வியாழன், 9 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

வசிஷ்டர்:-- (சபையோரைப் பார்த்து) ஜனங்களுடைய திருப்தியை நிச்சயப்படுத்துவதற்காகவே சக்கரவர்த்தி இப்படிக் கேட்பதே யொழிய அவர்களுடைய கருத்தையறியாமலல்ல. (தசரதரைப் பார்த்து) சக்கரவர்த்தீ! உமக்கோ வயதாய் விட்டது. இனி நீர் வீட்டிலிருந்தேனும் வனத்திற்குச் சென்றேனும் ஆத்மலாபத்திற்குரிய தவத்தைச் செய்யவேண்டுவது அவசியம். எல்லோரும் அதை அச்சமின்றிச் சொல்லலாம். உம்முடைய புத்திரன் இராமனோ சகல சற்குணங்களும் கூடி ஓர் உருவெடுத்து வந்ததுபோல் விளங்குபவன்.

மண்ணி னுநல்லண் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணி னுநல்லள் பெரும்புகழ்ச் சனகியு நல்லள்
கண்ணி னுநல்லன் கற்றவர் கற்றிலா தவரு
முண்ணு நீரினும் முயிரினு மவனையே யுவப்பார்.

அவன் தர்ம்பத்தினி ஜானகியோ பொறுமையில் நிலமகளினும் மேம்பட்டவள். அழகில் இலக்ஷ்மி தேவியினுஞ் சிறந்தவள். அறிவிற் கலைமகளினும் மிக்கவள். கற்பிற் பார்வதி போன்றவள். இத்தகைய அருங்குணங்கள் அமையப் பெற்ற சீதாபிராட்டியின் கண்ணுக்கு மிகவும் இனியவன் நம் இராமன். கற்றவரும் மற்றவரும் அவனைத் தாம் பருகு நீரினும், தமக்குரிய உயிரினும் மேலாகக் கருதியிருக்கின்றனர்.

மனிதர் வானவர் மற்றுளா ரறங்கள் காத்தளிப்பார்
இனியிம் மன்னுயிர்க் கிராமனிற் சிறந்தவரில்லை
அனைய தாதலி னரச்சிற் குறுபொரு ளறியிற்
புனித மாதவ மல்லதொன்றில்லையீ துண்மை.

மனிதர் தேவர் நாகராகிய உயிர்களனைவருக்கும் சீராமனைக் காட்டிலும் தரும நெறிகளைக் காப்பதிற் சிறந்தவர் வேறொருவருமில்லை. ஆதலால், சக்கரவர்த்தீ! யோசித்துப் பார்க்கும்போது உமக்கு உறுதிப் பொருளாவது தூய தவமேயன்றி வேறொன்றில்லை. இதனை நீர் அறிய வேண்டும். சற்றும் கவலை வேண்டாம். உம்முடைய உத்திராகிய இராமச்சந்திரன் சத்திய பராக்கிரமம் உடையவன். தருமத்தைக் கைக்கொண்டவன். ஜனங்களைக் களிக்கச் செய்வதில் சந்திரன் போன்றவன். வித்தையில் பிரஹஸ்பதி என்றே அவனைச் சொல்லலாம். நல்ல சீலமுள்ளவன். எதற்குங் கலங்காதவன். எளியருக்கும் எளியனாய் உலாவி எல்லோருடைய க்ஷேமத்தையும் உசாவுகிறவன். ஒரு பொழுதும் பழுதுபடாத சாந்தத்தையும், அனுக்கிரஹத்தையும் உடையவன். இந்தத் தகுதியெல்லாம் அமைந்த புத்திரனை அரசனாகக் கொண்டு வாழவேண்டு மென்னும் ஆசையினாலேயே அவ்வளவு துருதமாக ஜனங்கள் உம் விருப்பத்தை அங்கீகரித்தது. உம்முடைய அரசாட்சியில் அசூயை கொண்டன்று. சக்கரவர்த்தியின் சந்தேகத்தை நீக்கும்பொருட்டு ஜனங்களும் தங்கள் கருத்தை வாய்விட்டுச் சொல்லலாம்.

நகரமாந்தர் :-- (அனைவரும் ஒருகுரலாய்) வசிஷ்ட மகாரிஷி கூறியதே எங்கள் எல்லோருடைய உண்மைக் கருத்தாகும்.

தசரதர்:-- நீங்கள் யாவரும் ஒருமித்த மனதோடு என் மகன் இராமனுக்கு முடிசூட்டச் சம்மதித்ததைக் கேட்டு மிகவும் களிகூர்ந்தேன். எப்பொழுது நமது இராமச்சந்திரனை இராச்சியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்துக் கண்ணால் பார்ப்போ மென்று நான் நினைத்தது கைகூடிற்று.இராம பட்டாபிஷேகத்தை உங்களுடைய கோரிக்கையின்படி வெகு விரைவாகவும் விமரிசையாகவும் நடத்தத் தீர்மானிக்கிறேன். (வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ!

முற்று மாதவநின் வாசகங் கேட்டலு மகனைப்
பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பொருவில்
இற்ற வன்றினு மெறிமழு வாளவ னிழுக்கம்
உற்ற வன்றினும் பெரியதோ ருவகைய னானேன்.

முனிபுங்கவ! என் மகன் ஸ்ரீராமனைப் பற்றித் தாங்கள் வெளியிட்ட பொதுஜன அபிப்பிராயத்தைக் கேட்டு மிகவும் மனம் பூரித்தேன். இராமனை மகனாகப் பெற்றபொழுதும், ருத்திர தனுசை அவன் முறித்த அப்பொழுதும், பரசுராமனைப் பங்கப்படுத்திய அப்பொழுதும் யான் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்பொழுது அதிக மகிழ்ச்சி யடைகிறேன். என் மனோரதம் நிறைவேறிற்று. முனிசிரேஷ்ட! இனிக் கால தாமதம் வேண்டாம். சித்திரை மாதம் மனோகரமான காலம். இன்றைய தினம் புனர்பூசம். நாளைய தினம் பூச நக்ஷத்திரம், பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள். இதைப்போல் சிறந்த நாள் கிடைப்பது அரிது. ஆதலால் நாளைய தினமே பட்டாபி ஷேகத்தை வைத்துக் கொள்ளலாம். (ஜனங்களுக்குள் கலகலவென்று ஒரு சத்தம் உண்டாகிறது) அதுதான் சரி. என் மனம் உறுதியாயிருக்கும் பொழுதே பட்டாபிஷேகத்தை நிறைவேற்றிவிட வேண்டும். மனிதர் எண்ணம் மாறுதலுள்ளது. இன்றைக்குள்ள எண்ணம் நாளைக்கும் இப்படியே இருக்கு மென்று சொல்ல முடியாது. ஆதலால் நாளைய தினமே என் மகன் இராமச்சந்திரனுக்கு முடி சூட்டி விடுவது நல்லது. (சபையோர் கரகோஷம் செய்கின்றனர். தசரதர் வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ! பட்டாபிஷேகத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவைகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்க உடனே மந்திரிகளுக்கு கட்டளையிடுங்கள். (சுமந்திரரைப் பார்த்து) மந்திரி! எல்லாம் வெகு துரிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும். இப்பொழுது நமது இராமனைச் சீக்கிரம் இங்கு அழைத்து வாரும்.

சுமந்திரர் :-- அப்படியே (போகிறார்)

வசிஷ்டர்:-- (மற்ற மந்திரிகளைப் பார்த்து) மந்திரிகாள்! நீங்கள் அனைவரும் நாளைய தினம் சூரியோதயத்துக்குள் நமது அரசருடைய அக்கினிஹோத்திர சாலையில் பொன் முதலான பொருள்கள், இரத்தினங்கள், பூஜைக்குரிய பண்டங்கள், அநேகவிதமான மூலிகைகள், வெள்ளைப் புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், பொரி, தேன், நெய், இவைகளைத் தனித்தனியாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பரிசுத்தமான வஸ்திரங்கள், இரதம், ஆயுதங்கள், நால்வகைச் சேனைகள், எல்லாச் சுபலக்ஷணங்க ளுடனும் பொருந்திய பட்டத்து யானை, இரட்டை வெண்சாமரம், துவஜம், வெண்கொற்றக்குடை, நெருப்புப்போல் பிரகாசிக்கின்ற நூறு பொற்குடங்கள், பொற்பூண் பூண்ட கொம்புகளையுடைய ரிஷபம், ஊனமில்லாத புலித்தோல், இன்னும் என்னென்ன வேண்டுமோ அவைகளையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்தப்புர வாயில்களும் நகரத்து வாயில்களும் சந்தனத்தாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு நல்ல வாசனை பொருந்திய தூபங்களாற் பூசிக்கப்பட வேண்டும். நாளைக் காலையில் தயிர் பால் ஆகிய இவைகள் மிகுதியாகக் கலந்த திவ்வியான்னங்களைக் கொண்டு நூறாயிரக் கணக்கான அந்தணர்களைத் திருப்தி யுண்டாக உண்பிக்க வேண்டும். அவர்கள் உள்ளங் குளிர, அவர்கள் இஷ்டப்படி நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷிணை ஆகிய இவற்றைச் சற்காரஞ் செய்து கொடுக்க வேண்டும். சூரியோதயமாகும்போது ஸ்வஸ்திவாசனம் சொல்ல வேண்டும். ஆகையால் வேதியர் அனைவரையும் அழைத்து வாருங்கள். எல்லோரும் வந்து அமருவதற்கு ஆசனங்கள் அமைத்து வையுங்கள். நகரம் முழுவதும் கொடிகள் கட்டுங்கள். வீதிகளெல்லாம் ஜலம் தெளியுங்கள். வாத்தியக்காரர்களும், நன்றாக அலங்கரித்துள்ள கணிகையர்களும் இராஜ கிரகத்தின் இரண்டாங் கட்டில் சித்தமாக இருக்க வேண்டும். கோவில்களிலெல்லாம் அபிஷேக அலங்கார நிவேதனங்கள் நடக்க வேண்டும். அவ்விடங்களில் யாவருக்கும் தக்ஷணை சகிதமாகப் போஜனம் நடக்க வேண்டும். நமது சைனியங்களுள் ஒவ்வொரு போர் வீரனும் நன்றாக ஆடையாபரண மணிந்து, ஆயுதமேந்தி, அரண்மனை முற்றத்தில் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

(சுமந்திரர் வருகிறார். அவருக்குப் பின்னாக இராமர் வருகிறார். தந்தையை முதலில் வணங்குகிறார். பின்பு வசிஷ்டர், விசுவாமித்திரர் முதலிய முனிவர்களை வணங்குகிறார். மற்றையோர் இராமனை வணங்குகின்றனர். இராமர் அவரவர் வணக்கங்களை அவரவர் தகுதிக்குத் தக்கபடி தலையைத் தாழ்த்தலாலும், “ஆஹா’ என வாயாற் சொல்லலாலும், கண்ணாற் பார்த்துத் தலையை அசைத்தலாலும் அங்கீகரிக்கிறார். “இராமச்சந்திரா! என் அருகில் வந்து அமர்’ என்று தசரதர் சொல்லுகிறார். இராமர் “வேண்டாம், நான் இங்கேயே அமருகின்றேன்’ என்று கூறி ஓர் ஆசனத்தில் உட்காருகிறார்)

தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக