சனி, 16 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 6

ஸ்ரீஎன்.வி.எஸ்  ஸ்வாமி மூல பாடத்தை அப்படியே தராமல் அவரது நடையில் நூலின் சாராம்சத்தை விவரிக்கிறார். அதை அப்படியே இங்கு இடுகிறேன். நூலை அதன் ஆசிரியர் எழுதியவாறே படித்து ரசிக்க விரும்புபவர்களுக்காக இந்நூலை ஸ்கான் செய்து வலை ஏற்றி தகவல் அளிப்பேன்.

ஆக, இங்கு நீங்கள் இனி படிக்கப் போவது ஸ்ரீ என்.வி.எஸ் அளிக்கும் எளிய நடையில் சுப மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம்! 60 வருடத்திற்கு முந்திய தமிழை இன்றுள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள சிரமப்படும் ஸ்ரீ என்.வி.எஸ். ஸ்வாமியின் கைங்கர்யத்துக்கு அடியேனின் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

பும்ஸவந ப்ரகரணம்


    எந்த கர்மாவால் கர்ப்பிணி புருஷ ப்ரஜையைப் பெறுவாளோ அந்த வைதிக கர்மத்திற்கு ‘பும்ஸவநம்" என்று பெயர். கர்ப்பம் நிச்சயம் என்று தெரிந்தவுடன் மூன்று அல்லது நான்காம் மாதத்தில் இதைச் செய்துவிடவேண்டும்.

    கிழக்கு அல்லது வடக்கு நோக்கிச் செல்லும் ஆலமரத்தின் கிளையிலிருந்து இரு பழங்களுடன் கூடிய, மொட்டு போன்றிருக்கும் (துளிர்க்கும் இலையின்) கொழுந்தைக் கொண்டுவந்து, (ஸீமந்தோந்நயனத்தில் கூறப்பட்ட அதே) எட்டு ஹோமங்களைச் செய்து, ருதுவாகாத கந்யைக் கொண்டு (பூப்பெய்தாத இளம் பெண்ணுக்கு மட்டுமே கந்யை என்ற பெயர் பொருந்தும். பூப்பெய்தி மணமாகாத பெண்ணிற்று ‘ப்ரௌடை" என்று பெயர்.) அம்மியில் வைத்து நசுக்கச் செய்து, அதன் ரஸத்தை வஸ்த்ரத்தால் வடிகட்டி எடுத்துக்கொண்டு, அக்நிக்கு மேற்கே கர்பிணியை, மேற்கு நோக்கி அமர்ந்து, தலை மட்டும் கிழக்கு நோக்கி திரும்பும்படியாக நன்றாக அண்ணார்ந்து உட்காரச் செய்து, ‘(ஓ ஆலந்துளிரின் ரஸமே நீ) புருஷ ப்ரஜையை ப்ரஸவிக்கும்படி செய்பவனாக இருக்கிறாய்" என்று பொருள்படும் (புகுஸுவநமஸி என்ற) வேத வாக்யத்தைக் கூறி, மூக்கின் வலது துவாரம் வழியாக, அந்த ரஸத்தைப் பிழிந்து, கர்பப்பையைச் சென்றடையும்படியாக விடவேண்டும் என்று (ஆபஸ்தம்ப) ரிஷி ஸூத்திரத்தில் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால் புத்ர உத்பத்தி உண்டாகும்.

அநாயாஸ(சிரமமற்ற, சுக) ப்ரஸவ உபாயம்
    ப்ரஸவ காலம் வந்ததும் ஒரு புதிய மண் பாத்திரத்தில் நதியின் ஜலத்தை எடுத்து வந்து, ‘து}ர்யந்தி" என்னும் மூலிகைச் செடியைக் கொண்டுவந்து, கர்பிணியின் இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி, ப்ரஸவ வேதனையால் வருந்தும் கர்பிணியை, பின் வரும் ரிக்கால் (மந்திரத்தால்) இரு கைகளாலும் தொட்டு, பிறகு வரும் மூன்று மந்திரங்களை ஜபித்து, ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் ஒரு முறை ப்ரோக்ஷிக்கவேண்டும். (மூன்று மந்திரங்களும் முடிந்த பிறகு ஒரு முறை ப்ரோக்ஷித்தாலும் போதுமானது).

    நான் உன்னை என் கைகளின் பத்து விரல்களால், பத்து மாத கர்பத்தை சீக்கிரம் ப்ரஸவிக்கும்படியாக சுற்றிலும் தடவுகிறேன்.

    ஆபிஷ்ட்வாஹம்
    1. யாகத்தில் ஸோமரஸம் எப்படி எளிதாய் பிழியப்பட்டு, துணி வழியாகக் கசிகிறதோ, கடல் எப்படிக் காற்றால் அசைகிறதோ, அப்படி உன் கர்பமும் (ப்ரோக்ஷிப்பதால்) அசையட்டும். பிறகு, கர்பத்தைச் சுற்றியிருக்கும் ஜராயு (பனிக்குடம் என்பர்) என்ற ஓர் மெல்லிய தோலுடன் ஸுக ப்ரஸவமாகி, ஆயுள், ப்ரஹ்மவர்சஸ் (ப்ராஹ்மண களை), கீர்த்தி (புகழ்), வீர்யம் (சக்தி), அந்ந ஸம்ருத்தி (மிகுதியான அந்நம்) இவைகளுடன் கூடியிருக்கட்டும். யதைவ ஸோம:

    2. இந்த கர்பம், ப்ரஹ்மாவின் ஸங்கல்பப்படி, பத்து மாதங்கள் உன் உதிரத்தில் (கர்பத்தில்) இருந்தது. இனி உனக்கும் அதற்கும் (சிசுவிற்கும்), ப்ராண (உயிர்) ஆபத்தின்றி வெளிவரட்டும். தசமாஸாம்.

    3. ஸரஸ்வதீ நதீ முதலியவற்றுள் உள்ளிருக்கும், அப்பு(தீர்த்த) தேவதைகளே! சக்தியுடைய நீங்கள் இக்கர்பத்தை வெளிப்படுத்துங்கள். நல்லபடி தாயும், சேயும் க்ஷேமமாக இருக்கட்டும். ஆயமநீர்மயத.

ஜராயு என்கிற நஞ்சு விழ மந்த்ரம்
    ஜராயுவுக்கு திலதா என்றும் ஒரு பெயர் உண்டு. அது தலைகீழாக விழட்டும். நீ குடலிலுள்ள எந்தப் பொருளாலும் பாதிக்கப்படாமல் வெளியே வா! நீ மிகவும் ஸ்வல்பம் (சிறிய பகுதி). நீ வெளியில் வந்ததும் உன்னை நாய் உண்ணட்டும். திலதேவ பத்யஸ்வ.

அடுத்து ஜாதகர்ம ப்ரகரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக