செவ்வாய், 20 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி


சுலோகம் 2
வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம்
        வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
        மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2. 

         "எண்ணிறந்த சுருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என்போன்றவருடைய எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல் சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள் என் வாயைத் திறந்துவைத்துப் பேசச் செய்கின்றன."

தாத்பர்யம்


         கோதா என்கிற திருநாமத்தைச் சொல்லி அவளைச் சரணமடைகின்றேன் என்றார். தேவஜாதியர் பரோக்ஷணமான பேச்சில் ரஸிப்பர். தேவியான கோதையை 'கோதையைச் சரணமடைகிறேன்' என்று முதலில் த்வயமந்த்ரத்தில்போல பரோக்ஷமாகப் பேசிச் சரணம் புகுந்தார். மஹாகவியான கோதை, கண்டையின் அவதாரமான உத்தம (த்வநி) கவி தேசிகன் ப்ரயோகித்த 'கோதா' சப்தத்தின் த்வயர்த்தத்தை உடனே அறிந்தாள். பரிகராங்குராலங்காரத்தால் ஆசைப்படுவது கவிதை என்பது வஸ்துத்வனி. தன்னைத் துதிக்க அர்ஹமான உத்தம வாக்கைக் கேட்கிறார் இவர் என்று அறிந்து கொண்டாள். "ஸ்ரீரங்கராஜனுடைய திவ்யாஜ்ஞையால் வேதாந்த தேசிகன் என்றும், அவர் திருவோலக்கத்தில் பெரியோரால் கவிதார்க்கிக ஸிம்ஹம் என்றும் பிருதளிக்கப்பட்ட நீர் என்னைத் துதிக்க கவிதா பிக்ஷை கேட்பீரேயானால், எம் நாயகன் கொடுத்த பிருதங்கள் பொய்யாகாவோ? ரங்கபர்த்தா தானம் செய்த வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞையை அந்வர்த்தமாகச் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து, ஸஹஜபஹுகுணமான ஸ்ரக்தரைப் பாற்கடலான ஸாராவளியைப் பாடினீரே? எம் நாயகர் கொடுத்த கவிதைப் பிச்சையால் நீர் பூரணரல்லவா? அரை வயிற்றுக்குத்தான் "கொள்ளக்குறைவிலனும் வேண்டிற்றெல்லாம் தருபவனுமான" ஸ்ரீரங்கராஜன் பிச்சை கொடுத்தாரோ? நீர் வேதாந்த தேசிகராயிற்றே, நான் ஈச்வரியாயிருந்தாலும், ஈச்வர தத்வத்தின் நிலையை வேதாந்தங்கள் அறியாவோ? வேதாந்த தேசிகருக்கு வேதாந்தங்களுக்கு நிலமான ஈச்வர மஹிமை நிலமாகாதோ? ஓய் தேசிகரே" என்று கோதை வினவ,

         உன் மஹிமையிருக்குமூரிலேயே வேதாந்தங்கள் அணுகக் கூடவில்லை. வேதாந்தங்களுக்கு உன்னுடைய மஹிமை வைதேசிகம் என்பதால் கைமுத்யத்தால், வேதாந்த தேசிகனுக்கும் அவன் பெருமை வைதேசிகமென்று ஸித்திக்கிறது. ஒருவர் ப்ரபாவம் அவருக்கு ஸமீபத்திலிருந்தால் தெரியலாம். ஒரே ஊரிலிருந்தாலும் தெரியலாம். ஸாமீப்யம் அல்லது ஸாலோக்யமாவது இருக்க வேணும். ஸாலோக்யமேயில்லை. ஸாமீப்யத்திற்கு ஆசையேது? வேதங்கள் அனந்தங்களென்பர். என் போன்றவர்களுக்கு சில எழுத்துக்கள் கூட்டத்தான் தெரியும். என் போன்றவர் எழுத்துகளுக்குள் உன் மஹிமை அளவடங்குமோ? வர்ணம் என்பது எழுத்தையும் சொல்லும். ஸ்தோத்ரத்தையும் சொல்லும். (வர்ண்யதே அநேந -- இதனால் வர்ணிக்கப் படுகிறது) எங்கள் எழுத்துக்களிலடங்காது. நாங்கள் வெட்கத்தைவிட்டுக் கோணாமாணாவென்று ஸ்தோத்ரங்களை (வர்ணங்களால் வர்ணநங்களைச்) செய்தாலும் உன் மஹிமை அதிலடங்குமோ? துதிப்பாடலுக்கும் வர்ணமென்று பெயர். 'உபாத்தவர்ணே சரிதே பிநாகிந:" என்று குமார ஸம்பவம். இந்த ச்லோகத்தில் 'கர்த்தும் ததீய மஹிமஸ்துதிம்' என்ற ஆளவந்தார் ச்லோக வார்த்தை ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. துதியென்றால் மஹிமையின் துதியாகும். மஹிமையை அறியாமல் எப்படித் துதி செய்கிறது? 'யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம் பசா:' என்று யாதவாப்யுதயத்தில் 'வேதங்களே பாடிப்பாடி ஓரோர் குணத்தின் ஏகதேசத்திலே சோர்வடையும் விஷயத்தில் மிதக்ஞரானவர் யதாவத்தாய் உள்ளபடி வர்ணிப்பதில் ஸமர்த்தராகாரென்பதற்குக் கேட்க வேணுமோ?' என்று ஸாதித்ததை நினைக்க வேணும். உள்ளபடி வர்ணிப்பது வர்ணமென்னும் துதி. அங்கே கைமுத்யம் ஸ்பஷ்டமாக்கப்பட்டது. இங்கே கைமுத்யம் வ்யஞ்ஜிதம். என் அறியாமையை நான் நன்கறிந்தும் திடீரென்று பலாத்காரமாய், உன் குணங்கள், உன் சிசுவாகிய நான் ஊமையாயிருப்பதை ஸஹிக்காமல், என் மௌனத்தின்மீது கோபித்து, என் வாயைத் திறந்துவிட்டு என்னைப் பேச்சைக் கொடுக்கும் வ்யாபாரத்தில் தள்ளி விடுகின்றன. 'ஸஹஸைவ' அதிவேகமாகவே, பலாத்காரமாகவே. ஒன்றுமறியேனென்கிறீர், மௌனத்தைக் காணோமே, வாய் திறக்கிறீரே, இதென்ன ஸாஹஸம் என்பாயோ? அம்மா இது உன் குணங்களின் ஸாஹஸம், அவற்றின் பலாத்காரம், என் ஸாஹஸமல்ல. உன் குணங்கள் உன் குழந்தையாகிய என் மௌனத்தைக் கோபிக்கின்றன. பெருமாள் குணங்கள் மௌனத்தை நிர்ப்பந்திக்கும். அவர் ஆனந்த குணத்தைப் பேசி ஓய்ந்து வாயை மூடிக்கொண்டு சும்மாயிருப்பதே அழகு என்று வேதம் நிவ்ருத்தி அடைந்தது. 'முகலாயம் நிலில்யே' 'ஊமையாக லயமடைந்தது' என்று ஸ்ரீபட்டர் ஸாதித்தார். பெருமாள் குணங்கள் அவருடைய ஐச்வர்யப் பெருமையால் மௌனத்தையும், ஊமைத் தன்மையையும் ஸஹிக்கும். பேசாமலும் செய்யும். தாயாகிய உன்னுடைய குணங்களோ குழந்தை வாயை மூடி ஊமையாயிருப்பதை ஸஹிக்காது. மௌனத்தைக் கோபித்து வாயை உடனே திறந்து விடும். வேறொன்றையும் உன் குணங்கள் கோபிக்கமாட்டா. மௌனத்தை மட்டும் கோபிக்கும். பெருமாள் குணங்களுக்கும் உன் குணங்களுக்கும் இந்த வாசியுண்டு. என்ன குணங்கள்? முன் ச்லோகத்தில் மூன்று சொன்னேன். அவையென்ன? க்ஷமை, கருணை, கோதை என்ற திருநாமத்திற்கேற்ற "வாக்கைத் தானம் செய்வதென்னும் குணம்". என்ன பிதற்றினாலென்ன? சொற்குற்றம், பொருள் குற்றம் எத்தனையிருந்தாலுமென்ன? உன் பொறுமை அதையெல்லாம் பொறுக்காதோ? ஏன் அஞ்ச வேணும்? உன்னைத் துதி செய்தாலல்லது நான் தரிக்க முடியாத என் ஆர்த்தியைக் கண்டும் உன் கருணை என்னைக் கைவிடுமோ? "கோதா -- வாக்கையளிப்பவள்" என்னும் உன் திருநாமம் கோபியாதோ? இரண்டுக்கும் பரஸ்பரம் சத்ருத்வமில்லையோ? வாக்கைக் கொடுக்கும் குணம் கொள்வாரில்லாமற் போனால் கானக நிலவு போல வீணாகாதோ? "முகரயந்தி" என்பதிலும் மிக்க ரஸமுண்டு. 'முகம்' என்பது வாய்க்குப் பெயர். லக்ஷணையாக வாய்ப்பேச்சை, வாக்கைச் சொல்லும். முகத்தைக் கொடுப்பது முகரம். முகம்ராதி. ராதி என்பதற்கு, கொடுக்கிறது என்று பொருள். வாய்ப்பேச்சை, வாக்கை, துதியைக் கொடுப்பது முகரம் -- வாயைக் கொடுக்கச் செய்கிறது என்று மொத்தப் பொருள். என் வாயைக் கொடுக்கச் செய்தால்தானே, உனக்கு கோதா என்னும் திருநாமம் நிலைக்கும். பேரருளாளனைத் துதிக்கையில் உம்முடைய வாத்ஸல்யமே என்னை முகரனாகச் செய்கிறது என்று ஸாதித்த ச்லோகத்தின் வ்யாக்யானத்தில் இதை விஸ்தரிக்கிறோம்.    (2)                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக