வெள்ளி, 17 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

IMG_0002

 

நான்காங் களம்

இடம்: அயோத்தி அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரம்

காலம்: பிற்பகல்

பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை, தசரதர், இராமர்,சுமந்திரர், வாயில் காப்போர் முதலியோர்.

{கைகேயி மஞ்சத்தில் நித்திரை செய்கிறாள். மந்தரை வருகிறாள். கைகேயி உல்லாசமாய்ப் படுத்து உறங்குவதை உக்கிரத்துடன் பார்க்கிறாள். முக்கிய சமயத்தில் நித்திரை பங்கஞ் செய்வதால் தோஷமில்லையென்று திடங்கொண்டு, 'அம்மா' அம்மா' என்று பலமுறை கூப்பிடுகிறாள். எழுந்திராததைக் கண்டு கையைத்தட்டிச் சத்தமிட்டு எழுப்புகிறாள். கைகேயி உறக்கந்தெளிந்து எழுந்து உட்கார்ந்து, உறக்க மயக்கத்தோடு)

கைகேயி:-- என்னடி வெகு அவசரமாய்த் தட்டி எழுப்பி விட்டாய்!IMG

மந்தரை (கோபத்தோடு):-- அவசரமா! உங்கள் வாழ்வைத் தொலைக்க வருகிறதம்மா ஒரு சரம். அதனால்தானம்மா அவ்வளவு அவசரம். தலைக்கு மேல் வந்துவிட்டது வெள்ளம்! கலங்குகிறதே என் உள்ளம்! சௌயபாக்கியங்களெல்லாம் தங்களை விட்டு ஓடுகின்றனவே! எல்லாப் பாக்கியங்களும் கோசலையை நாடுகின்றனவே! பரதனில்லாச் சமயம் பார்த்துப் படுகுழியை ஆழமாய்ப் பறித்து விட்டார்களே! அவன் வாழ்வை நாசமாக்க நாளுங் குறித்து விட்டார்களே! ஊரெங்கும் பாருங்கள் பெருமுழக்கம்! உங்களுக்கின்னுமா உறக்கம்! தங்களைச் சூழ்ந்துள்ள இடரின்னதென்று அறியாதிருக்கிறீர்களே, இதற்கு நானென்ன செய்வேன்!

கைகேயி:-- என்னடி உளறுகிறாய்?

பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவருந் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயந்தவெற் கிடருண் டாங்கொலோ

எனக்கேதடி இடர்? உலகமெலாம் புகழும் புத்திரசிகாமணிகள் நால்வர் க்ஷேமமாயிருக்கும்போது எனக்கு என்னடி குறை? சர்வஜீவர்களுக்கும் வேதம்போல் விளங்கும் ஸ்ரீராமச்சந்திரனைப் பெற்ற எனக்கென்னடி துன்பம்? உலகம் முழுகிப் போய்விட்டதுபோலப் பதறி என் உறக்கத்தைக் கலைத்து ஏதேதோ உளறுகிறாயே என்னடி? என்னடி மோசம் வந்தது? யாருக்கு என்ன அபாயமடி விளைந்தது? சமுத்திரம் பொங்கி விட்டதா? எனக்கு வந்த தாழ்வென்ன? அக்காள் கோசலைக்கு வந்த வாழ்வென்ன? குழந்தை இராமன் வில்லுண்டையா லடித்ததை ஒரு பெருங்குறையாக முன் ஒருதரம் என்னிடம் சொல்லவந்தையே, அவ்விதமான பெருங்குறையேதேனும் இப்பொழுது வந்துவிட்டதா? அவசரப் படாமல் நிதானித்துச் சொல்லு.

மந்தரை:-- எனக்கொன்றும் குறை நேரவில்லை யம்மா.

வீழ்ந்தது நின்னலம் திருவும் வீய்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினா லந்தோ!

தங்கள் வாழ்வுதான் தாழ்ந்தது. தங்கள் கௌரவந்தான் குலைந்தது. தங்கள் க்ஷேமந்தான் தொலைந்தது. தங்கள் பாக்கியந்தான் உலைந்தது. எனக்கென்ன குறைவந்தால் தானென்ன? வேறு யாருக்கு என்ன குறை வந்தால்தான் எனக்கென்ன? உங்கள் நிலைமை உங்களுக்கே தெரியாமல் என்னை நிதானித்துப் பேசச் சொல்லுகிறீர்களே!

கைகேயி:-- மந்தரை! நீ சொல்லுகிறதொன்றும் நன்றாய் விளங்கவில்லையே. விஷயம் இன்னதெனச் சற்று விளக்கமாகச் சொல்லமாட்டாயா?

மந்தரை: -- விஷயமென்ன?

ஆடவர் நகையுற ஆண்மை மாசுற
தாடகை யெனும்பெயர்த் தைய லாள்படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளைவாழ் விதுநீ அறிதியோ?

புருஷர்கள் பார்த்துச் சிரிக்கவும், ஆண்மை பழுதுபடவும், தாடகை யென்னும் பெயருடைய ஒரு பெண்ணைக் கொல்ல, வில்லை வளைத்தானே உன் சக்களத்தி மகன் இராமன், அவனுக்கு நாளைய தினம் பட்டங்கட்டத் திட்டமாயிருக்கிறது. இது தெரியாமல் தாங்கள் நித்திரை செய்கிறீர்களே!

கைகேயி:-- (அகங்குளிர்ந்து, முகமலர்ந்து புன்னகை கொண்டவளாய்) என் மகன் இராமனுக்கா பட்டாபிஷேகம்! மெத்தச் சந்தோஷம். மந்தரை! இச்செய்தி கேட்டு என் இரு செவிகளும் குளிர்ந்தனவடி. இனிதானடி இந்த நாட்டுக்கு க்ஷேமாபிவிருத்தி; இனிதான் என் காதலருக்கும் கஷ்டநிவர்த்தி; ஜனங்களுக்கும் இனிதானடி மனத்திருப்தி. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று முதன்முதல் எனக்குச் சொல்லவந்த உனக்கு, நான் என்ன வெகுமதி செய்யப் போகிறேன்! (கழுத்திலிருந்த முத்தாரத்தைக் கழற்றி) இந்தா, இந்த முத்தாரத்தை அணிந்துகொள். (மந்தரையிடம் ஆரத்தைக் கொடுக்கிறாள்)

மந்தரை:-- (முத்தாரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு), அம்மா, உங்களைப்போல் ஒரு பெண்ணை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று கேள்விப் பட்டதும், உங்களுடைய க்ஷேமத்தை எண்ணி நான் அடைந்த துயரத்துக்களவில்லை. நான்கு புறமும் தீப்பற்றி எரிய நடுவே நிற்பவளைப்போல, நான் வயிறெரிந்து, மனமெரிந்து வந்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷம் கொண்டாடுகிறீர்கள். சமயமல்லாத சமயத்தில் சந்தோஷமா? துன்ப சாகரத்தின் மத்தியில் நீங்கள் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை. உங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை நினைக்க எனக்குத் துயரம் பெருகுகிறது. உங்கள் மடமையைப் பார்க்க ஒருபக்கம் சிரிப்பும் வருகிறது. நீங்கள் க்ஷேமமாயிருந்தால் உங்களையடுத்த எங்களுக்கு க்ஷேமமுண்டு. இராமன் முடி சூடிக்கொண்டால் கோசலை பாடு கொண்டாட்டம். பிறகு உங்கள் பாடும், உங்களையடுத்த எங்கள் பாடுமே திண்டாட்டம். அப்புறம் உங்களுக்கு வாழ்வேது? நீங்களும் உங்கள் மகனும் அவளுக்கு அடிமையாய் இருக்க வேண்டியதுதான். அவள் தாதிக்கும் தோழிக்கும் அடிமையாய் இருக்க என்னால் முடியாதம்மா!

கைகேயி:-- என்னடி, பித்தங்கொண்டவள் போல் மெத்தப் பிதற்றுகிறாய்? க்ஷத்திரிய தருமப்படி மூத்த பிள்ளைக்கே பட்டமென்பது உனக்குத் தெரியாதா? எனது குழந்தைகள் நால்வருள்ளும் இராமனன்றோ மூத்தவன். அவனுக்குப் பட்டங்கட்டுவதைத் தடுப்பதற்கு நீ யாரடி? இராமன் மூத்த குமாரன் என்ற ஒரு யோக்கியதை மட்டும் உடையவனல்ல; உத்தம குணங்களெல்லாம் ஒத்து ஓர் உருவெடுத்து வந்தாற் போல்பவன். அவன் விஷயத்திலா நீ இப்படி நினைப்பது? அடி பாவி! நீ கூறியதைக் கேட்ட பிறகும் உன் எண்ணத்தை அறிந்த பிறகும் உன்னைக் காணக் கண் கூசுதடி. பரதனைவிட அவனிடத்தில் எனக்குப் பிரியம் அதிகம். அவனுக்கும் கோசலையை விட என்னிடத்திற் பற்றுதல் மெத்தவடி. இராமனுக்குப் பட்டமானால் அது பரதனுக்குப் பட்டமானது போலத்தான். பரதன் தமையனிடம் மிகவும் பற்றுதலுடையவன். இவை ஒன்றையும் யோசியாது ஏன் கண்டபடி பிதற்றுகிறாய்?

(மந்தரை தொடர்ந்து பேசி
கைகேயியின் மனதை மாற்றுவது
19-06-2016ல் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக