சனி, 18 மார்ச், 2023

பலரும் படிக்காத ராமாயணக் கதைகள்–உத்தர காண்டம் 43

தொண்ணூற்றியிரண்டாவது ஸர்க்கம்

                அகஸ்தியர் மேலும் கூறத்தொடங்கி, ஸ்ரீராம! தண்டகனென்னு மவ்வரசன் இப்படியாக அனேக வருஷ காலம் இனிது ஆட்சி புரிந்து வருகையில், ஒரு கோடை கால மாலைப் பொழுதில், அழகியதான சுக்கிராசாரியருடைய ஆச்ரமத்திற்குச் சென்றனன். அதுபோது அங்கு மிக்க அழகு வாய்ந்த கன்னிகையான சுக்கிராசாரியாருடைய மகளைக் கண்டு. அரசன் அறிவிழந்து காமனுக்கு வசமாயினன் அவன் அக் கன்னிகையை விளித்து -' அழகிற் சிறந்த பவழக் கொடியே! நீ யார்? உன்னைக் கண்டதும் எனது மனம், பஞ்சபாணனுக்குத் தஞ்சமாகியது. என்னை யணைந்து இன்பமூட்டுவாயாக' என்றனன். அவள் அது கேட்டு தண்டகனை நோக்கி, 'நான் உனது ஆசாரியரின் மூத்த மகளான அரஜை என்பவள். உனக்கு என்னிடம், காதலுண்டானதாயின், தர்மமான நேர்வழியில், எனது தந்தையிடஞ் சென்று, வரித்து வேண்டிக் கொள்க. அவ்வாறின்றி அக்கிரமஞ் செய்வாயாகில், உனக்கு மிகக் கொடிய சாபம் நேரிடும். தவ வலிமை பெற்ற எனது தந்தை முனிவராதலால், மூவுலகங்களையும் எரித்து விடுவார்', என்று வணக்கமாகக் கூறினாள்.

                அரஜை இப்படி நயமாகக் கூறிய போதிலும், தண்டகன் அதனை லக்ஷ்யம் செய்யாமல், காமாதுரனாகி, முடி மீது கைவைத்து அஞ்சலி செய்து 'பெண்மணி! என் மீது கருணை கொள். காலதாமதஞ் செய்யாதே. மிக்க முகவழகுள்ள மாதே! உன்னைப் புணர்ந்த பின்னர் எனக்கு மரணம் நேரிடினும் நேரிடுக. அதினும் மிக்க சாபம் நேரிடினும் நேரிடுக' என்றுகூறி, நடுக்கமுற்று நினற அப்பெண்மணியைத் தனது கைகளால் பிடித்திழுத்து, அவளுடன் தன் இஷ்டம் போல் வலியப் புணர்வானாயினன். பிறகு தண்டகன் தனது நகரம் செல்ல, அரஜை ஆச்ரமத்தினருகே அழுத வண்ணம் தந்தையின் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனள்.

தொண்ணூற்றி மூன்றாவது ஸர்க்கம்

(தண்டகன் சாபம் பெற்றது)

            ஹே ராமச்சந்திர! பிறகு சுக்கிராசாரியர் தமது ஆச்ரமத்திற்கு வந்து; தண்டகன் தனது மகளுக்கிழைத்த கொடிய செயலைக்கேட்டு, மிக்க கோபங் கொண்டு, 'துஷ்ட புத்தியும், பாபச் செயலுமுடையவனான இவ்வரசன், ஏழு தினங்களில், சேனை முதலிய பரிவாரங்களுடனும், வாகனங்களுடனும், மரணமடைவானாக மதகேடனான இவனது ராஜ்யத்தில், தேவேந்திரன் மிகக் கொடியதான மண்மாரி பொழிவித்துச் சுற்றிலும் நூறு யோசனை தூரம் இதனையழித்து விடுவானாக. அம்மண்மாரியினால், இந்த ராஜ்யத்திலுள்ள ஸகலமான ஸ்தாவரஜங்கமங்களும் நாசமுறுமாக எனக் கொடிய சாப மிட்டனர்.

                பிறகு சுக்கிராசாரியார், அந்த ஆச்ரமத்திலுள்ளோரனைவரையும் நோக்கி, நீங்களனைவரும், இத்தேசத்தின் எல்லைக்கப்பால் சென்று விடுங்கள். என்று கட்டளையிட்டனர். பின் அரஜையைப் பார்த்து- “மதிகெட்டவளே துன்மார்க்கனின் பாபச் செயலுக்கு நீ உடன்பட்டாயாதலால் அப்பாபத்தை யொழிப்பதற்கு இந்த ஆச்ரமத்திலே இருந்து கொண்டு தவம் செய். இந்த ஆச்ரமமும், இங்கிருக்குமிந்தத் தடாகமும், இவ்வாறே என்றைக்கும் அழியாதிருக்கக் கடவன. நீ இங்கேயே மனக் கவலையற்று உனது நற்காலத்தின் வரவை எதிர் நோக்கி இனிது வாழ்க. மண்மாரி பொழியுமிரவில் உன்னருகில் எந்தெந்த பிராணிகள் இருக்கின்றனவோ அவற்றிற்கு அதனால் அழிவு உண்டாகாது”, என்றார்.

                பிறகு ஏழு நாட்களுக்குள் தண்டகனது ராஜ்யமானது சுக்கிரரது சாபத்தினால் நாசமாயிற்று. அசுர குருவினால் இப்படி சபிக்கப்பட்ட இவ்விடம் தண்டகாரண்யம் எனப் பிரஸித்தி பெற்றது. பிறகு இதில் தபஸ்விகள் பலர் வந்து சேர இது ஜனஸ்த்தான மாகியது" என்று கூறி முடித்து, ராமனை, ஸாயம் ஸந்த்யாவந்தனம் செய்ய அழைத்தனர்.

தொண்ணூற்றி நாலு, தொண்ணூற்றி ஐந்தாவது ஸர்க்கங்கள்

(ஸ்ரீராமன் அயோத்யை சென்று, அச்வமேத யாகம் செய்தது)

            அகஸ்திய முனிவர் இப்படிக் கூறக்கேட்டு, ஸ்ரீராமன் மிக்க ஆச்சர்யமடைந்தவராய் ஸாயம் ஸந்த்யாவந்தனத்தை முடித்துக் கொண்டு, ரிஷியினால் அளிக்கப்பட்ட அம்ருதோபமான நல்ல கந்த மூலங்களையும் பழங்களையும் சாப்பிட்டு, அன்றிரவு அந்த ஆச்ரமத்திலேயே படுத்துத் தூங்கினன். மறுநாள் பொழுது விடிந்ததும், ஸ்ரீராமன் துயில் நீங்கி எழுந்து, ப்ராதானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முனிவரை வணங்கி, அவரிடம் விடைபெற்று அயோத்திக்குப் புறப்பட்டனர். அன்று நடுப்பகலில் அயோத்தியை யடைந்து, அங்கங்கே பலரும் கொண்டாடிப் புகழத் தனது அரண்மனையை சேர்ந்து, அதன் நடுவிலுள்ள சபாமண்டபத்தில் கீழேயிறங்கி, புஷ்பக விமானத்தை வாழ்த்தி விடைகொடுத்தனுப்பிவிட்டு. வாயில் காப்போனை யழைத்து, பரத லக்ஷ்மணர்களை சீக்கிரம் அழைத்து வருமாறு கட்டளையிட்டனன்,

அச்வமேத யாகம் செய்தல்-

                உடனே பரத லக்ஷ்மணர்கள் அங்கு வந்ததைக் கண்ட ஸ்ரீராமபத்ரன் அவர்களை அன்புடனே ஆலிங்கனம் செய்து கொண்டு அவர்களைப் பார்த்து - 'சகோதரர்களே! நான் பிரதிஜ்ஞை செய்தபடி காரியம் செய்து வைதிகன் மகனை உயிர்பெறச் செய்தேன்.  இனி ராஜ தர்மம் மேன்மேலும் வளருவதற்கு ஹேதுவான ராஜஸூய யாகம் செய்ய நினைத்துள்ளேன். இந்த யாகம் செய்வதனால் ஸகலமான பாபங்களும் நாசமடையுமாதலால், உங்களிருவருடன் சேர்ந்து அந்த யாகத்தைச் செய்ய விரும்புகிறேன். ராஜாக்களுக்கு அழியாப் புகழ் உண்டாவதற்கும், இந்த ராஜஸூய யாகமே காரணமாகும். மித்திரன் என்பவன் இந்த யஜ்ஞத்தைச் செய்து, சத்ருக்களை வென்று வருணபதம் பெற்றனன். ஸோமன் இதைச் செய்து என்றுமழிவற்ற சாச்வதமான பதம் பெற்றனன். ஆதலால் இப்பொழுது, நீங்கள் என்னுடன் கூடி, ஆலோசித்து உசிதமானதைக் கூற வேண்டும், என்றனன்

                அது கேட்டு, பரதன் கைகூப்பிக் கொண்டு 'ஸ்வாமின்! தேவரீர் இவ்வுலக முழுமைக்கும் சக்கரவர்த்தியாகயிருக்கிறீர். ப்ரஜைகள் உம்மை பிதாவைப்போல் மதிக்கின்றனர். இப்பூமண்டலத்திற்கும். இதிலுள்ள ஸகலப் பிராணிகளுக்கும் புகல் தேவரீரேயன்றி வேறில்லை.

                இப்படிப்பட்ட தேவரீர் இந்த யாகத்தைச் செய்ய நினைக்கும் காரணம் யாதோ? இதனை தேவரீர் செய்வது தான் தகுதியோ? ஏனெனில் இதன் நிமித்தம் இப்புவியில் - பல ராஜ வம்சங்கள் அழியவேண்டி வருமே. அரசே! ஸோமன் ராஜஸூய யாகஞ் செய்தவளவில் ஆகாசத்திலுள்ள நக்ஷத்திரங்கள் கோரமான யுத்தம் செய்யலாயின. அரிச்சந்திரன் ராஜஸூயஞ் செய்த காலததில் க்ஷத்ரியாகள் அனைவரும் நாசமடைந்தனர். தேவேந்திரனது ராஜஸூய யாகத்நில் மிகக் கொடிய தேவாஸுர யுத்தம் நடந்தது. அனேகப் பிராணிகள் நாசமுற்றன. புருஷச்ரேஷ்டரான தேவரீர் இதனை நனகு ஆராய்ந்து ப்ராணிகளின் ஹிதத்தைச் சிந்திதது உணரவேண்டும்” என்றனன். ஸ்ரீராமன் பரதனது இனிய சொல்லைக் கேட்டு, மிகக் களிப்படைந்து, அவனை நோக்கி, “பரத! தா்ம மார்க்கததையனுஸரித்து நீ கூறிய வார்த்தை முற்றும் நன்றே. இது யாவருக்கும ப்ரீதியையும் ஆனந்தத்தையும் விளைவப்பதன்றி நன்மை பயக்குவதுமாயுமுள்ளது. நீ கூறியவாறு உலகத்திற்கு உபத்திரவமான கார்யம் உத்தமர்கள் ஒரு பொழுதும் செயயத் தகுந்ததன்று. ஆதலால் நான் உனது விருப்பப்படி ராஜஸூயம் செய்யவேண்டுமென்னும் எனது மனோரதத்தை மாற்றிக்கொள்கின்றேன். நீ சிறியோனாயினும், உனது வார்த்தைகள நியாயமும் தருமமும் தவறாதனவாயிருததலால் ஏற்றுக் கொளளத் தக்கவையே” என்று கூறினன்.

புதன், 15 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 42

எண்பத்தியெட்டாவது ஸர்க்கம்

(ஸ்ரீராமன், அகத்தியரிடம், திவ்யாபரணம் பெற்றது)

                பிறகு, அகத்தியர், தமது ஆசிரமத்திற்கு வந்த கைல தேவதைகளையும், ஒரு தன்மையாக விசேஷமாக உபசரித்துப் பூஜிக்க, அகத்தியரளித்த அதிதி பூஜைகளைப் பெற்றுப் பெருமகிழ்ச்சி கொண்டு, தேவர்கள் யாவரும், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தேவலோகம் சென்றனர். ஸ்ரீராமன், புஷ்பக விமானத்திலிருந்து இறங்கி, அகத்திய முனிவரை வணங்கி நிற்க, அம் முனிவர் ஸ்ரீராமனை நன்றாக உபசரித்து, அவனை நோக்கி, "ஹே ராம! நீ சம்புகனை வதைத்து, வைதிகன் மகனைப் பிழைப்பித்துத் தருமத்தைச் சீர்படுத்தினை, என்று தேவர்கள் கூறக்கேட்டு, உனது வருகையை எதிர் பார்த்து இருந்தேன். நீ இன்றிரவு என்னருகில் வஸித்திருந்து நாளைக் காலையில் அயோத்திக்குச் செல்வாயாக, நீ ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியன்றோ! நீயே ஸகல பூதங்களுக்குப் பிரபுவும்,, ஆதிபுருஷனுமாய் விளங்குகின்றனை"- எனக் கூறிப் பலவித உபசாரங்கள் செய்து, பிறகு சோதி மயமாய் விளங்குகின்ற ஒரு திவ்யாபரணத்தைக் கொணர்ந்து, "ஹே ராம! விச்வகர்மாவினால் நிருமிக்கப் பட்ட அற்புதமான இவ்வாபரணத்தைப் பெற்றுக் கொள்க. இதை உனக்கு, நன்கொடையாகத் தருகிறேன்," என்றார்.

                ஸ்ரீராமன் அதுகேட்டு, அம் முனிவரை நோக்கி, "முனிச்ரேஷ்டரே! தானம் வாங்கும் அதிகாரம் பிராம்மணர்களுக்கன்றோ உரியது, க்ஷத்திரியருக்கு அவ்வதிகாரம் இல்லையே. அப்படியிருக்க இதனை, யான் எங்ஙனம் பெற்றுக் கொள்வது? தேவரீரே இதனை, அடியேனுக்கு விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும்'' என வேண்டினன்.

                அதற்கு, அகத்தியர் ஸ்ரீராமனை நோக்கி, "ரகுநந்தன! முன் பிராம்மணர் பெருமை பெற்று விளங்கிய கிருத யுகத்தில் அரசனில்லாமல் ஜனங்கள். ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தேவர்கட்கு மாத்திரம் மஹேந்திரன், ஒருவன் அரசனாயிருந்தனன். அதனால், அரசனில்லாத மானிட உலகத்தவரனைவரும், நான்முகக் கடவுளை யணுகி, 'தேவ! தேவர்களுக்கு இந்திரனை அரசனாய் ஏற்படுத்தியதுபோல் எங்களுக்கும் ஓரு அரசனை விதித்தல் வேண்டும். அவ்வரசனுக்கு, நாங்கள் ஏற்றபடி பூஜை புரஸ்காரங்கள் செய்து கொண்டு, பாபத் தொழிலொழிந்து வாழ்வோம்' என வேண்டினர். அது கேட்டுப் பிரம்மதேவன் தேவேந்திரனையும் மற்றுமுள்ள திக்பாலகர்களையும் வரவழைத்து, 'தேவர்காள்! இப்பொழுது பூலோகத்தைப் பாதுகாக்க ஒரு அரசனைப் படைக்க வேண்டுமாதலின் அதன் பொருட்டு நீவிர் ஒவ்வொருவரும். உங்களது உத்தமமான, அம்சங்களின் ஒரு பகுதி தருக,' என்று கேழ்க்க, அவர்கள் அவ்வாறே தந்தமையால் பிரம்மதேவர், அவைகளைக் கொண்டு, 'க்ஷுபன்' எனப் பெயர் கொண்ட ஒரு புருஷனைப் படைத்து, அவனை பூலோகத்திற்கு அரசனாக்கினார்.

                அவ்வேந்தன் இந்திரனது கலையினால், இப்பூமி யெங்கும் அதிகாரம் செலுத்துகின்றனன். வருணனின் கலையினால் சரீரங்களை வளர்க்கின்றனன். குபேரனது கலையினால் தனாதிகாரியாகி, ராஜ்யத்திற்குப் பொருளை ஜனங்களுக்கு அளிக்கின்றனன். யமனது கலையினால், அறநெறி தவறாது, பிரஜைகளை தண்டிக்கின்றனன். ஆதலின் ராம!தேவேந்திரனது, அம்சம் உன்னிடத்தில் இருக்கின்றமையால், அதைக் கொண்டு பிரஜைகளைப் பரிபாலிப்பதன் நிமித்தம், இதனை நீ பெற்றுக் கொள்ளத் தகும்," எனக் கூறினர்.

                அகத்தியர், தர்மத்திற்கேற்றவாறு, இங்ஙனம் கூறக் கேட்டு இராமன் திருப்தியடைந்து, அந்த உத்தமமான ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டு, அம் முனிவரை நோக்கி “தபோதனரே! இவ்வற்புதமான, திவ்யாபரணம், எவ்விதமாக, எவ்விடத்திலிருந்து, யாரால் தேவரீருக்குக் கிடைத்தது? இதன் வரலாற்றைக் கேட்டறிய விரும்புகின்றேனாதலின், அதை அருளிச் செய்ய வேண்டு’         மென்று வினவினன.

89ஆவது ஸர்க்கம்

                அகத்தியர், ஸ்ரீராமனை நோக்கி, 'ரகுவீரரே! திரேதாயுதத்தில் ஆதியில் யான் நிர்மானுஷ்யமான மிகப் பெரிய ஒரு வனத்தைக் கண்டு, அதில் தவம் செய்ய விரும்பினேன். அவ்வனத்தின் நடுவின். அன்னம், காரண்டவம். சக்ரவாகம், முதலிய, நீர்ப் பறவைகள் பல விளையாடப் பெற்று, தாமரை, நெய்தல் முதலான மலர்கள் அழகாக மலர்ந்து; பாசியின்றி நிர்மலமாய் மதுரமான தண்ணீர் நிறைந்து. கலக்கவொண்ணாது, ஆழ்ந்த ஒரு பொய்கை இருந்தது அப்பொய்கைக் கரையில், மிகத் தூயதும், அற்புதமான, மகிமை பெற்றதுமான ஆச்ரம மொன்று இருக்கக் கண்டேன் அதில் தபசி ஒருவருமில்லை. அந்த புண்ய ஸ்தலத்தில் ஒருநாளிரவு துயின்று, வைகறை நேரம் துயிலெழுந்து அத்தடாகத்தின் கண், நீராடி, நித்ய கர்மங்களைச் செய்யச் சென்றேன். அதில் ஒரு மனிதப் பிணம், கொஞ்சமேனும் கரையாது புஷ்டியுள்ள தேஹத்துடன், மூப்பிலாததாய் மிதந்து கொண்டிருக்கக் கண்டேன்.

                ராம! அங்ஙனம் காணப்பட்ட மனிதன் சவத்தை யான், வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில், திடீரென்று, அவ்விடத்தில் வாயுவேக, மனோவேகமாய் வருகின்ற திவ்ய விமான மொன்று கண்ணிற்குப் புலப்பட்டது. அதில் திவ்யமான, பூமாலைகளும், ஆபரணங்களும் அணிந்து காந்தியும் அழகுமடைந்த திவ்ய புருஷனொருவன் தோன்றினான். அவனைச் சுற்றிலும், அரம்பையர்கள், மதுரமான கீதங்கள் பாடினர், சிலர், மங்கள வாத்தியம் முழங்கினர். சிலர், அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். சிலர், நா்த்தனமாடினர். ரகுகுல திலக! யான் பார்த்துக் கொண்டிருக்கையில்,' அந்தப் புருஷன், அவ்விமானத்தினின்று இறங்கி வந்து, அச்சவத்தின் கொழுப்பு மிகுந்துள்ள தசைகளை வயிறார உண்டு, அக்குளத்தில் கை கழுவி, மீண்டும் தனது விமானத்திலேற எழுந்தனன்.

                தேவனுக் கொப்பான அவனை யான் நோக்கி, ''ஐய! நீர் யார்? இத்தன்மையதான உணவில், ஆசையும் கருத்தும், உம்மைப் போன்ற பெருமையுடையோர்க்கு உண்டாகுமோ? தேவத்தன்மையுடைய உமது உணவு மிகவும் இகழத்தக்க தாகயிருக்கின்றதே. இது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கின்றதாதலின், இதன் காரணத்தைத் தெரிய உரைப்பீராக" என வினவ, அத் தேவன் மிருந்த மகிழ்ச்சியுடன், யாவையும் என்னிடம் கூறலாயினன்.

தொண்ணூறாவது ஸர்க்கம்

[ஸ்வேத ராஜன் அகத்தியருக்கு ஆபரணமளித்தது]

                “ஸ்ரீராம! அத்தேவன் என்னை நோக்கி, முனிவர் பெருமானே! முன், விதர்ப்ப தேசத்தில், மிகுந்த பராக்ரமசாலியான மூவுலகங்களிலும் பிரஸித்தி பெற்ற, சுதேவரென்னும் பெயருடைய ஒரு அரசன் ஆண்டு வந்தனன், அவருக்கு, இரண்டு மனைவியரிருந்தனர். அவ்விருவருக்கும். ஸ்வேதன் என்கின்ற யானும், ஸுரதன் என்கிற என் தம்பியுமாக இரண்டு மகன்கள் பிறந்தோம். தந்தை ஸ்வர்க்கத்தை யடைந்த பின்னர், பட்டணத்து ஜனங்கள் என்னைத் தங்களுக்கு அரசனாக்கிக் கொண்டனர். யானும், அவ்வரசாக்ஷியை ஏற்றுக் கொண்டு நீதி முறை தவறாது பல்லாண்டு காலம் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தேன். வேதியர் பெருமானே! இவ்வாறிருக்கையில், நான் எனது வாணாள் இவ்வளவுதான் என்பதை ஸாமுத்ரிகம் முதலிய அடையாளங்களால் அறிந்து. நற்கதியடையக் கருதி, ராஜ்யத்தைத் துறந்து, தம்பிக்கு முடிசூட்டி, இவ்வனத்துள் புகுந்து இத்தடாகத்தின் தீரத்தில் மூவாயிரமாண்டளவு அருந்தவமியற்றிப் பிரம்மலோகமடைந்தேன். பிணி, பசி, மூப்பு, எனும் துன்பங்களில்லாத அவ்வுத்தம உலகத்தில் என்னைப் பசியும் தாகமும் மிகவும் பீடிக்கலாயின. அது கண்டு, யான் சிந்தை கலங்கி, நான்முகக் கடவுளை யணுகி, 'ஸ்வாமின்! பசி தாகமில்லா இவ்வுத்தம ப்ரம்ம லோகத்தில் என்னைப் பசியும் தாகமும் பீடிப்பது ஏன்? எந்த ஆஹாரத்தால் திருப்தி உண்டாகும். அதை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்' என வேண்டினேன்.

                பிதாமஹர், என்னை நோக்கி, 'சுதேவன் மைந்தனே! உத்தமமான தவம் புரியும்போதும், உனது உடலின் மீது ஆசை யொழியாதவனாகி, அதை அதிக ஆதரத்துடன் போஷித்து வந்தனை. அங்ஙனம் போஷித்து வருகையிலும், நீ சிறிதும் திருப்தி யடையவில்லை. அதனால், அப்பசி தாகங்கள் உன் தவத்தின் பெருமையால் இந்த லோகம் புகுந்தும், உன்னை விட்டு விலகவில்லை. நீ உதர போஷணத்தில் வைத்திருந்த அதிகமான ஆசையினால் நீர் வேட்கையும் நல்லுணவில் ஆசையும், உன்னை யிங்கு பீடிக்கின்றன.

                ராஜனே! முன் ஒரு ஸன்யாஸி உன்னிடம் பிக்ஷை வேண்டி வர, அவனுக்கு நீ அன்னமிடாமற் போயினை. அதனால், முன்னம் நீ கொடுத்து வைத்தது ஒன்றுமிலாதாதலின் உனக்கு வேறு ஆகாரமெதுவும், இங்கு கிடைப்பதரிது. நீ செய்த தவத்துடனே நல்லுணவு அளித்து, அருமையாய் ஆதரித்த, உடலொன்று மாத்திரமே மிகுந்துளது. எனவே நீ போஷித்து வைத்த உனது சரீரத்தின் மிக மதுரமான மாமிசத்தையே நீ நாடோறும் அருந்தி, திருப்தியடையக் கடவை. ஹே சுவேத! நீ தவம் புரிந்த வனத்திற்கு எப்பொழுது மஹாத்மாவான அகத்திய முனிவர். எழுந்தருளுகின்றனரோ, அப்பொழுது உனக்கு, இதிலிருந்து விமோசனம் ஏற்படும்' என்றனர்.

                “தபோதனரே! அன்று தொட்டு, அடியேன், அனேகம் ஆண்டுகளாக மிகவும் இகழத் தக்கதான, எனது உடலையே உணவாகத் தின்று வருகின்றேன். எத்தனை காலம் புசித்தும இவ்வுடலின், ஊன் சிறிதளவேனும் குறைவு படுவதில்லை. எனக்கும் பசி தணிந்து திருப்தி யுண்டாவதில்லை.

                முனிச்ரேஷ்டரே! இன்று நீரே என்னைக் கடைத்தேற்ற வேண்டும். அதற்குப் பிரதிமாக திவ்யமான, இவ் வாபரணத்தைப் பெற்றுக் கொண்டு, அடியேனிடம் அருள் புரிக. இது பொன், பட்டாடை, ஆபரணம், பஷ்யம், போஜனம் ஆகிய யாவற்றையும், ஸகலமான போகங்களையும் அளிக்கும்' என்று கூறி வேண்டிக் கொண்டனன்.

                இங்ஙனம் சுவேதராஜனின் துக்ககரமான விருத்தாந்தத்தைக் கேட்டு யான் அதினின்று அவனை விடுவிக்குமாறு அவ்வாபரணத்தைப் பெற்றுக் கொண்டேன். அதனை யான் கைகொண்டவளவில் அந்த ராஜ ரிஷியினது பழமையான மானிட தேஹம், அழிந்து போயிற்று. உடனே அவ்வரசன் மிகுந்த மகிழ்ச்சி யடைந்து ஸுவர்க்கலோகம் சென்றனன். அந்த சுவேதராஜனால் கொடுக்கப் பட்ட ஆபரணமே இதுவாகும், என்று கூறி முடித்தனர்.

தொண்ணூற்றியொன்றாவது ஸர்க்கம்

(தண்டகன் சரித்திரம் [

                அகஸ்திய மஹரிஷி கூறிய அற்புதமான கதையைச் செவியுற்ற ஸ்ரீராமபிரான் மிகவும் ஆச்சரியமடைந்து, அவரைப் பார்த்து, 'முனி வரரே! விதர்ப்பதேசாதிபதியான சுவேத ராஜன் கடுந் தவம் புரிந்த அரண்யம், மிருக பஷிகளேதுமில்லாமல் சூன்யமானதற்குக் காரணமென்ன? அவ்வரசன் அங்கு தவம் புரியக் காரணமென்ன?" என்று வினவினன். அகஸ்தியர் ராமனை நோக்கி,

                'ஸ்ரீராம! முன்பு கிருதயுகத்தில், மனுவானவர் தபஸ் செய்யக் கருதி தனது புதல்வனான இக்ஷ்வாகுவை அரசனாக நியமித்து, அவனைப் பார்த்து -“குமார! நீ நீதி தவறாமல் அரசாக்ஷி செய்ய வேண்டும். காரணமின்றி எவரையும் தண்டிக்கக் கூடாது, குற்றஞ் செய்யாதவரை தண்டித்தால் முடிவற்ற நரகானுபவமுண்டாகும். எனவே பிரஜைகளை தண்டிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாயிருக்கவேண்டும்,” என்று புத்திமதிகளைக் கூறி தவம் செய்து முக்தியடைந்தனர். பிறகு இக்ஷ்வாகு மகாராஜன், நீதியுடன் அரசாக்ஷி செய்து வருகையில், அவருக்கு நூறு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களுள் கடைசியிற் பிறந்த குமாரன், மூடனும், கல்வியற்றவனும். கொடியவனுமாகப் பெரியோர்களை, அவமதித்து வந்தனன். அது கண்டு, இக்ஷ்வாகு சினங் கொண்டு அவன் கட்டாயம் தண்டனை யடைவானெனக் கருதி, அவனுக்கு, தண்டன் எனப் பெயரிட்டு விந்திய பர்வதத்திற்கும் சைவலபர்வதத்திற்கும் இடையினுள்ள பூமியை யவனுக்கு அளித்தனன். பிறகு அவன் அந்தப் பிரதேசத்திற்கு அரசனாகி, அழகிய அம் மலைச் சாரலில் ஈடற்ற அற்புதம் வாய்ந்த நகரமொன்றை நிர்மாணஞ்செய்து அதற்கு, 'மது மந்தம்' எனப் பெயர் சூட்டி, அதில் குடி புகுந்தனன். சுக்கிராசாரியாரைத் தனக்குப் புரோஹிதராக வரித்துக் கொண்டு, அவருடன் கூடி தேவலோசுத்தில் தேவராஜன் ஆட்சி புரிவது போல அந்நகரத்தை ஆண்டு வந்தனன்" என்றனர்.

செவ்வாய், 14 மார்ச், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் -- உத்தர காண்டம் 41

84ஆவது ஸர்க்கம்

[பிள்ளையை யிழந்து பிராம்மணன் புலம்பியது.]

                இவ்வாறு ஸ்ரீராமபிரான் சத்ருக்னளை மதுராபுரிக்குச் செல்ல விடுத்தபின், மற்ற சகோதரர்களுடன் கூடி ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில், ஒரு நாள், ஒரு கிழ வேதியன், மரணமடைந்த தனது சிறு மகனை எடுத்துக் கொண்டு ராஜ மாளிகையை யடைந்து, 'ஐயோ' மகனே! இதுவரை 'யான், எவ்விதமான பாபமும் செய்தேனில்லை. அங்ஙனமிருக்க, பாலகனான நீ, எனக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை ஒன்றும் செய்யாமல், இளமைப் பருவத்திலேயே துர்மரண மடைந்த காரணமென்ன? இத்தகைய கோரமான காக்ஷியை இதுகாலும் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே! இந்த ராமனது. ராஜ்யத்தில்தான், இவ்விதமான அகால மரணமுண்டாகின்றது. ஆதலின் இத் தேசாதிபதியான, ராமனே ஏதோ மகத்தான பாபம் செய்திருக்க வேண்டும். ஐயோ! ராம! பிராணனை இழந்திருக்கும் இப்பாலகனை நீ பிழைப்பிக்க வேண்டும். இல்லையாகில், யான் திக்கற்றவனாக, என் இல்லறத் துணைவியுடன் உன் மாளிகை வாயிவில், உயிரை விட்டு விடுகின்றேன். நீ பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்து, சுகமாக வாழ்ந்திருப்பாயாக"என்று இப்படி பலவாறு புலம்பியழுதனன். பின்னும் அவ்வேதியன், வஸிஷ்டர், வாமதேவர், முதலான புரோஹிதர்களின் முன்னிலையில், ராமனை நோக்கி, ", ராகவ! நாங்கள் இவ்விராஜ்ஜியத்தில் இனிது வாழ்ந்து வருகிறோம். இவ்லிதமான விபத்து உன் வசத்திலிருப்பதனால் இப்பொழுது ஸம்பவிக்கலாயிற்று. இக்ஷ்வாகு முதலான மகாத்மாக்கள் பரிபாலித்து வந்த இத்த ராஜ்யம், இன்று நாதனற்றதாகியது. நீ அரசனாக ஏற்பட்டபின், விதிப்படி ஜன பரிபாலனம் செய்யாதது பற்றி ராஜ தோஷத்தினால் பாலகர்கள் மரிக்கத் தலைப்பட்டனர். ஆதலால் உனது ராஜ்யத்தினது அரசாக்ஷியில் நாட்டிலும் நகரத்திலும் சரியான நடவடிக்கையில்லாததினால் இப் பாலகன், இங்ஙனம் அகாலத்தில் பிராணனை யிழந்தனன்'' என்று மீண்டும் அநேகவிதமாக ராமனை யிகழ்ந்து அழுது அழுது புலம்பினன்.

எண்பத்தியைந்தாவது ஸர்க்கம்.

(வைதிகன் மகன் மரணமடைந்த காரணம்.)

                இவ்வாறு, புத்திரளைப் பறி கொடுத்த துயரம் தாங்கமாட்டாது. கதறிய பிராமணனது அழுகைக் குரலைக் கேட்டு, ஸ்ரீராமபிரான், வருத்தமடைந்து தனது ஸபையில் வீற்றிருந்த முளிச்ரேஷ்டர்களையும், மற்றுமுள்ள மந்திரிப் பிரதானிகர்களையும் கைகூப்பி வணங்கி, பிராம்மணனது வரலாற்றை அவர்களிடம் விவரமாக விண்ணப்பம் செய்தனன்.

                அங்கு முனிவர்களிடையில் வீற்றிருந்த நாரதர் அது கேட்டு, ராமனை நோக்கி, "ஹே, ரகு வீர! இச்சிறுவன் எப்படி அகால மரணமடைந்தான் என்பதைக் கூறுகிறேன் கேள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வருணத்தவர் தவம் புரிய அதிகாரம் உடையவராகின்றனர். முதன் முதலில், கிருத யுதத்தில் பிராம்மணர்கள் மாத்திரமே, தவம் செய்ய அதிகாரம் பெற்றிருந்தனர். திரேதா யுகத்தில் க்ஷத்திரியர்களும், தவம் புரிய அதிகாரம் பெற்றனர். துவாபர யுகத்தில் வைசியர்களும், கலியுகத்தில் சூத்திரர்களும், இவ்வித அதிகாரம் பெறுவர். சூத்திரர், கலியுகத்தில், தவம் செய்ய வேண்டியிருக்க, இந்தத் த்ரேதாயுகத்தில் (வைசியருக்கே தவம் செய்ய அதிகாரமில்லாத காலத்தில்) ஒரு சூத்திரன், தவம் செய்வானே யாகில், இதைவிட ஓர் அதர்மம் வேறு இருக்குமோ! ! ராம! இப்பொழுது கீழ்க் குலத்தவனான ஒரு சூத்திரன் கெட்ட புத்தி யுடையவனாகி, உனது, ராஜ்யத்தின் எல்லையில் மிகவும் கொடிய தவமியற்றுகின்றனன். துலாபர யுகத்திலேயே, சூத்திரன். தவம் செய்வது அதர்மமாகும் பொழுது. இந்தத் த்ரேதாயுகத்தில் கேழ்க்கவும் வேண்டுமோ? அக் காரணங் கொண்டே இப்பாலகன் மரண மடைந்தனன். எவனேனு மொருவன் ஒரு அரசனது நாட்டிலாயினும், நகரத்திலாயினும் செய்யத்தகாத செய்கைகளையேனும், அதர்மங்களையேனும் செய்வானாகில் அங்ஙனம் செய்கிறவன் மாததிரமேயனறி, அந்த நாட்டரசனும், நரகம் புகுவானென்பது சாஸ்த்ரம், பிரஜைகளை அற நெறி தவறாது பரிபாலிக்கின்ற மன்னவன், அந்தப் பிரஜைகள் செய்யும், வேதாத்யயனம், தவம், சுக்ருதம், (புண்ணியம்) ஆகிய பல புண்யங்களிலும் ஆறிலொரு பாகம் பெறுகின்றனர். அங்ஙனமாக அவர்கள் புரியும் அதர்மத்தின் ஆறிலொரு பாகம் பாபத்தை மாத்திரம் பெறாதொழிவானோ ஆதலின் நீ உடனே உனது தேசமெங்கும் திரிந்து இப்பாபத் தொழில் புரியும், சூத்திரனைக் கண்டு பிடித்து தண்டிப்பாயாகில், இப்பாலகன் மீண்டும் உயிர் பெற்றெழுவான்," என்றனர்.

எண்பத்தாறாவது ஸர்க்கம்

(ஸ்ரீராகவன் சம்புகனைத் தேடிச் செல்லுதல்)

                பிறகு ராமன், அந்தப் பிராம்மணனை வியஸனமுறாது இருக்குமாறு தேற்றி, உயிரிழந்த அவனுடைய சிறுவனது சரீரம் சிதைவுற்று அழியாவண்ணம், ஸுகந்தமிட்டு, அதனை, எண்ணைக் குடத்திலமைத்துப் பாதுகாத்து வரும்படி லக்ஷ்மணனுக்குக் கட்டளையிட்டுப் புஷ்பக விமானத்தைத் தன்னிடம் வருமாறு மனதில் நினைத்தனன். உடனே ஒரு முகூர்த்த காலத்தில் அவ் விமானம் வந்து சேர்ந்தவளவில், இராமன் இராஜ்யத்தை லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள் வசம் ஒப்புவித்து, உடனே வில், பாணம், கத்தி இவைகளைத் தரித்து புஷ்பகத்தின் மீதேறி சம்புகனைத் தேடித் திரியலாயினன். முதலில் மேற்கு திசையை நோக்கிச் சென்றான், அங்கு அவனைக் காணாதவராய் வடக்கு திக்கை நோக்கிச் சென்றனன். அங்கும் அவனைக் காணாது தென் திசையை நோக்கிச் சென்றாள் அங்கும் விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள 'சைவல' மென்னும் மலையின் வடபாகத்தில் பொலிவுற்று விளங்கும் பொய்கை யொன்றை ஸ்ரீராமன் கண்டனன். அதன் கரையில், ஒருவன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு கோரமான தவம் இயற்றுவதைக் கண்ட காகுத்தன், அவனை அணுகி, “அருந்தவமியற்றும் பெரியோனே! நீ யாது பயனைக் கருதி இத்தகைய செய்வதற்கரிய செயலைச் செய்கின்றனையோ அதனை யான் அறிய விரும்புகின்றேன். நீ வரம் வேண்டுகின்ற பிராம்மணனாயின், இனிது வாழ்க. அங்ஙன மன்றாகில், நீ எந்த வருணத்தைச் சேர்ந்தவன்? நீ இப்பொழுது தவத்தை மேற்கொண்டிருக்கின்றனைய ராதலின், பொய் பேசாது,உள்ளபடி உண்மையைப் பேசுக”, என வினவினன்.

எண்பத்தேழாவது ஸர்க்கம்

(ஸ்ரீராகவன் சம்புகனை வதைத்தல்)

                இங்ஙனம் இராமன் வினவியதைக் கேட்டு, அத்தவசி “ஐய! யான் சூத்திர யோனியிற் பிறந்தவன், 'சம்புகன்' என்று பெயருடையவன். சரீரத்துடன், ஸுவர்க்கம் புக எண்ணி இப்படி யருந்தவமியற்றுகின்றேன்"என்றனன். இராமன் அவனை நோக்கி, "சம்புக! இந்த யுகத்தில் சூத்திரர் தவமியற்றும் அதிகாரம் பெற்றிலராதலின் இவ்வண்ணம் நீ செய்வது தருமத்திற்கு மாறேயாகின்றது. யான் நாடெங்கும் அறம் தவறாது பாதுகாப்பவனான தசரத குமாரனாவேன். ஆதலால் தருமத்தைப் பாதுகாத்தற்குரிய யான் இப்போது உன்னை வதைப்பது தரும முறைப்படி எனது கடமையாகின்றது. இதற்கு நீ, யாது பதில் கூறுகின்றனை?'' என்று வினவ அந்த சம்புகன், “தேவரீர் திருக்கரத்தால் கொலையுண்பதும் அடியேனுக்கு. ஒரு பெரும் பாக்யமே யாகும்,” என்று கூற, அக்கணமே, ஸ்ரீராமன் உறையினின்றும் கத்தியை உருவி கையிலெடுத்து வீசிச் சம்புகனது சிரத்தைக் கீழே வீழ்த்தினன். அது கண்டு தேவர்கள் மனம் மகிழ்ந்து. அப் பார்த்திபன் மீது பூமாரி பொழிந்தனர். அவர்கள், இராமனை நோக்கி 'ஹே, ரகுவீர! சுவர்க்கம் புகுவதற்கு உரிமையுடையோனல்லாத இச் சூத்திரன் கொடிய தவமியற்றுதல் கண்டு, நாங்கள் மிக அச்சங் கொண்டிருக்கையில், அவனது தவம் முற்றுப் பெறுவதற்கு முன், நீ இவனை வதைத்தமையால் எங்களுக்குப் பெரிய உபகாரம் செய்தவனானாய். ஆதலால் நீ வேண்டிய வரமளிக்க விரும்புகின்றோம்", என்றனர்.

                இராமன், கூப்பிய கையனாய், அவர்களை நோக்கி. "தேவர்களே! எனது பிழையினால், ஒரு பிரம்மணனது ஏகபுத்திரனான பாலகன், அகாலமரணமடைந்து, யமலோகம் சென்றனன். அவ்வேதியன் மகனைப் பிழைப்பூட்டுவதாக, யான் வாக்களித்து வந்துள்ளேன். ஆகவே, நீங்கள் அவ் விளைஞனைப் பிழைப்பூட்டுக", என வேண்டினான். தேவர்கள் இராமனை நோக்கி, ''காகுத்த! நீ இவ்விசாரத்தை விட்டொழிக. எந்த முகூர்த்தத்தில். அந்த சூத்திரன் தலையற்று வீழ்ந்தனனோ, அக்கணமே, அவ்வந்தணனது மகன் உயிர்த்தெழுந்து, தனது பந்துக்களிடம் போய்ச் சேர்ந்தனன். இனி உனக்கு மங்கள முண்டாகுக. இராம! இப்பொழுது நாங்கள், அகத்திய முனிவரது ஆச்ரமம் செல்கின்றோம். அம் முனிவர், பனிரெண்டு வருஷ காலமாக மிகப் பெரிய தீக்ஷை கொண்டு, ஜலத்திலே படுத்து, அருந்தவம் இயற்றுகின்றனர். அவ்விரதம் இப்பொழுது முடிவு பெறுகின்ற தாதலின், அவரைப் போய்க் கண்டு களித்து வரவேண்டும், நீயும் எம்முடன் வருக" என்றனர்.

                ஸ்ரீராமன், அவ்வண்ணமே வருவதாக இசைந்து அக்கணமே புஷ்பக விமானத்திலேறி, அவர்களைப் பின்தொடர்ந்து அகஸ்த்யாச்ரமத்திற்குச் சென்றனன்.