வியாழன், 23 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1
களம் 4

தொடர்கிறது

மந்தரை:-- மேல் நடத்தவேண்டிய விஷயமென்ன? இந்தப் பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிட வேண்டியதுதான்.

கைகேயி:-- அது எனக்கும் தெரிகிறது. அதை எப்படித் தடுப்பதென்பதல்லவோ யோசனை?

மந்தரை:-- அம்மா, என் யோசனையைப் பெரிதாக மதித்துக் கேட்க ஒருப்பட்டீர்களே, இதுவே போதும். இனித் தங்களுக்கு ஆபத்தொன்றும் வராது. கவலைப்படவேண்டாம். தங்கள் கணவர் தாமாக, பரதனுக்குப் பட்டங்கட்டத் தவறினால், அவனுக்கு எப்படிப் பட்டங்கட்டுவதென்பதைப் பற்றி, இப்பொழுதல்ல, பரதன் பிறந்தது முதல் நான் யோசித்து வைத்திருக்கிறேன். அந்த யோசனை இப்பொழுது பயன்பட்டது.

கைகேயி:-- என்னடி அது?

மந்தரை:-- தங்கள் கணவர் சம்பராசுரனோடு யுத்தஞ் செய்தாரல்லவா?

கைகேயி:-- ஆம்

மந்தரை:-- அப்பொழுது நீங்கள் அவருக்கு ஒரு பேருதவி புரிந்திருக்கிறீர்களல்லவா?

கைகேயி:-- ஆம்.

மந்தரை:-- அவ்வுதவிக்குப் பிரதியாக அவர் தங்களுக்கு இரண்டு வரங்களளித்தாரல்லவா?

கைகேயி:-- ஆம், ஞாபகமிருக்கிறது.

மந்தரை:-- அவ்வரங்களிரண்டையும் பெற்றுக் கொண்டீர்களா?

கைகேயி:-- இல்லை

மந்தரை:-- ஏன்?

கைகேயி:-- அவைகளை நான் வேண்டியபோது பெற்றுக்கொள்ளலாமென்று அவர் கூறினார். நானும் அதற்குச் சம்மதித்தேன். அப்புறம், அவைகளைப் பெறத்தக்க சமயம் ஒன்றும் நேரவில்லை, ஆதலால் பேசாமல் இருந்துவிட்டேன்.

மந்தரை:-- அம்மா, அந்தச் சமயம் இதோ வந்துவிட்டது. அவ்வரங்களை இப்பொழுது உபயோகப்படுத்தாமல் வேறெப்பொழுது உபயோகப்படுத்தலா மென்றிருக்கிறீர்கள்?

கைகேயி:-- அது வாஸ்தவந்தான். அவைகளை எப்படி உபயோகப் படுத்தலாமென்கிறாய்?

மந்தரை:-- இது கூடவா கேட்கவேண்டும்? நமக்கு ஆகவேண்டிய காரியங்கள் இரண்டு. ஒன்று இராம பட்டாபிஷேகத்தைத் தடுப்பது. மற்றொன்று பரத பட்டாபிஷேகத்தை முடிப்பது. இரண்டுக்கும் இரண்டு வரங்கள் சரியாய்ப் போய்விட்டன. முதல் வரம் பரதன் நாடாள வேண்டுமென்பது. இரண்டாவது வரம் இராமன் காடேக வேண்டுமென்பது.

கைகேயி:-- என்னடி மந்தரை! இராமன் நமக்கென்ன செய்தான்? அவன் நாட்டிலிருந்தால் நமக்கென்ன? நாம் வேண்டுவது பரதனுக்குப் பட்டம். அது முடிந்துவிட்டால் அப்புறம் நமக்கென்ன கஷ்டம்? இராமன் இங்கிருப்பதாலென்ன நஷ்டம்? அவனை அனுப்புவதில் இஷ்டமில்லை எனக்கு. இந்த துஷ்ட புத்தி ஏன் உனக்கு?

மந்தரை:-- அம்மா! நீங்கள் பின் வருவதொன்றையும் யோசியாமற் பேசுகிறீர்கள். இராமன் நாட்டிலிருந்தால் பரதனுக்குப் பட்டமென்று வாயாற்கூடச் சொல்லலாமா? இராமன் சக்கரவர்த்திக்கு மூத்த குமாரனென்பதை எல்லாரும் அறிவர். இராமனுக்கென்று பட்டம் குறித்திருப்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் பரதனுக்குப் பட்டம் நிலைக்குமா? பரதனுக்குப் பட்டமாகும்போது இராமன் நாட்டிலிருந்தால், அவனுடைய முயற்சியில்லாமலேயே ஜனங்களால் கலகமும் அராஜகமும் நேரிடும். ஜனங்கள் கண்ணுக்கு மறைவாய் அவன் காட்டிலிருந்தால் தேசம் அமைதியாயிருக்கும். இது ஒரு ராஜதந்திரம். அரசியாயிருக்கும் தாங்கள் இதை அறியாது பேசுகிறீர்களே!

கைகேயி:-- மந்தரை! நீ சொல்வது சரி. இராமன் சக்களத்தி மகனாயிருந்தாலும் சிறுவனாயிற்றே. அவனைக் காட்டுக்கனுப்பிக் கஷ்டப்படச்செய்வது என் மனதுக்கு அவ்வளவு உசிதமாகத் தோன்ற வில்லை.

மந்தரை:-- கஷ்டமா? காட்டுக்குப் போவதில் கஷ்டமென்னம்மா? ஆழ்ந்து பார்த்தால் அதில் அவனுக்கு அநேக நன்மைகள் உள்ளன. புண்ணிய நதிகளில் நீராடலாம். மகரிஷிகளைத் தரிசிக்கலாம். அவர்களால் அநேக நன்மைகளைப் பெறலாம்; நிச்சிந்தையாய்க் காலங் கழிக்கலாம். இதில் உங்களுக்கு என்னம்மா கவலை? முன் விசுவாமித்திரர் யாகத்தை முற்றுவிக்க வனத்திற்குச் சென்றானே, அப்பொழுது அவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தது? ஒன்றுமில்லையே! அப்பொழுது அவன் அடைந்த இலாபங்கள் எவ்வளவு? விசுவாமித்திரரிடம் அநேக அஸ்திர மந்திரங்களைக் கற்றுக் கொண்டான்; அகல்யைக்குச் சாப விமோசனம் செய்து கௌதமர் அனுக்கிரகத்தை அடைந்தான். ஜனகன் மகளை மனைவியாகப் பெற்றான். பரசுராமரைப் பங்கப்படுத்திப் புகழ் பெற்றான். சிறிது காலம் வனவாசஞ் செய்ததால் இவ்வளவு நன்மைகளைப் பெற்றானே, இன்னும் கொஞ்சம் நீடித்த காலம் வனத்தில் வாசம் செய்வானானால் எவ்வளவு இலாபங்களை அடைவான் தெரியுமா?

கைகேயி:-- மந்தரை, நீ சொல்வதும் ஒருவகையில் நியாயமாய்த் தானிருக்கிறது. எனக்கும் மனச்சம்மதமாகிவிட்டது. சக்கரவர்த்தி அதற்கு ஒப்ப வேண்டுமே?

மந்தரை:-- அதுவா ஒரு பெரிய காரியம்! முன்னம் விசுவாமித்திரர் வந்து இராமனைக் காட்டுக்கனுப்பும்படி கேட்டபோதும் தங்கள் கணவர் வெகுவாகத்தான் மனங்கலங்கினார். பிறகு வசிஷ்டரால் மனந்தேறி அவனை அனுப்பவில்லையா? ஒரு கிழவரால் முடிந்த காரியம், யௌவன ஸ்திரீ, அதிலும் பட்டஸ்திரீ, பட்ட ஸ்திரீயிலும் இஷ்டஸ்திரீயாகிய தங்களால் ஆகாதா?

கைகேயி:-- உண்மை.

நன்று சொல்வினை நம்பியை நளிர்முடி சூட்டல்
துன்று கானத்தி லிராமனைத் துரத்தலிவ் விரண்டும்
அன்ற தாமெனில் அரசன்முன் னாருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென்யான் போதிநீ தோழி.

மந்தரை! நன்றாய்ச் சொன்னாய். நீ இவ்வளவு யோசனை கூற அதற்கு மேலாக வேண்டிய அற்ப விஷயம் என்னால் முடியா விட்டால் அப்புறம் எனக்குப் பெண்ணென்ற பெயரேன்? அரசரை நான் கேட்கவேண்டிய வரங்கள் இரண்டு; ஒன்று என் மகன் பரதனுக்கு முடி சூட்டல், மற்றொன்று இராமனைக் காட்டுக்குத் துரத்தல். இந்த இரண்டு வரங்களையும் அவர் கொடுக்காவிட்டால் அவரெதிரிலேயே நான் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறப்பேன். இனி நீ போகலாம்.

மந்தரை:-- அம்மா, அப்படிப் பதஷ்டமாக ஒன்றும் செய்து விடாதீர்கள். உயிர்துறப்பது போல நடிக்கவேண்டுமே யொழிய உயிரைத் துறந்து விடக்கூடாது. சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரமெழுத வேண்டும்!

கைகேயி:-- மந்தரை! என்மேல் உனக்குள்ள பிரியத்திற்குப் பிரதி நான் என்ன செய்யப் போகிறேன்? உலகத்தில் அனேக கூனிகளிருக்கிறார்கள். அவர்களெல்லாம் வெகு துர்க்குணமும் மிக அவலக்ஷணமும் பொருந்தியவர்கள். நீயோ, கண்ணுக்கினிய கமலமொன்று காற்றால் ஒருபுறம் வளைந்து நிற்பது போல, உனது கூனால் வளைந்து அழகாய் நிற்கிறாய். நீ வெண்பட்டொன்றை விசித்திரமாய் உடுத்து அழகாக என் முன்னே நடக்கும் போதெல்லாம் ஒரு சிறந்த இராஜஹம்ஸப்பேடுபோல் தோற்றுகிறாய். சக்கரவர்த்திக்குச் சாரதியாய்ச் சென்றபொழுது சம்பராசுரன் மாயைகளைப் பார்த்துள்ளேன். அவ்வசுரர் தலைவனைக் காட்டிலும் நீ மாயையில் வல்லவள். தேரின் கோணம்போல் உயர்ந்து தோன்றும் உனது கூன் எவ்வளவு புத்திகளையும் யுக்திகளையும் அரச வித்தைகளையும் மாயைகளையும் அடக்கிக் கொண்டிருக்கிறது! எனக்கு நீ செய்த உதவியை நான் என்றும் மறவேன். இராமன் காட்டுக்குப்போய் பரதன் பட்டத்துக்கு வந்தவுடன் நான் ஆணிப்பொன் மாலையொன்று உன் கூனிற் பொலியச் சூட்டுகிறேன். என் காரியம் கைகூடினதும் களிப்போடு உனது கூனுக்குச் சந்தனம் பூசுகிறேன். எனது மனோரதம் முற்றினால், குற்றமற்ற பொற்றிலக மொன்று, உனது நெற்றிக்கிடுவேன்; கழுத்திற்குப் பல அணிகலன்களும் தருவேன். அவைகளையெல்லாம் அணிந்துகொண்டு, விலையுயர்ந்த பட்டாடைகளை உடுத்துக்கொண்டு ஒரு தேவதைபோல் நீ என்கண் முன்பாக உலாவிக் கொண்டிருப்பாய். அந்தரத்துள்ள சந்திர பிம்பமோ என்று யாரும் ஐயுறும்படியான முகத்துடன் விளங்கி சத்துருக்களைப் பார்த்துச் செருக்குற்று நீ நடக்கப் போகிறாய். எனக்கு நீ பணிபுரிவதுபோல, பல கூனிகள் பட்டாடையும் பலப்பலவாபரணங்களும் பூண்டு உனக்குப் பணிவிடை செய்வார்கள்.

மந்தரை:-- எனக்குப் பட்டாடையும் வேண்டாம், பணிப்பெண்களும் வேண்டாம். என் கண்மணி பரதனுக்குப் பட்டமானால் அதுவே போதும். நேரமாயிற்று, நான் போய் வரட்டுமா?

கைகேயி:-- சற்றுப்பொறு, சக்கரவர்த்தி வரும்பொழுது நான் இருக்கும் கோலத்தையும் பார்த்து விட்டுப்போ.
(கைகேயி படுக்கையைவிட்டு வந்து கோபக்கிரகத்திற் புகுந்து தரையிற் படுக்கிறாள்; மாலையைக் கழற்றி ஒரு மூலையிலெறிகிறாள்; ஆபரணங்களைக் கழற்றி அங்குமிங்கும் போடுகிறாள்; கண்ணிலிட்ட மையைக் கலைக்கிறாள்; நெற்றியிலணிந்த திலகத்தை அழிக்கிறாள்; அழகாய் உடுத்திருந்த ஆடையை அலங்கோலப்படுத்திக் கொள்ளுகிறாள்; பூமுடித்த கூந்தலை அவிழ்த்து பூமியிற் புரள விடுகிறாள்; பிறகு மந்தரையைப் பார்த்து) தோழீ! கொண்டகோலத்தில் ஏதும் குறையுண்டோ?

மந்தரை:-- ஒன்றுமில்லை; எல்லாம் சரியாயிருக்கிறது. இன்னும் இரண்டு விஷயம் மறந்துவிட்டீர்கள். முகம் வாடவேண்டும்; கண்ணீர் ஆறாய் ஓடவேண்டும். ஆனால் அவைகளை நான் போனபிறகு செய்துகொள்ளுங்கள், பொய்யாகவேனும் தங்கள் சந்திரவதனம் வாட நான் சகிக்கமாட்டேன்; தங்கள் கண்ணில் நீர்புரள நான் பொறுக்க மாட்டேன். போய் வருகிறேனம்மா.

கைகேயி:-- நல்லது போய்வா.

[ மந்தரை போகிறாள். கைகேயி முகம் வாடிக் கண்ணீர் சிந்தித் தரையிற் படுத்தபடியே கிடக்கிறாள். தசரதர் வருகிறார். படுக்கையிற் கைகேயியைக் காணாமல், கோப அறையிற் சென்று பார்க்கிறார். அங்கே அவள் தரையில் தலைவிரி கோலமாய்க் கிடைப்பதைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்; பிறகு முழங்காலிட்டு உட்கார்ந்து அவளை வாரி எடுக்கிறார். கைகேயி அவர் பிடியைத் திமிறி உதறிவிட்டுப் பெருமூச்செறிந்து வேறு புறமாகத் திரும்பிப் படுத்துக்கொள்ளுகிறாள். தசரதர் மறுபடியும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு]

தசரதர்:-- என் காதற் கனியே! கேகயன் மகளே! ஏன் இந்த அலங்கோலம்? உனக்கு வந்ததென்ன வியாகூலம்? உன் மதிமுகங் கருகுவானேன்? மலர்க்கூந்தல் அவிழ்ந்து சோர்வானேன்? மலர்க்கண் திறந்து உன் பதிமுகத்தைப் பாராயா? என்னோடின்னுரையாட வாராயா? வேர் களைந்தெறியப்பட்ட கொடிபோலவும், தெய்வலோகத்திலிருந்து கீழே விழுந்த தேவகன்னி போலவும், நீர்நீத்த பொய்கையின் நடுப்பூத்த கமலம் போலவும், கணைபட்டுச் சோர்ந்த பிணைமான்போலவும் நீ கிடப்பதைப் பார்த்து என் மனம் பதைக்கிறதே! பெண்மணியே! பெண்கள் சிகாமணியே! விண்ணோர் சிந்தாமணியே! என்னாவியே! அருமைச் சஞ்சீவியே! உனக்கேதும் பிழையிழைத்தேனோ பாவியேன்? என்மேல் ஏதும் கோபமோ? வேறு யார் மீதேனும் மனஸ்தாபமோ? ஏதேனும் நோயால் வருந்துகிறாயா? அடி மட அன்னமே! மாற்றுயர்ந்த சொன்னமே! வாய்விட்டுச் சொன்னால் உன் நோய் விட்டுப்போக நான் மார்க்கம் தேடேனோ? உனக்கித்தனை பாடேனோ? உனக்குத் தீங்கிழைத்தவர் யார்? சொல், இந்த க்ஷணமே அவர்களைத் தண்டிக்கிறேன். யாரையாவது சிரச்சேதம் செய்யவேண்டுமா? மரணதண்டனை விதிக்கப் பெற்றவர் எவரையேனும் மன்னிக்க வேண்டுமா? இந்த நிமிஷமே நீ விரும்புவதை முடிக்கின்றேன். நீ உன் பவளவாய் திறந்து உன் குறையை மொழியடி பெண்ணே! கொண்ட துன்பம் ஒழியடி கண்ணே! உன் மனதிற்கு மாறாக நடப்பவர் எவருளர்? ஏன் வீணாக வருந்துகிறாய்? என் கட்டிக் கரும்பே! உன் முகத்தில் ஏன் இப்படி வியர்வை அரும்புகிறது? (அவள் முகத்தை வஸ்திரத்தால் துடைக்கிறார்)

பட்ட ஸ்திரீயிலும் இஷ்ட ஸ்திரீயிடம் மாட்டிக்கொண்ட
தசரதன் அவஸ்தையை

(அடுத்த வாரம் தொடர்வோம்)

செவ்வாய், 21 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இந்த நாடகத்தைத் தொடர்ந்து படிக்கின்றவர்களுக்கு:--

   இன்று படிக்கப் போகும் பகுதி மந்தரையின் அபார வாக்கு சாதுர்யத்தை மிக அருமையாக விளக்கும் பகுதியாக அமைந்து வியக்க வைக்கும். எதிராளியின் மனதை எப்படி மாற்றித் தன் வழிக்குக் கொண்டு வருவது என்பதற்கு ஒரு பாடமாகக்கூடக் கருதும் அளவு மந்தரையின் வாதம். தொடர்ந்து படியுங்கள்.

அங்கம் 1
களம் 4 (தொடர்ச்சி)

மந்தரை;—தங்களுக்கு  மாத்திரமல்லவம்மா, 'ஆலமரத்தைப் பிடித்த பிசாசு அரசமரத்தையும் சேர்த்துப் பிடித்தது' போலத் தங்கள் மகன் பரதனையுமல்லவா கெடுதல் சூழ்ந்திருக்கிறது. என்ன கெடுதல் என்றால், விவரமாகச் சொல்லுகிறேன், சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்.

சிவந்தவாய்ச் சீதையுங் கரிய செம்மலும்
நிவந்தவா சனத்தினி திருப்ப நின்மகன்
அவந்தனாய் வெறுநிலத் திருக்க லானபோ
துவந்தவா றென்னிதற் குறுதியா தம்மா?

சிறிது செல்வமுடையவர் வீட்டுப் பிள்ளைகளும் ஒருவருக்கு அடங்கியிருக்க நாணுவார்கள். அப்படியிருக்க இராஜ குடும்பத்தில் பிறந்த ஒருவன் மற்றொருவனிடம் தலைகுனிந்து நிற்பதென்றால் எவ்வளவு வருத்தமான காரியம்? பரதன் இராஜகுடும்பத்திற் சக்கரவர்த்தியின் காதல் மனைவியின் வயிற்றில் பிறந்தவனன்றோ? பிறந்தும் அவன் கதி என்ன? இராமனும் சீதையும் நாளைய தினம் உயர்ந்த ஆசனத்தில் வெகு கம்பீரமாக உட்கார்ந்திருப்பார்கள். அப்பொழுது உன் மகன் பரதன் தலை தாழ்ந்து நிலத்தில் நிற்பான். அக்காலத்தில் அவன் மனம் என்ன பாடுபடும்? அந்தக்காட்சியைப் பார்க்க தங்களுக்குத்தான் சகிக்குமா? இந்த நிலையில் காரியங்கள் இருக்க, நீங்கள் சந்தோஷம் மிகுந்து எனக்கு முத்தாரம் பரிசளிக்கின்றீர்கள்! தாங்கள் அரசர்க்குக் காதற்கிழத்தியாயிருந்து என்ன பயன் கண்டீர்கள்? தங்களைப்போல கோசலையும் ஒரு பெண்தானே? அவளுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்தீர்களா?

மறந்திலள் கோசலை யுறுதி மைந்தனும்
சிறந்தநற் றிருவினிற் றிருவு மெய்தினான்
இறந்தில னிருந்தன னென்செய் தாற்றுவான்
பிறந்திலன் பரதனீ பெற்றதா லம்மா!

அவள் தனக்கும் தன் மகனுக்கும் உறுதி தேடத் தங்களைப்போல மறந்திருந்து விடவில்லை. அவள் மகனுக்கு இராச்சியம் கிட்டிவிட்டது. தங்கள் மகன் பரதன்தான் ஒன்றும் பெறாது தவிக்கப் போகின்றவன்; உயிரோடிருக்கிறானே அது ஒன்று தவிர அவனுக்கு வேறு என்ன பயன் உள்ளது? இப்படி அவன் எவ்வளவு காலம் சகித்திருப்பான்? அம்மா! தங்கள் வயிற்றில் பிறந்ததால் பரதன் பிறந்தும் பிறவாதவனாகவே இருக்கின்றான். அவன் நிலைமையை நினைத்தால் என் நெஞ்சம் நெருப்பிற்பட்ட புழுப்போல் துடிக்கிறதே.

சரதமிப் புவியெலாந் தம்பி யோடுமிவ்
வரதனே காக்குமேல் வரம்பில் காலமும்
பரதனு மிளவலும் பதியி னீங்கிப்போய்
விரதமா தவஞ்செய விடுத னன்றன்றோ?

இராமன் இலக்ஷ்மணனோடு இராச்சியத்தை ஆள்வது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் நாட்டி லென்னம்மா வேலை? அவர்களிருவரையும் நீரே காட்டிற்கு அனுப்பி, அங்கே தவஞ்செய்து கொண்டிருக்க விட்டு விடுவது நல்லதாகும். என் கண்மணி பரதா! நீயேன் இவ்வுலகிற் பிறந்தாய்? பிறந்தென்ன பயனைப் பெற்றாய்? நீ இறந்து போனாலும் எனக்கு இவ்வளவு துக்கமிராதே. ஐயோ!

கல்வியு மிளமையும் கணக்கி லாற்றலும்
வில்வினை யுரிமையு மழகும் வீரமும்
எல்லையில் குணங்களும் பரதற் கேயது
புல்லிடை யுகுத்தமு தேயும்போ லந்தோ!

நிறைந்த கல்வியும், சிறந்த இளமையும், அளவற்ற பராக்கிரமும், வில்வளைக்கும் உரிமையும், கண்கவரும் அழகும், எதற்குமஞ்சா வீரமும் ஆகிய அளவிறந்த அற்புத உத்தம குணங்களனைத்தும் என் செல்வன் பரதனிடத்துத்தானே அமைந்துள்ளன? அந்தோ! அக்குணங்களெல்லாம் பாம்பின் புற்றை மூடியுள்ள புல்லிற் கொட்டிய அமுதம் போல் வீணாகவன்றோ போய்விட்டன! அம்மா, உமக்கும் உமது மகனுக்கும் பொல்லாங்கியற்றுபவன் அந்த நயவஞ்சகன் இராமனன்றோ? அவனுக்கல்லவோ நாளைக்கு மகுடாபிஷேகம்? கேகயராஜன் அருந்தவச் செல்வப்புதல்வியே! இராமன் யார் தெரியுமா? உம் சக்களத்தி புத்திரன்.

கைகேயி:-- மந்தரை! நீ வீணே உன் மனத்தைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய். இராமன் மாற்றவள் மகனாயிருந்தால் என்ன? அது அவன் குற்றமல்லவே! பரதன் நற்குணங்கள் நிறைந்தவன் என்பது உண்மை. அதனால் இராமன் கெட்டவனாவானோ? கொஞ்சமேனும் யோசனையின்றிப் பேசுகிறாயே! இராமன் சக்கரவர்த்தியின் மூத்த குமாரன்; அவனுக்குப் பட்டமாவதுதான் நீதி; அப்படிப் பட்டமாவதால், நீ சொல்லுவது போல எனக்கேனும் என் மகன் பரதனுக்கேனும் ஒரு கெடுதலு முண்டாகப் போகிறதில்லை. அவன் பரதனைக் காட்டிலும் குணவான்; தன் தாயினும் மேலாக என்னிடத்தில் அன்பு பாராட்டுபவன். ஆதலால் காரணமின்றி நீ கொண்ட அச்சங்களை விட்டொழி.

மந்தரை:-- அம்மா! காரணமின்றி நான் ஒரு அச்சமுங் கொள்ளவில்லை. தாங்கள் நான் சொல்வதைத் தயவுசெய்து கவனித்துக் கேளுங்கள். இராமன் மகா குணவான் என்கிறீர்கள். அது உண்மையே. அவன் தந்திரசாலி; தன் நடத்தை செவ்வையாயிராவிட்டால் தனக்குப் பட்டமாகாதென்பதை நன்றா யுணர்ந்தவன். அதனால்தான் அப்படி நடந்து கொள்ளுகிறான். தங்களிடத்து அவன் பரதனிலும் அதிகப் பிரியம் வைத்துள்ளானென்று கூறுகிறீர்கள். அதிலேயே அவன் தந்திரம் விளங்கவில்லையா? தன் தாயைப் பார்க்கிலும் மாற்றான் தாயிடத்துப் பிரியம் வைப்பவனெங்கேனும் உண்டா? தங்கை பிள்ளை தன் பிள்ளையானால் தவத்துக்குப் போவானேன்? என்ற பழமொழியைத் தாங்கள் கேட்டதில்லையா? தங்களிடத்துப் பரதனுக்கில்லாத அன்பு இராமனுக்கு எங்கிருந்து வரும்? எல்லாம் வெளி வேஷம். தாங்கள் சக்கரவர்த்திக்குத் தன்தாயினும் மிகவும் உரிமையுடையவர்கள் என்பதை அவன் நன்றா யறிந்துள்ளான். தங்களுக்கு அதிருப்தியாய் நடந்துகொண்டால் தனக்குப் பட்டம் கிடைப்பதைத் தாங்கள் தடுத்துவிடக் கூடியவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் முன்ஜாக்கிரதையாக இருக்கின்றானே யொழிய வேறில்லை. இதைக்கண்டு களங்கமற்ற நீங்கள் அவன் உண்மையாகத் தங்களிடத்து மிகவும் அன்புடையவனென்று எண்ணி ஏமாந்திருக்கிறீர்கள்.

உள்ளபடி அவன் தங்களிடத்துப் பிரியமுள்ளவனாயினும், எப்பொழுதும் அப்படியே இருப்பானென்பது என்ன நிச்சயம்? மனிதர் குணம் பல காரணங்களாலும் மாறுதலடையக் கூடியது. அந்தஸ்து உயர்ந்தால் மாறும்; பலம் அதிகரித்தால் மாறும்; படை அதிகரித்தால் மாறும்; பிறர் போதனையாலும் மாறும்; ஆதலால் இராமன் எப்பொழுதும் இதே குணத்தோடிருப்பான் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். உத்தமமான ரிஷிகளுக்கும் குணம் சில சமயங்களில் மாறிவிடுதலைத் தாங்கள் கண்டதில்லையோ? மேலும் குறைந்தது முப்பது வயதிற்கு மேற்பட்டால்தான் ஒருவருடைய குணம் சிறிது ஸ்திரப்படும். இராமன் சிறுவன்; அவன் தற்கால குணங்கள் எப்பொழுதும் ஸ்திரமாயிருக்குமா?

இது ஒருபுறமிருக்க இராமனுக்குப் பட்டமென்றால் அதன் அர்த்தமென்ன? பரதன் பட்டத்திற்குரியவனல்ல என்பதுதானே! இராமனுக்குப்பின் அவன் மகன்; அவனுக்குப்பின் அவன் மகன், இப்படியேதானே போய்க்கொண்டிருக்கும். அப்புறம் பரதனுடைய சந்ததி தலைகாட்டமுடியுமா? அம்மா, பரதன் யார்? தங்கள் குமாரனல்லவோ! தாங்கள் யார்? கோசலையைப்போல அரசர்க்குச் சுதந்திரமான பட்டஸ்திரீ. இன்னும் சொல்லப்போனால் கோசலையைவிட உங்களுக்கு சுதந்திரம் அதிகம். எவ்வாறென்றால் தாங்கள் சக்கரவர்த்திக்குப் பட்டஸ்திரீயாவதோடு அவருக்கு ஆசைநாயகி யாகவும் இருக்கின்றீர்கள். இப்படியிருக்கத் தங்கள் பாத்யதையெல்லாம் மண்ணுண்டுபோக அந்த கோசலைக்கே முழு உரிமையும் போவானேன்? அவன் மகன் நாளைக்குப் பட்டத்துக்கு வந்துவிட்டால் அப்புறம் உங்களுக்கு இங்கே என்ன சுதந்திரம் இருக்கும்? இப்பொழுது உங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணத்தைப் பிடிபிடியாக அள்ளிக் கொடுக்கிறீர்கள். நாளைமுதல் அப்படி முடியுமா? சிலநாளைக்குத் தங்களிஷ்டப்படி விட்டிருந்தாலும் என்றைக்கும் அப்படி விட்டிருக்கக் கோசலை சம்மதிப்பாளா? ஒருகாலும் சம்மதியாள். பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? எது வேண்டியிருந்தாலும் ஒரு தாதி சேடியைப்போல் அவளைப்போய் இரந்து கேட்பீர்களா? அல்லது தங்களை எதிர்பார்க்கிறவர்ளைச் சீறியடிப்பீர்களா?

இன்னொன்று பாருங்கள், தங்கள் தந்தை வந்தார், தங்கள் பந்துக்கள் வந்தார்கள், கேகய நாட்டிலிருந்து வேறு யாரேனும் வந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் யார் வாழ்வை வந்து பார்ப்பது? தங்கள் வாழ்வையா, தங்கள் சக்களத்தி வாழ்வையா?

இதுவும் ஒருபுறமிருக்க, தாங்கள் சக்கரவர்த்தியின் சலுகையால் அரண்மனை அந்தப்புரத்திற் செலுத்திவந்த அதிகாரங்கள் ஒவ்வொன்றாய் கோசலையின் ஞாபகத்துக்கு வரும்; வரவே அவள் அந்தப் பொறாமையினால் மகனுக்கு ஏதும் சொல்லத் தொடங்குவாள்; இராமனா தாய் சொல்லைத் தட்டி நடப்பவன்? ஒருநாளுமில்லை. அவன் நேரே தங்களுக்கு ஏதும் தீங்கு செய்யப் பின்வாங்கினாலும் வேறு வகையால் தங்கள் மனம் தயங்கும்படி செய்வான். அப்பொழுது உங்கள் மனம் என்ன பாடுபடும்? உங்கள் புத்திரன் பரதனுக்கு அது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்?

மற்றொரு முக்கியமான விஷயம் கூறுகின்றேன் கேளுங்கள். உங்கள் தந்தைக்கும் ஜனகனுக்கும் ஜன்மப்பகை. தங்கள் கணவருக்கு அஞ்சியே இதுவரையில் ஜனகன் உங்கள் தந்தையை எதிர்க்காமலிருக்கிறான். நாளையதினம் அவன் மருமகன் இராமன் பட்டத்துக்கு வந்துவிடுவான். சக்கரவர்த்தி தவஞ்செய்யச் சென்றுவிடுவார். பிறகு தங்கள் தந்தையின் கதி என்னாகும்? தாங்கள் மகன் வாழ்வுக்கு இடையூறாய் இருப்பதோடு, தந்தைக்கும் பழிகாரி யாகவன்றோ ஆய் விடுகிறீர்கள்? தங்கள் கணவரின் வஞ்சகத்தைப் பாருங்கள். பரதன் நாட்டிலில்லாத சமயத்தில் இராமனுக்குப் பட்டம் கட்டத் தீர்மானித்திருக்கிறார். இதில் ஏதோ சூதிருக்கிறதென்பதைத் தாங்கள் கவனிக்கவில்லையா? இராமன் மகா குணவான் என்கின்றீர்களே! தம்பி இல்லாதபோது அவன் பட்டங்கட்டிக்கொள்ள எப்படிச் சம்மதித்தான்? நீங்களே எல்லாவற்றையும் தீர்க்காலோசனை செய்து பாருங்கள். அம்மா! தாங்கள் என்னைப்போல் சாமானிய பதவியிலுள்ளவர்களா?

அரைசரிற் பிறந்துபின் னரச ரில்வளர்ந்
தரைசரிற் புகுந்துபே ரரசி யானநீ
கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை யுணர்தியோ வம்மா!

தாங்கள் இராஜ குடும்பத்திற் பிறந்து, இராஜ குடும்பத்தில் வளர்ந்து இராஜ குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவர்கள். சக்கரவர்த்தியின் பட்டஸ்திரீயானவர்கள். இருந்தும், அளவற்ற துக்க சமுத்திரத்தில் விழுந்து தவிக்கின்றீர்களே. நான் ஏதாவது யோசனை கூறினாலும் கேட்கமாட்டே னென்கிறீர்களே. தங்களுக்கு இன்னமும் தங்கள் நிலைமை புரியவில்லையா?

கைகேயி (சற்று யோசித்துவிட்டு):-- மந்தரை! நீ சொல்வன யுக்தமாகவே தோற்றுகின்றன. நீ என் க்ஷேமத்தை இவ்வளவு கருதியிருக்கின்றாய் என்பது எனக்கு இதுவரையில் தெரியாது. என் சேடியர்கள் பலருள்ளும் நீதான் என் நன்மையிற் கண்ணாயிருப்பவள். உன்னுடைய சாமர்த்தியம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. நீ சொல்லாவிட்டால் இவ்வளவு முன்யோசனைகள் எனக்கு வருமோ? சக்கரவர்த்தியின் வஞ்சம் எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. அதை நினைக்க நினைக்க என் மனதில் அடங்காத கோபம் மூளுகிறது. எனக்கொன்றுந் தோன்றவில்லை. மந்தரை! நோயை அறிவித்த நீயே மருந்தையும் தெரிவி; மேல்நடத்த வேண்டியதென்ன?

மந்தரை:-- மேல் நடத்தவேண்டிய விஷயமென்ன? இந்தப் பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிட வேண்டியதுதான்.

கைகேயி:-- அது எனக்கும் தெரிகிறது. அதை எப்படித் தடுப்பதென்பதல்லவோ யோசனை?

மந்தரை:-- அம்மா, என் யோசனையைப் பெரிதாக மதித்துக் கேட்க ஒருப்பட்டீர்களே, இதுவே போதும். இனித் தங்களுக்கு ஆபத்தொன்றும் வராது. கவலைப்படவேண்டாம். தங்கள் கணவர் தாமாக, பரதனுக்குப் பட்டங்கட்டத் தவறினால், அவனுக்கு எப்படிப் பட்டங்கட்டுவதென்பதைப் பற்றி, இப்பொழுதல்ல, பரதன் பிறந்தது முதல் நான் யோசித்து வைத்திருக்கிறேன். அந்த யோசனை இப்பொழுது பயன்பட்டது.

கைகேயி:-- என்னடி அது?

(மனம் கலங்கி மாறிய கைகேயியை இன்னும் எப்படியெல்லாம் மந்தரை மற்றினாள்?
23.06.2016 தொடர்வோம்)

திங்கள், 20 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

அன்று இராமன் காடேகிய பிறகு அயோத்தி வந்தடைந்த பரதனை சந்தேகப்பட்ட கௌசல்யையிடம் பரதன் தான் குற்றமுள்ளவனாயின் என்னென்ன பாவங்களை அடைவேன் என்று சொல்கிறான். அதை மிக விரிவாக இதே தளத்தில் வரும் பாதுகா பட்டாபிஷேகத்திலும் பின்வருமாறு சொல்லப்படப்போகிறது.

அம்மா! இராமபிராற்கு இம்மியளவும் அபராதம் இழைத்திருப்பேனாயின், சிசுஹத்தி, ஸ்திரீஹத்தி, பிரமஹத்தி, கோஹத்தி முதலிய கொடுஞ் செயல்களைச் செய்தார் அடையும் அருநரகை அடைந்து அவதியுறக் கடவேன். அம்மா, இராமபிராற்குச் சிறிதும் நான் தீங்கு நினைத்திருப்பேனேல் உற்ற விருந்திருக்க உணவுண்ணச் செல்வானும், பக்தி வேற்றுமை பாராட்டும் பாதகனும், பசித்து வந்தார்க்குப் பசி தீர்க்காப் பாவியும், புசிப்பதன்முன் பரமனைப் பூஜியாப் புல்லனும், நல்லோர் மனத்தை நடுங்கச் செய்வானும், வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பானும், தானங் கொடுப்பாரைத் தடுத்து நிற்பானும், கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வானும், மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வானும், குடிவரியுயர்த்திக் கொள்ளை கொள்வானும், ஏழைகள் வயிறு எரியச் செய்வானும், மண்ணோரம் பேசி வாழ்வழிப்பானும், உயிர்க்கொலை செய்வார்க்கு உபகாரஞ் செய்வானும், களவு செய்வார்க்கு உளவு சொல்வானும், பொருளை இச்சித்துப் பொய் சொல்வானும், ஆசைகாட்டி மோசஞ் செய்வானும், வரவு போக்கொழிய வழியடைப்பானும், வேலையிட்டுக் கூலி குறைப்பானும், கோள் சொல்லிக் குடும்பம் கலைப்பானும், நட்டாற்றிற் கைநழுவ விடுவானும், கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுப்பானும், குருவை வணங்கக் கூசி நிற்பானும், குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பானும், கற்றவர் தம்மைக் கடுகடுப்பானும், பெரியோர் பாட்டில் பிழை சொல்வானும், பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைப்பானும், கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பானும், கல்லும் நெல்லும் கலந்து விற்பானும், அங்காடிக் கூடையை அதிரவிலை கூறுவானும், அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வானும், குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்ப்பானும், வெய்யிலுக்கொதுங்கும் விருக்ஷமழிப்பானும், பொது மண்டபத்தைப் போயிடிப்பானும், ஆலயக் கதவை அடைத்து வைப்பானும், சிவனடியாரைச் சீறிவைவானும், அரிதாசரைப் பரிகாசஞ் செய்வானும், தவஞ்செய்வோரைத் தாழ்வு சொல்வானும், தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பானும், தெய்வமிகழ்ந்து செருக்கடைவானும் செல்லும் கதியிற் செல்லக் கடவேன்.

அம்மணீ! இன்னமுங்கேளுங்கள். கற்றறிந்தும் கூடாவொழுக்கமுடையானும், அடைக்கலப் பொருளை அபகரிக்கும் அபராதியும், இரவில் வந்து அண்டுவார்க்கு இடம் கொடாத ஈனனும், போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிவானும், செழுங்கிளை தாங்காத செல்வனும், பிறர்க்குத் துன்பமியற்றும் துஷ்டனும் ,கற்பிலா மனைவியோடு கலந்து வாழ்பவனும், பரதாரப் பற்றுடைய பாதகனும், ஆலயாதிகளை அசுத்தஞ் செய்பவனும், விலைமொழி பொய்த்து விற்கும் வாணிகனும், அபலைகளை ஆபத்திற் கைவிடும் பேடியும், மித்திரன் மர்மங்களை முரண்பட்ட பொழுது வெளியிடுபவனும், பிறர் குற்றங்களையே பிறரோடு பேசுவோனும், முனிந்தபொழுது முறைகடந்த வார்த்தைகளை மொழிவோனும், மூடமனைவி சொற்கேட்கும் மூடனும், நூலில் இல்லாத பொருளை உள்ளதாகக் கூறுவோனும், பிறர் நலங்களைப் பழிப்பவனும், பிறர் பொருளாற் புண்ணியம் தேடுபவனும், சிறியவரிடத்து மிக்க சினங் கொள்பவனும், சிற்றின்பத்தில் ஆழ்ந்து பேரின்பத்தை மறந்த பேதையும் அடையும் கதியை நான் அடையக் கடவேன்

இப்படியும் மேலும் மேலும் அவன் கதறி அழுது சத்தியம் செய்த இடத்தை  இன்று நடத்திய தனது 41ஆவது “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்.

கேட்டு மகிழ

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkXJOenkXW2GPoxNm

OR

http://www.mediafire.com/download/94b1zh0vly4l21e/041_SSR_%2820-06-2016%29%7E1%282%29.mp3

ஞாயிறு, 19 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1

களம் 4

(மந்தரை கைகேயி மனம் கெடுத்தலைத் தொடர்கிறாள்)

மந்தரை:-- அம்மா! இராமனுக்குப் பட்டமானால் அது பரதனுக்குப் பட்டமானதுபோலத்தான் என்கிறீர்களே. அவ்வளவு வித்தியாசமில்லாதபோது உங்கள் கணவர் பரதனுக்குப் பட்டங்கட்டி அதை இராமனுக்குக் கட்டியதுபோலவே பாவித்துக் கொண்டாலாகாதோ?

கைகேயி:--அடி பாதகி! சூரியகுலத்தில் அவ்விதம் முறையற்ற ஒரு காரியத்தைச் செய்ததாரடி, எப்பொழுதடி?

வெயின்மு றைக்குலக் கதிரவன் முதலிய மேலோர்
உயிர்மு தற்பொருள் திறம்பினு முறை திறம்பாதோர்
மயின்மு றைக்குலத் துரிமையை மனுமுதல் மரபைச்
செயிரு றப்புலச் சிந்தையா லென்சொனாய் தீயோய்!

அடி கொடியவளே, சூரியன் முதலாக வரும் இக்குலத்து அரசர் தமது உயிருக்கே கேடு வரினும் முறை தவறாதவர். இவ்வாறு குற்றமற்ற முறைமையையுடைய எங்கள் குலத்து வழக்கத்திற்கும், மனு முதலிய மேலோர் வழி வந்த எங்குலத்திற்கும் குற்றம் வரத்தக்கதாக என்ன காரியத்தைச் சொல்லவந்தாயடி? தகாத காரியத்தை நினைத்ததுமல்லாமல் அதை வாய்விட்டுச் சொல்லவுந் துணிந்துவிட்டாயல்லவா? விஷஜந்துக்களுக்கு வயதேற ஏற விஷம் அதிகப்படுவதுபோல வயதேற ஏற உனக்கு விஷமகுணம் அதிகமாகிறது போலிருக்கிறது. எனது பெற்றோர் எனக்குத் துணையாகக் கேகய நாட்டிலிருந்து உன்னை அனுப்பியது இதற்குத் தானோ?

எனக்கு நல்லையு மல்லைநீ யென்மகன் பரதன்
தனக்கு நல்லையு மல்லையத் தருமமே நோக்கில்
உனக்கு நல்லையு மல்லைவந் தூழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தாய்!

அடி அறிவற்றவளே! நீ எனக்கு நல்லவளுமல்ல; என் மகன் பரதனுக்கும் நல்லவளுமல்ல; எல்லார்க்கும் ஒன்றாகிய நீதியைப் பார்த்தால் உனக்கும் நீ நல்லவளல்ல; நீ செய்த தீவினை வந்து உன்னைத் தூண்ட உன் மனத்துக்குத் தோன்றுவனவற்றை யெல்லாம் பேசுகிறாய். அடி உனக்கு உணர்வழிந்து விட்டதா? பித்தம் மேலிட்டு விட்டதா? நீதி நியாயம் ஒன்றுமே நீ அறியாயா?

பிறந்திறந்துபோய்ப் பெறுவதுமிழப்பதும் புகழேல்
நிறந்திறம்பினு நியாயமே திறம்பினு நெறியின்
திறந்திறம்பினுஞ் செய்தவந் திறம்பினுஞ் செயிர்தீர்
மறந்திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ?

உலகத்தில் மக்கள் பிறந்தும் இறந்தும் அடைவதும் அல்லது இழப்பதும் எதுவென்றால் பழுதற்ற புகழ். அவ்வாறிருக்க, குணம் மாறினாலும், நியாயம் மாறினாலும், நன்னெறியின் வகை மாறினாலும், செய்யுந் தவம் கெட்டாலும், குற்றமற்ற வீரம் கெடுவதானாலும் தொன்றுதொட்டு வரும் ஒரு முறைமையை மாற்றத்தகுமா? உணர்வு கெட்டவளே! உன் தீய எண்ணங்களை என்னிடம் தெரிவித்ததுபோல் என் மகன் பரதனிடம் தெரிவித்திருப்பாயானால் உன்னை இதுவரையில் என்ன செய்திருப்பான் தெரியுமா? உன்னுடைய நாவை இரண்டு துண்டாக வெட்டி எறிந்திருப்பான். பேதைமதியினளே!

போதி யென்னெதிர் நின்றுநின் புன்போறி நாவைச்
சேதி யாதிது பொறுத்தனன் புறஞ்சில ரறியின்
நீதி யல்லவு நெறிமுறை யல்லவு நினைந்தாய்
ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி நீயே

என் எதிரே நில்லாதே போ. தீயது சொன்ன உன் நாவைத் துண்டியாது விடுத்தேன். ஏனெனில் இது முதன்முறை. வெளியில் யாரேனும் இதை அறிந்தால் என்னாகும்? நீதிமுறையில்லாத காரியத்தை நினைத்தாய். அறிவில்லாதவளே! உன் அதிகப் பிரசங்கித்தனத்தை இம்மட்டோடு அடக்கு! இனி இவ்வித விஷயங்களை என்னிடத்திலாயினும் வேறு யாரிடத்திலாயினும் தெரிவிப்பதற்குமுன் அதன் பலாபலங்களை யோசித்துத் தெரிவி. இவ்வித துர்நடத்தைகளை இனி உன்னிடத்திற் காண்பேனாயின், அன்றையதினமே உன்னைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விடுவேன். அப்புறம் நீ இந்த அரண்மனையில் அடி வைப்பதற்குத் தகுதியுள்ளவளல்லை. துராலோசனை கற்றவளே! என் எதிரே இராதே. உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் அதிகரிக்கிறது. எழுந்து எங்கேனும் தொலை.

மந்தரை:-- அம்மா, உங்களுக்கு துராலோசனை சொல்லித் தங்களைக் கெடுத்து, நான் தங்க மாளிகை கட்டிக்கொள்ளப் போகிறதில்லை. தங்கள் தாய்தந்தையர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் துரோகம் செய்யக்கூடாது, அவர்கள் என்னை நம்பித் தங்களுக்குத் துணையாயனுப்பியிருக்கத் தங்களை நட்டாற்றில் கைநழுவ விட்டுவிடக் கூடாது என்றெண்ணியே இவ்வளவு தூரம் சொல்லவந்தது. தாங்கள் இப்படி எடுத்தெறிந்து பேசியமாதிரிக்கு என்னையன்றி வேறொரு தாதியாயிருந்தால் நமக்கென்ன என்று போய்விடுவாள். எனக்கு அவ்விதம் போக மனமில்லை. என் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. தங்கள் தந்தையாரிட்ட சோற்றை உண்டு வளர்ந்தவள் நான். அவர்கள் சோற்றை உண்டு அவர்கள் புத்திரியாகிய தாங்கள் கெட்டுப்போவதைப் பார்த்திருக்க என் மனம் சகியாது. கேகய தேசத் தரண்மனையில் எத்தனையோ தாதிகள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னைத் தங்களுடன் இங்கு அனுப்புவானேன்? நான் தங்களைப்போலப் பெண்ணாயிருந்தாலும் மந்திரிபோல் யோசனையில் வல்லவளென்பதற்காக வல்லவா? அதனாலல்லவா எனக்கு மந்தரை யென்று பெயருமிட்டார்கள்? அம்மா! ஒருவருக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்படுவதில் அநேக கெடுதிகளுண்டு. அதிலும் இராஜகுடும்பத்தில் இரண்டாவது பட்ட ஸ்திரீயாய் வருவதில் அநேக கஷ்டங்களுள்ளன. அவைகளை உங்கள் தந்தை அறியாதவரல்ல. அறிந்தும் தங்களை இரண்டாம் தாரமாகக் கொடுத்தது எதனாலென்றால், நான் தங்களுக்குத் துணையாயிருக்கும் வரையில் தங்களுக்கு ஒரு கெடுதியும் வராதென்ற நிச்சயத்தால்தான். தாங்கள் இப்படி என்னுடைய துணையை உபேக்ஷை செய்வீர்களென்று தங்கள் தாய்தந்தையர் அறிந்திருந்தால், தங்களை இங்கு இரண்டாந் தாரமாகக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

கைகேயி:-- மந்தரை! நீ யூகசாலி என்பதையும், சாமர்த்தியசாலி என்பதையும் நான் மறுக்கவில்லை; உன்னுடைய துணையும் யோசனையும் வேண்டாமென்றும் சொல்லவில்லை. உள்ளபடி எனக்குக் கெடுதல் நேரிட்டாலல்லவோ உனது துணை வேண்டும்? அவ்விதம் ஒன்றுமில்லையே?

மந்தரை:-- அம்மா! மனிதர்கள் தமக்கு வரும் இடையூறுகளைத் தாமே அறிந்துகொள்ளக்கூடுமானால், அவர்களுக்குத் துணை எதற்கு? தங்களுக்கு வந்திருக்கும் இடையூறு தங்களுக்கே தெரியாதது சகஜந்தான். அதற்காகத்தான் என்னைப்போல் ஒருவர் துணையாய் இருப்பது. இதையறியாமல் தாதியென்று என்னை எடுத்தெறிந்து பேசித் துரத்திவிடுவதா அழகு?

கைகேயி:-- தாதியென்று உன்னை நான் உபேக்ஷிக்கவில்லை. இடையூறு இடையூறு என்று கூறுகிறாயே ஒழிய அது இன்னதென்று விளங்கக் கூறமாட்டேனென்கிறாயே. இராமன் பட்டத்துக்கு வரப்போகிறான் என்கிறாய். வந்தாலென்ன? அதனால் எனக்கு நேரும் கெடுதலென்ன? வேறு யாருக்குத்தான் என்ன கெடுதல் நேரும்? அதைச் சற்று விளக்கமாகக் கூறலாகாதா?

(19-06-2016ல் தொடரப்போகும் பகுதியில்
விளக்கமாகக் கூறலாகாதா? என்று கேட்டுத்
தன் நோக்கம் நிறைவேற வழிவைத்த
கைகேயியின் புத்தியைக் கெடுத்த
மந்தரை வாதங்கள் தொடரும்)

வெள்ளி, 17 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

IMG_0002

 

நான்காங் களம்

இடம்: அயோத்தி அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரம்

காலம்: பிற்பகல்

பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை, தசரதர், இராமர்,சுமந்திரர், வாயில் காப்போர் முதலியோர்.

{கைகேயி மஞ்சத்தில் நித்திரை செய்கிறாள். மந்தரை வருகிறாள். கைகேயி உல்லாசமாய்ப் படுத்து உறங்குவதை உக்கிரத்துடன் பார்க்கிறாள். முக்கிய சமயத்தில் நித்திரை பங்கஞ் செய்வதால் தோஷமில்லையென்று திடங்கொண்டு, 'அம்மா' அம்மா' என்று பலமுறை கூப்பிடுகிறாள். எழுந்திராததைக் கண்டு கையைத்தட்டிச் சத்தமிட்டு எழுப்புகிறாள். கைகேயி உறக்கந்தெளிந்து எழுந்து உட்கார்ந்து, உறக்க மயக்கத்தோடு)

கைகேயி:-- என்னடி வெகு அவசரமாய்த் தட்டி எழுப்பி விட்டாய்!IMG

மந்தரை (கோபத்தோடு):-- அவசரமா! உங்கள் வாழ்வைத் தொலைக்க வருகிறதம்மா ஒரு சரம். அதனால்தானம்மா அவ்வளவு அவசரம். தலைக்கு மேல் வந்துவிட்டது வெள்ளம்! கலங்குகிறதே என் உள்ளம்! சௌயபாக்கியங்களெல்லாம் தங்களை விட்டு ஓடுகின்றனவே! எல்லாப் பாக்கியங்களும் கோசலையை நாடுகின்றனவே! பரதனில்லாச் சமயம் பார்த்துப் படுகுழியை ஆழமாய்ப் பறித்து விட்டார்களே! அவன் வாழ்வை நாசமாக்க நாளுங் குறித்து விட்டார்களே! ஊரெங்கும் பாருங்கள் பெருமுழக்கம்! உங்களுக்கின்னுமா உறக்கம்! தங்களைச் சூழ்ந்துள்ள இடரின்னதென்று அறியாதிருக்கிறீர்களே, இதற்கு நானென்ன செய்வேன்!

கைகேயி:-- என்னடி உளறுகிறாய்?

பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவருந் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயந்தவெற் கிடருண் டாங்கொலோ

எனக்கேதடி இடர்? உலகமெலாம் புகழும் புத்திரசிகாமணிகள் நால்வர் க்ஷேமமாயிருக்கும்போது எனக்கு என்னடி குறை? சர்வஜீவர்களுக்கும் வேதம்போல் விளங்கும் ஸ்ரீராமச்சந்திரனைப் பெற்ற எனக்கென்னடி துன்பம்? உலகம் முழுகிப் போய்விட்டதுபோலப் பதறி என் உறக்கத்தைக் கலைத்து ஏதேதோ உளறுகிறாயே என்னடி? என்னடி மோசம் வந்தது? யாருக்கு என்ன அபாயமடி விளைந்தது? சமுத்திரம் பொங்கி விட்டதா? எனக்கு வந்த தாழ்வென்ன? அக்காள் கோசலைக்கு வந்த வாழ்வென்ன? குழந்தை இராமன் வில்லுண்டையா லடித்ததை ஒரு பெருங்குறையாக முன் ஒருதரம் என்னிடம் சொல்லவந்தையே, அவ்விதமான பெருங்குறையேதேனும் இப்பொழுது வந்துவிட்டதா? அவசரப் படாமல் நிதானித்துச் சொல்லு.

மந்தரை:-- எனக்கொன்றும் குறை நேரவில்லை யம்மா.

வீழ்ந்தது நின்னலம் திருவும் வீய்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினா லந்தோ!

தங்கள் வாழ்வுதான் தாழ்ந்தது. தங்கள் கௌரவந்தான் குலைந்தது. தங்கள் க்ஷேமந்தான் தொலைந்தது. தங்கள் பாக்கியந்தான் உலைந்தது. எனக்கென்ன குறைவந்தால் தானென்ன? வேறு யாருக்கு என்ன குறை வந்தால்தான் எனக்கென்ன? உங்கள் நிலைமை உங்களுக்கே தெரியாமல் என்னை நிதானித்துப் பேசச் சொல்லுகிறீர்களே!

கைகேயி:-- மந்தரை! நீ சொல்லுகிறதொன்றும் நன்றாய் விளங்கவில்லையே. விஷயம் இன்னதெனச் சற்று விளக்கமாகச் சொல்லமாட்டாயா?

மந்தரை: -- விஷயமென்ன?

ஆடவர் நகையுற ஆண்மை மாசுற
தாடகை யெனும்பெயர்த் தைய லாள்படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளைவாழ் விதுநீ அறிதியோ?

புருஷர்கள் பார்த்துச் சிரிக்கவும், ஆண்மை பழுதுபடவும், தாடகை யென்னும் பெயருடைய ஒரு பெண்ணைக் கொல்ல, வில்லை வளைத்தானே உன் சக்களத்தி மகன் இராமன், அவனுக்கு நாளைய தினம் பட்டங்கட்டத் திட்டமாயிருக்கிறது. இது தெரியாமல் தாங்கள் நித்திரை செய்கிறீர்களே!

கைகேயி:-- (அகங்குளிர்ந்து, முகமலர்ந்து புன்னகை கொண்டவளாய்) என் மகன் இராமனுக்கா பட்டாபிஷேகம்! மெத்தச் சந்தோஷம். மந்தரை! இச்செய்தி கேட்டு என் இரு செவிகளும் குளிர்ந்தனவடி. இனிதானடி இந்த நாட்டுக்கு க்ஷேமாபிவிருத்தி; இனிதான் என் காதலருக்கும் கஷ்டநிவர்த்தி; ஜனங்களுக்கும் இனிதானடி மனத்திருப்தி. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று முதன்முதல் எனக்குச் சொல்லவந்த உனக்கு, நான் என்ன வெகுமதி செய்யப் போகிறேன்! (கழுத்திலிருந்த முத்தாரத்தைக் கழற்றி) இந்தா, இந்த முத்தாரத்தை அணிந்துகொள். (மந்தரையிடம் ஆரத்தைக் கொடுக்கிறாள்)

மந்தரை:-- (முத்தாரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு), அம்மா, உங்களைப்போல் ஒரு பெண்ணை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று கேள்விப் பட்டதும், உங்களுடைய க்ஷேமத்தை எண்ணி நான் அடைந்த துயரத்துக்களவில்லை. நான்கு புறமும் தீப்பற்றி எரிய நடுவே நிற்பவளைப்போல, நான் வயிறெரிந்து, மனமெரிந்து வந்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷம் கொண்டாடுகிறீர்கள். சமயமல்லாத சமயத்தில் சந்தோஷமா? துன்ப சாகரத்தின் மத்தியில் நீங்கள் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை. உங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை நினைக்க எனக்குத் துயரம் பெருகுகிறது. உங்கள் மடமையைப் பார்க்க ஒருபக்கம் சிரிப்பும் வருகிறது. நீங்கள் க்ஷேமமாயிருந்தால் உங்களையடுத்த எங்களுக்கு க்ஷேமமுண்டு. இராமன் முடி சூடிக்கொண்டால் கோசலை பாடு கொண்டாட்டம். பிறகு உங்கள் பாடும், உங்களையடுத்த எங்கள் பாடுமே திண்டாட்டம். அப்புறம் உங்களுக்கு வாழ்வேது? நீங்களும் உங்கள் மகனும் அவளுக்கு அடிமையாய் இருக்க வேண்டியதுதான். அவள் தாதிக்கும் தோழிக்கும் அடிமையாய் இருக்க என்னால் முடியாதம்மா!

கைகேயி:-- என்னடி, பித்தங்கொண்டவள் போல் மெத்தப் பிதற்றுகிறாய்? க்ஷத்திரிய தருமப்படி மூத்த பிள்ளைக்கே பட்டமென்பது உனக்குத் தெரியாதா? எனது குழந்தைகள் நால்வருள்ளும் இராமனன்றோ மூத்தவன். அவனுக்குப் பட்டங்கட்டுவதைத் தடுப்பதற்கு நீ யாரடி? இராமன் மூத்த குமாரன் என்ற ஒரு யோக்கியதை மட்டும் உடையவனல்ல; உத்தம குணங்களெல்லாம் ஒத்து ஓர் உருவெடுத்து வந்தாற் போல்பவன். அவன் விஷயத்திலா நீ இப்படி நினைப்பது? அடி பாவி! நீ கூறியதைக் கேட்ட பிறகும் உன் எண்ணத்தை அறிந்த பிறகும் உன்னைக் காணக் கண் கூசுதடி. பரதனைவிட அவனிடத்தில் எனக்குப் பிரியம் அதிகம். அவனுக்கும் கோசலையை விட என்னிடத்திற் பற்றுதல் மெத்தவடி. இராமனுக்குப் பட்டமானால் அது பரதனுக்குப் பட்டமானது போலத்தான். பரதன் தமையனிடம் மிகவும் பற்றுதலுடையவன். இவை ஒன்றையும் யோசியாது ஏன் கண்டபடி பிதற்றுகிறாய்?

(மந்தரை தொடர்ந்து பேசி
கைகேயியின் மனதை மாற்றுவது
19-06-2016ல் தொடரும்)