வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

31. பாதுகையின் விசேஷ உரிமை

பெரிய பெருமாளுக்குப் பெரிய பிராட்டியன்றி மற்றும் பல அந்தப்புர மஹிஷிகள் உண்டு. அவன் தன் திருவுள்ளப்படி ஒரு முறை வைத்துக்கொண்டு அந்த அந்தத் தேவியின் அருகே செல்வான். இந்தப் பாதுகாதேவிக்கு மட்டும் மற்ற தேவியரைப் போல் முறையென்பது கிடையாது. அவன் எந்தத் தேவியிடம் அணுகினாலும் பாதுகையின் துணை உண்டு. இந்தத் தேவி பாதுகை வடிவு கொண்டுள்ளதால் அவன் இவளுடன் எங்கும் செல்வதில் மற்ற தேவியர் பொறாமை கொள்ளவும் இடமில்லை. இப்படி எப்பொழுதும் பிரியாது துணை புரியும் தேவியாய் விளங்குகின்றாள் பாதுகை. மேலும் எம்பெருமான் திருவடியை எவர் முன்னிலும் தொடும் உரிமை பாதுகைக்கே உண்டு. அந்தப்புரத்தில் ஒருத்தியின் அறைக்கு மற்றொருத்தி செல்வதில்லை. பாதுகாதேவி எல்லா இடங்களிலும் கூச்சமின்றி அவனுடனே செல்லுபவள். இடைப் பெண்களிடத்தில் மற்றொருத்திக்குத் தெரியாது ஒருத்தியிடம் கண்ணனாய் நின்று செய்யும் குறும்புச் செயல்களையெல்லாம் நேரில் காணும் சாட்சியாய் விவங்குமவள் பாதுகாதேவி. இப்படி கணப்பொழுதும் அவனை விடாது சுற்றுமவள் பாதுகையே என்கின்றார் தேசிகன்.

32. பெருமாளும் பாதுகையும் ஒருவருக்கொருவர் வசப்பட்டவர்

சுதந்திரமென்பது பெருமாளுக்கும் பாதுகைக்குமே உண்டு. பெருமாள் வெளியில் எழுந்தருள்வதானால் பாதுகையை எதிர்பார்த்தேயாக வேண்டும். ஆதலின் பாதுகைக்கு வசப்பட்டவனாகின்றான். அதைப் பெருமாள் தரிக்காவிட்டால் பாதுகைக்குப் பயன் இல்லை. ஆதலால் அவனுக்கு வசப்பட்டவள் பாதுகை. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வசப்பட்டு நிற்க வாய்ப்பு உண்டேயன்றிப் பிறருக்கு வசப்படும் நிலை இவ்விருவருக்கும் இல்லை. மற்ற பிரபஞ்சம் முழுதும் இவர்களுக்கு வசப்பட்டதேயாம். இதை எடுத்துரைக்கின்றார் தேசிகன்.

33. பாதுகை பெருமாளுக்கு ஏற்ற உருவு கொள்ளல்

எம்பெருமான் எந்த வடிவு கொண்டாலும் எங்கு அவதரித்தாலும் பிராட்டி அவனைப் பிரிய மாட்டாள். வாமந ப்ரஹ்மசாரியாய் உருவம் கொண்ட பொழுதுகூட அவனைக் கணப்பொழுது பிரிந்திருக்கப் பிராட்டி உடன்படாததால் மான்தோலால் அவளை மறைத்துக்கொண்டன்றோ பலியிடம் யாசித்தான்! அவ்வாறே பாதுகையும் அவன் கண்ணனாகவோ திரிவிக்கிரமனாகவோ வடிவு கொண்டாலும் அவனைப் பிரிவதில்லை. கண்ணன் சிறு குழவிப் பருவத்தில் சகடவடிவுடன் தீங்கு செய்ய வந்த முரட்டு அசுரனைத் தன் மெல்லிய திருவடியால் உதைத்துத் தள்ளியபோது திருவடிக்கு ஏற்படும் வேதனைக்கு அஞ்சி இப்பாதுகையன்றோ ஊதி ஒத்தடம் கொடுத்துத் தடவி விட்டுக் காத்தது என்கின்றார் தேசிகன். அத்துடன் நில்லாது அவன் கொள்ளும் சிறியதும் பெரியதுமான திருமேனிக்கு ஏற்பப் பாதுகையும் அத்தகைய திருவுருக் கொள்வதும் ஒரு வியப்பு. திரிவிக்ரமனாய் உலகளந்த திருவடிக்கு ஏற்றவாறு பெரிய உருவம் கொண்டது பாதுகை. இங்குப் பெரிய பெருமாள் மூலவர் வடிவுக்கும் உத்சவத் திருமேனிக்கும் உள்ள திருவடியின் அளவுக்குத் தக்க உருவம் கொள்கின்றது. பாதுகை அவன் கொள்ளும் வடிவுக்கு ஏற்றவாறெல்லாம் தானும் கொள்வதைப் போற்றி மகிழ்கின்றார் தேசிகன்.

34. பாதுகை வெளியிடும் ஸாரார்த்தங்கள்

"பாதுகையே ஆழ்வார்-ஆழ்வாரே பாதுகை என்று கூறினோம். பாதுகைதான் ஆழ்வார் வடிவு கொண்டு தமிழ் மறையைக் கண்டருளியது. ஆழ்வாருடைய மகிழம்பூ மணம் திருவாய்மொழியிலும் வீசுகின்றது. மேலும் எம்பெருமானுடைய திருவடித் தாமரையின் பெருமையையே தமிழ் மறை போற்றுவதால் அதன் மணமும் வீசி அதனால் பெருமிதம் கொள்கின்றது அருளிச்செயல். பாதுகை திருவடியோடு சேர்ந்து ஒவ்வோர் அடிவைக்கும் போதும் செவிக்கு இனிய நாதங்கள் எழுகின்றன. அந்த நாதங்கள் எவை தெரியுமா? பாதுகை உபநிஷத்துக்களின் மணத்தை அருளிச் செயலில் சேர்த்து அவற்றையே இந்த ஸூக்தியும் போதிப்பதாய் உலகுக்குக் காட்டும் நாதங்களேயாகும். உபநிஷத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாதுகை வாயிலாக அனுபவிக்கின்றார் தேசிகன்.

35. பாதுகையைப் பந்தயம் வைத்தல்

கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் தேவிமார் என்று புராணமும் ஆழ்வாரும் கூறுகின்றனர். எல்லோரும் ஒரே காலத்தில் கண்ணன் பால் தத்தம் இஷ்டம் பெற விரும்புகின்றனர். கண்ணன் மறுப்பானா! அப்பெண்களின் எண்ணுக்கேற்ற அத்தனை திருமேனிகளை எடுத்துக் கொள்கின்றான். அந்த அந்தப் பெண்களின் இல்லங்களுக்கு எழுந்தருளப் பாதுகைகள் வேண்டுமே பதினாறாயிரம் திருமேனிகளுக்கு அவற்றினும் இரு மடங்கு உருவங்களைப் பாதுகை கொள்ள வேண்டியதாகின்றது. பாதுகைக்குத்தான் எத்தகைய தொண்டு புரிய நேர்கின்றது என்று வியக்கின்றார் தேசிகன். கண்ணன் ஆயிரக் கணக்கான உருவெடுத்துக்கொண்டு ஒரே காலத்திலும் எல்லாப் பெண்களின் வீட்டிலும் குதூகலிப்பதை அப்பெண்கள் அறியவில்லை. ஒவ்வொருத்தியும் தன்னுடன் மட்டுமே கண்ணன் இருப்பதாய் எண்ணுகின்றாள். கண்ணனுடன் கேளிக்கையாகச் சொக்கட்டான் ஆடுகின்றனர் பெண்கள். அவர்களுக்கு ஆட்டத்தின் நடுவிலேயே கண்ணன் எழுந்து மற்ற பெண்களிடம் சென்று விடுவானோ என்று ஓர் அச்சம் எழுகின்றது. அதற்காக அவன் எழுந்து நடப்பதற்குச் சாதனமான அவன் பாதுகையையே ஆட்டத்தில் பந்தயம் வைக்கின்றார்கள். ஆட்டத்தில் வெற்றி பெறுமவரைச் சேரும் அந்தப் பந்தயப் பொருள். எப்படியும் ஆட்டம் முடியும் வரையிலாவது அதை எடுக்க மாட்டானென்ற தைரியம் அப்பெண்களுக்கு. இந்த யுக்தி மற்றவர்க்குத் தெரிந்தால் அவர்களும் இவ்வாறே செய்வார்கள் என்ற அச்சத்தால் ஒவ்வொரு பெண்ணும் பந்தயம் வைக்கும் செய்தியைக் கண்ணனுக்கு மட்டும் கேட்கும்படி அவன் காதில் இரகசியமாகக் கூறுகின்றார்களாம். இப்படி பெண்களும் பாதுகை வாயிலாக நன்மை பெறுவதை அழகாய் வருணிக்கின்ருர் தேசிகன்.

36. பாதுகைக்கு எல்லாக் கைங்கர்யங்களிலும் முக்கியப் பங்கு

திருவரங்கன் ஸந்நிதியில் பாதுகைக்குப் பல விசேஷ உரிமைகள் உண்டு. பல அடியார்கள் வேறு பயனே நாடாமல் பெரிய பெருமாளின் திருவுள்ள உகப்பையே பயனாகக் கொண்டு பற்பல விசேஷ உத்ஸவங்களை நடத்துகின்றனர். குடை-சாமரம்-திருவால வட்டம் முதலிய கைங்கர்யக் கருவிகளுக்குச் சிற்சில சமயங்களில் தான் உபயோகம் உண்டு. ஆனால் பாதுகைக்கு மட்டும் ஒவ்வோர் ஆஸ்தாநத்துக்கு எழுந்தருளும் போதும் ஒவ்வோர் உபசாரத்தை ஸமர்ப்பிக்கும்போதும் முக்கியப் பங்கு உண்டு கைங்கர்யக் கருவிகளுள் பாதுகைபோல் முக்கிய ஸ்தானம் வகிப்பது வேறு இல்லையென்று திடமாய்க் கூறலாம். இப்படி பாதுகையின் சிறப்பைக் கொண்டாடுகின்றார் தேசிகன்.

37. கெளஸ்துபத்தினும் சிறந்தது பாதுகையின் மணி

திருவரங்கன் திருமேனியின் மேற்பகுதியான திருமார்பில் கெளஸ்துபமென்னும் இரத்தினம் பிரகாசிக்கின்றது. அதைச் சீவனுக்கு அதிஷ்டாந தேவதையென்று சாஸ்த்ரம் கூறும். பாதுகையோ திருமேனியின் கீழ்ப்பகுதியான திருவடிக்கும் கீழே விளங்குகின்றது. இதில் உள்ள பல இரத்தினங்களின் ஒளிக்கு அடியார்களின் பாபங்களைப் போக்குவதும் அதன் வாயிலாகச் சீவர்களை மோக்ஷம்வரை கொண்டு சேர்ப்பதுமே செயல். இவற்றின் பெருமையைச் சிந்திக்கும் போது ஜீவர்களுக்குத் தேவதையென்ற பெயரோடு நிற்கும் கெளஸ்துபம்கூட இவற்றிலும் தாழ்ந்ததே என்று கூறுவதற்கு என்ன தடை? என்கிறார் தேசிகன்.

38. எம்பெருமானிடம் பாதுகைக்குச் சலுகை மிகுதி

சேதநன் அபயம் வேண்டித் திருவரங்கனை அணுகுகின்றான். அவனது பாபத்தால் சீற்றம் கொண்ட எம்பெருமான் இவனைக் காண விரும்பாது வலப்பக்கம் திரும்புகின்றான். கருணையே வடிவு கொண்ட பெரிய பிராட்டி சேதநனிடம் கருணை காட்ட வற்புறுத்துகின்றாள். இடப்பக்கம் திரும்பினாலோ பொறுமையின் உருவமான பூமிதேவி சேதநன் பாபங்களைப் பொறுக்குமாறு வலியுறுத்துகின்றாள். இருவரிடமும் தப்பிக் கொள்ளக் கீழே நோக்கினால் அவன் அப்புறம் நகராதபடி பாதுகை அவன் திருவடிகளப் பிடித்துக்கொண்டு சேதநனுக்காக மிக மிகப் பரிந்து பேசி அவனைக் காத்தருளும்படி நிர்ப்பந்திக்கின்றாள். எம்பெருமான் என்ன செய்வான்? பாதுகையிடமிருந்து தப்ப முடியாமல் திணறுகின்றான். வேறு வழியின்றிச் சேதநனுக்கு அபயமளித்துக் காத்து விடுகின்றான். இப்படி மற்ற பிராட்டிமாருக்கு இல்லாத சலுகை திருவரங்கனிடம் பாதுகைக்கு உண்டென்று களிக்கின்றார் தேசிகன்.

39. பாதுகைக்கு ஒய்வில்லாத பொறுப்பு

உலகில் பெற்றோருக்கு ஒரே புதல்வன் இருந்தால் அவர்கள் தம் அன்பு முழுதையும் அவனிடமே சொரிவது இயல்பு. திருவரங்கன் ஏழு உலகங்களையும் தன் குடும்பமாகக் கொண்டுள்ள கிருஹஸ்தன் என்னப்படுகின்றான். ஒரே புத்திரனிடம் வைக்கும் அன்பை ஒவ்வொரு ஜீவனிடமும் வைத்து உலகைக் காக்கின்றான். அவனுக்கு உலகத்தைத் தாங்குவதில் சற்று ஒய்வு உண்டு. பாதுகைக்கு மட்டும் ஒய்வே இல்லை. ஏன்? அவன் திருக்கண் விழித்திருக்கும் நிலையில் நடந்து செல்லும்போதும் நிற்கும்போதும் பாதுகை அவன் திருவடிக்கீழ் நின்று அவனத் தாங்குகின்றது. அவன் திருப்பள்ளி கொள்ளும் பொழுதும் உலகைத் தாங்கும் பொறுப்பைப் பாதுகையிடம் வைத்து விடுகின்றன். வனவாச காலத்தில் தனியே நின்று நாட்டை ஆண்டு பழகியவளல்லளோ பாதுகை. இங்ஙனம் திருவரங்கன் விழிப்பிலும் உறக்கத்திலும் பொறுப்பைத் தாங்கும் அவளுக்கு ஒய்வே இல்லையேயென்று கவலையடைகின்றார் தேசிகன்.

40. தேவமாதர் தாலியிலும் பாதுகைச் சின்னம்

நம் நாட்டுப் பெண்கள் தங்கள் ஸெளமங்கல்யச் சின்னமாக அணியும் பொன்னாலான திருமங்கலியங்களில் எம்பெருமான் திருவடியை நினவூட்டும் திருமண்காப்பு வடிவத்தைப் பொறித்து அணிகின்றனர். இந்திரன் முதலிய திக்பாலர்களின் அந்தப்புரத்துப் பெண்களோ தங்கள் கணவன்மார்கள் நெடுங்காலம் வாழ வேண்டுமென்ற விருப்பத்துடன் பாதுகையிடம் அளவற்ற பக்தி கொண்டு தங்கள் தாலிகளில் பாதுகைச் சின்னத்தைப் பொறித்து அணிந்து கொண்டிருக்கின்றனராம். தேவமாதர் எம்பெருமானை விட்டு, அவன் திருவடியையும் விட்டுப் பாதுகையையன்றோ எல்லை நிலமாகக் கொண்டு வழிபடுகின்றனர். அதனால் தான் நம்மைக் காட்டிலும் நீண்டகால வாழ்வைத் தேவர்கள் பெற்றுள்ளார்கள் என்று முடிவு கட்டுகின்றார் நம் தேசிகன். நம் பெண்களும் இம்முறையைப் பின்பற்றினால் என்ன? செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக