபத்ரனைச் சிரஸ்ஸில் அடித்தான். அந்த அடியால் அவனது முகுடமானது பக்க வாட்டில் சாய்ந்து நின்றது. அதுமுதல் அந்த யக்ஷன் 'பார்ச்வ மௌளீ' “எனப் பெயர் பெற்றான். அளன் யுத்தத்தில் தோல்வியுற்றதும் யக்ஷஸைன்யம் மறுபடியும் கலக்கமடைந்தது.
               இதைக் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த குபேரன் கதையைக் கையிலேந்தியவனாய். சுக்ரன். ப்ரோஷ்டபதன் என்கிற மந்த்ரிகளுடனும், சங்கநிதி பத்மநிதி அதிபர்களுடனும் கூடியவனாய் யுத்த களத்திற்கு வந்து. தந்தையின் சாபத்தால் க்ரூரகுணமுடையவனான ராவணனைப் பார்த்து, .”ஹே மூடனே! நான் பல தடவை உனக்கு உணர்த்தியும் நீ உணரவில்லை. இந்தத் துஷ்கர்மாவின் பலனை நீ பின்னால் நரகத்தை அடையும்போது அறிவாய். அறிந்திடாமல் விஷத்தைக் குடித்தாலும் பிறகு அது அவனை அழித்தே தீரும். இப்படிக் கொடிய கர்மாவைச் செய்திடும் உன்னை எந்தத் தெய்வமும் ஸஹித்துக்கொள்ளாது. எவனொருவன் தாய் தந்தை ஆசார்யன் இவர்களை அவமதிக்கிறானோ அவன் அதன் பலனை யமபட்டணத்தை அடைந்து அநுபவித்தே தீருவான். எவனொருவன் அநித்யமான இந்தச் சரீரம் இருக்கும்போது நன்மையைச் செய்யாமல் தீமையைச் செய்கிறானோ அவன் இறந்தபிறகு தானடையும் கதியைக் கண்டு கலங்குகிறான். தர்மத்தைச் செய்வதால் ராஜ்யமும் சுகமும் கிடைக்கும். அதர்மம் செய்வதால் துக்கமே உண்டாகும். ஆகையால் சுகமடையும்பொருட்டு தர்மம் செய்ய வேண்டும். அதர்மத்தைச் செய்யக் கூடாது.


"மாதரம் பிதரம் யோ ஹி ஆசார்யஞ்சாவ மந்யதே |
ஸ பச்யதி பலம் கஸ்ய ப்ரேத ராஜ வசம் கத: !
அத்ருவேஹிரீரே யோ ந கரோதி த போர்ஜநம் |
ஸ பச்சாத் தப்யதே மூட : ம்ருதோ திருஷ்ட்வாத்மநோட கதிம் ||
தர்மாத் ராஜ்யம் தநம் ஸௌக்யம் - அதர்மாத்துக்க மேவச | 
தஸ்மாத் தர்மம் ஸுகார்த்தாய குர்யாத் பாபம்-விஸர் ஜயேத் ||


பாபம் செய்வதன் பலம் துக்கமே. மூடன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வதற்காகப் பாபத்தையே செய்கிறான்.
                       செய்த பாபம் மற்றொரு பாபத்தைச் செய்யக் காரணமாகிறது. அதேபோல் புண்யம் செய்தால் அதுவே மற்றொரு புண்ணியத்தைச் செய்யத் தூண்டுகிறது. எனவே மஹான்களின் கருத்துப்படி நீ ஸம்பாஷணைக்குக் கூட அநர்ஹன்" என்று கூறி, ராவணனது மந்த்ரிகளை அடித்து விரட்டினான். அவர்களும் பயந்து ஓடினர். 

                     இதைக் கண்ட ராவணன் மிகுந்தசினத்துடன் குபேரனை  எதிர்த்தான். குபேரன் ராவணனைத் தனது கதையினால் தலையில் அடித்தான். இருவருமாக வெகு நேரம் யுத்தம் செய்தனர். குபேரன் ராவணன் மீது ஆக்நேயாஸ்த்ரத்தை ப்ரயோகித்தான். அவனும் அதை வாருணாஸ்த்ரத்தால் தடுத்தான். பிறகு ராவணன் அரக்கர்களுக்கே உரியதான மாயையினால், புலியாகவும், பன்றியாகவும், யக்ஷனாகவும், ராக்ஷஸனாகவும் பற்பல உருக் கொண்டு ஒரே ஸமயத்தில் அநேக யக்ஷர்களை அழித்துத் தான் பிறர் கண்களுக்குக் காணப் படாதவனாகவே இருந்தான். பிறகு மிகப் பெரிய கதாயுதத்தைத் கையிலேந்திக் குபேரனின் தலையிலடித்தான். அந்த அடியால் குபேரன் மயக்கம் கொண்டு ரத்தம் வழிந்தோடத் தரையில் வீழ்ந்தான். வேறு பட்ட மரம் போலக் கீழே சாய்ந்த குபேரனை அவனது அமைச்சர்கள் அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு நந்தனவனத்தை அடைந்து ஆச்வாஸப்படுத்தினர்.
               தசக்ரீவன் தனதனை வென்ற மகிழ்ச்சியுடன், அதற்கடையாளமாக அவனது 'புஷ்பகம்' என்கிற விமானத்தைக் கவர்ந்துகொண்டான். ஸுவர்ணமயங்களும் வைடூர்ய மயங்களுமான ஸ்தம்பங்களை யுடையதும், நினைத்தபடி நினைத்த இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தியை உடையதுமான அந்த விமானத்தின் மீதமர்ந்துகொண்டு, மூவுலகத்தையுமே வெற்றி கண்டது போன்ற கர்வம் கொண்டவனாய் கைலாஸமலையிலிருந்து கீழே வர விரும்பினான்.

(நந்திதேவனின் சாபம், கைலாசமலையை அசைத்த ராவணன் கைகள் அதனடியில் சிக்கிக் கொள்வது, சிவனைத்துதித்து ராவணன் என்ற பெயர் பெறுதல் அடங்கிய பதினாறாவது சர்க்கம் தொடரும்)


31


30

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

ராமாயணம்–உத்தர காண்டம் 8

பதின்மூன்றாவது ஸர்க்கம்
[கும்பகர்ணனின் தூக்க மாளிகை நிர்மாணம்,
ராவணன் வெறிச் செயல் முதலியன.)


     சில காலம் சென்றபிறகு, பிரம்மதேவனது சாபத்தின்படி கும்பகர்ணனுக்குத் தூக்கம் (நித்திரை) வர ஆரம்பித்தது. அது கண்ட அவன் ராவணனிடம் சென்று, 'அண்ணா! நான் தூக்கத்தின் வசமாக இருக்கிறேன். எனவே அதற்காக எனக்கு ஒரு தனி மாளிகையை நிர்மாணம் செய்து கொடுக்கவும். அங்கு நான் யாதொரு தடையுமின்றி நித்திரை செய்ய விரும்புகிறேன்' என்றான். ராவணனும் அவன் விருப்பப்படி சிறந்த கட்டட நிபுணர்களைக் கொண்டு, கைலையங்கிரிக் கொப்பானதும், ஒரு யோஜனை அகலம் கொண்டதும், இரண்டு யோஜனை நீளமுள்ளதும், வெளுப்பானதுமான மாளிகையைக் கட்டுவித்தான். அது ஸ்படிக மணிகளால் இழைக்கப்பட்டதும், வைடூர்ய மயமான ஸ்தம்பங்களை உடையதும். தங்கத்தால் இழைக்கப்பட்டதுமாயும், மிகவும் அழகுள்ளதாகவும், காண்போருள்ளம் கொள்ளை கொள்வதுமாக விளங்கியது. அந்த மாளிகையில் தூங்க ஆரம்பித்து கும்பகர்ணன் அநேகமாயிரம் ஆண்டுகள் விழிக்காமல் தூங்கினான்.
       ராவணன் மிகவும் மதோந்மத்தனாகி, தேவர்கள் யக்ஷர்கள் கந்தர்வர் கின்னரர் ரிஷிகள் முதலானவர்களை ஹிம்ஸித்தும் கொன்று குவித்தும் வந்தான். அழகிய உதியானவனங்களையும் அழித்தொழித்து வந்தான். இவை அனைத்தையுமறிந்த குபேரன் தனது தம்பி மீதுள்ள அன்பினால் மிகவும் மனம் வருந்தியவனாய் அவனுக்கு நன்மை செய்யக் கருதித் தூதுவளை அனுப்பினான். அவனும் இலங்காபுரியை அடைந்து விபீஷணனிடம் சென்றான். விபீஷணனும் அவனை நன்கு உபசரித்துக் குபேரனின் நலனை விசாரிதது அறிந்துகொண்டு ராவணனிடம் அழைத்துச் சென்றான்.
       அப்போது ராவணன் ஸபா மண்டபத்தில் உயர்ந்த சிம்மாஸனத்தில் அமர்ந்திருந்தான். தபோமஹிமையால் ப்ரகாசிக்கும் ராவணனைக் கண்ட  தூதன் அவனை வணங்கி 'ஜய ஐய மஹாராஜன்' என்று போற்றிச் சிறிது நேரம்  மௌனமாக இருந்தான். பிறகு, 'அரசே! உமது ஸஹோதரரான குபேரன் தங்களுக்கு அனுப்பிய செய்தியைக் கூறுகிறேன், கேட்பீராக. நமது தாய் தந்தையருடைய குலத்திற்கும், அவர்களது நடத்தைக்கும் அநுகுணமாகவே நமது நடத்தையும் இருக்க வேண்டும். நீ இதுவரை செய்த அக்ரமங்கள் போதும், இனி நல்லதையே செய்யவும். நீ ரிஷிகளை வதைத்ததையும், நந்தவனங்களை அழித்ததையும் நான் கேள்விப்பட்டேன். உன்னை அழிக்கும் உபாயத்தைத் தேவர்கள் ஆலோசித்து வருவதையும் கேள்விப்படுகிறேன். ராக்ஷஸாதிபனே! உன்னால் பலவாறு அவமதிக்கப்பட்டுள்ளேன். ஆயினும் உடன்பிறந்த பாசத்தினால் அவற்றை மறந்து கடமை உணர்வினால் உனக்கு நன்மையை உணர்த்துகிறேன். நீ சிறுவன்; ரக்ஷணைக்கு அர்ஹன். இதுவரை நீ எங்கே சென்றிருந்தாய்? எனக் கேட்கலாம். நான் ஹிமயமலைச் சாரலையடைந்து ருத்ரனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தேன். அங்கு மஹாதேவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தேன். அங்கு மஹாதேவனை உமாதேவி ஸஹிதனாகக் கண்டேன். மிக்க காந்தியுடன் கூடியவளான உமையின் மீது எனது இடது கண் பார்வை யானது யத்ருச்சையாக விழுந்தது. அதுவும் 'யார் இந்த ஸ்த்ரீ?' என்ற எண்ணத்துடன்தான். எனது பார்வை சென்றதேயன்றி வேறு காரணத்தால் இல்லை. அப்படியிருக்கும்போதே தேவியின் மஹிமையால் - தேஜஸ்ஸால் எனது இடது கண் எரிக்கப்பட்டது. புழுதிகளால் மறைக்கப்பட்ட நெருப்புத் துண்டம் போல ஆனது. மஞ்சளாகவும் ஆனது. பிறகு நான் அங்கிருந்து வேறிடம் சென்று, மௌன வ்ரதத்துடன் எண்ணூறு வருஷம் முன்பு போலவே மிகக் கடுமையான தவத்தைச் செயது முடித்தேன். அதைத்தான் கேதார வ்ரதம் என்பார்கள். அந்த வரத்தை நான் அநுஷ்டித்து முடித்ததும் பகவான் சங்கரர் மிகவும் ஸந்தோஷமடைந்து எனக்குக் காட்சி கொடுத்தார். என்னைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார் - 'தர்மஜ்ஞனான குபேரனே! நீ செய்த தவத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த வ்ரதம் என்னால் முன்பொருகால் அநுஷ்டிக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது நீதான் இதை அநுஷ்டித்தாய். மற்றவர் யாரும் இதை அநுஷ்டிக்கவில்லை. நானேதான் இப்படி ஒரு விரதம் உண்டு என்பதை உலகிற்குக் காண்பித்தேன். எனவே நீ எனது நண்பனாகிறாய். தேவியின் தேஜஸ்ஸால் எரிக்கப்பட்டு மஞ்சள் நிறமான ஒரு கண்ணையுடைய உனக்கு இனி ஏகாக்ஷி பிங்களன்' என்கிற சிறப்புப் பெயரும் உண்டாகட்டும்" என்று.
     அவருடைய கருணைக்குப் பாத்திரனாகி அநுக்ரஹம் பெற்று என் இருப்பிடத்திற்கு வந்தேன். அங்கு உனது கெட்ட நடத்தையைக் கேள்விப்பட்டேன். மிகவும மனம் வருந்தினேன். குடியின் பெயரைக் கெடுக்கக் கூடிய செய்கையை விட்டொழித்திடவும். ரிஷிகளும் தேவர்களும் உன்னை அழிப்பதற்கான உபாயங்களைத தேடியலைகின்றனர். இதை அறிந்து இனி நலமுடன் வாழ வழி தேடவும் என்று கூறி முடித்தனன்.
         இவ்வாறு தூதன் கூறக் கேட்ட ராவணன் மிகவும் கோபமடைந்தான். கண்கள் சிவப்பேறின. பற்களை நறநறவென்று கடித்து, கைகளைப் பிசைந்துகொண்டு தூதனைப் பார்த்து, 'தூதனே! நீ கூறியதை அறிந்தேன். நீயாக இதைச் சொல்லவில்லை. அந்த உடன் பிறந்தவனால் ஏவப்பட்டு இவ்வாறு கூறுகிறாய். எனக்கு நன்மை செய்யக் கருதிக் குபேரன் இதைக் கூறியனுப்பவில்லை. தனக்குச் சங்கரனுடைய நட்புக் கிடைத்துள்ளது என்கிற பெருமையை எனக்கு அறிவிக்கவே இவ்வாறு கூறியுள்ளான். இதை நான் ஸஹித்துக்கொள்ள மாட்டேன். எனக்கு முனபிறந்தவன் என்கிற ஒரே காரணத்தைக் கொண்டு இதுவரை அவனை நான் வதம் செய்யாமல் விட்டு வைத்தேன். இப்போது அவனுடைய இந்த வார்த்தையைக் கேட்டது முதல் எனது மனத்தில் இந்த மூவுலகத்தையுமே வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது. அவனொருவனின் நிமித்தமாகவே நான்கு லோகபாலர்களையுமே யமலோகத்திற்கு அனுப்பி வைக்கிறேன" என்று கூறியவாறே தூதனைக் கத்தியால் வெட்டிக் கொன்று அவனது மாம்ஸத்தை அரக்கர்களுக்கு உணவாக அளித்து விட்டு, ரதத்தில் ஏறி அமர்ந்துகொண்டு, மூவுலகங்களையும் ஜயித்திடக் கருதி முந்துறமுன்னம் குபேரப் பட்டணத்தை நோக்கிச் சென்றான்.
28
(தொடரும்]


27

ராமாயணம்–உத்தர காண்டம் 7

பன்னிரண்டாவது ஸர்க்கம்


[ராவணன் முதலியவர்களின் விவாகம்,
ராவணனுக்கு மகன் பிறப்பு. அவனுக்குப் பெயரிடல்]


     இவ்வாறு லங்காதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்ட ராவணன் தனது ஸஹோதரியான சூர்ப்பணகையை, அரக்கா்குல சிரேஷ்டனும், காலகன் என்பவனின் புத்திரனுமான விதயுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
      பிறகு ஒரு ஸமயம் ராவணன் தனிமையில் வேட்டையாட நினைத்துக் கானகம் சென்றான்.. அங்கே திதியின் மைந்தனான மயன் என்பவன் புத்திரியுடன் ஸஞ்சரிப்பதைக் கண்டாள். அவனருகிற் சென்ற ராவணன் அவனைப் பார்த்து, ''தாங்கள் யார்? ஏன் இந்தக் கானகத்தில் கன்யகையுடன் ஸஞ்சரிக்கின்றீர்?'' என்று கேட்டான். அதற்கு மயன், “எனது வரலாற்றைக் கூறுகிறேன்' என்று பின்வருமாறு கூறினான்- 

         எனது பெயர் மயன் என்பதாம். ஹேமா என்கிற அப்ஸரஸ் ஸ்திரீயைப்பற்றி நீர் அறிந்திருப்பீர். அவள் மிக்க அழகுள்ளவள். தேவதைகள் அவளை எனக்கு மணம் . செய்து கொடுத்தனர், அந்த அழகியுடன் நான் ஐந்நூறு வருஷங்கள் கூடிக் களித்திருந்தேன். அவள் தேவகார்யார்த்தமாக என்னிடமிருந்து பிரிந்து சென்று பதின்மூன்று வருஷங்கள் ஆகின்றன. பதினான்காவது வருஷமும் வந்துவிட்டது. அவள் இன்னமும் திரும்பி வரவில்லை. நான் அவளுடைய ஞாபகார்த்தமாக ஸ்வர்ண மயமான ஒரு நகரத்தை உண்டுபண்ணினேன். அந்த நகரம் வஜ்ர வைடூர்ய ரத்தினங்களால் பளபளக்கும்படியாக எனது மாயசக்தியால் செய்துள்ளேன். எனது மனைவியின்றி, அதில் நான் மிகவும் வருத்தத்துடன் வஸித்து வருகிறேன். இவள் எனது மனைவியின் வயிற்றில் பிறந்தவள். எனது மகள். இவளுக்குத் தகுந்த கணவனைத் தேடும்பொருட்டு இவளுடன் இங்கெல்லாம் ஸஞ்சரிக்கின்றேன். பெண்ணிற்குத் தந்தையாக இருப்பதன் கஷ்டத்தை அறிந்தவன் நான். பெண்ணானவள் பிறந்த - புகுந்த இடங்களை ஸங்கடத்தில் ஆழ்த்தவும் கூடுமன்றோ ? எனவே இவளுடன் வரனைத் தேடுகின்றேன். இவளைத் தவிர்த்து எனக்கு மாயாவி என்றும், துந்துபி என்றும் இரண்டு குமாரர்களும் உள்ளனர். இதுதான் எனது லரலாறு' என்று. பிறகு ராவணணைப் பார்த்து  "நீர் யாரென்று நான் அறியலாமா?" எனக் .  கேட்டான். அதற்கு ராவணன். "புலஸ்த்ய வம்சஸ்தரான விச்ரவஸ் என்ற மஹரிஷியின் புதல்வனான தசக்ரீவன் எனப்படுபவன்" என்று கூறினான்.
       இப்படிக் கூறக் கேட்ட மயன். ராவணனை ரிஷிபுத்ரன் என அறிந்து மிகவும் ஸந்தோஷமடைந்தான்  அவனது வலிமையை முன்னமே கேட்டறிந்திருந்தபடியால் தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்க முடிவு செய்தான். பிறகு அவனைப் பார்த்து. புன்னகை செய்து, 'இவள் எனது புதல்வி; மந்தோதரீ என்பது இவளது பெயர். இவளை உமக்குக் கன்யகாதானம் செய்து கொடுக்கிறேன்' என்று கூறி. அங்கேயே தீ வளர்த்து விவாகமும் செய்து கொடுத்தான். ராவணனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவளை மணந்து கொண்டான். மயன் தான் கடுந்தவம் புரிந்து பெற்றதாயும், அமோகமும் (வ்யர்த்தமாகாததும்) ஆன சக்தி என்கிற ஓர் ஆயுதத்தையும் ராவணனுக்குக் கொடுத்தான். அந்தச் சக்தி ஆயுதத்தால் தான் ராவணன் லஷ்மணனை யுத்தத்தில் அடித்து மூர்ச்சையடையும்படி செய்தான். ராவணன் தான் மணம் செய்துகொண்டு இலங்கை திரும்பியதும், தம்பியான கும்பகர்ணனுக்கு வைரோசனனின் பெண் வயிற்றுப் பேத்தியான வஜ்ரஜ்வாலை என்பவளையும், விபீஷணனுக்கு கந்தர்வராஜனான சைலூஷனுடைய குமாரியான ஸரமா என்பவளையும் மணம் புரிவித்தான். மானஸஸரஸ்ஸின் கரையில் இந்தக் குழந்தை பிறந்திருக்கும்போது மழைப் பெருக்கால், அந்த ஸரஸ் நிரம்பி வழிந்து குழந்தை இருக்குமிடம் வரையில் ப்ரவாஹம் வந்ததாம். அப்போது அவள் தாய் ஸர:-ஹே தடாகமே, மா-வேண்டாம். (பெருக்கெடுக்காதே) என்றாளாம். ப்ரவாஹம் நின்றுவிட்டதாம். அதனாலே இவளுக்கு ஸரமா என்ற பெயர் பிரஸித்தியாயிற்றாம்.
          இப்படியாக இம் மூவரும் மணந்துகொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர்.
          பிறகு மந்தோதரீ மேகநாதன் என்கிற மகளைப் பெற்றாள். அவனே இந்த்ரஜித் என்று உங்களால் கூறப்பட்டவன். அவன் குழந்தையாகப் பிறந்தவுடனேயே அழுதான். அது மேகங்களின் இடிமுழக்கம் போலிருந்ததாம். ஆகையாலேயே அவனுக்கு மேகநாதன் எனப் பெயரிட்டனன் அவன் தந்தை. அந்தக் குழந்தை அந்தப்புர ஸ்த்ரீகளாலே வளர்க்கப்பட்டு வந்தான். எப்படிப் போலெனில் நெருப்பானது சுள்ளி (சிறிய விறகு)களால் வளர்க்கப் படுவது போல் அது கண்டு அவன் தாய்தந்தையர் மிக மகிழ்ந்தனர்.

ராமாயணம் -- உத்தர காண்டம் 6

பதினோராவது ஸர்க்கம்


[பிரம்மாவினிடம் வரம் பெற்ற ராவணாதிகள் இலங்கையிலிருந்து

குபேரனை வெளியேறும்படி செய்து அங்கு இவர்கள் வஸித்தல்]


       இவ்வாறாக, ராவணன் முதலானவர்கள் பிரம்மதேவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கேள்வியுற்ற சுமாலி என்ற அரக்கன் தான் கொண்டிருந்த பயத்தை விடுத்துத் தன்னுடைய மந்திரிகளான மாரீசன் ப்ரஹஸ்தன் விரூபாக்ஷன் மஹோதரன் முதலியவர்களுடனும் தன்னைச் சோ்ந்த மற்றும் பலருடனும் பாதாளத்தை விட்டுப் புறப்பட்டு தசக்ரீவனிடம் சென்றான். அவனை அணுகிக் கட்டித் தழுவிப் பின்வருமாறு கூறினான் - "குழந்தாய்! நீ பிரம்மதேவனிடமிருந்து உயர்ந்த வரங்களை அடைந்துள்ளாய் என்பதை அறிந்து நாங்கள் பயம் தெளிந்துள்ளோம். எவரிடமிருந்து பயந்தவர்களாய் நாங்கள் இலங்கையை விட்டுப் பாதாளலோகம் சென்றோமோ அந்த விஷ்ணுவினால் ஏற்பட்ட பயம் எங்களை விட்டுப் போய்விட்டது. இனி நீயே எங்கள் தலைவன். நான் கூறுவதை ஸாவதானமாகக் கேள் . குபேரன் இப்போது வஸித்து வருகிற லங்காபுரி ஆதியில் நம்முடையதாக இருந்தது. அதை நீ எப்படியாவது ஸாம -தான பேத - தண்டம் என்கிற உபாயங்களால் கைப்பற்றி அங்குள்ள உனது ஸஹோதரனான குபேரனை ஓடிப் போகச் செய்யவும். அப்போதே எங்களது மனோரதம் பூர்த்தியாகும். அப்பனே! இந்த இலங்கைக்கு நீயே இனி அதிபதியாகப் போகிறாய். சிதைந்து போன ராக்ஷஸ  வம்சம் உன்னால் விருத்தியடைய வேண்டியிருக்கிறது. மிகவும் பலசாலியான நீயே எங்கள் அனைவர்க்கும் பிரபுவாய் இருக்கப் போகிறாய்" என்று.

         அதைக் கேட்ட ராவணன் மாதாமஹனான சுமாலியைப் பார்த்து, "தாத! தாங்கள் இவ்விதம் கூறுவது உசிதமன்று. எனது ஜ்யேஷ்ட ப்ராதாவான குபேரன் குருவைப் போன்றவன். அவனை எதிர்ப்பது தகாது" என மறுத்துக் கூறினான். அதற்கு ஏதும் மறுமொழி கூற மாட்டாமல் சுமாலி சென்றுவிட்டான்.
        

          சில காலம் சென்றது. ப்ரஹஸ்தன் என்கிற சுமாலியின் மந்திரியான அரக்கன் ராவணனிடம் வந்தான். சுமாலி சொன்னதைப் போலவே லங்காபுரி விஷயமாகப் பேசினான். சுமாலிக்குக் கிடைத்த பதிலே இவனுக்கும் கிடைத்தது. ராவணனின் பதிலைக் கேட்டதும் ப்ரஹஸ்தன், "ராவண! நீ உனது பாட்டனது பேச்சை மறுப்பது சரியன்று. சூரர்களுக்கு ஸஹோதரன் என்கிற பரிவு ஒரு பொழுதுமில்லை. அதற்கு ஓர் உதாஹரணம் சொல்லுகிறேன் கேள். முன்னொரு காலத்தில் அதிதி என்றும் திதி என்றும் இரண்டு ஸஹோதரிகள் கச்யப ப்ரஜாபதியை மணம் செய்துகொண்டனர். அவர்களுள் அதிதி என்பவள் தேவதைகளையும், திதி என்பவள் அசுரர்களையும் பெற்றனர். முதலில் தர்மஸ்வபாவமுள்ள அசுரர்களே இந்த மூவுலகாட்சியையும் கைக்கொண்டு ஸமர்த்தர்களாய்ச் சிறப்புடன் விளங்கினர். பிறகு மஹாவிஷ்ணுவால் யுத்தத்தில் அசுரர்கள் வெல்லப்பட்டு அழிவற்றதான இம் மூவுலகாட்சி தேவர்கள் வசமாக்கப் பட்டது. நீ இப்போது புதிதாக இதை ஏதும் செய்யப்போவதில்லை. இப்படிப் பல தடவை தேவாசுரர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே இவ் விஷயத்தில் எனது வார்த்தையைக் கேட்பாயாக. அண்ணன் என்கிற கௌரவத்தைப் பாராட்டாமல் நான் சொன்ன நல்ல வார்த்தையைக் கேள்" என்றனன்.


       இப்படி ப்ரஹஸ்தனால் போதிக்கப்பட்ட ராவணன், ஸந்தோஷம் அடைந்தவனாய் முஹூர்த்த காலம் ஆலோசித்து அப்படியே என்று ஒப்புக்கொண்டான். அதே நாளில் தசானனன் மிகவும் ஸந்தோஷமடைந்தவனாய் தனது அநுசரர்களான ராக்ஷஸர்களுடன் ச்லேஷ்மாதக வனத்திற்குச் சென்றான். அங்கே சென்று திரிகூடமலையில் இருந்துகொண்டு ப்ரஹஸ்தனைக் குபேரனிடம் தூது அனுப்பிப் பின் வருமாறு கூறும்படி சொன்னான்-' “அரசனே! இந்த லங்காபுரி முன்பு அரக்கர்களுடைய வாஸஸ்தானமாக இருந்தது. இதை நீ அபஹரித்துள்ளாய். பரிசுத்தனானவனே! இது உனக்கு அழகல்ல. ஆகவே தன்னிகரற்ற பராக்கிரமசாலியே! இதை நீ எங்கள் பொருட்டுக் கொடுத்தாயேயாகில், எனக்கு மிகவும் பிரீதி உண்டாகும். தர்மப்படி நடந்தவனாகவும் ஆவாய்'' என்று.


          அந்த ப்ரஹஸ்தனும் குபேரனால் ரக்ஷிக்கப்படும் இலங்கையை அடைந்து, மிகவும் கம்பீரமாக அவனைப் பார்தது, "ஸமஸ்த ஆயுதங்களையும் தரிக்கும் மஹாவீரனே! நன்னடத்தையால் சிறந்து விளங்கும் தர்மிஷ்ட! உமது ஸஹோதரனான தசக்ரீவனால் உம்மிடம் நான் அனுப்பப்பட்டு வந்துள்ளேன். ஸகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவரே! அவன் சொன்னதானது- இந்த அழகான லங்கா பட்டினம் முன்பு மஹாவீரா்களான ஸுமாலி முதலான ராக்ஷஸர்களால் ஆளப்பட்டது. ஆகையால் இதை நீ நல்வார்த்தை மூலம் யாசிப்பவனுக்குக் கொடுத்துவிடு'' என்று.


      இப்படி ப்ரஹஸ்தன் சொல்லக் கேட்ட குபேரன் அவனிடம், "ப்ரஹஸ்த! முன்பு இவ்விலங்காநகரம் எவருமின்றிச் சூன்யமாக இருந்தது. அதுபற்றியே இதை எனது தந்தை எனக்கு அளித்தார். நான் எனது பரிவாரங்களுடன் இங்கு வஸிக்கிறேன். நீ எனது ஸஹோதரனிடம் சென்று நான் சொன்னதாகச் சொல். நகரமோ ராஜ்யமோ என்னுடையது என்று யாது உளதோ அவை யாவும் அவனுடையதும் அன்றோ? அவனுக்கும் எனக்குமுள்ள ராஜ்யமும் செல்வமும் பிரிக்கப்படாதனவே அல்லவா? ஆதலால் இவ்விராஜ்யத்தை அவனும் தடையின்றி அநுபவிக்கலாம்" என்று இவ்வாறு கூறி அவனை அனுப்பி வைத்தான்.


    இப்படி ப்ரஹஸ்தனை அனுப்பிவிட்டுக் குபேரன் தனது தந்தையிடம் சென்றான். அவரை வணங்கி, "தந்தையே! ராவணன் இவ் விலங்காபுரி முன்பு ராக்ஷஸர்களுடையதாக இருந்தது. அதை இப்போது நீ திரும்பக் கொடுத்துவிடு என்று தூதர் மூலமாக. வேண்டுகோள் விடுத்துள்ளாள். இதில் நான் செய்ய வேண்டுவது யாது என்பதைத் தேவரீரே அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.


        இவ்வாறு குபேரன் கூறக் கேட்ட விச்ரவஸ் அவனைப் பார்த்துக் "மகனே! நான் சொல்வதைக் கேட்பாயாக. ராவணனும் என்னிடம் வந்து இவ் விஷயமாக ப்ரஸ்தாபித்தான். நான் அவனை நயமாகவும் பயப்படும்படியாகவும் எச்சரித்தேன். கெட்ட புத்தியுள்ள அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே நீ நன்மை பயக்கக்கூடியதாயும் தர்மத்துடன் கூடியதுமான எனது உபதேசப்படி நடந்துகொள். அதாவது நீ இவ்விலங்காபுரியை விட்டுவிட்டுக் கைலாய பர்வதத்திற்குச் செல்லவும். உனது பரிவாரங்களுடன் அங்கே சென்று வஸிக்கவும். அங்கு நதிகளுள் உயர்ந்ததான மந்தாகினி ஓடுகிறது. அதில் சூரியன் போல ஒளியுள்ள பொற்றாமரைகளும், நீலோத்பலப் பூக்களும், ஆம்பல் புஷ்பங்களும், மற்றும் மணமுள்ள அனேக புஷ்பங்களும் விளங்குகின்றன. மேலும் அங்கு அனேக தேவர்களும் கந்தர்வர்களும கின்னரர்களும் தந்தாம் மனைவியருடன் வந்து கூடிக் களிக்கின்றனர். அதுவே உனக்குத் தகுந்த வாஸஸ்தானமாகும். நீ அரக்கனான ராவணனுடன் பகைமை கொள்ளாதே. இவன் கொடிய தவமியற்றிப் பெற்ற வரபலத்தை நீ அறிவாயன்றோ?" என்று கூறினார்.


         தகப்பனார் கூறியபடியே குபேரன் தனது பரிவாரங்களுடன் கைலையங்கிரியையடைந்து வஸிக்கலாயினன்.


           ப்ரஹஸ்தன் மூலமாக இவ் விஷயத்தை அறிந்த ராவணன் தனது தம்பிமார்களுடன் இலங்கையில் குடிபுகுந்தனன். நீலமேகங்கள் போன்ற அரக்கர்களால் நிறைந்து காணப்பட்ட இலங்கையில் அரசனாக முடி சூடப்பெற்று விளங்கினான் தசக்ரீவன்.
       

              குபேரனும் சந்திரன் போன்று விளங்கிய கைலாஸமலையில் மாட மாளிகைகளுடன் கூடிய அலகாபுரி எனகிற நகரத்தை உண்டு பண்ணி தனது பரிவாரங்களுடன். அதன் தலைவனாக விளங்கினான்


24