வெள்ளி, 6 ஜூலை, 2007

HH Srimad Andavan at Thiruppullani

ஸ்ரீமத் ஆண்டவன் ஜூலை 1ம்தேதி மாலை முதல் 3ம்தேதி மாலை வரை திருப்புல்லாணியில் எழுந்தருளியிருந்தார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆச்ரமத்தில் பொன்னடி சாற்றி, சேதுவில் தீர்த்தமாடி, ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் மங்களாசாஸனம் செய்தார். முழுமையாக மீண்டும் எழுதும் வரை இந்தப் படங்களைப் பார்த்து மகிழலாம்.


புதன், 13 ஜூன், 2007

இடைப்பிள்ளை மாலை

ஸ்ரீ:
. ஸ்ரீ கோபால விம்சதி
இடைப்பிள்ளை மாலை
(ஸ்ரீமான் கேசவ அய்யங்கார்)
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.

உத்தம ஞானச் செல்வ னுயர்மறை முடிக ளுக்கு
வித்தகப் பொருளு ணர்த்து மேன்மையன் வேங்க டேசன்
எத்திறக் கவிஞ ருக்கு மேதுவா தியர்க்கு மேறு
நித்தமு மிடை விடாதே னெஞ்சினிற் றிகழ்க நின்றே.

[ உத்தம ஞான ஸம்பத்தையுடையவரும், வேதாந்தங்களுக்கு சாஸ்த்ரோக்தமான பொருளுரைப்பதில் பிரஸித்தி பெற்றவரும் திருவேங்கடநாதன் என்னும் திருநாமத்தை வகிப்பவரும் , கவனம் பண்ணுபவர் , ஹேதுவாதம் செய்பவர் இவர்கள் எத் திறமையோராயினும் அவர்களுக்கெல்லாம் சிங்கம்போன்றவருமான நம் தூப்புல் வேதாந்த தேசிகன் அடியேன் மனத்திலே எப்பொழுதும் வீற்றிருக்கக்கடவர்.]

வந்தே ப்ருந்தாவனசரம்
வல்லவீஜந வல்லபம்
ஜயந்தீ ஸம்பவம்தாம
வைஜயந்தீ விபூஷணம். 1.

வண்டிருப் பிருதானம் வரும் திருக்
கண்டுளக் களிவண் டிள வாய்ச்சியர்
மண்டி வாழ் மணமாலை மிலைந்தருள்
கொண்டெழுஞ் சுடரொன்று வணங்குவாம். 1.

[சிங்கத் திங்கள் க்ருஷ்ணபக்ஷத்து அஷ்டமி திதியாகிய ஸ்ரீ க்ருஷ்ணஜயந்தி நன்னாளிலே நானிலம் உய்ய நல்லறமோங்க திருவவதரித்தவராகிய ஸ்ரீ க்ருஷ்ன பரமாத்மா , அமுதங்கடைந்த காலையில் அக் கடலில் உண்டான வனமாலையை விலக்ஷணமாக திருவாபரணாதிகளில் ஒன்றாகத் தரித்துக்கொண்டும் பிருந்தாவனம் என்னும் துளஸீ நிறைந்த காட்டகத்தே சிறந்த திருவிளையாடல் புரிந்து நிறைந்து, ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களான கோபியர்களுக் கெல்லாம் வியாஜ மாத்திரையாய் கணவராகவிருந்து நடித்துக் காட்டித் திருவிளையாடல்கள் செய்தவருமான பரஞ்சோதியை வணங்குகின்றேன்.]

வாசம் நிஜாங்க ரஸிகாம் ப்ரஸமீக்ஷ மாணோ
வக்த்ராரவிந்த விநிவேசித பாஞ்சஜந்ய:
வர்ணத்ரிகோணருசிரே வர புண்டரீகே
பத்தாஸனோ ஜயதிவல்லவ சக்ரவர்த்தீ. 2.

தருதன்மடி திகழ்தன்மொழி தவழ் தன்வழி விழியோன்
விரையின்கமழ் மறையின்மகிழ் நிறையின்புரி வதனன்
சரணின்திரு வருநன்பெரு வருணந்தரு திரினே
ணொரு பூந்தவி சுறுகோவல ரொருகோளரி பொலிவான். 2

[எல்லாம் வல்ல கண்ணபிரான் தனது மடியில் விளையாடிக் கொண்டிருக்கும் வாக்கன்னையான வாணியை நோக்கிக்கொண்டும், பகைவர்களினது வலிமையைப் போக்கடிக்கும்படியான வலம்புரிச்சங்கத்தைத் தனது திருப்பவளவாயினிடத்தே வைத்துக் கொண்டும், முக்கோணவடிவாகிய பீஜாக்ஷர ஸஹிதமான தாமரை மலரில் பொலிவோடு எழுந்தருளி மிகவும் சிலாக்கியமான சோபையோடு பிரகாசித்துக்கொண்டு மிருக்கிறான். அவனன்றோ மூவுலகாக்ஷியும் தானேயாய்த் தனிச் செங்கோல்புரியும் சக்கரவர்த்தியாகும்.]

ஆம்நாயகந்தருசிர ஸ்புரிதா தரோஷ்டம்
ஆஸ்ராவிலேக்ஷண மதுக்ஷண மந்தஹாஸம்
கோபால டிம்ப வபுஷம் குஹநா ஜநந்யா
ப்ராண ஸ்தநந்த யமவைமிபரம் புமாம்ஸம். 3

விம்மியழ வேதமண மூதுமிதழ் பின்னும்
பம்மியுதிர் கண்விழிபு னன்முறுவன் மன்னும்
அம்மையெனு மாயையுயி ரம்மமுட னுண்ணும்
இம்மகவை யான றிவ னாணொருவ னென்றே. 3.

[ வேதமணம் கமழும் திருவதரமானது , பவளத்தையொத்துத் திறந்து திறந்து மனித வர்க்கத்தாரைப் போன்று பசி காட்டி அழுவதைச் செய்துகொண்டும் , தாமரை மலர்போன்ற திருக்கண்களினின்றும் மாயக்கண்ணீரை மாரிபோலப் பெருக்கிக் கொண்டும் , தான் அவதரித்த காரணத்தைத் தானே நினைந்து, அதனாலே அடிக்கடி இவ்விருள்தருமா ஞாலத்தியல்பை யுன்னிப் புன்னகை புரிந்துகொண்டும் , இளம்பருவத்துடனே திருவிளையாடல் செய்து தொட்டிலிலே கிடக்க, வஞ்ச நெஞ்சத்தோடு மாதாவெனவந்து புகுந்த பூதனையின் பயோதரத்தைப் பரிந்துண்டவன் பரம புருஷனென்றே யான் அறிவேன்.]

ஆவிர்பவத்வ நிப்ருதா பரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சி திகசரணம் நிப்ருதாந்ய பாதம்
தத்நா நிமந்த முகரேண நிபத்த தாளம்
நாதஸ்ய நந்தபவநே நவநீத நாட்யம். 4.

தன்னணி கிளர்ந்தொளி கலந்தொரு சரண்தான்
முன்னிலகு குஞ்சித மிடப்பிற நிலைப்ப
மன்னுதயிர் தாளமிட மத்தினிடை யொத்தே
என்னநவ நீதநட மன்னனதென் முன்னே. 4

[ திருவாய்ப்பாடியில் அரசு புரியும் நந்தகோபாலனுடைய திருமுற்றத்திலே திவ்வியாபரணபூஷிதனாய் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன், ஒரு தாளை முடக்கிக்கொண்டும் , மற்றொருதாளை நீட்டிக்கொண்டும் இருக்கையில் உள்ளே தயிர் கடைய , அத்தயிரிலே தோய்ந்து புரளும் மத்தோசையினையே தன் நடனத்திற்கேற்ற தாளமாக நினைந்து , ஆடுவோமாயின் வெண்ணெய் பெறலாமென்று அனைவரும் வியக்க நின்றாடிய திருக்கூத்து அடியேனைக் கவர்ந்ததாகையால் அந்தக்கூத்து என்முன்னே பிரசந்நமாகக்கடவது.]

ஹர்த்தும் கும்பே விநிஹிதகர : ஸ்வாது ஹய்யங்கவீதம்
த்ருஷ்ட்வா தாமக்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம்
பாயாதீஷத் ப்ரசலிதபதோ நாபகக்சந் ததிஷ்டத்
மித்யாகோப : ஸபதிநயநே மீளயந் விச்வகோப்தா. 5.

கள்ளுவான் குடத்து வெண்ணெய் கையிடக் கண்ட தன்தாய்
கொள்ளுவான் வெகுண்டு நாடத் தாம்பினால் தேம்பிக் கண்டு
உள்ளுவான் போலுடன் தன் கண்ணிணை யரும்ப வாடித்
துள்ளுவான் போலு நின்ற துள்ளலில் வள்ளல் காப்பு 5.

[உள்ளங்கவர்கள்வனான கண்ணபிரான் இனிமையைத்தரும் வெண்ணெயைக் கொள்ளை கொண்டு உண்ணத் தாழியில் கைவைப்பதைக் கண்ட யசோதைப் பிராட்டி மிக வெகுண்டு , தன்னைக் கட்டக் கயிறு தேடிக் கொண்டு செல்வதைக் கண்டு, குழந்தைகளைப்போல் அங்குமிங்கும் ஓடி ஒளியாமல் யோகிபோல அசையாமல் கண்களை மூடிக்கொண்டு கபட நாடகஞ் செய்த பரமாத்மாவான வள்ளலே! அடியேனைக் காத்தருள் புரிதல் வேண்டும்.]


வ்ரஜயோஷித பரங்கவேத நீயம்
மதுராபாக்ய மநந்ய போக்யமீடே
வஸுதேவ வதூஸ்தநந்த யம்தத்
கிமபிப்ரம்ஹ கிசோர பாவத்ருச்யவம். 6.

ஆயுள மதுரை யோர்வா யாயிர மமுத மூற
வாயிள மகளி ரம் பூங் கடைக்கணம் போச்சற் கொத்த
தாயிளம் பால் மணங்கொள் வாயிளம் பவள மூதும்
சேயிளம் பசுமை சான்றான் சுருதி கட் கிறுதி யாவான் 7.

[வடமதுரையின் கண் வசித்து வரும் மக்கள் செய்த பெரும்பாக்கியத்தால் அந்நகரிலே வந்து அவதரித்தவனும் , ஆயர் மங்கை யர்களின் கடைக்கண் நோக்கிற்கு ஈடுபட்டு மனைகள் தோறும் விரும்பியோடினவனும், இவ்வள வென்று கூற வொண்ணாத அந்தமில் இன்பத்தைப் பலருக்குத்தர வல்லவனும், தேவகீ தேவியின் திருமுலைப்பாலை இன்பமாய் உண்டவனும்,குழந்தைகளின் தன்மையைப் போலவே எவ்விதங்களிலும் நடித்துக் காட்டுகின்றவனும், முக்கரணங்களுக்கும் கிட்டாதவனுமான தத்துவ ஸ்வரூபியான வேதாந்த விழுப்பொருளாங் கண்ணபிரானைத் துதிக்கின்றேன்.]

பரிவர்த்தித சுந்தரம் பயேந
ஸ்மித புல்லாதர பல்லவம் ஸ்மராமி
விடபித்வ நிராஸகம் கயோச்சித்
விபுலோ லூகல கர்ஷகம் குமாரம். 7.

விஞ்சியோ ருரலொ டேக்கம் பூக்கவே யாக்கப் பண்ணி
அஞ்சியே யருளி யன்னைக் கருளிளஞ் சிங்க நோக்கி
அஞ்சுவார் தஞ்சச் செல்வம் தவழ்திரு முறுவல் பூத்து
வஞ்சிலா மரத்தி னூடுற் றிறுத்த தென் மனத்தி னூடே.

[ அன்னையாகிய அசோதை தன்னைக் கயிற்றாலே கட்டியதற்குப் பயந்து தன் கழுத்தை ஒரு பக்கமாகத் திருப்பிக் கொண்டவனாகியும் தனது தன்மையை நினைத்துப் புன்முறுவலால் ஒளிவிடும் பல் வரிசையோடு கூடிய அதரத்தயுடையவனாகியும், சாபத்தாலே மருத மரமாக வளர்ந்து நிற்கும் கந்தர்வர்களது துன்பத்தைத் துடைத்து இன்பமளிக்க , தன்னைப் பிணித்துள்ள உரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்த குழந்தையைத் துணை பெறவேண்டித் துதிக்கின்றேன்.]

நிகடேஷு நிசாமயாமி நித்யம்
நிகமாந்தை ரதுநாபி ம்ருக்யமாணம்
யமனார்ஜுந த்ருஷ்டபால கேளிம்
யமுநாஸாக்ஷிக யௌவநம் யுவாநம். 8.

அடியற்று வீழ மரமொற் றிரண்டி னடுவுற்ற வொத்த னருளின்
படியே யளைந்த புனலே கிளர்ந்த புகழேவளர்ந்த படிவம்
முடிகோடி கொண்டு மெழுவேத மின்று மடிதேட நின்ற முதல்வன்
முடிசூடி நன்று மதுசூத னென்றன் முந்தூது சந்த மெழுவான் 8.

[ இளமைப் பருவம் நீங்காத போதே இரண்டு பெரிய மருத மரங்களை அவலீலையாகக் கீழ்த்தள்ளிய அதிமாநுஷ சேஷ்டிதங் களைக் காட்டியவனும், யமுனை யாற்றிலே குதித்துக் கோகுலத்தவர் வாழ்த்த தன் இளமையிலே அசகாய சூரனாக இருந்தவனும் , வேதவேதாந்தங்களும் தேடியும் அகப்படாத அரிய பெரிய சிறப்புக்களை உடையவனுமான பால கிருஷ்ணனை அடியேன் பிரதி தினம் கிட்டித் தொழுகின்றேன்.]


பதவீ மதவீ யஸீம் விமுக்தே
ரடவீ ஸம்பத மம்புவாஹ யந்தீம்
அருணாதர ஸாபி லாஷ வம்சாம்
கருணாம் காரண மாநுஷீம் பஜாமி. 9.

சேரிரு ளடவிச் செல்வம் செழுமுகிற் கருமை சாறச்
சீரியர் நாடி நண்ணும் வீடியல் வழி தழைப்ப
ஆரருள் சுரக்கு நீதி யறநிறக் கரிய கோலக்
காரணக் குழவிக் கண்ணன் குழலிதழ் குழைய நின்றான். 9.

[ அகிலலோக நாதன் மநுஷ்யாவதாரம் எடுத்து வனத்திலே கடல் நீரைப்போலும் கருமையான திருமேனியோடு விளையாடிக்கொண்டும், அனைவரும் இன்பமடையத் தனது அழகிய திருவாயினிடத்தே முரளியென்னும் திருநாமத்தையுடைய வேய்ங்குழலை வைத்துக் கானம் செய்துகொண்டும், தானே மோக்ஷ வீடளிக்கும் முழுமுதல்வனான வனென்பதைக் காட்டிக் கொண்டிராநிற்கும் கண்ணபிரானைத் தியானிக்கின்றேன்]

அநிமேஷ நிஷேவணீய மக்ஷ்ணோ
ரஜஹத் யௌவந மாவிரஸ்து சித்தே
கலஹாயித குந்தனம் கலாபை :
கரணோத் மாதக விப்ரமம் மஹோமே. 10.

அலகிலா வெழில் குலாவும் அளகமீ தெழு கலாபக்
கலைகளார் மறை கொள் மேகப் போகனென் மோகனாகி
நலமுறுங் கலவி யூறுங் கண்ணிணைக் கிமையாக் காட்சி
இலகவே தந்த சோதி யென்மனம் கோயில் கொண்டான். 10.

[ இந்திரியாதிகட்கெல்லாம் ஸதாபரம ஆஹ்லாதத்தையே அருள் புரிபவனும், வைத்தகண்ணை வாங்காமலும், இமைகொட்டாமலும், சேவிக்கத்தக்க பேரெழிலையுடையவனும், என்றும் ஒரு நிலையான யௌவனப் பொலிவுடனே இருப்பவனும், மயிலின் தோகையோடு மாறுகொண்டு விளங்கா நின்ற கேசத்தை யுடையவனுமான கண்ணபிரான் அடியேனது மனத்தே வந்து பிரகாசிக்கப் பிரார்த்திக்கின்றேன்.]

அநுயாயி மநோஜ்ஞ வம்ச நாளை:
அவதுஸ்பர்சித வல்லவீ விமோஹை:
அநகஸ்மித சீதளைரஸௌமாம்
அநுகம்பாஸரிதம் புஜை ரபாங்கை: 11.

குளிதரும் குடவர்காமக் கடல்தரும் குழலினாளப்
பனிதரும் புகழின்வாய்மைக் களிதரும் முறுவன் மின்னத்
தனதருண் மழையினோடைத் தழைவிழிப் பதுமச் செல்வத்
தினிதரும் தருமவண்ணக் கண்ணனே தருவனின்பம். 11.

[ ஸ்ரீ கண்ணபிரான், தனது திருவதரத்தில் அழகாக வைத்திருக்கப்பட்ட வேய்ங்குழலோசையினாலே பின்னே போக்கப்பட்ட ஆநிரைகளைச் சேர்க்கப்படும் நாதத்தைச் செய்பவனாகியும், அவ்வினிய நாதத்தாலேயே ஆயர்குல மகளிராகிய கோபிகை களுக்குப் பெரியதொரு வியாமோகத்தை யுண்டுபண்ணுவதாகச் செய்பவனாகியும், தன் புன்னகையினாலேயே சகல ஆன்மாக்களையுங் குளிரச் செய்பவனாயும், கருணையாகிய நதியினிடத்திலே இரண்டு தாமரைகள் விகஸித்தாற்போல விளங்கும் திருக்கண்களையுடைய கண்ணபிரான், தமது கடைக் கண்ணினால் அடியேனை ரக்ஷித்தருளக் கடவன்]



அதராஹித சாருவம்ச நாளா:
மகுடாலம்பி மயூரபிஞ்ச மாலா :
ஹரிநீல சிலாவிபங்க நீலா:
ப்ரதிபாஸ் ஸந்து மமாந்திம ப்ரயாணே. 12

புகழிதழ் புரிய நாளக் குழல்தழைத் தெழுக லாபம்
மகிழ்தரும் குஞ்சி கொஞ்சும் மஞ்சுலாங் குடைநி ழற்ற
முகிழ்கொண்மா மணிகொ ழிக்கு மிந்திர நீல முத்தம்
திகழுமிவ் வழகின் வண்ணம் திகழ்கவென் னினைவி லந்நாள். 12.

[ ஸ்ரீகண்ணபிரான் தனது திருவதரத்திலே இடத்தோளோடு சாய்த்து இருகைகூடப் புருவம் நெறித்தேற குடவயிறுபட வைத்து ஊதும் புல்லாங்குழலோடு பொலியுஞ் சேவையும், கிரீடத்திலே தொங்குகின்ற கருங்கண் தோகை மயிற்பீலியோடும், இந்திர நீலக்கல்லை யொத்து கருமையோடு விளங்காநின்ற தேஜோமயமான ஞானஸ்வரூபாதிகள் எனது சிரமதசையிலே வந்து என்னைக் கிருதார்த்தனாக்கப் பிரார்த்திக்கின்றேன்.]

அகிலா நவலோகயாமி காலாந்
மஹிளாதீத புஜாந்தர ஸ்யயூந:
அபிலாஷ பதம் வ்ரஜாங்க நாநாம்
அபிலாபக்ரம தூரமாபிரூப்யம் 13


கழிபெருந் திருவின் கற்பே களிநடம் புரியு மார்வின்
மொழிகடந் தொளி மிளிர்ந் தோங் கனிதரு மழகின் மேனி
எழுகடற் காம வாயர் சிறுமியர்க் கொரும யக்காம்
முழுநலக் கொழுந னாளும் மகிழ்வனென் மனத்தி னுள்ளே. 13.

[ அலகிலா அருள் பூண்ட உருக்குமணிப் பிராட்டியினாலே அன்புடன் ஆலிங்கனம் செய்யப் பெற்ற திருமார்பினையுடைய வராகியும், ஆயர்பாடியில் வசித்துவரும் கோபிகா ஸ்த்ரீகளின் பேராவலுக்கிடமாக விருப்பவராகியும், இவ்வண்ணத்தன், இத்தகையன், இப்பெற்றியுடையான் என்பதை வருணித்துக் கூறுவதற்கு இயலாதவனான கண்ணபிரானது திவ்ய ஸௌந்தரியாதிகளை எக்காலும் நினைந்து நினைந்து தொழுகின்றேன்.]
ஹ்ருதிமுக்த சிகண்ட மண்டநோ
லிகித : கேந மமைஷ சில்பிநா
மதநாதூர வல்லவாங்கநா
வதநாம் போஜ திவாகரோயுவா 14

வீங்கு னங்கர் பூஞ்சரங்கள் பெய்யு முல்லை மெல்லியார்
ஏங்கு கஞ்ச வாண் முகர்க் கிரங்குமா யிரங் கரம்
தாங்கு சோதி யோங்கு பிஞ்ச மாந்து குஞ்சி யஞ்சனன்
தேங்க வென் னுளத்தி லிங்கு சித்தி ரித்த சிற்பியார்? 14

[மனதிற்கு மிகவும் இனிமை தரும்படியான அழகு வாய்ந்த மயிற்கண் தோகையைத் திருவாபரணமாய்ப் பூண்டு விளங்கு பவனும் மன்மதன் விரகத்தாலே தபித்துக் கொண்டிருக்கும் ஆயர் பெண்களின் முகமாகிய தாமரை மலரை விகஸிக்கச் செய்கின்ற சூரியனாக விளங்குபவனும், யௌவன பருவமுள்ளவனும், ஆகிய எந்த ரூபலாவண்யமுள்ள புருஷச் சிரேஷ்டன் என் மனத்திலே இருக்கின்றானோ அவ்வுத்தம புருஷனை என் இருதயத்திலே எழுதின சிற்பி தான் யாரோ?]

மஹஸே மஹிதாய மௌளிநா
விநதே நாஞ்சலி மஞ்ஜநத்விஷே
கலயாமி விமுக்த வல்லவீ
வலயாபாஷித மஞ்ஜுவேணவே. 15

விஞ்சு காதன் மஞ்சொலித் தொடிக் கிசைந்த வின்குழல்
கொஞ்சு வாய் மலர்ந்த தஞ்ச வஞ்சனக் கொழுந்தினுக்
கஞ்சி யென் தலைத்தரைப் படப்பணிந் தருள் கொளும்
அஞ்சலிக் கரங் குவித் தடிக் கிடப்ப னாளுமே. 15

[அதிக தேஜோவானாகியும், அஞ்சனத்தையொத்த இருண்ட திருமேனியை யுடையவனாகியும், நாணத்தையே தங்களது உயிராகக் கொண்டவர்களான கோபிகாஸ்த்ரீகளின் கையிலே எவ்வாறு சப்திக்குமோ அவ்வாறு இனிமையாகச் சப்திக்கும் வேய்ங்குழலையுடையவனாகியும், காலபரிச்சேதமில்லாமல் எக்காலத்தும் எல்லோராலேயும் போற்றிப்புகழப் பெற்றவனாகியும், ஸர்வ ஜகத்காரணபூதனான கண்ணபிரானைச் சிரத்தினாலே வணங்குகின்றேன்.]

ஜயதிலளிதவ்ருத்திம் சிக்ஷிதோ வல்லவீனாம்
சிதிலவலயசிஞ்சா சீதளைர் ஹஸ்ததாளை
அகில புவநரக்ஷா கோபவே ஷஸ்யவிஷ்ணோ:
அதர மணிஸுதாயா மம்சவாந் வம்சநாள: 16

தொடத்தரு மணித் தொடி யிழைத் தொளி குழைப்ப
இடத்திரு கரத் துறு சதித் திரு திருத்த
இடைத்திரு வுடைத் தனி யிறைத்திரு விதழ்த் தேன்
குடித்தெழு மொலிப் புகழ் மணிக் குழல் துதிப்பாம். 16.

[ கண்ணபிரான் மேலே கொண்டுள்ள ப்ரேமாதிசயத்தினாலே, அதனைக் கிட்டப் பெறாமையாலே நழுவுகின்ற கைவளையல்களின் ஓசையால், சீதளத்தை யடைந்தவர்களான கோபிமாதர்கள் ஒன்றாகச் சேர்ந்து கரத்தாலே தாளங்களைப் போட்டுக்கொண்டு பாடுகின்ற பாட்டினுடைய நடையினையே பின்பற்றுவதுபோல, ஸர்வ லோகங்களையும் காத்து ரக்ஷிக்க வேண்டுமென்றே மானிடவுருவமாகத் திருவவதாரமெடுத்துள்ள கண்ணபிரானின் திருவதரத்திலே பொருந்திப் பொலியும் வேய்ங்குழல் இனிய வோசையைச் செய்ய நின்று மேன்மை பெற்றது.]

சித்ராகல்பச் ச்ரவஸிகலயன் லாங்கலீ கர்ணபூரம்
பர்ஹோத் தம்ஸஸ் புரிதசிகுரோ பந்துஜீவந்ததாந:
குஞ்ஜா பத்தா முரஸிலளிதாம் தாரயந் ஹாரயஷ்டிம்
கோபஸ்த்ரீணாம் ஜயதிகிதவ : கோபிகௌமாரஹாரீ: 17.

சித்திரப் பூணின் சேர்த்தி திகழ் செவிப் பூவின் செல்வி
மைத்திரு முடியின் சோதி மழைத் தடக் கூந்தற் காந்தி
புத்தெழிற் பந்து சீவம் கொஞ்சு மோர் குஞ்ச மாலை
ஒத்திள மடவா ருள்ளக் கள்வ னார் வெற்றி போற்றி. 17

[ விசித்திரமான சதங்கைகள் கொஞ்சிடத் தமனியத் தண்டைகள் ஒளிரப் பதம் பொருந்திய பரிபுரம் பண்ணிசை பரப்ப வெழுகின்ற வலங்காராதிகளுடனும், காதுகளில் தென்னங்குருத்துக்களால் வளையப்பட்ட காதணிகள் அசைந்தசைந்து உலவிக்கொண்டும், மயிலினது தோகைகளினால் அலங்கரித்துத் தொங்கும் தலைமயிரில் சிவந்துள்ளதான செம்பருத்திக் பூவைச் சொருகிக்கொண்டும், மார்பிலே குன்ற மணிகளினாலாகிய மாலையை வனமாலைபோலே தரித்து, கோகுல மாதர்களின் யௌவன பருவத்தைக் கவர்ந்து, அவ்ர்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் ஒப்பற்ற பரமபுருடன் ஒருவன் விளங்குகின்றான்.]
லீலாயஷ்டிம் கரகிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தந்யாம்
அம்ஸேதவ்யா: புளகருசிரே ஸன்னிவிஷ்டாந் யபாஹு:
மேகச்யாமோ ஜயதிலளிதோ மேகலாதத்தவேணு:
குஞ்ஜாபீட ஸ்புரிதசிகுரோ கோபகந்யா புஜங்க: 18

வலக்கரம் பிடிக்க வோர்கோ லிடக்கரம் வளைக்க வாங்கே
விலக்கறக் களிபுடைத்தா யிளையர் தோள் புளகம் பூக்கக்
கலக்கவே தலையிற் குஞ்சம் கனகமே கலையின் மூங்கில்
குலக்கரும் பெனப்பு லம்பும் கன்னிமார் கன்னல் வாழி. 18

[கோகுலத்து மாதர்களின் வியாஜ நாயகனாகிய கண்ணபிரான் தனது திருக்கரத்தில் சுகிர்தம் பெற்றுள்ளதான கோலை விளையாட்டின் நிமித்தமாக வைத்துக்கொண்டவனாகியும், தன்னிடம் அன்புமிகுந்த ஒரு நாயகியின் தலைமயிரானது செறிந்து அவிழ்ந்து தோளில் தொங்கிக்கொண்டிருக்க, அதனைக் கோதி முடிக்க அபிலாஷை கொண்டுள்ளவனைப்போலத் தனது மற்றொரு கரத்தை அவளது தோளின்மேல் வைத்துக்கொண்டு மிக்க சோபையோடு தனது செவ்வாயினிடத்தே புள்ளாங்குழலை வைத்துக்கொண்டும், குருவிந்தமலர்களினாலே அலங்காரமாகத் தொடுக்கப்பட்டதைத் தலையிலே வைத்துக்கொண்டும் நீலநிற மேகத்தின் நிறத்தை யொத்துப் பிரகாசிப்பவனாக விளங்குகின்றான்.]

ப்ரத்யாலீட ஸ்திதிமுபகதாம்
ப்ராப்த காடாங்கபாளிம்
பச்சாதீஷத் மினிதநயனாம்
ப்ரேயஸீம் ப்ரேக்ஷமாண:
பஸ்த்ராயந்த்ர ப்ரணிஹிதகரோ
பக்த ஜீவாதுரவ்யாத்
வாரிக்ரீடா நிபிடவஸநோ
வல்ல வீவல்லபோந: 19.

இலகு தோள் வலவ னார்ப்பப்
பிரத்தி யாலீடம் நின்றே
கலை விளங் களி குழிக்கும்
கணை விழி காணும் கண்ணன்
குல விளங் குமரிகட் காங்
கரத் திருத் துருத்தி பெய்யும்
மலி புகழ்த் துகின னைத்தே
மகிழ்வ னோர் பத்த ராவி. 19

[ தன்னிடம் அன்புகொண்டுள்ளவர்களாகிய பக்தர்களைக் காப்பதே கடமையாகக் கொண்டவனும், நீர்விளையாட்டால் நனைந்த வஸ்திரத்தை அரையிலே உடுத்திக்கொண்டு, வில்லாளிகளைப்போல் வலக்காலை முன்னே வைத்து இடக்காலை மண்டலித்துக்கொண்டு நின்று, தன்னைப் பரிவோடு அணைந்த இன்பத்தினாலே கண்களக் கொஞ்சம் மூடியும் திறந்தும், எதிரிலுள்ள நாயகியைக் கண்டு தோலாற் செய்த பீச்சாங்குழலைக் கையிலெடுத்து விளையாடல் புரியும் கண்ணபிரான் நம்மைக் காத்தருள் செய்யக் கடவன்.]

வாஸோ ஹ்ருத்வா திநகரஸுதா ஸந்நிதௌ வல்ல வீநாம்
லீலாஸ்மேரோ ஜயதிலளிதா மாஸ்தித : குந்தசாகாம்
ஸவ்ரீளாபிஸ் ததநுவஸநே தாபிரப் யர்த்யமாநே
காமீகச்சித் கரகமலயோ : அஞ்சலிம் யாசமாந : 20.

வந்து நீரளைந்த மாதர் கூறை வாரி யேறியோர்
குந்த மீது மந்த காச முந்து மா முகுந்தனே
தந்த நாண முந்துவா ணுதற் றுகில் பிதற்றவே
முந்தியஞ் சலிக்க ரங்கள் கெஞ்சு தஞ்சன் வாழியே. 20

[ விஷம்படு நாகத்தை வால்பற்றி யீர்த்த கண்ணன் யமுனையாற்றின் கரையில், நீர்விளையாட்டிலே மூழ்கிக்கிடக்கும் கோபியர்களின் ஆடைகளனைத்தினையும் கவர்ந்துகொண்டும், புன்னகை செய்துகொண்டு தழைத்துக் கிளைத்த குருந்த மரத்தின் கிளையின் மேல் ஏறிக்கொண்டு நிற்கவும், அப்போது நாணமே உயிரினும் மேம்பட்டதென்று நினைக்கும் ஆயர் குல மகளிர்கள் ஒன்றுந்தோன்றாதவர்களாய், இவரிடம் ஆடைகளை யாசித்துப் பெறுவதே தகுதியெனத் தனது மலர்புரையுங் கையை மேலே தூக்கிச் சேவிக்க மனமகிழ்ந்தவனே ஜகத்காரணப்பொருளாகப் பிரகாசிக்கின்றான்.]


இத்யநந்ய மநஸாவி நிர்மிதாம்
வேங்கடேச கவிநா ஸ்துதிம்படந்
திவ்யவேணு ரஸிகம் ஸமீக்ஷதே
தைவதம் கிமபி யௌவத ப்ரியம். 21.

என்றிதோர் பக்க நோக்கில்
லாதவன் பாத மோதும்
வென்றிசால் வேங்க டேசன்
வழுத்துமிவ் விருத்தம் பாடி
நின்றவர் குழல் குலாவு
மாயமா நேய மாலை
நன்றுவாழ் வுறுவர் நாளும்
கண்ணிணை களிக்கக் கண்டே 21.

[இவ்விதமாகக் கூறிவந்த சரிதஸாகரத்தில் அமிழ்ந்து ஒரே மனநிலையுடையவராகி, திருவேங்கடநாதனது கண்டையே வேங்கடேச கவியென்னும் பெயரோடும் வேதாந்த தேசிகன் என்னும் திருநாமத்தோடும் தோன்றிய கவிதார்க்கிக சிம்மத்தினாலே செய்யப்பெற்ற இந்த கோபாலவிம்சதி யென்னும் இருபது சுலோகத்தாலாகிய பிரபந்தத்தைப் படிக்கின்றவர், வேய்ங்குழலிசை செய்து மகிழுபவனும் கோபியர்களின் மேல் அளவுகடந்த அன்பினை வைத்துள்ளவனுமாகிய ஒரு பரபிரஹ்ம மூர்த்தியின் கிருபைக்குத் தட்டில்லாமல் பாத்திரமாகின்றார்.]


இது 16-11-1952ல் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தின் 39வது வெளியீடாக மலர்ந்துள்ளது.

ஞாயிறு, 10 ஜூன், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

                       தரு--- இராகம்---பூரிகல்யாணி தாளம் --ஆதி


                                                 பல்லவி

தெள்ளியார் வணங்குமலை—திருவேங்கடமலை

ஸ்ரீநிவாஸனுறைமலையே.

அனுபல்லவி

வெள்ளிநிறங்கொண்டபுள்ளிமானோடியாடித்

துள்ளிவேங்கைப்புலியைத்தள்ளியாடுமலை (தெள்ளி)

சரணங்கள்

விளங்கும்பிர்மாண்டத்திலொருபக்கத்திலுமிந்த

வேங்கடாத்ரிக்கு நிகரேது

வளங்கொண்டளவில்லாதசருவரத்தினமய

கிரிமண்டலத்தில்புண்ணிய ஸ்தலமீது

களங்கமில்லாஸ்வயம்புஐந்துபனிடபரூப

வேங்கடபூதரமென் றெங்குமோது

உளங்கொண்டபிரிதிநாராயணர்க்கிந்தமலை

யுன்னதப்பிரஸன்னமிகுசொன்னமுயர்நன்னளினம் (தெள்ளி)

பாற்கடல்வைகுந் தமிரவிமண்டலமத்தி

பகருமிந்தமூன்றெனுந் தானம்


பார்க்கிலதிகமெங்களலர்மேன்மங்கைரமண

பரமபுருஷர்க்கு நிதானம்

தீர்க்கமிதுவாமென்றேயாழ்வார்கள்பாடல்பெற்ற

திவ்யதேசம்விளங்கும் விமானம்

ஏற்குங்கோனேரித்தீர்த்தமகிமையுமதின்தென்பா

லெந்தாதைவைகுந்தாதிபனந்தாவிலாசந்தானிது (தெள்ளி)

கலியுகத்தினிலிந்தவுலகந்தனிலேயார்க்குங்

கண்கண்டதெய்வமாக நின்றே

வலியடிமைகொண்டுவினையெல்லாந்தீர்த்துமவர்

மனதபீஷ்டந்தருவ தொன்றே


பலவும்வேங்கடத்தாய்நால்வேதப்பண்ணகத்தாயென்று

பரமபத்தர்பாடினா ரென்றே

சொலவும்பூமகளுடன்கூடிக்கண்னன்வளருஞ்

சுந்தரமிகுந்துபலகிரந்தமறையிந்தமலை (தெள்ளி)


விருத்தம்

திசைதிசையின்வேதியர்கள்சென்றிறைஞ்சுந்

திருவேங்கடத்தானேதெய்வமென்றே

அசையாதாராதனஞ்செய்திருந்தாரெங்க

ளநந்தாசாரியரிப்பால்வேங்கடேசன்

உசிதமாந்தரிசனத்தின்விரோதமெல்லா

மொழிப்பதுநாவுடையரலாகவேண்டி

இசையுள்ளதிருமணியாழ்வானையிப்ப

டிச்செய்தாரவதரிப்பிக்கச்செய்தாரே.

கலிநிலைத்துறை

திருவாழிதிருச்சங்கைத்தொண்டமான்

சக்கரவர்த்திக்கீந்தேயச்சத்

துருவெல்லாந்துடைத்ததுபோல்வேங்க

டேசனம்மநந்தசூரிபாலே

அருள்செய்துதிருமணியாழ்வாரை

யவதரிப்பிக்கவன்பாயெண்ணி

யொருநாளிராத்திரிச்சொப்பனத்தி

லெழுந்தருளியதும்யோகந்தானே.

தரு---இராகம்-மத்தியமாவதி---தாளம்—ஆதி

பல்லவி

மனந்தனில்மறவேனே – மகிமையை

மனந்தனில்மறவேனே.

அனுபல்லவி

மனந்தனில்மறவாதவநந்தாசாரியர்தஞ்சொப்

பனந்தனிலெழுந்தருளி நந்தநந்தனர்வந்தார் (மன)

சரணங்கள்

நீர்நம்மைத்திருவடி தொழவாருமலைமேலே

நிறைந்தகிருபைசெய்தும்மை யாள்கிறோம்பரிவாலே

சேர்வைதந்துசந்தானந் தருவோமென்றதினாலே

தெளிந்தநந்தாசாரியருந்தேவிகட்குச்சொன்னதாலே (மன)

தம்பதியிவர்கள்தாமே நலமாஞ்சொப்பனம்பண்டு

தரிசனத்தையனுசந்தித் திருந்தாரன்புகொண்டு

எம்பெருமானந்த இரவினிற்கண்முன்கண்டு

இவர்கட்கருள்செய்தாப்போ லெவர்களிடத்திலுண்டு (மன)

அதிசயமிதுவென்று பெருங்கூட்டத்துடன்கூடி

அநந்தாசார்யருந்தேவிகளு மன்பாகநாடி

பதியென்னுந்திருமலைக் கெழுந்தருளிகொண்டாடி

பண்பார்ஸ்ரீநிவாசனைப் பணிந்தவகையைப்பாடி (மன)

விருத்தம்

திறமைசேரநந்தாசாரியர்க்குந்தோதா

தேவிகட்குஞ்சொப்பனத்தில்வேங்கடேசன்

சிறுபிள்ளையாய்கோயினின்றும்வந்து

தெவனையீர்நம்மைநிகர்புத்திரன்றன்னை

உறுதியாயுங்களுக்குத்தந்தோமிந்த

வுயர்ந்ததிருமணியைக்கைக்கொள்வீரென்ன

மறைவல்லோர்திருமணியையிருகையேந்தி

வாங்கினாரற்புதமெய்ப்பாங்கினாரே.

இதுவுமது

திருமணியாழ்வாரையிவர்கையில்வாங்கித்

தேவிகள்கையிற்கொடுக்கவவரும்வாங்கி

யொருமையாய்நிற்கிறபோதிந்தப்பிள்ளை

யும்மணியைவிழுங்கெனவேவிழுங்கக்கண்டார்

இருவர்களுமிப்படிக்கேகண்டதாக

விசைந்துமனதன்புடனேயுற்றார்கட்கே

அருமையெல்லாமருள்செய்தார்வேங்கடேச

ராட்கொண்டார்நல்லதிருநாட்கொண்டாரே.

வியாழன், 31 மே, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

தரு - இராகம் - சங்கராபரணம் - தாளம் - சாப்பு.
பல்லவி.

உதயஞ்செய்தனரே - அநந்தசூரிய - ருதயஞ்செய்தனரே
அனுபல்லவி.
உதயஞ்செய்துகச்சிவ - ரதர் தந்தகிருபைகொண்டுன்
னதபுண்டரீகாக்ஷ தீக்ஷீதர்தந்தசுகுமாரர் (உதயம் )
சரணங்கள்.
க. தாதைசெய்தசோம யாகத்தின்பலனே
தழைக்குங்கச்சிவரதர் தருங்கிருபைநலனே
மேதினிதனிலெங்கும் வேதமானதுவிளங்கி
நீதிசாரமிதுவென்றே க்யாதியறிந்திடவே (உத)
உ.ஜொலிக்குங்காந்தியுள்ள சுகிருதஞ்செய்தேகஞ்
சுபக்கிரக பலமிக்க குருசந்திரயோகம்
பலிக்குமவரெங்கும்பிர பலிக்கும் வரதரையஞ்
சலிக்குந் திருக்கையாளர் கலிக்குப்புதுமையாக (உத)
ங சுருதிதன்னிலேபாரங் கதராகினரே
தொடுத்தெல்லாஞ்சித்தாந் தரீதியறிந்தனரே
குருகுல வாசமது உரிமையாகவேசெய்து
பிரமசாரிவிரத மருவினவருமிங்கே (உத)


விருத்தம்
இப்படியேசித்தாந்தரீதியெல்லாம்
இசையநந்தாசாரியர்க்குத்தந்தையானார்
செப்பமாங்கிடாம்பிபத்மநாபரென்னும்
ஸ்ரீரங்கவப்புள்ளார் குமாரியாகி
அப்புள்ளார்தங்கையுமாய்வந்ததோ தா
ரம்மாளையேதிருக்கலியாணந்தான்செய்து
வைப்பவேததர்மபத்னியுடனேகூடி
வருகின்றார்வரதரருள் பெறுகின்றாரே.

கலிநிலைத்துறை
பண்கண்டேயறிவதற்குமரியராய்ப் பத்தபராதீனமாகி
விண்கண்டதேவர்கட்குந்தேவரா மிவரெனவேவேங்கடத்துட்
டண்கண்ட கோனேரித்தென்கரைமேற் கலியுகத்திற்சகலபேற்குங்
கண்கண்டதெய்வமென்றே வேங்கடாசலபதியைகருதுவாரால்
.


The commentary on "NYASA TILAKAM" is available at http://rajamragu.spaces.live.com

ஞாயிறு, 29 ஏப்ரல், 2007

NYASA TILAKAM OF VEDANTA DESIKA

NYASA TILAKAM OF VEDANTA DESIKA
commentary by
SRI D.RAMASWAMY IYENGAR

ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

श्रिमान् वॆङ्कदनाथार्य कविथार्किक कॆसरि
वॆदान्हाचार्यवर्यॊ मॆ शन्निधत्तां सदा ह्रुथि
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்கிக கேசரி
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

We utter the word நம: (Namaha) (in the Vedic manner) i.e., as we recite the Veda, in respect of our own Acharyas and their Acharyas. And therein, i.e., in the Guruparampara, we also worship and choose as our protector the Divine Couple, the Rulers of the worlds who are first and foremost among them, the Acharyas.

Introductory: Nyasa Tilakam is at once a treatise on Nyasa or Prapatti, and a stotra (hymn) in praise of Lord Sri Ranganatha of Srirangam. As a treatise on Nyasa it is supplementary and complimentary to the other stotras on the same topic, like Nyasa Dasakam, Nyasa Vimsati, Saranagati Deepika etc. As a stotra of Lord Ranganatha this is in addition to Bhagavat-dhyana-sopanam and Abheeti-stava, two other hymns in praise of the same Lord. It contains 32 slokas, 32 being a very favourite number with Swami Desika, probably because it is the number of the Brahma-Vidyas to be culled from the Upanishads. Nyasa being one of them. The slokas of this stotra are in various metres, starting from Anushtup of 8 syllables to aquarter, and going up to Sraghdhara of 21 syllables.

The name Nyasa Tilaka is given to this stotra by Desika himself (sloka 32). It is an indication that thepoet himself regards this as a master-treatise on Nyasa. Tilakam is a shining jewel worn on the face. It lends beauty and lustre to the face. Sri Vaishnavites wear this tilaka as an oordhva-pundra (vertical pundra) Lord Ranganatha and all the Emperumans in Srivaishnavite shrines wear ஊர்த்வ புண்ட்ர திலகம். Parasara Bhattar sings of கஸ்தூரி கவித ஊர்த்வ புண்ட்ர திலகம் on Sri Ranganatha's face. His great father Koorathalwan asks Lord Varadaraja of Kanchi if He wears the ஊர்த்வ புண்ட்ர திலகம் out of His regard for it as it signifies the power to uplift devotees. The importance of this stotra is further enhanced by the fact that Swamy Desika's illustrious son, Kumara Varadacharya, has furnished this stotra alone (out of the 28) with a commentary.

It is therefore up to us all to study this stotra in all reverance and respect in addition of course to enjoying its poetic, philosophic and mystic beauties.

SLOKA 1
गुरुभ्यस्तद्जुरुभ्यच्च नमॊवाकमधीमहॆ
वृणिमहॆ च तत्त्राध्यौ द्म्पती जगतां पती

To be continued