வியாழன், 29 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

…………………………………………………………………………………….நஞ்சமன                               34

பாவம் திகைப்புள்ளே பாராயோ
மேவந் திகைப்புறும்என் மேனிவெதும் பாமல்அருட்
பாவந் திகைப்புள்ளே பாராயோ – சேவகஞ்சேர்                    .35.

வண்காற் பவள வரிச்சுகமே வான் பொதிய
வண்காற் பவள வரிச்சுகமே வான்பொதியத்
திண்காற் கொழுந்தடங்கச் செய்யாயோ –எண்பாவு              .36.

பொற்கீரமே நீ புரியாயோ
நற்கீர மேயபதம் நான்அருந்து மாறுசிறைப்
பொற்கீர மேநீ புரியாயோ – எற்கீரம்                                      .37

மெல்லலகை மேய விழுப்புள்ளே
இல்லலகை யாய இருட்பிழம்புக் (கு) என்புரிவல்
மெல்லலகை மேய விழுப்புள்ளே – புல்லியமை                      .38.

அஞ்சாருவே துதித்தேன் ஆளாயோ
நஞ்சாரு மேக நவையகற்றச் சாருதிஎன்(று)
அஞ்சாரு வேதுதித்தேன் ஆளாயோ – தஞ்சாரு                       .39.

அன்னப்புள்  மேவ உள்ளம் ஆராய்ந்து
மன்னப்புள் மேவும் வனசமலர் மீதுறையும்
அன்னப்புள் மேவஉளம் ஆராய்ந்து – நன்னிறத்துப்               .40.

அப்பாலதனை ஓர்ந்து பகர்ந்திடேன்
பாலயனை வேறாய்ப் பகுத்தமையப் பண்ணுறும்அப்
பாலதனை யோர்ந்து பகர்ந்திடேன் – சீலமுறப்                      .41.

பெட்டோகை இல்லாப் பிணிமுகம் என்றோர்ந்து
பெட்டோகை யில்லாப் பிணிமுகம்என் றோர்ந்துமணிக்
கட்டோகை கண்டு கழறிடேன் – உட்டேறித்                           .42.

தாராதரம் எனவே தான் அறிந்து
தாரா தரம்எனவே தான்அறிந்து நீர்கலுழுந்
தாரா தரங்கண்டு சாற்றிடேன் – நேராருஞ்                              .43.

சாரிகை கொண்டு எங்கும் தலைப்படரும் தன்மை
சாரிகைகொண் டெங்குந் தலைப்படருந் தன்மையினாற்
சாரிகைக்கும் உள்ளன்பு சாற்றிடேன்.                                       .44.

குறிப்பு;-
34. நஞ்சமன – விடமனைய கொடிய உளத்தில்.
35. மேவ – பொருந்த; அந்தி – மாலை; கைப்புறும் – கசக்கும்; என் மேனி வெதும்பாமல் – என் உடல் வாடாமல்; அருள் – அருள் செய்; பாவ அம் திகை – பரவிய அழகிய தேமலை ; புள்ளே – கிளியே; பாராயோ – பார்க்க மாட்டாயா; சேவகம்சேர் – வணக்கம் சேரும்.
36. வண்காற் பவள – பவழம்போற் சிவந்த வலிய கால்களை உடைய; வரிச்சுகமே – வடிவுடைக்கிளியே; வான் பொதியத் திண்காற் கொழுந்து – வானளாவும் திண்ணிய பொதிகை மலையின் இளம் சுடர் (தென்றல்) அடங்க- தணிய; செய்யாயோ – செய்யமாட்டாயோ; எண் பாவும் – உளம் பரவிய
37. பதம் மேய  -- திருவடியிற் சார்ந்த; நற்கீரம் – நல்ல பாலை; நான் அருந்துமாறு – நான் பருகும்படி; சிறைப் பொற் கீரமே – பொன் சிறகுள்ள கிளியே; நீ புரியாயோ – நீ செய்ய மாட்டாயா; எற்கு ஈரம் இல் – என் பாலிரக்கமற்ற
38. அலகையாய – பேயான, இருட் பிழம்புக்கு – செறிந்த இருளுக்கு, என்புரிவல் – என் செய்வேன், மெல் அலகைமேய –மென்மையான மூக்கை உடைய, விழுப்புள்ளே – சிறந்த பறவையே, புல்லியமை – கருமை தழுவிய.
39. நஞ்சாரும் – விடம் பொருந்திய, ஏகம் – ஒரே, நவையகற்ற – குற்றம் நீங்க, சாருதி என்று – அடைக என, அம்சாருவே – அழகிய கிளியே, துதித்தேன் – தொழுகின்றேன், ஆளாயோ –ஆட்கொள்ளாயோ, தஞ்சாரும் – தான் சார்ந்துள்ள.
40. மன்னப்புள் – பட்சிராஜன், கருடன்; மேவும் –விளங்கும்,(தலைவனை நீங்காது), வனசமலர் மீதுறையும் – தாமரை மலர் மேலுள்ள, அன்னப்புள் – அன்னப்பறவை, மேவ – அடைய, உளம் ஆராய்ந்து – மனம் தேர்ந்து, நன்னிறத்து – நல்ல வெள்ளை நிற.
41. பால் அயனை – பாலையும் நீரையும், வேறாய் – வேறு வேறாக, பகுத்தமைய –பிரித்தமைய, பண்ணுறும் – செய்யும், அப்பாலதனை – அத்தன்மை கருதி, ஓர்ந்து பகர்ந்திடேன் – தேர்ந்து தூதாகக் கூறவில்லை, சீலமுற – குணமுற.
42. பெட்டோகை இல்லா – தோகையற்ற பெண், பிணிமுகம் என்றோர்ந்து – மயில் என நினைந்து, மணி – அழகிய, கண் – விழியுடைய, தோகை கண்டு – மயிலினைப் பார்த்து, கழறிடேன் – கூறவில்லை. உட்டேறி – மனம் தெளிந்து.
43. தாராதரம் எனவே தானறிந்து – ஆதரவு தாராது என்பது உணர்ந்து, நீர் கலுழும் – நீர் சிந்தும், தாரா – வாத்தின், தரங் கண்டு – தன்மை நோக்கி, சாற்றிடேன் – கூறவில்லை, நேராரும் – நேர்மை கொண்ட,
44. சாரிகை கொண்டு – வட்டமிட்டுச் செல்லுந் தன்மையுடன், எங்கும் – எவ்விடத்தும், தலைப்படரும் – வாழ்வித்திருக்கும், தன்மையினால் – குணத்தால், சாரிகைக்கும் – பூவைப் பறவைக்கும், உள்ளன்பு – என் உள்ளத்துப் (தலைவன் பாலுள்ள) பிரியத்தை, சாற்றிடேன் – கூறவில்லை.  

1 கருத்து: