சனி, 11 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 7

குணதசகம்.


     எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று குணதசகத்தால் அநுபவிக்கிறார் தூப்புல் கோமான். அப் பாசுரம் இதுவே. :-


" பயின்மதிநீயே பயின்மதி தருதலின்
வெளியு நீயே வெளியுற நிற்றலின்
தாயு நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையு நீயே முந்தி நின்றளித்தலின்
உறவு நீயே துறவா தொழிதலின்
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின்
ஆறு நீயே யாற்றுக் கருடலின்
அறமு நீயே மறநிலை மாய்த்தலின்
துணைவனு நீயே யிணையிலையாதலின்
துய்யனு நீயே செய்யாளுறைதலின்
காரண நீயே நாரணனாதலின்
கற்பக நீயே நற்பதந் தருதலின்
இறைவனு நீயே குறையொன்றிலாமையின்
இன்பனு நீயே துன்பந் துடைத்தலின்
யானு நீயே யென்னுளுறைதலின்
எனது நீயே யுன தன்றியின்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய் நீயே வய்யமுண்டுமிழ்தலின்
எங்கனமாகு மெய்ய! நின் வியப்பே
அங்ஙனே யொக்க வறிவதாரணமே.''
         - (மும்மணிக்கோவை. 7)

    (தன்னைத்தான் அநுபவித்தபடியே பேசுமிடத்தில் ஸஹேதுகமாக உபபாதித்தருளுகிறார். பயில்மதி - இடை விடாதே அநுபவிக்க அளவுடைமையை ; தருதலின் - எனக்கு அருள் செய்கையாலே ; பயில்மதி - அநுபவயோக்யனான சந்திரன் ; வெளியுற - இதர தேஜோவஸ்துக்கள் பிரகாசத்தை அடையும்படி ; நிற்றலின் - நிற்பதினாலே ; வெளியும் - நிருபாதிகதேஜோ ரூபியான சூர்யனும் ; சாயை-நிழலை (சாயை -- ஸம்ஸார ஸந்தாப ஹரமான திருவடிகளை); தந்து - கொடுத்து ; உகத்தலின் - சந்தோஷித்தலால், தாயும் - மாதாவும் ; முந்தி - சிருஷ்டி காலத்திற்கு முன்னே ; அளித்தலின் - கரணகளேபர ப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; தந்தையும் - பிதாவும் ( அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து, அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்" - திருவாய் மொழி 2-3-3) ; துறவாது - விடாதே ; ஒழிதலின் - ஒழிகையாலே ; உறவும் - நிர்வ்யாஜ பந்துவும் ("தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை, வேறே போக எஞ்ஞான்றும் விடலே'. திருவாய்மொழி 2-9-10) ; சிற்றின்பம் - அல்பாநுகூலங்களாகத் தோற்றிப் பின்னர் அநர்த்தத்தை விளைவிக்கும் காமங்கள் ; இன்மையின் -- இல்லாமையால் ; உற்றதும் - ப்ராப்தமும், வகுத்த விஷயமும் ; பரித்யாகாநர்ஹ அந்தரங்கவஸ்து ; வாஸஸ்தானமும் ; ஆற்றுக்கு - அநுஷ்டிக்குமேதேனுமொரு வ்யாஜமாத்ரமான உபாயத்துக்கு ; அருள்தலின் - உபாயலாகவத்தையும், பல கௌரவத்தையும், நினையாதே பரிபூர்ண பலப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ; ஆறும் - நிருபாதிக ஸர்வவித ஸம்பந்தமுமுடையவனாகையாலே இத்தலையில் வ்யாஜ மாத்ரத்தைக்கொண்டுதான் உபாயாந்தர ஸ்தானத்திலே நிற்கையாலே ஸகலபல சாதகமும்; மறநிலை - பாபங்களின் நிலையை ; மாய்த்தலில் - நசிப்பிக்கையாலே ; அறமும் - தர்மமும் ; இணை - தன்னோடொப்பார் ; இல்லையாதலின் - இல்லாமையால் ("ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா" - திருவாய்மொழி 2-3-2) ; துணைவனும் - சகாயமாய் நிற்பவனும் ; செய்யாள் - பெரிய பிராட்டியார்; உறைதலின் – அகலகில்லேனிறையுமென்று நித்யவாஸம் பண்ணுகையாலே ; துய்யனும் -- பரிசுத்தனும்
நாரணனாதலின் -- நாராயணனாகையாலே ; காரணம் --
நிகில ஜகந்நிமித்தோபாதாநருப ஸர்வவித காரணபூதனும் ; நற்பதந்தருதலின் - பரம பதத்தைத் தருகையாலே ; கற்பகம் - கல்பவ்ருக்ஷம் ; குறை ஒன்று - ஒருகுறையும்; இலாமையின் -- ஸ்வரூப ரூபகுண விபவாதிகளில் நியூநதை ஒன்றுமில்லாமையாலே ; இறைவனும் - ஸர்வேசுவரனும்; துன்பம் - துயரங்களை; துடைத்தான் -- நீக்குகையால்; இன்பமும் - நிருபாதிகாநந்த ஸ்வருபமும்; என்னுள் -- எனக்குள்; உறைதலின் - கறந்தபாலுள் நெய்யே போல் அப்ருதக்ஸித்தனாய் வஸிக்கையாலே; யானும் - இவ்வாத்மாவைப்பற்ற எவன் நியந்தாவும், ஆதாரமும், சேஷியும் ஆகையாலே யானும் நீயே; உனதன்றி - உன்னுடையதல்லாமல் : இன்மையின் - இல்லாமையின்; எனதும் மதியமெல்லாம் பொல்லாங்கு இலாமையின் - தீமையொன்றுமில்லையாதலின்; - நல்லாய்- கல்யாண ஸ்வபாவன், நல்லவன்; வய்யம்-பூமியை, ப்ரஹ்மாண்ட லக்ஷ சதகோடிகளை ; உண்டு-பிரளயம் வந்தவாறே வயிற்றில் வைத்து ரக்ஷித்து; உமிழ்தலில் -பிரளயம் போனவாறே யதா பூர்வம் நிகரணம் பண்ணுகையாலே; வல்லாய் --          வல்லவன், நிகில ஜகத் ஶ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகரண சக்தன்;  மெய்ய --  அடியவர்க்கு மெய்யனே; எங்ஙனமாகும் அங்ஙனமே-எவ்வகையாயிரா நின்றதோ அவ்வகையில் எல்லாம் ; நின் வியப்பு -உன் ஆச்சர்ய ஸ்வபாவம்; ஒக்க அறிவது -- உன் படிக்கேற்க அறிய வல்லது; ஆரணமே -- அபௌருஷேயமான நித்ய நிர்த்தோஷமான வேதமே).

"ஸோ அங்கவேத யதியா ந வேத" என்று கைவாங்கின
பழமறை போலன்றிக்கே மாறன்மறை அனைத்தையும் அறிவது. "ஸேவா யோக்ய:" (திரமிடோபநிஷத் ஸாரம்) இத்யாதியிற்படியே திருவாய்மொழி பத்து பத்துக்களிலும் ப்ரதிபாதிதங்களான பத்து அர்த்தங்களும் இப்பாசுரத்திலே அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. எங்ஙனமென்னில்,


(1) பயின்மதி நீயே -- ஸேவ்யத்வம் (எம்பெருமானே தொழத் தகுந்தவன்)
(2) வெளியுநீயே --போக்யத்வம் (எம்பெருமானே பரம போக்யன்)
(3) தாயு நீயே, தந்தையு நீயே - சுபஸுபக விக்ரஹத்வம்
(எம்பெருமானே விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹம் படைத்தவன்)

(4) உறவு நீயே, உற்றதுநீயே -ஸர்வ போக்யாதிகத்வம்
(போக்யங்களான ஸகல புருஷார்த்தங்களிற் காட்டிலும் மேம்பட்ட அளவற்ற யோக்யதையை யுடையவன்)

(5) ஆறுநீயே, அறமுநீயே - ச்ரேயஸ்தத்தேதுதாநம் (உபாயமான புருஷார்த்தத்தையும் அதற்கு உறுப்பான உபாயத்தையும் எம்பெருமான் தானே கொடுத்தருள்பவன்).

(6) துணைவனு நீயே, துய்யனுநீயே - ப்ரபதந ஸுலபத்வம்
(தன்னை யடைக்கலம் புகுகிறவர்களுக்கு மிகவும் எளியன்)

(7) காரணநீயே, கற்பகநீயே - அநிஷ்ட நிவர்த்தகத்வம் (அடியார்களது அல்லல் போக்கும் தன்மையன்)

(8) இறைவனுநீயே, இன்பனுநீயே - ஆச்ரிதேச்சாநுஸாரித் வம் (அடியார்களுடைய அபிப்பிராயத்தைப் பின் சென்று நடப்பவன்)

(9) யானு நீயே, எனதுநீயே - நிருபாதிக ஸுஹ்ருத்வம்
(இயற்கையாகவே இன்னருள் புரியும் இயல்வினன்)

(10) நல்லாய் நீயே, வல்லாய் நீயே - ஸ்த்பதவீ ஸஹாயத்வம்
(தாளடைந்தோர் தங்கட்குத்தானே நலமந்தமில்லதோர் நாட்டில் வழிக்குத் துணையாமவன் எம்பெருமான்)

இங்ஙனம் இங்கு குணதசக வடைவை வமைத்த வற்புத
வள்ளலாரின் வன்மையே வன்மை.

செவ்வாய், 7 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 6

ஐம்பொருள்

முக்தியைப் பெற விரும்புமவன் முமுக்ஷு. இவன் முக்கியமாய் உணரவேண்டும் பொருள்கள் ஐந்து. அவையாவன:--


(1) நம்மால் அநுபவிக்க வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம் (பரமாத்ம ஸ்வருபம்)
(2) அப்பெருமானை அநுபவிக்கும் சேதனனுடைய ஸ்வரூபம் (ஜீவாத்ம ஸ்வரூபம்)
(3) அப்பெருமானைப் பெறுதற்கான உபாயத்தின் ஸ்வரூபம் (உபாய ஸ்வரூபம்)
(4) அவ்வுபாயத்தினால் பெறக்கூடிய பேற்றின் ஸ்வரூபம் (பலஸ்வரூபம்)
(5) அப்பேற்றைப் பெறவொட்டாமல் தடை செய்கின்ற ப்ரதிபந்தகத்தின் ஸ்வரூபம் (விரோதி ஸ்வரூபம்).
இவற்றையே " அருத்தபஞ்சகம் என்பர்.
 

    "ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்ய காத்மந: |ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததாப்ராப்தி விரோதிச || வதந்திஸ கலாவேதாஸ் ஸேதிஹாஸ புராணகா:|

என்று ஹாரீத ஸம்ஹிதை இதனை அறுதியிட்டது.

இவ்வைம்பொருளை ஸ்ரீ ஸ்வாமிதேசிகன் அனைவரும் அறிந்து உய்யும் பொருட்டு ஸர்வ சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமான அவ்வருத்த பஞ்சகத்தில் ஒவ்வொன்றையும் இரண்டு பாசுரங்களினால் நிரூபிக்கிறதாய்ப் பத்துப் பாசுரங்களும், பல ச்ருதியாக ஆக ஒருபாட்டும் அருளிச்செய்த தமிழ்ப்பிரபந்தமே " அருத்த பஞ்சகம்" என்பது. மூலப்ரமாண சுலோகத்தில் ஜீவாத்ம ஸ்வரூபத்துக்கு அடுத்தபடி உபாயம் குறித்திருந்தபோதிலும் விரோதியை அறிந்து அத்தாலே சோகமுண்டாகி பிறகு உபாயாநுஷ்டாநம் ஏற்பட வேண்டுமென்கிற அர்த்த க்ரமத்தை அநுஸரித்து இந்நூலில் விரோதி ஸ்வரூபத்தின் பின்னர் உபாய ஸ்வரூபம் வெளியிடப்பெறுகின்றது. எனவே, இங்குள்ள முறைவைப்பு வருமாறு:-

(1) பரமாத்ம ஸ்வரூபம் (2) ஜீவாத்ம ஸ்வரூபம் (3) விரோதிஸ்வரூபம் (4) உபாயஸ்வரூபம் (5) பலஸ்வரூபம் என்பன.

(1) அவன் ஒருவனே நாம் அடையவேண்டிய வஸ்து என்று சொல்லும்படி யிருக்கிற அலர்மேல்மங்கை மணாளன்
(2) அவனுடைய திருவடிகளை அடைந்து அவனுடைய அருளோடு ஒன்றியிருக்கிற அவனை அனுபவிக்கிறவனான அன்பனான சேதனன்
(3) செய்யவேண்டிய உபாயம்
(4) அந்த ஜீவனுடைய ஸ்வரூபாநு குணமான பிரயோஜநம்
(5) அவித்யையோடுகூடிய கர்மங்களாகிற பலமான விலங்கு
என்கிற இந்த ஐந்து விஷயங்களையும் அறிந்த ஆசார்யர்கள் அஜ்ஞானம் சற்றும் இல்லாதபடி என்னுடைய மனமானது நன்கு அறியும்படி உபதேசித்தனர் என்ற கருத்தடங்கிய

" பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருளொன்று மன்பன் அவன்கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று வையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே."

                                             - (அதிகாரச் சுருக்கு. 11)
என்று இவ்வாசிரியர் தாமே அருளிச்செய்துள்ளார். இங்கு முறைவைப்பு மூலப்பிரமாண சுலோகப்படியேயுள்ளது.

" அயன்பணியு மத்திகிரி அருளாளரடி யிணைமேல்
நயங்கொள் சேர்கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்களிவை யனைத் துமெனப் பண்டுரைத்தார்படி யுரைத்த
வியன்கலை களீரைந்தும் வேதியர் கட் கினியனவே." (11)

என்ற பாசுரத்தில் ஈரைந்து" என்றதனையும் நன்கு நோக்குக.

ஐங்கால காரியங்கள்

.ஸாத்விக ஸ்மிருதிகளில் கூறப்பட்டதாயும், " இருமுப் பொழுதேத்தி" என்கிற பாசுரத்தில் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்டதும், எம்பெருமானாரால் நித்யத்தில் சுருக்கி உரைக்கப்பெற்றதாயும் இருக்கிற பஞ்சகால ப்ரக்ரியை யாய்ச் செய்யப்பெறும் பகவத் ஸமாராதநமாகிற உத்தர கைங்கர்ய விசேஷத்தை விளக்கும் பத்துப்பாக்கள் கொண்டது  "ஸ்ரீ வைஷ்ணவ தினசரி" எனும் தனித்தமிழ்ப் பிரபந்தம். இதில்,

(1) அபிகமநம் :- ப்ராஹ்ம முகூர்த்தம் என்று சொல்லக் கூடிய வைகறையில் எழுந்து நிர்மலமான உள்ளம், உரை, செயல் இவற்றுடன் கூடினவனாய் ஸர்வ ஜகத்காரணனான ஆதியம் பகவானைக் குறித்து தியானம், தோத்திரம் முதலியவற்றால் புகழவேண்டும். இக்காலத்தில் சரீராதிகளின் சுத்திக்காக ஸ்நாநம் முதலியவற்றைச் செய்வதும் ஸந்த்யோபாஸநாதிகளைச் செய்வதும் தகும். அன்று முழுதும் நடக்கவேண்டிய கைங்கரியங்கள் தடையின்றி நடந்தேற வேண்டுமென்று எம்பெருமானிடம் விண்ணப்பித்து பிரபத்தி செய்வதுமாம்.
(2) உபாதாநம் :- அதிகாலைக்கடன்கள் பூர்த்தியானதும், பகவானுடைய திருவாராதநமாகிற யாக நிஷ்பத்தியின் பொருட்டு திருத்துழாய், புஷ்பம், பலம், முதலிய ஸாதனங்களைச் சேகரித்தலும், சித்த சுத்திக்காக ஆழ்வார் ஆசாரியர்கள் அருளிச்செய்துள்ள காலக்ஷேபத்திலீடு படுதலும், தர்மாநு குணமான திரவ்யார்ஜநமும் செய்யுங்காலமிது.
(3) இஜ்யை:- மாத்யாஹ்நிக காரியங்களைச் செய்துவிட்டு அஷ்டாங்கயோக புரஸ்ஸரமாகவோ அல்லது ஆஹ்நிகங் களிற் கூறியாங்கு முறைப்படி எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்யுங்காலம்.
(4) ஸ்வாத்யாயம் :- அபராஹ்நத்தில் பகவத் கதைகளின் சிரவணம், அவற்றைப்பற்றிய சிந்தநம், பகவானைப்பற்றிய வேதாந்த பாகங்களைப் படித்துப் பரிசயம் செய்தல் முதலியவற்றைச் செய்யுங்காலம்.
(5) யோகம் :--ஸாயங்காலத்திற் செய்ய வேண்டிய ஸ்மார்த்த கர்மங்களைச் செய்து விட்டு, யதோசிதம் பகவந் நிவேதநம் முதலிய கார்யம் முடிந்த பிறகு விச்ரமத்தை அடையும் முன்னதாகப் பகவானை உபாஸிக்கவேண்டும். இதற்கு யோகம் என்று பெயர். எம்பெருமானுடைய திருவடி களைத் தியானம் செய்தலும், தன்னுடைய தூக்கவேளை யிலும், பகவான் திருவடிகளில் தன் தலையை வைத்திருப்ப தாய் தியானித்துவிட்டு சயனித்தலும் இவ்வேளையில் செய்யவேண்டுவன.

என்ற ஐந்து கால காரியங்களையும் பேரருளாளன் விஷயமாகவாக்கி ஒவ்வொன்றையும் முறையே இரண்டிரண்டு பாசுரங்களால் நிரூபித்துள்ளார் நம் சந்தமிகு தமிழ் மறையோன்.

திங்கள், 6 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் -- 5

பன்னிரு நாமம்.

எம்பெருமானது துவாதச நாமங்களாவன :- (1) கேசவன் (2) நாராயணன் (3) மாதவன் (4) கோவிந்தன் (5) விஷ்ணு (6) மதுசூதனன் (7) திரிவிக்கிரமன் (8) வாமனன் (9) சிரீதரன் (10) இருடீகேசன் (11) பற்பநாபன் (12) தாமோதரன்.
    நம்மாழ்வார் “கேசவன் தமர் " என்ற இரண்டாம் பத்து "' ஏழாந்திருவாய்மொழியைப் "பன்னிரு நாமப்பாட்டு" என்கின்றார்.

"வண்ணமாமணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென்குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ்மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணிற் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே." (13)

என்ற திருநாமப் பாசுரங்காண்க.

    பெரியாழ்வார் காது குத்தும் வியாஜத்தால் "பன்னிருநாமத்தால் அந்தாதி" பாடியுள்ளார்.

"வார் காது, தாழப்பெருக்கி யமைத்து
    மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
    சிந்தையுள் நின்று திகழ
பாரார்தொல் புகழான் புதுவை மன்னன்
    பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்
    அச்சுதனுக்கு அடியாரே.''
- (பெரியாழ்வார் திருமொழி 2-3-13)

என்ற பாசுரத்தை நோக்குக.
    இவ்விரு ஆழ்வார்களின் அருளிச்செயல்களை நன்கோதிய நம் மறைமுடிக் குருவரனார், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தினந் தோறும் புண்ட்ரம் தரிக்கும்போது அநுசந்திப்பதற்காக கேசவன் முதல் தாமோதரன் வரையிலுள்ள பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி அவ்வவ்வெம்பெருமான்களை ஆவாஹநம் செய்து ஸேவிக்கும் முறையில் அவ்வவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம், அவர்கள் அணிந்திருக்கும் ஆயுதங்கள், அவர்கள் தலைவராய் வீற்றிருக்கும் திசை, நம் சரீரத்தில் புண்ட்ரரூபமாய் அவர்கள் வசிக்கும் பாகம் ஆகியவற்றையும் சேர்த்து "பன்னிரு நாமம் " என மகுடஞ் சூட்டி ஒரு பிரபந்தம் அருளிச்செய்துள்ளார். இங்கு பன்னிருநாமம் ஆழ்வார்கள் முறையை அநுசரித்து அமைக்கப்பெற்றுள்ளது செந்தமிழணங்கிற்கோரணிகலனே.
"கத்தித் திரியுங்கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்குறு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முத்திக்கு மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்
தித்திக்குமெங்கள் திருவத்தியூரரைச் சேர்பவர்க்கே.'' (13)

என்ற இப்பிரபந்தத்தின் இறுதிப்பாசுரம் ஒதியோதி யுணருந்தொறு முணர்ச்சி யுதவும் வேதமொத்தது. இங்ஙனம் அடைவு அமைக்கும் அற்புதனின் ஆற்றலை யாரே அறியகில்லார் ?

திருச்சின்னமாலை.

    “ திருச்சின்னமாலை" என்பது வேதமுடித்தேசிகனார் திரு வாய் மலர்ந்தருளிய ஒரு தனித் தமிழ்ப்பிரபந்தம். இது பதி னொன்று பாசுரங்கள் கொண்டது. 'திருச்சின்னம்' என்னும் வாத்ய விசேஷம் எம்பெருமானுடைய ஸந்நிதிகளில் ஸேவிக் கப் பெறுவதுண்டு. அதன் ஒசையின் காம்பீர்யமும் இனி மையும் ஒப்பற்றன. ஸ்ரீ தேவப்பெருமாளுடைய திருச் சின்ன வாத்யவோசையில் ஒரு நுட்பத்தைக் கண்டார் ஸ்வாமி தேசிகன்.
    இம்மாலையில் உலகம் போற்றும் உத்தமரான தூப்புற் குலமணி, தேவாதி தேவனான பேரருளாளனுடைய யாத்ரோத்ஸவாதிகளில் ஊதப்படுகிற திருச்சின்னத்தின் நாத நலம் இருக்குமிருப்பை அநுஸந்தித்து அகமகிழ்ந்து இது போன்ற நாதவின்பத்தை நல்குமோ இதர தேவதைகளின் பிரயாணகாலத்தில் முழங்கப்பெறும் காஹளாதி வாத்தியங்கள் என்று அநுபவித்து, அந்த அதிமதுரநாதம் மற்றத் தேவதைகட்கு ஸாதாரணமல்லாமையினாலே திருமந்திரம் முதலிய மூன்று இரகசியங்களிற் பொதிந்துள்ள பகவானுடைய அஸாதாரண குணங்களை நிரூபித்து அப்படிப்பட்ட உயர்குணங்களை உடைய பெருமாள் எழுந்தருளினார் என்று காட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி  அருளிச் செய்துள்ளார். ரஹஸ்யார்த்த கர்ப்பமான திருச்சின்ன ஓசையை ப்ரதி பாதிக்கிறபடியினால் இந்நன்னூல் " திருச்சின்னமாலை " என்று பெயர் பெற்றது என்பர். தூப்புலிறை தமது அநுபவ பரீவாஹ மேலீட்டால் திருச்சின்னத்துக்குப் பாமாலை சாத்தி மகிழ்ந்தார் போலும்.

    இது, மன்னு திருமந்திரத்தின் பொருளும், வாழ்துவயத்தின் பொருளும், துன்னுபுகழ்க்கீதை தனிற் சொன்ன வெண்ணான்கின் பொருளும் இன்னபடி என்றுரைக்கும் செய்ய தமிழ் மாலை. இதனுள், முதலாறு பாசுரங்கள் திருமந்திரத்தைப் பிரதிபாதிக்கின்றன. இவற்றின் முதல் மூன்று பாட் டுக்கள் பிரணவார்த்தத்தை வெளியிடுகின்றன. அவற்றுள் ஆதிப்பாட்டு, பிரணவத்தில் அகாரத்தின் அர்த்தத்தை சுருங்கக் கூறுகின்றது. பிரயோஜனாந்தர பரருக்கும் அவன்  ரக்ஷகன் என்பதும், பிரமன் பிரமன் முதலியோரைக்கொண்டு ஜகத் ஸ்ருஷ்டி பண்ணிவைக்கிறபடியினால் அவன் நிமித்த காரணன் என்பதும் இதில் விளக்கம். இரண்டாம் பாட்டு அயனுக்கு அன்று அருமறைகளை உபதேசித்து ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தால் நிமித்த காரணமாகும் பிரகாரமும், சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பித்து மோக்ஷ ப்ரதானமாகிற ரக்ஷண ப்ரகாரமும் கூறுகின்றது. மூன்றாம்பாட்டு அகாரத்தின்மேல் ஏறி லோபித்துக்கிடக்கும் நான்காம் வேற்றுமையையும் உகார மகாரங்களின் அர்த்தங்களையும், வாக்யார்த்தம் இருக்கும்படியையும் விளக்குவன. நான்கு முதல் ஆறு வரையுள்ள பாக்கள் நம: சப்தார்த்தத்தையும், நாராயண சப்தார்த்தத்தையும், சதுர்த்தீவிபக்தியினால் லக்ஷணையாகச் சொல்லப் படுகிற கைங்கர்யமாகிற அர்த்தத்தையும் விளக்குகின்றன.  துவயார்த்தத்தை வெளிக்காட்டுவது ஏழாம் பாட்டு. சரம சுலோகக் கருத்தைச் சுருக்கிக்கூறுவது எட்டாம் பாட்டு. அச்சுலோகத்தில் மாம், அஹம் என்கிற பதங்களிலே ப்ரஸ்துதங்களான பரத்வ ஸௌலப்யாதி குணங்களை அவனுடைய திவ்ய சேஷ்டித முகத்தாலே நிரூபிப்பது ஒன்பதாம் பாட்டு. பத்தாம் பாட்டு அர்ச்சாவதார வைபவத்தைப் பரக்கப் பேசுகின்றது. நிகமனப்பாசுரம் இம்மாலைச்  சுருக்கத்தையும், சங்கதியையும் பேரருளாளன் பிரபாவமான இந்நூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது.
-
இம்மாலையின் இறுதிப்பாசுரமான,
"மறைத்தலையிலிசை யெழுத்தில் வணங்கும் வாக்கில்
    மந்திரத்தினா லெழுத்தாந் திருநாமத்தில்
நிறைத்திலகு வேற்றுமையி லிரண்டாமொன்றி
    னெடுமாறன் கீதையெல்லா நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டுரைத்த பொருளான தெல்லாம்
    உயர் விருத வருளாளப் பெருமாள் தேசின்
திறத்திலிவை திருச்சின்னமாலை பத்துஞ்
    செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையாதார்க்கே." (11)

[மறைத்தலை - வேதமுடி ; இசை எழுத்து - பிரணவம்; மந்திரம் - மூலமந்திரம் ; நாலெழுத்தாந்திருநாமம் - மூலமந்த்ராநு ப்ரவிஷ்டமாய் சதுரக்ஷரமான நாராயண என்பது; இலகு - விளங்குகிற ; வேற்றுமை - நான்காம் வேற்றுமை ; இரண்டாம் ஒன்றில் - கண்டத்வயாத்மகமான துவய மந்திரத்தில் ; நெடுமால் - விபூத்யத்யாய விச்வ! ரூபாத்யாயப் படியே ஸர்வோத் க்ருஷ்டரான கண்ணன்; கீதை - கீதா சாஸ்த்ரம் ; நிறைந்த சொல் - பூர்த்திகரமான சரம சுலோகம்; தேசின் திறத்தில் - தேஜஸ்ஸு விஷயமாக ; இசையாதார்க்கு - ஸம்மதியாதவர்கட்கு ; இனிதாம் - போக்யமாம்.)
என்பது இம்மாலைப் பொருளை அடைவாக அமைத்து அருளியுள்ளதை அங்கைக் கனிபோல அறிவிக்கின்றது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன். -- 3

 திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்

24-09-1944ல்

வெளியிட்ட

15ஆவது நூலான

அடைவு அமைக்கும் அற்புதன்


பகுதி 4


சரம சுலோகச் சுருக்கு. 

கீதோபநிஷத் சாரமான சரம சுலோகம், 

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ! 

அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிமாசுச:"" 

என்பது. 

பரம காருணிகரான தூப்புற் பிள்ளை இச்சுலோக ரத்தினத்தின் அருமையை அனைவரும் அறிந்து அவனியை அமரருலகம் ஆக்கத் திருவுள்ளங்கொண்டு பதினொன்று பாசுரங்கள் கொண்ட "சரம சுலோகச் சுருக்கு" எனும் பிரபந்தம் அருளிச்செய்திருக்கின்றார். இதில் முதற்பாசுரம் சரம சுலோகத்தின் முழுத்தாத்பர்யமும், பின்னுள்ள பத்துப் பாசுரங்களும் முறையே 

1. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய, 2. மாம், 3. ஏகம், 4. சரணம், 5. வ்ரஜ, 6. அஹம், 7. த்வா, 8. ஸர்வ பாபேப்ய:, 9. மோக்ஷயிஷ்யாமி, 10. மாசுச: என்னும் பாகங்களுக்கு வியாக்கியானமுமாக அமைத்துள்ளார் அருமறை முடி அண்ணல்.

''ஸ்ரீ'' சப்தார்த்தம்.

" ஸ்ரீ " என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது. 

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க, 

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று) 

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து, 

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து, 

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற (அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி. 

இவ்விசேடார்த்தங்களை நம் அன்பர் குலச்சிங்கம் ஒரு திருப்பாசுரத்தில் அழகுற அமைக்கும் பெற்றியே பெற்றி. 

அப்பாசுரம் வருமாறு:-

அருவுருவானவை தன்னை 
          யடைந் திடத் தானடைந்து
வருவுரைகேட்டு அவை கேட்பித்து 
               அகற்றும் வினைவிலக்கி
இருதலை யன்பு தனால் எம்மை 
                       யின்னடி சேர்த்தருளும்
திருவுடனே திகழ்வார். சிறந்தா 
                      ரெங்கள் சிந்தையுள்ளே.
                                      -(துவயச்சுருக்கு, 2)

" அருள் தரு மடியவர்பான் மெய்யைவைத்து
        தெருள்தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென
       இருள்செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரையன்ன. நின் திருவுருவில்
      அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க
      அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
       தீண்டியவினைகள் மாண்டிட முயன்று
தன்னடிசேர்ந்த தமருனை யணுக
       நின்னுடன் சேர்ந்து நிற்குநின் திருவே."
                                             --(மும்மணிக்கோவை. 1)

[தெருள் - பூர்ண ஜ்ஞாநம் ; அருள் எனும்சீர் - கிருபை என்கிற கல்யாண குணம் ; ஓர் -- ஒப்பற்ற; அரிவை - பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்); இருள் - அஜ்ஞாநாத்யந்தகாரம் ; செக - நசிக்க ; விளக்கு -- நிரதிசயாநந்த ரூபமான பகவத்ஸ்வரூபம், அபராதாநுகுணமாக தண்டதரனான அவன்படி ஒளிவிளக்கு, பெரிய பிராட்டியின்படி இன்விளக்கு, ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு. ஆகையாலே த்வத்விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ; மணிவரை - மரகதமலை ; திருவுருவில் - திருமேனியில் ; ஆகம் - திருமார்பு; அலங்கலாய் -- மாலையாய் ; இலங்கி - விளங்கி ; நின்படிக்கெல்லாம் - என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ; அன்புடன் - இருதலையன்புதனால்.) என்றும் ;

" வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி
            வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற
         தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன்                                       -                 (அமிருதாசுவாதினி. 8)

என்றும் திருவின் பொருளைத் தெளிவுறத் தெரிவித்துள்ளார் திருவெங்கடேச குரு.

தொடரும்