புதன், 8 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 29

நாற்பத்தாறாவது ஸர்கம்

[அகஸ்திய முனிவர் கூறிய-ராவணனின் ச்வேத த்வீபகமனம், அங்கு அவனடைந்த பரிபவம், மறுபடி அங்கு ஸநத்குமாரரை ஸந்திப்பது முதலியன.)

        மீண்டும் ராவணன், உலகத்தவரை வெற்றி கொள்ள விரும்பியவனாகி, சூரர்களான ராக்ஷஸர்கள் பலர் சூழப்பெற்று இப் பூமண்டலமெங்கும் ஸஞ்சரிக்கும் பொழுது, நாரத முனிவர் அவனெதிரில் வரக்கண்டு, ஸந்தோஷமடைந்தவனாய், அவரை வணங்கிப் பூஜித்து, அவரைப் பார்த்து 'ஸ்வாமின்! நாரதமுனிவரே! தாங்கள் மூவுலகங்களிலும் ஸஞ்சாரம் செய்கிறீரல்லவா? என்னுடன் போர் புரியக் கூடிய பலசாலி இவ்வுலகினில் எவரேனும் உளரா? அப்படியிருப்பின் அவர்களிருப்பிடத்தை எனக்குக் கூறவும்' எனக் கேட்டான்.

                நாரதர் ராவணனை நோக்கி, ஒரு முகூர்த்த காலம் சிந்தனை செய்து, பின்வருமாறு கூறினார்- அரசனான ராவண! பாற்கடலின் மத்தியில், ச்வேத த்வீபமென்கிற திடலொன்றுள்ளது. அங்குள்ள மானவர்கள் பால் போன்ற வெண்மையான நிறம் உள்ளவர்களாகவும், மிகுந்த பலசாலிகளாகவும். மிகப்பெரிய சரீரங்களை உடையவர்களாகவும், மேக கர்ஜனம் போன்ற குரலையுடையவர்களாகவும், மிக்க தைரியசாலிகளாகவும் மிக நீண்ட கைகளையுடையவர் களாகவும் விளங்குகின்றனர். நீ விரும்பியபடி உன்னோடு போர் புரியத் தக்கவர்களாக அவர்களுள்ளார்களென நினைக்கிறேன், என்றார்.

        இதைக் கேட்ட ராவணன் - மறுபடியும் நாரதரைப் பார்த்து - 'மஹர்ஷியே, அந்தத் தீவில், மானிடர்கள் பலசாலிகளாக இருப்பதற்கென்ன காரணம்? அம்மகானுபாவர்களுக்கு அந்த ச்வேத த்வீபம் வாஸ ஸ்தானமாயமைந்ததற்கு காரணம் யாது? இவை யாவையும் உள்ளபடி அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும்', என வேண்டினான். நாரதர் அவனை நோக்கி, “ராவண அம்மனிதர்கள் வேறு சிந்தனையின்றி எப்பொழுதும் நாராயணனையே மனத்திற் கொண்டு அவனே தமக்கு ரக்ஷக னென்றுணர்ந்து எப்பொழுதும் அவனையே தியானம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.

        அவர்களுடைய ஜன்மாந்தர புண்ணிய விசேஷத்தினால் அத்தீவினில் வஸிக்கும்படியான பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. சங்கொடு சக்கரம் ஏந்துந் தடக்கையனான ஸ்ரீமந் நாராயணன் தனது சார்ங்கமென்னும் வில்லை வளைத்துச் சமர்புரிய, அவர் கையால் அடியுண்டவர் எவரோ, அவர்களுக்கே எல்லாவற்றிற்கும் மேலான அவ்வுலகம். தானம், தவம், வேள்வி முதலியவை புரிந்தவர்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் எளிதிற் கிடைப்பதரிதாகும். என்றார். இது கேட்டு ராவணன் வியப்புற்றவனாகி, நெடுநேரம் ஆலோசனை செய்து, 'யான் அந்த நாராயணனுடன் எதிர்த்துப் போர் புரிவேன்’ என்று தீர்மானித்து ச்வேத த்வீபத்தை நோக்கிச் செல்லலாயினன்.

        இங்ஙனம் தேவர்களுக்கும் செல்வதற்கரியவிடமான ச்வேத த்வீபத்தை அவன் அணுகியதும், அவன் அமர்ந்து சென்ற புஷ்பக விமானம, அந்தத் தீவினது ஒளியால் எரிக்கப் பட்டதாகி. அங்கு உண்டாகிய காற்றில் வேகத்தினால் மோதப்பட்டு நிலை கொள்ளத் திறமை அற்றதாகியது கண்ணெடுத்துக் காணவும் அரியதாக விளங்கும் அத்தீவினிடஞ் சேர்ந்த அளவில் ராவணனது மந்திரிகள் அஞ்சி நடுங்கியவர்களாகி ராவணனை நோக்கி, “அரசே! நாங்கள் இவ்விடத்தை அணுகிய அளவில், அறிவையும் ஆலோசனையையும் இழந்து மூடர்களாயினோம், நிலைத்து நிற்கவும் சக்தியற்றுத் தவிக்கிறோம். ஆதலால் நாங்கள் எதிர்த்துச் சமர் புரிவது எங்ஙனம்? என்று கூறி யாவரும் ஒன்று கூடி ஓடிப் போயினர். அதற்குள் நாரத முனிவர் அந்தத் தீவை அடைந்து அங்கு நடக்கும் அதிசயத்தைக் காண விரும்பி அங்குச் சென்றனர். ஆனால் ராவணன் கொஞ்சமேனும் பயப்படாமல் விமானத்தைவிட்டு இறங்கி. பயங்கரமான  பத்துத் தலைகளுடன் கூடின உருவத்தைத் தரித்து, அந்த ச்வேத த்விபத்தில் பிரவேசிக்கலாயினான்.. அவன் அத்தீவில் புகுந்த மாத்திரத்தில் பல கட்டழகு வாய்ந்த பெண்மணிகள் அவனைக் கண்டனர். அவர்களிலொருத்தி ராவணனைக் கண்டு நகைத்து. அவனது கையைப் பிடித்துக் கொண்டு, “நீ யார். இங்கு வந்த காரணமென்ன? என வினவினள்,

        அது கேட்ட ராவணன், கோபங் கொண்டு அவளை நோக்கி, “நான் விச்ரவஸ் முனிவரது புதல்வன். ராவணன் எனப் பெயர் பூண்டவன் நான் யுத்தம் செய்வதன் பொருட்டு இங்கு வந்தேன்.” என்று கூறினான். ராவணன் இவ்விதம் கூறியதைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் குலுங்க நகைத்தனர். அவர்களிலொருத்தி சினங் கொண்டு ராவணனை ஒரு குழந்தையெனக் கையிலெடுத்து வினோதமாய் அவனைச் சுழற்றிக் கீழே வீழ்த்தி, மற்றெரு தோழியை அருகிலழைத்து, 'ஸகி! நீ இப்பூச்சியைப் பார்த்தனையா? பத்து முகமும் இருபது கைகளுமுடையதாய், மைபோலக் கருநிறமாயிருக்கின்றது." என்று கூறி, மீண்டுமவனை எடுத்து, மற்றெருத்தி கையிலெறிந்தனள். அவள் வேறொருத்தி கையிலெறிந்தனள், இங்ஙனமவர்கள், கைக்குக்கைவீசி எறிவதைத் தாங்க முடியாது தசானனன் தவித்து ஆயாசமுற்றனன். அப்பொழுது அவன் கோபங் கொண்டு, ஒரு அழகியைக் கையில் பற்களால் பற்றிக் கடித்தனன். அவ்வேதனையைப் பொறுக்க முடியாது. அந்த மாது அவனைக் கீழே எறிய, மற்றெரு மங்கை அவனைக் கையிலெடுத்துக் கொண்டு வானத்தில் எழுந்தனள். ராவணன் மிக்கச் சினங்கொண்டு அவளை நகங்களால் நன்றாகப் பீறினான். அந்த வலியினால் அவளும் அவனைக் கீழே விட்டுவிட, அவன் அங்கிருந்த ஆழமான கடலினிடையே, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட மலையென விழுந்து, அக்கடலின் மீதே மிதந்து கொண்டு கிடந்தனன்.

        ஸ்ரீராம! இங்ஙனம் ச்வேத த்வீப வாஸிகளான வனிதையர்களால் ராவணன் வருத்தப் பட்டவனாகி மயங்கித் தவித்தனன். இதை நாரத முனிவர் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு, நகைத்து நர்த்தனம் செய்தனர். பிறகு ராவணன், அக்கடலின் தென்கரையை அடைந்து, 'ஆ இஃதென்ன ஆச்சரியம்! நான் உலகமெல்லாம் சென்று ஜயம் பெற்றேன். ஸ்வபாவமாகவே ஆற்றலில்லாத வர்களாய், அபலைகள் எனப்பெயர் பெற்ற பெண்களுக்கு இவ்விதமான செய்கை இயல்பிற்கு விரோதமானது அன்றோ! இவ்வுலகத்து மனிதர்கள் நாரதர் கூறியபடி ஸர்வ வல்லமை உள்ளவர்கள் போலும்! அவர்களே இங்ஙனம் அரிவையர்களாக வேடம் பூண்டு, என்னைப் பரிபவப்படுத்தினர் என நினைக்கிறேன்! அத்தகைய பலவான்களுடன் சினேகம் செய்து கொள்வதே சிறப்புடையது' என்று சிந்தித்துத் தேறினன்.

        பின்னர் அவர்களது வரலாற்றை நன்கு உணருமாறு, அவன் அங்குள்ள வனமெங்கும் சுற்றித் திரிந்தனன். அங்குள்ள ஓர் குகையில், ஸனத்குமார முனிவரைக் கண்டு, அவரை நோக்கித் “தபோதனரே! இந்த உலகம் எந்த மகானுபாவனால் உண்டுபண்ணப் பட்டது? இவ்வுலகத்தில் வஸிப்பவர் யார்? தேவரீர் எவரை உள்ளத்தில் கொண்டு தியானம் செய்கின்றீர்? இவை யனைத்தையும் எனக்குக் கூறவும், என்றான். இவ்வாறு ராவணன் வினவியது கேட்டு, அம் மஹா முனிவர், 'குழந்தாய் ராவண! கூறுகிறேன், கேள். ஸகல உலகங்களையும் படைத்துக் காத்தருளும், ஆதி அந்த ரஹிதனான நாராயணனால் தனக்கு வாஸஸ்தானமாக இவ்விடம் கல்பிக்கப் பட்டது. இங்குள்ளவர்கள் அந்த நாராயணனையே தஞ்சமெனக் கொண்டு, அவனைப் பூஜிக்கின்றனர். ராவண! முனிவர்கள் தொழுதேத்தும், அந்த நாராயணனையே நீ நாடக்கடவாய். பிரம்ம தேவனும் அந்த பரப்பிரம்மத்தை அறிந்தவனல்லன். ஸகலலோக நாதனும் ஜகத்துக்குக் காரணபூதனுமான அப்பெருமானை எவன் எப்பொழுதும் பூஜிக்கிறானோ அவன் நிச்சயமாக அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவான்' எனக்கூறினர்.

        பிறகு ராவணன் அம்முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு இலங்காபுரி போய்ச் சேர்ந்தான். நாரதரும் அத்தீவை விட்டு மேரு மலையிலுள்ள பிரம்ம தேவனுடைய மகாசபையை அடைந்து, தான் கண்ட அதிசயத்தை பிரம்ம தேவனிடம் கூறினர். அப்பொழுது நான்முகன் நாரதரைப் பார்த்து, 'குழந்தாய்! ராக்ஷஸர்களில் தலைவனான ராவணன் முன் ஜன்மத்தில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்திருந்தனன். அவன் பலவிதமாகத் தவம் செய்து வேண்டிய வரன்கள் பெற்றுச் சிறந்த பலசாலியாய் எவராலும் வெல்லுவதற்கரியனாய் இருந்தனன். அச்சமயம் அவன் நரசிங்க மூர்த்தியினால் இழுக்கப் பட்டு எம்பெருமானது மடியில் கிடந்தவாறே அவரது உகிர்களால் உடல் பிளந்து பரிதபித்துக் கொண்டிருக்கையில், பூர்வ ஜன்ம ஜ்ஞானம் உண்டாகப்பெற்று. அப்பெருமானை நோக்கி, “ஹே தேவ! அடியேனை ரக்ஷித்தருள்க, அடியேனுக்கு இனி நேரிடப் போவதான ராக்ஷஸப் பிறவி தேவரது திருக்கரத்தினால் ஒழிந்து அங்ஙனமே அதன் பிறகு உண்டாகும் மானிடப் பிறவியும் ஒழிந்த பின்னர் அடியேன் தேவரீருடைய ஸாம்யத்தை அடைந்து முக்தி உலகம் பெறுமாறு அருள்புரிய வேண்டுகிறேன். ஹே! ஜகந்நாத! அங்ஙனமே கடாக்ஷித்தருள்க!” என வேண்டிக் கொண்டான். நரஸிங்கமூர்த்தி அது கேட்டு ‘அவ்வாறே ஆகுக' என அருள்புரிந்து அற்புதமான விமானத்திலேறிச் சென்றனர். நாரத! அந்த ஹிரண்ய கசிபு இப்பொழுது ராக்ஷஸ (ராவண) னாகப் பிறந்திருக்கின்றனன். இவன் எப்பொழுதும் அந்த நாராயணனையே, சிந்திப்பவனாகி நாளைக் கழிக்கின்றனன். இனி அவன் மானிடனாகப் பிறந்து உலகங்களைத் துன்புறுத்தத் தலைப்படுவான். அந்த மூன்றாவது பிறவியிலும், விஷ்ணு தேவனால் வதையுண்டு பெறுதற்கரிய விஷ்ணு ஸம்பந்தமான சோதியில் புகுந்து, ச்வேத த்வீபத்தை அடைவான்.

        “நாரத! ஸகல பாபங்களையும் போக்குவதான இந்தப் புண்ணியமான வைஷ்ணவ சரித்திரத்தை எவன் நித்யம் ஆதியோடந்தமாகப் படிக்கின்றானோ அவன் உயர்ந்த கதியை அடைவான்”, என்றார். ஸ்ரீராம! பிறகு நாரத முனிவர், மேரு மலையை வலம் செய்து கொண்டு எனது ஆச்ரமத்திற்கு எழுந்தருளினார். அப்பொழுது நான் அவரை வணங்கி வரவேற்றுப் பூஜித்தேன். அப்பொழுது முனிவர் இக்கதையை எனக்குக்  கூறினர். அதை அப்படியே இப்பொழுது நான் உனக்குச் சொன்னேன்.

        ஹே ராகவ இக்காரணம் பற்றியே துராத்மாவான ராவணன் மரணமடைய விரும்பி மைதிலியை அபஹரித்துக் கொண்டு சென்றனன். ஆதலால் நீ பஞ்சாயுதங்கள் தரித்த அந்த பரஞ்சோதியான நாராயணனேயன்றி வேறல்ல. இதை நீயே உனது சக்தியைக் கொண்டு உணர்வாயாக.. நீ ஸகல உலகங்களையும் ஸ்ருஷ்டித்துக் காத்து அழிப்பவனன்றோ!. நான்கு வேதங்களின் பொருளாய் நிற்பவன் நீயேயன்றோ! நாராயணனான நீ ராவணனை ஸம்ஹரிப்பதற்காக ராமாவதாரம் செய்தருளினை ஹே ராம! உன்னை நீ யாரென்று அறிந்து கொள்ளவில்லையா? எங்களை மோஹிப்பிக்காதே, நியே முன்பு மஹாபலியை வஞ்சித்து மூவடியால் உலகளந்தனை நீ இப்பொழுது வந்து அவதரித்த காரியம் முடிந்தது. ஶ்ரீமகாலக்ஷ்மியே ஸீதையாக வந்து அவதாரம் செய்தனள். அந்த தேவியை ராவணன் பிரயத்தனப்பட்டு இலங்காபுரிக்குக் கொண்டு போய் தாயைப்போல் வைத்து வெகு கருத்துடன் பாதுகாத்தனன், ஹே ராமச்சந்திர! முக்காலமுணர்ந்த முனிவரான நாரதர் எனக்கு உரைத்தவை யாவும் உனக்கு எடுத்துக் கூறினேன.் இவை யாவும் ஸனத் குமாரர் சொற்படி கேட்டு, அதன்படி ராவணன் செய்த காரியமேயன்றி மற்றொன்றுமல்ல. இதன் பெருமையை உணர்ந்து எவன் இந்த சரித்திரத்தை, சிராத்த காலத்தில், பிராம்மணர்களுடைய ஸன்னிதானத்தில் அவர்கள் கேழ்க்குமாறு செய்கிறனோ அவனுடைய பித்ருக்களுக்கு, அநந்தமான அக்ஷ்யம் அளிக்கப்பட்டதாகும்" என்று கூறி முடித்தார்.

        திவ்யமான இக்கதையைக் கேட்டுச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீராமபத்ரன் தனது பிராதாக்களுடனே அளவிலாத ஆநந்தமடைந்தனன். அந்தச் சபையில் கூடியிருந்த, சுக்ரீவன் முதலிய வானரர்களும் விபீஷணன் முதலிய ராக்ஷஸர்களும், மந்திரிகளும், ஏனையோரும் கேட்டுக் கண்கள் மலர்ந்து களிப்புற்றவர்களாகி, ஸ்ரீராமச்சந்திரனையே வைத்த கண் வாங்காமல் கண்டு நின்றனர். அகஸ்திய முனிவரும், ஸ்ரீராமனிடம் விடைபெற்றுத் தமதிருப்பிடம் சென்றனர்.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம் – உத்தர காண்டம் 28-

நாற்பத்து நாலாவது ஸர்க்கம்.

[அகஸ்த்யர் ராமனிடம், ராவணன் ஸீதையை அபஹரித்ததற்குக் காரணம் கூறுதல்]

        இப்படி வாலி சுக்ரீவர்களின் உத்பத்தியைக் கேட்ட ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷமடைந்தார். மறுபடியும் அகஸ்திய முனிவர், ஸ்ரீராமளைப் பார்த்து ஶ்ரீராம! மற்றுமொரு முந்தைய விருந்தாத்தந்தைக் கூறுகிறேன். அதன் மூலமாக ஸீதையை ராவணன் என் அபஹரித்துச் சென்றான் என்பது விளங்கும். இதை ஸாவதானத்துடன் கேட்கவும் எனக் கூறி. சொல்ல ஆரம்பித்தார்.— ஸ்ரீராமபத்ர! முன்பு கிருதயுகத்தில் பிரம்மதேவனின் புத்திரரான சநத்குமாரர். சூரியன் போலப் பிரகாசித்துக் கொண்டு வீற்றிருப்பது கண்டு, ராவணன் மிகவும் வினயத்துடன் அவரை வணங்கி வினவலாயினன் "ஹே! தபோதனரே! இவ்வுலகில் உத்தம புருஷன் யாவன்? தேவர்களனைவரிலும் அதிகமான ஆற்றலுடையவன் யாவன்? யாரைத் துணையாகக் கொண்டு, தேவர்கள் போர் செய்து பூமியில் எதிரிகளை வெல்லுகின்றனர்? எவனைக் குறித்து வேள்வி செய்கின்றனர்? யோகிகள் எவனை உள்ளத்திற்கொண்டு நித்யமாகத் தியானம் செய்கின்றனர்? இவற்றை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக" என்று,

        இதைக்கேட்ட அவர், ராவணனுடைய உள்ளத்திலுள்ளதை யோகத்ருஷ்டியினால் அறிந்தவராகப் பின்வருமாறு கூறினார். “ஹே ராவண எவன் இவ்வுலகமனைத்தையும், படைத்துக் கெடுத்துக் காத்து வருகிறானோ, எவனுடைய உத்பத்தி யாராலுமறியப் படாமலுள்ளதோ. எவனை தேவாஸுர கணங்கள் நித்யமாக வணங்கி வழிபடுகின்றனவோ, அவனே, விஷ்ணு, ஹரி, நாராயணன் எனப்படுபவன். புராணம், வேதம், பாஞ்சராத்ரம் முதலான சாஸ்திரங்கள் அவனையே கூறுகின்றன. அவனுடைய நாபீகமலத்திலிருந்து உண்டான பிரம்மதேவன், சராசரங்களுடன் கூடின இவ்வுலகினைப் படைத்தான். ஸகல சாஸ்திரங்களாலும் புகழப்படும் அந்த நாராயணனையே யோகிகள் எப்பொழுதும் த்யானிக்கின்றனர். தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலான தேவ சத்ருக்கள் அனைவரையும் அவனே, போர்க்களத்தில் ஜயங்கொள்பவன்'' என்று.

        இவ்வாறு மஹரிஷி சொல்லக் கேட்ட ராவணன் மறுபடியும் அவரை வணங்கி, "ஸ்வாமின்! போர்க்களத்தில், மரணமடையும் தைத்யர், தானவர்-அரக்கர் முதலியோர் என்ன கதியையடைகின்றனர்? அப்படி விஷ்ணுவினால் வதையுண்டவர் யாவர்?" என வினவினான் அதற்கவர். ராவணனை நோக்கி, 'ராக்ஷஸேச்வர! தேவதைகள் கையினால் வதையுண்டவர்கள் எப்பொழுதும் தேவலோகம் செல்லுகின்றனர். மீண்டுமவர்கள் அவ்வுலகத்தினின்றும் நழுவிப் பூலோகத்தில் வந்து பிறக்கின்றனர். அவர்கள் அனைவரும் பூர்வஜன்மத்தின் புண்ய பாவங்களுக்குக் கேற்றபடி பிறத்தும் இறந்தும், இன்பமும் து்பமும் அனுபவிக்கின்றனர் ஆனால் சக்ரபாணியான விஷ்ணுதேவனால், வதையுண்ட வீரர்களோ, அங்ஙனமில்லாமல், அக்கடவுளது வீடான, அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைகின்றனர். ஆகவே, அந்தப் பரம புருஷனது கோபமும் அவர்களுக்குக் கருணையேயாகின்றது” என உரைத்தார்.

        இதுகேட்ட அரக்கர் தலைவனான ராவணன் மிக்க மகிழ்ச்சியும் வியப்புமடைந்தவனாக, “யான் போர்க்களத்தில் அந்த நாராயணனை எதிர்த்து நிற்கும் வகை யாது?” என விசாரங் கொள்ளலானான்.

       

நாற்பத்தைந்தாவது ஸர்கம்  

[ஸ்ரீமந் நாராயணனின் கைகளால் வதத்தை விரும்பும் ராவணனுடைய மனோபாவத்தை யறிந்த ஸநத்குமாரர், நாராயணனே ராமனாகப் பூமியில் அவதரிக்கப் போவதைக் கூறுவது ]

        இப்படிச் சிந்தனையிலாழ்ந்த ராவணனைப் பார்த்து ஸநத்குமாரர், “ராவண! உனது எண்ணம் போல், நீ நாராயணனோடு போர் புரிவாய், அதற்கான சந்தர்ப்பம் உண்டாகும்" என்றார். அதைக் கேட்ட ராவணன் “ஸ்வாமின்! அந்த ஸந்தர்ப்பம் எப்பொழுது உண்டாகும்? எத்தனை காலம் அதற்காக தான் காத்திருக்க வேண்டும்! என்றும், அந்த நாராயணனுடைய லக்ஷணத்தையும் கூறவேண்டும். எனவும் வேண்டினன். அதற்கு அம்முனிவர் அந்த நாராயணன் எங்குமுளன், ஸூக்ஷ்மகுபி. கண்களுக்குப் புலப்படாதவன், ஆதி மத்ய அந்த ரஹிதன், அவனால் இவ்வுலகமனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது. அவனே பிரணவ ஸ்வரூபி, இவ்வுலக மனைத்தையும் தரிப்பவன்; அந்தப் பரமபுருஷனே. ஐந்து பூதங்களாய். இரண்டு சுடராய், அருவாகி, நாகத்தணையனாய் நடுக் கடலுள் உறங்குவான் போல் யோகநித்திரை புரிபவன், சகல உலகங்களையும், படைத்துக் கெடுத்துக் காத்துழலும் காரியத்தைத் தனக்கு ஒரு லீலையாக உடையவன். ஹே தசானன! நீலோத்பவத்தின் இதழ் போன்ற நீல நிறமான திருமேனியும் தாமரை மலரினது இதழ் போன்ற சிவந்த பீதக வாடையும் உடையவனாகி, மாரி காலத்து மின்னலோடு கூடின கருமுகிலென விளங்குகின்றனன். தாமரைக் கண்ணனான அவனது திருமார்பில், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு விளங்க, அவனது கருமுகில் போன்ற திருமேனியில், நீருண்ட மேகத்தினிடையே தோன்றும் மின்னற் கொடியென வெற்றி வடிவமான திருமகள் என்றும் இணை பிரியாது வீற்றிருக்கின்றனள்.

        அம்மஹா புருஷனை. தேவர்களேனும் அஸுரர்களேனும், பன்னகர்களேனும் காணும் திறமுடையவரல்லர். எவர்களிடத்தில் அவன் அருள் புரிகின்றனனோ. அவர்களே அவனைக் காணவல்லவர்கள். தன்னுடையப் பிரயத்தினத்தினால் எவரும் அவனைக் காண முடியாது. ராவண! இத்தகைய பரமபுருஷனை எங்ஙனம் உன்னால் காண முடியும்? ஆயினும் நீ அவனைக் காண விரும்புவாயேயாயின். அதற்கு யானொன்று சொல்லுகிறேன். கிருதயுகம் கழிந்த பின்னர். திரேதா யுகத்தின் துவக்கத்தில், ஸ்ரீமஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் தசரத குமாரனாக, ராமனாக அவதரிப்பான். அக்காலத்தில், ஸ்ரீமகாலக்ஷ்மியே ஸீதாதேவி என்ற பெயருடன், ஜனக மகாராஜனுக்குப் புத்ரியாகப் பூமியினின்று, உத்பவித்து, அவ்விராமனுக்கு தர்ம பத்னியாவாள். அந்த ராமன் பித்ருவாக்ய பரிபாலனத்தின் பொருட்டுத் தன் மனைவியுடனும் தம்பியுடனும் தண்ட காரண்யத்திற்குச் சென்று அவ்வனம் முழுதும் ஸஞ்சரிக்கப் போகிருன். அச்சமயம் நீ அவனைக் காண்பாய்' என்று கூறினார்.

        “ஸ்ரீராம! இவ்வாறு ஸநத்குமாரர் மொழிந்ததைக் கேட்டு ராவணன், அம்முனிவரிடம், விடைபெற்று, அவர் கூறிய வார்த்தைகளை ஓயாது சிந்தனை செய்து கொண்டு மனம் மகிழ்ந்து, உன்னுடன் பகை கொண்டு போர் புரிய விருப்பமுற்று ஸீதையை அபஹரித்துச் சென்றனன்" என்று அகத்தியர் கூறினார்.

        இந்த விருத்தாந்தத்தைக் கேட்ட ஸ்ரீராமன், ஆச்சரியத்தினால் மலர்ந்த கண்களையுடைய வராகித் தலையை அசைத்து மகிழ்ந்தவராகி, மறுபடியும் அகஸ்த்ய முனிவரைப் பார்த்து, மேலும் பழைய விருத்தாந்தங்களை உரைத்திட வேண்டுமெனப் பிரார்த்தித்தார்.

புதன், 1 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 27

நாற்பத்து மூன்றாவது ஸர்க்கம்

(அகஸ்த்யர் கூறிய வாலி ஸுக்ரீவ ஜனனம்.]     

                அப்பொழுது அந்த ஸபையில், ஸ்ரீராமச்சந்திரன் அகஸ்திய முனிவரைப் பார்த்து, "ரிஷிபுங்கவ! வாலி ஸுக்ரீவர்களின் பிதா! 'ரிக்ஷரஜஸ்' என்று கூறினீர்கள். இவர்களின் தாய் யார் என்பதைக் கூறவில்லையே. அவளின் பெயரையும்-அறிய விரும்புகிறேன். கிருபையுடன் கூற வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

        இப்படி ஸ்ரீராமச்சந்திரனால் கேட்கப்பட்ட அகஸ்திய முனிவர் கூறியதாவது:- “ஸ்ரீராம பத்ர! முன்பொரு ஸமயம், திரிலோக ஸஞ்சார சீலரான நாரதர் என்னுடைய ஆச்ரமத்திற்கு வந்தார். அவரை நான் முறைப்படி உபசரித்து வார்த்தையாடிக் கொண்டிருந்தபொழுது, வாலி, சுக்ரீவர்களின் பிறப்பைப் பற்றி நான் கேட்க அவர் கூறியதை நான் உனக்குக் கூறுகிறேன். ஸாவதானத்துடன் கேட்கவும்       ஸுவர்ணமயமானது மஹாமேரு பர்வதம். அதன் மத்யமமான சிகரமானது ஸகல தேவதைகளாலும் விரும்பி வஸிக்கப்படுவது மத்தியில் நூறுயோஜனை விஸ்தீர்ணமுடையது 'பிரம்மஸபா' என்ற இடம். அதில் எப்பொழுதும் பிரம்மா வஸித்து வருகிறார். அவர், ஒரு ஸமயம் ''யோகம்' செய்துகொண்டிருந்தபொழுது அவரது கண்களில் நீர்த்துளி ததும்பியது. அதை அவர் கையினால் எடுத்துக் கீழே எறிந்தார். அந்த நீர்த்துளி ஒரு வானரமாக மாறியது. பெயர் ரிக்ஷரஜஸ். பிரம்மதேவர் அவனைக் கண்டு இனிய மொழிகள் மொழிந்து, "ஹே வானர! இந்த மலையைப் பார். இந்த அழகிய மலையில் தேவர்களும் ரிஷிகளும் வஸிக்கின்றனர். ஆகவே நீயும் இந்த மலையில் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, சில காலம் என் அருகிலேயே வஸித்து வா, பிறகு உனக்கு நன்மை உண்டாகும் என்று அருளினார். இதைக் கேட்ட வானரன் அப்படியே ஆகட்டும் எனக் கூறி, மகிழ்ந்து வஸித்து வந்தான். பகலெல்லாம் மலையில் ஸஞ்சரித்து கனிகள், தேன் இவற்றைச் சாப்பிட்டு, அஸ்தமன ஸமயத்தில் புஷ்பங்களையும் கனிவர்க்கங்களையும் எடுத்துக்கொண்டு, பிரம்மதேவனை அணுகி நமஸ்கரித்துப் பூசித்து வந்தான். இப்படியாக வெகுகாலம் சென்றது.

        ஒரு ஸமயம் இந்த ரிக்ஷரஜஸ் என்ற வானரன், நடுப்பகலில் தாகத்தினால் பீடிக்கப்பட்டவனாக ஒரு மடுவின் கரையை அடைந்தான். அதனுள் தனது பிரதிபிம்பத்தைக் கண்ட வானரன், சிறிய அலைகளால் தனது பிம்ப உருவம் சற்றே வளைந்து அசைவதைப் பார்த்து, நீரினுள்ளே வேறொருவன் நின்றுகொண்டு தன்னைப் பரிஹஸிப்பதாக நினைத்தான். அதனால் கோபம் கொண்ட அவன் சடக்கென்று தண்ணீரில் பாய்ந்து அவனை தண்டிக்க நினைத்தான் தண்ணீரில் குதித்தான். அங்கு ஒன்றும் இல்லாமையால் மறுபடி கரையேறினான். அப்பொழுது அவனது ஆண் உருவம் மாறிப் பெண்ணினுடைய தாயிற்று. காண்போர் மனதை மயக்க வல்ல அழகான ரூபமும் ஸௌந்தரியமும் மன்மதனுடைய கணை போன்ற புருவமும், கறுத்த குழலும், புன்னகை வாயமைந்த வதனமும் விம்மி வீங்கிய கொங்கைகளும் அமைந்த புதுமையானதோர் பொற்கொடியென அந்தப் பெண்மணி மடுவின் கரையிலே நின்றாள். மேலும், அவள் தாமரைமலர் மேல் அமர்ந்திராத லக்ஷ்மி போலவும், களங்கமற்ற தெள்ளிய நிலவு போன்றவளுமாக மூவுலகத்தவரையும் மயங்கச் செய்து கொண்டு நின்றாள்.

        அந்த வேளையில், பிரம்மதேவனைப் பூஜித்து வணங்கிய தேவேந்திரன் அவ்வழியாக வந்தவன் இந்த ஸ்த்ரீயைக் கண்டான். அதே ஸமயத்தில் சூரியனும் அங்கு வந்தான். அவனும் இந்த அணங்கைக் கண்டான். இருவரும் இவளுடைய அழகிய உருவத்தைக் கண்டு, காமனின் கணைக்கு இலக்காயினர். உடனே இந்திரனது வீரியம் ஸ்கலிதமாக (வெளிப்பட) அதனை அவன் அவளது தலையில் விழுமாறு செய்தான். அது அவ்வாறு விழாமல் வாலிலே விழுந்தது. தேவர்களுடைய வீரியம் ஒருபொழுதும் வீணாவதில்லை யாதலால், உடனே அஃது, அதிக பலசாலியான ஒரு வானரமாக மாறியது. வாலிலிருந்து உண்டான காரணத்தினால் அந்த வானரனுக்கு. 'வாலி' என்றே பெயர் வழங்கலாகியது. சூரியனும் அவ்வாறே அநங்கனுக்கு வசமாகித் தனது வீரியத்தை அத்தப் பெண்மானின் கழுத்தில் வீழ்த்தினான். க்ரீவை என்கிற கழுத்தில் வீழ்ந்த அந்த வீரியம் ‘ஸுக்ரீவன்' எனப் பெயர் பெற்ற வானரமாயிற்று. பிறகு தேவேந்திரன் ஒரு காஞ்சன (பொன்) மாலையைத் தனது குமாரனான வாலிக்குப் பரிசாக அளித்துவிட்டுத் தேவலோகம் சென்றான். சூரியன் தனது குமாரன், வாயுகுமாரனிடம் சேருவானென உணர்ந்து, தன் காரியத்திலே கண்ணுற்றவனாகி, விண்ணிடையே சென்றான்.

        ஸ்ரீராமசந்திர! அன்றிரவு கழிந்து மறுநாள் காலையில், சூரியன் உதித்தவளவில், அந்த வனிதை மறுபடி வானரமே ஆனாள். ரிக்ஷரஜஸ் என்ற அவ்வானரன்,  தன்னருகே நின்ற காமரூபிகளான இரண்டு குமாரர்களையும், கண்டு களிப்படைந்தவனாகி, அவ்விடத்திலுள்ள அம்ருதத்திற்கொப்பான மதுவை அருந்தச் செய்து, அவர்களுடன் பிரம்மதேவனது இருப்பிடம் சேர்ந்தான்.

        பிரம்மாவும் தனது, (குமாரர்களுடன் கூடின) மகனைக் கண்டு களிப்புற்று, அருகிலிருந்த தேவதூதன் ஒருவனை நோக்கி 'நீ இவ்வானரர்களை அழைத்துக் கொண்டு கிஷ்கிந்தாபுரிக்குச் செல்லவும். அந்த நகரம் ஸகல சிறப்பும் பொருந்தி மிக மேன்மை பெற்று விளங்குகிறது. அங்கு வானர வீரர்கள் திரள்திரளாக வஸிக்கின்றனர். முன்பு எனது கட்டளைப்படி, விச்வகர்மாவினால், நவரத்னங்கள் நிரம்பப் பெற்ற மிகப் பெரிதான கடை வீதிகளுள்ளதாகி அந்நகரம் அநேகவிதமான அரண்களுடனே, நிருமிக்கப் பட்டுள்ளது. காமரூபிகளான வானரர்கள் விசேஷமாக வஸிக்கும் அவ்விடத்திற்கு, நமது குமாரனான ருக்ஷரஜஸ் என்னும் இவ்வானரனை இவனது குமாரர்களுடனே அழைத்துக் கொண்டு போய், அங்குள்ள ஸகல வானரர்களையும் அழைத்துச் சபைக் கூட்டி, நமது உத்திரவு இன்னதென்பதை யறிவித்து, அவர்களுடைய மத்தியில், இவனைச் சிங்காசனம் ஏற்றி, வானர அரசனாக அபிஷேகம் செய்யவும் என்று கூறிக் கட்டளையிட்டார்.-

        தேவதூதனும் அவ்வாறே, அவனைக் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று, அவனை அவ்விடத்திற்கு அரசனாக்கினான். இங்ஙனம் ரிக்ஷரஜஸ்ஸு பட்டாபிஷேகம் செய்துகொண்டு இப் புவியிலுள்ள வானரர்களனைவரையும், தனது கட்டளைக்கு உட்படுத்தி ஆட்சி செய்து வரலாயினன். இந்த ரிக்ஷரஜஸ் என்னும் வானரனொருவனே, வாலி சுக்ரிவன் இருவருக்கும், தந்தையும் தாயுமாகின்றனன்.

        அகஸ்த்யர் - “ஸ்ரீராமச்சந்திர! இந்த சரித்திரத்தை எவனொருவன் சொல்லுகிறானோ, எவன் கேட்கிறானோ, அவன் இஷ்ட ஸித்தியைப் பெறுவான். இப்படியாக, ராக்ஷஸர்களின் உத்பத்தியும், வானரர்களின் உத்பத்தியும் என்னால் விஸ்தரமாக உரைக்கப் பட்டது. உனக்கு மங்களம் உண்டாகட்டும்என்றார்.

செவ்வாய், 24 ஜனவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தரகாண்டம் 26

நாற்பத்திரண்டாவது ஸர்க்கம்.

(மறுநாள் ஶ்ரீராமபிரான் ஸபைக்கு எழுந்தருளல்)

      இவ்வாறு ஶ்ரீராமபிரான் பட்டாபிஷேக மஹோத்ஸவத்தைக் கண்டருளிய பின்பு, முதல் தினத்தை முனிவர்களுடன் பேசிப் பொழுது போக்கி, அன்று ராத்திரி அந்தப்புரத்தில் நித்திரை கொண்டனன். அன்றிரவு கழித்து விடியற்காலையில் ஶ்ரீராமபிரானைத் திருப்பள்ளி எழுமாறு, சுப்ரபாதம் சொல்லிப் போற்றிப் புகழும் துதிபாடகர்கள் ராஜமாளிகை வாயிலில் வந்து கூடி நின்றார்கள். அவர்கள் நன்கு சிக்ஷிக்கப்பட்ட கின்னரர்கள் போல இனிமையான குரல்களை உடையவர்களாகப் பின்வருமாறு துதித்தனர்.

वीर सौम्य विबुत्यस्व कौसल्या प्रीतिवर्धन ।
जगद्धि सर्वं स्वपितित्वयि सुप्ते नराधिप ॥

வீர ஸௌம்ய விபுத்யஸ்வ கௌஸல்யா ப்ரீதிவர்தன|
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸபதே நராதிப||

        ஹே வீரனே! அழகியவனே! கௌஸல்யாதேவிக்கு ஆனந்தத்தை வளர்ப்பவனே! பிரஜாநாதனே! நீ துயிலெழுந்து வரவேண்டும். நீ கண்ணுறங்கினால் உலகமனைத்துமே உறங்கிவிடுமே! என்றும், உனது பராக்கிரமம் விஷ்ணுவுக்கு நிகரானது, உனது அழகு அச்விநீ தேவதைகளுடையது போன்றது, அறிவினால் நீ பிரஹஸ்பதிக்குச் சமமானவன், நீ பூமியைப் போன்ற பொறுமையுள்ளவன், உனது தேஹகாந்தி சூரியனுடையது போன்றது, வாயு போன்ற கதியையுள்ளவன் நீ, ஸமுத்திரம் போன்ற காம்பீர்ய முடையவன் நீ, மலை போன்று அசைக்க முடியாதவன், சந்திரன் போன்று இனிமையாகக் காணத்தக்கவன், இதற்கு முன்பு, உன்னைப்போன்று, அசைக்க முடியாதவர்களாயும், ஜனங்களிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்களாயும், தர்மநிஷ்டர்களாயுமுள்ள அரசர்கள் இருந்ததில்லை என்றும்,

        ஹே புருஷ ச்ரேஷ்ட! உன்னைக் கீர்த்தி என்றும் விட்டகலாது, லக்ஷ்மியும் உன்னிடத்தில் நித்யமாக வஸிப்பாள், அடக்கமும் தர்மமும் என்றுமே உன்னை விட்டு அகலாமலிருக்கும் என்றும்,

        இப்படியாகத் துதிக்கப்பட்ட ராகவன், வெண்பட்டுமயமான ஹம்ஸதூலிகா மஞ்சத்திலிருந்து, நாகத்தணையில் துயிலெழும் நாராயணனைப் போல் எழுந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, பகவத்ஸந்நிதியை அடைந்து, அங்கு இக்ஷ்வாகு குலதேவதையைப் பூஜித்து, பித்ருக் கடன்களையும் முடித்துக்கொண்டு, பிராம்மணர்களையும் தானம் முதலியவற்றால் திருப்தி செய்வித்து, அங்கிருந்து பரிஜனங்கள் மந்திரிகள் புடைசூழ ஆஸ்தான மண்டபத்தை அடைந்தான்.

        ஶ்ரீராகவன் அங்கு வந்து அமர்ந்தவுடன், வஸிஷ்டர் முதலான மகரிஷிகளும், ஸாமந்த ராஜாக்களும் இந்திரனைச் சூழ்ந்து அமர்ந்துள்ள தேவர்கள் போன்று அமர்ந்தனர். ஶ்ரீராமனது அருகில், பரத லக்ஷ்மண சத்துருக்னர்கள், யாகத்தில் மூன்று வேதங்கள் விளங்குவதைப் போன்று விளங்கினர். ஸுக்ரீவன் முதலான இருபது வானர வீரர்கள் (இஷ்டப்படி உருமாறக்கூடியவர்கள்) சூழ்ந்து அமர்ந்தனர். விபீஷணனும் தனது நான்கு மந்திரிகளுடன் அமர்ந்தான்.

        இப்படி விளங்கும் இந்த ஸபையானது தேவேந்திரனுடைய ஸபையைக் காட்டிலும் மேலானதாகக் காணப்பட்டது. பலரும் பலவிதங்களான புண்ணியக் கதைகளை, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.