வைணவ ஆசாரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைணவ ஆசாரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

11.அடியார்க்கு ஆணை

வெய்யவர்பல் லாயிரவர் விழைந்துமிழுங் கதிரதுவும்
நையுமெனப் புகர்பரவும் வானாட்டின் நாதன்றன்
செய்யவடி சேர்வதுதா னணித்தெனவே தெளிவுற்று
மெய்யவனிவ னிளையாழ்வார் தனைக்காண விரும்பினனே
.      102.

தாம் வான் சேரும் காலம் அணித்தென்று, ஆளவந்தார் இளையாழ்வாரைக் காண விரும்பியமை. வெய்யவர்…. புகர் – சூரியன் பல்லாயிரம் சேர்ந்து ஒளிரும் ஒளி. வானாடு – ஸ்ரீவைகுண்டம்.

பேரருளா ளன்கழலிற் பணிசெய்யும் பேறுடையார்
வாரமுடை வைணவரோ ரிருவரிவன் னடிவணங்கிச்,
”சாரமெழ இளையாழ்வார் மறைப்பொருளைச் சாற்றுவதால்
ஆரமுனி வுற்றவனாய் யாதவனு மகற்றிடலால்
,                            .108.

வைணவர் இருவர் இளையாழ்வாரைப் பற்றி ஆளவந்தாரிடம் கூறியது. ஆர முனிவு – மிகுந்த கோபம்; மறைப் பொருளை இளையாழ்வார் சுவைபட விரித்தலால், யாதவப்ரகாசன் தன் மதம் ஓங்காது எனச் சினந்தான்.

வரதனடிக் காந்தொண்டில் மண்டு”மென யாமுனனும்
அரதனமாய் துதியொன்றை யமைத்ததனை யோலையுடன்
வரதனடிக் கெனப்பெரிய நம்பியிட மளித்” தன்ப!
விரதனிளை யாழ்வாரென் பால்படர விரை”கென்றான்
.                .109.

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் என்று புகழ் பெறும் துதியைப் பெரிய நம்பியிடம் அளித்து, இளையாழ்வாரைக் கண்டுவர ஆணையிட்டார். அரதனம் – ரத்தினம்; இந்த ஸ்துதிக்கு ஸ்தோத்ர ரத்நம் எனப் பெயர். விரதன் இளையாழ்வார் – வரதனடியில் தொண்டே விரதமாகக் கொண்ட இளையாழ்வார்.

திருவடியிற் பரவிவருந் திருவுடையார் தமையீட்டிப்
பொருவிலனா மிளையாழ்வா ரவதார புருடனெனக்
குரவரனாம் நாதமுனி யருளியவம் மூர்த்திதனைத்
தெருளொளிருந் திருக்கோட்டி யூர்நம்பிக் களித்தனனே.
           105.

விரியமறைப் பொருள்பகரும் மிகவல்லோ னிளையாழ்வார்க்
குரியவரு சமாச்ரயணம் பெரியநம்பி யருளவெனப்
பரிதிவனை முனிவனவன் பணித்தருளிக் கீதைதனிற்
தெரிவரிய சரமச்லோ கப்பொருளைத் தெளிவுறவே
,                   106.

திருக்கோட்டி யூர்நம்பி திருவாய்மொ ழிப்பொருளைச்
செருக்கோட்டுந் திருமாலை யாண்டானுந் தவங்கொண்ட
பெருக்கோடப் புற்றிருந்தான் பெய்தசுவை யிதிகாசப்
பொருட்கோடா வகையருளப் பெரியதிரு மலைநம்பி,
                 107.

திருவரங்கப் பெருமான்றன் சேவடியின் பெருமைதனைத்
திருவரங்கப் பெருமாள ரையரிவர் அருள்செய்யல்
பெருவரங்க ளெனவோதி யெண்ணமெலாம் பெருமான்பால்
கருவரங்கங் காய்ந்ததனிக் கலைவலவன் றானுய்ந்தான்
.              .108.

இளையாழ்வாருக்கு உபதேசம் செய்வது பற்றி ஆளவந்தாரது ஆணை. திருக்கோட்டியூர் நம்பியிடம் தாம் மணக்கால் நம்பி மூலமாகப் பெற்ற திருவுருவை அளித்து, இளையாழ்வார் அவதார புருடனெனக் கூறினார். பெரிய நம்பி இளையாழ்வாருக்கு சமாச்ரயணம் செய்விக்க வேண்டும் என்றும், சரமச்லோகப் பொருளைத் திருக்கோட்டியூர் நம்பி உபதேசம் செய்யவேண்டும் என்றும், திருவாய்மொழிப் பொருளைத் திருமாலையாண்டானும், ஸ்ரீராமாயணத்தின் பொருளைப் பெரிய திருமலை நம்பியும், திருவரங்கன் திருவடியின் பெருமையைத் திருவரங்கப் பெருமாளரையரும் அருளவேண்டும் என்று ஆணையிட்டார், ஆளவந்தார். செருக்கு ஓட்டும் – அகங்காரத்தை அறவே ஒழித்த. கொண்ட தவம் பெருக்கு ஓட புற்றில் இருந்தான் – தவத்தால் சுடர் எங்கும் பெருகுமாறு புற்றிலே இருந்த வான்மீகி முனிவன். இதிகாசம் – இராமாயணம். கோடா வகை – பிழையில்லாதவாறு. பெரு வரங்கள் – தாம் மிகவும் விரும்புவன. கரு அரங்கம் காய்ந்த – கருவாகிய இடத்தை அகற்றிய, பிறவி மறுபடியும் நேராத.

படநாகத் தணையின்பாற் படர்தருமவ் வொளிதன்னைத்
திடமாகக் கண்ணிணையில் தேக்கியிவன் பெரும்பத்திக்
கடலாகுந் திருப்பாணன் பொழிதந்த கவியமுதை
மிடறேற்றி மெய்ம்மறந்து தன்மடமே மேவினனே.
                       109.

திருவரங்கப் பெருமாளைத் தொழுது அமலனாதிபிரான் என்னும் பிரபந்தத்தை அநுஸந்தித்துத் தமது மடத்திற்கு ஏகினார், ஆளவந்தார். மிடறு – தொண்டை. ஏற்றுதல் --- ஒலி செய்தல்.

சொல்லரிதாம் வையாசித் திருவோண நண்பகலில்
நல்லடியார் மறையோடும் தமிழோதி நற்றவன்றன்
எல்லடரு மிணையிடியைத் தாந்தொழவே அன்னவனும்,
”அல்லழிய அரங்கற்காம் பணிசெய்வி ரவன்புகழை,
                     .110.

சாற்றுதமிழ் தன்னோடுந் துயமொடு மெட்டெழுத்தும்
ஏற்றமுடை யாசானும் இறைவன்பா லன்புய்க்குந்
தேற்றமுடை யடியாரும் புகலாகத் தெளிவி”ரெனச்
சாற்றியரு நிட்டையிலே சார்ந்தனனால் நன்மலனே
.                    .111.

அடியார்க்கு ஆளவந்தார் ஆணை. எல் – ஒளி. அல் அழிய – அறிவின்மையாகிய இருள் மாள. அடியார்க்குப் புகல் தமிழ்மறை, த்வயம், திருவஷ்டாக்ஷரம், ஆசிரியன், இறைவனடியார் என்று அருளினார், ஆளவந்தார்.

பதுமா சனந்தனி லார்ந்தனன் படிவனும்
இதமே யருள்மணக் கால்வரு நம்பிதன்
பதமே தன்மனம் படிதர மகிழ்ந்தனன்
இதுவே விருப்பெனக் கவிந்தன இமைகளே.
                              .112.

ஆளவந்தார் பதுமாசனத்தில் அமர்ந்து மணக்கால் நம்பியின் திருவடிகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு பரமபதமடைந்தார். இமைகள் இதுவே (எமது) விருப்பு என கவிந்தன --- மற்றொன்றையுங் காண விரும்பாதனவாகிக் குவிந்தன.

சனி, 29 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

 

10. அத்திகிரியில் இளையாழ்வாரைக் கண்டமை.

வைப்பென நாதமுனி வணங்குமுரு தன்னை
ஒப்பரும் பத்தியெழ வொன்றமனத் துய்த்துச்
செப்பருஞ் செல்வனிலஞ் செழிக்கவருங் காலம்
தப்பில தணித்தெனவே தேறிமுனி வாழ்ந்தான்.               .92.

இந்த அவதார புருடனைக் காணும் காலம் அணித்துள்ளது என மகிழ்ந்தார் யமுனைத் துறைவர். செல்வன்+நிலம் = செல்வனிலம். வைப்பு – பொருள்,நிதி.

கச்சியி னின்றிருவர் கலைவலவர் வந்தார்
அச்சுத னரங்கனடி வாழ்த்தியடி யார்கள்
மெச்சிடு மேதையனை முனிவரனை மேவி,
”இச்சகஞ் செய்ததவ மென்னவொரு செல்வன்,                  .93.

கொந்தலர் பொழில்தழுவு பூதபுரி தன்னில்
வந்தவன் புகரவிழும் வதனனிருங் கண்ணான்
சந்தமுறச் சானுவரை நாடுகரன் சான்றோர்
சிந்தையிற் சேருமவன் நாமனிளை யாழ்வார்,                      .94.

விதியனை மேதையினன் விரிகலைகள் வல்லான்
மதியுடை யாதவனின் சீடனவன் சீற்றப்
பொதியினி னுணங்கிவரு புனிதனிளஞ் சீயம்
வதிகுநன் வரதனவன் முன்னிலையி” லென்றார்.                  .95.

திருக்கச்சியினின்றும் வந்த பெரியோர் இருவர் இளையாழ்வாரைப் பற்றி யமுனைத்துறைவரிடம் கூறியது. இராமாநுசருக்கு இயற்பெயர் இளையாழ்வார்; இவரே நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்டிய அவதார புருடன். கொந்து அலர் பொழில் – பூங்கொத்துக்கள் மலர்கின்ற பொழில்கள். பூதபுரி – ஸ்ரீபெரும்பூதூர். இராமாநுசன் அவதரித்த தலம். புகர் அவிழும் வதனன் – சோதி பிறங்குகின்ற முகம் வாய்ந்தவன். இருங்கண்ணான் – அகன்ற கண்களையுடையவன். சந்தம் உற – அழகு பொருந்த. சானு – முழங்கால். சானுவரை நாடு கரன் – கரங்கள் முழந்தாள் வரையில் நீண்டுள்ளவன். விதி அனை – பிரமனைப் போன்று. யாதவன் – யாதவப்ரகாசன். அவன் சீற்றப் பொதியினில் நுணங்கிவரும் – யாதவப்ரகாசனின் சினமாகிய பெரும் பாரத்தால் துவளும். வரதன் அவன் முன் நிலையில் வதிகுநன் – வரதராசனது சந்நிதியில் வசிப்பவன்.

மூப்பினி லெய்த்துவரும் முனிவனிது கேட்டான்,
”ஆப்புறு மக்களினங் காக்கவரு மன்பன்
மீப்பெரு மேதையினன் இன்னவனே” என்றே
கோப்புடை யத்திகிரி நாடிவர தன்றாள்,                                   .96.

இளையாழ்வாரைக் காண ஆளவந்தார் அத்திகிரி சேர்ந்தமை. ஆப்பு உறும் – சமுசாரபந்த வாழ்க்கையால் வருந்தும். கோப்பு உடை அத்திகிரி – சீர் நிரம்பிய அத்திகிரி. நாடி, வரதன் தாள் எனப் பிரிக்க.

தோய்ந்தனன் கோயிறனிற் சீடர்புடை சூழ
ஆய்ந்தவ னியாதவனு மச்சுதனை யேத்தப்
போந்திடக் கண்டனனக் குழுவுதனிற் புகரே
பாய்ந்திட நின்றதனி விபுதனுரு பார்த்து,                                  .97.

ஆங்குக் கோயிலிலே இளையாழ்வாரை ஆளவந்தார் கண்டமை. யாதவப்ரகாசன் தன் சீடருடன் வரதனை வணங்க வந்தபோழ்து, அந்தக் கூட்டத்தில் ஆளவந்தார் இளையாழ்வாரைக் கண்டார்.

“மாதவன் நாதமுனி மாழையென நல்கு
மேதகு சோதியுரு தன்னுடனே வேய்ந்த
கோதறு மேனியெழில் கொண்டவிவ னாவன்
ஆதவன் கலியிருளுக் காகவரு மன்பன்,”                                 .98.

“கலியிருளைக் கெடுக்கும் ஆதவன் இவனேயாம்” என யாமுனர் ஓர்ந்தமை. மா தவன் – சிறந்த தவத்தினன். மாதவன்………..மேனி எழில் --- நாதமுனிகள் தம்மிடம் செல்வமெனச் சேர்ப்பித்த திருவுருவத்தின் எழிலொடு இசைந்த எழில். மாழை – பொன்.

எனவுளங் கொண்டிவனை யிணைவிழியி னோக்கி,
”மனநல மண்ணவருண் முன்னவனே யாவை”
எனவருள் செய்துவர தன்கழலை யேத்தி,
”இனனென நமதுதரி சனமிவனை யேற்க,                              .99.

ஆளவந்தார் இளையாழ்வாரைக் குளிர நோக்கி, “ மண்ணவருள் நீ முதல்வனாவாய்” என வாழ்த்தி, வரதனிடம் வேண்டிக் கொண்டது. மண்ணவருள் மன நல முன்னவனே ஆவை -------. என அருள் செய்து, வரதன் கழலை ஏத்தி எனப் பிரிக்க. இனன் – அரசன், சூரியன். நமது தரிசனம் இவனை இனன் என ஏற்க, அருள் பெய்திடுக என்று, வரும் பாவுடன் இயைக்க.

“பேரருள் வரத!அருள் பெய்திடுக” வென்று
வாரம தோங்கியெழ வணக்கமுட னோதி
ஆரிய னியாமுனனவ் வரங்கநகர் தன்னில்
ஆரமு தாந்தமிழின் மறைபரவ வாழ்ந்தான்.                            .100.

ஆளவந்தார் திருவரங்கத்திற்கு மீண்டு தமிழ் மறையின் பொருள்களைச் சீடருக்கு ஓதி வந்தார்.

அரியதாந் தரிசன மடர்ந்து தழைத்தற்
குரியனா மாரியன் இளையாழ் வார்தனை
விரவிடப் பெற்றிடும் விரகை யாய்ந்தனன்
பரிவுடை மனத்தினன் பண்ண வன்முனி.                                .101.

இளையாழ்வாரைப் பெறும் விதம் யாதென ஆளவந்தார் ஆய்ந்து வந்தார். விரகு – உபாயம்.      

சனி, 22 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

9.துறவு.

மூவகையாம் பகையறுத்து முக்குணத்து
       ளிரண்டகற்றி யொன்றி லூன்றி
மாவருசீ ரகலத்தான் மாலோன்றன்
       தனந்தன்னைத் தன்பா லீர்த்த
மீவரிய விசயத்தான் வேய்வருமுக்
       கோலோடுந் துவர தேற்றுப்
பாவலர்தங் கோவாகிப் பாட்டன்றன்
       ஆணையதே பரவ வாழ்ந்தான்.                                 .82.

ஆளவந்தார் துறவேற்று நாதமுனியின் ஆணையைப் பரப்பி வந்தமை. மூவகை ஆம் பகை – உயர்குலப் பிறப்பு, மிகுந்த செல்வமுடைமை, கல்வியுடைமை இவை மூன்றும் மக்களுக்கு அகங்காரத்தை விளைவிப்பதால் பகை எனப்படுவன. முக்குணத்து இரண்டு அகற்றி – சத்துவம், ரஜஸ், தமஸ் என்பனவற்றுள் பின்னிரண்டை நீக்கி. ஒன்றினில் ஊன்றி – சத்துவத்தில் பொருந்தி. மா வரு சீர் …… மாலோன் – பிராட்டி பொருந்துவதால் பெருமையுற்ற மார்பினனாகிய திருமால். மீ அரிய விசயத்தான் – மிகவும் அரிதான வெற்றியுடையவன். வேய்வரு முக்கோல் --- மூங்கிலாலாகிய முக்கோல். துவர் – துவராடை.

நிறைமதியின் நிலவெனவே நரையுற்ற
        நின்மலனாம் மணக்கால் நம்பி
குறையறவே குலையவென நாதமுனி
        தன்கனவிற் கூறக் கேட்டுக்
கறையறவே கலியிதனைக் கடியவென
        வருவான்றன் கவினார் மூர்த்தி
செறிகதிரன் முனிவனிடஞ் சேர்த்”தமல!
         செல்வமென வுந்தை முந்தை,                                         .83.

நாதமுனி நம்மாழ்வாரிடம் பெற்ற திருவுருவை மணக்கால் நம்பி ஆளவந்தாரிடம் சேர்த்தமை. குறை அறவே குலைய என நாதமுனி தன் கனவில் கூறக் கேட்டு. நாதமுனி தம் மனத்திலுள்ள குறையை ஓதி, இது நீங்குமாறு இத்திருவுருவை ஆளவந்தாரிடம் சேர்க்குமாறு கனவில் பகர, இதுகேட்டு, கறை அறவே ------- கலியின் கொடுமை, விடம் நீங்குமாறு. கவின் ஆர் மூர்த்தி – அழகு நிரம்பிய திருவுரு. செறிகதிரன் --- ஒளி வாய்ந்த திருமேனியுடைய மணக்கால் நம்பி.

“சடகோப னருள்பெய்யத் தான்பெற்ற
        தமிழோடுங் கலியிற் பொங்கும்
அடமோய வவதரிப்பா னொருவன்றன்
         னணியுருவங் கொண்டா னிஃதே
திடமாக நீயிந்தச் சீரியனைக்
         காணும்பே றுடையை யென்றான்
இடவாகு மிதுவுன்றன் னுள்ளத்து
         ளுண்மையிது தேர்வா” யென்றான்.                                  .84.

நம்பி பகர்ந்தது: கலி கெடுமாறு தோன்றும் புருடனை நீ நேரிற் காணும் பேறு வாய்ந்துளை. சீரியன் – சிறந்தவன். இது தன்னை உன் உள்ளத்து இட ஆகும். இதனை நீ உள்ளத்தில் கொள்வாய். இது உண்மை தேர்வாய் -------.

மறைக்கடலை மாறன்றன் நாவாகும்
        மந்தரத்தால் திரித்துப் பெய்த
பெறற்கரிய வானமுதா மாயிரத்தின்
         வளனெல்லாம் மணக்கால் நம்பி
மறைக்கடல்யா முனமுனிக்குத் தானோதி
         வலன்நாத முனிவன் றன்னால்
முறைப்படுநற் றரிசனத்தைக் காக்கவெனத்
        தானோதி முத்த னானான்.                                                       .85.

மணக்கால் நம்பிஆளவந்தாருக்குத் திருவாய்மொழியின் பொருளை ஓதி, நாதமுனியால் உருவாக்கப் பெற்ற அறநெறியைப் பாதுகாக்க ஆசையிட்டு விண்ணெய்தினார். மறைக்கடலை மாறன், தன் நா ஆகும் மந்தரத்தால் திரித்துப் பெய்த --- மறையாகிய ஆழ்கடலை மாறன் தன்னுடைய நாவாகிய மந்தரத்தாற் கடைந்து, குவாலாக வெளியிட்ட. வான் அமுது ஆம் ஆயிரத்தின் --- சிறந்த அமுதமாகிய ஆயிரம் பாக்களின் . வலன் – வல்லவன். முத்தன் ஆனான் --- மண்ணினை நீத்து விண் சென்றான்.

மாதவன்கட் பத்தியெனும் வளநாட்டின்
        தனிமன்னாம் முனிவன் றன்பால்
போதமுறு மேலவர்கள் பெரியதிரு
        மலைநம்பி பெரிய நம்பி
மீதகவின் திருக்கோட்டி யூர்நம்பி
        திருக்கச்சி நம்பி மேலான்
தீதறவே வந்துதித்த தெருள்மாற
        னேர்நம்பி யன்றிச் செல்வ,                                                    .86.

குரவரனாந் திருமலை யாண்டானும்
         மன்தெய்வ வாரி யாண்டான்
உரவரவர் புகழ்வான மாமலையாண்
        டானன்றிச் சீய னாண்டான்
விரதியர்தங் கோனீச னாண்டானும்
         விறல்வளவ னனைய பல்லோர்
வரமுடைய மதியுடையார் வணக்குடனே
          சீடரெனச் சார்ந்தார் தாமே.                                                .87.

மாதவன் …..மன்  -- மாதவனிடம் பக்தி எனப்படும் தனி நாட்டிற்கு இறைவன், அஃதாவது பக்தர்களுள் முதல்வன். போதம் – அறிவு. சீடர்கள் – பெரிய திருமலை நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி, மாறனேர் நம்பி, திருமலையாண்டான், தெய்வ வாரியாண்டான், வானமாமலையாண்டான், சீயனாண்டான், ஈசனாண்டான், சோழ மன்னன் மற்றும் பலர். மன் தெய்வ வாரியாண்டான் --- சிறந்தவனாகிய தெய்வ வாரியாண்டான். உரவர் அவர் புகழ் வானமாமலையாண்டான் ---, உரவர் – அறிவுடையோர். விரதியர் – தவமுடையவர்.

நாதமுனி தானருளப் பெற்றவொரு
         யோகத்தில் நட்ட சீரான்
மாதவனாங் குருகைக்கா வலப்பன்பால்
        யாமுனனு முயோகு கொள்ள
ஆதரத்தி லணுகியிட வன்னவனும்
         முறியொன்றில் தன்னா ளோயும்
போததனைக் குறித்தவணே போதவென
       இயம்பினனாற் பரிவ தோங்க.                                                   .88.

நாதமுனியிடம் யோகத்தைப் பயின்ற குருகைக்காவலப்பன்பால் யோகம் பயில யாமுனர் செல்ல, அவர் ஒரு நாளை முறி ஒன்றிற் குறித்து அன்று தம்மைக் காணுமாறு கூறினார். சீரான் – யோகச் செல்வமுடையவன். மாதவன் – அரிய தவத்திலுற்றவன். போது அதனை – காலத்தை. அவணே – அவ்விடத்திற்கே.

திருவனந்த புரத்துறையுந் திருமாலைத்
              தொழவெனவே நடந்த பத்தித்
திருவனந்த நகர்தன்னில் தாதருடன்
             தொழுதிருப்பக் காவ லப்பன்
தருமனந்த நாளதனைக் குறித்தமுறி
         தனைநினைந்து பார்த்த யர்வே
தருமனந்த கைத்திடவே யாமுனனும்,
         “அந்நாளு மின்றே” என்றான்.                                                     .89.

யாமுனர் திருவனந்தபுரம் சென்று, அங்கு ஒரு நாள் அந்த ஓலையைப் பார்க்கக் குருகைக் காவலப்பன் குறித்த நாள் அதுவாக உணர்ந்து வருந்தினார். பத்தி திருவன் – பக்தியாகிய செல்வத்தை உடைய யாமுனர். அந்த நகர் தன்னில் --- காவலப்பன் தருமன் அந்த நாளைக் குறித்த முறிதனை என்றியைக்க. அயர்வே தரு மனம் தகைத்திடவே --- வருத்தத்தைத் தரும் எண்ணம் இவரை வாட்ட.

“கெட்டேன்நா னணித்திலனே கிளரொளியான்
          அவனென்பாற் பெய்யு மருளுக்
கெட்டேன்நா னவனன்றி யுளராரார்
          உயோகிதனை யோர்வா ரனத்தப்
பட்டேன்நான் பிதாமகனார் திருவுளமுங்
           கலங்கிடுமே படியின் பாலன்
பட்டேன்நான் பாருய்ய இதுதானும்
          பரப்பிடுவாய்ப் பற்றே” னென்றான்.                                           .90.

யாமுனர் வருந்திக் கூறியது. நான் அணித்திலன் – குருகைக்காவலப்பன் அருகில் இல்லையே. அவன் என்பால் பெய்யும் அருளுக்கு எட்டேன் -----. அவன் அன்றி உயோகு இதனை ஓர்வார் ஆர்--------. அனத்தப் பட்டேன் – அனர்த்தமுற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் --- பாரோர் உய்யவென நான் யோகம் பயில விரும்பினேன். இது கூடாததால் இந்த விருப்பம் குலைந்தது. பார் உய்ய இதுதானும் பரப்பிடு வாய்ப்பு அற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் -------.

மெலிவெழச் சீட ரோடும் மீண்டன னரங்க மையன்
கலியிறத் தோன்று மேலோன் றன்னையே காணு மாசை
மலிவுறு மனத்த னாகி மாறனி னருணி னைந்து
பொலிக வென் றோது பாக்கள் தம்பொருட் புந்தி யுய்த்தான்.           .91.

யாமுனர் திருவரங்கத்திற்கு மீண்டு, கலிகெடத் தோன்றும் புருடனைக் காணும் ஆசையுடையவராய், இப்புருடனைப் பற்றி தம்மாழ்வார் “பொலிக” என்றருளிய பாக்களைச் சிந்தனை செய்து வந்தார். அருள் + நினைந்து = அருணினைந்து.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

8. திருவரங்கனைத் தொழுதமை

மறையொடு தமிழு மோதி வழியெலாம் மதுர நாதம்
நிறைவுற மணக்கால் நம்பி நடந்தனன் நிலவெ ழுப்பி
இறையவன் யாமு னன்பின் வளர்தரு மிரவி யேபோல்
நெறியினன் முந்தை யீந்த வைப்பினை நேடிச் சென்றான்.
                        .72.

             ஆளவந்தார் நம்பியைத் தொடர்ந்து சென்றார். நம்பி நடக்கும்போது எங்கும் அவரது நிலவு பரவியது. இவரைத் தொடரும் ஆளவந்தார் வளரும் சூரியனைப் போல இயங்கினார். முந்தை – பாட்டன், நாதமுனி. வைப்பு – பொருள்.

தெருளதன் திரிபு தானும் மறலிதன் சினமு மென்றும்
அருகுறாப் பெற்றி வாயு மரங்கமா நகரி லெங்கும்
வருபுனல் நீத்த மேபோல் வளர்தரும் பத்தர் மண்ட
நிருபன், “என் பாட்ட னெற்கே வைத்ததாந் நிலனி” னென்றான்.
                .73.
          

    திருவரங்கத்தில் அடியார்களது குழுவினைக் கண்ட ஆளவந்தார், “எனது பாட்டனார் எனக்காக வைத்தருளிய தலம் இதுவே” என்றார். பெற்றி – பெருமை. நல்லறிவு மங்குதலும் யமனது சினமும் காணலாகாதன இத்தலத்தில். அருகு உறா –அணுகாதவாறு. எற்கு – எனக்கு. என் பாட்டன் எற்கு வைத்த நிலன் இது ஆம் -----------.

வளைமதி ளேழு தம்முள் வளைதரு முறைவி னுள்ளே
வளைவணப் பணியின் பாற்கண் வளர்தருங் கோம ளத்தை
வளைதனு நம்பி காட்ட வளர்தரும் பத்தி வாய்ந்தான்
வளைதலே காணாப் புத்தி யாமுனன் மகிழ்ந்து கண்டான்
.                              .74.

            நம்பி திருவரங்கப் பெருமானை ஆளவந்தார்க்குக் காட்டியமை. வளை மதிள் – சூழ்ந்துள்ள மதிள்கள். உறைவு – ஆலயம். வளை வண பணி – சங்குபோல் வெளுத்த ஆதிசேஷன். கோமளத்தை – கண்ணுக்கு இனியனை. வளை தனு – வயதால் வளைந்த மேனியுடைய. வளைதலே காணா புந்தி – கோணாத புத்தி.

விதுமுகன் நம்பி மிக்கோன் தன்கரம் பற்றி, “மேலோய்!
மதிநலன் வாய்ந்த மாண்பர் வகுத்தநற் றமிழை யீட்டும்
மதுகர முய்த்த தேனை மாந்துமிம் மிறைவன் காண்டி
நிதியிதே குரவ னென்பால் வைத்ததாங் கொள்க” என்றான்.
                            .75.

             நம்பி ஆளவந்தாரிடம், “ இவன்றான் நான் சொல்லிய நிதி” என்று இறைவனைக் காட்டினார். விதுமுகன் நம்பி – சந்திரன் போன்ற முகம் வாய்ந்த மணக்கால் நம்பி. மதிநலன் வாய்ந்த மாண்பர் – ஆழ்வார்கள். தமிழை – அருளிச் செயல்களை. ஈட்டும் – சேர்க்கும். மதுகரம் – வண்டு. உய்த்த தேன் – வெளியிட்டருளின நாலாயிரத்தின் சுவை. காண்டி – காண்பாய். குரவன் (நாதமுனி) என்பால் வைத்த நிதி இது ஆம், கொள்க.

தூமனன் நம்பி காட்டச் சூழ்தருஞ் சோதி தன்னுள்
தாமரை மலர டங்கச் சார்ந்தசெவ் வடிகள் கண்டான்
ஏமநற் சோதி யேந்துந் திருவரை யாடை கண்டான்
தேமலர் பூத்த வுந்தி தன்னொடுஞ் செல்வி தோயும்,                                      .76

மணியனை மார்பு கண்டான் வதமு மிலங்கக் கண்டான்
மணிமயக் குழைகள் கண்டான் மலர்தருங் கண்கள் கண்டான்
பணிமிசை யம்பு யக்கை படர்புகர் மௌலி காட்டிப்
பணிமினீர் இவனே நாதன் என்பபோற் படியக் கண்டான்.
                                     .77.

மலர்மிசை யெழுந்த கோனும் மலைமகள் பங்கி லுற்ற
சலம்புனை சடையி னானுஞ் சதமகன் றானு மேத்தும்
நலம்பெயு மிறைவன் றன்னை நம்பிதன் னருளிற் காட்ட
மலர்தருங் கண்ணிற் கண்டு மாந்தின னெழிலை யன்பன்
.                                       .78.

           ஆளவந்தார் இறைவனை ஆபாதசூடம் அநுபவித்தமை. தூமனன் – தூய மனத்துடைய ஆளவந்தார். ஏம நல் சோதி – பொன்னின் ஒளி. மணி அனை – மணியையொத்த; பணிமிசை – ஆதிசேடன்பால். (கை) படர் புகர் மௌலி காட்டி …. நாதன் – பரந்த சோதி வாய்ந்த திருமுடியைக் காட்டி, இம்முடியுடையவனே நாதன். கை … என்ப போல் படியக் கண்டான்-------. மலர்மிசை…..கோன் – பிரமன். மலைமகள் – பார்வதி தேவி. சடையினான் – பரமசிவன். சதமகன் – இந்திரன்.

படியிலாக் கருணை காட்டும் பரனையிக் குரிசிலேத்தி,
”மடிவிலா வான நீத்து வளநதிப் புளினந் தன்னிற்
படிறுவாய் மக்க ளுய்யப் படிந்தனை பாந்தள் பாலே
அடியனேன் நின்னை யண்டி யுய்ந்திட வருள்க வண்ணால்!
                                 .79.

“மண்ணுளா ருய்ய வாகும் மறைதமை யளித்த னைநீ
பண்ணவன் மரபி லென்னைப் பண்பெழத் தோற்றுவித்தாய்
திண்ணமாம் ஞான மேற்றான் திருவடி நிழலி லென்னை
எண்ணலா வகையி னுய்த்தே உயர்த்தினை இறைவ!” என்றான்.
                         .80.

             இறைவனிடம் ஆளவந்தார் தமது மகிழ்ச்சியைக் கூறி, தாம் இவனையே யண்டி வாழவேண்டுமென இறைஞ்சியமை. வானம் நீத்து . வளநதி – காவிரி. புளினம் – மணல்திட்டு. படிறு – வஞ்சகம், கொடுமை. பண்ணவன் மரபு – பெரியோனாகிய நாதமுனியின் வமிசம். திண்ணமாம் ஞானம் ஏற்றான் – குலையாத அறிவு வாய்ந்த மணக்கால் நம்பி.

மனையோ வாழ்சுழல் மகவோ
         வன்திரை உறவோ கடுவளியாய்
வினைசே ரைம்பொறி திமியே
           யாய்மலி வெள்ளப் பவக்கடலை
இனிதே கடந்துய்யப் புணையாய்
          வருதிரு மாலோ னிணையடியே
துளிநீர் புகலெனத் தூயோன்
          யாமுன னேற்றான் தொழுதனனே.
                                                                  .81.

             ஆளவந்தார் திருமாலின் திருவடியே புகலாகப் பற்றியமை. இல்லற வாழ்க்கை ஓர் ஆழ்கடல். மனை ஆழ் கடல் –. மகவு – மக்கள். வன் திரை – கொடிய அலைகள். உறவு – சுற்றத்தார். கடு வளி – வலி மிக்க காற்று. வினைசேர் ஐம்பொறி – வினைகளைக் குவிக்கும் ஐந்து பொறிகள். திமி – பெரிய மீன். பவம் கடலை – சம்சாரமாகிய பெருங்கடலை. புணை – தெப்பம். “துன்பக்கடற் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன்” என்ற சூடிக் கொடுத்த நாச்சியார் வாக்கு நோக்குக. கடந்து உய – கடந்து உய்ய.

 

வெள்ளி, 24 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்.

2. யமுனைத்துறைவர்.

6.மணக்கால் நம்பி பச்சையிட்டமை

பொன்னி யன்னவப் பூபனின் தேவியோ
பன்னு தேசுடைப் பாலக னைத்தழீஇ
”என்னை யாளவந் தானிவன்” என்றலும்
மன்ன லாயதே மண்ணினி லிப்பெயர்.                              .52.

இச்சிறுவனுக்கு ஆளவந்தார் எனப் பெயர் வந்ததன் காரணம். பொன்னி –இலக்குமி. தழீஇ –தழுவி.

இன்ப வாரிதி யிழிந்தவிம் மன்னவன்
அன்பி னிச்சிறு வனைக்கலை யாழியைத்
தன்ப தத்தினி லமர்த்தினன் தலைமிசை
மின்ப திந்திடு முடிதனை வேய்ந்தனன்.                              .53.

அரசன் இவனுக்கு முடி சூட்டியமை. வாரிதி – கடல். சிறுவனை கலையாழியை --- கலைக்கடலாகிய பாலகனை. தன் பதம் – தனது சிங்காதனம். மின் பதிந்திடு முடி – ஒளி வாய்ந்த கிரீடம்.

சிறிய னாயினு மியாமுன னரசினுக்
குரிய யாவையு முயவற வியக்கினன்
பெரிய ரியாவரும் பெய்திடு மன்பினில்
அரிய னாளவந் தானிவ னென்றனர்.                                 .54.

சிறுவன் நன்கு அரசு புரிந்தமை. ஆயினும் + யாமுனன் – ஆயினுயாமுனன். உயவு அற – வருத்தமின்றி, எளிதில். பெரியர் + யாவரும் = பெரியோர் யாவரும். ஆளவந்தான் – மக்களை ஆளப் பிறந்தவன், ஆள இயற்கையாக ஆற்றல் வாய்ந்தவன்.

தந்தை யீச்சுர முனிவனு மிவன்கொளச்
சந்த மல்குழ லாளொரு தருணியைப்
பந்த முற்றிடப் பிணைத்தனன் பரிவினில்
சிந்தை யொன்றிட வொன்றின ரிருவரும்.                               .55.

ஈச்வர பட்டர் இவனுக்குத் திருமணம் செய்து வைத்தமை. சந்து அமல் குழல் --- பரிமணம் மிகுந்த கூந்தல். சந்தம் அல் குழல் – அழகிய கறுத்த கூந்தல்.

நங்கை நானிலம் மகிழ்வுற நல்கினன்
பொங்கு சோதியர் புத்திரர் நால்வரோ
எங்கு மேபுக ழியங்கிட இன்னவர்
பொங்கு மேதையர் நெறியினர் பொலிந்தனர்.                        .56.

இந்த நங்கை நான்கு செல்வரைப் பயந்தாள்.

மெய்ய னீச்சுர முனிவன் மைந்திடம்,
”உய்ய வாவன மணக்கால் நம்பியே
ஐய னின்னிடை அருளு” மென்றுதன்
செய்ய னாரிய னடிய டைந்தனன்.                                           .57.

ஆளவந்தாரிடம் தந்தை, “ மணக்கால் நம்பி என்பவர் உனக்கு நல்லன உபதேசம் செய்வார்” எனக் கூறி உயிர் நீத்தார். உய்ய ஆவன – உய்வதற்கு வேண்டுவன. செய்யன் ஆரியன் – தூயோனாகிய உய்யக் கொண்டார்.

குரவ னாணையைக் குறையற வியக்குநன்
விரவு பத்துடை மணக்கால் நம்பியிப்
புரவ லன்றனை யணுகிடப் போதலும்
பரவு பணியினர் தடுத்தனர் பன்முறை.                                  .58.

மணக்கால் நம்பி ஆளவந்தாரைக் காண முயன்றமை. பரவு பணியினர் – பணியில் உற்றவர்.  தடுத்தனர் – உள்ளே புகவொட்டாமல் தடுத்தனர்.

பாக சாலையை நாடினன் நம்பியும்
போக மாமெனப் புரவலன் தூதுளைச்
சாக மேற்பது கேட்டன னிதுதனை
ஆக மோங்கிட வைகலு மளித்தனன்.                                     .59.

பாகசாலை – சமையலறை. மணக்கால் நம்பி சமையலறையிட்புக்கு, ஆளவந்தார் விரும்புவது தூதுளங்கீரை எனக் கேட்டு இதனைத் தவறாது நாடொறும் அளித்து வந்தார். சாகம் – கீரை. போகம் – விருப்பம். ஆகம் – உள்ளம்.

கால மிங்ஙனம் கழிதலும் நம்பியோ
மேல வற்கென வளித்தில னொருபகல்
சால வேட்பது பெற்றிலன் தலைவனும்
சீல னம்பியின் செயல்தனை யறிந்தனன்.                                  .60.

ஒரு நாள் நம்பி கீரை அளிக்கவில்லை. ஆளவந்தார் இதனைக் கொடுப்பது நம்பி என அறிந்தார். வேட்பது – விரும்புவது. தலைவன் – அரசன், ஆளவந்தார்.

“இன்னவ னிவனொருகா லேகிடிற் பொருக்கெனவே
என்னரு கனுப்பி”ரென இறையவ னியம்புதலும்
பொன்னனை வணனொருவன் பின்றையப் புரவலன்முன்
தன்னுடைத் தலைவணக்கிச் சாற்றினன் விசயமதே.                   .61.

சீலன் + நம்பி – சீலனாகிய மணக்கால் நம்பி. “இந்நம்பி மறுபடியும் இங்கு வந்தால், இவரை என்னிடம் அனுப்புக” என்று ஆளவந்தார் ஆணையிட, மறுநாள் அந்நம்பியை அரசன் முன்னர் நிறுத்தினர், பணியாளர். பொன் அனை வணன் – பொன்போலும் சோதி வாய்ந்த மேனியுடைய ஒருவர்.. பின்றை – மறுநாள். சாற்றினன் விசயம் – ஜயவிஜயீபவ என வாழ்த்தினான்.

 

திங்கள், 20 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்.

யமுனைத் துறைவர்



5. சிறுபிள்ளை கேட்டவை

வேந்த னவையிற் சாந்தமொடு
        வியப்பும் நிலவ நாட்டங்கள்
பாய்ந்த சிறுவன் றன்பாலே
         செவிகள் படிந்த வத்திசையே
வாய்ந்த புலமைப் பெரியோன்முன்
         பாலன், “வலவ! மறுத்திடுவாய்
ஆய்ந்து நின்ற னன்னையவள்
          வந்தி யென்ப” னென்றனனே.                       42.

வேந்தனவையில் மக்கள் சாந்தமொடும் வியப்போடும் அமர்ந்திருந்தனர். இவர்கள் கண்களும் செவிகளும் இச்சிறுவனை நாடின.  முதல் விஷயம்.; நின் அன்னை வந்தி --- உனது தாயார் மலடி. பாய்ந்த – பாய்ந்தன.

புலவன் நெடிதே தானாய்ந்தும்
      மறுக்க வகையே புலர்ந்திலதே
“இலனோ யானென் னன்னைதனை
            வந்தி யென்றே யியம்பற்கே?
உலவை யொப்பா னிவனொருவன்
            இங்ங னுரைத்த லென்னெனவே
உலக மிகழ்தல் செய்யாதோ?”
            என்றே கலங்கி யொல்கினனே.                43.

புலவனது கலக்கம்.  உலவை – உலர்ந்த மரம்

“நல்லாய்! இந்த நரபதிதான்
            தரும வானா மென்பலியான்
வல்லை யென்னில் மேற்கோள்கள்
            வரைந்து மறுப்பாய்” என்றிதனை
வல்லோர் மலங்க விச்சிறுவன்
            பகர மனத்துட் கலக்கமெழ
“எல்லை யிற்றே னின்”றென்றே
            இறுமாப் பிற்றான் பண்டிதனே.                   .44.

இரண்டாவது விஷயம்;  இம் மன்னன் தருமவான்.   இற்றேம் – முடிந்தோம். இறுமாப்பு இற்றான் – இறுமாப்பு ஒழியப் பெற்றான்.

“வேந்த னறத்தின் வடிவெனவே
            விரவு மன்பால் விளம்புவரே
பாந்தள்   தனினுஞ் சீறானோ
            பாவி யிவனென் றியம்பிடினே?
மாந்த ரினமு மிகழாவோ
            நன்றி மறந்தா னிவனென்றே?
போந்த தென்பாற் புன்கண்ணே”
            என்றே சுழலும் புலவரனே.                           .45.

புன்கண் – துன்பம்

“வேறொன் றிதுகேள் மிகவல்லோய்!
            வேந்தன் தேவி பதிவிரதை
தேறி மறுப்பா யிதுதன்னைத்
            தெளிவார் சான்று தனையோதி”
மாறொன் றில்லா விதுதன்னைச்
            சிறுவ னியம்ப வணங்காதான்
கூறி லிடியே றிறுத்திட்ட
            கோடே போலக் குலைந்தனனே.                       .46.

மூன்றாம் விஷயம்;  அரசமாதேவி பதிவிரதை. தெளிவு ஆர் சான்று --- தெளிவான சான்று. வணங்காதான் – ஒரு புலவனுக்கும் கீழ்ப்படியாத வித்துவான். கூறில் – இவனது மனத்துயரத்தை விவரித்தால். இடி ஏறு இறுத்திட்ட கோடு போல --- வலியதான இடியால் தாக்கப்பட்ட மரம் போல.

“ஐயோ! அழிந்தே னகந்தையினால்
            அரசி தன்பா லகங்கூறல்
வெய்தே யாமே என்செய்கேன்
            மேலு மிதுவோ பெண்பாவம்
வைய மிதனிற் கொடிதொன்றும்
            வைத்த லிலதா” லெனநைந்து
கையிற் சிரமே தான்தோயக்
            கவலை நீத்தத் தாழ்ந்தனனே.                                 .47.

புலவன் வருந்தியமை. வெய்தேயாம் – கொடியதாம். இதனில் கொடிது ஒன்றும் வைத்திலது – இதனிற் கொடிது வேறொன்றுமில்லை. கையில் சிரமே தான் தோய --- கையில் தலையைச் சாய்த்து. நீத்தம் – வெள்ளம்.  கவலை நீத்தம் --- கவலையாகிய கடல்.

இறைவன் சிறுவன் முன்னணுகி
            “இளைஞ! இவற்று ளொன்றேனும்
குறையே கூறி மறுத்திடவே
            கூடு மென்னிற் செய்”கெனவும்,
“இறைவ! இவன்றா னிறுமாப்பால்
            இழுக்கே யுற்றா னுலகினிலே
நெறியே பரவ இவனாகான்
            எனவே யிலனே இவனாவான்.                                  .48.

“இவற்றுள் ஒன்றேனும் நீ மறுப்பாயா?” என அரசன் கேட்கச் சிறுவன் கூறியது. இவன் இறுமாப்பால் இழுக்குற்றவன். உலகம் வாழ இவன் பயனுறுவதில்லை. ஆதலால் இவன் இலன் என்றே கருதத் தக்கவன்.

“இவனை ஒன்றாய்ப் பெற்றவளோ
            தாயே யல்லள் வந்தியளே!
நவையே வாயும் நாட்டினர்த
            மேத மியாவும் நரபதிபால்
குவியு மிதனாற் கோமானும்
            எவ்வ முடையா னெனலாமே
இவனே நலம்பெய் புரோகிதனா
            யேற்றல் தானு மிழுக்கன்றோ.                     49.

சிறுவன் மேலும் கூறியது; ஒரு மரமும் தோப்பன்று. ஒரு மகனும் பிள்ளையன்று என்பர். இவன் தனது தாய்க்கு ஒரே மகன்; இதனால் மகனெனக் கருத இயலாது. இரண்டாவதாக உலகினர் செய்யும் பாவமெல்லாம் அரசனைச் சேரும். இப்புலவனைத் தனக்காக மன்னன் கொள்வது இழுக்காகும்.

“மணங்கொள் நங்கை வதுவைதனில்
            வருணன் முதலோர் தமக்காகி
வணங்கொள் நாதன் றனக்காகும்
            வண்ண மிதனா லொருவர்க்கோ?
இணங்க நூலு மிதுகூறும்
            என்னில் மறுப்பே இதுவன்றோ?
குணங்கொள் தேவி நின்பாலே
            குலவு முளத்தாள் கோமானே.”                       .50.

மேற்கோள் இது. குணங்கொள் தேவி ……. உளத்தாள் --- உத்தமியான அரசமாதேவி நின்பால் அன்புடையவள் மூன்றாவதற்கு விடை : திருமணத்தின்போது மணமகள் வருணன் முதலிய நால்வர்க்கு உரியளாகிப் பின்னர் கணவனுக்கு உரிமை பெறுகிறாள். ஒருவர்க்கோ?  -- ஒருவனுக்கோ உரிமை? இணங்க நூலும் இது கூறும் --- நூலிலிருந்து.

என்றிவையே யவைதன்னிற் கலையோதி
            இளஞ்சீய மியம்பக் கேட்டார்
நன்றென்றார் நம்மிடையே நாமகளே
            இவ்வுருவிற் போந்த தென்றார்
குன்றனைய தோளான்மன் தன்னுடைய
            புரோகிதனின் குறைவு கூறி
வென்றவிளம் பிள்ளைதனை மீப்புகழ்ந்து
            தன்னரசிற் பாதி யீந்தான்.                                      .51.

அவையிலுள்ளோர் சிறுவனைப் பாராட்ட, அரசன் இவனுக்குத் தனது இராச்சியத்தில் பாதி அளித்தான்.

வைணவ ஆசாரியர்கள்


 
யமுனைத் துறைவர்

4. பிள்ளையும் பண்டிதனும்


உக்கி லாத விஞ்சை யோடொ சிப்பு றாத வாண்மையும்
மிக்கு யர்ந்த நெறியு மின்ன வேய மிச்ச பையிலே
புக்கு நின்ற பிள்ளை தன்னைக் கண்ட புந்திப் பண்டிதன்
நக்கு, “நல்லை நம்மை வாதில் நலிய நாடிப் போந்துளை.               .32.

அரசவை . உக்கிலாதசிந்தாத, நிலையான. விஞ்சைகல்வி. ஒசிப்பு உறாத --- குலையாத. வேயும்அணியா அமைந்த. அரசன் கல்வி, ஆண்மை, நெறி இவற்றால் சிறந்தவன். நக்குநகைத்து. நல்லைநீ மிக்க நல்லவன்.

நெடிய மேரு தன்னை யெற்ற நேடு புல்ல தாயினை
கொடிய வேங்கை கொல்ல வென்று மேவு பூசை போன்றனை
மடிவி லாத வீற வாயு மெ ன்னைச் சுட்டு விரலினும்
வடிவி னற்பன் வாதில் வென்று வன்மை யேற்ற லெங்ஙனே?”       .33.

புலவன் ஏளனஞ் செய்த வகை. நெடிய மேருஉயர்ந்த மேரு பர்வதம். எற்றஅழிக்க. நேடுதேடுகின்ற , முயல்கின்ற. பூசைபூனை. மடிவு இலாதஅழியாத. வீறுமேன்மை.

என்று காயு மையன் முன்னர் பிள்ளை இங்ஙன் கூறினன்
நன்று நானி ளைஞ னென்று நன்ன ரேசு கின்றனை
குன்றி னோங்கு குஞ்ச ரத்தைக் குருகு சீயங் கொல்லலும்
குன்று தன்னைக் குற்றி ரும்பு லைத்தல் தானுங் கண்டிலை.            .34.

வெப்ப மெங்கு மோங்க ருக்கன் றன்னைக் கைக்குடை
தப்பு றாத டைத்தல் தானுங் கண்டி லைகொ லைய!நீ
ஒப்ப வோங்கு தால முற்றும் புல்லி லையி லுற்றிடும்
அப்பு விந்து தன்னு ளேயடக்கல் தானுங் கண்டிலை.                       .35.

வான ளாவு வையின்  சும்மை தன்னை யோர னற்பொறி
ஈன மாக்கு மித்தை நீயுங் கண்டி லைகொ லேந்தலே!
மீன தன்சி னையி னொய்ய ஆலி நுண்வி தையதும்
மான நீழல் வாயு மாவி ருட்ச மாதலோர்ந்திலை.                               .36.

சிறுவன் கூறியது. காயும் --- சினங்கொள்ளும். நன்னர் ஏசுகின்றனை ---. குன்றின் ஓங்கு குஞ்சரம்மலையினும் வலிமை வாய்ந்த பெரிய யானையை , குருகுகுட்டி. சீயம்சிங்கம். குற்றிரும்புஇரும்புத் துண்டு. உலைத்தல்வெட்டுதல். வெப்பம் எங்கும் ஓங்க ஓங்கு அருக்கன் -- . அருக்கன்சூரியன். தப்பு உறாது அடைத்தல்தப்பாமல் மறைத்தல் . கண்டிலை கொல்நீ கண்டிலை போலும். ஒப்ப ஓங்கு …..அடக்கல்வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது. அப்புநீர். விந்துபிந்து, துளி. வைவைக்கோல். சும்மைபோர். மீனதன் சினையில் நொய்ய --- மீன் சினையினும் மிகச் சிறிய . ஆலின் + யுண் விதையதும் – ---.  மான நீழல் --- பரந்த நிழல் . மா விருட்சம் --- பெரிய மரம்.

மேலு மேலு ரைத்தல் நீக்கி வாத மேதொ டங்குவை
மேல!” வென்று ரைத்த குட்டன் றன்னை வெம்பி நோக்கியே
பால! நீயெ ழுத்தி னங்கள் பகர வல்லை யாயினே
நூல ளிப்பலென்று வித்து வான றைதல் செய்தனன்.

வாதத்தைத் தொடங்குகஎனச் சிறவன் சொல்ல, வித்துவான்நீ எழுத்துக் கூட்ட வல்லையாயின், இதனைச் சோதிக்க நூல் ஒன்று தருவேன்என்றான். அறைதல் செய்தனன்மொழிந்தனன்.

சிறுவன், “போதும் வீணு ரைகள்என்று செப்பி மேலவா
உறுவ நூல்க டம்மை யோதி யுட்க ருத்து ரைத்துமேல்
முறுவ லோடு நின்ற வீறு தன்னைக் கண்ட முன்னவன்
இறுதல் திண்ண மென்ற தோர்ந்து சாத்தி ரங்க டம்முளே.              .38.

சிறுவன் தானே நூல்களை ஓதிக் கருத்தைக் கூறினன். மேலவா உறுவ நூல்கள் --- மேலான நூல்கள். இறுதல்தோல்வியடைதல்

சிலவெ டுத்தி யம்பல் செய்ய  மேல மேல சிறுவனும்
பலவெ டுத்து ரைத்தல் தன்னைக் கேட்ட பண்டி தன்முனன்,
புலமை யற்ற  புல்ல னோடு பெரிய ஓதல் குருவியின்
தலையில் தால நற்ப ழத்தை வைத்தல் சாலு மாகலின்,                   .39.

புலவன் சில சில ஓத, இவற்றிற்கு மேல் சிறுவனும் ஒத, வித்துவான், “உன்னிடம் கனத்த யூல்களை ஓதுவது குருவியின் தலையிற் பனங்காயை வைத்தலை ஒக்கும்என்றான். தால நல் பழம் --- பருத்த பனம்பழம். சாலும்ஒக்கும்.

அத்த! இச்ச பையி லுற்ற வன்பர் கேட்க  நற்பொருள்
மெத்த  ஓத வல்லை யாகில் நின்றன் மேன்மை சாற்றுவல்
எத்த ரத்தை யென்ப தோர்வல்என்று கூற யாமுனன்,
சித்த நல்லை செல்வ! யானுஞ் செய்வல் கேட்கஎன்றனன்.                 .40.

யாமுனன்  --- யமுனைத் துறைவன். சித்தம் நல்லைநல்ல சிந்தை வாய்ந்தவன் நீ; ஏளனமாக இயம்பியது.!

கலைவலர் முன்னோய்! மொழிகுவல் மூன்றாம்
          கருத்தவை கலைதமைக் கொண்டே
அலவென வாதஞ் செய்குவை யாயின்
          வெற்றிய னாகுவை நீயே
இலையெனில் யானே இயம்புவல் நீதி
          என்றன னிளையவன் றானும்,
குலைவது  காணேன் கூறுகவென்றான்
         புலவனும் புலவரர் குழுவில்.                            .41.

சிறுவன் கூறியது. நான் ஓதுவ மூன்றினைக் கலைகளைக் கொண்டு நீ மறுப்பாயின் வெற்றி நின்னது; இல்லையெனில் நானே நீதியைக் கூறுவேன்.