செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் – உத்தர காண்டம் 30

நாற்பத்தேழாவது ஸர்கம்

[ஸ்ரீராமன் தனது பட்டாபிஷேகங் காண வந்த அரசர்களுக்கு விடை கொடுத்தனுப்புவது.)

                பிறகு ஸ்ரீராமபிரான் தனது மாமனாரான ஜனகமஹாராஜரை அழைத்து, அவரை வணங்கி, அஞ்ஜலி ஹஸ்தராய் ‘தேவரீருடைய உயர்ந்த தபோபலத்தினாலேயே, ராவணனை நான் வென்றேன். இவ்வளவு நாள் எனது ஸபையில் எழுந்தருளியிருந்து அடியேனை கெளரவித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. தேவரீர் உமது ராஜ்யத்தை விட்டு வெகுகாலம் வெளியே இருப்பது உசிதமல்ல, உடனே வேண்டிய தனங்களை எடுத்துக் கொண்டு உமது நகரத்திற்குச் செல்லவும். தேவரீருக்குத் துணையாக பரதனை உம்முடன் அனுப்பிவைக்கிறேன்'' எனக் கூறி விடை கொடுத்தான். மிதிலாதிபதியான ஜனகர் அது கேட்டு, மனம் மகிழ்ந்து, 'ஸ்ரீராம! வெற்றி வீரனே! நீ எனக்கு அளித்த உயர்ந்த பொருள்கள் எல்லாவற்றையும் எனது குமாரிக்கு நான் அன்பளிப்பாகக் கொடுக்கிறோனாதலால், அவற்றை இங்கேயே வைத்துக் கொள்ளவும்' என்று கூறி விடை பெற்றுச் சென்றார்,

        பிறகு ஸ்ரீராமன் தனது மாதுலனும் கேகய தேசத்தரசனுமான யுதாஜித்தை நோக்கி, கை கூப்பிக் கொண்டு 'மாதுலரே! எங்களுக்கு தேவரீரை விட்டுப் பிரிய மனமில்லையாயினும், அங்கு பாட்டனார் தேவரீரைப் பிரிந்ததனால் மிகவும் தபித்துத் துன்புறுவராதலால் தேவரீர் இப்பொழுதே தேவரீரது நகரத்திற்குச் செல்வது உசிதமென்று தோன்றுகிறது. லக்ஷ்மணன் தேவரீருக்குத் துணையாக வருவான். வேண்டிய ரத்தினங்களையும் பொருள்களையும் எடுத்துக் கொண்டு செல்லவும்”, என்று விடை கொடுத்தான். அது கேட்டு யுதாஜித்து ஸ்ரீராமசந்திரனை நோக்கி “ராமபத்ர! அவ்வண்ணமே நான் சென்று வருகிறேன்” என்றார்.

        “நீ எனக்குக் கொடுத்த ரத்தினங்களும் பொருள்களும், என்னால் உனக்குப் பிரீதியுடன் திரும்பக் கொடுக்கப்படுகிறது. ஆதலால் அவை உன்னிடத்திலேயே அக்ஷயமாக இருக்கட்டும்” என்று கூறி விடை பெற்றான்.

        அதற்குப் பிறகு ஸ்ரீராமன் தனது உயிர் நண்பனான காசி ராஜனை நோக்கி, 'நண்பனே! உனக்கு என்னிடம் உள்ள அன்பு விச்வாஸங்களை நீ நன்கு வெளியிட்டுள்ளாய். நீ ராவணனை வதம் செய்யும் விஷயத்தில் பரதனுடன் கூடி எனக்கு உதவி புரிய முயற்சி செய்தாயன்றோ' உன்னைவிட உயிர்த்தோழன் எனக்கு வேறொருவனிலன். நீ நகரத்தை விட்டு வந்து வெகு நாட்களானமையால், நீ உனது நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்லவும்' என்று கூறி விடை கொடுத்தான். அது கேட்டு காசிராஜன் மகிழ்ச்சியுற்று வேகமாக வாராணஸிக்குச் சென்றான். இப்படி அவர்களை அனுப்பி விட்டு ரகுநந்தனன் மற்றுமுள்ள முன்னூறு அரசர்களை நோக்கி, களிப்புடன், 'அரசர்களே! உங்களுக்கு என்னிடத்திலுள்ள அன்பு அளவு கடந்தது. அஃது உங்கள் பராக்கிரமத்தினால் நன்கு பரிபாலிக்கப் படுகின்றது. உங்களது ஸத்யமும் தர்மமும் என்றும் ஒரே மாதிரியானவை. உங்களுடைய பிரபாவத்தினாலும், தபோ பலத்தினாலும், துர்புத்தி கொண்ட மஹான்களுடைய ராவணன் கொல்லப் பட்டான். இப்பொழுது நீங்களனைவகும், அவரவர்களுடைய நகரங்களை விட்டு வந்து, வெகுநாட்களாகிறபடியால், இனி அவரவரது நகரங்களுக்குச் செல்லுக' என்று விடை கொடுத்தனன். அவ்வரசர்களனைவரும் மிகவும் ஸந்தோஷத்துடன. “ஸ்ரீராம! வீரவரனே! எங்களது பாக்ய விசேஷத்தால் நீ ராவணனை வதம் செய்தாய். செந்தாமரை போன்ற திருக்கண்களும், அழகிய நாசியும், சிவந்த உதடுகளும் வெண்மையான முத்துப் போன்ற பற்களும், அமைந்து சரத்காலச் சந்திரனென ஒளிபெற்று விளங்குகின்ற உனது முகத்தைத் தரிசித்த நாங்கள் தன்யர்கள் ஆனோம், இதோ நாங்கள் விடை பெற்றுச் செல்லுகின்றோம். நீ எப்பொழுதும் எங்கள் உள்ளத்திலேயே குடிகொண்டிருக்கின்ருய். சக்ரவர்த்தியே! உனது பிரீதி எங்களிடத்தில் என்றும் மாறாதிருத்தல் வேண்டும்' என்று கூறி விடை பெற்றுச் சென்றனர்.

நாற்பத்தெட்டாவது ஸர்கம்

[அனேக தேசத்தரசர்களனுப்பிய பஹுமானங்களை ஸ்ரீராமன், வானர வீரர்களுக்குப் பரிசாக அளித்து அவர்களுடன் ஒரு வருஷம் ஸுகித்திருத்தல்]

            ஸ்ரீராமபிரானிடம் விடைபெற்றுச் சென்ற நாநா தேசத்தரசர்களும், தந்தாம் நகரத்தையடைந்து, ஸ்ரீராமனுக்குப் ப்ரீதி செய்வதன் பொருட்டு, அனேகவிதமான உயர்ந்த பரிசுகள், ரதங்கள யானைகள், குதிரைகன் ரத்தினங்கள், திவ்யமான ஆபரணங்கள், மணிகள், முத்துக்கள், பவழங்கள், பேரழகிகளான தாஸிகள், தோலினால் நிர்மாணிக்கப்பட்ட உயர்ந்த சயனங்கள் ஆகிய பலவும், தம்முடனே வந்த பரதன் முதலானவர்களிடம் உபஹாரமாசுக் கொடுத்தனுப்பினர். பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் முதலானோர், அவைகளனைத்தையும் அன்புடனே பெற்று அயோத்திக்குத் திரும்பினர்.. ஸ்ரீராமன் அப்பரிசுகளை அதிகப்ரீதியுடன் ஏற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் தமக்குப் பேருதவி புரிந்த, ஸுக்ரீவ மஹாராஜருக்கும், விபீஷணாழ்வானுக்கும், மற்றும் பல வானர ராக்ஷஸர்களுக்கும் அளித்தனன்.

        பிறகு ஸ்ரீராமன் அனுமானையும் அங்கதனையும் அழைத்து, மடிமீது உட்கார வைத்துக் கொண்டு, ஸுக்ரீவனை நோக்கி, இவ்வனுமான் உனக்கு நல்ல மந்திரியுமாக அமைந்தது உனது பாக்ய விசேஷமே யாகும். இவர்கள் உனது நன்மையை எவ்வாறு கருதுகின்றனரோ, அவ்வாறே எனது நன்மையையும் கருதுகின்றனர். ஆகவே! வானர ராஜனே! உன் பொருட்டாக இவர்களுக்கு, எவ்வளவு உபசாரங்கள் செய்யினும் ஏற்கும்' என உரைத்துத் தான் திருமேனியிலணிந்து கொண்டிருந்த விலையுயர்ந்த திருவாபரணங்க ளெல்லாவற்றையும் கழற்றி அங்கதனுக்கும் அனுமானுக்கும் அணிவித்து அழகு பார்த்தான். அதன் பிறகு ராமன், நீலன் நளன் - கேஸரீ - குமுதன் - ஸுஷேணன் -கஜன்- கவாக்ஷன்-ததிமுகன் முதலிய வானர வீரர்களைக் கொண்டாடி, அவரவருக்கு ஏற்றவாறு, அற்புதமான ஆடையாபரணங்களும் அணிவித்து, ஆலிங்கனமும் செய்து கொண்டான். அந்த வானரர்கள் மிகவும் இனிமையான, மது மாமிஸங்களையும், நாநாவிதமான காய் கிழங்குகளையும் யதேஷ்டமாக அருந்தி நல்ல மணமுள்ள விசித்ரமான மலர்களையும் அணிந்து மனம் மகிழ்ந்தவர்களாகி, அயோத்தி நகரிலேயே வஸித்துக் கொண்டிருந்தனர். இப்படியாக அவர்கள் ராமச்சந்திரனுடன் ஒரு வருஷ காலம் இனிது வஸித்து வர மறுபடியும் பங்குனி மாதம் வந்துவிட்டது.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா10:43 AM

    VASUKRISHNAN

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10:44 AM

    ஆஹா அற்புதம்
    உத்தர ராமாயணம் இதுவரை வாசித்ததில்லை. மேலும் படிக்க ஆசை.

    பதிலளிநீக்கு