சனி, 31 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்கரஹம் 7

 இந்தப் பதிவை ஜனவரி 23 அன்று பதிவிட்ட பதிவின் தொடர்ச்சியாகக் கருதிப் படிக்க வேண்டுகிறேன்.

बन्धमोक्षनिरूपणम्
பந்தமோக்ஷநிரூபணம்
*
    இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே. இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தில் அதன் ஸமீபத்தில் வைக்கப்பட்ட செம்பரத்தம்பூவின் சிவப்புத் தோன்றுவதுபோல, இந்த ஜீவனுக்கு *உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

*उपाधि –– உபாதி-- ப்ரதிபலனத்திற்கு ஆதாரமாயிருப்பது.

   இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்த சுத்தி பிறக்கிறது. பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய், அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான். பிறகு குருவினுபதேசத்தால் 'தத்த்வமஸி' என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்தஜ்ஞானம் உண்டாகிறது. இந்த வாக்யத்தில் 'தத்' என்கிற பதத்துக்கு ஸச்சிதாநந்த ரூபமாய், ஸர்வவிகாரரஹிதமாய் அத்விதீயமான ப்ரஹ்மம் பொருள். த்வம் என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்திரியம் முதலிய #உபாதிகளோடு கலந்திருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள். இவையிரண்டுக்கும் +அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

#இங்கு உபாதி என்றால் தனக்கு ஸ்வபாவமாகவே இல்லாமல் நடுவில் வந்தவை என்று அர்த்தம்.

+அபேதம் -- பேதமின்மை

  இப்படி குரூபதேசத்தாலே பரோக்ஷரூபமான நிர்விசேஷசிந்மாத்ர ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானம் உண்டாகிறது. பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், 'தத் த்வமஸி' வாக்யத்தால் ஸாக்ஷாத்காரரூபமான முன்சொன்ன ஜ்ஞாநம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தை சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்துவிட்டாலும் சுழலுவது சிலகாலம் அநுவர்த்திக்கிறாப்போல இந்தக் கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்திரம் சிலகாலம் நிற்கிறது. இந்த நிலைமைதான் ஜீவன்முக்த்யவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு *ப்ராரப்தகர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்து விடுகிறது. இந்த நிலை +விதேஹமுக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம். அதாவது அவித்யாரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்மஸ்வரூபாவிர் பாவம். இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.
இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும், ஜீவ ப்ரஹ்மங்கள் அபின்னமென்றும் ஒப்புக் கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

பரோக்ஷரூபமான – கண் முதலிய இந்திரியங்களால் நாம் ஒரு விஷயத்தை அறியும்போது உண்டாகும் ஞானத்திற்கு ப்ரத்யக்ஷம் அல்லதுஅபரோக்ஷ ஞானம் என்று பெயர்.அநுமானம் அல்லது சாஸ்திரத்தினால் உண்டாவதற்கு பரோக்ஷஞானம் என்று பெயர்.

நிர்விசேஷ – ஒருவித குணமும் தர்மமுமற்றது.

சிந்மாத்ர –தானாகவே ப்ரகாசிக்கின்ற ஞான ஸ்வரூபமானது.

ப்ரஹ்மாத்மைக்யம் --ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்றே என்பது.

ப்ராரப்தகர்மம் -- பலத்தைக்கொடுக்க ஆரம்பித்த புண்ய பாபகர்மம்.

அகண்டாநந்த -- பூர்ண ஆனந்த ரூபமான

ஆவிர்பாவம் --மறைந்து இருந்த வஸ்துவினுடைய தோற்றம்.

அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக