சனி, 27 மார்ச், 2010

திருப்புல்லாணியில் திருக்கல்யாணம்.

பங்குனி உத்ஸவத்தின் ஆறாம் நாளான இன்று பெருமாள் தாயார் திருக்கல்யாணம். மற்ற எல்லா இடங்களிலும் பங்குனி உத்திரத்தன்று தானே சேர்த்தி? இங்கு மட்டும் ஏன் முன்னால்? மற்ற ஊர்களிலில்லாத ஒரு தனிப் பெருமை எங்கள் தாயாருக்கு! பெருமாளால் தாயாரைப் பார்க்காமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தாயார் ஸந்நிதிக்கு ஓடி வந்து அன்று பூராவும் தாயாரிடம் இருந்து மகிழ்ந்து இரவில் ஊஞ்சல் ஆடிக் களித்து நம்மையும் பரவசப்படுத்தி ஆஸ்தானம் திரும்புவார். அதனால் பிற ஊர்களில் உத்திரத்தன்று சேர்த்தியும், ப்ரளய கலகமும் நடந்தால், இங்கோ அன்று ப்ரளய கலகம் மட்டும், அதுகூட சில வருடங்களில் மறுநாள்கூட, நடக்கும். சரி!திருக்கல்யாணத்துக்கு வருவோம்.

மாலையில் பெருமாள்

மானவி லிறுத்து மிதிலாபுரிச் சனகேசன்
       மகளை முன்மணம் புணர்ந்து
மாதங்கமே றியேமாதவர் துதிக்க நீ
      மணிமருகில் வந்த தென்னத்
தான மும்மதமொழுகு மதயானை யேறியே
       தாமரைக் காடு பூத்துத்
தயங்குமொரு பச்சைப்பருவ முகில் வருவ
      போற் தாரணியெலாம் வழுத்த
மேனகை திலோத்தமை யிந்திராணி யுருவசி
     வெண்கவரிவீச மென்பூ
மேலிருந்தவளை நன்மணம் புணர்ந்தே தும்பை
      வேரி மணமாலை சூட்டித்
தேனலரு நறுமலர் விதான நாற்றியமணிச்
     சிறு சாளரங்கள் சூழ்ந்த
செம்பொன் மணிமேடை சூழ்புல்லாணி வீதி

களிலே

திருவீதிப்புறப்பாடு கண்டு கோயில் திரும்பி தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயார் எதிரில் வந்து நிற்க, இராமநாதபுரம் ஸமஸ்தானம் திவான், மணமகன், மணமகள் இருவருக்கும் புத்தாடைகள், ஆபரணங்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்க, பெருமாளிடமிருந்து புது வஸ்திரங்களும், திருமாங்கல்யமும் பெற்று அர்ச்சகர்கள் அதை தாயாருக்கு சேர்த்து மீண்டும் தாயாரிடமிருந்து மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பித்து திருக்கல்யாணம் இனிது நிறைவு பெற்றது. அவ்வளவுதானா! என ஆச்சர்யப்பட வேண்டாம். மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். நேரில் பார்த்து ஆனந்தப் பட வேண்டும்.

ஆனால் எங்கள் ஊர் திருக்கல்யாணத்தின் மூலம் பெருமாள் உலகுக்கு உணர்த்தும் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அந்த நாளில் மிக விவரம் அறிந்தவர்கள் நிறைந்திருந்த நாளில் மிக விரிவாக, இப்போது பல இடங்களில் நடப்பதுபோல், ஹோமங்கள் செய்து திருக்கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? பெருமாளின் திருவுளம் ஆடம்பரம் ஒழிமின் என்று உலகத்தார்க்கு அறிவுறுத்துவதற்காகவே இப்படி படு சிம்பிளாகத் தனது திருக்கல்யாணத்தை நடத்திக்கொள்கிறான் போலும்.

அவன் எவ்வளவு கருணாவத்ஸலன் பாருங்களேன். முந்தைய பதிவில் ஆந்திர மாநில ஸேவார்த்திகளை ஊக்குவிப்பார் யாருமில்லை என எழுதியிருந்தேன் இல்லையா? இது அவன் திருச்செவி சாற்றிக் கொண்டான் போலிருக்கிறது. திருக்கல்யாணத்துக்கு இராமநாதபுரத்திலிருந்து சுமார் 400 பேர் திரண்டு வந்திருந்தனர். LIC நாராயணன் என்று ஒருவர். இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமன் ஸந்நிதியில் ஸ்ரீராமபக்த சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பிரமிக்கத்தக்க கைங்கர்யங்களை அனாயாஸமாகச் செய்து வருபவர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தினம் வந்துகொண்டிருந்த ஸேவார்த்திகள் இன்று தினமும் நூற்றுக்கணக்கில் வருகிறார்களென்றால் இவரது அபார முயற்சியே காரணம். தான் மட்டும் செய்வதில்லை. எல்லோரையும் ஊக்குவித்து அனைவரையும் கைங்கர்யங்களில் ஈடுபட வைப்பது இவர் ஸ்பெஷாலிடி. இந்த நாராயணன் பிரசாரத்தாலே திருக்கல்யாணம் ஸேவிக்க வந்தவர்கள், ஆந்திர மாதர்களின் கோலாட்டங்களைப் பார்த்து வியந்து பாராட்டி அவர்களை உற்சாகப் பட்டுத்தி அவர்களை மன நிறைவடையச் செய்தனர். 

வீடியோக்கள் தொடரும். எங்கள் ஊர் மேல் “ஆற்காட்டார்” விசேஷ கவனம் செலுத்துவதால் இரவில் போன கரண்ட் இப்போதுதான் வந்தது. போன பாரா எழுதும்போது போய் விட்டது.

வெள்ளி, 26 மார்ச், 2010

திருப்புல்லாணி உத்ஸவம் 5ம் நாள்

திருப்புல்லாணி என்றதுமே செவிக்குணவு வேண்டாது வாய்க்குணவு தேடும் அடியேனைப் போன்றவர்களுக்கு ஞாபகம் வருவது திருப்புல்லாணி பால் பாயாஸம். அதற்காக ஒரு கட்டளை ஏற்படுத்தி இன்று வரை வெகு சிறப்பாக நடத்தி வருபவர்கள் திருவனந்தபுரம் ராஜாக்களும், ராஜாக்கள் இல்லாத நிலையில் திருவாங்கூர் சமஸ்தானமும்.
நேற்றைய 5ம் திருநாள் மண்டகப்படி உபயதாரர்களும் அவர்களே.

முன்னாட்களில் (சுமார் 15 வருடம் முன்வரைகூட) காலையிலே மிக அழகான புன்னை வாகனத்திலே பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருள்வார். அந்த வாகனம் பின்னப் பட்டதாலே இப்போதெல்லாம் பல்லாக்குதான். (யாரேனும் இதைப் படிப்பவர்கள் மனமுவந்து ஒரு வாகனம் செய்து கொடுத்தால் நன்றாயிருக்கும்). இரவிலே இங்குள்ள வாகனங்களிலேயே மிக அழகானதும், சித்தடக்கமாயுமுள்ள ஆதிசேஷ வாகனத்திலே புறப்பாடு.

பார்பூத்த தண்ணிழல் பரப்பு வெண்குடையு
        மாய்ப்பாத பாதுகையு மாகிப்
பெரியதொரு திருவரைக் கிசைந்த பட்டாடை
       யாய்ப் பாற்கடற் றெப்பமாகி
யேர்பூத்த மணிவிளக்கணை யிலகு சிங்கா
      தனம் இலக்குமண னுமாகி
யதிபதி யிராமானுஜ முனிவனாகி யெங்களுக் கினிய
      நல்ல மாறர் மேவுங்
கார்பூத்த வானகமுடி தொடு நெடியதொரு
     கவின் றிருப்புளி வடிவமாய்க்
கணபணப் பஃறலைப் பிணருடற்கட் செவிக்
     கனல்விழிச்சுடர் மணிப்பொற்
சீர்பூத்த திருவனந்தன்மடியின் மீதிலெழில்
    சிறந்த புல்லாணி மறுகில்
தேரோடும் வீதியிற்பவனி வருசெக நாத
   தெய்வச் சிலைக் கடவுளே

என வாகன மாலை போற்றும் திருவீதிப் புறப்பாட்டுக் காட்சிகள் சில இங்கே.

P1010424 புறப்பாட்டுக்காக ஆஸ்தானத்திலிருந்து வெளிவரல். குடவரை வாசலில்.

      

 

 

 

 

P1010426

P1010428

 

 

 

 

 

 

 

P1010432

 

ஆந்திராவிலிருந்து வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிற ஸேவார்த்திகளில் சிலர்.

 

 

 

P1010435

P1010437                                      P1010436                          

                 

 

 

 

 

 

இன்று ஆறாம் திருநாள்.

“துடித்தானைக் கருள்கருணைத் துடியானை
      அரக்கர் கிளைசோரச் சோர
அடித்தானைக் கமல மலரடியானை
     பாரதப்போர் அனைத்துந் தானே
முடித்தானை மணிமகுட முடியானை
     இடையர்நெய் பார்முழுதும் வாரிக்
குடித்தானைப் புல்லானிக் குடியானைக்
      கருமுகிலை”

இரவிலே யானை வாகனத்தில் ஸேவிக்கப் போகிறோம். அதன்பின் தாயாருடன் அவன் காணப்போகும் திருக்கல்யாண வைபவங்களைக் கண்டு ஆனந்திக்கப் போகிறோம்.

வியாழன், 25 மார்ச், 2010

4ம் திருநாள் ஆண்டவன் ஆச்ரமத்தில் திருமஞ்சனக் காட்சிகள்

பெருமாளைப் பார்த்து சந்தோஷப் படப் போகிற நேரத்தில் எழுத்து அனாவஸ்யம். இன்றைய ஶேஷ வாகனம் பற்றி நாளை தொடர்வேன்.















P1010416 

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் 4ம் நாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப் படி. காலையில் ஆச்ரமத்திற்கு பெருமாள் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. அடுத்த பதிவில் விரிவாக வீடியோவுடன் அதைப் பற்றி எழுதுவேன். அன்று இரவு,
ஸ்ரீஇராமன் பழையவை என்றும் இனியவை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கம்பீரமாய் காட்சி அளிக்கும் கருட வாகனத்தில் ஆச்ரம முகப்புக்கு வந்து தோழனாகச் சேர்ந்துகொள்ள,

P1010410

 

ஆச்ரம வாசலில் தோழர் வருகைக்காக, தேவாதிதேவனை

“உம்பருட னம்புயனு முமையம்மை
                               யொருபாகனு
          மொளிர் வச்சிர தரனுமே
லுபாதிசெயரரக் கரால்நொந்து முறையிடும்
                                                    போதி
          லுறுதுகிலை நீங்கு முன்னாட்
கம்ப மதயானைமுன் பம்புதிரை வாவியற்
         கருடா சலப்பிடரின் மேல்
கருணை குடிகொண்டதொரு நீலமேகங் கமலக்
         காடுபூத் தொளிர்வ தென்னத்P1010412
தும்புருவு நாரதரு மின்ப ராகங்களைச்
         சுருதிமுறைப் பாடி வரவே
தொண்டருட னண்ட பகிரண்டமூ தண்டமுந்
         தோத்திரஞ் செய்து தொழவே
செம்பொன் மகமேரு கிரிபோற் சிவந்
       தொளிர் பெரியதிருவடி புயாசலத்திற்
செந்தமிழ்ப் புல்லாணி வீதிவருசெக நாத
       தெய்வச் சிலைக் கடவு”
ளைத் தாங்கி நிற்கும் பெருமிதத்தோடு பூரித்து நிற்கும் புதிய கருட வாகனத்தில்  தயாராய்க் காத்து நின்ற ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருளி ஆஸ்தானம் அடைந்தார்.

'”திருப்புல்லாணி இரட்டை கருட ஸேவை என்பது நேரில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. உலகின் எங்காவது ஒரு மூலையில் வீட்டில் ஹாயாகச் சாய்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் பார்ப்பது கூடவே கூடாது” என்பது எங்கள் ஊர் கோவில் எலக்ட்ரீஷியன் கொள்கை. அதனால் இந்த இரட்டை கருட வாகனத்தைப் புகைப் படம் எடுப்பவர் எவ்வளவு விருது பெற்ற காமராமேன் ஆக இருந்தாலும் அவர்களுக்கு சவால் விட்டு தானே ஜெயிக்கும் வண்ணம் “விளக்குகளை அமைப்பதில் நிபுணர்.” எந்த ஆங்கிளில் நின்றாலும் காமரா லென்ஸில் Focus lightன் ஒளி பாயும். தேவஸ்தானமோ, ஊரில் மற்றவர்களோ கூலி கொடுக்க மட்டுமே கடமைப் பட்டவர்கள். மற்றப் படி அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும். இந்த அமெச்சூர் எடுத்த படம் எப்படி நன்றாக வரும்? பாருங்களேன்.

P1010414

P1010415

P1010416

P1010417

ஆச்ரமத்தின் முன்பாக திருவீதிப் புறப்பாடு துவக்கம்

P1010419

P1010420

திருப்புல்லாணி கருடோத்ஸவம்

இன்று திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் நான்காம் நாள். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி. காலையில் திருவீதிப் புறப்பாட்டிற்குப் பின் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளிய பெருமாள் இரவு, ஸ்ரீமத் ஆண்டவன் உபயமாக அளித்த  நூதன கருட வாகனத்தில், மற்றொரு கருட வாகனத்தில் ஸ்ரீஇராமன் துணைவர திருவீதிப் புறப்பாடு முடித்துக் கொண்டு ஆஸ்தானம் திரும்பினார்.

முழு விவரங்களும் நாளை தருவேன்.