சனி, 1 ஏப்ரல், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5 களம் 3ன் தொடர்ச்சி

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி விரைந்து வந்து,) இராமச்சந்திரா! இராமச்சந்திரா!

இராமர்:-- (தலைநிமிர்ந்து வசிஷ்டரை நோக்கி நமஸ்கரித்து,) சுவாமீ! என் தந்தைக்கு நான் யமனாக முடிந்தேனே!

வசிஷ்டர்:-- இராமச்சந்திரா! எல்லாம் தெரிந்த நீயே, தந்தை இறந்தாரென்று இவ்வாறு வருந்தினால் மற்றவர் பாடு என்னாகும்? பிறப்பு உண்டானபொழுதே இறப்பு நிச்சயம் என்பதை நீ உணராயா? முன்னம் நீ கற்ற தத்துவ சாஸ்திரங்களெல்லாம் என்னவாயின?

அன்னை யெத்தனை யெத்தனை அன்னையோ,
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ,
பின்னு மெத்தனை யெத்தனை பிறவியோ?

யார் கண்டது? மாறிமாறிச் சுழலும் இப்பிறவிச் சக்கரத்தகப்பட்டு தாறுமாறாயலையும் உயிர்களுக்குத் தனிக்கருணைப் பெருமானாகிய எல்லாம் வல்ல இறைவன் ஒருவனைத் தவிர வேறெவரும் பற்றாகார். இவ்வுண்மையை நீ அறியாயா?

துறத்தலு நல்லறத் துறையு மல்லது
புறத்தொரு துணையிலை பொருந்தி மன்னுயிர்க்
கிறத்தலும் பிறத்தலு மியற்கை யென்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ?

உலகப் பற்றனைத்தையும் துறந்து தர்மநெறி தவறாதிருந்து இறைவன் அடியை அடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன கதி யுள்ளது? அன்றியும் இறப்பதும் பிறப்பதுமே இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கு இயற்கையென்பதை சர்வ சாஸ்திரமுணர்ந்த நீ மறந்து விட்டனையோ?

உன் தந்தை இறந்தது பற்றி வருந்துகிறாயே! இன்னும் எத்தனை நாள் அவர் உயிர் தரித்திருப்பாரென்று கருதுகின்றனை? உலக வழக்கம்போல் அறுபது வருஷமல்ல, நூறு வருஷமல்ல, அறுபதினாயிரம் ஆண்டு உயிரோடிருந்தாரே! இது போதாதா? இங்ஙனம் நெடுங்காலம் உயிர் வாழ்ந்து, அனேக அரசர்களை வென்று, அனேக உயிர்களைக் காப்பாற்றி, அனேக வகையான உலக இன்பங்களை அனுபவித்து, அழியாப் புகழ் பெற்று, அப்புகழைப் போற்றப் புண்ணியப் புதல்வர் நால்வரைப் பெற்று, அவர்களுக்கு மணமுடித்துக் கண்களால் கண்டு களித்துவிட்டு, நரைதிரையுற்று மூப்புக் காலத்தில் முடிவுற்றார். அவ்வாறாக, நீ ஏதோ அவர் அதி இளம்பருவத்திலேயே மரணமுற்றது போல மனமடிகிறாயே! இது நியாயமா? உன் தந்தை உனக்கு மிகவும் இனியவர் என்றதால் காலம் அவரை விட்டொழியுமா? பிருதிவி முதலிய பூதங்களும் அடுக்கழிந்தழியு மென்றால் மனிதர் மாள்வது ஒரு அதிசயமா?

புண்ணிய நறுநெயில் பொருவில் காலமாம்
திண்ணிய திரியினில் விதியென் றீயினில்
எண்ணிய விளக்கவை யிரண்டு மெஞ்சினால்
அண்ணலே யவிதற் கைய மாவதோ?

புண்ணியம் என்னும் நெய் பெய்து காலம் என்னும் திரி இட்டு விதி என்னும் தீயால் எரியும் ஒரு விளக்குக்குச் சமானம் நமதுடல். நெய்யும் திரியும் முடிந்தால் விளக்கவிவது போல வினையும் காலமும் முடிந்தால் இவ்வுடல் வீழ்வதற்குக் கேட்க வேண்டுமோ? இவ்வுலகிலும் துன்பமேயடைந்து, அவ்வுலகிலும் நரகத்திலாழ்ந்து அவதியுறும் பலர் போலன்றி, உனது தந்தை இம்மையிலும் இன்ப வாழ்க்கையுற்றிருந்தார், மறுமையிலும் சொர்க்க வாழ்வை யனுவித்துக் கொண்டிருப்பார். இதைவிட அவர் அடையக் கூடியதுதான் என்ன? நீ எதைக் குறித்து வருந்துகிறாய்? கானற்சலம் போன்று நிலையற்ற இவ்வுடலுக்கோ நீ வருந்துவது? இறந்தாரை எண்ணி அழுதழுது புரண்டவர்களெல்லாம் என்ன பயனை அடைந்தார்கள்? வேண்டாம். வருத்தமொழிந்திரு.

[பரதர் சீதையை நோக்கி, அவள் கொண்டுள்ள தவக்கோலத்தைக் காணப்பொறாது கையை முகத்திலறைந்து கொண்டு அழுகிறார். அவள் பாதங்களில் வீழ்கிறார். இராமர் அவரைத் தூக்குகிறார். சீதை தலைநிமிர்ந் தெழுகிறாள்.]

பரதர்:-- (சீதையை நோக்கி,) மதனீ! பூவினும் மெல்லிய பட்டாடை உடுத்த தங்கள் அருமைத் திருமேனி (கைகேயியைச் சுட்டிக்காட்டி) இந்தப் பாவி கொடுத்த மரவுரியுடுத்து வருந்தவோ நேர்ந்தது! (கண்ணீர் விட்டுப் பொருமுகிறார்.)

இராமர்:-- சீதா! என்னைப் பிரிந்திருக்கப் பொறாமல் எனது தந்தை உயிர் விட்டனராம்.

சீதை:-- என் மாமாவோ இறந்தனர்! (அலறி விழுகிறாள். மீட்டும் எழுகிறாள்.) ஆ, என் செய்வேன்! என்னைப் புத்திரிபோற் பாவித்துப் பக்ஷத்தோடு பாராட்டி வந்த என் மாமாவை இனி என்று காண்பேன்! மாமா, தாங்கள் அயோத்தியிற் க்ஷேமமாக இருக்கின்றீர்கள், பதினான்கு வருஷம் பர்த்தாவுடன் வனவாசஞ் செய்து மீண்டு அயோத்தி செல்லுங்கால் தங்களைக் காணலாமென்று எண்ணி ஏக்க மற்றிருந்தேனே! என் எண்ணம் அவலமாயிற்றே! அந்தோ! ஆ, தெய்வமே! பிராணபதியோடிருப்பதால், நான் வனவாசத்திலும் மனமகிழ்ச்சியோடிருப்ப துனக்குப் பொறுக்கவில்லையோ? எனது அருமை மாமாவைத் திரும்பவும் காணுவேன் என்ற ஓர் உறுதி மட்டும் உளதாயின், பதினான்கு வருஷமல்ல, அதனினும் பதின்மடங்கதிக காலம் என் பிராணபதியோடு விசாரமின்றி வனவாசஞ் செய்வேனே! இனி நான் என் செய்வேன்?

[கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் வருகின்றனர். சீதை கோசலையைக் கண்டு, ‘ஆ, மாமி!’ என்று அலறி விழுகிறாள். கோசலை அவளைத் தூக்கி எடுக்கிறாள். நால்வரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கதறுகின்றனர். சீதை கோசலையை நோக்கி,] மாமி! தங்களை இவ்வமங்கலக்கோலத்தோடு பார்க்கவும் காலம் வந்ததோ! என் அருமை மாமி! என் கண்கள் செய்த பாவமோ?

கோசலை;-- என் கண்மணீ! என் செய்வது? எல்லாம் விதிப் பயன்.

சீதை:-- (கைகேயியை நோக்கி,) மாமீ! தாங்களும் இவ்விதிக்காளானீர்களே! தாங்கள் என்ன செய்வீர்கள்? எங்கள் காலகதி!

[கைகேயி மௌனமாயிருக்கிறாள். சீதை சுமித்திரையை நோக்கி, ‘ஆ, என் இளையமாமீ’ என்று அலறுகிறாள்.]

சுமித்திரை:-- (சீதையை நோக்கி,) அம்மா, சீதா! காலத்தின் கூத்தால் நாம் இக்கோலமானோம். இனி நாம் சென்றவற்றை நினைத்து வருந்தி மனம் நைவதால் ஆவதொன்றில்லை. அவ்வருத்தத்தைப் போக்குவதற்கான வழியைத் தேடவேண்டும். உனது மாமனார் இறந்ததால் நாம் அடையும் வருத்தம் மாறுவதாயிருந்தால், நீயும் இராமனும் மீண்டும் அயோத்தி வருவதைத் தவிர வேறு வழியில்லை.

இராமர்:-- (கோசலை முதலிய மூவரையும் நோக்கி,) அன்னைமீர்! உங்களுடைய மங்கல வாழ்க்கை அமங்கலமாக பாவி யானோ காரணனாயிருந்தேன்.

கோசலை:-- கண்மணீ! நீ பாவியல்ல. விதியின் செயல். மைந்தா! எம் துயரம் ஒருபுறமிருக்க, நமது நாட்டிலுள்ளார் படுந்துயரம் பகரும் திறமல்ல. நீ அயோத்தி வந்தாலொழிய அவர்கள் துயரம் ஆறாது.

(சுமந்திரர் இராமரைப் பரிந்து பார்க்கிறார்]

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி,) மந்திரீ! என் தந்தை இவ்வுலக வாழ்வை ஒழித்துச் சென்றனரோ? (அழுகிறார்.)

சுமந்திரர்:-- இராமமூர்த்தி! தங்கள் தந்தையின் உயிரைப் போக்க நான் யமதூதனாகச் சென்றேன். இப்பொழுது அவர் உயிர் மடிந்ததைத் தங்களுக்கு அறிவிக்க இராஜதூதனாக வந்தேன். நான் எவ்வளவு புண்ணியசாலி பாருங்கள்!

இராமர்:-- (பரதரை நோக்கி,) தம்பி, பரதா! நமது அருமைத் தந்தை இறந்து போயினர். அவர் கட்டளையாவது, நீ முடி புனைந்து நிலமாள வேண்டுமென்பது. அதை நீ கேகய நாட்டிலிருந்து வந்தவுடன் அறிந்திருக்கலாம். அறிந்தும், தந்தை கட்டளையையும் அவர் தரித்திருந்த திருமுடியையும் சிரமேற்கொண்டு அரசு வகிப்பது உனது கடமையாயிருக்க நீ அரசர்க்காகாத இம்மரவுரிக்கோலந் தாங்கிய தெதற்கு?

பரதர்:-- (பெருமூச்சு விட்டு,) அண்ணா! தாங்கள் இங்ஙனம் சொல்வது தர்மமாகுமா? தவக்கோலம் எனக்கன்றித் தங்களுக்குத் தகுதியுள்ளதாகுமா? அரசிற்கு உரிமை மைந்தராகப் பிறந்து, உலகிற்கு நன்மையே புரிந்து, உயிர்களனைத்திற்கும் இனியராய், பழிபாவ மொன்றிற்கும் ஆளாகாத உத்தம புருஷர் தாங்களேயன்றோ? நானோ உற்றாரும் உறவினரும் மற்றாரும் வருந்தப் பெரும்பழி விளைத்த பாதகி வயிற்றிற் பிறந்த பெரும்பாதகன்.

நோவ தாகவிவ் வுலகை நோய்செய்த
பாவ காரியிற் பிறந்த பாவி யேன்
சாவ தோர்கிலேன் தவஞ்செய் வேனலேன்
யாவ னாகியிப் பழிநின் றேறுவேன்?

அங்ஙனம் உலகை வருத்திய பாதகி வயிற்றிற் பிறந்த பாவியேன் இதுவரை உயிர் தரித்திருக்கவும் அருகனல்லேன். ஆயினும் உயிராசை கொண்டு உடல் போற்றி வாழ்கின்றேன். இத்தகைய நான் தவஞ்செய்யவும் பின்வாங்கினால் வேறெவ்வாறு என் பழியைப் போக்குவேன்! தங்கள் அன்னை முதலானோர் நாட்டில் வருந்த, தாங்கள் மதனியோடு இக்காட்டில் வருந்த நேர்ந்தது என்னாலன்றோ? நான் மாதவம் பூண்டாலல்லது என்பழி தீருமோ? சக்கரவர்த்தி மாள, தாங்கள் வனத்திலிருந்து மாதவஞ்செய்ய நான் மண்ணாள்வதோ? நான் மரவுரி தரித்திருப்பது தங்கள் விருப்பமன்றாயின், தாங்கள் திரும்பி அயோத்தி வந்து முடி சூடி இராச்சியம் ஆளுங்கள். அவ்வாறு தாங்கள் செய்யின் தந்தைக்கும் பழி ஏற்படாது. தாயின் வஞ்சகமும் மறையும். நானும் மரவுரி யகற்றித் தங்கள் மலரடிக்குத் தொண்டு செய்துகொண்டு அயோத்தியிற்றானே இருப்பேன்.

இராமர்:-- (பரதரை நோக்கி,) தம்பீ! பரதா, நான் கூறுவதைக் கேள். குலமுறையென்றும், அறத்துறையென்றும் பல நியாயங்களை எடுத்துக் காட்டுகிறாயே யொழிய அவைகளனைத்திற்கும் மேலாவது தந்தை தாயர் மொழி யென்பதை முற்றும் மறந்து விட்டனையே! ‘தந்தை சொன்மிக்க மந்திரமில்லை’ என்னும் ஆன்றோர் உரைகளை நீ அறியாயா? எல்லாக் கேள்வியும், எல்லா ஞானமும், எல்லாச் சீலமும், எல்லா மேன்மையும் இருமுது குரவர்களாகிய தாய் தந்தையரின் வாக்கியத்திற்குப் பிறகுதான். நமது தந்தையின் கட்டளையை விட நமக்கு முக்கியமானது எது? தாயார் வரங்கேட்டனர். தந்தையார் வரப்படி எனக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் இருவரும்கூடி இட்ட கட்டளையை அவர்கள் புதல்வனாகிய நீயே தவிர்க்கலாமோ? புதல்வர்கள் பெற்றோர்க்குப் புகழை நாடியளிப்பதா, பழியைத் தேடி விளைப்பதா? எனது தந்தையைப் பொய்யராக்கி, அதனால் அவர் நரகமடைந்து துன்பமுற நான் நகரிலிருந்து அரசுசெய்து ஆனந்தமடைவதா? தம்பீ, எல்லாவற்றையும் எண்ணிப்பார். உத்தமநெறியாவ தெதுவென்று உனக்கே விளங்கும். நீ சிறிதுகாலம் எனது பிரிவைப்பற்றி வருந்தாது, தந்தையின் கட்டளைப்படி நிலத்தை யாண்டிரு. குறித்த காலமாகிய பதினான்கு வருஷங்களும் கடந்த பிறகு நான் மீண்டும் அயோத்தி வருவேன். அப்பொழுது உனது விருப்பம் எதுவாயினும் அதை நிறைவேற்றுவேன்.

பரதர்:-- அண்ணா! தங்களுடைய வாக்கை வேதவாக்காகக் கொள்ளுகிறேன். ஆனால் தாங்கள் தயைகூர்ந்து சிறுவனாகிய என்னை இராச்சிய உரிமையில் கட்டுப்படுத்தா திருக்க வேண்டுகிறேன். அரசாள்வதற்குரிய உரிமையும் யோக்யதையும் தங்களுக்கே உள்ள தாகையால் தாங்கள் அதை மறுப்பது அழகோ?

இராமர்:-- பரதா! நீ கூறுமாறு அரசு எனக்கே உரியதாயிருக்கட்டும். அதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். அதற்கும் நீ பின்வாங்கலாமோ?

மன்னவ னிருக்க வேயு மணியணி மகுடஞ் சூடு
கென்னயா னியைந்த தன்னானேயது மறுக்க வஞ்சி
அன்னது நினைந்து நீயென் னாணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி யைய துயருழுந் தயர்தல் வேண்டாம்.

எனது செய்கையை எண்ணிப்பார். தந்தையார் என்னை மகுடஞ் சூடிக்கொள்ளுமாறு கூறினரே, அவர் இருக்கும்பொழுது நான் ஏன் அரச பாரத்தை ஏற்கவேண்டும்? ஏற்கவேண்டுவது அவசியமன்றாயினும் தந்தை கட்டளையை மறுத்தல் தகாதென்று ஏற்க இசைந்தேன். அங்ஙனமே, தமையனாகிய எனது கட்டளையை நீ நிறைவேற்றுவதன்றி மறுப்பது தகுமோ?

பரதர்:-- அண்ணா! தாங்கள் அவ்வாறு கூறலாகாது. அடியேன்மீது அருள் கூர்ந்து என்னை இரட்சிக்க வேண்டும். (நமஸ்கரிக்கிறார்) தங்கள் கட்டளைக்கு அடங்கி நான் இராச்சிய பாரத்தை ஏற்றுக் கொண்டாலும், உலகம் அதை ஏற்குமோ?

இராமர்:-- பரதா! தாய் தந்தையர் உரைப்படி நான் பதினான்கு வருஷ காலத்தையும் வனத்திற் போக்கி யல்லது அயோத்தியில் அடிவையேன். நான் உனக்குத் தமையன் என்று நீ கருதி என்மீது பக்தி கொண்டிருப்பது உண்மையானால், என் உரையைத் தட்டாமல் இராச்சிய பாரத்தை ஏற்றுக்கொள்.

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி,) இராமச்சந்திரா! என்னுடைய கட்டுரையையும் சற்றே கேள். உனது குலமோ சாமானியமானதன்று. முன்னாள் தொட்டு இந்நாள் வரையும் மறுவற்ற மாண்போடு மனு முதலாய் வந்த அருங்குலம். இக்குலத்தில் இதுவரைத் தோன்றி வந்த மாமன்னரெல்லாம் முறைதவறாது அரசாண்டு மாபெரும் புகழை இம்மண்ணுலகில் நிறுத்தி மறைந்து போயினர். அவர்கள் வழி வந்த நீ முறைப்படி முடி புனைந்து உன் முன்னோர் புகழைப் போற்றி வருவது உனக்குப் பெரும் புகழும் கடமையுமாகும். ஆதலால் இந்த க்ஷணமே அயோத்தி வந்து அரசுரிமையை ஏற்றுக்கொள். உனது தந்தை கட்டளையை மீறவேண்டுமே யென்று யோசியாதே.

இதவிய லியற்றிய குரவர்யாரினும்
மதவியல் களிற்றினாய் மறுவில் விஞ்சைகள்
பதவிய விருமையும் பயக்கப் பண்பினால்
உதவிய வொருவனே யுயரு மென்பரால்.

தந்தை, தாய், அரசன், குரு, தெய்வம் என்னும் ஐங்குரவரின் ஆணை வழியே நடக்கவேண்டுவதே நெறி. ஆயினும் இவ்வைம்பெரும் குரவருள், இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்லதாகிய கல்வியைப் போதிக்கும் ஆசாரியன் ஒருவனே மற்றை நால்வரினும் உயர்ந்தவனென்பது சர்வ சாஸ்திர சம்மதம். ஆதலால் உனக்கு ஆசாரியனாகிய நான் உன் தந்தை தாயரினும் மேலானவன் என்பதை மறவாது என் சொல்லை நிறைவேற்று.

இராமர்:-- (வசிஷ்டரை நோக்கிக் கைகுவித்து) சுவாமீ! தாங்கள் அவ்வாறு சொல்வது எவ்வாறு பொருந்தும்?

சான்றவ ராகதன் குரவ ராகதாய்
போன்றவ ராகமெய்ப் புதல்வ ராகதான்
தேன்றரு மலருளான் சிறுவ செய்வனென்
றேன்றபி னவ்வுரை மறுக்கு மீட்டதோ.

ஆன்றோராயினுமென்ன? ஞானமூட்டும் ஆசாரியராயினுமென்ன? ஈன்ற தாய் போன்றவராயினுமென்ன? பெற்ற புதல்வராயினுமென்ன? ஒரு காரியத்தைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதைச் செய்யாது விடுவது செம்மை நெறி ஆகுமோ? பிரம புத்திரரே! தாய் விரும்பியது, தந்தை கட்டளையிட்டது. அதை நான் முடிப்பதாக மனமார ஒப்புக்கொண்டேன். அவ்வாறு ஒப்புக் கொண்டதைச் செய்யாவிடின், நாயேன் நாயினும் கடைப்பட்டவனாவேனே!

பரதர்:-- சரி, அயோத்தியின் அரசுரிமையை யாவர் ஏற்கினும் ஏற்கட்டும். எனக்கு அரசு வேண்டாம். தங்களோடு வனத்திலுறைந்து மாதவஞ் செய்வேன்.

(ஆகாயவாணி அந்தரத்தில் மறைந்து நின்று,)

இராமர் தந்தை சொற்படி மாதவம் பூண்டு பதினான்கு வருஷம் வனத்தில் வசிப்பதே சரி. பரதா! நீ அயோத்தியின் அரசுரிமையை ஏற்று பதினான்கு வருஷம் இராச்சிய பரிபாலனம் செய்யக் கடவாய்.

இராமர்:-- (பரதர் கரத்தைப் பற்றி,) தம்பி, பரதா! தருமதேவதையின் ஆணையையும் கேட்டனையா? நமக்கோ, வேறெவர்க்கோ ஒரு பெருநன்மை பயக்கவே இச்சம்பவம் நிகழ்வதாயிற்றென நினைக்கிறேன். அன்றேல் இவ்வாறு ஒரு தெய்வீக வாக்குப் பிறக்கக் காரணம் இல்லை. ஆதலால் நானும் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். நீ அயோத்தி சென்று நான் மீண்டு வருமளவும் அரசு பாரத்தை வகித்துச் செங்கோல் செலுத்திப் பிரஜைகளைப் பரிபாலித்திரு. உனக்குச் சர்வ மங்களமும் உண்டாகக் கடவது.

பரதர்:-- (வாடிய முகத்தோடு தலை தாழ்த்து,) தங்கள் ஆணையும் தெய்வ சம்மதமும் அதுவானால் யான் யாது செயற்பாலேன்? தங்கள் திருவாணையைச் சிரமேற்றாங்கி, யான் செல்கிறேன். ஆனால், யான் கூறுவது ஒன்றுண்டு. தங்கள் திருப்பாதுகைகளை அடியேனிடம் தந்தருளுங்கள். அடியேன் அயோத்திக்கு அருகே வசித்துக் கொண்டு, தங்கள் பாதுகைகளிடம் இராச்சியத்தை ஒப்புவித்து, தாங்கள் கூறியவாறு பதினான்கு வருஷமும் பொறுத்திருப்பேன். பதினான்காவது வருஷத்துக் கடைநாளில், தாங்கள் வந்து முடிசூடிக் கொள்ளாவிட்டால், மறுநாள் உதயத்திலேயே நான் அக்கினி வளர்த்து, பழிக்கும் பாவத்துக்கும் இடமாகிய இவ்வுடலை அக்கினி தேவனுக்கு இரையாக்கி விடுவேன். இது சத்தியம், சத்தியம், சத்தியம்! முக்காலும் சத்தியம்! தங்கள்மீது ஆணை! இது சத்தியம்.

இராமர்:-- தம்பி, நல்லது.

(இராமர் தமது பாதுகையை பரதரிடம் கொடுக்கின்றார். பரதர் அவைகளை வணக்கமாய் வாங்கி, முகத்தில் ஒற்றிச் சிரத்தில் வைத்துக் கொள்கிறார். பிறகு இராமரை நமஸ்கரித்துவிட்டுச் செல்கிறார்.)

தொடரும்.

வெள்ளி, 31 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5  களம் 3

 

மூன்றாங் களம்

இடம்:-- சித்திரகூட பர்வதம்
காலம்:-- பகல்
பாத்திரங்கள்:-- இராமர், இலக்ஷ்மணர், சீதை, பரதர், சத்ருக்நர், வசிஷ்டர், சுமந்திரர், குகன், கோசலை, கைகேயி, சுமித்திரை, மற்றும் சிலர்.

(சித்திரகூட பர்வதத்தின் ஒருபுறத்தில் அமைக்கப் பெற்ற பள்ளி ஒன்றில் இராமரும் சீதையும் அமர்ந்திருக்கின்றனர். இலக்ஷ்மணர் ஒரு புறமாக நின்றுகொண்டிருக்கிறார். மணற்புழுதி ஆகாயத்தில் நிறைந்து வருகிறது. யானைகள் குமுரும் ஒலியும், குதிரைகள் கனைக்கும் சப்தமும், சேனைகளின் ஆரவாரமும் கேட்கப் படுகின்றன)

இலக்ஷ்மணர்:-- (கண்ணைக் கையால் மறைத்துக்கொண்டு)ஆ, இதென்ன புழுதிப்படலம் கண்ணை மறைக்கின்றது! யானை குதிரைகளிடும் ஒலியும் ஆவாரமும் காதைத் துளைக்கின்றன! எவரேனும் மன்னர் யானை சேனையுடன் வருகின்றனரோ? இம்மலையிலேறிப் பார்ப்போம். (மலை மீதேறிப் பார்க்கிறார்.) ஆகா! நாம் நினைத்தது போலவேயிருக்கின்றதே! எவரோ அரசர்தாம் அளவற்ற சேனையோடு வருகின்றனர். ஆனால், இவ்வளவு பெருஞ்சேனை அயோத்தி யரசர்க்கன்றி மற்றெவ் வரசர்க்குண்டு? இல்லையே, ஆதலால் வருவது பரதனாய்த்தான் இருக்கவேண்டும். என்ன அநியாயம்! என்ன தைரியம்! வல்லடி வழக்காக இராஜ்யத்தைக் கவர்ந்துகொண்டது மன்றி, நமதண்ணாவின் மீது படையெடுத்துமோ வருகின்றான், பரதன்! முடிபுனைந்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாய்த் தன் மனத்தில் வைத்திருந்த கொடுங்கருத்தைப் படுநீலியான தனது தாயால் முடித்துக்கொண்ட முழு வஞ்சகனல்லவா அவன்! நன்று. அயோத்தியில் என் வில்லாண்மையைக் காட்டத் தவறிவிட்டேனேயென்று வருந்தினேன். அந்த வருத்தம் நீங்க இங்கு இவ்வருஞ்சமயம் வாய்த்தது. (மலையிலிருந்து குதிக்கிறார். இராமரிடம் ஓடி வருகிறார். இராமர் அவர் வரும் விரைவைக் கண்டு ஆச்சரியத்தோடு அவரைப் பார்க்கிறார். இலக்ஷ்மணர் இராமரை நோக்கி,) அண்ணா, கேட்டீர்களா, சேனைகளின் ஆரவாரத்தை? நம்மை இங்கடைவித்த பரதன் நம்மீது படையெடுத்து வருகிறான். பாருங்கள். (பரபரப்பாக உடைவாளை இடையில் வைத்துக் கட்டுகிறான். அம்பறாத்துணியை முதுகில் வைத்து வரிகிறான். வில்லைக் கையில் ஏந்துகிறான். மீட்டும் இராமரை நோக்கி,) அண்ணா! தங்களை எதிர்க்கும் கருத்தோடு வரும் அந்தப் பரதனது பெருத்த சேனை வலியும், அவனது பருத்த தோள் வலியும், அவன் வளைத்த வில் வலியும் இத்தகையதென்று நான் ஒருத்தனாய் எதிர்த்து நின்றறிகிறேன். அவனது சேனைத் திரளைச் சிதைத்து, யானைச் சிரங்களை அறுத்து, குதிரைச் சிரங்களைத் துணித்து, யாவற்றையும் குவியல் குவியலாய்க் குவித்து, இரத்த வெள்ளத்தில் மிதக்க விடுகிறேன். அண்ணா! அவனது உடலைப் பிளந்து குடலைப் பிடுங்கி எறிகிறேன். அவன் ஏறி நின்று போர் புரியும் தேர்த்தட்டில் பேய்க்கணங்கள் நின்று அவன் உதிரத்தைக் குடித்துக் கூத்தாடுவதை நீங்கள் கண்ணாற் காண்பீர்கள். காளிகளும், கூளிகளும் இரத்தக் கடலில் நீந்தி தங்களெதிரே வந்து “அயோத்திக்கரசர் எங்கள் இராமமூர்த்தியே” என்று கீதம் பாடச் செய்கிறேன். பரதனது சேனையின் இரத்த வெள்ளத்தால் சப்த சமுத்திரங்களும் ஒன்றாகி ஓவென்றலறிச் சப்திப்பது தங்கள் திருச்செவியில் கேட்கச் செய்கிறேன். அவன் ஏறிய தேர் ஒடியவும், ஏந்திய வில் முறியவும், செலுத்திய குதிரைகள் மடியவும் செய்கிறேன். எனது கூரிய அம்புகளால், பரதன் மார்பையும், சத்ருக்நன் மார்பையுந் துளைத்து, அத்துளைகளின் வழியே காட்டுப் பறவைகள் இரத்த பானம் பண்ணும்படிச் செய்கிறேன். ஒரு ஸ்திரீயின்மீது கொண்ட காதலால், அறிவிழந்து அரசர் கொடுத்த நகரை அவன் ஆளுவதற்கு முன், நான் என் அம்பால் அவன் உயிரிழந்து அருநரகை ஆளுமாறு செய்கிறேன். பெற்ற புத்திரனைப் பிரிந்து உற்ற துயரால் கோசலைத் தாயார் உயிர் பதைக்க, கேகயன் மகள் நாட்டைக் கவர்ந்து எக்களிப்படைவதா பார்க்கிறேன்! பட்டங் கட்டிப் பாராள எண்ணியிருக்கும் அப்பரதன் உடல் படுகளத்திற் கிடந்து பதைத்துருளுவதை அப்படுபாவி கண்டு தலைவிரி கோலமாய்ப் பார்மிசை வாழ்ந்து பாடியழுது பரிதவிக்கச் செய்யாவிட்டால் என் ஆண்மைத் திறம் என்னாகும்! அண்ணா! ஏழுலகமும் அவனுக்குத் துணை வரினும் வரட்டும். நான் ஒருவனே, என் கையம்பும் தங்கள் மெய்யன்பும் துணையாகக் கொண்டு அனைவரையும் அழித்தொழித்து உருத்திர மூர்த்தியைப் போல் ஆனந்தத் தாண்டவம் செய்கிறேன்.

இராமர்:-- தம்பீ! பதறாதே. எக்கருமத்தையும் எண்ணித் துணியவேண்டும்.

இலக்குவ வுலகமோ ரேழு மேழுநீ
கலக்குவ னென்பது கருதி னாலது
விலக்குவ தரிதது விளம்பல் வேண்டுமோ
புலக்குரித் தொருபொருள் புகலக் கேட்டியால்.

இலக்ஷ்மணா! நீ முன்கூறிய வனைத்தையும் செய்ய வல்லவன் என்பதிற் சந்தேகமில்லை. ஏழுலகத்தையும் நீ கலக்கப் புகுந்தால் உன்னை விலக்க ஒருவராலும் ஆகாதென்பதைச் சொல்லவுமா வேண்டும்? ஆனால் உன்னைப்போன்ற நிகரற்ற வீரர்கள் எக்கருமத்தையும் நடுவுநிலையுள்ள மனத்தோடு ஆராய்ந்து பிறகு செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பராக்கிரமம் பயன் பெறும். நன்றாய் எண்ணிப் பார். நம்முடைய குலத்து முன்னோர்கள் எவரேனும் நியாய நெறி திறம்பி நடந்தவருண்டா? சூரியகுலத்து வந்த தொல்லோர்களில் எவரேனும் ஒருவரைச் சுட்டி, ‘இவர் இன்னபொழுது இன்னவகையில் நெறி தவறினார்’ என்று கூறமுடியுமா? பரதன் யார்? அந்தப் பழுதற்ற குலத்தில் வந்தவனல்லவா? அவன் எங்ஙனம் நீதி முறை தவறி நடப்பான்? ஒருநாளும் நடவான். அது குறித்து உனக்கு அணுத்துணையும் ஐயம் வேண்டா. வேதம் சொல்லும் நெறியெல்லாம் பரதன் செல்லும் நெறியாம் என்பதை அறி. அவனது அரும் பெருங் குணங்களை அவனுக்குமுன் பிறந்த நான் நன்கறிவேன். அவனுக்குப் பின்பிறந்த நீயும் நன்கறிவாய். ஆனால் என்மீதுள்ள அன்பின் மிகுதியால் உனது உணர்வு தடுமாறி உண்மையை உணரவொட்டாமல் உன்னைத் தடுக்கிறது.

பெருமக னென்வயிற் பிறந்த காதலின்
வருமென நினைகையும் மண்ணை யென்வயின்
தருமென நினைகையுந் தவிரத் தானையால்
பொருமென நினைகையும் புலமைப் பாலதோ?

பெருமை பொருந்திய பரதன் என்னிடத்து வைத்துள்ள அன்பின் பெருக்கால் என்னைப் பார்க்க வருவான்; அல்லது குலத்தில் முன் பிறந்தானே நிலத்தை ஆள வேண்டு மென்ற மரபைக் கருதித் தான் பெற்ற பூமியை என்இடமே சேர்க்க வருவான். அவ்வாறன்றி என்னோடு யுத்தம் புரிய வருவானென்று கருதுவதும் அறிவுடையார்க்கடுக்குமா? அயோத்தியில் எனக்கு முடிபுனைய நாள் குறித்த காலத்திலும் அதற்குப்பின் நேர்ந்த சம்பவங்கள் நிகழ்ந்த காலத்திலும் பரதன் அயோத்தியில் இல்லை என்பதை நீ அறிவை. ஆதலால் அவன் கேகய நாட்டினின்றும் திரும்பி அயோத்தி வந்தபிறகே நடந்தத்தனையும் அறிந்திருக்கக் கூடும். அங்ஙனம் அறிந்த பிறகு யான் வனஞ் சென்றது குறித்து வருந்தி என்னை மீட்டும் அயோத்திக் கழைத்துச்சென்று முடி சூட்டுவிக்கலாம் என்று கருதி வரலாகாதா? இன்றேல் வேறு எக்காரணத்தால் அவன் இங்கு வரக்கூடும்? அவன் முடிசூடிக் கொள்வதை நாம் தடுத்திருந்தால் நம்மை எதிர்த்து வருகிறானென் றெண்ணுதல் கூடும். அவ்வாறில்லை. ஆதலால், பலர்கூடி மன்றாடிப் பலவந்தமாய் என்னைஅயோத்திக் கழைத்தால் நான் மனமிரங்கி வந்துவிடுவேனென்று கருதி குடிபடைகளோடு வருகிறான் போலிருக்கிறது. இவைகளை யோசியாமல் நீ அவன் என்னோடு யுத்தம் புரிய வருகிறனென்று கொண்டு மெத்தக் கோபிக்கின்றனையே! இது நியாயமா? சற்றே பொறுத்துப் பார். நான் சொல்வதின் உண்மை விளங்கும். இதோ அவனும் நெருங்கி வந்துவிட்டான் போலிருக்கிறது.

{பரதரும் சத்ருக்நரும் கூப்பிய கரத்தராய், அதிவேகமாய் ஸ்ரீராமரை நோக்கி வருகின்றனர். அவர்களுக்குப் பின்னே குடிபடைகள் கூட்டமிட்டு வருகின்றனர். இராமர் பரதரையும் சத்ருக்நரையும் கூர்ந்து நோக்குகின்றார். அவர்களிருவரும் கண்ணீர் வடித்து முகம் வாடி வருவதைக் காண்கிறார்}

இராமர்:-- (இலக்ஷ்மணரை நோக்கி,) தம்பீ! சேனையைக் கண்டு நீ சீறிச் சினந்தனையே! பரதன் வரும் போர்க்கோலத்தைப் பார்.

(பரதரும், சத்ருக்நரும், இராமரண்டை வந்து அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகின்றனர். சீதை சற்று தூரத்தில் வேறெதையோ கவனித்துக் கொண்டிருக்கிறாள். இராமர் அவர்களைக் கையாலெடுத் தணைத்து அவர்கள் மேனியைக் கூர்ந்து கனிந்து பார்க்கின்றனர்.)

பரதர்:-- (இராமரை நோக்கி,) அண்ணா! தங்களுக்கு இது தர்மமாகுமா? தாங்கள் கருணையை இங்ஙனம் கைவிடலாகுமோ? குலமுறையைக் குலைக்கலாமோ?

இராமர்:-- தம்பி, பரதா! என்ன கோலம் கொண்டுள்ளனை! இது உனக்கேற்ற கோலமல்ல. கேகய நாட்டிலிருந்து எப்பொழுது வந்தனை? அயோத்தியில் யாவரும் க்ஷேமமா? தந்தையார் சௌக்கியமாயிருக்கின்றனரா? அதை முன்கூறு.

பரதர்:-- அண்ணா! என் சொல்வேன்? தங்கள் பிரிவென்னும் பிணி மிகுந்து, என்னைப் பெற்றவள் கேட்ட வரமென்னும் வெய்ய கால பாசத்தா லிழுப்புண்டு, நமது தந்தையார் விண்ணுலகடைந்துவிட்டார்.

இராமர்:-- ஆ! தந்தை இறந்தோ போயினர்! ஏ, ஜகதீசா!

[சோகித்து வீழ்கிறார். சீதையும் கீழே வீழ்கிறாள். இலக்ஷ்மணர் அவரைத் தூக்கி இருத்துகிறார். இராமர் சற்றுநேரம் தலையைக் கையிற்றாங்கி, நிலத்தை நோக்கி நெடுமூச்செறிகிறார். பிறகு,]

இராமர்:-- தந்தாய்! தமியேமை விட்டு எவ்வாறு சென்றீர்! அந்தோ!

நந்தா விளக்கனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் இகல்வேந்த ரேறே யிறந்தனையே
அந்தோ வினிவாய்மைக் காருளரே மற்றையர்.

தூண்டா விளக்கனையாய்! எம் தலைவா! உலகிற்கெல்லாம் தந்தை போல்வாய்! தர்மத்திற்குத் தாய் போல்வாய். தயைக்கிருப்பிடமே! தரணியாள் வேந்தர்க்கெல்லாம் வேந்தே! தாங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றீர்களே! இனி சத்தியத்திற்குற்ற துணையாவர் யாருளர்? தங்கள் நான் இனி என்று காண்பேன்? தவத்தாற் சிறந்து தூயோர் உரைப்படி வேள்வி செய்து என்னைப் பெற்றுத் தாங்கள் பெற்ற பலன், தங்கள் ஆருயிரை இழந்ததுதானோ? இந்தப் பூபாரத்தை நான் சுமக்கக் கொடுத்துத் தாங்கள் இளைப்பாறும் வகை இதுவோ? தங்களுக்கு யமனாகவோ நான் தங்கள் முதல் புதல்வனாய் உதித்தேன்!

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டு
கானடைந்தே னென்னத் தரியாது காவலநீ
வானடைந்தாய் நானின்னு மிருந்தேனிவ் வாழ்வுகந்தே
ஊனடைந்த தெவ்வர் உயிரடைந்த வெள்வேலோய்

அயோத்தியை விட்டு நான் அரணியம் வந்ததற்காற்றாது உயிர் நீத்தீர்களே! யான் இன்னும் இவ்வுலக வாழ்க்கையை விரும்பி உயிர் தரித்திருக்கிறேனே! ஆ! என்ன கொடுமை!

[மயங்கி வீழ்கிறார். பரதர் அவரைத் தூக்கி எடுக்கிறார். வசிஷ்டர் முதலியோர் வருகின்றனர்]

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி விரைந்து வந்து,) இராமச்சந்திரா! இராமச்சந்திரா!

இராமர்:-- (தலைநிமிர்ந்து வசிஷ்டரை நோக்கி நமஸ்கரித்து,) சுவாமீ! என் தந்தைக்கு நான் யமனாக முடிந்தேனே!

புதன், 29 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5

இரண்டாங் களம்.

இடம்: கங்கைக்கரை
காலம் காலை
பாத்திரங்கள்: பரதர், சத்ருக்நர், சுமந்திரர், கோசலை, கைகேயி, சுமித்திரை.

(பரதரும் சத்ருக்நரும் இராமர் சென்ற திசையை நோக்கி, அஞ்சலி செய்தபடி நிற்கிறார்கள். சுமந்திரர் அவர்களைநோக்கி வருகின்றார்.)

பரதர்:-- (சுமந்திரரை நோக்கி) மந்திரீ! கண்டறிந்து வந்தீரா?

சுமந்திரர்:-- ஆம், அறிந்து வந்தேன்.

கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவ னுயர்தோளான்
வெங்கரியி னேறனையான் விற்பிடித்த வேலையினான்
கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னுங் குறியுடையான்.

அவன் இக்கங்கையின் இரு கரைகளையும் தனக்குச் சொந்தமாகக் கொண்டவன்.அளவில்லாக் கப்பல்களையுடையவன். வேடுவர்க் கெல்லாம் அரசனாயுள்ளவன். மிகுந்த பல பராக்கிரமுடையவன். கங்கையில் போவார் வருவார்க்கு ஓடம் விடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளவன். மேலும் இராமமூர்த்திக்கு நெருங்கிய நேசமுடையவனாம். தங்களைப் பார்க்கவேண்டியே வருகிறானாம்.

பரதர்:-- அப்படியா! இராமண்ணாவுக்கு உயிர்த் தோழனா? ஆயின் நானே அவனை எதிர்சென்று பார்க்கிறேன்.

(பரதர் முன்செல்கிறார். குகன் அவரை எதிர்கொண்டு வந்து பாதத்தில் வீழ்கிறான். பரதர் தலை தாழ்த்தி அவனை வணங்குகிறார்.)

குகன்: -- (பரதரை நோக்கி) ஐயா! தாங்கள் இத் தவ வேடத்தோடு இங்கெழுந்தருளியது எதன் பொருட்டோ?

பரதர்:-- நண்பரே! காலத்தின் கோலத்துக்கோர் கணக்குண்டோ? அறுபதினாயிர வருஷம் அறநெறி வழுவா தரசாண்ட எமது தந்தை, ஏதோ கால விபரீதத்தால், தலைமுறை தலைமுறையாக வரும் குலநெறியினின்றும் நழுவிவிட்டார். அதை மறுபடியும் செம்மைப்படுத்த வேண்டி எம் அண்ணல் ரகுநாதரை அழைத்துப்போக வந்தேன்.

குகன்(பரதரது பாதங்களில் மறுபடியும் வீழ்ந்து எழுந்து) ஐயா! குலங்களுட் சிறந்தது சூரிய குலம். அங்ஙனம் தலைமுறை தலைமுறையாய்ச் சிறந்துவரும் உங்கள் குலத்தின் பெருங்குணங்களெல்லாம் ஒருங்கு திரண்டு ஓர் உருவெடுத்து வந்த தங்களது அருங்குணத்தின் மாட்சியை அடியேன் என்னென்று புகழ்வேன்!

தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை யென்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிர மிராமர் நின்கே ளாவரோ தெரியி லம்மா?

தாயார் விருப்புற்றுக்கேட்க தந்தையார் ஒருப்பட்டுத் தங்களுக்கு இத்தரணியைக் கொடுத்தார். அங்ஙனம் வலிய வந்த பெருநிலத்தைப் பெறுவது நெறியன்றென்று நீக்கி, அண்ணன் அரசைவிட்டு அரணியமடைந்ததை எண்ணி மனம் வாடி, அவரைத்தேடிப் புறப்பட்டு வந்துள்ளீர்களே! தங்கள் பெருந்தன்மையைக் கருதுமிடத்து ஆயிரம் இராமர் கூடினும் தங்களுக்கு இணையாவாரோ? ஆகார், ஆகார். ஐயா! தங்கள் புகழை விரித்துரைப்பதற்குத் திருத்தமில்லாத மனத்தினராகிய வேடுவர் குலத்தில் வந்த என் ஒருத்தனாலாகுமோ! சூரியனது பேரொளிக்குமுன் மற்ற சிற்றொளிகள் மறைந்தொழிவதுபோலத் தங்கள் முன்னோர் புகழ்களெல்லாம் தங்களது பெரும் புகழில் மறைபட்டு நிற்குமேயன்றிச் சிறிதேனும் தலைகாட்டுமோ? இராமபிரான் எனக்குத் தோழராய்க் கிடைத்தது யான் செய்த புண்ணியமே. அவருக்குத் தாங்கள் தம்பியாய்ப் பிறந்தது அவர் செய்த தவமே! அடியேனால் தங்களுக்கு ஆகவேண்டியதேதேனு முளதேல் திருவாய் மலர்ந்தருள்வீர்களானால், தலையாற் செய்யக் காத்திருக்கிறேன்.

பரதர்:-- அன்ப! என் அண்ணன் இவ்வழியே வந்தபோது எங்கு தங்கினார்?

குகன்:-- (ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி,) அதோ, ஒரு கல் கிடக்கின்றதே அவ்விடத்தில்தான் அக்கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு பசும்புல்லின் மீது படுக்கை கொண்டார்.

பரதர்:-- (முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு,) அந்தோ! அண்ணா! இவைகளையெல்லாம், என் கண்ணாற்காண யான் என்ன பாவஞ் செய்தேனோ? பஞ்சணைமீது துயில அமைந்த தங்கள் அருமைத்திருமேனி இங்ஙனமோ வருத்தமெய்தலாயிற்று!

இயன்றதென் பொருட்டி னாலிவ் விடருனக்கென்றபோழ்தும்
அயின்றனை கிழங்குங் காயு மமிர்தென வரிய புல்லில்
துயின்றனை யெனவு மாவி துறந்திலன் சுடருங் காசுங்
குயின்றுயர் மகுடஞ் சூடுஞ் செல்வமுங் கொள்வென் யானே.

என்னால் தங்களுக்கு இவ்வின்னல் உண்டாயிற்று, என்பதை அறிந்தும், காட்டுக் கனி கிழங்குகளை உணவாக உண்டீர்கள் என்பது தெரிந்தும், புல்லிற் படுத்து நித்திரை புரிந்தீர்கள் என்பதுணர்ந்தும் உயிர்துறக்காதிருக்கின்றேனே பாவியேன்! இத்தகைய கடின சித்தமுடைய யான் ஒருக்கால் என் அன்னை சம்பாதித்துள்ள இராச்சியத்தைப்பெற்று முடி புனைந்து கொண்டாலும் கொள்வேன். என்ன விபரீதம்! என்னவிபரீதம்! (குகனை நோக்கி,) நண்பா! இந்தப் புற்றரையில், கொற்றவர் கண் துயின்ற காலை, அவரோடுடனிருக்கப் பாக்கியம் பெற்ற இளையவர் யாது செய்தார்?

குகன்:-- ஐயா!

அல்லையாண் டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லையூன் றியகை யோடும் வெய்துயிர்ப் போடும் வீரன்
கல்லையாண் டுயர்ந்த தோளாய் கண்கணீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவு நின்றா னிமைப்பிலன் நயன மையா.

சாமளவண்ணர் தமது தாமரைக் கண்மூடித் துயில் கொண்டிருப்ப, அவரருகே பிராட்டியாரும் படுத்துக் கண்ணுறங்கினார். அப்போது, இளையபெருமாள், வில்லேந்திய கையோடு, அடிக்கடி பெருமூச்செறிந்து, கண்ணீர் சொரியப் பொழுது விடியுமளவும், இமை கொட்டாது நின்று அவர்களுக்குக் காவல் புரிந்தனர்.

பரதர்:-- ஆ, அப்படியா! இலக்ஷ்மணன் பெற்ற பேறே பேறு! அவ் பக்தியின் பெருமையே பெருமை! என்ன ஆச்சரியம்! அன்பு! இராம பிரானுக்கு யானும் சகோதரன், இலக்ஷ்மணனும் சகோதரன். ஆனால் எங்களிருவருக்குமுள்ள பேதத்தைப் பார். ரகுநாதருக்கு நான் துன்பத்தை ஆக்குபவனானேன். ஆனால், அவனோ, அந்தத் துன்பத்தைப் போக்குபவனானான். என் அண்ணற்கு யான் செய்யும் அடிமைத்தனம் எவ்வளவு அழகாயிருக்கின்றது பார்த்தனையா! நல்லது, நண்பா! நீ எங்களை ஓடத்தில் ஏற்றி அக்கரை சேர்ப்பாயானால், எம்மைத் துன்ப சாகரத்தினின்று கரையேற்றி இராமபிரானிடம் சேர்த்தது போலாகும்.

குகன்:-- ஆகா, அப்படியே செய்கிறேன். (கோசலையைச் சுட்டிக்காட்டி,) இந்தப் பெருமாட்டி யாவரோ? திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்.

பரதர்;- இவரா!

சுற்றத்தார் தேவரொடும் தொழநிற்குந் தூயாளைத் தொழுது நோக்கும்
வெற்றித்தார் மன்னவிவ ளாரென்று வினவுதியேல் வேந்தர் வைகும்
முற்றத்தான் முதற்றேவி மூன்றுலகு மீன்றானை முன்னீன் றானைப்
பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான்பிறத்த லாற்றுறந்த பெரியா ளையா.

உற்றாரும் உறவினரும் அடிவணங்க நிற்கும் இவர் யாரென்னிற் கூறுகின்றேன் கேள்! அயோத்தி அரண்மனையில் சக்கரவர்த்திக்குப் பட்டத்துத் தேவிமார் மூவர்க்குள் முதன்மை பெற்றவர். மூவுலகையும் ஈன்ற நான்முகனை உந்திக் கமலத்தில் தோற்றுவித்த பரந்தாமனை யொத்த இராமபிரானை, மணிவயிற்றிற் சுமந்து பெற்றவர். அங்ஙனம் பெற்ற புதல்வரால் தாம் பெறவேண்டிய பெருஞ் செல்வத்தை யான் பிறந்ததால் இழந்தவர். இவரே கோசலா தேவியார்.

குகன்:-- ஆ, அப்படியா! (கோசலையின் பாதங்களில் வீழ்ந்து பணிகிறான்.)

கோசலை:-- கண்மணீ, பரதா! இது யார்?

பரதர்:-- அம்மணீ! இவர் இராமண்ணாவுக்கும், இலக்ஷ்மணர்க்கும், சத்ருக்நருக்கும், எனக்கும் மூத்த அருமைச் சகோதரராவார். இராமரிடத்து மிகுந்த பக்தி பூண்டவர். குகன் என்ற நாமங்கொண்டவர்.

கோசலை:- பரதா! உனக்கினி யென்ன வருத்தம்? உன் தமையன் காட்டிற்குப் போனதும் ஒரு நன்மையாகத்தான் முடிந்தது. இல்லா விட்டால், இந்த அன்பமைந்த தோழன் கிடைப்பானா? மைந்தா! நீங்கள் நால்வரும் இவனோடு ஐவராகி, ஆயுராரோக்கிய திடகாத்திரராய் நெடுநாள் வாழ்ந்து இவ்விராச்சியத்தை ஆண்டிருங்கள்.

குகன்;-- (சுமித்திரையைக் காட்டி,) இவ்வம்மை யாவரோ?

பரதர்:-- அன்ப, இவர் எனது சிற்றன்னை. நாங்கள் தொழும் தெய்வமாகிய இராமண்ணாவோடு, இணை பிரியாது, அன்பு பூண்டு, இரவும் பகலும் இமை கொட்டாது அவரைக் காத்து நிற்கின்றானே இலக்ஷ்மணன், அந்த பாக்கியவானைப் பெற்ற பெருஞ் செல்வியார். சுமித்திராதேவியார் என்னும் திருநாமத்தோடு கூடியவர்.

குகன்:-- (கைகேயியைச் சுட்டிக்காட்டி,) இவர்?

பரதர்:-- இவரா?

படரெலாம் படைத்தாளைப் பழிவளர்க்குஞ்
செவிலியைத்தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கு
முயிர்ப்பாரம் குறைந்து தேய
உடரெலா முயிரிலா வெனத் தோன்றும்
உலகத்தே யொருத்தி யன்றே
இடரிலா முகத்தாளை அறிந்திலையோ
இந்நின்றா ளென்னை யீன்றாள்.

இப்புண்ணியவதியை உனக்குத் தெரியாதா? தன் கணவனை யமலோகத்திற்புகுத்தி, தன் புதல்வனைத் துயர்க்கடலில் அழுத்தி, தர்ம சொரூபியான இராம பிரானைக் கானகத்திற்குத் துரத்தியவள் இவள்தான். முன்னாள், திருமால் மூவடியாலளந்த இவ்வுலகத்தைத் தன் மனத்தில் நினைத்துச் செய்யும் கொடுமையால் அளவிடும் வன்மாயக்கள்ளி இவள்தான். துன்பத்திற்கு மூலகாரணமான துர்த்தேவதை இவள்தான். பழியை வளர்க்கும் செவிலி இவள்தான். தன் பாழுங்கும்பியில் நெடுங்காலம் என்னை உழல வைத்திருந்த நீலி இவள் தான். உலகத்தில் உயிரற்ற உடலோடு நடைப்பிணமாகத் திரிபவள் இவள்தான். என்னைப் பெற்ற பெரும் பாவி இவள்தான். ‘கல்லும் வல்லிரும்பும் வெண்ணெ யென்றுரைப்பக் காழ்படு மனத்த’ கைகேயி இவள்தான்.

குகன்:-- (காதுகளைப் பொத்திக்கொண்டு,) ஆ, ஆ! கர்ண கடூரமான இம்மொழிகளைக் கோட்கவும், இக்காட்சியைப் பார்க்கவும், நான் என்ன பாவஞ் செய்தேனோ? சுவாமீ! ஓடம் தயாராயிருக்கிறது. எல்லோரும் ஏறலாம். (போகிறார்கள்)

செவ்வாய், 28 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்


இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம் 


அங்கம் 2 களம் 3



இரண்டாங் களம்
இடம்: கங்கைக்கரையில் ஓடத்துறை
காலம்: காலை
பாத்திரங்கள்: இராமர், இலக்ஷ்மணர், குகன், சீதை

(இராமர், இலக்ஷ்மணர், சீதை மூவரும் ஓடத்துள் அமர்ந்திருக்கின்றனர். குகன் ஓடந்தள்ளுகிறான். சீதை இராமர் தோளைக் கட்டிக்கொண்டு பின்புறத்தில் இருக்கிறாள்.)
இராமர்: (குகனைப் பார்த்து) அன்ப! சீதை ஒருபொழுதும் ஓடத்திலேறிப் பழகாதவள். தலைமயக்குற்றிருக்கிறாள். ஓடத்தை சற்றே மெதுவாகச் செலுத்து.
குகன்: சுவாமீ, அலை அதிகமாயிருப்பதால் ஓடம் என்னுடைய கட்டுக்கடங்காமல் அதிகமாய் ஆடுகிறது. இன்னும் சற்று நேரத்தில் காற்று அடங்கி விடும். அலையும் ஓய்ந்துவிடும். அப்பால் ஓடம் அதிகமாய் ஆடாது.
இராமர்: (சீதையின் புறமாகத் திரும்பி) இப்பொழுது ஆட்டம் அதிகமாயில்லை, சீதா! கண் விழித்துப்பார். அலைகள் நதியில் எவ்வளவு அமைதியாய் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய்க் காணப்படுகின்றன. கரை சமீபித்துவிட்டது. பார்த்தனையா?
(சீதை கண்விழித்துப் பார்க்கிறாள். யாவரும் கரையில் இறங்குகிறார்கள்.)
இராமர்: (குகனைப் பார்த்து) அன்ப, உன்னுடைய அன்பார்ந்த உதவியால் இக்கரை வந்து சேர்ந்தோம். உனக்கு மங்களம் உண்டாகட்டும். நாங்கள் இனிச் சித்திரகூட பர்வதம் போகவேண்டும். அதற்கு வழியைக் காட்டிவிட்டு நீ உன் இருப்பிடம் போகலாம்.
குகன்: சுவாமீ! சித்திரகூடத்துக்கு வழிகாட்டச் சித்தமாயுள்ளேன். அதற்குமுன் அடியேன் செய்துகொள்ளும் விண்ணப்பம் ஒன்றுண்டு.

பொய்ம்முறை யிலரேமெம் புகலிடம் வனமேயால்
கொய்ம்முறை யுறுதாராய் குறைவிலெம் வலியேமால்
செய்ம்முறை குற்றேவல் செய்குது மடியோமை
இம்முறை யுறவென்ன வினிதிரு நெடிதெம்மூர்.

யாங்கள் வேடராயினும் சத்தியநெறி தவறோம். வனமே எங்களுக்கு வாசஸ்தலம். எங்களுக்கு தேகபலமும் படை வலியும் மிகுதியுமுண்டு. ஆதலால் தாங்கள் நினைப்பன யாவையும் நிறைவேற்றித் தங்களுக்குக் குற்றேவல் செய்ய ஏற்றவர்களாவோம். தங்களுக்கு ஒரு விஷயத்திலும் குறை நேராது. உணவுக்கு இனிய தேனும் தினையும் மீனும் விசேஷமாகக் கிடைக்கும். துணை நாங்கள் இருக்கின்றோம். தேவியார் பொழுதுபோக்காக விளையாடுவதற்கும் பலவளங்களும் சிறந்து பரந்த இவ் வனம் மிக உத்தமமான இடம். நீராடவோ நதிகளுக்குட்சிறந்த கங்கைமாநதியே அருகில் உள்ளது. உடுப்பதற்குப் பட்டாடைபோல மெல்லிய தோல்கள் மிகுதியும் உண்டு. தங்கள் திருச்சயனத்திற்கு சப்ரகூட மஞ்சம்போல் அழகாகப் பரண் அமைத்துத் தருகின்றேன். வேறு தங்களுக்குத் தேவையான பொருள்களைத் திருவாய் மலர்ந்தருளுவீர்களானால், வேகமாய் ஓடவல்ல கால்களும் வில்லேந்திய கைகளுமுள்ளன. ஒரு நொடியில் ஓடி வானத்தின் மேலுள்ளனவாயினும் கொண்டு வந்தளிப்பேன். தேவர்களினும் வலியவராய வேடர் ஆயிரக்கணக்கா யுள்ளனர். அவர்களனைவரும் தங்கள் திருக்கட்டளைகளை நிறைவேற்றச் சித்தமாயிருக்கின்றனர். தாங்கள் தயை கூர்ந்து எளியோமுடைய குடிலுக் கெழுந்தருள்வீர்களானால் அடியோம் உய்ந்தவராவோம். அதைவிட மேலான வாழ்வு எங்களுக்கு வேறில்லை. திருவுளங்கூரவேண்டும்.
இராமர்: (புன்னகை புரிந்து), அன்ப! யாம் விரதம் பூண்டு மாதவஞ் செய்ய வனத்திற்குப் புறப்பட்டோம். வனவாச விரதம் பூண்டோர் ஓர் இடத்தில் நிலையாய் வசிப்பது கூடாது. ஆதலால் யாங்கள் எமது விரத நெறிப்படி சென்று, புண்ணிய நதிகளில் நீராடி, மாதவரை வழிபட்டுச் சில வருஷங்களில் திரும்பி வருவோம். அப்போது உனது இல்லத்தில் சில நாள் தங்குவோம். ஆதலால் இப்பொழுது நாங்கள் செல்வது பற்றி வருந்தாதே.
குகன்: தங்கள் திருவுளம் அதுவானால் அப்படியே ஆகட்டும்.

திருவுளமெனின் மற்றென் சேனையு முடனேகொண்
டொருவலெ னிருபோது முறைகுவெ னுளரானார்
மருவல ரெனின் முன்னே மாள்குவென் வசையில்லேன்
பொருவரு மணிமார்பா போதுவெ னுடனையா.

உத்தரவானால் அடியேன் எனது சேனையோடு தங்களுடன் வந்து தங்களை விட்டு அகலாதிருப்பேன். தங்களுக்கு முன் வருவார் தங்கள் திருவடிச் சேவைக்கு வருவாரே யன்றி தங்களோடு பகைமை கொண்டு வாரார். ஒருகால் பகைவர் எவரேனும் வருவாராயின் என் உயிரைக் கொடுத்தாயினும் அவர்கள் தங்களை அணுகவொட்டாமற் செய்து பெரும்புகழ் பெறுவேன். தங்களோடு வருவதற்கு மட்டும் அடியேனுக்கு உத்தரவு கொடுங்கள்.

இராமர்: நண்ப! நீ என் ஆருயிரனையவன்; என் தம்பி இலக்ஷ்மணன் உனது தம்பி; சீதை உன் கொழுந்தி; எனக்குள்ள இராச்சியமெல்லாம் உன்னுடையது; உனக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை யென்பதை அறி. மேலும்,

துன்புள தெனினன்றோ சுகமுள ததுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுள தெனவுன்னேல்
முன்புளெ மொருநால்வே முடிவுள தெனவுன்னா
அன்புள வினிநாமோ ரைவர்க ளுளரானோம்.

துன்பமில்லாமல் இன்பம் இராது. பிரிவுதான் சுகத்துக்கு மூலம். ஆதலால் எங்களைப் பிரிவதற்குப் பின்வாங்காதே. மேலும் இதுவரை நாங்கள் சகோதரர் நால்வராயிருந்தோம். இப்பொழுது உன்னோடு நாம் ஐவர் சகோதரராயினோம். உன் உறவினரெல்லாம் எனக்கு உறவினரல்லவா? அயோத்தியில் நமது பந்துக்களைப் பாதுகாக்கத் தம்பி பரதனை வைத்து வந்தேன். இவ்விடத்திலுள்ள நமது பந்துக்களைப் பாதுகாக்க உன்னையன்றி வேறு யாரை வைத்துப் போவேன்? ஆதலால் நீ இங்குதானே நமது சுற்றத்தாரைக் காத்துக் கொண்டிரு. என் சொல்லைக் கடவாதே. நாங்கள் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லுங்கால் உன்னோடு தங்கிச் செல்வோம்.

குகன்: சித்தம்.
(இராமன் முதலிய யாவரும் புறப்பட்டுச் செல்கின்றனர்.)