வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 16

வினா 51.- இப்படிப்‌ பரசுராமரைத்‌ தரிசித்ததும்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை.- அகஸ்திய தீர்த்தம்‌ முதலிய தீர்த்தங்களுக்குப்‌ போய்‌ கடைசியாய்ப்‌ ப்ரபாஸதீர்த்தம்‌ வந்து சேர்ந்தார்கள்‌. இங்கு கிருஷ்ண பகவான்‌, பலராமர்‌ முதலிய யாதவ குலத்தோர்‌ யாவரும்‌ பாண்டவரை ஸந்தித்து, அவர்களுக்கு வந்த துக்கங்களைத்‌ தமக்கு வந்தவைகளாகப்‌ பாராட்டி, உடனே துர்யோதனாதியரைக்‌ கொல்லக்‌ கிளம்பத்‌ தர்மபுத்திரர்‌ அவர்களை ஸமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பிவிட்டார்‌.

வினா 52.- ப்ரபாஸ தீர்த்தத்தை விட்டுப்‌ பாண்டவர்கள்‌ எங்கு சென்றார்கள்‌? அங்கிருந்த மஹத்வமென்ன?

விடை.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ நர்மதா நதி தீரம்‌ சென்றார்கள்‌. இங்கு சியவனரிஷி அருகாமையிலுள்ள குளக்கரையில்‌ தபஸு செய்யுங்கால்‌ அவர்‌ மேல்‌ இவ்வாறு புற்று மூடியது என்பதையும்‌, அங்கு வந்து சரியாதி ராஜன்‌ தண்டிறங்க அவனது பெண்ணாகிய ஸுகந்யை விளையாடி வருங்கால்‌ புற்றுள்‌ இருந்த சியவனரது கண்ணை மின்மினி என்றெண்ணி ஒரு குச்சியால்‌ குத்தியதையும்‌, ரிஷியின்‌ சாபத்தால்‌ அரசனது பரிவாரங்க.ளெல்லாருக்கும்‌ வயிறு ஊதியதையும்‌, அரசன்‌ தன்‌ பெண்‌ செய்த அபராதத்தைக்‌ கண்டுபிடித்து ரிஷியின்‌ வேண்டு கோளின்படி ஸுகந்யையை அவருக்குக்‌ கொடுத்ததையும்‌, இதன்பின்பு அசுவநீ தேவதைகள்‌ வந்து இவளது கற்பை பரீக்ஷித்ததையும்‌, கடைசியில்‌ சியவனரும்‌ அசுவநீ தேவதைகளும்‌ அக்குளத்துள்‌ முழுகி ஒரே மாதிரியான யெளவன புருஷராக எழுந்திருக்க, ஸுகந்யை தனது கற்பின்‌ மஹத்வத்தால்‌ சியவனரைக்‌ கண்டு பிடித்ததையும்‌, இந்த உபகாரத்திற்காக சியவனர்‌ அசுவனிதேவதைகளுக்கு யாகங்களில்‌ ஹவிர்ப்பாகமுண்டாக்க சரியாதி ராஜாவுக்கு ஒரு புதிய யாகம்‌ செய்து வைத்ததையும்‌, அதைத்‌ தடுக்கவந்த இந்திரனது கையை அசையாதிருக்கும்படி செய்து அசுவனி தேவதைகளுக்குச்‌ சியவனர்‌ ஹவிர்ப்பாகம்‌ கொடுத்ததையும்‌, மதன்‌ என்கிற ஒரு அஸுரனை சிருஷ்டித்து இந்திரனைக்கொல்ல யத்தனிக்க அவன்‌ புதிய ஹவிர்ப்பாகத்தை ஒப்புக்கொண்டதையும்‌, லோமசர்‌ விஸ்தாரமாய்ச்‌ சொன்னார்‌.

வினா 53.- பின்பு பாண்டவர்கள்‌ எந்த மஹத்வமுடைய தீர்த்தத்திற்கு போனார்கள்‌?

விடை.- மாந்தாதா தானே யாகம்‌ செய்த யமுனா நதிக்கரையை அடைந்தார்கள்‌. மாந்தாதா, பிள்ளையை உண்டாக்கும்‌ சக்தியை உடைய மந்திரித்த தீர்த்தத்தைத் தாக மிகுதியால்‌ குடித்த யுவனாசுவ ராஜாவின்‌ இடது விலாப்புற மிருந்து வெளிவந்து,இந்திரனது கட்டை விரலைச்‌ சப்பிக்கொண்டு வளர்ந்தான்‌ என்கிற கதையை இங்கு லோமசர்‌ விஸ்தரித்தார்‌. அவ்விடத்திலேயே ஸோமகர்‌ 100 பிள்ளைகளை அடைவதற்காக, ரித்விஜர்‌ என்ற அவரது புரோஹிதர்‌ அரசனுக்கிருந்த ஜந்து என்ற பிள்ளையை ஹோமம்‌ செய்யக்‌ கடைசியில்‌ அவர்‌ நரகத்தில்‌ கஷ்டப்பட்டார்‌ என்றும்‌, இதைக்‌ கண்ட ஸோமகர்‌ தமது புரோஹிதரோடு கஷ்டப்பட்டு கடைசியில்‌ ஸ்வர்க்கமடைந்தார்‌ என்றும்‌ உள்ள கதையையும்‌ லோமசர்‌ சொன்னார்‌.

வினா 54.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எங்கே சென்றார்கள்‌? அந்தத்‌ தீர்த்தத்தின்‌ மஹத்வம்‌ என்ன?

விடை.- யமுனா நதியில்‌, உசீனரன்‌ என்று பெயர்‌ பெற்ற சிபிச்சக்கிரவர்த்தி விசேஷ யாகம்‌ செய்த தீர்த்தத்திற்கு வந்தார்கள்‌. இந்திரன்‌ வல்லூறு ரூபமாய்‌ புறா ரூபமான அக்கினியைத்‌ துரத்திவர, புறா சிபியின்‌ மடியில்‌ வந்து விழுந்து சரணமடைந்த தென்றும்‌, வல்லூறு வந்து தான்‌ பசியாலிறப்பதாகவும்‌ தனக்குப்‌ புறாவே தகுந்த ஆகாரம்‌ என்றும்‌ சொல்லிக்‌ கடைகியில்‌ புறாவின்‌ கனத்திற்கு ஸமானமான சிபியது மாம்ஸத்தால்‌ தான்‌ திருப்தி யடைவதாக வல்லூறு சொல்லியதென்றும்‌, உடனே சிபி தனது மாம்ஸத்தை அறுத்துப்போடவே புறா கனமாகிக்கொண்டு வருவதைக்‌ கண்டு, தானே தராசில்‌ ஏறும்‌ பொழுது இந்திரனும்‌ அக்கினியும்‌ தமது உருவத்தை வெளிப்படுத்தி சிபிக்கு வரமளித்தனர்‌ என்றும்‌ லோமசர்‌ சொல்லி முடித்தார்‌.

வினா 55.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எந்தத்‌ தீர்த்தம்‌ சென்றார்கள்‌? அங்கு லோமசர்‌ என்ன கதையைச்‌ சொன்னார்‌?

விடை.- பாண்டவர்கள்‌ ஹரிச்சந்திர தீர்த்தம்‌ சென்றார்கள்‌. அங்கு லோமசர்‌, ஸத்யத்திற்காக ஹரிச்சந்திரன்‌ பட்டபாட்டை விஸ்தாரமாக எடுத்துச்‌ சொன்னார்‌.

வினா 56.- ஹரிச்சந்திரன்‌ யார்‌? இவன்‌ யாரை எவ்வாறு மணம்‌ புரிந்துகொண்டான்‌? இவனுக்கு எத்தனை பிள்ளைகள்‌?

விடை.- இவன்‌ ஸுூர்யவம்சத்தரசன்‌. இவன்‌ அயோத்திமா நகரில்‌ அரசாண்டு வந்தான்‌. கன்னபுரி யரசனது குமாரத்தி சந்திரமதியினது அழகைக்‌ கேள்வியுற்று, இவன்‌ அவளை மணம்புரிய வேண்டுமென்கிற விருப்பத்துடன்‌ அவளது ஸ்வயம்வரத்துக்குப்‌ புறப்பட்டான்‌. அப்பொழுது, 'சிவபெருமானால்‌ அவளுக்குக்‌ கொடுக்கப்பட்ட இரகஸிய வஸ்துவை யார்‌ பார்த்து அறிகிறார்களோ அவர்‌ தான்‌ சந்திரமதிக்கு ஏற்பட்ட புருஷனாவார்‌' என்ற விசேஷ ஸமாசாரத்தையும்‌ அவன்‌ கேள்விப்பட்டான்‌. ஸ்வயம்வர மண்டபத்தில்‌ அரசன்‌ சந்திரமதியைக்‌ கண்டதும்‌ அவள்‌ கழுத்தில்‌ திருமாங்கல்யம்‌ இருப்பதைக்‌ கண்டு முன்‌ கல்யாணமான பெண்ணை மறுபடியும்‌ கல்யாணம்‌ செய்துகொள்வது நியாயமல்லவே என்று ஹரிச்‌ சந்திரன்‌ வாய்விட்டுச்‌ சொன்னான்‌. அப்பொழுது சந்திரமதி தனது கழுத்திலிருந்த இரகஸியமான தாலி இவன்‌ கண்ணில்‌ பட்டதைக்‌ கண்ணுற்று, இவனே நமக்குத்‌ தகுந்த நாயகனெனத்‌ தீர்மானித்து மணமாலையை ஆகாயத்தி லெறிய, அது ஹரிச்சந்திரன்‌ கழுத்தில்‌ வந்து விழுந்தது. பின்பு இவர்கள்‌ விவாகம்‌ வெகுகோலாஹலமாய்‌ நடந்தேறியது. இவர்களுக்கு லோஹிதாஸன்‌ என்ற ஒரு அருமைப்பிள்ளை உண்டானான்‌.

வினா 57.- இவ்வரசனை விசுவாமித்திர மஹரிஷி கஷ்டப்படுத்தக்‌ காரணம்‌ என்ன?

விடை.- இந்திர ஸபையில்‌ வஸிஷ்டர்‌, விசுவாமித்திரர்‌ முதலிய மஹரிஷிகள்‌ கூடி இருக்குங்கால்‌ பூமியில்‌ ஸத்யம்‌ முதலிய நற்குணங்களில்‌ சிறந்தவன்‌ யார்‌?' என்கிற கேள்வி பிறந்தது. அப்பொழுது தனது சிஷ்யனான ஹரிச்சந்திரனே சிறந்தவன்‌ என்றும்‌, அவனுக்கு ஸமானமானவர்‌ உலகில்‌ வேறொருவர்‌ இல்லை என்றும்‌ வஸிஷ்டர்‌ வெகுவாகப்‌ புகழ்ந்து பேசினார்‌. இதை ஸகியாத விசுவாமித்திரர்‌, முன்னமே வஸிஷ்டரிடமிருந்த துவேஷத்தால்‌, ஹரிச்சந்திரனை வெகுவாகப்‌ பழித்துரைக்க இருவருக்கும்‌ வாக்குவாதம்‌ உண்டாயிற்று. முடிவில்‌ வஸிஷ்டர்‌ 'ஹரிச்சந்திரன்‌ எந்தக்‌ கஷ்டத்திலாவது ஒரு பொய்‌ சொன்னால்‌ நான்‌ எனது பிராம்மண்யத்தை விட்டுப்‌ பறையரது தர்மத்தை மேற்கொள்ளுகிறேன்‌' என்றும்‌, விசுவாமித்திரர்‌ அப்படி எந்த கஷ்ட திசையிலும்‌ ஒரு பொய்கூடச்‌ சொல்லாமல்‌ ஹரிச்சந்திரன்‌ இருந்தால்‌ எனது தபஸில்‌ பாதி அவனுக்குக்‌ கொடுக்கிறேன்‌ என்றும்‌ இந்திரன்‌ முன்பு கொடிய சபதம்‌ செய்துகொண்டார்கள்‌. உடனே ஹரிச்சந்திரனது உண்மை உரைக்கும்‌ உறுதியைச்‌ சோதிக்க விசுவாமித்திரர்‌ பூமிக்குப்‌ புறப்பட்டார்‌.

வினா 58.- முதலில்‌ ஹரிச்சந்திரனைக்‌ கஷ்டப்படுத்த விசுவாமித்திரர்‌ எவ்வாறு தொடங்கினார்‌?

விடை.- முதலில்‌ சில பிராம்மணர்‌ மூலமாய்‌ தனக்கு யாகத்திற்கு வேண்டிய பொருளுதவி செய்வதாக அரசனிடமிருந்து வாக்‌குறுதியைப்‌ பெற்றுக்கொண்டு, பின்பு விசுவாமித்திரர்‌ அரசனிடம்‌ சென்று பொருள்‌ வேண்டுமென்று சொல்லி அரசனால்‌ கொடுக்க முடியாததாகிய ஏராளமான பொருள்‌ கேட்க, அவன்‌ அதைக்கொடுக்க யத்தனம்‌ செய்தான்‌. அப்பொழுது தமக்குவேண்டாம்‌ என்று சொல்லிவிட்டு, ரிஷி போய்‌ துஷ்டமிருகங்களை சிருஷ்டித்து இவன்‌ இராஜ்யத்துப்‌ பயிர்களை அழிக்கும்படி ஏவினார்‌. இவ்வாறு அழிக்கவந்த கொடிய பிராணிகள்‌ எல்லாவற்றையும்‌ அரசன்‌ வேட்டையாடிக்கொல்ல, ரிஷி ஒரு மாயப்‌ பன்றியைச்‌ சிருஷ்டித்து அனுப்பினார்‌. அதையும்‌ அரசன்‌ வென்று ஒரு தடாகம்‌ அமைந்த சோலையில்வந்து தண்டிறங்கினான்‌.

வினா 59.- இந்தப்‌ பன்றியால்‌ என்னவிபரீதம்‌ அரசனுக்கு உண்டானது?

விடை.- இது சென்று ரிஷியினிடம்‌ நடந்த செய்தியைச்‌ சொல்ல, அவருக்கு அடங்காக்‌ கோபமுண்டாயிற்று. அப்பொழுது அவரிடமிருந்து அழகுள்ள புலைச்சியர்‌ இருவர்‌ உண்டாக, ரிஷி அரசனைக்‌ காமவலையில்‌ சிக்கும்படி செய்து அவனைத்‌ தம்மிடம்‌ இழுத்துவரும்படி அவர்களை ஏவினார்‌. இவர்கள்‌ அரசனிடம்‌ சென்று பாட அவன்‌ "உங்களுக்கு வேண்டுவதென்ன என்று கேட்டான்‌. அதற்கு அவர்கள்‌ “உம்மைக்கல்யாணம்‌ செய்து கொள்ள வேண்டுமென்றனர்‌." அரசன்‌ இதற்கு இசையாதது கண்டு, உடனே இவர்கள்‌ அரசனைப்பழிக்க, அவன்‌ கோபங்கொண்டு இவர்களை தனது வேலைக்காரர்‌ மூலமாகத்‌ துரத்தியடித்தான்‌. இதைக்கேள்வியுற்ற கெளசிகருக்குக்‌ கோபாவேசம்‌ வர அரசனிடம்‌ வந்து தமது பெண்களை வருத்தப்படுத்தியதற்காக அவன்‌ தலையில்‌ உதைத்தார்‌. உடனே அரசன்‌ மிகுந்த பொறுமையோடு "எனது இராஜ்யத்தைக்‌ கேட்டாலும்‌ கொடுப்பேன்‌, இந்தத்‌ தகாத காரியத்தை நான்‌ செய்யமாட்டேன்‌” என, கெளசிகர்‌ "கொடுத்துவிடு" என்றார்‌. அரசன்‌ கூசாது தனது இராஜ்யம்‌ முழுவதையும்‌ கொடுத்துவிட்டான்‌.

வினா 60.- இவ்வாறு இராஜ்ய மிழந்ததும்‌ இவனுக்கு வேறு என்ன கஷ்டமுண்டா யிற்று? அதைத்‌ தீர்ப்பதற்கு அரசன்‌ என்ன ஏற்பாடு செய்தான்‌?

விடை... இப்படி அரசன்‌ இராஜ்யம்‌ முழுவதையும்‌ கொடுத்து விட்டபின்பு, கெளசிகர்‌ "நான்‌ முன்‌ கொடுத்து வைத்திருந்த பொருளை நீ இன்னும்‌ எனக்குக்‌ கொடுக்க வில்லை, அதை எனக்குக்கொடு” என்று கேட்டார்‌. அப்பொழுது அரசன்‌ தான்‌ அவஸரத்தில்‌ செய்த தப்பிதத்தைக்கண்டு, அந்தப்பொருளைக்‌ காசிநகரம்‌ சென்றதும்‌ கொடுத்துவிடுவதாக வாக்களித்தான்‌. அதை அவனிடம்‌ இருந்து வாங்குவதற்காக கெளசிகர்‌ நக்ஷத்திரீகன்‌ என்ற கொடிய விடாமுண்டனை அரசனோடு காசிக்குப்‌ போய்‌ வரும்படி அனுப்பி, ஹரிச்சந்திரனைத்‌ தன்னால்‌ கூடியவரையில்‌ கஷ்டப்படுத்தும்படி அவனுக்கு உத்தரவும்‌ கொடுத்தார்‌. சற்று நாழிகைக்கு முன்‌ பரிவாரங்களோடு இருந்த அரசன்‌ இப்பொழுது பாதசாரியாய்‌ சந்திரமதி, லோஹிதாஸன்‌, நக்ஷத்திரீகன்‌ முதலியவர்களைக்‌ கூட்டிக்கொண்டு ஒரு எளியவன்‌ போல்‌ காசி நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 61.- காசிப்பட்டணம்‌ போகும்‌ வழியில்‌ ஹரிச்சந்திரனுக்கு என்ன கஷ்டங்கள்‌ உண்டாயின?

விடை.- கெளசிகர்‌, போகும்‌ வழியெல்லாம்‌ முள்ளும்‌ கல்லுமாயிருக்கும்படி செய்ய, நல்ல ஸ்திதியிலிருந்த அரசன்‌ முதலியோர்‌ மிகுந்த வருத்தமடைந்தார்கள்‌. இதுபோதாதென்று வெயில்‌ தாபம்‌ அதிகரிக்கும்படியாகவும்‌, வழியில்‌ மரமே இல்லாதிருக்கும்படியாகவும்‌ ஏற்பாடு செய்தார்‌. இவ்வாறு இவர்கள்‌ கஷ்டப்படு ங்கால்‌ நக்ஷத்திரீகன்‌ இவர்களை மிகக்‌ கஷ்டப்படுத்தி, கடைசியில்‌ தன்னால்‌ நடக்க முடியவில்லை என்று அரசன்‌ தோளில்‌ ஏறிக்‌ கொண்டான்‌. அவன்‌ தோளில்‌ இருந்து படுத்தும்பாட்டைப்‌ பொறுமையோடு ஸஹித்துக்கொண்டு அவனை அரசன்‌ வெகுதூரம்‌ தூக்கிக்கொண்டு சென்றான்‌. இரவில்‌ கெளசிகர்‌ காட்டுத்தீ, புயல்காற்று துஷ்டமிருகம்‌ முதலியவைகளால்‌ அரசனை வருத்தி, அவன்‌ அதிகக்கஷ்டப்படு ங்கால்‌ எதிரே தோன்றி "நீ எனக்கு இப்பொருள்‌ கொடுக்கவில்லை என்கிற ஒரு பொய்‌ சொல்லி விடு. உனக்கு ஸகல துக்கங்களும்‌ நீங்கிப்போம்‌, இராஜ்யமும்‌ திரும்பி வந்துவிடும்‌" என்றுசொல்லி அடிக்கடி ஆசை காட்டிப்‌ பார்த்தார்‌. இவைகள்‌ ஒன்றிற்கும்‌ ஹரிச்சந்திரன்‌ இசையவில்லை. இவ்வளவு கஷ்டத்தையும்‌ பொறுத்துக்‌ கொண்டு. அரசன்‌ காசிப்பட்டணம்‌ வந்து சேர்ந்தான்‌.

வினா 62.- காசிப்பட்டணம்‌ வந்ததும்‌ அரசன்‌ எவ்வாறு கெளசிகர்‌ கடனைத்‌ தீர்த்தான்‌? உடனே வேறு என்ன கஷ்டம்‌ வந்தது?

விடை... காசிப்பட்டணம்‌ சென்றதும்‌ காலகண்டன்‌ என்கிற கொடிய பிராம்மணனுக்குத்‌ தனது சந்திரமதியையும்‌, பிள்ளையையும்‌ விற்று கெளசிகருக்குக்‌ கொடுக்க வேண்டிய பொருளை நக்ஷத்திரீகனிடம்‌ ஒப்புவித்தான்‌. இதைப்‌ பெற்றுக்கொண்டு, "நான்‌ கஷ்டப்பட்டதற்குக்‌ கூலி எங்கே" என்று நக்ஷத்திரீகன்‌ கேட்டான்‌.

வினா 63.- இவ்வாறு இரக்கமின்றிக்‌ கேட்ட நக்ஷத்திரகனை எவ்வாறு ஹரிச்சந்திரன்‌ திருப்தி செய்வித்தான்‌?

விடை.- இந்த ஸங்கதியைக்‌ கேட்டதும்‌ அந்நகரத்தில்‌ மயானம்காக்கும்‌ வீரபாகு என்ற பறையனிடம்‌ தான்‌ அடிமைப்பட்டு நக்ஷத்திரீகனுக்கு வேண்டிய பொருளை வாங்கிக்கொடுத்து அவனைக்‌ கெளசிகரிடம்‌ அனுப்பி விட்டான்‌. இதன்‌ பின்பு மஹாராஜனான ஹரிச்சந்திரன்‌ வீரபாகுவுக்காக அன்று முதல்‌ இரவில்‌ சுடலைக்‌ காக்கத்‌ தொடங்கினான்‌.

வினா 64.- காலகண்டனிடம்‌ அடிமையான சந்திரமதியின்‌ பாடு என்னமாயிற்று? இது கடைசியில்‌ என்ன விபரீதமாய்‌ முடிந்தது?

விடை.- காலகண்டனும்‌, அவன்‌ பெண்சாதியாகிய காலகண்டியும்‌ ஈவு இரக்கமின்றி சந்திரமதியையும்‌, அவள்‌ பிள்ளையையும்‌ கஷ்டப்படுத்தி வந்தார்கள்‌. இப்படி இருக்கையில்‌ ஒரு நாள்‌ லோகிதாஸனைக்‌ காலகண்டி சில பிள்ளைகளோடு ஸமித்துக்‌ கொய்துவரும்படி அனுப்பினாள்‌. அவன்‌ சென்று காட்டில்‌ ஸமித்து ஒடித்துக்‌ கொண்டிருக்கையில்‌ ஒரு கொடிய ஸர்ப்பம்‌ தீண்டி இறந்தான்‌. இந்த ஸ்ங்கதியைப்‌ பிள்ளைகள்‌ சந்திரமதியிடம்‌ சொல்ல, அவள்‌ தன்‌ பிள்ளையைத்‌ தேடிப்பார்க்கவேண்டுமென்று எவ்வளவோ நயமாய்க்‌ கேட்டும்‌ காலகண்டி அவளுக்குக்‌ காட்டுக்குப்போக அனுமதி கொடுக்கவில்லை. இரவில்‌ காலகண்டன்‌, காலகண்டி இருவர்களும்‌ நித்திரை செய்யப்போகையில்‌ ஸகல வேலைகளையும்‌ முடித்துவிட்டு அவர்களிடம்‌ உத்தரவு பெற்றுக்கொண்டு சந்திரமதி பிள்ளையைக்‌ காணப்‌ பயமின்றி காட்டை நோக்கிப்‌ புறப்பட்டாள்‌.

வினா 65.- சந்திரமதிபோய்ப்‌ பிள்ளையை எவ்வாறு அடக்கம்‌ செய்யப்பார்த்தாள்‌? அதற்கு என்ன தடை நேரிட்டது?

விடை.- பிள்ளைகள்‌ சொன்னவிடத்தைக்‌ குறிப்பாய்‌ வைத்துக்‌ கொண்டுபோய்‌ அன்று நடு இராத்திரியில்‌ சந்திரமதி பாம்பு கடித்து இறந்து கிடக்கும்‌ தன்‌ சிறுவனைக்‌ கண்டு மனம்‌ பதைத்து கொஞ்சகாலம்‌ வாய்விட்டலறினாள்‌. அதன்‌ பின்பு வழியில்‌ அகப்பட்ட சுள்ளிகளைப்‌ பொறுக்கி எடுத்துக்கொண்டு சுடலை அடைந்து ஒரு சிதை உண்டாக்கித்‌ தனது அருமைக்‌ குழந்தையை அதில்‌ வைத்து நெருப்பை மூட்டினாள்‌. உடனே அங்குக்‌ காவல்காத்திருந்த ஹரிச்சந்திரன்‌ ஓடி வந்து எங்களுக்குச்‌ சேரவேண்டிய பணமும்‌, ஒரு முழத்‌ துண்டும்‌ எங்கே? அதைக்‌ கொடுக்காது யார்‌ இராத்திரியில்‌ பிணம்‌ எரிப்பது? என்று அதட்டிக்கொண்டு சிதையைக்‌ கலைத்து குழந்தையின்‌ தேகத்தை வெளியே இழுத்து எறிந்து விட்டான்‌.

வினா 66.- இந்தத்‌ தடையை நிவர்த்திசெய்யச்‌ சந்திரமதி என்ன ஏற்பாடு செய்தாள்‌? அதிலிருந்து என்ன விபரீதம்‌ விளைந்தது?

விடை.- தான்‌ மிகுந்த ஏழை என்றும்‌, தன்னால்‌ பணமும்‌ ஆடையும்‌ கொடுக்க முடியாதென்றும்‌, தனக்கு இனாமாய்ப்‌ பிணம்சுட அனுமதி யளிக்கவேண்டுமென்றும்‌ சந்திரமதி சுடல்காப்போனை கெஞ்சிக்‌ கேட்டுப்பார்த்தாள்‌. அவன்‌ இவள்‌ கழுத்தில் விளங்கும்‌, பரமசிவனால்‌ அனுக்கிரகிக்கப்பட்ட தாலி இருப்பதைக்‌ கண்டு, 'உன்‌ கழுத்தில்‌ பிரகாசிக்கும்‌ தாலியை எனக்குக்‌ கொடு, இந்தப்‌ பணம்‌ எனது எஜமானனைச்‌ சேர்ந்தது, ஆகையால்‌ நான்‌ இதை அவசியமாய்‌ வாங்கியே தீரவேண்டும்‌' என்றான்‌. சந்திரமதி 'என்‌ கழுத்துத்‌ தாலி ஹரிச்சந்திரராஜனைத்‌ தவிர வேறொருவரது கண்ணிலும்‌ படமாட்டாதே. இப்பறையன்‌ கண்ணில்‌ ஏன்‌ விழுந்ததென்று வாய்லிட்டலற அப்பொழுது தான்‌ தன்னுடை குழந்தை இறந்தான்‌ என்று அரசனுக்குத்‌ தெரிய வந்தது. அவனும்‌ வெகு நாழிகை துக்கித்துவிட்டு, சந்திரமதியைக்‌ காலகண்டனிடமிருந்து பணத்தையும்‌ ஒரு முழத்துண்டையும்‌ வாங்கிவர அனுப்பிவிட்டு, தான்‌ குழந்தையைக்‌ காத்துக்கொண்டிருந்தான்‌. வெகு பரபரப்போடு சந்திரமதி ஓடும்பொழுது திருடர்களால்‌ கொல்லப்பட்ட காசிராஜன்‌ குழந்தையை வழியில்‌ கண்டு தன்குழந்தை என்று எண்ணி வழியிலேயே உட்கார்ந்து துக்கிக்கத்‌ தொடங்கினாள்‌. கொஞ்சநாழிகைக்‌ கெல்லாம்‌ குழந்தையைத்‌ தேடிக்கொண்டு வந்த அரசன்‌ ஸேவகர்கள்‌, இங்கு வந்து இவள்‌ தான்‌ பிள்ளையைக்‌ கொன்றவள்‌ என்கிற பெரும்பழி சுமத்தி இவளை அரசனிடம்‌ கொண்டுபோய்‌ விட்டார்கள்‌.

வினா 67.- அரசன்‌ என்ன தண்டனை இவளுக்கு விதித்தான்‌? யார்‌ அந்தத்‌ தண்டனையை நடத்தும்படி நேரிட்டது?

விடை... அரசனுக்கு இவளைப்‌ பார்த்ததும்‌ இந்தப்பெண்‌ கொலையாளி யல்லவென்று தோன்றியபோதிலும்‌, அடுத்திருந்தவர்களது துர்ப்போதனைகளால்‌ இவளைக்‌ கொல்லத்துணிந்து, இவளைக்‌ கொல்லும்படி வீரபாகுவினிடம்‌ ஒப்புவித்தான்‌. அவன்‌ இவளை ஹரிச்சந்திரனிடம்‌ ஒப்புவிக்கக்‌ கடைசியாய்‌ ஹரிச்சந்திரனே தனது கபடமற்ற பெண்சாதியைக்‌ கொல்லும்படி நேர்ந்தது.

வினா 68.- ஹரிச்சந்திரனுக்கு என்ன தடை உண்டாயிற்று? அவன்‌ பின்பு என்ன செய்தான்‌? உடனே என்ன விசித்திரம்‌ நடந்தது?

விடை.- தன்‌ எஜமான்‌ உத்தரவின்படி ஹரிச்சந்திரன்‌ சந்திரமதியை வெட்டத்‌ தொடங்குகையில்‌ விசுவாமித்திரர்‌ ஓடிவந்து “இத்தருணத்தில்‌ ஒரு பொய்‌ சொல்லிவிடு, உனக்கு ஸகல ஸுகமும்‌ உண்டாகும்‌" என்று வேண்ட, அரசன்‌ "என்‌ அருமைப்‌ பெண்சாதியை வெட்டினாலும்‌ வெட்டுவேனே ஒழிய நான்‌ ஒருநாளும்‌ பொய்யுரைக்கமாட்டேன்‌" என்று மன உறுதியோடு தன்‌ கத்தியை உயர்த்தி சந்திரமதி கழுத்தில்‌ போட்டான்‌. அது உடனே அவள்கழுத்தில்‌ ஒரு பூமாலையாய்‌ விழுந்தது. உடனே ஸகல தேவர்களும்‌ பரமசிவனை முன்னிட்டுக்‌ கொண்டு ஹரிச்சந்திரனுக்குத்‌ தரிசனம்‌ கொடுக்க அம்மயானம்‌ கைலாஸமாகவே மாறியது. லோகிதாஸனும்‌ காசிராஜன்‌ பிள்ளையும்‌ உயிருடன்‌ எழுந்து வந்தார்கள்‌.

வினா 69.- இதன்‌ பின்பு ஹரிச்சந்திரன்‌ என்ன செய்தான்‌? அவன்‌ ஸபையில்‌ என்ன நடந்தது?

விடை... பரமசிவன்‌ உத்திரவின்படி இந்திரனது ஸகாயத்தால்‌ அவன்‌ இராஜ்யத்தில்‌ மறுபடியும்‌ அரசாளத்‌ தொடங்கினான்‌. உடனே விசுவாமித்திரர்‌ வந்து தன்‌ சபதப்படி ஹரிச்சந்திரனுக்குத்‌ தான்‌ செய்த தவத்திற்‌ பாதியை வெகு ஸந்தோஷத்தோடு தாரைவார்த்துக்‌ கொடுத்தார்‌. இதன்‌ பின்பு அருகிலிருந்த வஸிஷ்டரிடம்‌ சென்று தான்‌ செய்த பிழையைப்‌ பொறுக்கவேண்டும்‌ என்று விநயத்துடன்‌ கேட்டுக்கொண்டு விசுவாமித்திரர்‌ தபோவனம்‌ சென்றார்‌.

புதன், 3 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 15

வினா 31.- தமயந்தி ஸ்வயம்வரத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது? தமயந்தி நளனை எவ்வாறு அறிந்து மாலையிட்டாள்‌?

விடை.- ஸ்வயம்வர மண்டபத்தில்‌ இந்திரன்‌ முதலிய நான்கு தேவதைகளும்‌ நளன்போல்‌ ரூபங்கள்‌ எடுத்துக்கொண்டு நளன்‌ அருகில்‌, தமயந்தியின்‌ உறுதியைச்‌ சோதிக்க உட்கார்ந்தார்கள்‌. தமயந்தி ஸ்வயம்வர மாலை எடுத்துவரும்‌ பொழுது ஐந்து நளர்கள்‌ உட்கார்ந்திருப்பதைக்‌ கண்டு முதலில்‌ மயக்கமுற்றாள்‌. அதன்‌ பின்‌ கண்‌ இமைத்தல்‌, கால்‌ நிலத்தில்‌ பதிதல்‌ முதலிய இலக்ஷணங்களால்‌ உண்மையான நளனைக்‌ கண்டுபிடித்து அவனுக்கு மாலையிட்டாள்‌. இதன்‌ பின்பு நளன்‌ நிஷதபுரி சென்று ஸுகமாய்‌ வாழ்ந்திருக்கையில்‌ இவனுக்கு இந்திரஸேனன்‌, இந்திரஸேனை என்ற இரண்டு குழந்தைகள்‌ உண்டாயின.

வினா 32.- தேவதைகள்‌ தமது இருப்பிடம்‌ செல்லுங்கால்‌ யார்‌ எதிரே வந்தது? அதனால்‌ என்ன விபரீதம்‌ விளைந்தது?

விடை.- தேவதைகள்‌ தமது இருப்பிடம்‌ செல்லுங்கால்‌ எதிரே கலி (சனி பகவான்‌) தலைவிரிகோலமாய்த்‌ தமயந்தியை கல்யாணம்‌ செய்துகொள்ள வேண்டுமென்று ஓடி வந்து கொண்டிருந்தான்‌. இவன்‌, தேவதைகளிடமிருந்து காரியம்‌ முடிந்து போய்விட்டது என்று அறிந்ததும்‌, இவனுக்கு அடங்காக்‌ கோபம்‌ உண்டாயிற்று. உடனே இவன்‌ “நளனைப்‌ பிடித்துத்‌ திண்டாட்டம்‌ ஆட்டுவித்தும்‌ அவனைத்‌ தமயந்தியை விட்டுப்பிரித்தும்‌ கஷ்டப்படுத்துகிறேன்‌" என்று கொடிய பிரதிக்கினை செய்தான்‌.

வினா 33.- கலி புருஷன்‌ எவ்வாறு நளனைப்‌ பிடித்துக்‌ கொண்டான்‌? கலி புருஷன்‌ பிரவேசம்‌ ஆனதும்‌ நளன்‌ என்ன செய்தான்‌?

விடை.- ஒருநாள்‌ ஸந்தியாவந்தனம்‌ செய்யப்‌ போகுங்கால்‌ காலை நன்றாய்க்‌ கழுவாது உட்கார, இந்த அசுத்த ஸமய்ம்‌ பார்த்துக்‌ கலிபுருஷன்‌ நளனைப்‌ பிடித்துக்‌ கொண்டான்‌. உடனே அவனுக்குப்‌ புத்திமாற, அடுத்த இராஜ்யத்திலிருந்த புஷ்கரராஜனோடு சூதாடித்‌ தனது ஸொத்துக்கள்‌ எல்லாவற்றையும்‌ தோற்று விட்டான்‌. ஆகையால்‌ நளன்‌ இராஜ்யத்தைவிட்டு வெளியே போக வேண்டிவர, தனது குழந்தைகளை விதர்ப்பதேசம்‌ அனுப்பிவிட்டு தமயந்தியையும்‌ அங்குபோகும்படி சொல்லிப்‌ பார்த்தான்‌. அவள்‌ அங்கு செல்லாது நளனோடே காட்டிற்குப்‌ புறப்பட்டாள்‌.

வினா 34.- கலிபுருஷன்‌ எவ்வாறு இவர்களை வழியில்‌ கஷ்டப்படுத்தினான்‌? கடைசியில்‌ இவர்களை எவ்வாறு பிரித்தான்‌?

விடை.- போகும்வழியில்‌ இவர்களுக்கு ஒருவரும்‌ பிச்சையிடாதபடி ஜனங்களது மனதை மாற்றிவிட, இவ்விருவரும்‌ பசிதாகங்களால்‌ மிகவருந்தினார்கள்‌. இவ்வளவு சிரமத்தோடு காட்டின்‌ வழியாய்ப்போகையில்‌ ஒரு அன்னபட்சி உருவமாய்‌ கலிபுருஷன்‌ இவர்கள்‌ முன்‌ தோன்ற, அதை அறியாது தமயந்தி அந்தப்பட்சி தனக்கு வேணுமென்றாள்‌. உடனே நளன்‌ தமயந்தியின்‌ புடவையின்‌ ஒரு பாகத்தைத்‌ தான்‌ சுற்றிக்கொண்டு தனது ஆடையை அன்னத்தின்‌ மேல்‌ போட்டு அதைப்‌ பிடிக்கப்‌ பார்க்க, அந்தப்பட்சி ஆடையை தூக்கிக்கொண்டூ ஆகாயத்தில்‌ பறந்து போய்விட்டது. இவ்வாறு ஆடை இழந்து இவர்கள்‌ போகையில்‌, விதர்ப்பம்‌ போகும்வழியைக்கண்டு நளன்‌ தமயந்தியைத்‌ தகப்பன்‌ வீடு செல்லும்படி தன்னால்‌ இயன்றமட்டுஞ்‌ சொல்லிப்பார்த்தான்‌. தமயந்தி கேட்கவில்லை. அன்றிரவு அவர்கள்‌ அருகிலிருந்த ஒரு பாழ்மண்டபத்தில்‌ தங்கினார்கள்‌. நடு ராத்திரியில்‌ நளன்‌ எழுந்து, தமயந்தியின்‌ புடவையைக்‌ கிழித்துக்கொண்டு, தமயந்தி காலையில்‌ எழுந்து தகப்பன்‌ வீடு போவாள்‌ என்கிற எண்ணத்துடன்‌, அவளைத்‌ தனிமையாய்க்‌ காட்டில்‌ விட்டுவிட்டு ஓடிப்போனான்‌.

வினா 35.- காலையில்‌ தமயந்தி கதி என்னமாயிற்று?

விடை. காலையில்‌ எழுந்ததும்‌ தன்‌ புருஷனைக்காணாது புலம்பிக்கொண்டே போகையில்‌ வழியிலிருந்த ஒருமலைப்‌ பாம்பு அவளைப்பிடித்து விழுங்கத்‌ தொடங்கியது.

வினா 36.- இவளை யார்‌ இதிலிருந்து தப்புவித்தது? தப்புவித்தவன்‌ கதி என்னமாயிற்று? ஏன்‌? விடை.- இவளது அழுகுரலை ஒரு வேடன்‌ கேட்டு ஓடிவந்து அம்பெய்து பாம்பைக்கொன்று இவளை விடுவித்தான்‌. உடனே வேடன்‌ தமயந்தியின்‌ அழகைக்‌ கண்டு மோஹித்து அவளைப்‌ பெண்டாள வேண்டும்‌ என்று கிட்டப்‌ பிதற்றிக்‌ கொண்டுவரவே, தமயந்தியின்‌ கோபாக்கினியால்‌ அவன்‌ சாம்பலாய்‌ விழுந்து இறந்தான்‌.

வினா 37.- பின்பு இவள்‌ கஷ்டப்பட்டு எந்த ஊருக்குச்‌ சென்றாள்‌?

விடை- வழியில்‌ ஒரு வர்த்தகக்கூட்டத்தைக்‌ கண்டு அத்துடன்‌ சேர்ந்துபோனாள்‌. இராத்திரி ஒரு மலைச்சாரலில்‌ அது தங்கியது. அன்றிரவு காட்டு யானைக்‌ கூட்டங்கள்‌ வந்து அநேகரை அழிக்கத்‌ தமயந்தி மாத்திரம்‌ பிழைத்து, பின்பு மிகுந்த கஷ்டங்களை அடைந்து கடைசியில்‌ தனது சிற்றம்மை இராணியாக வாழும்‌ சேதி நகரம்‌ சென்று அங்கு அரண்மனையில்‌ ஓர்‌ ஸைரந்திரியாக அமர்ந்தாள்‌.

வினா 38.- காட்டில்‌ நடு ராத்திரியில்‌ தமயந்தியை விட்டுப்‌ பிரிந்த நளனது கதி என்னமாயிற்று?

விடை.- -நளன்‌ காட்டு மார்க்கஞ்‌ செல்லுகையில்‌ ஒரு காட்டுத்தீ எரிவதைக்கண்டு அதன்‌ அருகில்‌ சென்றான்‌. அங்கு கார்க்‌கோடகன்‌ என்ற பாம்பு தீயில்‌ அகப்பட்டுத்‌ தத்தளிப்பதைக்‌ கண்டான்‌. பாம்பு நளனுக்குத்‌ தகுந்த உபகாரம்‌ செய்வதாகச்‌ சொல்ல, அவன்‌ அதை நெருப்பிலிருந்து வெளியே எடுத்து விட்டான்‌. அது வெளியே வந்ததும்‌ அவனைக்‌ கடிக்கவே, நளன்‌ தனது அரச உருவம்‌ இழந்து ஒரு கரிமுண்டமாக மாறினான்‌. உடனே பாம்பு கலி நீங்கியதும்‌ அவன்‌ நினைத்த போது வந்து, இந்த ரூபத்தை அவனுக்கு மாற்றுவிப்பதாக வாக்களித்து விட்டு மறைந்தது.

வினா 39.- பின்பு நளன்‌ என்ன செய்தான்‌?

விடை... இந்தஉருவத்தோடு அயோத்தியா பட்டணத்தில்‌ ருதுபர்ணனிடம்‌ பாஹுகன்‌ என்கிற பெயர்‌ வைத்துக்கொண்டு ஸாரதியாகவும்‌ சமையற்காரனாகவும்‌ அமர்ந்து, வாயு அக்கினி முதலிய தேவதைகளிடமிருந்து பெற்ற சக்தியால்‌ தனது வேலையை அரசன்‌ பார்த்து திருப்தியடையும்படி செய்தான்‌.

வினா 40.- தமயந்தியின்‌ தகப்பன்‌, தமயந்தி இருக்குமிடத்தை எவ்வாறு கண்டு பிடித்தான்‌?

விடை. - தனக்கு வேண்டியவனான ஸுதேவன்‌ என்கிற பிராம்மணனை அனுப்பி விதர்பதேசாதிபதி, தமயந்தியைத்‌ தேடச்‌ சொன்னான்‌. இவன்‌ எல்லாவிடங்களிலும்‌ தேடிக்கொண்டு வருகையில்‌ தமயந்தியைச்‌ சேதிதேசத்தில்‌ கண்டு அவளை அவள்‌ தகப்பனிடம்‌ கொண்டுபோய்ச்சேர்த்தான்‌.

வினா 41.- இதன்‌ பின்பு நளனைக்‌ கண்டுபிடிக்க தமயந்தி என்ன ஏற்பாடுகள்‌ செய்தாள்‌? அவை என்னமாய்‌ முடிந்தன?

விடை.- ஸுதேவனைத்‌ தமயந்தி அழைத்து “நீர்‌ ஒவ்வொரு இராஜ ஸபைக்கும்‌ சென்று தன்‌ பெண்சாதியை நடுக்காட்டில்‌ பாதி ராத்திரியில்‌ காப்பதற்கு வகையறியாது ஒரு புருஷன்‌ விட்டுப்‌ போவது நியாயமா? என்கிற கேள்வியைக்‌ கேளும்‌. இதற்கு யார்‌ தகுந்த பதில்‌ சொல்லுகிறார்களோ அவர்‌ தான்‌ என்‌ புருஷன்‌. அவரை இவ்வாறு நீர்‌ சீக்கிரத்தில்‌ கண்டுபிடித்து வாரும்‌” என்று ஏவினாள்‌. பிராம்மணன்‌ இவ்வாறு இராஜஸபைதோறும்‌ சொல்லி வந்தான்‌. அயோத்தி வந்து அங்கும்‌ இதைச்‌ சொல்லி ஸபையை விட்டு வெளியே வருகையில்‌, பாஹுகன்‌ வெகு அவஸரமாய்‌ வெளிவந்து பிராம்மணரை நோக்கி "காட்டில்‌ தான்‌ கஷ்டப்படுங்கால்‌ பெண்சாதியுங்‌ கஷ்டப்படுவானேன்‌ என்றும்‌, அவளைத்‌ தனிமை யாய்‌ விட்டுப்போனால்‌ அவள்‌ தன்‌ தகப்பன்‌ வீடுசென்று ஸுகமாய்‌ இருப்பாள்‌ என்றும்‌ எண்ணி அவன்‌ விட்டுப்‌ போயிருக்கலாம்‌. ஆகையால்‌ அது நியாயம்தான்‌" என்றான்‌. இதைத்‌ தமயந்தியிடம்‌ பிராம்மணர்‌ வந்து சொல்ல, பாஹுகன்‌ தான்‌ நளன்‌ என்று தமயந்தி. தீர்மானித்தாள்‌.

வினா 42.- நளன்‌ தன்னிடம்‌ வருவதற்குத்‌ தமயந்தி என்ன ஏற்பாடுகள்‌ செய்தாள்‌? அதனால்‌ என்ன நடந்தது?

விடை... ஸுதேவபிராமணர்‌ மூலமாய்‌ ருதுபர்ணனுக்கு மாத்திரம்‌ தனக்கு இரண்டாம்‌ ஸ்வயம்வரம்‌ அடுத்த நாள்‌ காலையில்‌ நடக்கப்‌ போகிறது என்கிற ஸமாசாரத்தைத்‌ தமயந்தி தெரிவிக்க ஏற்பாடுகள்‌ செய்தாள்‌. இதைக்‌ கேட்டதும்‌ ருதுபர்ணன்‌ தேரைத்‌ தயார்‌ செய்யும்படி பாஹுகனுக்குக்‌ கட்டளையிட அவன்‌ பார்வைக்கு இளைத்தனவாயும்‌ ஓடுவதில்‌ வாயுவுக்கு ஸமானமாயும்‌ உள்ள குதிரைகளை எடுத்துப்‌ பொறுக்கி தேரில்கட்டித்‌ தேரைக்கொண்டுவந்து நிறுத்த, ருதுபர்ணன்‌ விதர்ப்பதேசம்‌ நோக்கிப்‌ புறப்பட்டான்‌.

வினா 43- போகும்‌ வழியில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- போகும்‌ வழியில்‌ கிளைகள்‌ படர்ந்து தழைத்திருந்த வன்னிமரம்‌ தோன்ற அதன்‌ அருகே அரசன்‌ தேரை நிறுத்தச்‌ சொன்னான்‌. உடனே அரசன்‌ அந்த மரத்திலிருக்கும்‌ இலை, காய்‌, பூ, பழம்‌ இவ்வளவு என்று கணக்குச்‌ சொன்னான்‌. அது ஸரியாய்‌ இருப்பதை நளன்‌ மரத்தருகில்‌ சென்று எண்ணித்‌ தெரிந்து கொண்டு மிகுந்த ஆச்சரியப்பட்டான்‌. உடனே ருதுபர்ணன்‌ தனக்குச்‌ சூதாட்ட ரகஸியம்‌ (அக்ஷஹிருதயம்‌) தெரியும்‌ என்றும்‌, தான்‌ பாஹுகனுக்குச்‌ சொல்லிக்‌ கொடுப்பதாகவும்‌, அதற்குப்பதிலாகப்‌ பாஹுகன்‌ தனக்குத்தெரிந்த அசுவஹ்ருதயத்‌தைச்‌ சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றும்‌ ஏற்பாடு செய்து பாஹுகனுக்குச்‌ சூதாட்ட ரகஸியத்தைச்‌ சொல்லிக்கொடுத்தான்‌. இதை நளன்‌ கற்றுக்‌ கொண்டதும்‌ அவனிடமிருந்த கலி புருஷன்‌ அங்கேயே நீங்கிப்‌ போனான்‌. உடனே நளன்‌ இரதத்தில்‌ ஏறிக்கொண்டு விதர்ப்ப நகரம்‌ போய்ச்‌ சேர்ந்தான்‌.

வினா 44- பாஹுகன்‌ தான்‌ நளன்‌ என்பதைத்‌ தமயந்தி எவ்வாறு பரிசோதித்‌தறிந்தாள்‌? பின்பு என்ன நடந்தது?

விடை... முதலில்‌ ஒரு தாதியை அனுப்புவித்து பாஹுகனைப்‌ பார்த்து அவனோடு, நளன்‌ தன்னைக்காட்டில்‌ விட்டுப்போன விஷயத்தைப்பற்றிப்‌ பேசிவரச்சொன்னாள்‌. பின்பு பாஹுகனிடம்‌ தனது குழந்தைகளை அனுப்பிப்‌ பார்த்தாள்‌. பின்பு பாஹுகன்‌ சமைக்கும்‌ விதத்தைப்‌ பார்த்து வரச்‌ சொன்னாள்‌. கடைசியாக அவன்‌ சமைத்த பதார்த்தங்களின்‌ ருசியையும்‌ பார்த்து பாஹுகன்‌ தான்‌ நளன்‌ எனத்‌ தீர்மானித்துக்‌ கொண்டு அவரை ராஜஸபைக்குத்‌ தமயந்தி அழைத்துவரச்‌ சொன்னாள்‌. ஸபையிலே கார்க்கோடகன்‌ வந்து நளன்‌ ஸ்வரூபத்தை மாற்றிவிட, காட்டில்‌ கட்டியிருந்த பாதிப்புடவையோடு மாத்திரம்‌ நளன்‌ வெளியானான்‌. அன்று நளனும்‌, தமயந்தியும்‌ ஒருவரை ஒருவர்‌ கண்டு ஆனந்தித்தார்கள்‌.

வினா 45.- இதன்‌ பின்பு நளன்‌ என்ன செய்தான்‌?

விடை... நளன்‌ தனது பெண்சாதி குழந்தைகள்‌ தனது பரிவாரங்கள்‌ முதலியவைகளோடு கூடிக்‌ கொண்டு நிஷதபுரி சென்று புஷ்கரனை சூதாட்டத்தில்‌ வென்று, இழந்த தனது இராஜ்யத்தை மீட்டுக்கொண்டு ஸுகமாய்‌ வாழ்ந்திருந்தான்‌.

வினா 46.- இந்த உபாக்யானம்‌ சொல்லி முடிந்தவுடன்‌ பிரஹதசுவர்‌ என்ன செய்தார்‌?

விடை... தர்மபுத்திரருடைய வேண்டுகோளின்படி அவருக்கு இந்த ரிஷி சூதாட்டத்‌தைச்‌ சொல்லிக்கொடுக்க, தர்மபுத்திரர்‌ சூதாட்டத்தில்‌ சகுனியையும்‌ வெல்லும்‌ படியான தேர்ச்சியை அடைந்தார்‌. இதன்‌ பின்பு பிரஹதசுவர்‌ யாத்திரார்த்தம்‌ புறப்பட்டுப்‌ போனார்‌.

வினா 47.- பிரஹதசுவர்‌ சென்றதும்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- பாண்டவர்கள்‌ அர்ஜுனனது பிரிவுக்கு ஆற்றாமையால்‌ மிகக்‌ கஷ்டப்படுங்‌கால்‌, நாரத மஹாமுனி வந்து புலஸ்தியருக்கும்‌ பீஷ்மருக்கும்‌ முன்‌ காலத்தில்‌ தீர்த்த மஹத்துவங்களைப்‌ பற்றி நடந்த ஸம்வாதத்தைச்‌ சொல்லிப்‌ பாண்டவரைத்‌ தீர்த்த யாத்திரை செய்யச்சொன்னார்‌. பின்பு தெளம்யரும்‌ ஸகல தீர்த்தங்களை வர்ணித்தார்‌. இந்த ஸமயத்தில்‌ லோமசர்‌ பூமிக்கு வந்து பாண்டவரிடம்‌ அர்ஜுனனது செய்தியைச்‌ சொல்லி, இந்திரன்‌ அவர்களை அர்ஜுனன்‌ வரும்‌ வரையில்‌ தீர்த்த யாத்திரை செய்து புண்ணிய விசேஷங்களை ஸம்பாதிக்கச்‌ சொன்னதாக வெளியிட்‌ டார்‌. இவைகளை யெல்லாம்‌ கேட்டதும்‌ தர்மபுத்திரர்‌ தீர்த்தயாத்திரைக்குப்‌ புறப்பட லோமசரும்‌ தீர்த்த யாத்திரையால்‌ தேவர்கள்‌ அடைந்த பலனையும்‌, அது இல்லாததால்‌ அஸுரர்கள்‌ அடைந்த கேட்டையும்‌ சொல்லி, அதே மாதிரி பாண்டவர்களுக்கு நன்மையும்‌, துர்யோதனாதியருக்குக்‌ கேடும்‌ விளையும்‌ என்று பலவாறு தேற்றிக்கொண்டு பாண்டவர்கள்‌ பின்னே தாமும்‌ புறப்பட்டார்‌.

வினா 48.- இவர்கள்‌ எந்தெந்த முக்கியமான தீர்த்தங்களுக்குச்‌ சென்றார்கள்‌? அங்கு இருந்த விசேஷங்கள்‌ என்ன?

விடை.- சில தீர்த்தங்களில்‌ ஸ்நாநம்‌ செய்தபிறகு பாண்டவர்கள்‌ அகஸ்திய ஸம்பந்தமான பிரம்மஸரஸ்‌ என்கிற தீர்த்தம்‌ வர, அங்கு லோமசர்‌, அகஸ்தியர்‌ லோபாமுத்திரை என்கிற மிகுந்த அழகிய பெண்ணை ஒரு அரசனிடம்‌ பிறக்கும்படி செய்து, பின்பு தான்‌ அவளைக்‌ கல்யாணம்‌ செய்துகொண்டதையும்‌, பின்பு அவளைத்‌ திருப்தி செய்வதற்காக இரண்டு அரசரிடம்‌ சென்றும்‌ பணம்‌ கிடையாதது கண்டு இல்வலன்‌ என்கிற அஸுரனிடம்‌ சென்றதையும்‌, அவன்‌ தன்‌ தம்பி வாதாபியை ஆடாக்கிக்‌ கறிசமைக்க அதை அகஸ்தி.பர்‌ உண்டு வாதாபியை உடனே ஜீரணமாக்கிக்‌ கொன்றதையும்‌ விஸ்தாரமாய்ச்‌ சொன்னார்‌. இதன்‌ பின்பு அகஸ்தியரது மகிமையை விஸ்தாரமாய்க்‌ கேட்கவேண்டும்‌ என்று தர்மபுத்திரர்‌ சொன்னார்‌. தேவேந்திரன்‌ விருத்திராஸுரனை ததீசி மஹரிஷி எலும்பால்‌ ஆக்கப்பட்ட வச்சிராயுதத்தால்‌ கொல்ல, அவனைச்‌ சேர்ந்தவர்கள்‌ கடலுள்‌ ஒளித்துக்‌ கொண்டு இரவில்வந்து ஜனங்களைக்‌ கஷ்டப்படுத்தினதையும்‌, அகஸ்தியரைக்‌ கடலைக்‌ குடிக்கும்படி செய்து தேவர்கள்‌ அஸுரர்களை வென்றதையும்‌, இவ்வாறு அகஸ்தியரால்‌ வற்றிய கடல்‌ ஸகர சக்கிரவர்த்தியின்‌ பிள்ளைகளால்‌ அசுவமேதக்குதிரை தேடிவருங்கால்‌ வெட்டப்பட்டதையும்‌ அதன்‌ முடிவில்‌ அவர்கன்‌ யாவரும்‌ கபிலவாஸுதேவரது கோபாக்கினியால்‌ இறந்ததையும்‌, அவர்களைக்‌ கரை ஏற்ற பகீரதனது பிரயத்தினத்தால்‌ கங்கை வந்ததையும்‌ லோமசர்‌ விஸ்தாரமாய்ச்‌ சொன்னார்‌. வினா 49.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எங்கு சென்றார்கள்‌? அங்கு இருந்த விசேஷம்‌ என்ன? விடை. - அவர்கள்‌ கெளசிகி நதி சென்று காசியபர்‌ ஆசிரமத்தைக்‌ காண லோமசர்‌, ரிசியசிருங்கர்‌ காசியபரது வம்சத்தில்‌ பிறந்ததையும்‌, அவரை லோமபாத ராஜனது நாட்டிலிருக்கும்‌ வேசியர்‌ வந்து தமது இராஜ்யத்திற்கு அழைத்துப்‌ போனதையும்‌, அவர்‌ நாட்டில்‌ உள்ளே அடிவைத்ததும்‌ மழை தாரை தாரையாய்ப்‌ பொழிந்ததையும்‌, பின்பு லோமபாதர்‌ தனது பெண்ணாகிய சாந்தையை அவருக்கு விவாகம்‌ செய்து கொடுத்ததையும்‌ விஸ்தாரமாய்‌ எடுத்துரைத்தார்‌.

வினா 50.- இதன்‌ பின்பு பாண்டவர்கள்‌ எங்கு சென்றார்கள்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ மஹேந்திர மலை சென்று அங்கு பரசுராமரது சிஷ்யரைக்‌ கண்டார்கள்‌. அவரிடமிருந்து பரசுராமர்‌ கூடிய சீக்கிரத்தில்‌ அங்குள்ள ஸந்நியாஸிகளுக்குத்‌ தரிசனம்‌ கொடுக்கப்‌ போகிறதாக பாண்டவர்கள்‌ தெரிந்து கொண்டு, அது வரையில்‌ அங்கிருந்து பரசுராமரைத்‌ தரிசிப்பதாகத்‌ தீர்மானித்தார்கள்‌. இதன்‌ மத்தியில்‌ அகிருதவ்ருணரிடமிருந்து பாண்டவர்கள்‌ பரசுராமரது தகப்பனாரான ஜமதக்னி பிறந்த விதத்தையும்‌, அவருக்குப்‌ பரசுராமர்‌ உண்டானதையும்‌, பின்பு தன்‌ தாயாருடைய பாதிவிருத்யத்திற்குக்‌ குறைவுவரத்‌ தன்‌ தகப்பனாரது உத்திரவின்படி பரசுராமர்‌ தனது தாயைக்‌ கொன்றதையும்‌, பின்பு தன்‌ தாயைப்‌ பிழைப்பிக்க வேண்டும்‌ என்று கேட்க அவர்‌ தாயை அடைந்ததையும்‌, கடைசியாய்‌ கார்த்தவிரியார்‌ஜுனனது பிள்ளைகளால்‌ ஜமதக்னி ரிஷி இறந்ததையும்‌, இதனால்‌ பரசுராமர்‌ க்ஷத்திரியர்‌ மேல்‌ கோபங்கொண்டு அவர்கள்‌ வம்சத்தை 21-தடவை வேரறுத்து தனது தகப்பனாருக்குப்‌ பிதிர்தர்ப்பணம்‌ செய்ததையும்‌, கடைசியில்‌ பூமியைக்‌ காசியபருக்கு தானம்‌ செய்துவிட்டு மஹேந்திர மலையில்‌ தபஸுசெய்து கொண்டிருப்பதையும்‌ தெரிந்து கொண்டார்கள்‌. இந்தக்‌ கதை முடிந்ததும்‌ பரசுராமர்‌ இவர்கள்‌ கண்முன்தோன்ற அவரைத்‌ தரிசித்துவிட்டு பாண்டவர்கள்‌ வேறு தீர்த்தங்‌ களுக்குப்‌ புறப்பட்டார்கள்‌.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 14

வினா 16.- வடக்கே சென்ற அர்ஜுனன்‌ யாரைக்கண்டான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை... வடக்கே செல்லுங்கால்‌ இந்திரகீல மலைச்சாரலுக்கு வரும்பொழுது 'இங்கே நில்லு' என்ற அசரீரிவாக்கு உண்டாக உடனே அர்ஜுனன்‌ நின்று சுற்றுமுற்றும்‌ பார்த்தான்‌. அப்பொழுது ஒரு மரத்தடியில்‌ ஒரு ஸன்னியாஸியைக்‌ கண்டான்‌. இவர்‌ தம்மால்‌ இயன்றமட்டும்‌ அர்ஜுனனை வில்‌, அம்பு இவைகளை எறிந்து விடும்படி செய்யப்பார்த்தும்‌ முடியாதது கண்டு, தமது உண்மையான இந்திர ரூபத்தைக்காட்டி அர்ஜுனனைச்‌ சிவனைக்‌ குறித்து தவம்‌ செய்யும்படி ஏவிமறைந்தார்‌. உடனே அர்ஜுனன்‌ தவவடிவம்‌ பூண்டு அங்கேயே சிவனைக்‌ குறித்துக்‌ கொடிய தவம்‌ செய்யத்‌ தொடங்கினான்‌.

வினா 17.- இவ்வாறு கொடுந்தவம்‌ அர்ஜுனன்‌ செய்யுங்கால்‌, அதற்கு என்ன விக்கினம்‌ வந்தது?

விடை.- அர்ஜுனன்‌ சிறந்த அஸ்திரங்களைப்பெற்று சிறந்த வில்லாளியாகத்‌ தவம்‌ செய்யச்சென்றான்‌ என்ற ஸமாசாரத்தைக்‌ கேள்வியுற்ற துர்யோதனன்‌ தனது தோழனான மூகாஸுரனை ஏவி, அர்ஜுனனைக்‌ கொல்லும்படி அனுப்பினான்‌. இவன்‌ ஒரு பெரிய காட்டுப்பன்றி உருக்கொண்டு அர்ஜுனன்‌ தவம்‌ செய்யும்‌ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரும்‌ புதரில்‌ ஒளித்துக்‌ கொண்டு அவன்‌ மேல்‌ பாய்ந்து அவனைக்‌ கொல்லும்‌ தருணத்தில்‌ இருந்தான்‌.

வினா 18.- இந்தத்‌ தடை எவ்வாறு யாது காரணத்தால்‌ நிவர்த்தியாயிற்று?

விடை.- இப்படி இருக்கையில்‌ ஸகல ரிஷி சிரேஷ்டர்களும்‌ பரமசிவனிடம்‌ சென்று, அர்ஜுனனது தபோக்கினியால்‌ தமக்குக்‌ கஷ்டம்‌ பொறுக்கமுடியவில்லை என்று முறையிட, பரமசிவன்‌ அர்ஜுனனுக்கு அனுக்கிரஹித்து, அவனைத்‌ தவத்தை நிறுத்தும்படி செய்வதாக ஒப்புக்கொண்டார்‌. இதற்காகவே பரமசிவன்‌ வேடரூபந்‌ தரித்து பார்வதியை வேடச்சியாக்கி நான்கு வேதங்களையும்‌ நான்கு நாய்களாக்கிக்கொண்டு வேட்டைக்குப்‌ புறப்படும்‌ வேடன்போல, அர்ஜுனன்‌ தவம்‌ செய்யுமிடம்‌ வந்து மூகாஸ்ரனாகிய பன்றியைக்‌ கண்டு, அதைச்‌ சங்கரிக்க ஒரு அம்பை எய்தார்‌. இதற்குள்‌ அர்ஜுனனும்‌ பன்றி தன்னைக்‌ கொல்லக்‌ காத்திருப்ப தைக்கண்டு அதைக்கொல்லத்‌ தானும்‌ ஓர்‌ அம்பு எய்தான்‌. இவ்விரண்டு அம்புகளா லும்‌ மூகாஸுரன்‌ உயிர்‌ நீங்கி விழுந்தான்‌.

வினா 19.- இவ்வாறு பன்றி இறந்ததால்‌ என்ன விபரீதம்‌ உண்டாயிற்று?

விடை. வேட்டை ஒழுங்குப்படி, ஒருவன்‌ அம்பு எய்து கொல்லக்‌ குறிவைத்த ஜந்துவின்பேரில்‌ வேறொருவன்‌ அம்பெய்தல்‌ அநியாயம்‌. இந்த ஒழுங்கின்படி வேடனுக்கும்‌, அர்ஜுனனுக்கும்‌ தர்க்கமுண்டாயிற்று. இதில்‌ ஒருவரை ஒருவர்‌ இகழ்ந்து பேசும்படி நேரிட, இந்தத்‌ தர்க்கம்‌ கடைசியில்‌ போராய்‌ முடிந்தது.

வினா 20.. இப்போரின்‌ விசேஷம்‌ என்ன? அது எவ்வாறு முடிவு பெற்றது?

விடை.- அர்ஜுனன்‌ போடும்‌ அம்புகள்‌ யாவும்‌ வேடன்மேல்‌ தைக்காது அவன்‌ அருகில்‌ போய்‌ கீழே விழத்தொடங்கி விட்டன. ஆனால்‌ வேடன்விடும்‌ பாணங்களோ அர்ஜுனன்‌ மேல்‌ நன்றாய்த்தாக்கி அவனுக்கு மிகுந்த துன்பத்தை உண்டாக்கின. இதைக்‌ கவனியாது அர்ஜுனன்‌ சண்டை செய்யும்பொழுது அவனுக்கு அக்கினி பகவானால்‌ கொடுக்கப்பட்ட அக்ஷய அம்பறாத்தூணியில்‌ பாணம்‌ ஒன்றுகூட இல்லாமல்‌ முடிந்துபோய்விட்டது. இப்படியானதால்‌ அதிக கோபத்தோடு அர்ஜுனன்‌ தன்‌ காண்டீவ தனுஸின்‌ நாணை அவிழ்த்துவிட்டு வேடனைச்‌ சிரஸில்‌ அடிக்க அவன்‌ தனது தனுஸை இழக்கும்படி நேரிட்டது. இதன்‌ பின்பு இருவரும்‌ மல்லயுத்தஞ்‌ செய்யக்‌ கடைசியில்‌ அர்ஜுனனுக்குச்‌ சிரமம்‌ வந்துவிட்டது. அப்பொழுது அர்ஜுனன்‌ சண்டையை நிறுத்திவிட்டு மனதில்‌ பரமசிவத்தைத்‌ தியானித்து ஒரு மண்விக்கிரஹத்தைச்‌ செய்து, பூஜை செய்து புஷ்பம்‌ முதலியவை களைச்‌ சாத்திக்‌ கண்ணை விழித்துநோக்க, அவைகள்‌ யாவும்‌ வேடன்‌ தலையில்‌ இருப்பதைக்‌ கண்டு, அர்ஜுனன்‌ சிவமே வேட உருவோடு வந்ததாக அறிந்து, தெண்டனிட்டுத்‌ தான்‌ செய்த அபராதத்தைப்‌ பொறுத்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தான்‌. உடனே அவன்‌ முன்பு, ஸகல தேவதைகளும்‌ தோன்றினார்கள்‌.

வினா 21.- இப்படி அர்ஜுனன்‌ சிவனைத்‌ தரிசித்த பின்பு: என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை- சிவன்‌, அர்ஜுனன்‌ செய்த திவ்ய யுத்தத்தைக்‌ கண்டு மகிழ்ந்து அவனுக்குப்‌ பாசுபத அஸ்திரத்தைக்‌ கொடுத்து, அதைத்‌ தகுந்த பலவான்‌ விஷயத்தில்‌ தான்‌ பிரயோகிக்க வேண்டும்‌, அப்படி இன்றி பலஹீனர்மேல்‌ பிரயோகித்தால்‌ பிரபஞ்ச முழுவதையும்‌ அது அழித்து விடும்‌ என்ற பிரயோகக்கிரமத்தைச்‌ சொல்லி சிவன்‌ மறைந்தார்‌. உடனே அங்கு இருந்த ஸகல தேவதைகளும்‌ தங்கள்‌ தங்களுக்குரிய முக்கிய அஸ்திரங்களை அர்ஜுனனுக்கு அநுக்கிரஹித்து மறைந்தனர்‌.

வினா 22.- இவ்வாறு அர்ஜுனன்‌ ஸகல அஸ்திரங்களையும்‌ பெற்ற பின்பு என்ன செய்தான்‌? ஏன்‌?

விடை... இந்திரனது வேண்டுகோளின்படி அர்ஜுனன்‌ இந்திர லோகம்‌ சென்று, அங்கு இந்திரனோடு ஐந்துவருஷம்‌ வாஸம்‌ செய்து வந்தான்‌. இந்திரனுக்கு மஹா பலசாலிகளாகிய நிவாதகவசாள்‌, காலகேயர்கள்‌ என்ற ஜாதியர்கள்‌ விரோதிகளாய்‌ இருந்ததால்‌, அவர்களைக்‌ கொல்லுவதற்காக அர்ஜுனனை இந்திரன்‌ இந்த ஸமயத்தில்‌ தனது லோகத்திற்கு அழைத்தான்‌.

வினா 23.- அர்ஜுனன்‌ இந்திரலோகத்தில்‌ வஸிக்குங்கால்‌ என்ன விபரீதம்‌ நடந்தது? காரணம்‌ என்ன? அது எவ்வாறு அர்ஜுனனுக்கு நன்மையாய்‌ முடிந்தது?

விடை.- அர்ஜுனன்‌ இந்திர ஸ்பையில்‌ ஒருநாள்‌ இருக்குங்கால்‌ அவன்‌ முன்பு எல்லா அப்ஸர ஸ்திரீகளும்‌ நர்த்தனம்‌ செய்துவர, அப்பொழுது தனது பூரு வம்சத்திற்குத்‌ தாய்போன்றவளாகிய ஊர்வசியை அர்ஜுனன்‌ கண்‌ கொட்டாது மிகுந்த விநயத்தோடு நோக்கினான்‌. இந்நோக்கத்தைக்‌ காமநோக்கு என்று விபரீத அர்த்தம்‌ செய்துகொண்டு, இந்திரன்‌ ஊர்வசியை அர்ஜுனனோடு ஓர்‌ இரவு ஸுகித்திருக்கும்படி அனுப்ப, அவன்‌, தனது எண்ணத்தை வெளியிட்டு மிகுந்த ஆவலோடு தன்னிடம்‌ வந்த ஊர்வசிக்கு வந்தனை வழிபாடுகள்‌ செய்தான்‌. தனது எண்ணம்‌ பூர்த்தியாகாதது கண்ட ஊர்வசி, அர்ஜுனனுக்கு நபும்ஸக ரூபம்‌ (பேடி ரூபம்‌) வந்து, ஸ்திரீகள்‌ மத்தியில்‌ அவன்‌ நாட்டியம்‌ கற்பிப்போனாக வஸித்து மானங்கெட்டுத்‌ திரிய வேண்டும்‌ என்று சபித்தாள்‌. இது இந்திரனுக்குத்‌ தெரியவே அர்ஜுனனது மனோதிடத்தை மெச்சி, ஊர்வசியை அழைத்துப்‌ பேடிரூபம்‌ முதலியவைகள்‌ ஒரு வருஷம்‌ மாத்திரம்‌ இருக்கும்படி சாபத்தை மாற்றுவித்தான்‌. (இந்தச்‌ சாபம்‌ எப்படி அர்ஜுனனுக்கு நன்மையாக முடிந்தது என்பதை விராடபர்வத்திற்‌ காண்க.)

வினா 24.- நிவாதகவச காலகேயர்களை அர்ஜுனன்‌ எவ்வாறு வென்றான்‌?

விடை.- அர்ஜுனன்‌ இந்திர ஸாரதியாகிய மாதலியால்‌ நடத்தப்பட்ட இரதத்தில்‌ ஏறிக்கொண்டு, நிவாதகவசர்கள்‌ இருக்கும்‌ பட்டணத்திற்கு வந்து தனது காண்டீவ தனுஸால்‌ பாண வருஷம்‌ செய்யத்தொடங்கினான்‌. முதலில்‌ அர்ஜுனனோடு அவர்கள்‌ எதிர்த்துச்‌ சண்டை செய்வது அஸாத்தியம்‌ என்று கண்டு, அநேக மாயா வித்தைகளை முன்னிட்டுக்‌ கொண்டு மறைந்து சண்டை செய்யத்‌ தொடங்கினார்கள்‌. அர்ஜுனனும்‌ தன்னால்‌ இயன்ற மட்டும்‌ அவர்களது மாயாவித்தைகளை வீணாக்கிக்‌ கடைசியில்‌ இந்திரனால்‌ கொடுக்கப்பட்ட வச்சிராயுதத்தைப்‌ பிரயோகம்‌ செய்து நிவாதகவசர்களது மாயைகளைச்‌ சின்னா பின்னமாக்கி அவர்கள்‌ எல்லோரையும்‌ கொன்றான்‌. பின்பு இந்திர லோகத்திற்குத்‌ திரும்பி வருங்கால்‌ ஹிரண்யபுரம்‌ வந்து அங்கு வஸித்திருந்த காலகேயாதி இராக்ஷஸர்களை மிகுந்த கஷ்டத்தோடு ருத்திராஸ்திரப்பிரயோகம்‌ செய்து வதம்‌ செய்தான்‌.

வினா 25.- இவ்வாறு அர்ஜுனன்‌ தேவகாரியமாய்‌ இந்திரலோகத்தி லிருக்கிறான்‌ என்ற செய்தி தர்மபுத்திராதிகளுக்கு எவ்வாறு தெரியவந்தது? பின்பு அவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- இந்திரன்‌ லோமசர்‌ என்ற முனிவரை அழைத்து அர்ஜுனன்‌ தன்‌ லோகத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, நிவாதகவசாதி ராக்ஷஸர்களைக்‌ கொன்றபின்பு திரும்பி வருவான்‌ என்றும்‌, அதற்குள்‌ அவர்கள்‌ அர்ஜுனனை எண்ணி வருந்துவதை விட்டுத்‌ தீர்த்தயாத்திரை செய்து புண்ணியம்‌ ஸம்பாதித்தல்‌ நலம்‌ என்றும்‌ யுதிஷ்டிரரிடம்‌ சொல்லும்படி ஏவினான்‌. அவர்‌ வந்து இந்திரன்‌ சொன்னபடி யுதிஷ்டரரிடம்‌ சொல்ல, யுதிஷ்டிரர்‌ தமது தம்பி விஷயமான துக்கம்‌ நீங்கித்‌ தீர்த்தயாத்திரை செய்வதாகத்‌ தீர்மானித்தார்‌.

வினா 26.- அர்ஜுனனது மேன்மையைக்‌ கேள்வியுற்ற திருதிராஷ்டிரன்‌ கதி என்னவாயிற்று?

விடை.- தனது பிள்ளைகள்‌ செய்த துஷ்காரியங்களுக்காக கூடிய சீக்கிரத்தில்‌ அவர்கள்‌ அர்ஜுனன்‌ முதலிய பாண்டவ வீரர்களால்‌ இறப்பார்களென்றும்‌, அர்ஜுனனே தனது குலத்திற்கு யமன்‌ என்றும்‌ திருதிராஷ்டிரனுக்குத்‌ தோன்ற அவன்‌ மனமுடைந்து துக்கக்‌ கடலில்‌ ஆழ்ந்தான்‌.

வினா 27.- லோமசர்‌ இந்திரலோகத்திலிருந்து யுதிஷ்டிரரிடம்‌ வரும்‌ முன்‌, பாண்டவர்கள்‌ எங்கு எவ்வாறு காலங்கழித்தனர்‌?

விடை.- பாண்டவர்கள்‌ அர்ஜுனன்‌ தவம்‌ செய்யச்‌ சென்ற சில காலத்திற்கெல்லாம்‌ காம்யக வனம்‌ வர, அங்கு அர்ஜுனனது பிரிவை ஸகிக்கமுடியாது கஷ்டப்பட்டுக்‌ கொண்டிருந்தார்‌. அப்பொழுது அவர்கள்‌ இருக்குமிடம்‌ பிரகதசுவர்‌ என்ற மஹரிஷி வர, அவரிடம்‌ இவர்கள்‌ தமது குறைகளை எடுத்துரைத்தனர்‌. அப்பொழுது இந்த ரிஷி பாண்டவர்களது துக்கத்தை மாற்ற அவர்களை விடத்தனிமையாய்‌ அதிகக்‌ கஷ்டப்பட்ட நளனது சரித்திரத்தைச்‌ சொல்லி முடித்தார்‌.

வினா 28.- இந்த நளன்‌ யார்‌? இவனுக்கு விவாஹத்தை நடத்த யார்‌ முயற்சி செய்தது? ஏன்‌?

விடை.- இந்த நளன்‌ நிஷத தேசாதிபதி. ஓர்‌ அன்ன பக்ஷி இவனது அழகை விதர்ப்பதேசாதிபதியின்‌ குமாரத்தியான தமயந்தியிடமும்‌, அவளது அழகை நளனிடமும்‌ சொல்லி இருவருக்கும்‌ ஒருவர்மேல்‌ ஒருவர்க்குக்‌ காதல்‌ உண்டாகும்‌ படி செய்தது. ஒரு நாள்‌ இப்பட்சியைத்‌ தாதிமார்கள்‌ நளனது உத்தியான வனத்தில்‌ பிடித்து நளனிடம்‌ கொண்டுவந்து கொடுக்க அவன்‌ இதைக்‌ கொல்லாது விடுதலை செய்ததால்‌ அப்பட்சி நளனுக்கு இந்த உபகாரத்தைச்‌ செய்தது.

வினா 29.- தமயந்தியின்‌ ஸ்வயம்வரத்திற்கு நளன்‌ போகையில்‌, இவனது எந்த சிறந்தகுணம்‌, எவ்வாறு வெளிவந்தது?

விடை. தேவகாரியம்‌ ஸாதிக்கும்‌ விஷயத்தில்‌ தனது காரியத்தைக்‌ கவனியாது இருத்தல்‌ என்கிற அவனது சிறந்த குணம்‌ வெளிப்‌ பட்டது. போகும்‌ வழியில்‌ இந்திரன்‌, அக்கினி, வாயு முதலிய தேவதைகள்‌ தமயந்தியைக்‌ கல்யாணம்‌ செய்து கொள்ள எண்ணி வந்துகொண்டிருந்தார்கள்‌. அவர்கள்‌ நளனை நோக்கி, எமது மேன்மை முதலியவைகளை தமயந்தியிடம்‌ தெரிவித்து அவளை எங்களுள்‌ ஒருவரைக்‌ கல்யாணம்‌ செய்துகொள்ள இசையும்படி செய்ய வேண்டும்‌. அதற்காக நீ எங்களுக்குத்‌ தூது செல்ல வேண்டும்‌' என, நளன்‌ மனங்‌ கூசாது தான்‌ ஆசை வைத்திருந்த பெண்ணினிடம்‌ தூதாகப்‌ போய்த்‌ தன்னால்‌ ஆனமட்டும்‌ தேவர்களுக்காக மன்றாடிப்பார்த்தான்‌. தமயந்தி நளனையே கல்யாணம்‌ செய்து கொள்ளுவதாகப்‌ பிடிவாதமா யிருப்பதைக்‌ கண்டு, நளன்‌ தேவர்களிடம்‌ நடந்த விஷயங்களை ஒளியாது சொல்லி விட்டான்‌. தேவர்களும்‌ தமது சக்தியால்‌ இவன்‌ சொல்வது உண்மை யென்றும்‌, இவன்‌ மனங்‌ கூசாது. தமயந்தியினிடம்‌ தமது மேன்மையை எடுத்துரைத்தான்‌ என்றும்‌ தெரிந்து கொண்டார்கள்‌.

வினா 30- இவ்வாறு நளன்‌ நடந்துகொண்டதால்‌ அவனுக்கு என்ன சிறப்பு உண்டாயிற்று?

விடை... தேவர்களின்‌ ஸந்தோஷத்தால்‌ நளனுக்குச்‌ சிறந்த சக்திகள்‌ உண்டாயின. அக்கினியின்‌ அனுக்கிரகத்தால்‌ நளனுக்கு அரிசி காய்‌ கறி முதலியவைகளைக்‌ கையால்‌ தொட்டவுடன்‌ உண்ணத்தக்க நல்ல பக்குவ பதார்த்தங்களாக மாற்றும்‌ சக்தி வந்தது. வாயுவின்‌ அனுக்கிரகத்தால்‌ குதிரை நடத்தும்‌ வழியும்‌, அசுவஹ்ருதயம்‌ என்கிற குதிரைகளின்‌ ஸ்வபாவம்‌ அறியும்‌ வித்தையும்‌ கிடைத்தன. இது போலவே ஒவ்வோரு தேவதையிடத்‌திலிருந்தும்‌ நளன்‌ திவ்ய சக்திகளை அடைந்தான்‌.