சனி, 24 மே, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 5

      9. ராம என்ற பதம் பரமாத்மாவைச் சொல்லி அநுஜ என்பது பின்பு அவதரித்த முப்பது சின்னங்கள் (அடையாளங்கள்) என்று கணக்கிடப்பட்டிருக்கிற விபவாவதாரங்களில் விஶேஷித்து ஜ்ஞாநப்ரதாநம் செய்தருளிய ஸ்ரீஹயக்ரீவனைக் குறிக்கிறது என்றபடி. சுருணையிழந்த கணக்கன் நீர்கிடை நிலக்கிடை தெரியாமல் பரிதவிக்குமாப் போலே வேதங்களைப் பறிகொடுத்த ப்ரஹ்மா கலங்கிப் பரமாத்மாவை ஸ்தோத்திரம் செய்ய பகவான் ஹயக்ரீவ ரூபம் எடுத்து, பாதாளத்தில் ஒளிந்திருந்த அஸுரனைக் கொன்று, வேதங்களை மீட்டுக் கொடுத்த உபகாராதிகளை ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ராதிகளில் நிரூபித்து அருளியபடியினாலும், இவரே ப்ரதிவாதி நிரஸன காலத்தில் ஆசார்யர்களுடைய ஹ்ருதயகமல ஸிம்மாஸநத்திலும், உபதேஶ காலத்தில் அவர்களுடைய ஜிஹ்வாக்ர ஸிம்மாஸநத்திலும் வீற்றிருந்து அநுக்ரஹிப்பதை நிரூபித்திருப்பதினாலும், ஸர்வஶாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹமாய் அநுக்ரஹிக்கப்பட்ட ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் இவருடைய அநுக்ரஹமே அந்த க்ரந்த ரூபமாக வெளிவந்தது என்பதை வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம் உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து அருள் செய்வதும் பன்னுகலை நால் வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய எம்பரமன் (பெரிய திருமொழி) என்று இவ்வவதாரத்தைக் குறிக்கிறது.

        உபநிஷத்துக்களில் மிகவும் சிறந்தது ஈஶாவாஶ்யோபநிஷத்து. அதன் வ்யாக்யாநத்தில் ஸ்ரீஹயக்ரீவன் விஷயமாக மங்களம் செய்தருளியிருப்பதனால் ஸ்ரீ ஹயக்ரீவனே ஸர்வோபநிஷத் ப்ரதிபாத்யன் என்பதை ஸ்வாமியே எடுத்துக் காட்டி அருளியபடி. ஸர்வேஶ்வரனிடமிருந்தே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணிய கலியன் அருளிய அறிவுதரும் பெரிய திருமொழியை முற்றிலும் மறந்து, ஹயக்ரீவனின் அருளால் பெற்ற ஜ்ஞாநம் உபாதேயமன்று என்பவர்கள் அவருடைய தயைக்குப் பாத்திரமாக முடியாதல்லவா என்பது கருத்து. 

           10. ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீவராஹ நயினாரைக் குறிக்கிறது. ஹிரண்யகசிபு பூமியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஸமுத்திரத்தின் கீழ் ஒளிந்துகொண்ட காலத்தில் ஸ்ரீவராஹாவதாரம் செய்து, அஸுரனைக் கொன்று, பூமிப்பிராட்டியைக் கரையேற்றி, அவளைத் திருமணம் செய்துகொண்டு, அவளுடைய ப்ரார்த்தனைக்கு இணங்கி, மிகவும் ஸுலபமானதும், எல்லாரும் அநுஷ்டிக்கக் கூடியதுமான ப்ரபத்தியாகிற உபாயத்தை வராஹ சரம ஶ்லோகம் எனப்படும் இரண்டு ஶ்லோகங்களால் உபதேஶித்த உபாகார விஶேஷத்தை ஸ்ரீரஹஸ்ய ஶிகாமணி என்னும் ஸ்ரீஸூக்தியில் நிரூபித்தருளியபடி. 

     ஸித்தோபாய பூதராய் ஸர்வஜ்ஞருமான ஸ்ரீவராஹநயினார் தம்முடைய வசீகரணார்த்தமாக ஸாத்யமான ஜ்ஞாநயஜ்ஞ ஸாரத்தை இவ்வளவிலே ப்ரஸந்நனாய் ஜந்ம ஜந்மாந்திரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்த்தன்மை பொறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்படியை இரண்டு ஶ்லோகத்தாலே அருளிச் செய்கிறார்.(ரஹஸ்யசிகாமணி)

          இதை ப்ரமாண உபபத்திகளுடன் விஸ்தாரமாக உபபாதித்தருளி, ஸம்ஸ்க்ருத பாஷையில் பரிச்சயமில்லாதவர்களும் இந்த ஶ்லோகங்களின் அர்த்த விசேஷங்களை ஸுலபமாய் அநுஸந்திக்கும்படி ஒரு ச, து, இவற்றின் ஸ்வாரஸ்யம்கூட விடாமல் இடம் பெற்றோரெல்லாம் என்றாரம்பித்து ஒரு பாட்டாலே நிரூபித்திருப்பதும் இந்த அவதாரத்தின் பெருமையை ‘ஸ்ரீதஶாவதார ஸ்தோத்திரத்திலும்’ ஸ்ரீ அபீதிஸ்தவத்திலும் அருளிச் செய்திருப்பதும் இங்கு அநுஸந்தேயம்.

     11. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனைக் குறிக்கிறது என்றபடி. ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்று கூறப்படும் ஸ்ரீமத்ராமாயணத்தின் பெருமையை ‘ரகுவீரகத்யம்’ என்று சொல்லக்கூடிய மஹாவீர வைபவத்தில் ஸ்தோத்ரமாகச் சொல்லி ‘ஸ்ரீஅபயப்ரதாந ஸார’த்தில் விஸ்தாரமாக உபபாதித்து ஶரண்யனுடைய திருவுள்ளத்தை வெளியிட்டருளியது. ‘ஸ்ரீஹம்ஸ ஸந்தேஶ’த்தில் பகவான் தூது விட்டதின் கருத்தையும், அவதாரத்தின் ப்ரயோஜனம் “ஸக்ருத் ப்ரபந்நஜந ரக்ஷணைகவ்ரத பரிபாலநம்” என்று ஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார் ஸ்வாமி. பரதாழ்வான் பண்ணின ஶரணாகதி எல்லா பலத்தையும் கொடுக்கவல்லது என்பது பொய் என்று ஆக்ஷேபம் செய்பவர்களுக்கு ஸமாதானமாக,

        “பரதனுடைய ஶரணாகதி ஸபலமானதே. முற்பாடரான தேவர்கள் பண்ணின ப்ரபத்திக்காக, ராவண வதத்திற்கு எழுந்தருள்கையும், பிற்பாடரான ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்திக்காக மீண்டு, திருவபிஷேகம் பண்ணி ராஜ்யம் பண்ணுகையும் விருத்தமானபடியினாலே ஸ்ரீபரதாழ்வானுக்குப் பண்ணினபோதே பரம பலம் சடக்கெனத் தலைக்கட்டித்தில்லையேயாகிலும், அவருக்குக் கைகேயீ கலஹத்தாலே ப்ரஸக்தமான அவத்யம் தீரும்படி மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ” என்கிறபடியே அப்போது ஸாக்ஷாத் பலமான திருவடிகளுக்கு ப்ரதிநிதியான ஸ்ரீசடகோபனாலே ஸபலத்வம் சொல்லி, பின்பு பூர்வ ப்ரதிஜ்ஞாதமான தேவகார்யம் தலைக்கட்டினவாறே ஸ்ரீ புஷ்பக விமானத்தாலே ஸாக்ஷாத் பலமான திருவடிகள் ஸ்வயமாக தங்களாய் அயத்ந லப்தமானபடி சொன்னான் என்றும், ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்தியாலே அவருடைய விஷய வாஸமாத்ரமே பற்றாசாக, பின்பு கோஸலதேஸஶ்த ஜந்துஜாத வர்க்கங்களைக் காப்பாற்றினான்” என்று ஶரணாகதி ஸபலமானதை நிரூபித்தருளினார். இதையே ஸ்வாமி திருவுள்ளம் கொண்டு “பாதுகாஸஹஸ்ர”த்தில்  भरताय परं नमोस्तु तस्मै  பரதாய பரம் நமோஸ்து தஸ்மை என்று பரதாழ்வானுக்கு நமஸ்காரத்தைப் பண்ணியபடி. மேலும் பகவான் ஸமுத்ர ராஜனிடத்தில் பண்ணின ஶரணாகதி பலனில்லாமல் போயிற்றே என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக, பகவான் அவனிடம் செய்தது ஶரணாகதியல்ல, அதற்கு “ப்ரதிஶயநாதிபரம்” என்று பெயர்.

            அநந்யகதித்வம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஶரணாகதி பண்ணவேண்டும். அவர்கள்தான் ஶரணாகதர்கள். பகவானுக்கு அநந்யகதித்வம் கிடையாது. அவன் ஶரண்யன். ஆகையால் இங்கு சொல்லப் பட்டது ஶரணாகதி விஷயமில்லை.

                காகாஸுர ஶரணாகதியில் ஶரணாகதி ஶாஸ்த்ர ப்ரவர்த்தகர்களான மஹர்ஷிகள் ரக்ஷிக்காமல் கைவிட்டார்களே என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஒரு கண்ணை வாங்கி ரக்ஷித்தபடியால் ஶரணாகதனுடைய எல்லாப் பாபங்களும் க்ஷமிக்கப்படும் என்பது பொருந்தாதே என்பதற்கு ஸமாதானமாக----

ரக்ஷணம் இரண்டு விதம்
தன் ஶக்திக்கு வஞ்சனம் பண்ணாதே ரக்ஷிக்கவேண்டும். அங்ஙனமன்றிக்கே கைக்கொள்ளவுமாம், கைவிடவுமாம் தான் வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம். ரகு பரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக்கொண்டு ரக்ஷித்தார்கள். தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றதென்று பெருமாள் கைக்கொள்ளுகைக்காக (அபயப்ரதாநஸாரம்) என்று ரக்ஷணத்தின் வேறுபாட்டை ஸ்தாபித்தருளி, காகாஸுரனுக்கு ஒரு கண்ணைப் பறித்து ரக்ஷித்ததற்குக் காரணமாக காவலினி எமக்கு எங்கும் கடன் என்றெண்ணிக் காண நிலை இலச்சினை அன்றிட்ட வள்ளல் (அபயப்ரதாநஸாரம்) என்றருளியபடி. இதன் கருத்து இந்த காகத்தின் ரக்ஷணம் இது முதல் எல்லா இடத்திலும் நமது கடனாகிவிட்டது. துஷ்ட ப்ரக்ருதியான இக்காகத்தை பூர்ணமாக மன்னித்து விடுவோமாகில் இது இதே மாதிரியான அபராதத்தை வேறு யாரிடமாவது செய்தால் அவரால் உதைப்புண்டு ப்ராணனை இழக்கும், அப்படியானால் நம்முடைய ரக்ஷணம் ரக்ஷணமாகாது ஆகையால் அதற்கு நல்ல புத்தி வரவேண்டும் என்பதற்காகவும் அபசாரப்பட்டால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு கண்ணை வாங்கி அருளினான் என்றபடி.

       “ப்ராணார்த்தியாய்” விழுந்த காகத்திற்கு ப்ராணனைக் கொடுக்கையாலே அங்கு ப்ரபத்தி பலம் பூர்ணம். துஷ்ப்ரக்ருதியான இக்காகத்திற்கு சிக்ஷையாக ஒரு கண்ணை வாங்கி விட்டதும் நிக்ரஹமன்று அனுக்ரஹ விசேஷம் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்ய ப்ராரக்ஷா)  कृपे काकस्यैकं हितमिति हिनस्ति स्म नयनम् க்ருபே காகஸ்யைகம் ஹிதமிதி ஹிநஸ்தி ஸ்ம நயனம் (தயா ஶதகம் 63) என்றருளி, இந்த அவதாரத்தில் ஶரண்யன் தானே வெளியிட்ட அபயப்ரதாந ஶ்லோகத்தின் அர்த்தத்தை ‘ஒருக்காலே’ என்ற பாட்டாலே ஆரம்பித்து நிரூபித்தருளியபடி. மேலும், ஶத்ரு, மித்ரன், வேண்டியவன் வேண்டாதவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவன் என்ற தன்மையை,

          ஶரணாகதனாய் இவர் கைவிடிலும் எங்ஙனம் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷணாழ்வானையும் இவனை அழிக்க நினைத்த பரிவரையும் ரமிப்பித்தபடியை, விபீஷணாழ்வானுக்கு பஹுமுக பரிபவத்தாலே பிறந்த பரிதாபமெல்லாம் கழியும்படி ரமணீயமாய் நின்ற தயரதன் பெற்ற மரகத மணித்தடமிறே (அபயப்ரதாநஸாரம்) என்றருளியதும் எம்பெருமானுடைய பரத்வம் கழற்றவொண்ணாச் சட்டையாய் அவனுடைய ஸௌலப்யமே விஞ்சியிருக்கும் என்றபடி

       12. ராமாநுஜ  என்னும் பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.
  भरताय परं तस्मै प्रथमोदाहरणाय भक्तिभाजम्|
  यदुपज्ञमशेषत: पृथिव्यां प्रथितो राघवपादुका प्रभाव:||
  
ப⁴ரதாய பரம் தஸ்மை ப்ரத²மோதா³ஹரணாய ப⁴க்திபா⁴ஜம்|
யது³பஜ்ஞமஶேஷத: ப்ருதி²வ்யாம் ப்ரதி²தோ ராக⁴வபாது³கா ப்ரபா⁴வ:||
                                                                                                                   (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)

      பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும் பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகிற்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.

வெள்ளி, 23 மே, 2014

ராமாநுஜ தயா பாத்ரம் வ்யாக்யானம்

          6. ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி.
          ஸ்ரீபூமிப்பிராட்டியை ஜகத்துக்கு ஈஶாநா என்று ஶ்ருதி சொல்லுகையாலே சேதனாசேதன ரூபமான ஜகத்திற்காட்டில் இவளுடைய உத்கர்ஷம் ப்ரஸித்தம். ஸர்வம் ஸஹையான இவளுக்கு ஸர்வேஶ்வரனைக்காட்டிலும் , பெரியபிராட்டியைக் காட்டிலும் க்ஷமாதிகுண பூயஸ்தை உண்டாயிருந்தது. இப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகளே தாங்களே அறிவார்கள் இத்தை ஸ்ரீபூமிப்பிராட்டி ஸ்வாபாவிக ஸார்வஜ்ஞ்யத்தாலே அறிந்திருக்கச் செய்தேயும் ப்ரஜா ஹிதார்த்தமாக மாதா கேட்க, ஸர்வபூத ஸுஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை என்று ப்ரஸித்தமாக வேண்டுமென்று திருவுள்ளம்பற்றி (ஸ்ரீரஹஸ்ய சிகாமணி) என்று கூறப்பட்டுள்ளது.
      7. ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,
     निशामयतु मां नीळा यद्भोगपटलौर्ध्रुवम्|
       भावितं श्रीनिवासस्य भक्तदोषेष्वदर्शनम् ||
நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்   
                                                                             (தயா ஶதகம் 8)
                                                                                
     இவளுடைய க்ருபை பகவான் பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் இவர்களுடைய க்ருபையைக் காட்டிலும் அதிகமானது என்றும் நிரூபித்திருக்கிறபடியால் இவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி. அதாவது பகவானுடைய ஸ்வபாவம்.
     தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்போலும் (பெரியாழ்வார் திருமொழி) என்றும் சொல்லப்பட்டது.
      பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில் पापानां वा शुभानां वा (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.
    க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை
वन्दे वृषगिरीशस्य महिषीं विश्वधारिणीम्|
तत्कृपाप्रतिघातानां क्षमया वारणं यया ||
வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
                                                        (தயா ஶதகம் 7)
      இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பக்தர்கள் பாபம் செய்தால் அதை நன்மை செய்ததாக நினைத்துக் கொள்வானாம் எம்பெருமான். ஆனால் பெரிய பிராட்டியோ பக்தன் பாபம் செய்தானா புண்ணியம் செய்தானா என்று நினைப்பதே அனாவஶ்யம். எப்படியிருந்தாலும் அவன் நம்மால் காப்பாற்றப்பட வேண்டியவன் என்பாளாம். பூமிப் பிராட்டியோ எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு விடுகிறார்கள். இப்படி இவர்கள் மூவரும் பக்தனிடம் பாபம் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.
     8. ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.
      இவ்வவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும் இவற்றில் ஈஸ்வரனுக்கு ஜ்ஞாநாதி ஸங்கோசமில்லை என்றும், இவ்விக்ரஹங்கள் ஶுத்த ஸத்வமயங்கள் என்றும், இவற்றிற்கு ஈஶ்வரேச்சா மாத்ரமே காரணம் என்றும், தர்ம ரக்ஷணம் பண்ண வேண்டும். காலமே காலம் என்றும் ஸாது பரித்ராணாதிகளே ப்ரயோஜனங்கள் என்றும், இவ்வர்த்தம் தெளிந்து அநுஸந்திப்பார்க்கு ஏக ஜந்மத்திலே ஸ்வாதிகாராநுகுண ஸமீஹித உபாய பூர்த்தியாலே ஜந்மாந்தரம் அநுபவியாதே முக்தராகலாம். (ஸ்ரீமத்ரஹஸ்யதத்வத்ரயம்) என்று அவதார ரஹஸ்யார்த்தங்களையெல்லாம் பரக்க நிரூபித்தருளியபடியினாலும் இந்த அவதார தசைகளில் பக்தர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவும் அஸுர ஸ்வபாவமுடையவர்களை மோஹிப்பதற்காகவும் சுகதுக்காதிகளைப் பாவித்ததெல்லாம் கேவலம் அபிநயம் மாத்திரம் என்று அருளிச் செய்திருப்பதினாலும் அவர்களின் தயைக்குப் பாத்திரமானார்.
 
    

திங்கள், 19 மே, 2014

Saranagati Deepikai Tele-upanyasam (19-05-2014) concludes

சரணாகதி தீபிகை டெலி உபந்யாஸம்
நிறைவு பெறும் கடைசி உபந்யாஸம்

स्नेहोपपन्न विषय: स्व दशा विशेषात्
भूयस्तमिस्र शमिनीं भुवि वेङ्कटेश: |
दिव्यां स्तुतिं निरमिमीत सतां नियोगात्
दीपप्रकाश शरणागति दीपिकाख्याम् ||

ஸ்நேஹோபபந்ந விஷய: ஸ்வ த³ஶா விஶேஷாத்
பூ⁴யஸ்தமிஸ்ர ஶமிநீம் பு⁴வி வேங்கடேஶ: |
தி³வ்யாம் ஸ்துதிம் நிரமிமீத ஸதாம் நியோகா³த்
தீ³பப்ரகாஶ ஶரணாக³தி தீ³பிகாக்²யாம் ||


என்ற “சரணாகதி தீபிகை”யின் கடைசி ச்லோகத்தை விவரித்து இந்த டெலி உபந்யாஸத்தை நிறைவு செய்கிறார் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி. இதுவரை கேட்காதவர்களுக்கு உபகாரமாகவும், இதுவரை தொடர்ந்து கேட்டு வந்தவர்கள் தாங்கள் கேட்டு அனுபவித்ததை மீண்டும் மனதில் கொண்டுவந்து நினைவுபடுத்திக்கொண்டு அனுபவிப்பதற்காகவும் முந்திய 58 ச்லோகங்களின் சுருக்கமான பொருளையும் எடுத்துரைத்து மங்களகரமாக நிறைவு செய்திருக்கிறார்.

அடியேனை ஆட்கொண்டு அனவரதமும் ரக்ஷித்துக் கொண்டிருக்கும் பிரகிருதம் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தால்  அடியேனுக்குக் கிடைத்த பாக்யம் இந்த உபந்யாஸங்களைத் தொடர்ந்து கேட்டு இங்கு பகிர்ந்து கொண்டது. இந்த உபந்யாஸங்களை இங்கு தொடர்ந்து வெளியிட அனுமதித்த நாட்டேரி ஸ்வாமிக்கும், தங்களது ஒலிப்பதிவுகளை நகலெடுத்து இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த அமெரிக்கா ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம நிர்வாகிகளுக்கும், குறிப்பாக ஸ்ரீ ஸ்ரீராம் ராமானுஜம் ஸ்வாமிக்கும், அடியேனது கவனக் குறைவால் அவ்வப்போது அடியேன் பதிவிட்டதில் ஏற்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவிய பல நண்பர்களுக்கும் அடியேனது க்ருதஜ்ஞதைகள்.  

இந்த நிறைவுப் பகுதியைத் தரவிறக்கி அனுபவிக்க

https://www.mediafire.com/?rwsoynx9kkot6ha

இதுவரை நடந்த அனைத்து உபந்யாஸங்களையும் நகலிறக்கிக்கொள்ள
https://www.mediafire.com/folder/10q2e5v2yt54j/Natteri_-_Saranagati_deepikai