சனி, 11 ஜூன், 2016

இராமநாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

தசரதர் :-- (இராமரைப் பார்த்து) இராமச்சந்திரா! எனக்கு மூப்பு மேவிவிட்டது. இனி இப்பூபாரத்தைச் சுமக்கச் சக்தியற்றவனாயிருக்கிறேன். ஆதலால் இந்த பந்தத்தினின்றும் நீ என்னை விடுவிக்க வேண்டும்.

உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி
யிருமை யும்பெறற் கென்பது முன்பினோ ரியற்கை
தரும மன்னநிற் றந்தயான் றளர்வது தகவோ
கரும மென்வயிற் செய்யிலென் கட்டுரை கோடி

உலகத்தில் பெரியோர்கள் தமக்கு உரிமையுள்ள புத்திரர்களைப் பெற விரும்புவது அவர்களால் தமது துயரங்கள் நீங்கி இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற் பொருட்டாகும். அவ்வாறாக, தருமமே ஓர் உருவெடுத்து வந்தாலொத்த உன்னை மகனாகப் பெறப்பெற்ற நான் மனந்தளர்வது தகுமோ? என் சொல்வழி நிற்பது உனக்கு முறைமையானால் நான் சொல்வதொன்றுள்ளது. அதைக்கேள்.

இராமர்:-- பிதா! தங்கள் உள்ளத்துள்ளதைப் பணித்தருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.

தசரதர்:-- குழந்தாய்! சீதை மணவாளா!

முன்னை யூழ்வினைப் பயத்தினு முற்றிய வேள்விப்
பின்னை யெய்திய நலத்தினு மரிதினிற் பெற்றேன்
இன்னும் யானிந்த வரசிய லிடும்பையே னென்றால்
நின்னை யீன்றுள பயத்தினி னிரம்புவ தியாதோ

முன் செய்த நல்வினைப் பயனாலும், பின்செய்த புத்திர காமேஷ்டியாலும் உன்னை மகனாகப் பெற்றேன். பெற்றும் நான் இந்த இராச்சிய பாரத்தைத் தாங்கி வருந்துவதானால் உன்னைப் பெற்றதனால் அடைந்த பயன் யாது? அப்பயனை நான் நுகரும் காலம் நெருங்கி விட்டது. இராஜ்ஜியலக்ஷ்மி உன்னை அபேக்ஷிக்கிறாள். பிரஜானுகூலத்திற்கு நாடு உன்னை நாடுகிறது. உன் ஆதரவின் கீழிருக்க தேசம் உன்னைத் தேடுகிறது. தேசாதிகாரிகளுக்கு உன் அபிமானம் சித்திக்கத் தக்க அதிஷ்ட காலம் வந்துவிட்டது. இந்தச் சிம்மாசனம் உனக்கு இடமாக இச்சிக்கிறது. (சுட்டுவிரலைச் சிரசின் உச்சி வரையில் உயர்த்தி) இந்த மணிமுடி உன் சிரசிலிருந்து பிரகாசிக்கப் பிரியப்படுகிறது. செங்கோல் உன் அங்கையை அடைய அவாவுகிறது. நாளைய தினம் உனக்கு மஞ்சன நீராட்டி மணிமகுட முடிக்கத் தீர்மானித்துள்ளோம். குடிகள் எல்லோரும் முழுமனத்தோடும் உன்னை அங்கீகரிக்கின்றனர். நீ அரசற்குரிய உத்தம குணங்களெல்லாம் பொருந்தியவனா யிருக்கிறாய். ஆயினும் உன்மேல் வைத்த அன்பினால் உனது க்ஷேமத்தை நாடி நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்லுகிறேன், கேள்:--

“ என் உயிரினுஞ் சிறந்த மைந்தா! உலகத்தவர்கள் யாவரும் ஒழுகி உய்தற்காக வருணாச்சிரமங்களும் தருமங்களும் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றும் அளவில்லாதன வாயிருக்கின்றன. ஆதலால் அவைகளை இப்பொழுது சொல்லாது விடுத்து உனக்குரிய அரசியலுக்குரிய தருமத்தை மாத்திரங் கூறுகின்றேன்.

அரசர்க்கரசனாய், அடியார்க்கு எளியனாய், அநாதி மலமுத்தனாய் ஒரு கடவுள் உண்டென்பதை உள்ளத்தில் உறுதியாகக் கொள்க. அக்கடவுளை வழிபடுவதற்கு ஒரு நாளும் மறவாதே. அவருடைய திருவருளாகிய பெருந்துணை கொண்டே எதையும் முயலுவாயானால் முயன்றது முட்டின்றி முடியும். துறவிகள் கோபிப்பாரானால் கடவுளரும் கலக்க முறுவர். ஆதலால் அவர்களை வழிபடுவதன்றி ஒருகாலும் இகழற்க. கடுஞ்சொல், பொறாமை, கோபம் முதலிய குற்றங்களில்லாமல் தருமத்தைச் செய்க. அதனால் உயிர்களிடத்து அன்புண்டாகும். அன்பினால் வருமின்பமே இன்பம். மற்றவற்றால் வரும் இன்பமெல்லாம் துன்பத்தையும் பழியையும் தோற்றுவிக்கும். இடம் பொருள் ஏவல் என்னுமிவைகளிருந்தாலும், அன்பில்லாதவிடத்து அவை யாவும் எலும்பில்லாத உடம்பு போல இருத்தலால் ஒவ்வோருயிர்களிடத்தும் அன்புடைமை அவசியம் வேண்டும். பிரமச்சாரி, வானப் பிரஸ்தன், சந்யாசி, தென்புலத்தார், குரவர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், பசுக்கள், பிராமணர், கூனர், குருடர், செவிடர், முடவர் முதலிய அங்கஹீனர்கள், நோயாளர், வயோதிகர், குழந்தைகள், தம்மையடுத்தார் என்னும் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். எந்நன்றி மறக்கினும் செய்ந் நன்றி மறவாதே. மறந்தும் புறங்கூறாதே. அறிவினருக்கு வெறுப்பை யுண்டாக்கி, நகையை விளைத்து, வெளிற்றறிவை யுணர்த்தி, நன்கு மதிப்பைக் கெடுத்து, சிறப்பைச் சிதைத்து, தருமம் முதலியவற்றைப்போற் பயன்களையுங் கொடுக்காது நிற்கும் பயனில்லாத சொற்களைச் சொல்லற்க.

தரும நூலிற் சொல்லியபடி உலகத்தை யரசாள வேண்டுமானால், அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு ஆகிய ஆறும் இன்றியமையாத அங்கங்களாம். ஆதலால் என்றும் இவ்வங்கங்களோடு விளங்கியிரு. அரசர்கள் ஒரு தொழிலைச் செய்யுங் காலத்துப் பயப்படாமையும், அதனைச் செய்வார்க்குப் பொருள் கொடுத்தலும், செய்யுங்காரியத்தில் மனத்தைச் செலுத்தலும், அறிவு கொண்டதனை முடித்தலும், ஆண்மையுடைமையும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். இவைகளோடு கொலை முதலிய பாவங்களை நீக்குதலும், மானம் முதலிய குணங்களை யுடைமையும் அவசியமாகும். பிரஜைகள் வருத்தமுற்ற காலத்து ஆறிலொரு பங்கு இறையை வாங்காது விட வேண்டும். தங்கள் குறையை வந்து முறையிடுவார்க்குத் தடையின்றி வெளிப்பட்டு அவர்கள் குறையைத் தெளிவுறக் கேட்டு, இனிய சொற்களைச சொல்லிக் குற்றமுள்ளாரைத் தண்டித்துத் தீர்ப்புச் சொல்லக் கடவாய். யுத்தகளத்தில் பகை அரசரைக் கொன்றும், அரசரிடத்தில் திறை வாங்கியும், நாட்டைக் காத்துக் குடிகளிடத்து இறை வாங்கியும் பொருள் சேகரிக்க வேண்டும். திருடர் முதலியவர்களால் நாட்டுக்குக் கெடுதியுண்டாகாமற் காத்து, உயிர்கள் அறம் முதலிய உறுதிப் பொருள்கள் அடையும் வண்ணம் ஆட்சி செலுத்துதலே செங்கோலுக்குரிய மாட்சியாகும்.

மைந்தா! தவத்தர், ஆசாரியர், அந்தணர், உயர்ந்தோர், இவர்களிடத்து வணக்கமில்லாமையும், அகங்காரமும், செலவு செய்யவேண்டிய விடத்து செலவு செய்யாமையும், காமமும், கோபமும், கண்ணோட்டமும், ஆகிய இத்தீக் குணங்களைக் கொள்ளற்க. குற்றஞ் செய்யாமலிருந்து பிறர் குற்றங்களைக் கடியவேண்டும். சிறிதாயினுங் குற்றஞ் செய்யின் சிறுநெருப்பு மலைபோன்ற வைக்கோற் போர்களை அழிக்குமாறு போல பெருவாழ்வையும் அழிக்கும். பகைவர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். பெருநோயில் வருந்தச் செய்யும். கோபமுறாத பெரியோரையுங் கோபிக்கச் செய்யும். ஆதலால் குற்றமற்றவனாய் நடந்து வருக. நன்மை பயக்காத தொழிலைச் செய்யாதே. மழை மிகுதியினாலும், மழைக் குறைவாலும், காற்றினாலும், நெருப்பினாலும், நோயினாலும் உலகிற்கு வருந் துன்பங்களை யெல்லாம் தவர்களைக் குறித்தும் உயர்ந்தோரைக் குறித்தும் செய்யுஞ் சாந்திக் கிரியைகளினால் நீக்குக. பகைவர்களாலும், தீவினை செய்யுங் கூட்டத்தாராலும் வருகின்ற தீமைகளைச் சதுர்வித உபாயங்களினாற் போக்குக. உனக்கு வருகின்ற தீவினைகளை உற்பாதங்களினாலறிந்து அவற்றால் வருத்தப்படாது நடக்க வேண்டும்.

பகைவர்களுடைய வலியையும், அவரை வெல்லுங் காலத்தையும், வெல்வதற்கு வேண்டிய வினையையும், அது தொடங்குந் தன்மையினையும், அவ்வினைக்கு வருகின்ற இடையூறுகளையும், அவைகளை விலக்கும் வழியையும், வெற்றி கொள்ளுந் தன்மையினையும், வெற்றியால் வரும் பிரயோசனத்தையும், இன்னும் உனக்கும் பகைவர்க்கும் உள்ள பல நிலைகளையும் அறிந்து யோசித்துத் தெளிந்து வினை செய்ய வேண்டும். பகைவனை வெல்லுங்காலம் வருமளவும் புலியைப்போற் பதுங்கியிருந்து வினை முடிக்க. பகையரசன் செய்யத்தகாத குற்றங்களைச் செய்யினும் வெல்லுங்காலம் வரும் வரையும் அப்பகையை வெளியிற் காட்டாமல் நல்ல குணத்தோடு அளவளாவி சிரித்து உவகை கொள்ளுஞ் சுற்றத்தார்போல ஒழுகவேண்டும். காலம் வந்துவிட்டால் கருதிய வினை யவ்வளவையுஞ் சிறிதுந் தவறாது முடிக்கக் கடவை. நமது மந்திரிகளோ,

உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு ளுணருங் கோளார்
மற்றது வினையின் வந்த தாயினும் மாற்ற லாற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவ ரரிய நூலுங்
கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார்.

கண்டதொன்றனைக் கொண்டு இனிவருவதறியு மியல்பினர். விதியையும் வெல்லும் மதியுடையார். நற்குடிப் பிறந்தவர். அரிய நூல்கள் பலவும் கற்றுத் தெளிந்தவர்கள். மயிரொழிந்தால் வாழ்வொழிக்கும் கவரிமானைப்போல மானம் கெட்டவிடத்து உயிர் வாழாதார். அன்றியும்,

தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையிற் றிறம்பல் சொல்லாத் தேற்றத்தார் தெரியுங் கால
மும்மையு முணர வல்லா ரொருமையே மொழியு நீரார்.

அரசன் தம்மைக் கோபித்த காலத்திலும், அவன் கோபத்தைப் பொறுத்துத் தமக்கு நன்மையைக் கருதாது, நீதியைக் கைவிடாமல் எதிர்நின்று கூறும் வீரத்தன்மை யுடையவர். நடுவுநிலை மாறா நெறியுடையவர். முக்காலமும் உணர்ந்து சொல்லத் தக்கவர். எல்லார் மனத்துக்கும் ஒற்றுமையான மொழிகளையே உரைப்பவர். ஆதலால் எக்காலத்து எதைச் செய்யினும் இம்மந்திரிகளைக் கலந்து ஆராய்ந்து தெளிந்து செய்க. அதர்ம நெறி நிற்கும் அரசன் ஒருவனை அரசாட்சியினின்றும் விலக்க வேண்டுமானால், முனிவரையும், புரோகிதரையுந் தூதாக அனுப்பி “இந்த அரசன் தருமவழியில் நிற்பவனல்லன்; இவனை நீக்கி தரும வழியில் நிற்கும் வேறோர் அரசனை நியமிக்க நினைத்துள்ளோம். இது எவர்க்குமொப்பா யுள்ளது. நும்முடைய கருத்தென்ன?’’ என்று மற்ற சிற்றரசர் ஒவ்வொருவரையும் வினாவி அவருட் பலர் சம்மதப்படி அதனைச் செய்க.

பெருமிதம், பெருஞ்செல்வம், பேரழகு, மிக்க களிப்பு இவைகளில் முழுகியிருக்கின், குழந்தாய், இராமச்சந்திரா! பொச்சாப்பு, சோம்பல் முதலியவற்றால் உன்னைக் காத்துப் பகையை வெல்லுதல் அரிதரிது. குற்றஞ் செய்தோர் யாவரா யிருந்தாலும் கண்ணோட்டம் பாராது, நீதியையறிந்து தருமந் தப்பாமல் தண்டஞ் செய்தலே செங்கோலெனப்படும். களவாடுவோர், ஆறலைப்போர், பிறன்மனை நயப்போர், உயிர்க்கொலை செய்வோர் முதலியவர்களைத் தக்கபடி தண்டித்தல் பாவமன்று. அது பயிர் வளர்ச்சிக் கிடையூறாய் நிற்கும் களைகளைக் களைதல் போலாம். நியாயந் திறம்பி நடப்பாரைத் தண்டித்து அவர்களிடத்துள்ள பொருளையுங் கவர்ந்து கொள்ளுதல் அரசர்க்குத் தருமமேயாகும்.

இங்ஙனம் அரச தருமங்கடவாது ஆட்சி புரியும் அரசனை அவன் செங்கோலே காக்கும். முறைப்படி அரசு புரியாதவனை அப்பாவமே கெடுக்கும். அளவுகடந்த தண்டனை , நடுநிலையில்லாமை, முகமலர்ச்சியின்மை, மந்திரி பிரதானிகளோடு ஆலோசித்துச் செய்யாமை இவைகள் தீங்கை விளைக்கும். அதிகாரத்தை வெவ்வேறாகப் பிரித்து இராஜாங்க உத்தியோகஸ்தர்கள் பலர்க்கும் கொடுக்க வேண்டும். நீயே நேராக அதிகாரம் நடத்த வேண்டிய விஷயங்களில் அவ்வாறு நடத்தியும், அமைச்சர் முதலான மற்ற அதிகாரிகள் மூலமாக நடத்த வேண்டியவைகளை அவர்கள் மூலமாக நடத்தியும் எல்லா வகை உபாயங்களினாலும் உனது குடிகளைச் சந்தோஷப்படுத்தும் வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே யிருக்க வேண்டும். ஆயுதசாலையையும், பொக்கிஷத்தையும் மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும். புத்திரா! அரசியற் குரிய இலக்கணங்கள் இவைபோலப் பலவுள. அவற்றை விரித்துரைக்கின் மிகப்பெருகு மாதலின் மநுஸ்மிருதி முதலிய நூல்களிற் கண்டு தெளிக. குலக்குமரா! நான் இதுகாறும் கூறிய நீதிகளையும், உன் நுட்ப மதியையும் கலந்து அநுஷ்டித்து இச்செங்கோலைத் தாங்குவாயானால் நாட்டின் க்ஷேமம் நாளும் ஓங்கும். என் துயரமும் நாளையே நீங்கும். இராமச்சந்திரா! இனி நாளை மகுடாபிஷேகத்திற்கு நீ அனுசரிக்கவேண்டிய விரதங்களை நம் குலகுரு வசிஷ்டரிடம் கேட்டுத் தெளிக.

வசிஷ்டர்:-- இராமா, இன்றிரவு உனது பத்தினியுடன் தருப்பைப் படுக்கையில் படுத்து நித்திரை செய்யவேண்டும்; இருவரும் ஒன்றும் புசியாமல் உபவாசமாயிருக்க வேண்டும். நாளைக் காலையில் மங்களாபிஷேகத்திற்கு மந்திரி முதலானவர்கள் உன்னை உபசாரத்தோடு அழைக்க வருவார்கள் . போய் வா.

(இராமர் வணங்கிப் போகிறார். சபை கலைகிறது)

 

……. இரண்டாம் களம் தொடரும்……..

வியாழன், 9 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

வசிஷ்டர்:-- (சபையோரைப் பார்த்து) ஜனங்களுடைய திருப்தியை நிச்சயப்படுத்துவதற்காகவே சக்கரவர்த்தி இப்படிக் கேட்பதே யொழிய அவர்களுடைய கருத்தையறியாமலல்ல. (தசரதரைப் பார்த்து) சக்கரவர்த்தீ! உமக்கோ வயதாய் விட்டது. இனி நீர் வீட்டிலிருந்தேனும் வனத்திற்குச் சென்றேனும் ஆத்மலாபத்திற்குரிய தவத்தைச் செய்யவேண்டுவது அவசியம். எல்லோரும் அதை அச்சமின்றிச் சொல்லலாம். உம்முடைய புத்திரன் இராமனோ சகல சற்குணங்களும் கூடி ஓர் உருவெடுத்து வந்ததுபோல் விளங்குபவன்.

மண்ணி னுநல்லண் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணி னுநல்லள் பெரும்புகழ்ச் சனகியு நல்லள்
கண்ணி னுநல்லன் கற்றவர் கற்றிலா தவரு
முண்ணு நீரினும் முயிரினு மவனையே யுவப்பார்.

அவன் தர்ம்பத்தினி ஜானகியோ பொறுமையில் நிலமகளினும் மேம்பட்டவள். அழகில் இலக்ஷ்மி தேவியினுஞ் சிறந்தவள். அறிவிற் கலைமகளினும் மிக்கவள். கற்பிற் பார்வதி போன்றவள். இத்தகைய அருங்குணங்கள் அமையப் பெற்ற சீதாபிராட்டியின் கண்ணுக்கு மிகவும் இனியவன் நம் இராமன். கற்றவரும் மற்றவரும் அவனைத் தாம் பருகு நீரினும், தமக்குரிய உயிரினும் மேலாகக் கருதியிருக்கின்றனர்.

மனிதர் வானவர் மற்றுளா ரறங்கள் காத்தளிப்பார்
இனியிம் மன்னுயிர்க் கிராமனிற் சிறந்தவரில்லை
அனைய தாதலி னரச்சிற் குறுபொரு ளறியிற்
புனித மாதவ மல்லதொன்றில்லையீ துண்மை.

மனிதர் தேவர் நாகராகிய உயிர்களனைவருக்கும் சீராமனைக் காட்டிலும் தரும நெறிகளைக் காப்பதிற் சிறந்தவர் வேறொருவருமில்லை. ஆதலால், சக்கரவர்த்தீ! யோசித்துப் பார்க்கும்போது உமக்கு உறுதிப் பொருளாவது தூய தவமேயன்றி வேறொன்றில்லை. இதனை நீர் அறிய வேண்டும். சற்றும் கவலை வேண்டாம். உம்முடைய உத்திராகிய இராமச்சந்திரன் சத்திய பராக்கிரமம் உடையவன். தருமத்தைக் கைக்கொண்டவன். ஜனங்களைக் களிக்கச் செய்வதில் சந்திரன் போன்றவன். வித்தையில் பிரஹஸ்பதி என்றே அவனைச் சொல்லலாம். நல்ல சீலமுள்ளவன். எதற்குங் கலங்காதவன். எளியருக்கும் எளியனாய் உலாவி எல்லோருடைய க்ஷேமத்தையும் உசாவுகிறவன். ஒரு பொழுதும் பழுதுபடாத சாந்தத்தையும், அனுக்கிரஹத்தையும் உடையவன். இந்தத் தகுதியெல்லாம் அமைந்த புத்திரனை அரசனாகக் கொண்டு வாழவேண்டு மென்னும் ஆசையினாலேயே அவ்வளவு துருதமாக ஜனங்கள் உம் விருப்பத்தை அங்கீகரித்தது. உம்முடைய அரசாட்சியில் அசூயை கொண்டன்று. சக்கரவர்த்தியின் சந்தேகத்தை நீக்கும்பொருட்டு ஜனங்களும் தங்கள் கருத்தை வாய்விட்டுச் சொல்லலாம்.

நகரமாந்தர் :-- (அனைவரும் ஒருகுரலாய்) வசிஷ்ட மகாரிஷி கூறியதே எங்கள் எல்லோருடைய உண்மைக் கருத்தாகும்.

தசரதர்:-- நீங்கள் யாவரும் ஒருமித்த மனதோடு என் மகன் இராமனுக்கு முடிசூட்டச் சம்மதித்ததைக் கேட்டு மிகவும் களிகூர்ந்தேன். எப்பொழுது நமது இராமச்சந்திரனை இராச்சியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்துக் கண்ணால் பார்ப்போ மென்று நான் நினைத்தது கைகூடிற்று.இராம பட்டாபிஷேகத்தை உங்களுடைய கோரிக்கையின்படி வெகு விரைவாகவும் விமரிசையாகவும் நடத்தத் தீர்மானிக்கிறேன். (வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ!

முற்று மாதவநின் வாசகங் கேட்டலு மகனைப்
பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பொருவில்
இற்ற வன்றினு மெறிமழு வாளவ னிழுக்கம்
உற்ற வன்றினும் பெரியதோ ருவகைய னானேன்.

முனிபுங்கவ! என் மகன் ஸ்ரீராமனைப் பற்றித் தாங்கள் வெளியிட்ட பொதுஜன அபிப்பிராயத்தைக் கேட்டு மிகவும் மனம் பூரித்தேன். இராமனை மகனாகப் பெற்றபொழுதும், ருத்திர தனுசை அவன் முறித்த அப்பொழுதும், பரசுராமனைப் பங்கப்படுத்திய அப்பொழுதும் யான் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்பொழுது அதிக மகிழ்ச்சி யடைகிறேன். என் மனோரதம் நிறைவேறிற்று. முனிசிரேஷ்ட! இனிக் கால தாமதம் வேண்டாம். சித்திரை மாதம் மனோகரமான காலம். இன்றைய தினம் புனர்பூசம். நாளைய தினம் பூச நக்ஷத்திரம், பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள். இதைப்போல் சிறந்த நாள் கிடைப்பது அரிது. ஆதலால் நாளைய தினமே பட்டாபி ஷேகத்தை வைத்துக் கொள்ளலாம். (ஜனங்களுக்குள் கலகலவென்று ஒரு சத்தம் உண்டாகிறது) அதுதான் சரி. என் மனம் உறுதியாயிருக்கும் பொழுதே பட்டாபிஷேகத்தை நிறைவேற்றிவிட வேண்டும். மனிதர் எண்ணம் மாறுதலுள்ளது. இன்றைக்குள்ள எண்ணம் நாளைக்கும் இப்படியே இருக்கு மென்று சொல்ல முடியாது. ஆதலால் நாளைய தினமே என் மகன் இராமச்சந்திரனுக்கு முடி சூட்டி விடுவது நல்லது. (சபையோர் கரகோஷம் செய்கின்றனர். தசரதர் வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ! பட்டாபிஷேகத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவைகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்க உடனே மந்திரிகளுக்கு கட்டளையிடுங்கள். (சுமந்திரரைப் பார்த்து) மந்திரி! எல்லாம் வெகு துரிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும். இப்பொழுது நமது இராமனைச் சீக்கிரம் இங்கு அழைத்து வாரும்.

சுமந்திரர் :-- அப்படியே (போகிறார்)

வசிஷ்டர்:-- (மற்ற மந்திரிகளைப் பார்த்து) மந்திரிகாள்! நீங்கள் அனைவரும் நாளைய தினம் சூரியோதயத்துக்குள் நமது அரசருடைய அக்கினிஹோத்திர சாலையில் பொன் முதலான பொருள்கள், இரத்தினங்கள், பூஜைக்குரிய பண்டங்கள், அநேகவிதமான மூலிகைகள், வெள்ளைப் புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், பொரி, தேன், நெய், இவைகளைத் தனித்தனியாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பரிசுத்தமான வஸ்திரங்கள், இரதம், ஆயுதங்கள், நால்வகைச் சேனைகள், எல்லாச் சுபலக்ஷணங்க ளுடனும் பொருந்திய பட்டத்து யானை, இரட்டை வெண்சாமரம், துவஜம், வெண்கொற்றக்குடை, நெருப்புப்போல் பிரகாசிக்கின்ற நூறு பொற்குடங்கள், பொற்பூண் பூண்ட கொம்புகளையுடைய ரிஷபம், ஊனமில்லாத புலித்தோல், இன்னும் என்னென்ன வேண்டுமோ அவைகளையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்தப்புர வாயில்களும் நகரத்து வாயில்களும் சந்தனத்தாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு நல்ல வாசனை பொருந்திய தூபங்களாற் பூசிக்கப்பட வேண்டும். நாளைக் காலையில் தயிர் பால் ஆகிய இவைகள் மிகுதியாகக் கலந்த திவ்வியான்னங்களைக் கொண்டு நூறாயிரக் கணக்கான அந்தணர்களைத் திருப்தி யுண்டாக உண்பிக்க வேண்டும். அவர்கள் உள்ளங் குளிர, அவர்கள் இஷ்டப்படி நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷிணை ஆகிய இவற்றைச் சற்காரஞ் செய்து கொடுக்க வேண்டும். சூரியோதயமாகும்போது ஸ்வஸ்திவாசனம் சொல்ல வேண்டும். ஆகையால் வேதியர் அனைவரையும் அழைத்து வாருங்கள். எல்லோரும் வந்து அமருவதற்கு ஆசனங்கள் அமைத்து வையுங்கள். நகரம் முழுவதும் கொடிகள் கட்டுங்கள். வீதிகளெல்லாம் ஜலம் தெளியுங்கள். வாத்தியக்காரர்களும், நன்றாக அலங்கரித்துள்ள கணிகையர்களும் இராஜ கிரகத்தின் இரண்டாங் கட்டில் சித்தமாக இருக்க வேண்டும். கோவில்களிலெல்லாம் அபிஷேக அலங்கார நிவேதனங்கள் நடக்க வேண்டும். அவ்விடங்களில் யாவருக்கும் தக்ஷணை சகிதமாகப் போஜனம் நடக்க வேண்டும். நமது சைனியங்களுள் ஒவ்வொரு போர் வீரனும் நன்றாக ஆடையாபரண மணிந்து, ஆயுதமேந்தி, அரண்மனை முற்றத்தில் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

(சுமந்திரர் வருகிறார். அவருக்குப் பின்னாக இராமர் வருகிறார். தந்தையை முதலில் வணங்குகிறார். பின்பு வசிஷ்டர், விசுவாமித்திரர் முதலிய முனிவர்களை வணங்குகிறார். மற்றையோர் இராமனை வணங்குகின்றனர். இராமர் அவரவர் வணக்கங்களை அவரவர் தகுதிக்குத் தக்கபடி தலையைத் தாழ்த்தலாலும், “ஆஹா’ என வாயாற் சொல்லலாலும், கண்ணாற் பார்த்துத் தலையை அசைத்தலாலும் அங்கீகரிக்கிறார். “இராமச்சந்திரா! என் அருகில் வந்து அமர்’ என்று தசரதர் சொல்லுகிறார். இராமர் “வேண்டாம், நான் இங்கேயே அமருகின்றேன்’ என்று கூறி ஓர் ஆசனத்தில் உட்காருகிறார்)

தொடரும்……

செவ்வாய், 7 ஜூன், 2016

இராம நாடகம் -- பாதுகா பட்டாபிஷேகம்

|| ஸ்ரீ:||

இராம நாடகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் -- 1

முதற்களம்

இடம் : அயோத்தி அரசிருக்கை மண்டபம்

காலம் : காலை

பாத்திரங்கள் :-- தசரதர், வசிஷ்டர், வாமதேவர், சுமந்திரர், மந்திரபாலர், அசோகர், அர்த்த சாதகர், சித்தார்த்தர், விஜயர், ஜயந்தர், திருஷ்டி முதலிய மந்திரிகள், சேனாதிபதிகள், சிற்றரசர், பிரபுக்கள், நகரமாந்தர், இராமர், சேவகர் முதலிய மற்றையோர்

(தசரதர், சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் இருவரும் சக்கரவர்த்தியின் ஆசனத்துக்குச் சமத்துவமான பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். மந்திரிகள், சேனாதிபதிகள் முதலியோர் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து தத்தம் அந்தஸ்துக்கேற்றபடி ஆசனங்களில் வீற்றிருக்கின்றார்கள். நகர மாந்தரனைவரும் நின்று கொண்டிருக்கின்றனர். தசரதர் சற்றே கவலையுடன் சபையோரையெல்லாம் நோக்கி)

தசரதர்:--

ஈரே ழுலகு மொருகோ லோச்சினும்
வாழ்வு குறித்தநாள் தாழ்வினை யூட்டும்
ஊழ்வழிச் சுழல்வதிப் பிறவி யாகலின்
இதனை யொழித்தே இனிய முத்திப்
பதம்பெற வேண்டியிம் மணிமுடி துறந்து
மாதவர் வதியும் கானகமுற் றாங்கவர்
அடிமுடி சூடுவ தகத்திற்
கருதினேன் அடியேன் பெரிதும் விழைந்தே.

மகரிஷிகளே, மந்திரிகளே, மகா ஜனங்களே, இப்பொழுது நான் அதிமுக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். எல்லோரும் அன்புடன் கேட்டு உங்கள் அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும். சூரிய குலத்து என் முன்னோர்களெல்லாம் இந்த இராஜ்ஜியத்தை மனுமுறை தவறாமல் செங்கோல் செலுத்தி வந்தனர். நானும் அனேக வருஷங்களாக இறைவன் திருவருளாலும், உங்கள் உதவியாலும், செங்கோல் கோணாது அரசு செலுத்தி வந்தேன். சகல சற்குணங்களும், பல பராக்கிரமும், போரில் ஒருவராலும் வெல்லப்படாத தன்மையும், உலகத்தைக் காப்பாற்றும் வல்லமையும் பொருந்திய லோகபாலகர்கள் போன்ற புத்திரர்களையும் பெற்றுள்ளேன். ஆனால் எத்தனை காலம் உயிரோடிருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பராவ ரென்பது நிச்சயம். மேலும் இப்பிறவி விதிவழிச்சென்று பல வாதனைகளைத் தருவ தாகும். இவ்விதியின் வலிவால் வாழ்விற் கென்று மக்கள் குறித்து வைத்த நாள் தாழ்நாளாக மாறிவிடும். பதினான்குலகங்களையும் ஒருகுடைக் கீழ் ஆண்டாலும், விதிக்குத் தப்புவதரிது. ஆதலால் இவ்விதி வசப்பட்டுச் சுழல்கின்ற இப்பிறவி நோய் தீர்ந்து பேரின்பத்தைத் தருவதாகிய முத்திப் பேறு பெற விரும்புகிறேன். அதற்காக இவ்வரசைத் துறந்து தவசிகள் வசிக்கும் காட்டிற் சென்று அவர்கள் திருவடியைத் தலையில் தாங்கி அவர்களுக்கு சிஷ்ருஷை செய்து உய்யவேண்டு மென்றெண்ணியுள்ளேன்.

வசிஷ்டர்:- சக்கரவர்த்தீ, தாம் சொல்லுவ தனைத்தும் நியாயமே. ஆயினும் நம் நகர மாந்தர் தங்கள் மீதுள்ள அன்பினால் இன்னும் சிலகாலம் தாங்கள் அரசாட்சி செய்ய வேண்டுமென்றே விரும்புவார்கள்.

நகரமாந்தர்:-- ஆம், ஆம், எமது விருப்பம் அதுவே.

தசரதர்:-- ஐயன்மீர்! அறுபதினாயிர வருஷமாக நான் சுமந்து வந்த இப்பூபாரத்தை இன்னும் என்னையே சுமக்கச் சொல்வது நியாயமல்ல. எனக்கோ மூப்பு வந்து விட்டது. மூப்பு வந்தடைந்ததும் என் முன்னோர்கள் தங்கள் மக்களுக்கு முடிசூட்டித் தாங்கள் அயர்ந்திருந்தனர். அங்ஙனமே யானும் சிறிது அயர வேண்டுமன்றோ? அல்லாமலும் எத்தனையோ பகைவர்களை வென்ற நான் கபமாதி பகைவருக்கு அடங்கி எத்தனை நாள் வாழ்வது? கைகேசி சாரத்தியஞ் செய்ய எத்திக்கும் தேரைச் செலுத்திய நான், மனம் சாரத்தியஞ் செய்யும் ஐம்புலத்தேரைச் செலுத்தல் அருமையா? பிணி மூப்பற்று வாழ்தற்குரிய சொர்க்க பதவியை என் மனம் நாடுகிறது. யுத்தகளத்தில் உயிர் துறந்தோர், ஞான நெறி நின்று தவஞ் செய்தோர், உலக வாழ்க்கையில் மனம் பற்றாதவர் ஆகிய இவர்களுக்கே சொர்க்க பதவி சொந்தமாகும். ஆதலால் நான் ஞான நெறிநின்று தவஞ்செய்து சொர்க்கமுற வேண்டுமென்னும் விருப்புடையேன். மாந்தர்க்கு மரணம் இன்ன காலத்தில் எய்துமென்பது தெரியாது. “சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம்; நின்றநாள் யார்க்கும் உணர்வரிது’’ இந்த அநித்தியமாகிய பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டுமானால், துறவாகிய தெப்பத்தைவிட வேறு கதியில்லை. பிறவியைக் கடக்கத் துறவு வேண்டும். தீவினை கடக்கச் செய்தவம் வேண்டும் என்பார்கள். அன்றியும்,

மைந்தரை யின்மையின் வரம்பில் காலமும்
நொந்தன னிராமனென் னோவை நீக்குவான்
வந்தன னினியவன் வருந்த யான்பிழைத்
துய்ந்தனன் போவதோருறுதி யெண்ணினேன்.

எனக்குக் கிரம காலத்தில் புத்திரப் பேறில்லாமையால் அளவிறந்த காலம் ஆயுளும் ஆட்சியும் வளர்ந்து விட்டது. இனி அவ்விதம் அவை வளர நியாயமில்லை. இராமன் பிறந்து என் மனக்குறையை மாற்றி விட்டான். ஆதலால் இனி இப்பூபாரத்தை அவன்மீது சுமத்தி நான் உய்யும் வழிதேடக் கருதியுள்ளேன். இவ்வகை செய்யத் தவறினால்,

இறந்திலன் செருக்களத் திராமன் றாதைதான்
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
துறந்தில னென்பதோர் சொல்லுண் டானபின்
பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ?

இராமன் தந்தை யுத்தகளத்திலும் மாளவில்லை: மூப்படைந்த பிறகு உலகவாழ்வைத் துறந்து செல்லவுமில்லை என்றல்லோ மாந்தர் தூற்றுவர்? அவ்வாறான பழிச் சொல்லைத் தாங்கிய பிறகு என் பிறவி இருந்தாவதென்ன?

(சபையோரனைவரும் வசிட்டரைப் பார்க்கின்றனர்)

வசிஷ்டர்:-- சக்க்ரவர்த்தீ! இந்தச் சபையிலுள்ளவர்களின் கருத்தையெல்லாம் நான் சொல்லுகிறேன். நீர் இராமச்சந்திர னிடத்து மிகுந்த அன்புடையவர். உமக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா ஜனங்களுக்கும் அவன் இனியவன். உம்முடைய முன்னோர்கள் அரசு செலுத்திப் பெருமை பெற்றனர் என்பது உண்மை. ஆனால் இராமனைப்போல ஒரு மகனைப் பெற பாக்கியஞ் செய்தவரெவர்? நீரோ மகா கல்விமான். நீர் எண்ணிய எண்ணம் ஒருவராலும் ஆக்ஷேபிக்கக் கூடியதல்ல. க்ஷத்திரிய தர்மமும் அதுவேயாகும்.

தசரதர்:-- முனிசிரேஷ்ட! என் எண்ணத்தைத் தாங்கள் உள்ளவாறு அறிந்து வெளியிட்டீர்கள், நகரமாந்தரும் இதை ஒப்புவார்களென் றெண்ணுகிறேன்.

பெருமக னென்வயிற் பிறக்கச் சீதையாந்
திருமகண் மணவினை தெரியக் கண்டயான்
அருமக ணிறைகுணத் தவனி மாதெனு
மொருமகண் மணமுங்கண்டு வப்ப தாயினேன்.

உலகமெல்லாம் புகழுதற்குரிய அரும் பெருங் குணவானாகிய ஸ்ரீராமனைப் புத்திரனாகப் பெறப் பெற்றேன். அவன் குணங் களுக்கேற்ற குலக்கொடியாகிய சீதையை அவனுக்கு மணம் புரிவித்தும் அதை என் கண்கள் கண்டு களிப்புறவும் பெற்றேன். அக்குல மகளை மணந்த அவனுக்கு இந்நில மகளையும் மணஞ் செய்து பார்த்து மகிழ மிகவும் விரும்புகிறேன்.

ஆதலா லிராமனுக் கரசை நல்கியிப்
பேதைமை தாய்வரு பிறப்பை நீக்குற
மாதவந் தொடங்குவான் வனத்தை நண்ணுவேற்
கியாதுநுங் கருத்தென அறிய வேண்டுவல்.

மகுடஞ் சூட்டிப்பார்த்து விட்டு நான், அறியாமையாற் சஞ்சலந் தருவதாகிய இப்பிறவிப் பிணிதீரக் காட்டிற் சென்று தவஞ்செய்யக் கருதியுள்ளேன். அதற்குச் சபையோர் சம்மதத்தை அறிய விரும்புகிறேன்.

நகரமாந்தர் -- (எல்லோரும் ஒரு குரலாய்) ஸ்ரீராமருக்கு மகுடாபிஷேகஞ் செய்வதில் எங்களனைவருக்கும் சந்தோஷமே! சக்கரவர்த்தி தமது விருப்பப்படி தவஞ் செய்யச் செல்லலாம்.

சுமந்திரர்:-- சக்கரவர்த்தீ! இராமச்சந்திரருக்கு முடி சூட்டுவதைக் கேட்டுச் சகல ஜனங்களும் பெருமகிழ்ச்சி யடைகின்றனர். கொஞ்சமும் தாமதியாமல் இராமச்சந்திரர் சந்திரவட்டக் குடையின் கீழ்த் தனியரசு செலுத்துங் காட்சியினை நாளையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் சக்கரவர்த்தியவர்கள் புத்திர சிகாமணிக்கு மணிமகுடஞ் சூட்டிக் கொஞ்சநாள் உடனிருந்தால் சகலருக்கும் திருப்தியா யிருக்கும்.

நகரமாந்தர்:-- (எல்லோரும் ஒரு குரலாய்) ஆம், ஆம், ஆம்.

தசரதர் :-- நான் பேசி வாய் மூடுமுன்னே யோசியாமல் எல்லோரும் ஒருமிக்க இராமனுடைய அரசாட்சியை விரும்புகிறீர்கள். இதனால் என் மனத்தில் பல சந்தேகங்கள் பிறக்கின்றன. நான் செவ்வையாய் அரசு செலுத்தி வந்திருக்க என் ஆளுகையில் உங்களுக்கு உண்டான அதிருப்தி என்ன? நன்றாக ஆலோசித்து நீங்கள் உங்கள் கருத்தை வெளியிட்டதாகப் புலப்படவில்லை. என் அரசாட்சியில் ஏதும் குறை கண்டிருந்தாலல்லவோ நீங்கள் இராமனுக்கு முடி சூட்டுவதில் துரிதமுள்ளவர்களா யிருக்கலாம். உண்மையை வெளியிடுங்கள்.

தொடரும்………………

திங்கள், 6 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” தொடரின் 39ஆவது டெலி உபந்யாஸம் – இன்று (06-06 – 2016) காலையில் நிகழ்த்தியது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2164&authkey=!AIcnz1HXxqF0Cu4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/17sx7m7a5wpdk56/039_SSR_%2806-06-2016%29.mp3

ஞாயிறு, 5 ஜூன், 2016

பாதுகா பட்டாபிஷேகம்

சில வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணி நடைபாதையில் நான் கண்டெடுத்த ஒரு பழைய புத்தகம் “  இராம நாடகம் – பாதுகா பட்டாபிஷேகம்”. நூலின் அட்டையோ எழுதியவர், பதிப்பாளர் பற்றி அறிய உதவும் முகப்புப் பக்கங்களோ இல்லாமல் இருந்த அந்த நூல் நல்ல வேளையாக ஆரம்பம் முதல் கடைசிப் பக்கம் வரை இருந்தது. ஆனால் இராமனைப் பற்றிய நூல் என்பதாலோ என்னவோ இராம பாணப் பூச்சி ஒரு பக்கம் விடாமல் எல்லாப் பக்கங்களையும் “அழகாகச் சுவைத்த” அடையாளமாக நூல் முழுவதும் துளைகள்.
அந்த நாள் நடையென்று சொல்லிட முடியாதபடி நல்ல தமிழில் அங்கங்கே கம்பனின் பாடல்களைச் சொல்லி , தசரதன் இராமனுக்கு மகுடம் சூட்டத் தீர்மானிப்பதில் ஆரம்பித்து, இராமனை பரதன் காட்டில் சந்தித்து இராமனின் பாதுகைகளைப் பெற்று வந்து அவற்றுக்குப் பட்டாபிஷேகம் செய்யும்வரை கதாமாந்தரைக் கொண்டு அழகான நாடகமாக எழுதப்பட்ட அருமையான நூல் அது. எழுதியவர்தான் யாரென்று தெரியவில்லை என்றால், அவர் இராமாயணத்தை முழுவதுமே நாடகமாக எழுதி அதன் ஒரு பகுதிதான் இந்த பாதுகா பட்டாபிஷேகமா அல்லது இதை மட்டும்தான் எழுதினாரா என்பதும் தெரியவில்லை என்பது வருத்தமான ஒன்று.  இந்நூலின் தலைப்பு  இராமநாடகம் என்று மேலும் அதன்கீழ் பாதுகா பட்டாபிஷேகம் என்றிருப்பதும் என்னுடைய சந்தேகத்தின் காரணம்.
நான் மட்டுமே அனுபவித்ததை , என்னைப்போலவே பழைய நூல்களில் ஆர்வமுள்ள ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் ஸ்ரீ டி.ஸி. ஸ்ரீநிவாசனிடம் பகிர்ந்து கொண்டேன். சில மாதங்களாக அவர் இதழிலும் இந்நூல் இப்போது வந்துகொண்டிருக்கிறது.
ஸ்கான் செய்து பிடிஎப் ஆக இணையத்தில் ஏற்றலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இராமபாணப் பூச்சிகள் “கைங்கர்ய”த்தால் அது சரியாக வரவில்லை. கூகுளின் ஓசிஆர் கூடக் கைகொடுக்கவில்லை. அதனால் நூலைத் தட்டச்சிட ஆரம்பித்து, இப்போது கிட்டத்தட்ட 80% முடித்திருக்கிறேன். ஸ்ரீஹயக்ரீவ சேவக இதழ் மூலம் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு, பல்வேறு காரணங்களால் அந்த இதழ் மாதாமாதம் வெளியாவதிலும் பல இடையூறுகள் என்ற நிலையில் பலரும் இந்த இனிமையான தமிழ் நாடகத்தை ரசிக்கலாம்  என்ற நம்பிக்கையுடன் இங்கு ஓரிரு நாள்களில் பகுதி பகுதியாகப் பதியலாம் என நினைக்கிறேன். சில சீன்கள் ஓரிரு பக்கங்களில் முடியும். வேறு சில 50 பக்கங்களுக்கு மேலும் நீளும். (ஸ்ரீரங்கநாத பாதுகா அளவில்). எனவே பிரித்துத்தான் பகிர வேண்டியிருக்கிறது. சிறிது சிறிதாகப் படிக்கப் பொறுமை உள்ளவர்கள் இங்கே படிக்கலாம். மொத்தமாகப் படிக்க நினைப்பவர்கள் முடிவில் பிடிஎப் ஆக இணையத்தில் இதை சேமிக்கும்போது படித்துக் கொள்ளலாம்.
எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும், அவர் முனித்ரய சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வடகலை வைணவராயிருக்கலாம் என ஊகிக்கும் வகையில் இந்நூலில் உள்ள ஒரு படத்தில் அழகாக முனித்ரய திருமண்காப்பு விளங்குகிறது.