வியாழன், 16 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 31

நாற்பத்தொன்பதாவது ஸர்கம்

[ஸ்ரீமானான ராமபிரான் வானரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் விடையளித்தனுப்புதல்)

                இப்படியாக அயோத்யாதிபதியான ஸ்ரீராமன் அவர்களை விட்டுப் பிரிய மனமின்றி எப்பொழுதும் அவர்களுடனே கூடிக் களித்திருந்தான். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீராமன், ஸுக்ரீவனை நோக்கி 'வானர அரசனே! நீ உனது ராஜ்யமான கிஷ்கிந்தையை விட்டு வந்து வெகுநாட்களாகின்றபடியால், சீக்கிரமே அங்கு சென்று உனது மந்திரிகளுடன் கூடி ஸந்தோஷமாக ராஜ்ய பரிபாலனம் செய்து வரவும்' என்று கூறி; அவனை மார்புறத் தழுவி, பின்னும் மற்ற வானர வீரர்களையும் தனித் தனியே ஆலிங்கனம் செய்து கொண்டனன். பிறகு விபீஷண ஆழ்வானை நோக்கி, 'அரக்கர் கோனே! நீ தர்மங்களனைத்தையும் நன்குணர்ந்தவன் என்பது எனது துணிவு. ஆதலால் நீ உனது ஸாமர்த்யத்தைக் கொண்டு, தர்மமார்க்கம் தவறாமல் இலங்கா ராஜ்யத்தைப் பரிபாலனம் செய்து வரவும்.

                உனது நகரத்திலுள்ளவர்களுக்கும் மற்றுமுள்ள ராக்ஷஸர்களுக்கும் உனது ஸஹோதரனான குபேரனுக்கும், நீ உண்மையான விருப்பத்திற்கு இடமானவனன்றோ? ஆகவே அவர்களின்பால் நீ விரோதமான செய்கை எதனையும் செய்யாமலிருக்கவும். எப்பொழுதும் நீ அதர்மமான காரியத்தில் மனதைச் செலுத்தாமலிருக்க வேண்டும். ஸுக்ரீவனையும் என்னையும் நீ என்றைக்கும் மறவாது உள்ளத்தில் வைத்து அதிகமான அன்பு பாராட்டி வரவேண்டும். இனி நான் உனக்கு விடை கொடுக்கிறேன். நீ உடனே புறப்பட்டு இலங்காபுரி செல்லவும்" எனக் கூறி அனுமதி யளித்தான்.

        அப்படி ஸ்ரீராமன் அனுமான் வேண்டிக் கொண்டபடி, அவனை நோக்கி, 'வானரச்ரேஷ்டனே! இவ்வுலகத்தில் எனது சரித்திரம் என்வளவு காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் உனது புகழும் நீடித்து நிலைத்திருக்கக் கடவது. இவ்வுலகம் எத்தனை காலம் நீடித்திருக்குமோ அவ்வளவு காலம் எனது கதையும் இங்கு அழியாதிருக்கும். ஆஞ்சநேய! அவ்வளவு காலம் உனது சரீரத்தில் ஜீவனும் நிலைத்திருக்கும். நீ செய்த ஒவ்வொரு உபகாரத்திற்கும் கைமாறாக நான் எனது பிராணனை அளித்தாலும் போதுமோ? கைம்மாறு செய்வதற்கு ஆபத்துக் காலமே ஏற்ற தருணமாகும். உனக்கு ஆபத்தும் நேர வேண்டாம். நான் கைம்மாறு செய்யவும் வேண்டாம்” எனக்கூறி தான் கழுத்தில் அணிந்து கொண்டிருந்ந சந்திரனுக்குச் சமமானச் சோதி பெற்ற அற்புதமான ஹாரமொன்றைக்கழற்றி அனுமானது கழுத்திலிட்டனன். பிறகு வானரர்களும் ராக்ஷஸர்களும், ஸ்ரீராமச்சந்திரனைத் தலை குனிந்து, அடிபணிந்து விடை கொள்ளலாயினர்.

        ஸுக்ரீவன் ஸ்ரீராமனை மார்புறத் தழுவி அவனை விட்டுப் பிரிய வேண்டுமேயென்கிற துயரத்தினால் மெய்மறந்தவனாகியதும் ராமனால் ஸமாதானம் செய்யப் பெற்று விடை கொண்டான். ஸகலமான வானரர்களும் இராக்கதர்களும் உடலை விட்டுப் பிரியும் உயிரென அடங்காத துயரத்துடன், கண்ணீர் தாரை தாரையாகப் பெருக. ஶ்ரீராமச்சந்திரனை வணங்கி விடை பெற்றுத் தத்தம் இருப்பிடம் போய்ச் சேரலாயினர்.

ஐம்பதாவது ஸர்கம்

[குபேரனால் அனுப்பப்பட்ட புஷ்பக விமானத்தை மீண்டும் அவனிடமே செல்ல விடை கொடுத்தது, பரதன் கூறிய ராஜ்ய வளர்ச்சி)

        இப்படியாக, ஸ்ரீராமபத்ரன் வானரர்களுக்கும். இராக்கதர்களுக்கும், விடை கொடுத்து அனுப்பிய பின், ஒரு நாள். ஸஹோதரர்களுடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில் ஆகாயத்தில் அற்புதமான சப்தத்துடன் ஒரு வாக்குக் கேட்டது. அது என்ன வெளில்?

        ''ஹே ராம! நான் குபேரனிடமிருந்து, அவனாலனுப்பப்பட்டு வந்துள்ளேன். புஷ்பகமெனப் பெயர் பெற்றவன். முன்பு நான் உம்மிடமிருந்து விடைபெற்று குபேரனுக்குப் பணி விடை செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டேன். அவன் என்னை நோக்கி, 'அயோத்யாதிபதி ராமனால் எவராலும் வெல்ல முடியாத ராவணன் வதம் செய்யப்பட்டு, அவனிடமிருந்து நீ ராமனால் ஸ்வீகரிக்கப்பட்டவன், பரமாத்மாவான ஸ்ரீராமன் அந்த ராவணனை வென்று உன்னை ஸ்வாதீனம் செய்து கொண்டபடியால் நீ அவனுக்கு அதீனமாகின்றனை. ஆகையால் இனி நீ அந்த ராமனுக்கே வாகனமாயிருக்கக் கடவாய். இதுவே எனது விருப்பம். நீ ஸந்தோஷமாக அவனிடம் சென்று, அவ்வுத்தமனுக்கு வேண்டிய இடம் செல்லச் சிறந்த வாகனமாய் ஆவாய்" என்று கட்டளை யிட்டருளினான். ராம! அவ் வண்ணமே நான் உன்னை யடைந்துள்ளேன். ஆக்ஷேபணையின்றி என்னை ஏற்றுக் கொள்ளவும்'' என்று வேண்டிக் கொண்டது. புஷ்பக விமானதேவதை தன்னிடம் திரும்பி வந்து இவ்வாறு கூறியதைக் கேட்டு, ரகுவீரன், அத்தேவதையை நோக்கி, புஷ்பக விமானமே! அந்தக் குபேரன் எனக்கு நண்பனேயனறி வேறில்லை. நீ எங்கிருப்பிலும் வித்யாஸமில்லை. தற்சமயம் நீ அவனிடமே போய்ச் சேரவும். நான் எப்பொழுது மனத்தில் நினைக்கிறேனோ அப்பொழுது எனனிடம் சேர்ந்து, வேண்டிய இடங்களுக்கு ஆகாயமார்க்கமாய் என்னை வஹித்துக் கொண்டு செல்லவும், நீ பத்துத் திக்குகளிலும் உனக்கு இஷ்டமானப்படி செல்லலாம். நீ செல்லுமனவில் உனக்கு எவ்விடத்திலும் தடையுண்டாகாது. என்று கூறி அனுமதியளிக்க அவ்விமானம் ‘அவ்விதமே யாகுக' என்று தனக்கிஷ்டமானபடி சென்றது.

        இப்படியாக அந்தப் புஷ்பக விமானம் சென்றவுடன், பரதன் ஸ்ரீராமனை வணங்கிப் பின்வருமாறு கூறினன் - ஸ்ரீ ரவிகுர! தாங்களாக்ஷி புரியுங் காலத்தில், பிரஜைகள், வியாதியற்றவர்களாகவும், வயோதிகர்களும் மரணமடையாமலும், கர்ப்பிணி ஸ்த்ரீகள் ஸுக ப்ரஸவமுள்ளவர்களாவும், எல்லோரும் ஸந்துஷ்டர்களாகவுமே யுள்ளார்கள். மழையும் உசித காலத்தில் பொழிகிறது. காற்றும் ஸுக கரமாகவே வீசுகிறது. ஜனங்களெல்லோரும், இப்படிப்பட்ட அரசன் சிரஞ்ஜீவியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.' என்று. இந்த மதுரமான பரதனுடைய வார்த்தையைக் கேட்டு ஸ்ரீராம பத்ரன் மனம் மகிழ்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக