செவ்வாய், 3 ஜனவரி, 2023

ராமாயணம்–உத்தர காண்டம் 18

இருபத்தி ஒன்பதாம் ஸர்க்கம்

[ராவணனால் அபஹரித்து வரப்பட்ட ஸ்திரீகளின் ப்ரலாபம், அவர்கள் இட்ட சாபம், சூர்ப்பணகையைச் சமாதானப்படுத்தல் ] 

          மிகுந்த குதூகலத்துடன் தன் இருப்பிடமான இலங்கைக்குத் திரும்பும் வழியில் ராவணன், தன் முன் காணப்பட்ட அழகிய பெண்கள் அனைவரையும் பிடித்து வந்தான். எதிர்த்த அந்தப் பெண்களின் பந்து ஜனங்கள் அனைவரையும் கொன்று குவித்தான். நாக- ராக்ஷஸ-கந்தர்வ - மானுஷ - ரிஷி - தேவ - கிந்நர - மாதர்களால் அந்த விமானம் நிரப்பப்பெற்றது. அந்த ஸ்திரீகளின் அழுகையினால் விமானமே அழுவது போன்று இருந்தது. சில பெண்கள், நீண்ட கூந்தல்களை உடையவர்களாயும், சிலர் பொன்னிற மேனியராகவும் சிலர் முழுமதி போன்ற முகத்தினராகவும், சிலர் பெருமுலைகளை உடையவர்களாயும், நுண்ணிடையுடைய சிலரும், எல்லோருமே சோகமும் பயமு முடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஸிம்ஹத்தினிடம் சிக்கிக்கொண்ட மான்களைப் போல் பயந்து நடுங்கினர்.

          ஒருத்தி, இவன் நம்மைச் சாப்பிட்டுவிடுவானோ? என்றும் வேறெருத்தி என்னைக் கொன்றுவிடுவானோ? என்றும், மற்றொருப் பெண் இவன் என்னை என்ன செய்ய நினைத்துக்கொண்டு வந்துள்ளானோ என்றும் எண்ணி அழுதனர். ஒரு ஸ்திரீ, ஐயோ! இப்போது என் குழந்தை என்னைக் காணாமல் எப்படி அழுகிறதோ என்றும் எனது தாய் தந்தையர் என்னைக் காணாமல் எப்படித் துடிக்கின்றனரோ என்றும், ஐயோ! எனது கணவனை விட்டு நான் எப்படி உயிர் வாழ்வேன் என்றும் புலம்பினார்கள்

          இப்படியாகப் பல ஸ்திரீகளும் மனம் வருந்தி, 'ஸ்திரீயினாலேயே இவன் மரணமடைய வேண்டும் என்று சபித்தனர். அப்பொழுது ஆகாயத்தில் தேவதுந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. இப்படியாக ராவணன் அந்த ஸ்த்ரீகளுடனும் புஷ்பக விமானத்துடனும் இலங்கையை அடைந்தான்.

          ராவணன் தனது அரண்மனையினுள் நுழைந்ததும் ஸஹோதரியான சூர்ப்பணகை ஓடிவந்து அவன்முன் விழுந்து புலம்பி அழ ஆரம்பித்தாள். ராவணன் மிகுந்த வாஞ்சையுடன் அவளைத் தூக்கியணைத்து அவளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவள், 'ராஜனே, உன்னால் நான் விதவையாக்கப்பட்டேன்.  நீ காலகேயர் என்ற அஸுரர்களை வதம் செய்தாயே. அவர்களில் ஒருவரல்லவா என் கணவர்? வித்யுஜ்ஜிஹ்வர் என்ற எனது பர்த்தா என் உயிருக்கும் மேற்பட்டவர். அவரை நீ உனது பலத்திமிரால் கொன்றுவிட்டாயே, இனி நான் என்ன செய்வேன்? எனக்கு யார் கதி? உன்னாலேயே எனக்கு வைதவ்யம் ஏற்பட்டதே. இது நியாயமா?” என்று பலவாறு புலம்பினாள்.

          இப்படிச் சத்தமிட்டுப் புலம்பும் தங்கையைச் சமாதானப்படுத்திய ராவணன், ' நீ இதற்காக வருந்த வேண்டாம். நடந்தது நடந்து போயிற்று - யுத்தமென்று வந்து விட்டால் ஜயமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். நம்மவர், பிறர் என்று கண்டு கொள்ளவே மாட்டேன். எனது ஸ்வபாவம் இது. உன்னைப் பலவிதத்திலும் ஸந்தோஷப் படுத்துவது எனது கடமை. எனவே நீ நமது சிறிய தாயாரின் பிள்ளையான 'கரன்' என்பவனோடு வஸிப்பாயாக. அவனுடன் பதினாலாயிரம் ராக்ஷஸர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்களுக்குச் சேனாதிபதியாகத் தூஷணன் என்பவன் இருப்பான். நீங்கள் எல்லோருமாக உடனே புறப்பட்டு தண்டகாரண்யத்திற்குச் சென்று, அங்கு உங்களது ராஜ்யத்தை நடத்துங்கள்" என்று உத்தரவு இட்டான்.

          உடனே, அதன்படியே கரன் அரக்கர்  பதினாலாயிரவருடன் சூர்ப்பணகையை அழைத்துக்கொண்டு தண்டகாரண்யத்தை அடைந்து அங்கே தங்களுக்கு அனுகுணமாக நகரை அமைத்துக் கொண்டு வளித்து வந்தான்.




முப்பதாவது ஸர்க்கம்

          பிறகு ஒரு ஸமயம் ராவணன் தன் மந்திரிகள் புடை சூழ, லங்காபுரியின் மேற்குப் பக்கத்திலுள்ள நிகும்பிலை என்ற வனத்திற்குச் சென்றான். அங்கு அவன் அனேக யூபஸ்தம்பங்களுடனும் கோயிலுடனும் வேதிகைகளுடனும் கூடிய யாசாலையைக் கண்டான். தனது குமாரனான மேகநாதன் மான்தோலைத் தரித்துக், கமண்டலம் தண்டம் சிகை இவற்றையுடையவனாய் விளங்குவதையும் கண்டான். அவனருகிற் சென்று, இருகைகளாலும் கட்டி அணைத்துக்கொண்டு, "குழந்தாய், நீ என்ன கார்யம் செய்துகொண்டிருக்கிறாய்?'' என்று வினவினாள். யாகதீக்ஷை பெற்றுள்ள அவன் பேசக் கூடாததை உணர்ந்த, புரோஹித சீரேஷ்டரான சுக்ராசாரியர் ராவணனைப் பார்த்து, "அரசே! நான் சொல்லுகிறேன், கேட்கவும்" என்று பின்வருமாறு கூறினார்--

          "உமது குமாரனான இவனால் அக்னிஷ்டோமம், அச்வமேதம், பஹு ஸுவர்ணகம், ராஜஸூயம், கோமேதம், வைஷ்ணவம், என்ற யாகங்கள் செய்து முடிக்கப்பட்டன. ஒருவராலும் செய்ய முடியாத ஏழாவதான மாஹேச்வர யாகத்தையும் செய்து பசுபதியில் அருளால் உயர்ந்ததாயும், நினைத்தபடி செல்லக் கூடியதாயும், ஆகாய மார்க்கத்திலும் செல்லக்கூடிய சக்தியையுடையதுமான தேரையும், எடுக்க எடுக்கக் குறையாத அம்புப் பெட்டிகளையும், பிறரால் துண்டிக்கப்பட முடியாததான தநுஸ்ஸையும், யுத்தத்தில் சத்ருக்களை அழிக்கக்கூடியவைகளான உயர்ந்த அஸ்திரங்களையும் பெற்றுள்ளான். மேலும் 'தாமஸீ' என்கிற மாயையையும் பெற்றுள்ளான். யுத்தபூமியில் இந்த மாயையைப் பிரயோகித்த அளவில் நெருக்கமான இருள் சூழ்ந்து, இவனிருக்கும் இடம், சத்ருக்களுக்குப் புலப்படாதபடிச் செய்துவிடும். இப்படியான யாகம் முடியப் போகிறது. முடிந்ததும் நாங்கள் இருவருமே உன்னிடம் வருவதாக இருந்தோம்'' என்றார்.

          இதைக் கேட்ட ராவணன், “ஆசார்யரே! இதற்காக யாகம் செய்திருக்க வேண்டாம். நம்மால் ஜயிக்கப்படத்தக்க இந்திரன் முதலியவர்களுக்குப் பூஜை ஏன் செய்ய வேண்டும்? தவமியற்றி இவற்றைப் பெற்றிருக்கலாமே, ஸரி, நடந்தது நடந்து விட்டது. இனி இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை" என்று கூறி, மந்திரிகளுடன் தனது அரண்மனையை அடைந்தான்.

          அப்பொழுது, ராவணனால் கவர்ந்து வரப்பட்ட ஸ்த்ரீகளைக் கண்டு தர்மாத்மாவான விபீஷணன். "அண்ணா தாங்கள் செய்தது தர்மமல்ல. இதைக் கண்ட பெரியோர்கள் நகைக்கின்றனர். இந்த அதர்மத்திற்குப் பலன் இப்பொழுதே நமக்குக் கிடைத்துவிட்டது. அதாவது நம்முடைய ஜ்யேஷ்ட மாதாமஹன் மால்யவான் எனப் படுபவர்.  அவருடைய பெண் அனலை என்பவள். அவளுடைய பெண் கும்பீநஸி எனப்பெயர் கொண்டவள். அவள் நமது ஒன்றுவிட்ட ஸஹோதரி அவள் இங்கு நம் அரண்மனையில் வஸித்து வந்தவள். . அவளை கர்வம் கொண்டவனான 'மது' என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான். அது ஸமயம் உமது குமாரன் யாகத்தில் ஈடுபட்டிருந்துவிட்டான்.  நான் தவத்தில் ஈடுபட்டு ஜலத்தின் மத்தியில் இருந்துவிட்டேன். கும்பகர்ணனோ தூங்கிக் கொண்டிருந்தான். இதுவே தருணம் என்று கண்ட அவன் இங்குள்ளவர்களை நாசம் செய்துவிட்டு அந்தத் துஷ்ட கார்யத்தைச் செய்து சென்றான் என்று சொன்னான்.

          இதைக் கேட்ட ராவணன் கோபத்தினால் சிவந்தவனாய். "எனது ரதத்தை ஸித்தப்படுத்துங்கள். வீரர்கள் கிளர்ந்தெழுங்கள். எல்லோருமாகச் சென்று மதம் பிடித்த மதுவைக் கொன்றுவிட்டுத் தேவலோகத்திற்குச் செல்வோம். அதை நம் வசம் செய்துகொள்வோம். பிறகு பயமற்றவர்களாக எங்கும் ஸஞ்சரிப்போம்' என்றான்.

          அதன்படியே நாலாயிரம் அக்ஷெளஹிணீ ஸைன்யமானது ஆயுதங்களுடன் புறப்பட்டது. அந்த ஸேனையின் முகப்பில் இந்திரஜித்தும், மத்தியில் ராவணனும், கடைசியில் கும்பகர்ணனும் ரஷகர்களாகச் சென்றனர். தர்மாத்மாவான விபீஷணன் இலங்காபுரியின் ரக்ஷகனாக இருந்தான்.

          மதுபுரியை அடைந்த ராவணன் அரண்மனையின் உள்ளே சென்று மது அரக்கனைத் தேடினான்.  அங்கு அவன் காணப்படவில்லை. அவனது மனைவி இவனது ஸஹோதரி - கும்பீநஸியையே கண்டான்.  ராவணனிடத்தில் பயந்த அவள் கைகளைக் கூப்பிக்கொண்டும். அவனது கால்களைப் பிடித்துக் கொண்டும் நடுங்கியவளாக நின்றாள். அவனைக் கண்டு ராவணன், "தங்கையே! பயப்பட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? தைரியமாகக் கேட்கவும" என்றான். இதைக் கேட்ட அவள், "உமக்கு என்மீது அன்பு இருக்குமேயாகில் எனது பர்த்தாவைக் கொல்லாமல் விட்டு எனக்கு மாங்கல்ய பிக்ஷை கொடுங்கள்; பயப்பட வேண்டாம்! என்று சொன்ன சொல்லை மெய்ப்பித்துக் காட்டுங்கள்; உண்மையுரைத்தவராக ஆகுங்கள்'' என்றாள்.

          இதைக் கேட்டு ஸந்தோஷமடைந்து ராவணன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவனை அழைத்து வரும்படிச் சொன்னாள் கேகஸியும் உடனே உள்ளே சென்று நித்ரையிலாழ்ந்திருந்த மதுவை எழுப்பி அழைத்து வந்தாள். ராவணன் அவனுடன் நட்புக் கொண்டு அவனையும் கூட அழைத்துக்கொண்டு கைலாஸ மலையிலுள்ள குபேரப் பட்டணத்தை அடைந்து அதன் உபவநத்தில் தனது ஸைன்யத்தை அடைவித்து அமரச் செய்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக