புதன், 1 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் --- உத்தர காண்டம் 38

எழுபத்தி ஒன்றாவது ஸர்க்கம்

[ஸ்ரீராம ஸபைக்கு, யமுநாதீர வாஸிகளான முனிவர்களின் வருகை,
அவர்களை வரவேற்று உபசரித்து
, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக,
ஸ்ரீராமன் பிரதிஜ்ஞை செய்வது
, அவர்கள் ஸ்ரீராமனைப் போற்றுவது.)

                வஸந்த பௌர்ணமி கழிந்த மறுநாள், காலை ஸ்ரீராகவன் தனது, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ராஜ்ய காரியங்களை கவனிக்கச் செல்ல ஆயத்தமாயினன். அதுஸமயம், ஸுமந்திரர் அங்கு வந்து ராகவனை வாழ்த்தி - “ஸ்ரீராகவ! நமது அரண்மனை வாயிலில், யமுனாதீர வாஸிகளான முனிவர்கள், பார்கவரையும் ச்யவனரையும் முதன்மையாகக் கொண்டு, தங்களை தரிசிக்க வந்துள்ளனர்” என்று கூறினார். அது கேட்ட ரகுநந்தனன், 'உடனே அவர்களை அழைத்து வரவும்' எனக்கூற, ஸுமந்திரர் சென்று. அவர்களை வணங்கி அழைத்து வந்தார். நூற்றுக்கும் அதிகமான அம் முனிவர்கள், தமது கைகளில், புண்யதீர்த்தங்கள் நிறைந்த கலசங்களையும், கனி கிழங்கு வகைகளையும், ஏந்தியவர்களாய், ஸ்ரீராம ஸபைக்குச் சென்று, ஸ்வஸ்தி வசன பூர்வமாக, அவைகளை ஸ்ரீராமனிடம் ஸமர்ப்பித்தனர். அவைகளை வணக்கத்துடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீராகவன், அவர்களைப் பார்த்து. -ராகவன் அஞ்ஜலி செய்து கொண்டு, ''முனிவரர்களே! அடியேனால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியம் யாது? தாங்கள் யாது விரும்பினாலும், அதனைச் செய்து முடித்தற்குச் சித்தனாயிருக்கிறேன். இந்த ராஜ்யம் முழுமையும், இத்தேகத்தினுள்ளிருக்கும் உயிரும், ஆன்மாவும் அந்தணரின் பொருட்டேயன்றி வேறன்று. இது ஸத்தியமே" என்று கூறினன். அது கேட்டு யமுனாதீர வாஸி களான முனிவர்கள் யாவரும், "நன்று, நன்று” என்று கொண்டாடி ஸ்ரீராகவனை நோக்கி, "ராஜ ராஜன்! உனது கருணையே கருணை, இதுவரை யாம், இப் பூமியில், பூபதிகள் பலரிடம் சென்றோம். அவர்கள் எங்களுக்கு, இத்தகைய உறுதியைக் கொடுத்திலர். நீயோ அவ்வாறின்றி அந்தணர்களிடமுள்ள கௌரவத்தையே முதன்மையாகக் கொண்டு, எங்களுக்கு அபயமளித்தனை. ஆதலால் முனிவர்களுக்கு நேர்ந்துள்ள பயத்தைப் போக்கி, அனைவரையும் நீயே ரக்ஷிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர்.

எழுபத்தியிரண்டாவது ஸர்க்கம்

(முனிவர்கள், லவணாசுரனைப் பற்றிக் கூறியதும், அவனிடமிருந்து தங்களை ரக்ஷிக்க வேண்டியதும்,]

இப்படிக் கூறிய முனிவர்களைப் பார்த்து, ஸ்ரீராமன், “மஹரிஷிகளே! உங்களுக்கு உண்டான ஆபத்தைக் கூறவும், அதைப் போக்குகிறேன்" என்றான். இவ்வாறு ஸ்ரீராகவன் கூறியதும், பார்கவ முனிவர் ஸ்ரீராமனைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானார்-

                “ஹே ராமபத்ர! முன் கிருதயுகத்தில், 'லோலை' என்பவளுக்கு மூத்த குமாரனான, மது எனப் பெயர் கொண்ட மகாசுரன் ஒருவனிருந்தான். தைரிய சௌர்ய பராக்ரமங்களுடன் கூடினவனாகவும், தர்மத்திலும் அதிகம் பற்றுள்ளவனாகிப் பல ஆண்டளவு பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தான். அதனால் பிரீதியடைந்த பரமசிவன், அவனிடம் கருணை கொண்டு, அவனுக்கு உயர்ந்த வரங்களை யளித்தான். மேலும் தனது சூலாயுதத்தினுடைய சக்தியை ஆரோபித்துச் சிறந்த வீரியமும் சிறந்த சோதியுமுடையதான சூலாயுதமொன்றையும் அவனுக்களித்தனன். பின்னும் அச்சிவன் அவ்வசுரனை நோக்கி, “நீ எவ்வளவு காலம் தேவர்களுடனும், பிராம்மணர்களுடனும் பகைமை கொள்ளாது இருக்கின்றனையோ; அதுவரையுமே இச்சூலாயுதம், உன்னுடையதாகும். மாறு கொள்வாயாயின் உடனே இஃது உன்னைக் கைவிட்டு அகன்று விடும். நீ சிறந்த ஒழுக்கங்களை உடையவனாயிருக்கும் வரையில் உன் மீது எவன் எந்த ஆயுதத்தை எய்தவளவிலும், அவ்வாயுதத்தை இந்தச் சூலாயுதம் சென்று எரித்துச் சாம்பலாக்கி, உடனே உன்னிடம் சேர்ந்து விடும்' என்று அருளிச் செய்தான். இப்படிக் கூறிய சிவபிரானை,மதுவென்னும் அவ்வசுரன் மறுபடியு மடிபணிந்து - “ஸ்வாமின்! அடியேனுக்கு மற்றொரு வரமருள வேண்டும்; அதாவது இவ்வாயுதம் அடியேனுக்கு மாத்திரமின்றி, அடியேனது வம்சத்தவர்க்கும் உரியதா யிருக்குமாறு அருள வேண்டுகிறேன்' என்று பிரார்த்தித்தான். அதைக் கேட்ட ருத்திரன், அங்ஙனம் ஒருபோதுமாவதில்லை. ஆயினும் உன்னிடம் யான் அதிகமாகப் பிரீதியுற்றவனாதலால் உனது மைந்தன் ஒருவனுக்கு மாத்திரம் இது ஆயுதமாகக் கடவது. இச்சூலாயுதம் எவ்வளவு காலம் கையில் இருக்கிறதோ அவ்வளவு காலம் உனது குமாரன் ஓருவராலும் வெல்லக் கூடாத வலிமை பெற்றவனாவான்' என்று கூறி மறைந்தான்.

                மகாதேவனிடம் இவ்விதமான வரம் பெற்று, அவ்வசுரன் ,மிக்க களிப்பெய்தி மிகவும் சிறந்ததான மாளிகை யொன்று நிர்மாணஞ் செய்து, அதில் ஸந்தோஷத்தோடு வாழ்ந்திருந்தனன். இம்மதுவினுடைய மனைவியான, கும்பீனஸியிடம் (மால்யவானது பெண் வயிற்றுப் பேத்தி, ராவணனது அரைச்சகோதரி) அவனுக்கு மிக்கக் கொடியவனும் மகாவீர்யமுடையனுமான, லவணன் என்னும் குமாரனொருவன் பிறந்தனன், அவன் சிறுபிராயம் முதற் கொண்டு மகா துஷ்டனாகிப் பாவங்களையே செய்து வந்தனன். புத்திரன் இப்படி துஷ்டனாக இருப்பது கண்டு மது கோபமும் சோகமுமடைந்தவனாகி, அவனிடமொன்றும் பேசமாட்டாமல், சூலத்தை அவன் கையில் கொடுத்துத்தான் பெற்ற வரத்தின் பெருமையையும் அவனிடம் கூறி, இவ்வுலகத்தை விட்டு, வருணலோகம் சென்றனன்.

                அன்று முதல் லவணாசுரன், சூலத்தின் மகிமையாலும், தனது இயற்கையான கொடுமையாலும் மூவுலகங்களையும் மிகவும் வருத்தி துன்புறுத்துகின்றனன். அதிலும் முக்கியமாக, முனிவர்களையே மிகவும் துன்புறுத்துகின்றனன். ஸ்ரீராம! அவனால் நாங்கள் அடைந்து வரும் துன்பத்திற்கு அளவேயில்லை. இனி நீயே எங்களுக்குத் தஞ்சம். உன்னை யன்றி மற்று எவராலும் லவணாசுரனை அடக்க முடியாது. இனி எங்களை ரக்ஷிப்பது உனது பாரம், என வேண்டி விண்ணப்பித்தனர்.

எழுபத்தி மூன்றாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமன். முனிவர்களிடம், லவனாசுரனின், உணவு, செய்கை, இவைகளைப் பற்றிக் கேட்டலும்,
அவனை வதம் செய்ய  சத்ருக்னன் உடன்படுவதும்
.]

                இவ்வாறு முனிவர்கள் கூறக் கேட்ட ஸ்ரீராகவன் அவர்களைப் பார்த்து - “முனிபுங்கவர்களே! அந்த லவணாசுரன் எப்படிப்பட்ட உணவை உட்கொள்பவன்? அவனது நடவடிக்கைகள் எப்படியானவை? அவன் வஸிப்பது எங்கு? இவற்றைக் கூறவும்'' என்று கேட்டனன். அதற்கு முனிவர்கள்--"ஸ்ரீராம! அவனது உணவு ஸமஸ்த பிராணிகளாம். அவற்றுள் முக்கியமானது தபஸ்விகளே. அவனது செய்கைகளோ மிகவும் கொடுமையானவையே. அவன் வஸிப்பது "மது வனம்' என்னும் காடேயாகும். அவனைக் கண்டாலே பிராணிகள், வாயைத் திறந்து கொண்டு வரும் யமனென்றே எண்ணி நடுங்குகின்றனர்'' என்றனர். இதைக் கேட்ட ரகுநந்தனன் அம்முனிவர்களைப் பார்த்து-"இனி உங்களுக்குப் பயம் வேண்டாம், அவ்வசுரனை நான் வெல்லுகிறேன்'' என்று கூறினன்.பிறகு, தனது பிராதாக்களை அருகிலழைத்து, ''தம்பிகாள், இப்பொழுது மது வனம் சென்று வீரனான லவணாசுரனை வதைக்கும், புண்ணியத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர் யார்?'' என்று கேட்டனன். உடனே, பரதன் எழுந்து "அண்ணா! இந்தக்காரியத்தை, அடியேன் சென்று, செய்து தலைக்கட்டுகிறேன், எனக்குக் கட்டளை யிடுவீராக" என்று வேண்டினன். இது கேட்ட சத்ருக்னன், தனது சிங்காதனத்தினின்று சடக்கென வெழுந்து, "ஸ்வாமின்! இந்த பரதன், முன்பே பெரிய காரியஞ்செய்துள்ளனன். அதாவது- முன்பு தேவரீர், வனவாஸமெழுந்தருளியபோது, இந்நகரத்தைப் பரிபாலிப்பதாகிய பெரிய பாரத்தைத் தாங்கினன். தவிர அக்காலத்தில் இப்பரதன் மரவுரியும் சடை முடியுமாய்க் காய்கனிகளையே உணவாகக் கொண்டு, நல்ல பாய் படுக்கையின்றி, பதினான்கு வருடங்கள், பலவிதமான துன்பங்களை யனுபவித்துக் கொண்டு நந்திக் கிராமத்தில் வாஸம் செய்தனன். எனவே இவனை மீண்டும் கஷ்டப்படுத்துவது நன்றன்று. அடியேன் இதோ காத்துக் கொண்டிருக்கின்றேன். அடியேனை அனுமதிக்கவும்" என வேண்டினன்.

                இவ்வாறு சத்ருக்னன் கூறியது கேட்டு ராமன், அவனை நோக்கி, "சத்ருக்ன! அவ்வாறே ஆகட்டும். நீயே சென்று லவணாசுரனை வென்று வருவாயாக. ஆயினும் அதனுடன் நில்லாது நீ மற்றொரு காரியமும் செய்ய உடன்பட வேண்டும், எவனொருவன். பகைவனை வதைத்த பின். அந்த ராஜ்யத்தில், பிரஜைகளைப் பரிபாலிக்க, மற்றொரு அரசனை நியமிக்க வில்லையோ, அவன் நரகத்திற்கு ஆளாகுவான். ஆதலால், மதுவினது உயர்ந்த நகரத்திற்கு அரசனாக உன்னை இவ்விடத்திலேயே யான் அபிஷேகம் செய்து விடுகிறேன். நீ, லவணனை வென்ற பின், 'அந்த ராஜ்யத்தை அங்கிருந்து கொண்டு, நீதி முறை தவறாமல் நன்கு பரிபாலித்து வருவாயாக. எனது சொல்லை மீறாது செய்க. மூத்தோர் சொன்னவாறு செய்தல் இளையோரது கடமையல்லவா? வஸிஷ்டர் முதலான முனிவர்களைக் கொண்டு, விதி முறைப்படி யான் இப்பொழுது செய்விக்உம் மகுடாபிஷேகத்தை நீ ஏற்றுக் கொள்ளுக" எனக் கட்டளையிட்டனன்.

எழுபத்தி நாலாவது ஸர்க்கம்

[மூத்தோனிருக்க இளையோன் பட்டஞ்சூடிக் கொள்ளுவது நன்றன்று என வுரைத்த, சத்ருக்னனை,
ஸ்ரீராமன் ஸமாதானம் செய்து
, பட்டஞ்சூட்டுதல், லவணனை வதம் செய்யுமுபாய முரைத்தல்.]

                இப்படி ஸ்ரீராமச்சந்திரனால் நியமிக்கப்பட்ட சத்ருக்னன், அவரைப் பார்த்து -“அண்ணா! மூத்தவனான பரதனிருக்கச் செய்தே எனக்குப் பட்டம் சூட்டுவது தர்மமாகுமா? இப்படிப்பட்ட அதர்மத்திற்கு அடியேன் இலக்காகாமலிருக்க விரும்புகிறேன், முன்னமேயே 'பரதன் நான் லவணனை வதம் செய்கிறேன்'. என்று கூறிய பொழுது அதைத் தடுத்து, நானே வதம் செய்கிறேன், என்று நான் கூறியது முதலாவது தவறு. அதற்கே நான் தண்டிக்கப்பட வேண்டியவனாயுள்ளேன், இப்பொழுது உமது கட்டளையை மறுக்க நினைப்பது இரண்டாவது பிழையாகும், இது விஷயத்தில் செய்வதறியாது திகைப்புற்று இருக்கிறேன். தேவரீர் திருவுள்ளமெதுவோ, அதன்படிச் செய்யவும்”, என வேண்டி நின்றான்.

                அது கேட்டு ஸந்தோஷமடைந்த ஸ்ரீராமன், பரதன், லக்ஷ்மணன் இவர்களைப் பார்த்து, வஸிஷ்டர் முதலிய ரிஷிகளைக் கொண்டு, பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்விக்கும்படி கட்டளை யிட்டனன். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

                புரோஹிதர், ரித்விக்குகள், மந்திரிகள், பிரதானிகள், நகரத்திலுள்ளப் பிரபுக்கள் பிராம்மணர்கள் முதலானோர் அனைவரும் வந்து சேர்ந்ததும், வஸிஷ்ட மஹரிஷி இராமனது விருப்பத்தின்படி, சத்ருக்னனுக்கு முடிசூட்டினார். யமுனா தீரவாஸிகளான முனிவர்களனைவரும், சத்ருக்னன் அபிஷேகம் செய்யப்பட்ட பொழுதே லவணன் உயிரிழந்தனனென்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தனர்.

                பிறகு, பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட சத்ருக்னனை, ஸ்ரீராம பிரான், கட்டியணைத்துத் தன் மடிமீதமர்த்தி, "தம்பீ! இதோ இந்த அம்பைப் பார். இது, கார்மேனியன், பிரளய காலத்தில் பாற்கடலின் மீது பள்ளி கொண்டிருந்த பொழுது அந்தப் பரமபுருஷனால் படைக்கப்பட்டது. பிரம்மதேவன் இதனாலேயே தோல்வியடையவில்லை. தேவாஸுரர்களும் இதனைக் கண்ணெடுத்தும் பார்க்கச் சக்தியற்றவர்கள். இது ஒருவர் கண்ணுக்கும் புலப்படாது; அப்படி பெருமை கொண்டது. உலகங்களுக்குப் பெரிய விரோதம் செய்த துராத்மாக்களான மதுகைடபர்களிடத்தில் மிகக் கோபங்கொண்டு. அவர்களையும், மற்றுமுள்ள ராக்ஷஸர்களையும், ஸம்ஹாரம் செய்யும் நிமித்தம் இது ஸ்ருஷ்டிக்கப்பட்டது. இதனைப் பிரயோகித்தால் உலகமெங்கும் அல்லோலகல்லோலமாகு மென்றஞ்சி, இராவண யுத்தத்தில் கூட நான் இதனைப் பிரயோகஞ் செய்யாது காப்பாற்றி வைத்திருக்கிறேன். சத்ருக்னர் அந்த லவணாசுரனிடம் சிவபிரானுடைய சூல மொன்றிருக்கிறது. அதனை அவன் தனது அரண்மனையில் வைத்துப் பூஜித்து தனியே பல திசைகளிலும் சென்று திரிகின்றனன். அவன் சூலத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஸமயத்தில், அவனை வெல்ல ஒருவராலும் முடியாது. ஆகையால் அவன் கையில் சூலமின்றி வெளியில் சென்றிருக்கும் ஸமயத்தில் நீ அவனை ஆயுதமும் கையுமாக எதிர்த்துப் போர் புரியவும். வேறுவிதமாக அவனை வெல்லுவது அஸாத்யமானது. சிவனுடைய சூலாயுதமானது மிக்க வலிமை வாய்ந்தது. இதை நீ நன்கு மனதிற் கொண்டு செயல்பட்டு வெற்றி வாகை சூடவும்" என்று கூறினன்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 37

அறுபத்தியெட்டாவது ஸர்க்கம்

[நாய் ஸ்ரீராமனிடம் நியாயம் வேண்டி வருதல்.]

                மறுநாள் பொழுது விடிந்ததும், ஸ்ரீராமச்சந்திரன் நித்ய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ராஜஸபைக்கு எழுந்தருளி சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தனன். அப்பொழுது, வேத வித்துக்களான பிராம்மணர்களும், ரிஷிகளான, காச்யபர், வஸிஷ்டர் முதலானவர்களும், வ்யவஹாரமறிந்த மந்திரிகளும், தர்மவித்துக்களும், நீதிமான்களும், ஸாமாந்த அரசர்களும், அங்கு வந்தமர்ந்தனர். அப்பொழுது அந்த ஸபையானது, தேவேந்திரனுடையதோ, யமனுடையதோ, வருணனுடையதோ என்னலாம்படி விளங்கியது.

                அப்பொழுது ஸ்ரீராமன் லக்ஷ்மணனை நோக்கி, 'லக்ஷ்மணா! உடனே சென்று, வாயிலில் எவரேனும் என்னிடம் முறையிட்டுக் கொண்டவர் இருந்தாரேயாகில் அழைத்து வரவும்' என்று கூற, லக்ஷ்மணன் அவ்வாறே அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றான். ஆனால் அங்கு ஒருவருமில்லை. ஏனெனில், ஸ்ரீராமன் அரசாட்சி செய்கையில், உலகத்தில் ஒருவருக்கும் ஒருவிதமான துன்பமும் உண்டாகவில்லை. வியாதிகள் ஒன்றும் உண்டாகவில்லை. பூமியெங்கும் ஸகல தானியங்களும் விளைந்து. ஸகல ஓஷதிகளும் ஸம்பூர்ணமாயிருந்தன. பால்யத்திலாவது, யௌவனத்திலாவது எவரும் துர்மரணமாயும் அல்பாயுஸ்ஸாகவும் மடிவதில்லை. உலகம் முழுவதும் தர்மமாகவே பரிபாலிக்கப்பட்டதாதலால் எவருக்கும் எவ்விதமான பீடையும் உண்டாவதில்லை. அதனால் அரசவையில் முறையிட்டுக் கொள்பவர் ஒருவரும் காணப்படவில்லை. எனவே வெளியே சென்ற லக்ஷ்மணன், அங்கு ஒருவரையும் காணாது ராமனிடம் திரும்பி வந்து அவ்விவரத்தை விளம்பினான். அது கேட்டு, ஸ்ரீராகவன் ஸந்துஷ்ட மனஸ்ஸை உடையவராக, மறுபடியும் லக்ஷ்மணனைப் பார்த்து, “தம்பி! நீ மீண்டும் சென்று பார்த்துவா,  ஒருவருக்கும் ஒரு குறையும் இல்லை என்று உபேக்ஷித்து இருக்கக் கூடாது. அடிக்கடி சென்று பார்த்து வரவேண்டும்” என்றார்.

                அதன் பொருட்டு மீண்டும் லக்ஷ்மணன் வெளியில் சென்று பார்த்த போது, அங்கு ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. அது லக்ஷ்மணனைக் கண்டதும், பல தரம் குரைத்தது. அதைக் கண்ட லக்ஷ்மணன், அதைப் பார்த்து-"ச்வாவே! உனக்கு ஆக வேண்டிய காரியம் என்ன? பயப்படாமல் கூறவும்" என்றான். அதற்கு நாய் "ஸ்வாமின்! ஸர்வலோக சரண்யரான ஸ்ரீராகவனிடம் விஜ்ஞாபிக்க விரும்புகிறேன்" என்றது. அதைக் கேட்ட லக்ஷ்மணன், உடனே, ஶ்ரீராமனிடம் சென்று விஜ்ஞாபித்து, மீண்டும் திரும்ப வந்து, நாயிடம், “வா, வந்து அரசனிடம் விஜ்ஞாபிக்கவும்,” என்று கூறினான். இதற்கு, நாய், கூறியதாவது-"தேவன் கோயில், அரசனுடைய அரண்மனை, வேதப் பிராம்மணனுடைய கிருஹம், இவைகளில் அக்னி, இந்திரன், ஸூரியன், வாயு, இவர்கள், வஸிக்கிறார்கள். எனவே அங்கு என் போன்ற கீழ் யோனியிற் பிறந்தவர்கள் புக அனர்ஹர்கள். எனவே அவரிடம் சென்று நான் வரலாமா? என்பதைக் கேட்டறிந்து வரவும். அவருடைய அநுமதியிருந்தால் நான் வருகிறேன் என்று கூறியது. லக்ஷ்மணனும் உள்ளே சென்று, ஸ்ரீராகவனிடம் விஜ்ஞாபிக்க, அவரும் "உடனே அதை இங்கு அழைத்து வா" என்று கூறினார்.

அறுபத்தொன்பதாவது ஸர்க்கம்

[நாய், ஸ்ரீராமனிடம், தனது நிலையைக் கூறியதும், அந்த நிலையை உண்டு பண்ணிய பிராம்மணனை விசாரித்தலும், அதற்கான தண்டனையையும் அவனுக்கு நாயின் சொற்படியே கொடுத்ததும்,
அதற்கான காரணமும்
.]

                ஸ்ரீராமபிரானின் சொற்படி, லக்ஷ்மணன் அந்த நாயை ஸபா மண்டபத்திற்குள் அழைத்து வந்தான். அந்த நாயைக் கண்ட ஸ்ரீராமன்; "ஸாரமேயமே! உனக்கேற்பட்டுள்ள குறை யாது? பயமின்றிக் கூறுவாயாக" என்றார். அது கேட்ட நாயானது- "ஸ்வாமின்! ராகவ ஸிம்ஹ! அரசனே ஜனங்களை (பிரஜைகளை) தூங்கும் காலத்திலும் விழித்திருக்கும் காலத்திலும் ரஷிக்கிறான். நல்ல நியாயவாதியாகவும் அவனே திகழ்கிறான். அரசன் தர்மத்தினாலேயே ராஜ்யத்தைப் பரிபாலித்து வருகிறான். ஆபத்துக்களிலிருந்து பிரஜைகளை ரக்ஷித்து அபயத்தை யளிக்கிறான். இதனையறிந்த தேவரீர் அடியேனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு ஆவன செய்யவும். ஸர்வார்த்த ஸித்தன் என்கிற பிக்ஷை எடுத்துண்ணும் ஒரு பிராம்மணன், என்னை ஒரு காரணமுமின்றி வீணாக அடித்து வருத்தினான். இதோ மண்டை யுடைபட்டு நிற்கும் என்னைப் பாகும். இதனை விசாரிப்பீராக" என்றது. உடனே ஸ்ரீராமன், அந்தப் பிராம்மணனை அழைத்து வருமாறு காவலர்களுக்கு உத்திரவிட, அவர்கள் அப்பொழுதே விரைந்து சென்று அந்த அந்தணனை அழைத்து வந்தனர். ஸ்ரீராகவன் அவனை நோக்கி, “பிராம்மணரே! நீர் ஒரு பிராம்மணனாயிருந்தும், இந்த எளிய நாயை அடித்தது எதற்காக? இது உமக்கு என்ன அபகாரம் செய்தது? நீர் இதற்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனையை கொடுத்தீர்? கோபமே ப்ராணஹாரியான சத்ரு. கோபமே நண்பனின் ரூபமான பகைவன். கோபமே கொடிய கத்திபோன்றது; கோபமே அனைத்து நன்மைகளையும் பாழாக்குகிறது. செய்யும் தவம் தானம் முதலிய அனைத்துப் பலன்களையும் கோபம் நாசம் செய்து விடுகிறது. இப்படியிருக்க நீர் ஏன் இப்படிப்பட்ட காரியத்தைக் கோபத்திற்கு வசப்பட்டுச் செய்தீர்" என்று கேட்டார்.

                இப்படி ராமன் கூறக் கேட்ட ஸர்வார்த்த ஸித்தன் என்கிற பிராம்மணன், 'மஹாராஜனே! நான் கோபத்திற்கு வசப்பட்டவனாகி இந்த நாயை அடித்தது உண்மையே. நான் பிக்ஷை எடுத்துக் கொண்டு வீதி வழியே வரும்போது, இந்த நாயானது நடு வழியே நின்று கொண்டு, ஒரு புறமும் ஒதுங்காமல் என்னை உபத்திரவப்படுத்தியது. நான் இதைப் பல தடவை. "ஒதுங்கு ஒதுங்கு" என்று கூறியும், கேளாமல் என்னை எதிர்த்து நின்றபடியால், நான் பசியாலும் களைப்பாலும் கோப மதிகரித்தவனாகி, இதை அடித்து விட்டேன். நான் செய்தது பெருங் குற்றமே இதற்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்கவும்!" என்றான். இப்படி வேதியன் கூறக் கேட்ட ஸ்ரீராமன், ஸபையிலுள்ள பெரியோர்களைப் பார்த்து, அந்தப் பிராம்மணனுக்கு விதிக்க வேண்டிய தண்டனை என்ன? என்று ஆராய்ந்து உரைக்க வேண்டுமென வேண்டினான். அது கேட்டு, நீதி சாஸ்திரமும் ராஜ தர்மமுமுணர்ந்த அப்பெரியோர்கள், "ஸ்ரீராம பிராம்மணர்களுக்கு வதை தண்டனை விதிக்கலாகாதென்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது" என்றனர். அப்பொழுது அந்த நாய், ஸ்ரீராமபிரானை நோக்கி, “ராஜன்! தேவரீர் என்னிடத்து அருள் புரியத் திருவுள்ளமாயின், நான் கேட்டுக் கொள்வதைச் செய்விக்க வேண்டுகிறேன், இந்தப் பிராம்மணனுக்கு 'குலபதி' என்கிற தர்மபரிபாலனாதிகாரம் அளிக்க வேண்டுகிறேன்." என்று கேட்டுக் கொண்டது. அதனைக்கேட்ட காகுத்தன் அவ்வாறே அந்தப் பிராம்மணருக்கு அவ்வதிகாரத்தில் அபிஷேகம், செய்வித்தனன். தனக்குக் கிடைத்த உயர்ந்த அதிகாரத்தினால் அந்த வேதியன் மிக்க மகிழ்ச்சி கொண்டு யானை மீதேறி, அனைவராலும் பூஜிக்கப்பட்டவனாகி, ஆனந்தத்துடன் சென்றான். இப்படித் தவறு செய்த பிராம்மணனுக்கு, அதிகார மளித்தது கண்டு ஸ்ரீராமனது மந்திரிகள் வியப்புற்றவர்களாகி ராமபிரானை நோக்கி, “ஸ்வாமின்! இந்தக் குற்றவாளிக்கு, உயர்வான பதவியன்றோ அளிக்கப்பட்டது. இதன் மர்மம் யாது?” என்று கேட்டனர். ஸ்ரீராமன், அவர்களைப் பார்த்து-"நீங்கள் நீதி சாஸ்திரம் அறியாதவர்கள் போலும். இதன் மர்மத்தை இந்த நாய் நன்கு உணர்ந்திருக்கின்றது. இதுவே, இதனை விளங்கக் கூறும், நீங்கள் நன்கு கேட்டுணர்க" என்று கூறி, அதன் வரலாற்றை யாவருக்கும் நன்கு எடுத்துக் கூறுமாறு, நாய்க்குக் கட்டளை யிட்டார். உடனே அந்த நாய் சொல்லத் தொடங்கியது.

                "ஸ்வாமின்! அடியேன் பூர்வ ஜன்மத்தில், ஒரு குலபதியாகி, தர்மாதிகாரி ஸ்தானம் பெற்றிருந்தேன். அது ஸமயம், அடியேன் தேவ பூஜைகளிலும், பிராம்மண பூஜைகளிலும், மிகுந்த அன்னத்தைப் போஜனம் செய்வேன். தேவதாசிகளுடனும், தேவதாசர்களுடனும் கூடிக் களிப்புற்றிருந்தேன். தேவத்ரவ்யங்களைக் கருத்துடன் காப்பாற்றினேன். அன்றியும், வினயமும் நல்லொழுக்கமு முடையவனாகி எல்லாப் பிராணிகளுக்கும் நன்மையையே நாடி வந்தேன். அக்காரணம் பற்றி எனக்கு இந்த கோரமான அவஸ்தையும், அதமமான ஜன்மமும் கிடைத்தது. கோபங் கொண்ட பிராம்மணனுக்கும், தரும நிலை தவறித் தீமையிழைக்கத் துணிந்த பிராம்மணர்க்கும் இதே கதிதான். ஹே ராகவ! கோபங் கொண்டவனும், ஜீவகாருண்ய மில்லாதவனும், அறிவில்லாத மூடனும், ஏழேழு ஜன்மமும், தன் குலமழியுமாறு தீமையைத் தேடிக்கொள்கிறான். ஆதலால் எவனும் எவ்விதமான நிலைமை நேர்த்த காலத்திலும், தர்மாதிகாரம் செய்தலாகாது. எவனொருவன் தேவஸ்தானங் களுக்கும், பசு பரிபாலன ஸ்தானங்களுக்கும், பிராம்மண ரக்ஷண ஸ்தானங்களுக்கும் அதிகாரியாக யிருக்கின்றானோ அவன் தனது புத்திரர்களுடனும் பந்துக்களுடனும் நரகத்தில் வீழ்வது நிச்சயம். எவன் பிராம்மணர்களது திரவியங்களையும் தேவஸ்தான த்ரவ்யத்தையும், ஸ்த்ரீகளின் செல்வத்தையும் அபகரிக்கிறானோ, எவனொருவன் தானம் செய்து கொடுத்து விட்டதை, மறுபடியும் பறித்துக் கொள்ளுகின்றானோ, அவன் தன்னைச் சேர்ந்தவர்களுடனே விநாச மடைவது நிச்சயம்” என்று கூறியது.

                பிறகு அந்த நாய், ராமபிரானிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்றது. அது நீச ஜாதியில் பிறந்ததாயினும், பூர்வ ஜன்ம ஸ்மரணமுடையதாகிக் காசி க்ஷேத்திரம் சென்று, அங்கு பிராயோபவேசம் செய்து உடலை விடுத்து ஸ்வர்கம் சென்றது.

எழுபதாவது ஸர்க்கம்

(கழுகு கோட்டான்களின் வழக்கும், கழுகு, சாபம் நீங்கப் பெற்றதும்.)

                ஒரு ஸமயம், ஒரு காட்டிலிருந்து, ஒரு கழுகும் கோட்டானும் விவாதம் செய்து கொண்டு, ஸ்ரீராமபிரானிடம் வந்து, நியாயம் கூறும்படி வேண்டிக் கொண்டன. விவாதத்திற்குக் காரணமென்னவெனில்? கெட்ட புத்தியுடையதான கழுகு. கோட்டானது கூட்டிற்குச் சென்று, 'அது தன்னுடையது' என்று சொல்லி, அதனுடன் சண்டையிடத் தொடங்கியது.

                கழுகு ராமனை நோக்கி, 'உலக நாதனே! நான் நெடு நாளாகவே வஸித்து வருகிற எனது இருப்பிடத்தை, இந்தக் கோட்டான் தன்னுடையதென்று சொல்லி வலிய வந்து வதம் செய்கின்றது. இவ்விஷயத்தில் எனக்கு நீதி வழங்கவும்' என்றது.

                இதற்கு கோட்டான்:-ஸ்ரீராகவ! தேவரீர் ஸர்வலோக சரண்யர், ஸ்ரீமன் நாராயணனும் தேவரே. இது எனக்கு நன்கு தெரியும், அடியேன் விஷயத்தில் உசிதமான நியாயத்தை வழங்கவும். அரசரே ! இந்தக் கழுகு எனது கூட்டினுள் வந்து புகுந்து எனக்கு அனேக விதமான துன்பங்களை உண்டு பண்ணுகிறது. இதனை நன்கு விசாரித்தருள்க, என்று கூறி முறையிட்டது.

                ராகவன் முதலில் கழுகை நோக்கி, நீ இந்த கூடு கட்டிக் கொண்டு, இதில் எத்தனை வருஷ காலமாக வஸித்து வருகின்றனை? உள்ளதை உள்ளபடி கூறவும் ' என்று கேட்டான். அது கேட்ட கழுகு. ஸ்ரீராம! இப்பூமியில் மானிடர் உற்பத்தியாகி எங்கும் எப்பொழுது பரவினர்களோ, அன்று முதல் இது எனது வீடாகவே யிருக்கிறது' என்றது. பிறகு கோட்டான் ராகவனைப் பணிந்து, ராஜ ராஜனே! இப்பூமியில் எப்பொழுது, மரம் செடி கொடிகள் செழித்து வளரத் தொடங்கினவோ, அக்காலந் தொடங்கி இது எனது வாஸஸ்தலமாக உள்ளது, என்று கூறியது. இப்படி அவைகள் கூறியதைக் கேட்ட ஸ்ரீராமபிரான், ஸபையோர்களைப் பார்த்து அவ் வழக்கின் நுட்பத்தை யறிந்து, ந்யாயம் கூறுமாறு வேண்டினன். அதனைக் கேட்ட மந்திரிகள், அரசே! கோட்டான் கூறியதிலேயே ந்யாயமிருக்கிறதென எண்ணுகிறோம்; என்றனர்.

                இப்படி அவர்கள் கூறக் கேட்ட ரகுநந்தனன், அவர்களை நோக்கி மந்த்ரிகாள்! இதைப் பற்றிய புராணக் கதை யொன்றுள்ளது. அதனைக் கூறுகிறேன் கேளுங்கள் - முதன் முதலில் இப்பூமி தேவி லக்ஷ்மியுடன் கூடி, ஸ்ரீமகாவிஷ்ணு வினுடைய திருவயிற்றினுள் பிரவேசித்தனள், அப்படி உலகங்களனைத்தையும் தம் உதரத்தினுட் கொண்ட ஆதி புருஷனான ஸ்ரீமந் நாராயணன், அலைகடல்மீது அனேகம் ஆண்டுகள் அறிதுயிலமர்த்தனன். அது பொழுது, பிரம்ம தேவன், அம்மஹா விஷ்ணுவினது. திருவுந்தியிற் பூத்த, பொற்றாமரையின் வழியே, வெளித் தோன்றி, மகா யோகியாகி, முதலில் இப் பூமியையும், அதன் மீது மரங்களையும், மலைகளையும் படைத்து, அப் பூமியைச் சுற்றி வாயுவை ச்ருஷ்டித்தனன். பிறகு அதில், மானிடர்களும், மிருகங்களும் ஸர்ப்ப ஜாதிகளுமான அனேசுமாயிரம் உயிர்களையும் படைக்கலாயினன். அப்பொழுது பிரம்மனது காது மலத்தினின்றும், 'மது-கைடபர்கள் என்னும் அஸுரர்கள் தோன்றி, மிகவும் பயங்கரமாக அப் பிரம்மனின் மீது பாய்ந்தனர். அப்பொழுது, பிரம்மதேவன், நடுநடுங்கிப் பெருங் கூச்சலிட்டான். அக்கணமே ஸ்ரீமகாவிஷ்ணு, அங்கு தோன்றி, அந்த அசுரர்களை எதிர்த்துத் தனது சக்கரத்தினால், அவர்களைச் சம்ஹரித்தார். அவர்களது சரீரங்களிலிருந்துமொழுகிய 'மேதஸ்' என்கிற நிணநீர் முதலியவை இப் பூமி முழுதும் பாய்ந்து பரவின. அதன் பின்னர் ஸ்ரீமகாவிஷ்ணு, இப்பூமியை மீண்டும் மிகவும் பரிசுத்தமாக்கி, எல்லாவிடத்தும் மரங்களும், நானாவிதமான பயிர் பூண்டுகளும், அனேகமான ஓஷதிகளும், விசேஷமாக விருத்தியடையும்படி செய்தனர். மது கைடபர்களின் மேதஸ்ஸினது நாற்றமெங்கும் பரவியதுபற்றி இப்பூமிக்கு, 'மேதினீ' எனவும் ஒரு பெயர் வழங்கலாயிற்று. ஆகவே இது கழுகினது வீடு இல்லை, கோட்டானது இல்லமே' என நான் நிச்சயிக்கிறேன்' இக்கழுகு மற்றொருவனுடைய மனைவியை, மோசமாகக் கைக்கொள்ளக் கருதுகின்ற கொடும் பாபியே யாகும் என்று கூறினன்.

                அச்சமயம், ஆகாயவாணி, உரத்த குரலில், “ஹே ராகவஸிம்ஹ! முன்னமே தபோபலத்தினால் தஹிக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கழுகை, மீண்டுமொரு தரம் வதை செய்யாதருள்க. இது முன் ஜன்மத்தில், 'பிரம்மதத்தன்' எனப் பெயர் பூண்ட ஓர் அரசனாயிருந்தது. அவ்வரசனது வீட்டிற்கு ஒரு ஸமயம் கௌதமர் என்கிற முனிவர், போஜனம்செய்ய எழுந்தருளினார். அந்தப் பிரம்மரிஷியைக் கண்டவுடன், பிரம்மதத்தன் மிக்க மகிழ்ச்சி கொண்டவனாகி, அவரை நன்கு பூஜித்து, போஜனத்திற்கு மாமிஸங்களை அதிகமாக வரவழைத்தான். அது கண்டு அம்முனிவர் மிகுந்த கோபங் கொண்டு, இப்பொழுது நீ 'பிணம் தின்னும் கழுகாகுக" என்று சாபம் கொடுத்தார். பிறகு அம்முனிவர் அவன் மீது கருணை கொண்டு, செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந் நாராயணன், இக்ஷ்வாகு வம்சத்தில், ஸ்ரீராமனாக அவதரிக்கப் போகிறான். அவரது திருக்கரம் உன் மீது பட்ட மாத்திரத்தில், இந்தப் பாபஜன்ம மொழிந்து, புனிதனாகக் கடவை என்று வரமளித்தார். என்று, கூறியது. அந்த அசரீரி வாக்கைச் செவியுற்று. ஸ்ரீராமன் ஆச்சரியமடைந்து, அதன் மீது கருணை கூர்ந்து, தனது திருக்கரத்தினால், அதனைத் தொட்டுத் தடவிக் கொடுத்தான். அக்கணமே அக் கோரமான கழுகு வடிவம் போய், அற்புதமான ஆடையாபரணமணிந்து திவ்ய ரூபம் பெற்று, ஸ்ரீராமனையடி பணிந்து வணங்கிய பின், அவனை வாழ்த்தி, விடை பெற்றுக் கொண்டு தன்னிடம் சேர்ந்தான்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 36

அறுபத்தி நாலாவது ஸர்க்கம்

[பிரம்மதேவனை யடைந்த வஸிஷ்டருக்கு. அவர் சரீரம் உண்டாகும் வகை கூறுவது.)

                லக்ஷ்மணன், ஸ்ரீராமனைப் பார்த்து, 'பிரபோ! உடலை விட்ட அவ்விருவரும், எங்ஙனம் மறுபடி சரீரத்தைப் பெற்றனர்? இதை யறிய எனது மனம் ஆவல் கொண்டுள்ளது, கிருபை கூர்ந்து கூறவும்,” என வேண்டினான்.

                அதற்கு ஸ்ரீராமன்-“ஹே லக்ஷ்மண! உடலை விட்டுப் பிரிந்த அவ்விருவரும், காற்றாக ஆயினர். வஸிஷ்டர் மீண்டும் வேறொரு சரீரத்தைப் பெற விரும்பி, தனது பிதாவான பிரம்ம தேவரைச் சரணமடைந்தார். அங்கு அவர், வாயு வடிவமாகவே நின்று, தனது துயரத்தை அவரிடம் கூறி, தனக்கு வேறொரு சரீரம் உண்டாக வேண்டும் என்று அந்தத் தேவனை வேண்டினார். இது கேட்டு ஸரஸ்வதீ வல்லபனான பிரம்மா வஸிஷ்டரை நோக்கி, ''குழந்தாய்! நீ இப்பொழுது, மித்ரா வருணர்களது வீர்யத்தில் பிரவேசிப்பாயாகில், அதினின்றும் அயோனிஜனாக (ஒரு சரீரத்தினின்றும் பிறவாமல்) உத்பவித்து, மஹாதர்மிஷ்டனாகி, எனக்குப் பிரியமான புத்திரனே யாகுவாய்" என வுரைத்தார். உடனே வஸிஷ்டர், பிரமனை வணங்கி விடைபெற்று, வருணனுக்கிருப்பிடமான ஸமுத்திரத்திற்குள் சென்றார்.

                அக்காலத்தில் மித்திரன் என்னும் தேவன், வருணனுக்கு மித்திரனாகயிருந்தான். ஒரு ஸமயம் ஊர்வசி என்னும் தேவலோகப் டெண் தனது தோழிமார்களுடன் கூடி, கையில் குடத்தை யேந்தியவளாய், கடற்கரைக்கு வந்து விளையாடலாயினாள். அப்பொழுது மித்திரன், அவளை முதலில் பார்த்து மோகித்தான். அசசமயம் புணரவியலாது அவர்களிருவரும் மனதின் கண்ணே காதல் கொண்டனர். அதனால் ஸ்கலிதமான மித்திரனுடைய ரேதஸ்ஸை, ஊர்வசி தனது கையிலுள்ள குடத்தில் ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர் வருணன் அவளைக் கண்டு காதல் கொண்டு அவளிடம் இன்பம் நுகர ஆவல் கொண்டான். அது கண்டு ஊர்வசி தான் முன்னமே மித்திர னுக்கு உடன்பட்டுப் போயின செய்தி கூறி. ஆயினும் வெளிப்பட்ட வருணனது வீர்யத்தையும் (ரேதஸ்ஸையுu) தனது குடத்திலே ஏற்றுக் கொண்டாள்.

                தமக்குச் சரீரத்தை வேண்டி, பிரம்ம தேவரிடம் விடை பெற்றுச் சென்ற வாயு வடிவமான வஸிஷ்டர் அத்தருணம் ஊர்வசியினது சூடத்திலிருந்த, மித்ராவருணர்களுடைய வீர்யத்தில் புகுந்தார். பிறகு அவ்வமர மங்கையான ஊர்வசி, அவ்விடம் விட்டு மித்ரனிடம் சென்றள். அவளைக் கண்டவுன் மித்திரன கோபங் கொண்டவனாகி, ''பெண்ணே! நீ முதலில் என்னைப் புருஷனாக வரித்து, பின்னர் மற்றொருவனை மனதில் கணவனாக வரித்தமையால் நீ கற்பை யிழந்த வளாயினை. ஆதனால் நீ, பூலோகம் சேர்ந்து, புதனது புத்திரனும். காசி ராஜனுமான 'புரூரவஸ்' என்னும் அரசனுக்கு மனைவியாகி வாழக்கடவை" என்று சாபமிட்டான். அந்த சாபத்தினால் ஊர்வசி, புரூரவஸ் சக்கரவர்த்தியை யடைந்தாள். அவ்வரசனுக்கு அவளிடம், 'ஆயு' என்னும் புதல்வன் பிறந்தான். ஆயுவுக்கு, தேவேந்திரனுக்கொப்பான பராக்ரமமுடைய 'நகுஷன்' என்னும், நற்புத்திரன் பிறந்தான். அந்த நகுஷன். இந்திரன் விருத்திரனைக் கொன்று வருந்திய காலத்தில், இந்திர பதம் பெற்று அனேக மாயிரமாண்டு தேவலோகத்தை யாண்டான். மஹாரூபவதியான ஊர்வசி மித்திரனுடைய சாபத்தினால் பூலோகத்தில் பல காலம் வஸித்திருந்து, அச்சாபம் நீங்கப் பெற்று, பின்னர் தேவலோகம் போய்ச் சேர்ந்தான்,” என்றார்.

அறுபத்தைந்தாவது ஸர்க்கம்

[வஸிஷ்டர் சரீரம் பெற்றதும், நிமி, பிராணிகளின் கண் இமையில் வஸிக்கலானதும்,
அவனது உடலை கடைந்ததனால்
, மிதில ராஜனின் உத்பத்தியும்.]

                ஸ்ரீராமன் இவ்வாறாக உரை செய்த ஆச்சரியமான வரலாற்றைக் கேட்ட லக்ஷ்மணன், மிகுந்த ஸந்தோஷத்துடன், “அண்ணா! சரீரத்தை விட்டுச் சென்ற, வஸிஷ்டரும் நிமி சக்கரவர்த்தியும் மீண்டும் எவ்வாறு தேஹத்தை யடைந்தனர்?” என்று கேழ்க, ராமன் மறுபடியும் கூறலாயினான் “லஷ்மணா! ஊர்வசியினது கும்பத்தில் புகுத்த மித்ரா வருணர்களுடைய ரேதஸ்ஸானது பரிபூரணமாக, அதினின்றும், சோதி மயமான இரண்டு முனிவர்கள் உண்டாயினர். முதலில் உண்டானவரே அகஸ்த்திய முனிவராவார். அவர் தோன்றியவுடன், மித்திரனை நோக்கி, நான் உனது குமாரனல்லன் என்று கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அகஸ்த்தியர் வருணனது வீர்யத்திலிருந்தே உண்டானவராதலால் அவர் அவ்வாறு கூறினார். பிறகு சில காலம் சென்றதும், அந்த மித்ரா வருணர்களது வீர்யத்தினின்றும் நமது குலகுருவான வஸிஷ்ட முனிவர் உண்டானார்.

                லக்ஷ்மணா! நிமிச் சக்கரவர்த்தி உயிர் பிரிந்து போனது கண்டதும் அங்கிருந்த முனிவர்கள் அவருடைய சரீரத்தை புஷ்ப சந்தனாதிகளாலும், ஆடையாபரணங்களாலும், அலங்கரித்து, அஃது அழியா வண்ணம் ஸுகந்தமிட்டுத் தைல கடாஹத்தில் வைத்துக் காப்பாற்றினர். பிறகு அவ்வரசன் துவக்கிய யாகத்தை, குறைவற நிறைவேற்றி, அவனது யாக தீக்ஷையைப் பூர்த்தி செய்தனர். அதன் பிறகு முனிவர், அந்த அரசனது ஆவியை நோக்கி "அரசனே! நான் உன் விஷயத்தில் மகிழ்ச்சியுற்றனன். உன் உயிர் உடலோடு சேர அருள் புரிகின்றேன்," என்று கூறினார். தேவர்கள் அவ்வரசன் செய்த யாகத்தினால் மிகவும் திருப்தியடைந்து, அவரை நோக்கி, “அரசர் பெருமானே! நீ எங்களை நன்கு பூஜித்தாய், உனக்கு என்ன வரம் வேண்டும்? உனது ஜீவன் எவ்விடம் குடி புகுந்திருக்க வேண்டும் என நீ விரும்புகிறாயோ?” என வினவினார். அது கேட்ட அரசன் மகிழ்வடைந்து, 'தேவர்களே! இனி எனக்குச் சரீரம் வேண்டியதில்லை. பிராணிகளுடைய கண்களில் வளித்திருக்க வரம் வேண்டுகின்றேன்' என்று பதிலளித்தான். தேவர்கள் அவனை நோக்கி, 'ஓ அரசனே! அப்படியே யாகுக. நீ அங்ஙனம் ஸமீரண வடிவாக ஸஞ்சரிக்கையில், எல்லாப் பிராணிகளும் இளைப்பாறுதற் பொருட்டாக, அடிக்கடி கண்களை இமை கொட்டுவார்கள்' எனக் கூறித் தம்மிடஞ் சென்றனர், (நிமியினால் உண்டானது பற்றி இமை கொட்டுதலுக்கு, 'நிமிஷம்' எனப் பெயர் வழங்கலாயிற்று). இஃது இப்படியாக, நிமியினது உடலைப் பாதுகாத்துவந்த முனிவர்கள் அவ்வுடலை எடுத்து அவனுக்குப் புத்திரன் உண்டாவதன் பொருட்டு மந்திரங்களோடு ஹோமம் செய்து, அரணியைக் கொண்டு கடைய லாயினர். அப்படிக். கடையும் பொழுது அதினின்றுமொரு மஹா புருஷன் தோன்றினார். மதனம் (கடைதல்) செய்து உண்டானபடி யால், 'மிதி' எனவும், ஜனித்ததனால் ஜனகர் எனவும், விதேஹனாகி (வெறும் உடலினின்று) உண்டானமையால் ‘விதேஹர்' எனவும், அவருக்குப் பெயர்கள் ஆயின. இந்த விதேஹ ராஜனே ஜனகருக்குத் தலைவரான முதலரசர். இவரால்தான் அந்த தேசத்திற்கே 'விதேஹ மெனப் பெயர் பிரஸித்தமாயிற்று. இவரது குலத்தில் தோன்றிய ஜனக மஹாராஜாவே, எனது மாமனாரும், ஸீதைக்குத் தகப்பனாரு மாவார், என்று கூறி முடித்தார்.

அறுபத்தியாறாவது ஸர்க்கம்

[ராஜரிஷியும், யாக தீக்ஷை பெற்றவருமான நிமி சக்கரவர்த்தி, பொறுமையுடனிருக்க வேண்டியவர்,
ஏன் தனது குல குருவை சபித்தார்
? என்பதில், யயாதி சரிதம்.]

                இப்படியாக ராமன் கூறியதைக் கேட்ட லக்ஷ்மணன்  ஸ்ரீராமனைப் பார்த்து-

                “பிரபுவே! தேவரீர் கூறிய வரலாற்றில் எனக்கொரு ஸந்தேஹம் உண்டாகிறது. நிமி சக்கரவர்த்தி மஹாசூரரான க்ஷத்திரியரன்றோ? அத்துடன் யாக தீக்ஷை கொண்டவருமன்றோ? அப்படி யிருக்கும் போது தமது குலகுருவான வஸிஷ்டரை, பொறுமையின்றி, சீற்றங் கொண்டு சபித்தது யாது காரணம் பற்றியது?” என்று கேழ்க்க, ஸ்ரீராமச்சந்திரன் கூறியது-

                "லக்ஷ்மண! எல்லோரிடத்திலும் எப்பொழுதுமே பொறுமை நிலை கொண்டிருக்காது. கோபத்தை யடக்குவது தர்மமல்லவா. யயாதி போல் கோபத்தை யடக்கிப் பொறுமையைக் கைக்கொள்ள யாராலும் முடியாது. அப்படிப்பட்ட யயாதியின் சரிதத்தைக் கூறுகிறேன். கேள்.முன்பு கூறப்பட்ட நகுஷனுடைய குமாரன் யயாதி என்பவன். அவனுக்கு அழகிய மனைவியர் இருவர். அவர்களுள் ஒருத்தி, அஸுர ராஜனான விருஷபர்வாவினது மகளான சர்மிஷ்டை என்பவள். மற்றொருத்தி சுக்ராசாரியரது மகளான தேவயானை என்பவள். தேவயானை யினிடத்தில் யயாதி மன்னனுக்கு அவ்வளவாக பிரீதியில்லை. அவ்வரசனுக்கு அம்மனைவிமார்களிருவரிடத்திலும், அற்புதமான வடிவழகுள்ளவர்களான இரண்டு குமாரர்கள் பிறந்தனர். சர்மிஷ்டையின் குமாரன் பூரு என்பவன். தேவயானையின் குமரன் யது என்பவன் பூரு நல்ல குணமுள்ளவனாக இருந்தபடியாலும், அவனது தாயிடமுள்ள பிரீதியின் மிகுதியாலும் இளையாள் குமாரனான அவனை அரசன் அதிகமாகப் பாராட்டி வரலானான். இதைக் கண்டு பொறாத யதுவென்பவன், வியசனமதிகரித்தவனாகி தனது அன்னையிடஞ் சென்று, 'தாயே! தந்தை என்னை அனாதரவு செய்து இளையாள் குமாரனை மேலாகக் கொண்டாடுகிறாரே! உயர் குலத்தவரான சுக்ராசாரியரது வயிற்றில் பிறந்த நீ பொறுத்ததற்கரியதான இவ்வவமானத்தை எப்படி ஸஹித்துக் கொண்டிருக்கிறாய்? நாமிருவரும் ஒன்று கூடி இப்பொழுதே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வோம். அரசன் அஸுர ராஜன் மகளுடனே ஸுகித்து வாழட்டும். இதை நான் இனிப் பொறுக்க முடியாது' என்று கூறினான். இப்படித் தனது அன்புப் புதல்வன் கூறக் கேட்டு, தேவயானை மிகவும் கோபங் கொண்டவளாகித் தந்தையை மனதில் நினைத்தாள். அப்பொழுதே சுக்ராசாரியார் அங்கு வர அவரிடம் அரசரது செய்கையைச் சொன்னாள். சுக்ராசாரியார் தனது மகள் தெரிவித்ததைக் கேட்டு மிக்க கோபங் கொண்டு, யயாதியை நோக்கி, "ஹே நகுஷ குமார! துர்புத்தியுடையவனாகி, என்னை அவமதிக்கின்றபடியால், நீ உடம்பு தளர்ந்து மூப்பு மேலிட்டு மனம் வருந்து வாயாக" என்று சபித்து. தனது புத்திரியை சோகந் தணியச் சமாதானப் படுத்தித் தமதிருப்பிடஞ் சென்றனர். அது தெரிந்து அரசன், அவரிடஞ் சென்று வணங்கிப் பிரார்த்திக்க, அவர், 'யானிட்ட சாபம், ஒரு பொழுதும் வீணாகாது. யாரேனு மொருவன், உனது மூப்பை ஏற்றுக் கொள்ள உடன்படுவானாகில் உனது மூப்பை அவனுக்குக் கொடுத்து நீ அவனது வாலிபத்தைப் பெற்று, உனக்கு வேண்டிய இன்பங்களை அனுபவிக்கலாம்' என வரமளித்தார்.

அறுபத்தியேழாவது ஸர்க்கம்

[பூரு பெற்ற பாக்யம்]

                சுக்ராசாரியர் இப்படிச் சபித்தவளவில், மகாராஜனான யயாதி, யௌவனமிழந்து, மூப்பை எய்தினவனானான். அதனால் அவன் மிகவும் வருத்தமுற்று, தன் குமாரனான யதுவை யழைத்து, 'குழந்தாய்! எனக்குச் சிற்றின்பத்தில் ஆசை இன்னும் ஒழியவில்லை. அஃதொழிவதற்குள் எனது சரீரத்தில் மூப்பு வந்து புகுந்து விட்டது. இந்த மூப்பை நீ ஏற்றுக் கொண்டு, உனது யௌவனத்தை எனக்குக் கொடுப்பாயாகில், நான் இன்னும் சில காலம், வேண்டுமளவு சுகபோகங்களை யனுபவித்துத் திருப்தி யடைந்து, அதன் பிறகு உனது யௌவனத்தை உனக்களித்து, எனது மூப்பை ஏற்றுக் கொள்ளுகிறேன்' என வேண்டினான். அது கேட்டு யதுவானவன், “அரசே! நீர்தான் என்னை அடியோடு விரும்புவதில்லையே,உமக்கு வேண்டாப் பிள்ளையான நான் இந்தப் பீடையைப் பெறுவதற்கு மாத்திரம் வேண்டுமோ? உமது அருமைப் புதல்வனான பூருவே இதனை யேற்றுக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தான்.

                யயாதி உடனே பூருவை யழைத்து, தனது விருப்பத்தை வெளியிட, அவன், “தந்தையே! இதுவே எனக்குச் சிறந்த பாக்யமாகும். தேவரீருடைய நியமனப்படி நடக்க ஸித்தமாயிருக்கிறேன்” என்றான். உடனே தனது யௌவனத்தை அரசனுக்களித்து, அரசனது மூப்பைத் தான் பெற்றுக் கொண்டான். இப்படியாக யௌவனம் பெற்ற யயாதியரசன், ஆயிரக்கணக்கான யாகங்கள் செய்து,அனேகப் பிரகாரங்களான இன்பங்களை யனுபவித்து பல ஆண்டு காலம் பூமியை ஆண்டனுபவித்து வந்தான். பின்னர் அந்த அரசன், பூருவை யழைத்து, 'குழந்தாய்! இனி நீ உனது யௌவனத்தைப் பெற்றுக் கொண்டு எனது மூப்பை எனக்களித்து விடுவாயாக. நீ என் சொல்லைக் கடவாது நடந்தபடியால், யான் உன் விஷயத்தில் மிகவும் ஸந்தோஷித்து, அதன் மிகுதியால், உன்னையே எனது ராஜ்யத்திற்கு அரசனாக அபிஷேகஞ் செய்கிறேன்' என்று கூறினான். பிறகு தேவயானையின் மகனை நோக்கி, “அடே குமார! நீ ஒரு ராக்ஷஸன். தந்தை சொல் கேளாத மூர்க்கன், ஆகவே நீ அரசினை யிழந்து போகக் கடவாய். உன்னிடம் மிகக் கொடியவர்களான அரக்கர்கள் அனேகர் தோன்றுவார்கள். இனி நீ சந்திர வம்சத்தரசனாகாய்,” என்று கூறிப் பூருவுக்குப் பட்டமளித்துத் தான் வனம் சென்று தவம் புரிந்து, முடிவில் உடலை நீத்துத் தேவலோகம் சென்றான்.

                இவ்வாறு யயாதி மகாராஜன் க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொண்டு பொறுமை யுடையோனாகிச் சுக்ராசாரியரிட்ட சாபத்தைப் பொறுத்திருந்தான். நிமிச் சக்ரவர்த்தி இவ்வாறு பொறுத்திலன். 'லக்ஷ்மணா! அரசர்களிடம் காரியமாக வருகின்றவர்களை வரவேற்காது உபேக்ஷை செய்வதனாலாய தீமையிப்படிப்பட்டதெனக் கூறினேன். ஆகவே நீ ந்ருகராஜனுக்கு நேர்ந்தவாறு நமக்கு நேரா வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும்" என்றான்.