திங்கள், 13 டிசம்பர், 2010

நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் 13-12-2010

 நாட்டேரி ஸ்வாமி இன்று நிகழ்த்திய குரு பரம்பரை உபந்யாஸம் இங்கு வீடியோ mp3 இரண்டு வடிவிலும்.





Get this widget | Track details | eSnips Social DNA

சனி, 11 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம்–ஆர். கேசவய்யங்கார் பதிப்புரை

தத்துவம்: உபாயம்: புருஷார்த்தம்:


    இம்மஹாதேசிகர் அருளிச்செய்த முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு நூலாகிய ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் உத்தமப்ரபந்தம் சாரீரக சித்தாந்தப் பொருளை விளக்கிக் காட்டும் உபயவேதாந்தரஹஸ்ய நூல் என்றது மேலே கூறப்பட்டது.  இம்மாலைப்ரபந்தங்கள் பிறவும் அப்பொருளைப் பின்னும் நன்கு விளக்கி இனிது உணர்விக்கும் பண்புடையன1.  அவைகள் விளக்கிக்காட்டும் தத்துவம், உபாயம், புருஷார்த்தம் என்னும் சிறப்புத்துணி பொருள்களை இங்குச் சுருக்கி உரைப்பாம், வேறிடத்து விரிப்பாம்.  தத்துவம் என்றதால்  சிறப்புற்ற பரதத்துவம் (இறைத்தத்துவம்) சொல்லப்படும். உபாயம் என்றதால், பரதத்துவத்தை அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் அடையும் சரணாகதி என்னும் சிறப்பாறு கூறப்படும்.  புருஷார்த்தம் என்றதால், அவ்வாற்றால் உயிர்ப்பொருள் பெறும் வீடு என்னும் சிறப்புப்பேறு கூறப்படும். சடப்பற்றினின்று விடுபடுதல் வீடு. சடம் ‘ஹேயம்’ ஆதலால் அது உயிர்ப்பொருளுக்குக் கழிக்கப்படவேண்டியதாயிற்று.  வ்யாஸர் ‘ஹேயம்’  என்று கூறியதை சடகோபர் ‘காயம்’ என்றார். “காயம் கழித்து அவன்தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்”2 என்றது அவர் திருவாக்கு.  ஹேயத்தினின்று விடுபடுதலே வீடு. வல்வினையினின்று விடுபடுதலே வீடு.  ஹேயப்பற்றே வல்வினைப்பற்று.  அஃதே ‘தான்’ ‘தனது’ என்றபற்று.  தான் என்றது அகப்பற்று, தனது என்றது புறப்பற்று.  “நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறைசேர்மின்”3 என்று இருவகைப்பற்றையும் அறுத்து இறை சேர்தலைச் சடகோபர் உபதேசம் செய்தார்.  உணர்வுடைய உயிர்ப்பொருள் அவ்விருவகைப் பற்றையும் மாய்க்கும் கடமைப்பாடுடையது.  அவற்றின் மாய்ப்பும் இறைசேர்தலும் உணர்வுடைய உயிர்ப்பொருளின் இயல்புக்கு வாய்ப்பும் ஏற்புமாம்.  இறைப்பொருளின் தாளைப்பற்றியே காயம் கழிக்கப்பட வேண்டும்.  தாள்பற்றார் வீடுபெறார்.  தாளின் பற்றே ஆறு. அது பயக்கும் பேறே வீடு.  ஸர்வசரண்யதத்துவமே பரதத்துவம். சரண்ய தம்பதியார்களாகிய திருமாமகளாரும் திருமாலாரும் பரதத்துவம்.  அவர்கள் திருத்தாள்களைப் பற்றலே சரணாகதி என்னும் உபாயம்.  அஃதே ஆறு.  அப்பற்றில் அவர்களால் அருளப்பெறுதலே வீடு.  அஃதே பேறு.  சடத்தைப் பற்றிய உணர்வு அதன்பற்றை ஒழித்தலையே பயனாக உடையது.  இறைப்பொருளைப் பற்றிய உணர்வு அதைத் தாள் பற்றி அடைதலையே பயனாக உடையது. உணரும் உயிர்ப்பொருள் ‘ஞன்’ (உணர்பவன்).  உயிர்ப்பொருளின் உணர்வுக்கும் இறைப்பொருள் ஒன்றே நோக்கு.  ஆதலால் இறைப்பொருள் ‘ஞேயன்’. இறைப்பொருளின் ஒப்பற்ற தனித்தலைமையை உணர்த்த “மஹாஞேயன்”4 என்று உபநிடதம் ஓதிற்று. “ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு”5 என்று சரண்ய தம்பதிகளே ‘மஹாஞேய’ தத்துவம் என்று பொய்கைப்புனிதர் அருளிச் செய்தார்.  ஒண்டாமரையாள் கேள்வன் ஒருவன் என்றே உணரும் உயிர்ப்பொருளின் பேருணர்வே இறைநிலையுணர்வாகும்.  அஃதே மெய்யுணர்வு.  ஒண்தாமரையாளும் அவள்கேள்வனும், தனித்ததென்னில் நிலை அற்றும், என்றுமே சித்தமாய் ஒன்றியதோர் ஒப்பற்ற பதிபத்தினியராய்த் திகழும் சரணிய திரீபுருட (சரண்ய தாம்பத்ய) ஒருமையில் நிலை நின்று விளங்கும் உலகமங்கல நிலையே இறைநிலை என்ற உணர்வு ஒன்றே மெய்யுணர்வு என்றபடி.  அவ்வாறே பரதத்துவமாகிய இறைப்பொருளை அடைதற்கு அவரதத்துவமாகிய உயிர்ப்பொருள் புரியும் தவமே உபாயம் என்னப்படும்.  அது பெருந்தவம். அடையப்பெரும்பொருள் “மஹாஞேயன்” ஆதலால் அவனை அடையும் உபாயம் மஹாஞானம்.  அதை மஹாதபஸ்6 என்று உபநிடதம் ஓதிற்று.  “மாதவம்”7 என்றார் இம்மஹாதேசிகர்.   உயிர்ப்பொருள் புரியும் இம்மாதவவேள்விக்கு இறைப்பொருளே உத்தேச்யம் ஆகும்.  அதாவது இறைப்பொருளின் பொருட்டே ஆகும் என்றபடி.  இறைப்பொருளுக்கே உயிர்ப்பொருளை அவியாக இடும் ஞானப்பெருவேள்வியே உபாயம் என்னும் மாதவமாகும்.  அம்மாதவமே சரணாகதி என்னப்படும். அஃதே செய்தவம் என்னும் தனிப்பெருந்தவம்.  “இத்தவந்தம்மில் ந்யாஸம் சிறந்தது”8 என்று உபநிடதம் உரைத்தது.  இந்த ‘ந்யாஸமே’ ப்ரபத்தி, சரணாகதி, அடைக்கலம் பரம்துடைத்தல், பரந்யாஸம், மறைபுகல், வையடை.  இல்லடை, தஞ்சம், அஞ்சலி, என்று கூறப்படும்.  மாயையைக் கடத்தற்கு, காயத்தைக் கழித்தற்கு, இறைவன் பால் ப்ரபத்தி ஒன்றே ஆகும் என்ற உண்மையை “என்னையே சரணம் யாவர் பற்றுவார் அவர்களிந்த, மன்னிய மாயை தன்னை மாதவர் கடப்பார் மன்னோ”9 என்றும் “கெடுதொழிலாள ராயே எனைச் சரணடையார் மூடர், கடையர்மா யையிலி ழந்த மதியர்வல் லசுர ரொல்லார்”10 என்றும் பேரருளாளனாகிய இறைவன் தானே உபதேசித்தருளினான்.  ஆதலால் உயிர்கள் உய்தற்கு இறைவன்தானே வகுத்தருளிய பெருந்தவமே சரணாகதி.  அஃதே அஞ்சலிப் பெருந்தவம்.  ஆதலால் இதை சடகோபர் “வணக்குடைத்தவநெறி11 என்றார்.  அருள்மிகுந்த இறைவன் கருத்தால் தனது இன்னுயிர்ப் பொருள்களுக்கு ஈதொன்றே உய்யுமாறு என்று வகுக்கப்பட்டுள்ள தவநெறியாதலால், சிற்றுயிர்ப்பொருளானது தன் கருத்து என்னும் பிணக்கு அற இறைவன் பாற்புரியும் கற்பின் துணிபில் நிலை நின்று தான் தனது என்ற ஒன்றையுங் காணாதே இறைவன் தானே தந்தருளிய சரண உணர்வு கொண்டே அவன் பொருட்டே அவனுடைய உயிர்ப் பொருளை அவன் அமுது செய்வதற்கு அவன் திருவடிகளில் அவன் தானே அவியாக இட்டு உகக்குமாறே பேறாகப் “புறநெறிகளைகட்டு பசையற உணக்குமின்”12 என்ற சடகோபரருளிய இவ்வருந்திருவாய்மொழிக் கருத்தை ஆழ்ந்துணர்க.  இத்திருவாய்மொழிக் கருத்தை “எனதென் பதுமியா னென்பது மின்றித், தனதென்று தன்னையுங் காணாது – உனதென்று, மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனில், கைதவத்தான் கைவளரான் காண்”13 என்று இம்மஹாதேசிகர் விளக்கியிருத்தல் காண்க. “நீர்நும தென்றிவை வேர் முதல் மாய்த்து”14 “எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு, என தாவி தந்தொழிந்தேன்”15 என்ற திருவாய்மொழியின் ரஹஸ்யப்பொருளை இவ்வெண்பா இனிது உணர்த்தும் சீர்மையை நன்கு நோக்குக.



1 அமிர்தரஞ்சனி 10; பரமதபங்கம் 4; அத்திகிரி மான்மியம் 19; ( முதலியன) . 2 திருவாய் 3.9.8;
3 1.2.3; 4 தைத்திரீயம்; 5 முதல் திருவந்தாதி 67; 6 தைத்திரீயம் இது ‘ந்யாஸம்’ என்னப் பட்டது;
7 அமிர்தரஞ்சனி 25; 8 தைத்திரீயம் 1; 9 கீதை 7.14; 10 கீதை 7.15; 11 திருவாய் 1.3.5; இது பக்திக்குமாம்;
12  திருவாய் 1.3.5; 13 அமிர்தரஞ்சனி 25; 14  திருவாய் 2.3.4; 15 திருவாய் 5.10.8

இன்று பிறந்தவன்

 இந்த நாளில் அன்று  பிறந்த இவனுக்கு இதைக் காட்டிலும் எப்படி ஒரு அஞ்சலி செலுத்திட முடியும்? மின்தமிழில் எல்லோரையும் கிறங்க வைக்கும் எங்கள் மோகனரங்கனார் கவிஞர் தலைவனுக்குச் செய்கிற பாராட்டு  இது.

கவிதையின் கடைசியில் குறிப்பிடப் படுகிற திருலோக சீதாராம் பாரதியின் துணைவியாரைக் கடைசி வரையில் தன் தாயாகவே ஆதரித்து வந்தவர். நிருச்சியிலிருந்து வெளியான "சிவாஜி" பத்திரிகை ஆசிரியர். முன்பின் தெரியாத நிலையில் 1971ல் அவரை அடியேன் சந்தித்தபோது அவருடைய பிள்ளைகளில் ஒருவராகவே கருதி அன்பு மழை பொழிந்தவர்.
இனிக் கவிதையை ரசியுங்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவத்தில்
போயின பின்பு புதுத்தமிழ் பூத்தது
தோய்ந்த வானிருளில் துலங்கிய சோதி
வேய்ந்தது கவிதை விரிகதிர் உலகில்
பாய்ந்திட எழுந்தது பாரதிப் பரிதி
காலக் கருவின் சுமையில் அயர்ந்த
தமிழின் களிறு ஈன்றதோர் கன்று நன்று
கன்னித்தமிழ் காக்க காலம் கரு உயிர்க்க
கர்பத் திருவாகிக் கவியின் உருவாகி
சொர்க்கக் கதவாகித் திறந்ததும்
சுப்பையா வருகை 
தெய்வத்தின் கொல்லையிலே
கவிதையைக் கட்டிவைத்து
ஒட்டப் பால் கறந்து
உருவார அபிஷேகம்
திட்டக் கணக்காய் நடந்துவந்த திருநாளில்
கவிதையின் முற்றத்தில்
கடவுளரின் கண்பொத்தி விளையாட்டில்
ஞானரதமேறித் தான்
கடவுளர் உலகையெல்லாம்
வேடிக்கை பார்த்த விறல்மிடுக்கும்
தமிழ்க்கவியின் மாயங்கொல்?
தண்டமிழின் மந்திரங்கொல்? 
செய்யுளில் செங்கல் ஜல்லி
கொத்தனார் வித்தை யெல்லாம்
கச்சினில் கொங்கை மாதர்
கலாப காமப் பித்தையெல்லாம்
வீரமே சோரம் போக
வாகையோ சோகையாகி
வித்தையும் வெளிறிப் போக
விரசமே சரசமாக
கவுண்டதிருச் சபைக் கணக்கின்
சங்கடங்கள் சமிக்ஞை காட்டும்
சங்கரன் கதையும் என்ன? 
கூறுகெட்டு குடிகெட்டுக்
குமைச்சலில் கொள்ளையிட்டு
வேறுபட்ட விதிகளுக்குள்
வேர்விடவே சூழ்ச்சிகளை
வித்தகமாய் விதைத்து வைத்து
கொல்லையில் திருடிவந்து
வாசலில் விற்கின்ற விற்பன்னத்தை,
தொலைந்துவிட்டாய் எனக்கூறி
நம்மையே நமக்குத் தேடிக்
கொண்டுவந்து தந்திடுமோர்
பம்மாத்தைப் பொன்வால் ஒட்டவைத்து
பரியை நரியாக்கிப் பரிகாசச் சுவையாக்கி
பார்வைக்கு விட்ட பக்குவத்தை
பாரத ஞானத்தின் துணிவெனவோ?
பாரதி வேகத்தின் பண்பெனவோ? 
வேதத்தில் வேள்வியுண்டு
வேள்வியில் பலனுமுண்டு
பலனில் சொர்க்கமுண்டு
சொர்க்கத்தில் மீட்சியுண்டு
மீண்டிடில் பிறவியுண்டு
பிறந்திடில் மரணமுண்டு
அதுவரை வேள்வியுண்டு
வேள்விக்குயர் வேதமுண்டு
இதைத்தான் நாம் கேட்டதுண்டு 
ஆனால் 
வேதத்தில் கவிதையுண்டு
அதை விளக்கவோர் வழியுமுண்டு
என்றுரைத்த கவியுண்டென்றால்
வேறுயார் இங்கே உண்டு? 
காலப்பொன் சொல் பெய்து
குலையாத கற்பனையை
நிலையான நனவுலகை
நாட்டவல்ல நெடுங்கனவை
தமிழ் என்னும் காயகல்பத்
தாய்நிதியாய் நமக்களித்து
அமிழ்துண்ணச் சென்றிருக்கும்
அமரகவி பாரதியில்
ஐக்கியமாய் நின்றவன்தன்
அருமை பெருமை எல்லாம்
அறிந்துரைத்தான்
அகலிடம் எங்கெங்கும்
ஆன்றதமிழ் பாரதியின்
இசைபாடி நின்ற செம்மல்
தோன்றாத் துணையாகத்
தொல்லுலகக் கவிதைத் தொடுவானில்
நின்ற இளம்பரிதி நிலவும் குமிணகையில்
நிலைத்த திருலோக சீதாராம் திறம்பாடி
மலைத்த மனமடக்கி
மாகவிஞன் பிறந்த காலை
என்பங்காய் ஒரு கவிதை
இந்நாளில் மாகவிக்கு
நேர்ந்துவைத்தேன் நேருரைப்பேன்
நயமறியப் பெற்றிடுவீர்
நயக்குமுள முற்றிடுவீர்
நன்மைக்கும் உண்டே ஓர் அச்சு. 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

வெள்ளி, 10 டிசம்பர், 2010

குரு பரம்பரை

Get this widget | Track details | eSnips Social DNA
நாட்டேரி ஸ்வாமி 5-12-2010 அன்று நிகழ்த்திய குரு பரம்பரை உபந்யாஸம் இங்கு .mp3 வடிவில்.

வைணவ ஆசாரியர்கள்

2. யமுனைத்துறைவர்

1.அவதாரம்.

நாத யாமுன ராய நாயிறு
போத மாஞ்சுடர் பொங்க நல்கிய
மாத வன்வரன் மன்ன னாரடி
ஆத ரத்துட னண்டி வாழ்குவம்.
                         1.

வீரநாராயணபுரத்து மன்னனாரை வாழ்த்துவது. இப்பெருமான் உலகினுக்கு நாதமுனி, யாமுனமுனி என்ற இரண்டு ஞாயிறுகளை உலகிற்கு அளித்தவர். இவர்கள் போதமாகிய சுடரினைப் பரப்பினர்.

செய்ய னீச்சுர முனிவன் செல்வனாய்த்
துய்ய தாதுவி லாடி தோன்றினன்
பெய்யு முத்திரா டத்தொ டுற்றநாள்
வெய்ய மேனிவாய் குட்டன் மேலவனே.             .2.

ஈச்வர முனிவருக்கு ஆளவந்தார் அவதரித்தமை. தாது வருடம், ஆடி மாத உத்திராடத்தில் அவதாரம். செய்யன் – நேர்மையுள்ளவன். பெய்யும் – (நலம்) பொழியும். பெய்யும் – அணியும். ஆடி பெய்யும் உத்திராடத்தொடு உற்ற நாள் என்று இயைக்க. ஈச்வர முனிவன் (முனிவனுக்கு) செல்வனாய் வெய்ய மேனி வாய் குட்டன் மேலவன் தோன்றினன் --- வெய்ய – சுடர் பொருந்திய.

தந்தை யாணையி னகைதல் தானுறாச்
சிந்தை வாயுமிவ் வையன் செல்வமாய்
வந்த வன்யமு னைத்து றைவனென்
றுந்து வாரமொ டோது முத்தமன்.                           .3.    

தந்தையின் ஆணைப்படி இம்மகவிற்கு யமுனைத்துறைவன் என நாமம் சூட்டியமை. அகைத்தல் – முறித்தல், மாறு செய்தல். ஐயன் – பெரியோன், ஈச்வரமுனிவன். உந்து வாரம் – பெருகும் அன்பு. ஓதும் – ஓதினான்.

மன்ன னாருளம் மகிழ வந்தவன்
தன்ன தருளினால் தளிர்த்த தர்சனம்
தன்னை யுய்க்குமுய் யக்கொண் டான்கழல்
மன்னு மாணுடை மணக்கால் நம்பிகள்.                 .4.

குரவ னேவலை நினைந்து குட்டனின்
பரவு சோதியும் பார்பு ரக்கவாம்
விரவி லக்கணம் யாவுங் கண்”டிவன்
உரவ னாகுவன்” என்று ரைத்தனன்.                       .5.

நாதமுனியின் சீடராகிய உய்யக்கொண்டாருக்கு சீடராகிய மணக்கால் நம்போ இக்குழந்தையை வாழ்த்தியமை. தளிர்த்த – பரவிவரும். தர்சனம் – அறநெறி (மேலோர் காட்டியது). மணக்கால் நம்பி குழந்தையிடம் கண்டவை : சோதி, உலகத்தை ஆளக்கூடிய முக இலக்கணம். உரவன் – அறிவுடையோன்.

வாயு மன்பினில் மெய்யர் முன்னவன்
சேயின் சென்னியிற் தன்கை சேர்த்தரோ
தூய துவாதசாட் சரத்தை யோதினன்
மாய வன்திரு வெட்டெ ழுத்துடன்.                          .6.

மணக்கால் நம்பி இக்குழந்தைக்கு காப்பாக த்வாதசாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ ஆகிய மந்திரங்களை ஓதினர். மெய்யர் முன்னவன் – அந்தணர் தலைவன். சேயின் சென்னியில் தன் கை சேர்த்து …. ஓதினன் -----. அரோ – அசை.

மனுவி ரத்தின மாகும் வண்டுயம்
தனைய வன்செவி தன்னி லோதி,”இத்
தனிவ னப்பினன் தரணி யுய்த்திடும்
முனிவ னாகுவன்” எனமொ ழிந்தனன்.                    .7.

குழந்தையின் செவியில் மந்திர ரத்னம் என்னும் த்வயத்தை மணக்கால் நம்பி ஓதினர். குழந்தை தாம் நினைக்குமாறு மேன்மையுற. மனு – மந்திரம். வண் துயம் – பெருமை வாய்ந்த த்வயம் (சொற்றொடர்கள் இரண்டு கொண்ட மந்திரம்). இ தனி வனப்பினன் – ஒப்பற்ற அழகு வாய்ந்தவன் இவன்.

பிராய மைந்திலிப் பிள்ளை விஞ்சையும்
பராப ரந்தனைப் பரவு வேதமும்
உராவு நற்கலை பலவு மோதினன்
முராரி தன்கழற் பத்தி முன்னிட.                         .8.

ஐந்து பிராயத்துள் கற்றவை. விஞ்சை – வித்தை. கல்வி. பராபரம் – இறைவன். உராவு நல்கலை – பரந்த கலைகள். முராரி – முரனைக் கொன்ற இறைவன். முராரி ……..பத்தி முன்னிட ஓதினன்.

ஒருமு றைகுரு ஓது விப்பதை
மறுமு றைகடிந் தகத்து வைக்குமிச்
சிறுவ னாற்றலைச் சிறுவ ரேனையர்
பெருவி யப்பினிற் பேசி னாரரோ.                       .9.

சிறுவனது ஆற்றல். ஒருமுறை குரு ஓதுவிப்பதை --- மறுமுறை கடிந்து --- இரண்டாவது முறை வேண்டாம் என அகற்றி. அகத்து – நினைவினில்

சாத்தி ரங்களிற் சதுரன் மேதையர்
ஏத்து பாடிய பட்ட னேற்றிட
ஆத்த னிளையவன் சீட னாயினன்
மாத்து மட்டிலாக் கல்வி மாந்திட.                       .10.

பாடிய பட்டனின் சிஷ்யனானமை. குருவின் பெயர் பாஷ்ய பட்டர். சதுரன் – கற்றவன். மேதையர் ஏத்து பாடியபட்டன்---- மேதையரால் பாராட்டப்பெறும் பாடியபட்டன். ஆத்தன் – ஆப்தன், அன்பிற்குரியவன். மாத்து—பெருமை. மா—பெருமை. ஏற்றிட – சீடனாக ஏற்க.

விண்ணுளா ராசிரியன் வியாழன்றா னிவனென்று
மண்ணுளார் வியந்திடவே வந்ததனிப் பிள்ளைதனை
அண்ணலா சிரியன்றன் னருகிருத்திப் பரிவாற்றன்
கண்ணிகர்க் கலையெல்லாங் கதிருறவே கற்பித்தான்.   .11.

இச்சிறுவனுக்குக் குரவர் கலைகளை ஊக்கமுடன் கற்பித்தமை. விண் உளார் ஆசிரியன் வியாழன்தான் இவன் என்று – வானவர்க்குக் குருவாகிய பிருஹஸ்பதி இவன் என்று. அண்ணல் – சிறந்தவன். (குரு) தன் அருகு இருத்தி . பரிவால் …. கற்பித்தான் -----------. கண் நிகர் – தனக்குக் கண்போல் வளர்த்து வந்த . கதிர் உற – இந்த இளைஞன் ஓதிய கலைகள் நிறம்பெறுமாறு.