செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

 

நாட்டேரி ஸ்வாமி வழங்கும்

“சொல்லாமல் சொன்ன இராமாயணம் “

26-09-2016 அன்று நடந்த

54 ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/download/cqw9dehn0i5qqh3/055_SSR_(26-09-2016)_00_09_15-01_23_45.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkknXSzu572sloqCDv

திங்கள், 26 செப்டம்பர், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

 

எட்டாங் களம்

இடம் : சீதையின் அந்தப்புரம்

காலம்: நண்பகல்

பாத்திரங்கள்: இராமர், இலக்ஷ்மணர், சீதை

(சீதை ஓர் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இராமர், இலக்ஷ்மணர் பின்தொடர வருகிறார். சீதை அவரைக்கண்டு எழுந்து எதிர் செல்கிறாள்)

சீதை: (தனக்குள்) இதென்ன, என் பிராணபதி முகவாட்டத்தோடு வருகின்றார்! ஏதோ விசேஷம் தெரியவில்லை. கேட்டறிவோம். (இராமரைப் பார்த்து) பிராணபதீ! என்ன விசேஷம்? பட்டாபிஷேக காலமாகிவிட்டதே! தங்கள் சுந்தர வதனம் வாட்டமுற்றிருப்பதேன்? தங்களுக்கு இருபுறமும் சாமரை ஏன் வீசப்படவில்லை? சந்திரவட்டக்குடை சிரசின் மேல் ஏன் விளங்கவில்லை? தங்கள் கட்டளைப்படி சுமந்திரர் நீலக்கல் ஒன்றைப் பதக்கத்தில் பதித்துக் கொண்டுவந்து கொடுத்தார். பட்டாபிஷேக சமயத்தில் தரித்துக்கொள்ளலாமென்று வைத்திருக்கிறேன். பட்டாபிஷே முகூர்த்தம் கடந்துவிட்டது போலிருக்கிறதே! பட்டாபிஷேகத்திற்குரிய ஆரவாரம் ஒன்றையுங் காணேனே. எனக்குத் தெரியாமல் தங்களுக்குப் பட்டாபிஷேகமாய்விட்டதா? அப்படியானால் அதற்கேற்ற கோலங்கள் தங்களிடத்துக் காணப்படவில்லையே? அடியாளுக்கொன்றுந் தோன்றவில்லை. ஒருகால் மகுடாபிஷேக நாளை மாற்றி வைத்துவிட்டார்களா?

இராமர்: - ஆம் சீதா! எனது பட்டாபிஷேக தினத்தை மாற்றிவைத்துவிட்டார்கள்.

சீதை:-- அப்படியா? என்றைக்கு மாற்றிவைத்துள்ளார்கள்?

இராமர்:-- பதினான்கு வருஷங்கள் முடிந்தபிறகு.

சீதை:-- ஆ! அவ்வளவு காலம் எட்டியா வைத்துவிட்டார்கள்? நல்லதுதான். அதுவரையில் மாமா அவர்களே ஆண்டுவருவார்கள் போலிருக்கிறது

இராமர்:-- இல்லை, ஜானகீ! அதுவரையில் உனது கொழுந்தன் பரதன் அரசாள்வான்.

சீதை:-- ஆனால் சரி. நாம் இதுவரையில் இருந்ததுபோல் இன்னும் பதினான்கு வருஷகாலம் இருக்கலாம். தாங்கள் என்னைவிட்டுப் பிரியாதிருக்கின், பதினான்கு வருஷமல்ல, அதற்குமேல் எத்தனை வருஷ காலம் பொறுத்துத் தங்களுக்குப் பட்டாபிஷேகமானாலும் எனக்குச் சந்தோஷமே.

இராமர்:-- சீதா! எனக்கும் அது சந்தோஷமாய்த்தான் இருக்கும். ஆனால் நாம் நினைத்தபடி எது முடிகிறது? பட்டமாகாததைப்பற்றி எனக்குக் கிஞ்சித்தும் வருத்தமில்லை. உன்னைவிட்டுப் பிரிந்துறையவேண்டி நேரிட்டிருப்பதை எண்ணியே வருந்துகின்றேன்.

சீதை:-- நாதா! என்ன அது! என்னைவிட்டுப் பிரிந்துறைவதா? எங்கே? ஏன்? பிராணபதி! தாங்கள் கூறுவதின் தாத்பரியம் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை! என் நெஞ்சு துடிக்கிறது. நேர்ந்ததென்ன? நான் செய்த அபராதங்கள் எவை? அடியாள் அறியத் தெளிவாய்க் கூறுங்கள்.

இராமர்:-- கண்மணீ! கலங்காதே. நேர்ந்த விஷயங்களைக் கூறுகின்றேன் கேள். வெகு காலத்திற்கு முன் தேவலோகத்தில் எனது தந்தை சம்பராசுரனுடன் யுத்தம் செய்தார். யுத்தத்தின் மத்தியில் அவர் களைத்து மூர்ச்சையாயினர். அப்போது அன்னை கைகேயியார் அவருக்கு உபசாரங்கள் செய்து அக்களைப்பை ஆற்றினார்கள். அதற்காகத் தந்தை மனம் மகிழ்ந்து இரண்டு வரங்கள் கொடுத்தார். அன்னையார் அவைகளை அப்பொழுதே பெற்றுக்கொள்ளாது வேண்டியபோது பெற்றுக்கொள்வதாகக் கூறி நிறுத்தி வைத்திருந்தார். அவ்வரங்களிரண்டையும் இப்பொழுது அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவைகளுள் ஒரு வரம் பரதன் பாராள வேண்டுமென்பது. மற்றொரு வரம் நான் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்யவேண்டுமென்பது.

சீதை:-- ஆ! (பெருமூச்சு விடுகிறாள்)

இராமர்:-- ஆதலால் என் தம்பி அரசாள்வான். நான் தாய் மனப்படியும், அவர்க்குத் தந்தை கொடுத்த வரப்படியும் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்துவருவேன். அதுவரையில் நீ இங்கு இருந்து உன் கொழுந்தர், மாமியார், மாமனார் முதலானவர்கள் மனங்கோணாது நடந்துகொண்டு மனம் வருந்தாதிரு.

சீதை:-- என் பிராணபதி! என்னை முகநோக்கித் தாங்கள் இவ்வாறு மொழிய அடியாள் செய்த பிழை என்னையோ? தாங்கள் இவ்விராச்சியத்தை இழந்துவிட்டீர்களென்றாவது, வனஞ்செல்லும்படி தங்களுக்கு நேரிட்டதே யென்றாவது நான் வருந்தவில்லை. ‘நீ வருந்தாதே, நான் காட்டுக்குப் போகிறேன்’ என்று சொன்னீர்களே, அந்தச் சொல்லானது நஞ்சினும் கொடிதாக என்னை வருத்துகின்றது. ‘வாழ்விலும் தாழ்விலும் உன்னைப் பிரியேன்’ என்று அக்கினி சாக்ஷியாக என்கரத்தைப் பற்றிக்கூறிய உறுதி எங்கு சென்றொளித்தது? அரச பாரத்தால் என்னை அடிக்கடி பிரிய நேருமே என்று நேற்று வருந்திய நெஞ்சம் இன்று கருங்கல்லாகவா மாறிவிட்டது? உடலொன்றுக்கு உற்ற கண் இரண்டுபோல, உயிர் ஒன்றுக்கு உற்ற உடல்கள் இரண்டாய் நாமிருப்பதாகத் தாங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்களே. கண்ணிரண்டும் ஒரே பொருளைப் பார்ப்பதல்லது, ஒரு கண் ஒன்றையும், மறுகண் மற்றொன்றையும் பார்ப்பதுண்டோ? இல்லையே! அவ்வாறாக, ஓருயிருள்ள நம்மிருவருள் ஒருவர் காடு செல்ல, மற்றொருவர் நாட்டில் வசிப்பது யாங்ஙனம்? என்னைவிட்டுத் தாங்கள் செல்லத் துணிந்தது என்ன நியாயத்தைக்கொண்டு?

இராமர்:-- கண்மணீ! சீதா! காடு செல்லும்படி எனக்குக் கட்டளையே ஒழிய உன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளையில்லை. உன்னை நான் உடன்கொண்டு செல்வேனாயின், தந்தையின் கட்டளையை மீறியவனாவேன். அன்றியும் தந்தை என்னைக் காடு செல்லும்படி கட்டளையிட்டார்கள். நான் செல்லுகின்றேன். உனக்கு அவ்விதமான கட்டளை ஒன்றுமில்லாதபொழுது நீ காட்டிற்கு வருவது தவறு.

சீதை:-- நாதா! அரசாள்வதற்காகத் தாங்கள் ராஜதந்திரங்களைக் கற்றபோது, இந்தச் சாதுரிய வசனங்களையும் கற்றீர்கள் போலிருக்கிறது! நாம் இருவரும் வேறாய் இருந்தாலல்லவோ என்னைத் தாங்கள் அழைத்துச் செல்வது குற்றமாகும்? உயிரும் உடலும், மரமும் நிழலுமாக நாமிருக்க, ஒருவரையொருவர் அழைக்கவேண்டிய அவசியமென்ன? உயிரற்று உடல் வாழ்வதுண்டோ? மரத்தைவிட்டு நிழல் பிரிவதுண்டோ? இருதலைப் பறவையைத் துரத்தினால் இருதலையும் கொண்டு அது ஓடுமேயொழிய ஒரு தலையை விட்டுவிட்டுப் போவதுண்டோ? அதுபோலத் தங்களை வனஞ்செல்லும்படி ஏவினால் அது என்னையும் ஏவினது போலத்தான்.

இராமர்:-- சீதா! நீ சொல்வது நியாயமே. எனது தந்தையும் தாயரும் முதுமைப் பருவமடைந்தவர்கள்; என்னைப் பிரிந்ததால் மிகவும் ஏக்கமுற்றிருப்பார்கள். வீட்டிற்குத் தலை மருமகளாயிருக்கும் நீ வீட்டிலிருந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்துகொண்டிருப்பதன்றோ நெறி? அதைவிட்டு நீ என்னைப் பின்பற்றுதல் நெறியன்று. ஆதலால் நீ அவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.

சீதை:-- காதலா! இன்னுமா அந்த வார்த்தை? கற்புடை மனைவியர்க்குக் கணவனையன்றி வேறு உற்றாரேது? உறவினரேது? தெய்வந்தானேது? தாயுந் தந்தையும், உற்றாரும் உறவினரும் தாம் செய்த நல்வினை தீவினைகளைத் தாமே அனுபவிப்பார்கள். மனைவி ஒருத்திதான், தனது கணவன் செய்த புண்ணிய பாவங்களைப் பங்கிட்டு அனுபவிப்பவள். ஆதலால் தங்களுக்கு இட்ட கட்டளை எனக்கும் இடப்பட்டதே யாகும். நாமிருவரும் தம்பதிகளாக என்று ஏற்பட்டோமோ அன்றே நம் இருவர் சுக துக்கங்களும் ஒன்றாய் விடவில்லையா? தங்களை விடுத்து என் அன்னைக்கே நான் பணிவிடை புரிந்துகொண்டிருப்பினும் அது என் கற்புக்கு வழுவேயாகும். தாங்கள் இன்னும் என்னைப் புறக்கணித்து விட்டுச் செல்லாமல் தாங்கள் எங்கு செல்கிறீர்களோ அங்கு அடியாளும் வந்து தங்களுக்குப் பணிவிடை செய்யும் பெரும் பாக்கியத்தைத் தந்தருளுங்கள்.

இராமர்:-- சீதா! உன்னுடைய பிடிவாதத்திற்கு நானென்ன செய்வேன்? நீ சொல்வதெல்லாம் ஒருவகையில் நியாயமேயாயினும், நான் செல்லும் இடம் எத்தகையது என்பதைச் சிறிதும் யோசியாது பேசுகின்றனை. காடென்ற பதத்தையே கேட்டறியாத நீ அதனியல்பை எங்ஙனம் அறியப் போகின்றாய்? காட்டில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்

வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோன்
முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே

இலைதழைகளற்று, வெப்பத்தால் உலர்ந்து கரிந்து நிற்கும் மரங்களைப் பார்த்தால் பேய்கள் நிற்பதுபோல் தோன்றும். அந்த மரங்களின் பொந்திலிருந்து கருநாகங்கள் வெளியே தலை நீட்டி நீட்டிப் பார்த்துவிட்டு உஷ்ணத்துக்காற்றாமல் திரும்பவும் பொந்தினுள்ளே செல்லும். அப்படி அவைகள் தலையை நீட்டி நீட்டி உள் இழுப்பது, பேய்கள் தொண்டை வறண்டு நாக்கை வெளியில் நீட்டி நீட்டி உள்ளிழுப்பது போலிருக்கும். குகைகளிலிருந்து கரடி புலி முதலிய மிருகங்கள் கர்ச்சிப்பது கர்ணகடூரமாயிருக்கும். காடுகள் நிர்மானுஷ்ய மானவைகளானபடியால் அக்கொடிய மிருகங்கள் இங்குமங்கும் அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும். மனிதர்களைக் கண்டால் துரத்திக்கொண்டு வரும். காட்டில் வசிப்பவர்களுக்கு வேளாவேளைக்குப் போஜனமகப் படுவது கஷ்டம். காயோ, கனியோ, கிழங்கோ கிடைத்ததை உண்டு சந்தோஷப்படவேண்டும். காட்டில் விஷக்காற்றுகள் வீசும். பசி அதிகமாக உண்டாகும். கொடிய பாம்புகள் போகும் வழிகளில் குறுக்கே கிடக்கும். தேள்களும், காட்டு ஈக்களும், கொசுக்களும் அங்கே அதிகம். பேச்சுத் துணைக்கு ஒருவரும் அகப்பட மாட்டார்கள். இப்படிப்பட்ட துன்பங்கள் நிறைந்த இடமே ‘காடு’ என்று சொல்லப்படுவதாகும். இந்தக் காடுகளில் சிலவிடங்களில் மரம் மட்டை ஒன்றுமிராது. வெறும் மணலும் பருக்கைக் கற்களும் நிறைந்திருக்கும். அவ்விடத்தில் காயும் சூரியனின் வெப்பமோ சொல்லி முடியாது.

படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகருநா
முடியவே முடியமூ டிருளும்வான் முகடும்வேம்
விடியுமேல் வெயிலும்வேம் மழையும்வே மின்னினோ
டிடியும்வே மென்னில்வே றியாவைவே வாதவே.

கண்மணீ! அந்த இடத்தையே பாலைவனமென்று சொல்லுவார். அதன் வெப்பத்தைச் சொன்னால் சொன்ன நா வெந்து போகும். அதில் இருள் வந்தடைந்தால் அந்த இருளும் வெந்துவிடும். இருள் நீங்கி வெயில் வந்தால் வந்த வெயிலும் வெந்துவிடும். அதைக் கவிந்துள்ள வானமும் வெந்துவிடும். அதில் மின்னல் மின்னினாலும் சரி, இடி இடித்தாலும் சரி, மழை பெய்தாலும் சரி, அந்த மழை, மின்னல், இடி யாவும் வெந்துவிடும். அங்கே வேகாத பொருளென்று ஒன்றிராது. உலகையழிக்கத் தோன்றும் ஊழித்தீயும் அக்காட்டில் தோன்றுமானால் வெந்துவிடும். அத்தகைய கொடிய காட்டில் நீ வந்தால் புழுப்போல் துடிப்பையே. அதை நினைத்தாலும் என் மனம் பகீரென்கிறதே. உன் மெல்லிய பாதங்கள் நெருப்புத் தணல் போன்ற அந்தச் சுடுமணலிற் பட்டால் என்னாகும்? தாமரை மலரை நெருப்பில் வாட்டுவதுபோல் அந்தக் காட்டு வெயிலில் வாட்டி வதக்கவோ, உன்னை அழைத்துப் போகச் சொல்கின்றாய்? ஜானகீ! என் வார்த்தையைக் கேட்டு இங்கேதானே இரு. என்னுடன் வர எண்ணாதே. காட்டின் கொடுமையைச் சகிக்க உன்னாலாகாது.

சீதை:-- நாதா! தங்கள் மொழியினும் கொடியதா அக்காடு? பிராணபதீ!

தொடரும் …………..