வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதி போற்றுவோம்

Barathi செப்டம்பர் 11  நம் பாரதி நாள். அவரை நினைத்து ஒரு பதிவு. அடியேனின் வழக்கம் போல் அவருடன் வாழ்ந்தவர்களில் ஒருவர் எழுதிய நூலிலிருந்து ஒரு பகுதி இந்தப் பதிவு. நூலை எழுதியவர் யார்  என்பது கடைசியில்.
பாரதி விளக்கம்.
1.காலநிலை
பொதிகைத்தென்றலில்சங்கக்கொடிஆடுகிறது;
 
கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது;மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது.“தேசமுடையாய் திறவேலோரெம் பாவாய்!” என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. “நாமார்க்கும் குடியல்லோம்! நமனை யஞ்சோம்! நரகத்தில் இடர்ப்படோம்!” என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர். இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.
  மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங்கோட்டையில் சவ உறக்கம்; அடிமை, மடமை, வறுமை, வேற்றுமைப் பேய்களின் அழி நடனம்; இப் பேய்களுக்குத் தலைப்பேய் அச்சப்பேய்!