திங்கள், 27 மார்ச், 2023

பலரும் படிக்காத ராமாயண உத்தர காண்டக் கதைகள் -- 45

 

நூறாவது ஸர்க்கம்

(புதன் இளையைக் கண்டு காமத்தை அடைதல்)

            பிறகு மீண்டும் ராமன் கூறத் தொடங்கி, “தம்பிகாள்! தாமரையிதழ் போன்ற கண்களையுடைய கட்டழகியாக மாறிய பின் இளையென்பவள் கால்களால் நடந்து சென்று இமயமலைச் சாரல் எங்கும் திரிந்து கொண்டிருக்கையில் அம்மலைக் கருகில் ஒரு அழகான பொய்கையைப் பார்த்தாள். அங்கு பூர்ண சந்திரன் போன்ற ஒளியுடையவனாய்க் காம வேட்கையை விருத்தி செய்கின்ற வடிவழகு வாய்ந்த ஒரு கட்டழகன் நடுத்தண்ணீரில் நின்று கொடிய தவம் புரிந்து வந்தான். அவன் சந்திரனது புத்திரனான புதனென்பவன். அது கண்டு ஆச்சரியமடைந்து இளையும் தன் பரிஜனங்களுடன் தடாகத்திலிறங்கி நீர் விளையாடினாள். சகோதரர்களே ! அக் காலையில்  புதன் இளையைக் கண்டு காம பாணங்களுக்கு வசப்பட்டவனாகித் தன்னை மறந்து தண்ணீருக்குள்ளேயே துடித்து சீக்கிரம் தண்ணீரினின்றும் கரையேறி தனது ஆச்ரமம் போய்ச் சேர்ந்தான். பிறகு புதன் அவ்விடத்தினின்று இளையுடன் கூடி விளையாடும் தோழிகளுக்குக் குறிகாட்டி கூவியழைத்து இளையின் வரலாற்றைப் பற்றி கேட்டான். அது கேட்ட அவர்கள் “ஐயா ! இவ்வுத்தமி எங்களுக்கு தலைவியாய் இருக்கின்றனள். இவளுககுப் புருஷன் ஒருவருமில்லை. இக்காட்டில் இவள் எங்களுடன் கூடி விளையாடிக் கொண்டிருக்கிறாள்”, என விளம்ப அப்பெண்கள் புகன்றது நன்கு புரியாதது கண்டு தனது யோக மகிமையால் இளமஹாராஜனது வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு அப்பாவையர் பலரையும் பார்த்து “நீங்கள் இம்மலைச் சாரலில் கிம்புருடர் என்னும் தேவஜாதிப் பெண்களாகி வாழ்ந்து வருவீர்களாக. விரைவில் உங்களுக்கேற்ற இருப்பிடங்களை அமைத்துக்கொள்வீர்களாக. இங்கு உங்களுக்கு இஷ்டமான கிம்புருடர் எனப் பெயர் பூண்ட கணவன்மார்களைப் பெற்று இனிது வாழ்க” என்றான். அங்ஙனமே அக்கோதையர்கள் கிமபுருஷ ஸ்த்ரீகளாகி அவ்வெற்பினிடமே சென்று வினோதமாக வசித்து வாழ்ந்து வந்தனர்.

நூற்றியொன்றாவது ஸர்க்கம்

[புதனுக்கு இளையிடம் புரூரவன் பிறந்தது]

            அப்பெண்களனைவரும் சென்றபின் அங்கு தனியே நின்ற இளையைப் புதன் கண்டு காமத்தினால் குறு நகைக்கொண்டு அவளுடன் இனிமையாக உரையாடித் தன்னை மணக்கும்படி வேண்டினான். நவக்ரஹங்களிலொன்றின் அதிபதியான புதன் தன்னை இங்ஙனம் வேண்ட இளையும் அவனழகைப் பார்த்து அவனுக்கு இணங்கினாள். உடனே புதன் அவளை மணந்து இனிது வாழ்ந்து வந்தான். அவ் வளவில் ஒரு மாத காலம் கடந்தது. கடக்கவே இளை அரசனாக மாறினாள். உடனே இள அரசன அங்கு நீர் நடுவில் தவம் புரிந்து கொண்டிருந்த புதனைப் பார்த்து “ஸ்வாமி! அடியேன் எனது சேனைகளுடன் இம்மலைப் பிரதேசததில் வேட்டையாடப் புகுந்தேன், எனது சேனை எங்குச் சென்றதோ அறியேன். நேரான வழி எனக்குத் தெரிய வில்லை. தயவு செய்து உண்மையைச் சொல்க”, என்று வேண்டினான்.

                இள மஹாராஜன் முன் நடந்த வரலாற்றின் நினைப்பிழந்தவனாகிக் கூறியதைக் கேட்டு புதன் அவனைப் பார்த்து, “ராஜனே, கஷ்டப் படாதே! மிகக் கொடிய சுல்மாரி பொழிந்து உனது ஜனங்கள் எல்லோரும் புடையுண்டு மாண்டனர். நீயோ அப் பெருமழைக்குப் பயந்து இவ்வாச்ரமத்தினுள்ளே படுத்து நித்திரையில் இருந்தபடியால் உயிரைப் பறி கொடாது பிழைத்தாய். இனி பயமும் மனக்லேசமும் ஒழிந்து மனத் தேர்ச்சி பெறுக. உனக்கு சுபமுண்டாகும். ஹே வீர! நீ கனி கிழங்குகளையே உணவாகக் கொண்டு இக் காட்டிலேயே இனிது வாழ்க”, என விடை கூறினான். அது கேட்டு அரசன் சற்று மனம் தேறினானாயினும் பரிஜனங்களைப் பறி கொடுத்த பெரிய துக்கத்தினால் மனம் தாளாதவனாகி புதனைப் பார்த்து முனிவர் பெருமானே! எனது சேனாவீரர்கள் எல்லோரையும் இழந்த பினனர், யான் இங்கு வசித்திருக்க விரும்பவில்லை. இராஜ்யத்தையும் இனி துறந்து விடுவேன். எனது மூத்த குமாரனான சசபிந்து என்பவன் தேசத்தை நன்கு பரிபாலித்து வருவான். ஆயினும் இதைவிட மேலான சுகத்துடனே வாழ்ந்த எனது சேனாவீரர்களின் பெண்சாதிகளைப் பாராதிருக்க எனக்கு மனந்தாளாமையால் எனக்கு விடையளிக்க ப்ரார்த்திக்கிறேன் என்று துயரத்துடன் வேண்டினான். அரசன் மனந்தவித்துச் சொன்ன மொழிகளைச் செவியுற்று புதன் அவ்வேந்தனைப் பார்த்து “ராஜேந்திர! வீணாக வருத்தப்படாதே. ஓராண்டு நீ இங்கு வாழ்ந்திருப்பாயாயின் யான் உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வேன். சிறந்த பலவானான நீ மனச்சோர்வு அடைவது :ஆகாது” எனக் கூறினான். அரசன் அது கேட்டு மனந்தேறி அங்ஙனமே உடன்பட்டு அவ்விடத்திலேயே வசிக்கலானான். அக்காலையில் அவன் ஒரு மாதம் பெண்ணுருவாக மாறி எப்பொழுதும் புதனுடனே கூடி மகிழ்ந்து வாழ்ந்து வந்தான்; மற்றெரு மாதம் புருஷனாக மாறித் தருமானுஷ்டானம் செய்து வந்தான். இங்ஙனம் ஒன்பது மாதம் செல்ல ஒன்பதாவது மாதத்தின் கடைசியில் இளையானவள் புரூரவன் எனும் ஒரு மகனைப் பெற்றாள். பிறந்த மாத்திரத்திலேயே அப் புதல்வன் தந்தைக்கு சமமான உருவமும் அழகும் உடையவனானது கண்டு உபநயநாதிகளைப் புதன் செய்து இனிது வளர்த்து வந்தான். அப்புதல்வனும் தந்தைக்கு ஸத்ருசமான ஆற்றலும் தேஜஸும் உடையவனாகி நன்கு வளர்ச்சியடைந்து வந்தான். அப்பால் புருஷனாக மாறின இளையைப் புதன் தருமமான பல கதைகளைக் கூறி மகிழ்ச்சியடையச் செய்து வந்தான்.

நூற்றிரண்டாவது ஸர்க்கம்

[புதன் அசுவமேத யாகஞ் செய்து இளனை மீண்டும் அரசனாக்கியது.)

            "தம்பிகாள் இளன் மீண்டும் ஆணுருக்கொண்டவளவில் மஹா மேதாவியான புதன் ஸம்வர்த்தகர், சியவனர், பார்க்கவர், அரிஷ்டநேமி, ப்ரமோதனர், துர்வாசர், முதலான சிறந்த மஹரிஷிகளை வரவழைத்து அரசனது (இளனது] சாபத்தை தவிர்க்கத் தக்க மார்க்கத்தைப் பற்றி அவர்களுடன் கூடி ஆலோசித்தான் அந்த சமயத்தில் கா்தம ப்ரஜாபதி பல மஹாநுபாவா்களான பிராமணர்களுடன் அங்கு வந்து குழுமியிருந்த முனிவர்களையும் புதனையும் பார்த்து “முனிவர்களே! இவ்வேந்தனுக்கு இப்பொழுது ஹிதமானது யாதென்று ஆராயுமிடத்து முன்னம இவனைச் சபித்த சிவபெருமானை வேண்டுவதைவிட வேறு மருந்து எனக்குத் தோன்றவில்லை. அசுவமேதத்தினும் உயர்ந்த யாகம் மற்றொன்று இல்லை. இந்த யாகமே அம்மஹாநுபாவனுக்கு ப்ரியமாகின்றது. ஆதலால் இப்பொழுது யாவரும் ஒன்று கூடி இவ்வேந்தன் பொருட்டு அவ்வேள்வி செய்வோம்,” என்று சொன்னார். அது கேட்டு யாவரும் அதற்கு இணங்கினா். உடனே ஸாவர்த்தர் எனனும் ராஜரிஷியின் சிஷ்யரான மருத்தரென்பவர் அந்த யாகத்திற்கு வேண்டிய எல்லா சாமான்களையும் சேகரித்தனர். புதனுடைய ஆச்ரமத்திற்கு அருகில் அசுவமேத யாகம் அற்புதமாக நடத்தப்பட்டது. அதனால் சிவன் பரம சந்தோஷமடைந்தவனாகி எல்லா ரிஷிகளுக்கும் எதிரில் வந்து தோன்றி அவர்கள் பிரார்த்தனையின்படி இளமஹாராஜன் எப்பொழுதும் புருஷனாகவே இருக்க அருள் புரிந்தனர். உடனே இளன் ஸ்த்ரீ ரூபம் மாறி என்றைக்கும் புருஷனாகவே விளங்கினான். எல்லா முனிவர்களும் விடை பெற்றுத் தம் தம் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இளமஹாராஜன் பாஹலிக தேசத்தை விட்டு மத்ய பிரதேசத்தில பிரதிஷ்டான மென்கிற மிகப் புகழ் வாய்ந்த பட்டணத்தை நிர்மாணித்தான். சசபிந்து [இவனது மூத்தமகன்] பாஹலிக நகரத்திலும் இளை ப்ரதிஷ்டான நகரத்திலும் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தனர். இள மஹாராஜன் தன் ஆயுள் முடிவில் பிரமம லோகஞ் சென்ற வளவில் அவனது புதல்வனான புரூரவன் பரதிஷ்டான நகரத்தில் பட்டாபிஷேகஞ் செய்யப் பெற்றான். ஆகையால் சகோதரர்களே! இத்தன்மையதன்றோ அசுவமேதத்தின் ப்ரபாவம்! இது செய்வதே தகுதியாகும்!” என்றான்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா10:00 PM

    உத்திர காண்டம். உத்திர காண்ட கதைகள் என்பது தானே சரி. காண்டக்கதைகள் என்பது சரியா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா10:02 PM

      உத்தர காண்ட கதைகள்

      நீக்கு