வியாழன், 2 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன்.



திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 15 ஆவது வெளியீடு
24-9-1944 தாரண ௵ புரட்டாசி ௴கேட்டை நன்னாளில்
திருவயிந்தை ஶ்ரீதேசிகன் திருவடி வாரத்தில்
வெளியிடப்பட்ட

அடைவு அமைக்கும் அற்புதன்

||ஶ்ரீ:||
ஶ்ரீமதே ராமானுஜாய நம:




அடைவு அமைக்கும் அற்புதன்


வித்தகன் வேதியன் வேதாந்ததேசிக னெங்கள் தூப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன் கலைகள்
மொய்த்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமறக்
கைத்தவ னென்றுரைத்தேன் கண்டிலேனென் கடுவினையே.
                                                                                                     (பிள்ளையந்தாதி)

அவதாரிகை


"செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற்சீரிய 
கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்" --- (பாலகாண்டம், நகரப்படலம்)
என்றும்,
கோதாவரியை வருணிக்கின்ற இடத்தில்,

"புவியினுக் கணியாயான்ற பொருடந்து புலத்திற்றாகி
அவியகத்துறை கடாங்கி யைந்திணை நெறியளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்க முந்தழுவிச் சான்றோர்
கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்."
                                            (ஆரணிய காண்டம், சூர்ப்பனகைப் படலம்)
எனக் கவி லக்ஷணத்தை ஆற்றின் மேலேற்றிக் கூறியவாற்றானும், பம்பைப் பொய்கையை வர்ணிக்குங்கால்,
"கற்பக மனையவக்க விஞர் நாட்டிய
சொற்பொருளா மெனத் தோன்றல் சான்றது."
                       (கிட்கிந்தா காண்டம், பம்பாநதிப் படலம்)

எனக் கூறியவகையாலும், கல்வியிற் பெரிய கம்பர் கருத்திற்கொண்ட கவிபாவம் இன்னதென்பது வெளிப்படை. அவர் கொண்ட விலக்கணத்துக்கு விலக்கியமாய் நிற்பதே இராமாவதாரம் என்பதோர் பேருண்மை.

        கம்பர் கவிச் சக்கரவர்த்தி. தூப்புல் வேதாந்ததேசிகன் என்ற சந்தமிகு தமிழ்மறையோன் தென்வடமொழி நாவலராய்த் திகழ்ந்த கவி வாதி சிங்கர். இவர் பற்பல கலை வல்ல பாவலர். பத்தரேத்தும் அற்புதர். அற்புதரே அறியும் மெய்த்தவர். இவரது தமிழ்க்கவிகள் உவமையற்றன. அவற்றில் அடைவு அமைக்கும் பெற்றியினைச் சற்றுக் காட்டுவாம் இங்கு.

ஆழ்வார்கள் அடைவு.

ஆழ்வார்கள் பதின்மர் என்று,

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வருங்குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
தொண்டரடிப் பொடி மழிசை வந்தசோதி
வய்யமெலா மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் .........
-(அதிகாரச் சுருக்கு 1)


[(1)பொய்கைமுனி--பொய்கையாழ்வார்; (2) பூதத்தார்- பூதத்தாழ்வார்; (3)பேயாழ்வார்; (4) தண் பொருநல் வருங்குருகேசன் - நம்மாழ்வார் ; (5) விட்டுசித்தன் - பெரியாழ்வார் ; (6) துய்ய குலசேகரன் - குலசேகராழ்வார் ; (7)நம்பாணநாதன் - திருப்பாணாழ்வார்; (8) தொண்டரடிப்பொடி- தொண்டரடிப் பொடியாழ்வார்; (9) மழிசைவந்த சோதி திருமழிசையாழ்வார்; (10) வய்யமெலா மறை விளங்க வாள்வேலேந்தும் மங்கையர்கோன் திருமங்கையாழ்வார் ]
என்ற பாசுரத்தில் அமைத்துள்ளார்.

அவர்கள் பன்னிருவர் என்பதை,
வையகமெண் பொய்கை பூதன் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ் மாறன் மதுரகவி
பொய்யில் புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
அய்யனருட் கலியன் ..................
- (பிரபந்த சாரம் 17)

(மகிழ்மாறன் - நம்மாழ்வார் ; கோழியர்கோன்--குலசேகராழ்வார் ; கோதை ஆண்டாள் ; கலியன்-திருமங்கையாழ்வார்.) இங்குற்ற அடைவுவருமாறு :-
(1) பொய்கையாழ்வார் (2) பூதத்தாழ்வார் (3) பேயாழ்வார் (4) திருமழிசையாழ்வார் (5) நம்மாழ் வார் (6) மதுரகவியாழ்வார் (7) குலசேகராழ்வார் (8) பெரியாழ்வார் (9) ஸ்ரீ ஆண்டாள் (10) தொண்டரடிப்பொடியாழ்வார் (11) திருப்பாணாழ்வார் (12) திருமங்கையாழ்வார்.
முன்னர்க் கூறியதில் நம்மாழ்வாரைக் கூறவே மதுரகவியாரும், பெரியாழ்வாரைக் குறிக்கவே
ஸ்ரீ ஆண்டாளும் குறிக்கப் பெற்றார் என்ப. எனவே, "பதின்மர்” பின் வருமாறுஅடைவு அமைக்கப் பெற்றுள்ளனர்.

அதிகாரச் சுருக்கு                                               பிரபந்தசாரம்

1. பொய்கையாழ்வார்                              1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்                                          2. பூதத்தாழ்வார்`
3. பேயாழ்வார்                                              3. பேயாழ்வார்
4. நம்மாழ்வார்                                             4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்                                         5. நம்மாழ்வார்
6. குலசேகராழ்வார்                                    6. குலசேகராழ்வார்
7. திருப்பாணாழ்வார்                                7. பெரியாழ்வார்
8. தொண்டரடிப்பொடியாழ்வார்          8. தொண்டரடிப்பொடியாழ்வார்
9. திருமழிசையாழ்வார்                            9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்                         10. திருமங்கையாழ்வார்

ஶ்ரீ மணவாளமாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை நான்காவது பாசுரம் 

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன்அருள் மாறன் சேரலர்கோன் -- துய்யபட்ட
நாதன் அன்பர் தாள்தூளிநற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு. 

என்பதிற் காணப்படும் அடைவு மேலே காட்டப் பெற்றுள்ள பிரபந்தசார அடைவை அப்படியே கொண்டுள்ளது.

இராமாநுச நூற்றந்தாதியிலுள்ள "அடைவுஅமைப்பு" பின்வருமாறு.

1. பொய்கைப்பிரான் (பொய்கையாழ்வார்) 2. பூதத்தாழ்வார் 3. தமிழ்த் தலைவன் (பேயாழ்வார்)
4. பாண்பெருமாள் (திருப்பாணாழ்வார்) 5. மழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) 6. தொண்டரடிப் பொடியாழ்வார் 7. கொல்லி காவலன் (குலசேகராழ்வார்) 8. பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) 9. மாலை சூடிக் கொடுத்தவள் (ஶ்ரீ ஆண்டாள்) 10. தண்தமிழ்செய்த நீலன் (திருமங்கையாழ்வார்) 11. சடகோபன் (நம்மாழ்வார்). 12. மதுரகவி யாழ்வார்.

ஶ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத
ஶ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஶ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

இங்கு காட்டிய அடைவு வருமாறு.

1. பூதம் (பூதத்தாழ்வார்) 2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) 4. பட்டநாதர் (பெரியாழ்வார்) 5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் 6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) 8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) 9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) 11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).

ஆழ்வார்கள் அருளிச்செயல்கள்

        ஆழ்வாராதிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் இருபத்து நான்கு என்றும், அவற்றின் பாசுரத் தொகை நாலாயிரம் என்றும் "பிரபந்த சாரம்" என்னும் பிரபந்தத்தில் அறுதியிட்டுள்ளார் மறைமுடித் தேசிகனார்.

"எண்ணில் முதலாழ்வார்கள் மூன்று நூறும்
எழில் மழிசைப்பிரானிரு நூற்றொரு பத்தாறும்
உண்மை மிகுமாறன் மறையாயிரத்தோ
டுற்றவிரு நூற்றுத் தொண்ணூறுமாறும்
வண்மையுடை மதுரகவி பத்துமொன்றும்
வஞ்சியர் கோனூற்றைந்தும் பட்டநாதன்
பண்ணிய நானூற்றேழு பத்துமூன்றும்
பார்க்கோதை நூற்றெழுபத்து மூன்றே" 

பத்தரடிப்பொடி பாட லைம்பத்தைந்தும்
பாணர் புகழ்பத்துடனே பரகாலன்சொல்
அத்தனுயர் வேங்கடமாற் காயிரத்தோ
டானவிரு நூற்றோரைம்பத்து மூன்றும்
முத்திதரு மெதிராசர் பொன்னடிக்கே
மொழிந்த வமுதனார் பாடல் நூற்றுமெட்டும்
எத்திசையும் வாழவிவை பாடிவைத்த
வென்பவை நாலாயிரமுமெங்கள் வாழ்வே."

கீழ்க்கண்ட அட்டவணை இதனை நன்குவிளக்குதல் காண்க










ஆசார்யர்கள்.

முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானளவுஞ்செல்ல அநுஸந்திக்க வேணுமென்றோதப்பட்டது" என்று ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரமாகிய நன்னூற்கு முகவணியாகவுள்ள குருபரம்பராஸாரத்தில் வேதாந்தகுரு கூறுவதுடன் அக்குரு பரம்பரையின் அடைவை அவர்கள் திருநாமங்கள், செய்தருளிய பிரபந்தங்கள், முதலியவற்றுடன் பின்வருமாறு விவரிக்கின்றார்:-

“ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் ..... பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக வொரு தசாவதாரம் பண்ணி மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி ஸர்வோபஜீவ்யமான தண்ணீராக வுமிழுமாப் போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கு மதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்.... பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றுஞ் சொல்லுகிறபடியே அகஸ்த்ய ஸேவித தமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே யவதரித்தருளினான்...

இவ்வாசார்யர்களில் ஈச்வரமுநிகள் பிள்ளை நாதமுநிகள். இவர் ந்யாயதத்வம் என்கிற சாஸ்த்ரமும் யோகரஹஸ்யமும் அருளிச்செய்தார். இவருக்கு ஸ்ரீ மதுர கவிகள் முதலாகவுண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும், போகதசையிலே ஸாக்ஷாத் க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்ய ரானார். 
நாதமுநிகள் பிள்ளை ஈச்வரபட்டாழ்வான். ஈச்வரபட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள். (1) ஆகமப்ராமாண்யம் (2) புருஷ நிர்ணயம் (3) ஆத்மஸித்தி (4) ஈச்வரஸித்தி (5) ஸம்வித்ஸித்தி (என்கிற ஸித்தித்ரயமும்) (6) ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் (7) ஸ்தோத்ரம் (8) சதுச்லோகி. ஆக எட்டு. 

ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டைநம்பி பிள்ளை என்னாச்சான்.. என்னாச்சான் பிள்ளைகள் நால்வர். இவர்களிலொருவர் பிள்ளையப்பர். பிள்ளையப்பர் பிள்ளைதோழப்பர். தோழப்பருக்குப் பெண் பிள்ளைகளிருவர். நாதமுநிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள் (1) உய்யக் கொண்டார் (2) குருகைக்காவலப்பன் (3) நம்பி கருணாகரதாஸர் (4) ஏறு திருவுடையார் (5) திருக்கண்ணமங்கையாண்டான் (6) வானமாதேவியாண்டான் (7) உருப்பட்டூ ராச்சான் பிள்ளை. (8) சோகத்தூராழ்வான். ஆக எண்வர்.

உய்யக்கொண்டார் ஸ்ரீ பாதத்தையாச்ரயித்தவர்கள் ஐவர் . அவர்களாகிறார் :- (1) மணக்கால் நம்பி (2) திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர் (3) சேட்டலூர் செண்டலங்காரர் (4) ஸ்ரீ புண்டரீகதாஸர் (5) உலகப்பெருமாள் நங்கை. 

மணக்கால் நம்பி ஸ்ரீ பாதத்தை யாச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார்:- (1) ஆளவந்தார் (2) தெய்வத்துக் கரசுநம்பி (3) கோமடத்துத் திருவிண்ணகரப்பன் (4) சிறுப்புள்ளூராவுடையபிள்ளை (5) ஆச்சி. 

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் பதினைவர். அவர்களாகிறார் (1) பெரியநம்பி (2) திருக்கோட்டியூர் நம்பி (3) திருமாலையாண்டான்(4) ஆளவந்தாராழ்வார் (5) திருமலைநம்பி (6) ஈசாண்டான் (7) தெய்வவாரி யாண்டான் (8) சிறியாண்டான் (9) திருமோகூரப்பன் (10) திருமோகூர் நின்றார் (11) தெய்வப்பெருமாள் (12)திருமங்கையாளியார் (13) பிள்ளை திருமாலிருஞ் சோலைதாஸர் (14) மாறனேர் நம்பி (15) ஆள் கொண்டி.

பெரியநம்பி ஸ்ரீபாதத்தையாச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார் :- (1) எம்பெருமானார் (2) மலை குனிய நின்றார் (3) ஆர்ய ஸ்ரீ சடகோபதாஸர் (4) அணியரங்கத்தமுதனார் (5) திருவாய்குலமுடையான் பட்டர் (6) திருக்கச்சி நம்பி. 

எம்பெருமானார், திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் ரஹஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்; திருமாலையாண்டான் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழி கேட்டார் ; ஆளவந்தாராழ்வார் ஸ்ரீ பாதத்திலே திருவாய்மொழியுமோதி ஸ்தோத்ரமும் அருளிச்செய்யும் நல்வார்த்தைகளுங் கேட்டருளினார்; திருமலை நம்பி ஸ்ரீபாதத்திலே ஶ்ரீமத் ராமாயணங் கேட்டருளினார். இவர் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் :- 1. ஸ்ரீ பாஷ்யம் 2. தீபம் 3. ஸாரம் 4. வேதார்த்த ஸங்க்ர ஹம் 5. ஸ்ரீ கீதாபாஷ்யம் 6. சிறிய கத்யம் 7. பெரிய கத்யம் 8. ஸ்ரீவைகுண்டகத்யம் 9. நித்யம். ஆக ஒன்பது. இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளைத் தந்தாம் ஸம்ப்ரதாயப் படிகளிலே யறிந்து கொள்வது.

'' ஸ்ரீ பாஷ்யகாரர் தொடக்கமாக எம்பெருமானளவும் உள்ள ஆசாரியர்களின் அடைவை அநுசந்தாநக்கிரமத்தில் ஸ்ரீதேசிகன் அருளியுள்ள அழகு அழியாவழகு. அப்பாசுரம் ஈதே.

" என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே யவர்குருக்கணிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகளென் றிவரை முன்னிட்
டெம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.'

                                                -(அதிகாரச் சுருக்கு 3) 

 (பெரும்பூதூர் வந்தவள்ளல் - எம்பெருமானார் ;சடகோபன் -- நம்மாழ்வார் ; சேனை நாதன் - விஷ்வக்ஸேநர்.)

இங்குற்ற அடைவு. 1. ஸ்ரீ பாஷியகாரர், 2. பெரியநம்பி, 3. ஆளவந்தார், 4. மணக்கால் நம்பி, 5. உய்யக்கொண்டார், 6. நாதமுனி, 7. சடகோபன், 8. சேனை முதலியார், 9. பெரிய பிராட்டியார், 10. எம்பெருமான்.

இங்கு குறிக்கப்பெற்றுள்ள பூருவாசாரியர்கள் பதின்மர் என்பது குறிக்கொள்ளத் தக்கது.


---- தொடரும் --




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக