புதன், 19 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 50

நூற்றிப் பத்தொன்பதாவது ஸர்க்கம்

[ராமன் பரமபதம் செல்லச் சித்தமானது.]

            இவ்வாறு லக்ஷ்மணனைத் துறந்த ராமன் துக்கம் மேலிட்டவனாகிப் புரோகிதர்களையும், மந்திரிகளையும் பார்த்து யான் இப்பொழுது மகாசூரனும் தர்மிஷ்டனுமான பரதனை அயோத்யாதிபதியாக அபிஷேகஞ்செய்து யான் மஹாப்ரஸ்தானமாய் காட்டிற்குச் செல்லுகின்றேன். அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கால தாமதமின்றி செய்க. லக்ஷ்மணன் சென்ற வழியே பற்றி யான் இப்போது செல்கின்றேன் என்றான். அது கேட்டு பரதன் துக்கம் அதிகரித்தவனாகி அரசாட்சியை இகழ்ந்து, ராமனைப் பார்த்து, “ரகுநந்தன! அடியேன் சத்யமாக ஆணையிட்டுக் கூறுகின்றேன். தேவரீரை விட்டுப் பிரிந்து அடியேனுக்கு சுவர்க்கலோகம் கிடைப்பினும் அதனை விரும்பவில்லை. அவ்வாறே தேவரீரின்றித் தனியே இவ் வரசாட்சியையும் விரும்பவில்லை. தேவரீருக்குத் திருவுள்ளமாயின் இந்தத் தெற்கேயுள்ள கோசல நாட்டில் ·குசனுக்கும் வடகோசலத்தில் லவனுக்கும் முடி சூட்டலாம். நாம் மஹாப்ரஸ்தானம் புறப்படுகின்ற வ்ருத்தாந்தத்தைச் சீக்கிரம் சத்ருக்னனுக்குத் தெரிவிப்போம் என்றள். பரதன் இவ்வாறு கூறியது கேட்டு பட்டணத்து ஜனங்களனைவரும் துன்பத்தினால் தவிப்புண்டவராகித் தலைசாய்த்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட வஸிஷ்ட மஹரிஷி ராமனைப் பார்த்து, “ராமா! இதோ தவித்துக் கொண்டு பூமியில் வீழ்ந்து கிடக்கின்ற இந்த ஜனங்களைப் பார்! நீ இவர்களின் மனதை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்,” என்று ப்ரார்த்திக்க ராமன் எல்லோரையும் எழுப்பி அவர்களைப் பார்த்து, 'யான்' உங்களுக்குச் செய்ய வேண்டியது எது' எனக் கேட்டான். ராமனது சொல் செவிப் பட்ட மாத்திரத்தில் எல்லா ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாகி “ஆண்டவனே! தேவரீருக்கு எங்களிடத்தில் அன்பும் அருளும் உண்டாகில் தேவரீர் செல்கின்ற நல்வழிக்கு நாங்கள் எல்லோரும், புத்திர, மித்திர, களத்திராதிகளுடன் கூட வருமாறு அருள் புரிக. ராமா! தேவரீர் எவ்விடத்திற்கு எழுந்தருளுகின்றதோ அந்த இடத்திற்கு நாங்களும் தேவரீரை விடாது பின்தொடர்ந்து வருகின்றோம்.” என ப்ரார்த்தித்தனர். பட்டணத்து ஜனங்களுடைய திடமான பக்தியை ராமன நன்கறிந்து அவ்வாறே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்து அன்றைய தினமே தனது புத்ரர்களுக்கு பட்டாபிஷேகம் செய்தான்.

            அப்பால் அவ்விருவர்களையும் மடி மீது உட்கார வைத்துக் கொண்டு அவர்களைக் கட்டி அணைத்து அடிக்கடி உச்சி முகர்ந்து போதிக்க வேண்டியவற்றை போதித்து பிறகு அவ்விருவர்க்கும் ஆயிரக்கணக்கான ரதங்களும் பத்தாயிரக்கணக்கான யானைகளும் கோடிக் கணக்கான குதிரைகளும், எண்ணற்ற ஐச்வர்யங்களும் அளித்து, துஷ்டியும், புஷ்டியும் அடைந்த ஜனங்களுடன் அவ்விரு ஸஹோதரர்களான குசலவரையும் அவரவருடைய நகரத்திற்கு அனுப்பினான். பிறகு ராமன் சத்ருக்னனிடம் சீக்கிரம் சென்று செய்தி கூறுமாறு தூதர்களை அனுப்பினான்.

நூற்றியிருபதாவது ஸர்க்கம்
[ஸ்ரீராமன் விபீஷணன் முதலியோருக்கு ஆஞ்ஞாபித்தல்]

            அவ்வாறே தூதர்கள் விரைவில் சென்று மூன்று தினங்களில் மதுராபுரி போய்ச் சேர்ந்து சத்ருக்னனைப் பார்த்து 'ராஜனே! ராமன் லக்ஷ்மணணைத் துறந்து விட்டான். பிரம்மலோகஞ் செல்வதாகக் கால புருஷனுக்கு வாக்களித்தான் குசனுக்கு விந்தியமலைக்கருகில் குசாவதி யென்னும் ஒரு நகரமும். லவனுக்கு சிராஸவதி யென்னும் சிறந்த பட்டணமும் நிருமித்து, அப்புரிகளிலிருந்து அரசு புரிந்து வருமாறு, அவர்களுக்கு நியமித்து, அயோத்யாபுரியில் எவருமில்லாதபடி அதனை சூன்யமாக்கி விட்டு ஸ்ரீராமனும், பரதனும் சுவர்க்க லோகஞ் செல்லச் சித்தமாயிருக்கின்றனர். தம்மைப் பின் தொடர்ந்து பட்டணத்து ஜனங்கள் எல்லோரும் வருமாறு ராமன் அனுமதியளித்திருக்கின்றார். ஆதலால் தேவரீர் காலதாமதஞ் செய்யாது அயோத்திக்கு எழுந்தருள்க” என்றனர். சத்ருக்னன் அது கேட்டுத் தனது குலம் க்ஷீணமாகுங் காலம் வந்தது எனத் தெரிந்து தனது மந்திரிகளையும், புரோகிதரான காஞ்சன முனிவரையும் வரவழைத்து, நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் அவரிடம் கூறித் தானும் தனது சேனைகளையும் செல்வங்களையும், அவ்விருவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்து சுபாகு மதுராபுரியிலும், சத்துருக்காதி வைதீச பட்டணத்திலுமிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறு கட்டளையிட்டுப் பிறகு தான் மட்டும் ஒற்றைத் தேரோடு புறப்பட்டு விரைவில் சென்று அயோத்தியை அடைந்து ராமனை வணங்கி, “எங்களாண்டவனே! அடியேன் நம் சிறுவர்களிருவருக்குமே ராஜ்ய பரிபாலனம் செய்து வருமாறு விதிப்படி முடி சூட்டி தேவரீர் திருவடி நிழலை யொற்றி வரச் சித்தமாகி இப்பொழுது இங்கு விடை கொண்டேன். யாதொன்றும் மறுத்துரையாது அடியேனது விண்ணப்பத்தை நிறைவேற்றும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்றான். ராமன் சத்ருக்னனது சலியாத திடமான பக்தியை அறிந்து ‘அப்பனே! அப்படியே யாகுக’ என்றான். அப்பொழுது இச் செய்தியைக் கேள்வியுற்ற எல்லாரும் ராக்ஷஸர்களும் வானரர்களும் முறையே தேவேந்திரனையும், விபீஷணனையும், சுக்ரீவனையும் முன்னிட்டுக் கொண்டு ராமனிடம் வந்து சேர்ந்தார்கள். வானரர்களும், ராக்ஷஸர்களும் ராமனைப் பார்த்து, ‘சுவாமி! தேவரீரைப் பின் தொடர்ந்து வர ஆயத்தமாகி நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம்.ஹே புருஷோத்தமா! எங்களை இங்கு தனியே விட்டுத் தேவரீர் மட்டும் எழுந்தருளுவதாயின் எங்களை யம தண்டத்திற்குக் காட்டிக் கொடுத்ததாகி விடும்’ என முறையிட்டுக் கொண்டனர். அப்பொழுது ராமன் சுக்ரீவனைப் பார்த்து “மித்ர! நான் கூறுவதைக் கேள். தேவலோகத்திற்காயினும், பரமபதத்திற்கே யாயினும் நான் உன்னை விட்டுப் போகிறவனில்லை’, என உறுதி மொழி கூறினான். பிறகு ராக்ஷஸ ராஜனான விபீஷணனைப் பார்த்து ‘விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதிதது வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான் பிறகு ராமன் மாருதியைப் பார்த்து “பவனதனய! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான். அப்பால் ஜாம்பவானையும் மைந்ததுவிவிதகர்களையும் பார்த்து ராமன் அவ்வாறே கூறினான். விபீஷணன் முதலான சிரஞ்சீவிகளாகிய இவ்வைவரையும் பார்த்துக் கலி வரும் சமயம் தமது புத்ர பௌத்ராதிகளைப் பாதுகாத்துக் கொண்டு இப்பூமியிலே வசித்திருக்குமாறு ராமன் உத்தரவிட்டு, மற்றவர்கள் எல்லோரையும் தன்னுடன் புறப்பட்டு வருமாறு அருள் புரிந்தான்.

நூற்றி இருபத்தியொன்றாவது ஸர்க்கம்

(எல்லோரும் ஸ்ரீராமனைப் பின் தொடர்ந்து சென்றது]

            மறுநாள் விடிந்தவளவில் ராமன் தன் புரோகிதரான வசிஷ்டரைப் பார்த்து “வாஜபேயத்தைப் பற்றிய வெண் கொற்றக் குடை யாம் செல்லும் ராஜ வழியிலே திகழ ப்ராஹ்மணர்களுடனே அக்னி ஹோத்ரம் ஜொலித்துக்கொண்டு முன்னே செல்க” என நியமித்தான். பிறகு வசிஷ்டரிஷி மஹாப்ரஸ்தானத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகள் யாவும் செய்து முடிக்க ஸ்ரீராமன் மெல்லிய பீதகவாடை சாத்திக் கொண்டு விரல்களில் தர்ப்பையிலான பவித்ரங்கள் விளங்க, பிரம்ம மந்த்ரத்தை வாய்வெருவிக் கொண்டு ஒருவருடனும் பேசாமல் தனது இந்திரியங்களனைத்தையம் மேயாமல் அடக்கித் திருவடிகளில் பாதுகைகளின்றியே உதயகிரியினின்று எழுகின்ற சூரியனைப் போல ப்ரகாசித்துக் கொண்டு தனது மாளிகையினின்றும் அழகாகப் புறப்பட்டான். ஸ்ரீராமன் பட்டணத்தை விட்டு எழுந்தருளுகையில் அவனது வலப் பக்கத்தில் பத்மமலர் கை கொண்ட மலர் மகளும், இடது பக்கத்தில் நிலமகளும் ஆகிய இருவரும் அடுத்துச் சென்றனர். அன்றியும் ஸங்கல்பம், பராக்ரமம், நானாவிதமான கணைகள் கார்முகம் எல்லாப் படைக்கலங்கள் பலவும் புருஷ ரூபங் கொண்டு கூடவே சென்றன. வேதங்கள் நான்கும் வேதியர் ரூபமெடுத்துப் போயின. பரிசுத்தமான காயத்ரீ மந்திரமும் ப்ரணவம், வஷட்காரம் முதலான வேறு பல மஹாமந்த்ரங்களும் காகுத்தனைப் பின் தொடர்ந்தன. மஹரிஷிகளும் ப்ராஹ்மணர்களும், பரமபதவாயில் திறக்கப்பட்டிருக்கிறதென்று உணர்ந்து ராமனுடன்சென்றனர். அந்தப்புரத்தின் த்வாரபாலர்களும், விருத்தர்களும், தாசிகளும். சேவகர்களும் எல்லா ஸ்த்ரீகளும், அலிகளும் (பேடிகளும்) பின் பற்றினர். பரத சத்ருக்னர்கள் ராமனையே தங்களுக்கு கதியாக நினைத்து அந்தப்புரத்துடனே காகுத்தனைத் தொடர்ந்தனர். பட்டணத்து மக்கள் எல்லோரும் ராமனைப் பின்பற்றினர். இவ்வாறு இராமன் ஸம்பந்தம் பெற்ற எல்லா ஸ்த்ரீ புமான்களும், பக்ஷி, பசு வாகனம் முதலிய சகல சராசங்களுடன் எல்லாப் பாபங்களும் நீங்கினவராகி பெரும் மகிழ்ச்சி கொண்டு ஸ்ரீராமனுடன் சென்றனர். அந்த சமயத்தில் அந்நாட்டில் கஷ்டமுள்ளவன் இல்லை. வெட்கமடைந்தவனுமில்லை. சகலமான பேர்களும் பேரானந்தக் கடலில் மூழ்கியிருந்தனர். ஸ்ரீராமன் பட்டணத்தை விட்டு எழுந்தருளுவதைப் பார்க்க வந்தவர் எவரோ அவர்களும் காகுத்தனைக் கண்டவளவில் மகிழ்ச்சி யடைந்தவராகிப் பரமபதஞ் செல்லப் பின்தொடரலாயினர். ஸ்ரீராமன் பரமபதமெழுந்தருளப் புறப்படுகையில் அயோத்யாபுரியில் ஒருவர் கண்ணிலும் தென்படாமல் மூலைமுடுக்குகளில் மறைந்திருந்த பூதங்களும், ஜங்கமஸ்தாவரங்களான எல்லா ஜீவன்களும் கூடவே புறப்பட்டுச் சென்றன அக்காலத்தில் அயோத்யாபுரியில் உயிருள்ள பொருள் ஒன்றேனும் ராமனைப் பின் தொடராது நிற்கவில்லை.

நூற்றியிருபத்தியிரண்டாவது ஸர்க்கம்

[காகுத்தனுடன் சென்ற எல்லா ஜீவன்களும் பரமபதம் பெற்றது.)

            இவ்வாறு ஸ்ரீராமன் அயோத்தியினின்றும் புறப்பட்டு மேற்கு முகமாய் அரை யோஜனை தூரம் எழுந்தருளி புண்ணிய நதியான ஸரயூ நதியை அடைந்தான். அப்பொழுது சதுர்முகன், எல்லா தேவதைகளும் தேவரிஷிகளும், கோடிக்கணக்கான தேவ விமானங்களும் புடை சூழ அங்கு வந்து ஆகாயத்தில் நின்று ராமனைப் பார்த்து ‘ரகு குல திலகனே! உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு. ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணின் அவதாரமான தேவரீர் இனி இவ்விண்ணுலகத்திற்கு எழுந்தருள்க. இனித் தம்பிமார்களுடன் கூடித் தம் தமக்குரிய ஸ்வபாவமான திருமேனியில் பிரவேசித்து அருள்க. வைஷ்ணவமான திருமேனியில் பிரவேசிக்கத் திருவுள்ளம் ஆயின் பிரவேசித்தருள்க. அல்லது நலமந்தம் இல்லதோர் நாட்டிற்கு நேரே எழுந்தருளத் திருவுள்ள மாயின் அப்படியே செய்தருளலாம். மனோ வாக்குகளுக்கு எட்டாதவரும். ஆதியந்தமில்லாதவரும் எல்லா உயிர்களையும் ஆதரித்து காப்பாற்றுபவரும் எங்கும் நிறைந்த பரம் பொருளும் நீரேயாதலின் எந்தத் திருமேனியில் ப்ரவேசிக்கத் திருவுள்ளமோ அதில் பிரவேசித்தருளலாம்” என்றார். காகுத்தன் திருவுள்ளத்தில் சற்று ஆராய்ந்து நன்கறிந்து தம்பிமார்களுடன் கூடித் தனது திருமேனியுடனே வைணவமான தனது சோதியில் கலந்து அருளினார். மஹா விஷ்ணுவினது மூர்த்தியில் ராமன் சேர்த்தியானது கண்டு எல்லா தேவதைகளும் அப்பெருமானை வணங்கி விசேஷமாகப் பூஜித்தனர். ஸ்ரீராமன் எழுந்தருளியவளவில் தேவலோகம் எல்லா பாபங்களுமொழிந்து நிர்மலமாகியது. அப்பொழுது விஷ்ணுதேவனது திருமேனியில் புகுந்த ராமன் நான்முகனைப் பார்த்து என்னிடத்து என்றும் இடைவிடாது அன்புள்ளவர்களாய் என்னைப் பிபைற்றி வந்திருக்கின்ற இந்த எல்லா மக்களும் புகுதற்கு மேலான உலகம் தருக” என்று கூற, சதுர்முகன் பகவானின் திருவுள்ளத்தை அறிந்து “சுவாமி! இவர்கள் ஸாந்தானிக மென்கிற உலகம் புகுந்து அங்கிருந்து நலமந்த மில்லதோர் நாட்டிற்போலவே பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.

            இவர்கள் மட்டுமேயன்றி பக்தி பண்ணுகின்றவைகளுமாகிய பசு, பக்ஷி முதலான திர்யக்குகளும் ப்ராணனை விட்டதால் ஸத்யலோகத்திற்கு மேற்பட்டதும் திரும்பி வருதல் இல்லாமை முதலிய பரமபதத்தின் பெருமைகள் பலவும் பெற்றுள்ள ஸாந்தானிக லோகம் சேர்ந்து பேரின்பம் பெறலாகும். வானர வீரர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு அதிகார தேவதையின் அம்சமே ஆதலால் எவரெவர் எந்த எந்தத் தேவதையின் அம்சமாய் அவதரித்தனரோ அவரவர் அந்தந்த தேவ சரீரத்தில் பிரவேசிக்கலாகும் என்றார். நான்முகன் இவ்வாறு கூறியதும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் சுக்ரீவன் சூரிய மண்டலத்தில் போய்ச் சேர்ந்தான். பிறகு அங்குள்ள ஜீவராசிகளும் சரயூ நதியில் கோப்ரதாரம் என்னும் துறையில் இறங்கி பெரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டு மூழ்கின. மானிடர்கள் மானிட சரீரமொழிந்து தேவ விமானத்தில் ஏறினர். பசு, பக்ஷி முதலான எல்லா ப்ராணிகளும் அந்த நதியில் நீராடியவுடன் மிகப் பிரகாசமான திவ்ய சரீரம் பெற்று தேவலோகத்தை யடைந்து தேவதைகள் ஆயின. எல்லா ராக்ஷஸ வானரர்களும் தம் தம் சரீரத்தை ஒழித்து சுவர்க்கம் புகுந்து தம் தம் பிதாவான தேவதைகளின் சரீரத்தில் சேர்ந்து போயினர். இவ்வாறு ஸ்ரீராமன் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் மிகச் சிறந்த மேலான நாட்டை யடையும்படி செய்து மகிழ்ச்சியுடன் முன் போல் எல்லாவற்றிலும், மூன்று லோகங்களிலும் வியாபித்திருக்கும் ஸ்ரீவிஷ்ணுவாகத் தன் லோகத்தில் எழுந்தருளினார்.

நூற்றி இருபத்தி மூன்றாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமாயண பாராயணத்தால் உண்டாகும் பலன்]

            இந்த ஸ்ரீராமாயணத்தை இப்பூலோகத்தவர் மட்டுமில்லாமல் தேவலோகத்திலுள்ள எல்லா தேவதைகளும், அதிகமான ஆதரத்துடன் அனுதினமும் கேட்டு மகிழ்ச்சி யடைகின்றனர். இந்த ராமாயண மென்னும் ஆதிகாவ்யமானது படிப்போர், கேட்போர் ஆதரிப்போர் ஆகிய எல்லோருக்கும் சகல பாபங்களையும் போக்கி ஆயுளும் ஐஸ்வர்யமும் அளிக்கவல்லது. வேதத்திற்குச் சமமான சிறப்புடைய இந்த ராம சரிதத்தை சிராத்த காலங்களில் அக்ஷ்ய பித்ரு திருப்தியின் பொருட்டு பித்ரு தேவதைகள் கேட்குமாறு படிக்கக் கடவர்கள், இந்த ராமாயணத்தில் ஒரு பாதம் படித்தாலும் புத்ரன் வேண்டுவோன் புத்திரனைப் பெறுவான பொருள் வேண்டுவோன் பொரும் அடைவான். அவன் செய்த பாபமனைத்தும் அழிந்து போகும். ஸ்ரீராமாயணத்தைப் படிப்பவருக்கு விசேஷமாக வஸ்த்ரமும், பசுவும் பொன்னும் அளித்தல் வேண்டும். ஸ்ரீராமாயணத்தைப் படிப்பவர் திருப்தி அடைவாராயின் சகல தேவதைகளும் திருப்தி அடைவார்கள். சகல சம்பத்தையும் கொடுப்பதான ஸ்ரீராமாயணத்தை கிரமமாகப் பாராயணஞ் செய்கின்ற புருஷன் இவ்வுலகில் புத்ர பௌத்ராதிகளுடனே கூடிப் பெருமை பெற்று வாழ்வது மட்டுமல்லாமல் மறுமையிலும் மோக்ஷத்தை யடைவான். தாசரதி திருநாட்டிற்கு எழுந்தருளிய பின் அயோத்யை பல வருஷ காலம் பாழாயிருந்து பிறகு குஷபன் என்பவன் ராஜாவாக வரும் காலத்து சிறப்பும் செல்வமும் பெற்று செழிப்புடைய நகரமாகும். என்று இவ்விதமாக ஸ்ரீராமாயணத்தை உத்தரகதையையும், பவிஷ்யத்கதையையும் சேர்த்துப் ப்ராசேதஸரான வால்மீகி பகவான் செய்து அருளினார். இதனை நான்முகன் பெருமையாகக் கொண்டாடி பிரதி தினம் படித்து வருகின்றார். இந்த ராமாயணத்தில் ஒரு ஸர்க்கமேனும் படிக்கக் கேட்பவன் கேட்ட மாத்திரத்தில் ஆயிரம் அசுவமேதமும், பதினாயிரம் வாஜபேயமும் செய்த பலனைப் பெறுகிறான். பிரயாகம் முதலான புண்ய தீர்த்தங்களிலும், கங்கை முதலிய புண்ய தீர்த்தங்கனிலும், நீராடினவனாகிறான். நைமிசாரணியம் குருக்ஷேத்ரம் முதலிய ஸ்தலங்களுக்கு யாத்ரை சென்றவனாகிறான். சூரிய க்ரஹண காலத்தில் குருக்ஷேத்ரத்தில் துலாபாரம் தானம் செய்பவனும் ஸ்ரீராமாயண பாராயணம் செய்யக் கேட்பவனும் ஒருவர்க்கொருவர் சமமானவர்களாம். இவ்விராமாயணம் முழுவதையும் சிரத்தையுடன் எவனொருவன் கேட்கிறானோ அவன் சகல பாபங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணு லோகத்திற்குச் செல்கிறான். பிராம்மணர் மூலமாகப் ப்ரதி தினமும் இந்த காவ்யத்தை கேட்குமாறு செய்து வரக் கடவர். இந்த ஸ்ரீராமாயணத்தை எவனொருவன் ஸம்பூர்ணமாகப் பாராயணஞ் செய்கின்றானோ அவன் தேகத்தை விடுங்காலத்தில் விஷ்ணு லோகம செல்கிருன என்பது ஸத்யம் (உண்மை). அவனும், பிதாவும், பாட்டனும், பிதாவுக்குப் பாட்டனும். இன்னும் அவருடைய தந்தைப் பாட்டன் முதலியவர்களும் விஷ்ணு லோகத்தை அடைகின்றனர். இதில் சிறிதும் ஸம்சயமில்லை. ஸ்ரீராமசரிதமானது எப்பொழுதும் அறம்,பொருள், இன்பம்,வீடு என்னும் நான்கு பேறுகளையும் கொடுக்கக் கூடியது ஆதலின் இதை ஒவ்வொருவரும் தினந்தோறும் படிக்கவாவது கேட்கவாவது வேண்டும். இதனைப் பூரண பக்தி, ச்ரத்தை விசுவாசங்களுடன் பாடிப் பாராயணஞ் செய்க. அவ்வாறு பாராயணம் செய்யும் உங்களுக்குப் பல்லாண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவினது திருவருள் மேன் மேலும் உயர்ந்தோங்கும்.

இவ்வாறு வால்மீகி முனிவர் செய்தருளிய உத்தர ஸ்ரீமத் ராமாயணம் முற்றும்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
            ந்யரய் யே ந மார்கேண மஹீம் மஹீசா:
|
கோ ப்ராம்மணோப்ய: சுபமஸ் நித்யம்
            லோகா ஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து||

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப் தயே |
சக்ரவர்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம் ||

சுபமஸ்து


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


பலர் படிக்காத ராமாயணக் கதைகள்
முற்றும்



திங்கள், 17 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 49

நூற்றிப் பதினைந்தாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமனிடம் பிரம்மதேவன் தூதனுப்பியது]

                ஸ்ரீராமபிரான் இவ்வண்ணம் தருமம் தழைத்தோங்க ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில் ஒரு நாள் கால ருத்ரமூர்த்தி தவசி வேஷந்தரித்து, ராமனது அரண்மனை வாயிலில் வந்து, அங்கே வெகு தீரமாக நின்ற லக்ஷ்மணனைப் பார்த்து ‘யான் மகாப்ரபாவசாலியான அதிபல மகா முனிவரது தூதன். யான் ஒருபெரிய காரியத்தின் பொருட்டு வந்திருப்பதாக நீ வேந்தனிடம் விரைவில் அறிவிக்க’, என்று கூற, லக்ஷ்மணன் அங்ஙனமே விண்ணபஞ்செய்ய அத்தவசி யாவரினும் அற்புதமானதோர் ஒளிதிகழ ராஜசபையிற் சென்று ராமரை வாழ்த்த,ராமன் அவரை நன்கு வரவேற்றுப் பூஜித்து ஓர் சித்ராசனத்தில் எழுந்தருளச் செய்த பின் அவரைப் பார்த்து "தபோதனரே! தேவரீரது வரவு நல்வரவாகுக. தேவரீர் யாவருடைய தூதராக எழுந்தருளியதோ அவரது பணிப்பை யருளிச் செய்க" என்றான். அது கேட்டு அம்முனிவர் ‘ராமா என்னைத் தூதனுப்பிய தபோதனர் மொழிந்த இதவசனத்தைக் கேட்க விருப்பமாயின் நாமிருவர் மாத்திரமே தனித்திருக்கையில் அதனைப் ப்ரஸ்தாவித்தல் வேண்டும். அப்படி நாம் சம்பாஷிக்கு மளவில் யாவரேனும் அதைக் கேட்டாலும் அத்தருணத்தில் யாவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் அவர் உடனே மரணத்திற்கு ஆளாவாரென உக்ரமாகக் கட்டளையிட வேண்டும்’ என்றார். ராமன் ‘அங்ஙனமே ஆகுக’ என்று கூறி லக்ஷ்மணனை விளித்து ‘லக்ஷ்மணா! நீ வாயிலோனை அப்புறம் போக விடுத்து நீயே வாயிலில் காவல் காத்திருத்தல் வேண்டும். யானும் இம் முனிவரும் ஏகாந்தமாக சம்பாஷணை செய்கையில் எவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் இதனைக் கேட்டாலும் மரண தண்டனைக்கு ஆளாகுவர்’ என்று கட்டளையிட்டு லக்ஷ்மணனை அரண்மனை வாயிலில் காவல் இருக்கும்படி செய்து இருவரும் தனியே நின்றபோது ராமன் முனிவரைப் பார்த்து சுவாமி ‘இங்கு ஒருவருமில்லை இனி விசாரமின்றி மனத்திலுள்ளதை கூறலாம்’, என்றான்.

நூற்றிப் பதினாறாவது ஸர்க்கம்

(காலனுக்கும் காகுத்தனுக்கும் உரையாடல்]

            அப்பொழுது அத்தவசி ராமனைப் பார்த்து "ராஜனே நான் பிரம்ம தேவனால் இவ்விடம் தூது அனுப்பப்பட்டவன். ஹே வீர! பூர்வத்தில் நான் உனக்கு புத்திரனாகப் பிறந்தவன். உலகங்களை அழிக்கும் நிமித்தமாக நீ என்னை உனது திவ்ய சக்தியினால் உண்டாக்கினை. நான் திரிபுர ஸம்ஹாரஞ் செய்த கால ருத்ரமூர்த்தியே யாவேன், பிரம்மதேவன் சொல்லியனுப்பியது யாதெனில் படைப்பு, அழிப்பு, அளிப்பென்னும் முத்தொழிலுக்கும் உரியனான நீ, சகல லோகங்களையும் ரக்ஷிப்பதே பெரிய விரதமாகக் கொண்டவனன்றோ? ஆதலின் அதன் பொருட்டு நீ உன்னடிச் சோதிக்கு (ஸ்ரீவைகுண்டத்திற்கு) வந்து சேர வேண்டிய சமயம் வந்து விட்டது. ஆதியில் நீ உனது திவ்ய சக்தியினால் எல்லா உலகங்களையும் வயிற்றிலடக்கிப் பெரும்புறக் கடலில் பள்ளி கொண்டு முதலில் என்னைப் பிறப்பித்துப் பிறகு உனக்குப் படுக்கையான ஆதிசேஷனை தோற்றுவித்தாய். அப்பால் மகாபலிஷ்டர்களான மதுகைடபர்களைப் படைத்தனை. அவர்களில் கைடபன் என்னும் அசுரன் முதலை முத்துச் சிப்பி முதலியபோல் உடம்பில் எலும்புகளே மேலிட்டவனானது பற்றி பின் எலும்புகள் இப் பூமியெங்கும பரவி மலைகளும், மேடுகளுமாயின. மற்றவனான மதுவினுடல் மீன் முதலியவற்றின் உடலென நிணமே மேலிட்டிருந்தமையின் அது படிந்து பூமியெங்கும் புல் பூண்டு முதலியவை முளைக்கும் படியான செழிப்புடையதாகி மேதினியென்னும் பெயர் பெற்றது.

                ராமா! நீ மனோ வாக் காயங்களுக்கு எட்டாத பரவாசுதேவன் என்ற ஆதி மூர்த்தியினின்றும் மகாவிஷ்ணுவாக தோன்றினாய். தவிர அதிதியினிடத்தில் உபேந்த்ரனாக வந்து பிறந்து தேவதைகளுக்கு நேர்ந்த துன்பங்களைப் போக்கினாய். இது இங்ஙனமாக, ராவணனை ஸம்ஹரிப்பதற்காக தசரதனுடைய புத்ரனாய் தோன்றினாய். ஆதியில் செய்த ஸங்கல்பப்படி நீ பூலோகத்தில் வசிக்க வேண்டிய ஆயுளளவு பூரணமரகி உன்னடிச் சோதிக்கு எழுந்தருள வேண்டிய காலம் நெருங்கி விட்டது. மறுபடி சில காலம் இங்ஙனம் பூலோகத்திலேயிருந்து ஜனங்களைப் பரிபாலித்து வரவேண்டுமென விருப்பமாயின் அப்படியே செய்க. உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு. தேவலோகத்திற்கு உனக்கு வர விருப்பமாகில் சகலமான தேவர்களும் உனது  வரவை எதிர்பார்த்திருக்கின்றனர். அங்கே எழுந்தருளி அவர்கட்கு சேவை சாதித்து அவர்களுடைய விருப்பத்தை தணித்தருள்க,’ என விண்ணப்பஞ் செய்யுமாறு இங்கு அனுப்பினர்” என்றார். நான்முகன் சொல்லியனுப்பியதாகக் கால ருத்ர மூர்த்தி கூறியதைக் கேட்டு ராமன் சிரித்தவாறு "ஹே! தேவ! மூவுலகத்தவர்க்கும் ஆக வேண்டிய கார்யத்தை முடித்தலின் பொருட்டே நான் இங்கு வந்து பிறந்தேன், இனி யான் வந்தவிடம் போய்ச் சேருகிறேன். மனத்தில் நினைத்ததையே சதுர்முகன் கூறியனுப்பினான். ஆதலின் அது விஷயத்தில் எனக்கு விசாரம் ஒன்றுமில்லை. எனது பக்தர்களான தேவதைகளுக்கு வசப்பட்டவனாதலின் அத் தேவர்களில் முதல்வனான பிரமதேவன் கூறுகின்றவாறே நடக்கக் கடமை உள்ளவன்" என்றான்.

நூற்றிப் பதினேழாவது ஸர்க்கம்

[துர்வாச முனிவர் வந்ததும் லக்ஷ்மணன் பிரிந்ததும்]

            காலனும் காகுத்தனும் இவ்வாறு சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் துருவாச ரிஷி ஸ்ரீராமனைத் தரிசிக்க வேண்டி அரண்மனை வாயிலை அடைந்து அங்கு காவல் காத்திருந்த லக்ஷ்மணனைப் பார்த்து, ‘சீக்கிரம் என்னை ராமனிடம் அழைத்துச் செல்லுக’ என்றார். லக்ஷ்மணன் அது :கேட்டு முனிவரை நமஸ்கரித்து ‘தேவர்க்கு ஆக வேண்டிய கார்யம் எதுவோ அதை அடியேன் நிறைவேற்றுகிறேன். மன்னவன் மற்றெரு கார்யத்தை மேற்கொண்டிருப்பதால் அவனைப் பார்க்க ஒரு முகூர்த்த காலம் பொறுத்தருள வேண்டுகிறேன்’ என, துர்வாசர் கோபத்தினால் கண்கள் சிவந்து ‘யான் வந்திருப்பதை நீ இந்த நிமிஷமே ராமனிடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் உன்னையும் இத்தேசத்தையும், நகரத்தையும் நான் சபித்துவிடுவேன். ராமனையும்,பரதனையும், உங்கள் ஸந்ததிகளையும் சபித்துவிடுவேன். மேலெழுந்த கோபத்தை நான் மீண்டும் உள்ளடக்க வல்லவன் அல்லேன்’ என கோபமாகக் கூறினார். சொன்ன வண்ணஞ் செய்யும் தவப் பெருமை பெற்ற துருவாச முனிவர் கூறிய க்ரூரமான வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன் சிறிது யோசித்து என்னொருவனுக்கு மரணம் நேர்ந்தாலும் நேரட்டும். இம் முனிவரின் கோபத்திற்கு ஆட்பட்டு யாவும் அழியாதிருந்தால் போதும்' என மன உறுதி செய்து கொண்டு உள்ளே சென்று முனிவர் வந்திருக்கின்ற செய்தியை ராமனிடம் விண்ணப்பஞ் செய்தான். கோபமுனிவர் வந்திருப்பது கேட்டு காகுத்தன் காலமூர்த்திக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு உடனே துர்வாசரை எதிர்கொண்டு சென்று அவரை வணங்கி பூஜித்து கைகூப்பியவாறு அவரைப் பார்தது ‘சுவாமி அடியேனுக்கு இப்போது என்ன கார்யம் நியமிக்கின்றது’ என்று வினவ அந்த ரிஷி ராமனைப் பார்த்து ‘தருமமே துணையாகக் கொண்ட கரகுத்த! யான் ஆயிரம் வருஷங்களாக எந்தவிதமான ஆகாரமும் இன்றி அருமையான தவம் புரிந்தேன். ஆதலால் எனக்குப் பசி அதிகமாக இருக்கின்றது. விதிமுறைப்படி எனக்குப் போதுமான போஜனமளிக்க வேண்டுகின்றேன், என்றார் ராமன் அது கேட்டு மகிழ்ச்சியுடன் அவருக்கு முறைப்படி போஜனம் அளிக்க, அமுதமயமான அவ்வுணவை அருந்தவ முனிவர் அருந்தி உள்ளம் மகிழ்ந்தவராகி ராமனை ஆசீர்வதித்து விடைபெற்று தமது ஆச்ரமத்திற்குச் சென்றார். அப்பால் ராமன் கால ருத்ரமூர்த்தி கூறிய க்ரூரமான வார்த்தையை நினைத்து தவித்தவனாகி மிகவும் தீனனாய்த் தலை குனிந்து ஒன்றும் சொலல வாய் எழாமல் நின்று நமக்கு சகோதரனேது? வேலைக்காரனேது? ஒருவருமில்லை என்று நிச்சயித்து மௌனமாய் இருந்தான்.

நூற்றிப் பதினெட்டாவது ஸர்க்க்கம்
[ராமன் லக்ஷ்மணனை பிரிந்தது.]

            இவ்வாறு வாய் திறவாமல் மௌனமாய் நின்ற இராமனை பார்த்து லக்ஷ்மணன் மகிழ்ச்சியடைந்தவனாகி "எனக்காக தேவரீர் வருந்துவது உசிதமில்லை. அன்று விதித்தவாறே யன்றோ யாவும் நடந்தேற வேணும். காலகதி இப்படிப்பபட்டதுதான். ஆதலால் தேவரீர் அடியேனைத் துறந்து, செய்த ப்ரதிக்ஞையை நிறைவேற்றி அருள்க. செய்த ப்ரதிக்ஞயைப் பரிபாலியாது தவறினவர்கள் நரகமே புகுவார்கள். தேவரீருக்கு அடியேனிடம் அன்பும் அருளும் உள்ளனவாயின், மனதில் சிறிதும் கலக்கமில்லாமல் அடியேனைத் துறந்து தர்மத்தை வளரச் செய்க”, என்றான். லக்ஷ்மணன் இவ்வரறு கூறியதைக் கேட்டு ராமன் துக்கம் அடைந்தவனாகி மந்திரிமார்களையும், புரோகிதரையும் உடனே வரழைத்து, துர்வாசமுனிவர் எழுந்தருளியதையும், அவருக்கு முன் வந்த தவசியிடம் தான் செய்த ப்ரதிக்ஞயையும், அதன் மேல் நடந்த வ்ருத்தாந்தத்தையும். அவர்களிடம் கூற, அது கேட்டு அவர்கள் ஒன்றும் தோன்றாமல் மௌனமாய் இருந்தனர். அப்பொழுது வஸிஷ்டர் ராமனைப் பார்த்து ‘ஹே, தாசரதே! உனக்கு இப்படிப்பட்ட சங்கடங்களும் இளையவனோடு பிரிவும் உண்டாகும் என முன்பே தெரிந்த விஷயமே. அதைப் பற்றி விசனமுறுவதில் பயனில்லை. விதியே வலியுள்ளதால் லக்ஷ்மணனைப் பிரிந்திடுக. செய்த ப்ரதிக்ஞயை வீணாக்கலாகாது. ப்ரதிக்ஞை வீணாகுமாயின் தர்மம் நசியும். தர்மம் நசித்தால் மூவுலகங்களும் தேவ ரிஷிகணங் களும் நசியும்; ஸந்தேஹமில்லை. ஆதலின் இம் முவுலகங்களின் நன்மைக்காக அவற்றின் பரிபாலகனாய் இருக்கின்ற நீ லக்ஷ்மணனைத் துறந்து ப்ரதிக்ஞையைக் காப்பாற்று ‘ என்றார்.

            மந்திரிகள் பலருங் கூடிய பெரிய சபையில் வஸிஷ்ட பகவான் இவ்வாறு கூறக் கேட்டு இராமன் லக்ஷ்மணனைப் பார்த்து ‘லக்ஷ்மணா தர்ம நிலை அழியாமைக்காக யான் உன்னை இன்றோடு இழந்து விடுகிறேன். சாதுக்களுக்குத் த்யாகமும் வதமுமாகிய இரண்டும் சமமென விதிக்கப்பட்டிருக்கின்றனவன்றோ’ என்றான். இவ்வாறு இராமன் சொல்லியதும் லக்ஷ்மணன் கண்களில் நீர் ததும்ப ஐந்து இந்த்ரியங்களும் உள்ளமும் கலங்கினவனாகி நேராக சரயு நதிக்குச் சென்று ஸ்நாநம் செய்து கை கூப்பி வணங்கி ப்ராணாயாமஞ் செய்து பரவாசுதேவனது என்றும் அழிவில்லாத திருவடியையே மனதில் எண்ணி மரணமடைந்தான். அப்பொழுது இந்திராதி தேவர்கள் அப்ஸரஸ்ஸுகள் தேவரிஷிகள் எல்லோரும் லக்ஷ்மணன் மீது பூமாரி பொழிந்தனர். பிறகு மானிடர் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமலேயே இந்த்ரன் லக்ஷ்மணனை அத்தேகத்துடனேயே தேவலோகத்திற்கு எழுந்தருளச் செய்துகொண்டு போனான் --- ஸாக்ஷாத் ஸ்ரீமஹா விஷ்ணுவினது அம்சத்தில் நாலில் ஒரு பாகமான அம் மஹாநுபாவன் எழுந்தருளியது கண்டு தேவர்களும், தேவரிஷிகளும், பெரும் மகிழ்ச்சி கொண்டவர்களாகி அவனைப் பூஜித்தனர்.

சனி, 15 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 48

நூற்றிப் பதினோராவது ஸர்க்கம்

[ராமன் பல யாகங்கள் செய்தருளியது.)

           இராப்பொழுது கழித்து மறுநான் உதயமானவளவில் ராமன் எல்லா முனிவர்களையும் அழைப்பித்து அவர்களனைவரும் தத்தமக்சூரிய ஆசனங்களில் அமர்ந்த பின்னர் மற்றக் காவ்யத்தை கானம் பண்ணுமாறு தனது குமாரர்களுக்கு கட்டளையிட, அவர்கள் உத்தர ராம சரிதத்தை முறையே பாடத் தொடங்கினர். சீதையைப் பிரிந்த ராமனுக்கு இவ்வுலகம் முழுமையுமே சூன்யமாகத் தோற்றியது. ஆனால் ராமன் சோகம் தணியாதவனாகி அந்த யாகத்தை விதிமுறைப்படி நிறைவேற்றி அவரவர்களுக்கு செய்ய வேண்டிய சன்மானங்கனைச் செய்து சகலமான ராஜாக்களையும் வானர ராக்ஷஸர்களையும். மற்றுமுள்ள பலரையும் விடை கொடுத்தனுப்பி விட்டு. மைதிலியின் மோகமே மனதிற் குடிகொண்டவனாகி அயோத்யாபுரிக்குச் சென்றான். அப்பால் ராமன் தனது இரு குமாரர்களுடனும் கூடிக் களித்து அநேக யாகங்கள் செய்து தர்மம் வளரச் செய்தனனேயல்லது. மைதிலியை யன்றி மற்றெருத்தியை மனையாட்டியாக மணம் புரிய மனமிசைந்திலன். அவன் செய்த ஒவ்வொரு யாகத்திற்கும் ஸ்வர்ணசீதையே பத்னியாக நின்றாள். பொற்சீதையையே கொண்டு பதினாயிரமாண்டளவு ராமன் அநேகம் அசுவமேத யாகங்கள் செய்தருளினான். அதுவன்றி அவற்றினும் பதின்மடங்காய் வேண்டிய பொருள் செய்து வாஜபேயம் அக்னிஷ்டோமம் அதிராத்ரம் கோஸவம் இன்னும் அநேக யாக யஜ்ஞங்களும் செய்து விசேஷமான தக்ஷிணைகள் கொடுத்து அறநெறி தவறாது ப்ரஜைகளைப் பாதுகாத்து வந்தான். ராமன் இவ்வாறு ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில் அவனை வானரர்களும் இராக்கதர்களும் ப்ரதி தினம் ஸேவித்து அவனை அக மகிழச் செய்து அவனது ஆணைக்குட்பட்டு நடந்து வந்தனர். ராமராஜ்யத்தில் காலந்தவறாது மாதம் மும்மாரி பொழிய ராஜ்யமெங்கும் செழிப்பாய் இருந்தது. நாட்டிலும் நகரத்திலுமுள்ள நானாவிதமான ஜனங்களும் புஷ்டியும், துஷ்டியும் அடைந்தனர். அந்நாளில் எவர்க்கேனும் அகால மரணமென்பதே சம்பவித்ததில்லை. ஒருவர்க்கும் ஒருவிதமான வ்யாதியும் உண்டானதில்லை. இவ்விதம் பலவாண்டுகள் செல்ல ராமனது தாய்மார்களான கௌஸல்யை, சுமித்ரை, கைகேயி முதலியோர் புத்ரர்களும்; பேரன்மார்களும் புடை சூழ்ந்திருக்க ஒருவர்பின் ஒருவராக சுவர்க்க லோகமடைந்து அங்கு தம் கணவனான தசரதனுடன் கூடிக் களிப்புற்றிருந்தனர். ராமன் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சரம க்ரியை (மரணச் சடங்கு) முதலான எல்லாவற்றையும் யாவருக்கும் வேற்றுமையின்றி ஒரே சீராக நடத்திச் சிறந்த தருமங்களை அந்தணர்கட்கும் அருந்தவ முனிவர்கட்கும் அந்தந்த காலத்தில் தவறாமல் செய்து பிதுர் தேவதைகளுக்குப் ப்ரீதியை விருத்தி செய்பவையான பிண்ட பிதுர் யஜ்ஞம் முதலியவற்றையும் செய்து சந்தோஷிப்பித்தான். இங்ஙனம் அநேகமாயிர வருஷங்கள் சென்றன.

நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம்

[யுதாஜித்து ஸ்ரீராமனிடம் தூது அனுப்பியது கூறல்)

                இவ்வாறு சில காலஞ் செல்லுகையில் ஒரு சமயம் கேகய தேசாதிபதியான யுதாஜித் மன்னன் ஸ்ரீராமனுக்கு பரிசாகப் பல்லாயிரம் நற்பரிசுகளும், விசித்திரமான வஸ்திரங்களும் அத்புதமான ஆபரணங்களும், கொடுத்துத் தமது புரோகிதரான கார்க்ய முனிவரை ராமனிடம் அனுப்பினான். அம்முனி வருவது கண்டு ராமன் தனது சைன்யங்களுடன் அவரை ஒரு நாழிகைவழிதூர மெதிர்கொண்டு சென்று தேவேந்திரன் தேவகுருவைப் பூஜிக்குமாப் போலே அவரைப் பூஜித்தான். அப்பால் ராமன் தன் மாமன் கொடுத்தனுப்பிய மேலான பொருள்களைப் ப்ரீதியுடன் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவர் யோக க்ஷேமங்களையும் வினவிய பின்னர் அம்முனிவரைப் பார்த்து ‘ஸ்வாமி! எனது நல்லம்மான் யாது நியமித்து அருளினார்?. தேவரீர் இவ்வளவு தூரம் எழுந்தருளின விசேஷம் யாது ?’ என வினவ, கார்க்ய முனிவர் கூறலுற்றனர். 'ஹே காகுத்தா நமது நாட்டிற்கருகில் மிக்க வளமுள்ள கந்தர்வதேசம் சிந்து நதியின் இருகரையும் பரவியிருக்கின்றதல்லவா? அந்நாட்டை சைலூஷனது மக்களும் சிறந்த பலிஷ்டர்களுமான கந்தருவர் அநேகமாயிரத்தவர் கைப்பற்றிக் கொண்டு அரசர்கள் பலரைத் துன்புறுத்தி வருகின்றனர், ஆதலால் ராமா! நீ உடனே அக்கொடிய கந்தருவர்களை வென்று அவர்களது நகரத்தை நமது ராஜ்யத்துடனே சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்காரியம உன்னாலன்றி மற்ற எவராலும் முடியத்தக்கதன்று. நீ இக்கார்யத்திற்கு உடன் படவேண்டும், என்று உனது நலலம்மான் சொல்லியனுப்பினான்’ .எனக் கூறினார். மாமன் சொல்லியனுப்பிய வ்ருத்தாந்தத்தை மஹரிஷியின் மூலமாய்க் கேட்ட ராமன் பரதனை விழித்து நோக்கி, பிறகு அம்முனிவர் பெருமானைப் பார்த்து, ‘சுவாமி நம் பரதனது மக்களான மகாவீரர்களாகிய தக்ஷனும், புஷ்கலனும் அத்தேசத்திற்கு வருகின்றனர். இவர்கள் வேண்டிய படைகள் புடைசூழ பரதனை முன்னிட்டுப் புறப்பட்டு அங்குச் சென்று அக்கந்தருவர்களை வெற்றி கொள்வார்கள் பிறகு அவ்விராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து அவ்விரண்டிலும் இவ்விரண்டு புத்ரர்களுக்கும் பட்டாபிஷேகஞ் செய்வித்துப் பரிபாலித்து வருமாறு ஸ்தாபித்து பரதன் திரும்பி என்னிடம் வந்து சேருவான்’ என்று கூறி, சீக்கிரம் சேனைகளுடன் புறப்பட்டுச் செல்லுமாறு பரதனுக்குக் கட்டளையிட பரதன் தனது குமாரர்களுடனும் பெருஞ்சேனையுடனும் புறப்பட்டுச் சென்று பதினைந்து நாட்கள் வழி நடந்து சுகமாகக் கேகய தேசம் போய்ச் சேர்ந்தான். தேவர்களாலும் வெல்வதற்கரியதான பரதனது சேனை பரதனைப் பின் தொடர்ந்து செல்லுகையில் தேவேந்திரனுடன் செல்லும் தேவசேனையென விளங்கியது.

நூற்றிப் பதிமூன்றாவது ஸர்க்கம்

(தக்ஷ புஷ்கலர்களை கந்தருவ தேசத்தில் அரசர் களாக்கியது.)

            சதுரங்க சேனைகளுடன் வந்த பரதனைக் கண்டு கேகய ராஜனான யுதாஜித் மிகவும் சந்தோஷமடைந்து தானும் விரைந்து தனது சேனைகளுடனும் பரதனுடனும் கூடிப் புறப்பட்டு கந்தருவ நகரம் போய்ச் சேர்ந்தான். அது கண்டு கந்தருவர் அனைவரும் ஒன்று கூடி வந்து அவர்களை எதிர்த்தனர். அப்பால் அவ்விரு திறத்தவர்க்கும் மிகப் பயங்கரமாக ஏழுநாள் வரை வெற்றி தோல்வி இன்றி யுத்தம் நடந்தது.  கட்கம், கத்தி, வில் முதலானவை முதலைகளாகவும், மனித சரீரங்களே பெரிய மரங்களாகவும் மிதக்க, உதிர வெள்ளம் எப்புறமும் பெருக்கெடுத்தோடியது. அக்காலையில் பரதன் மிகுந்த கோபங் கொண்டு பயங்கரமான ஸமவர்த்தமென்கிற காலமூர்த்தியினது அஸ்த்ரத்தை எடுத்துக் கந்தருவர்களின் மீது ப்ரயோகித்தான். அதனால் மகா பராக்ரமசாலிகளான மூன்று கோடி கந்தருவர்களும் கால பாசத்தால் கட்டுண்டவராகி க்ஷணப் பொழுதில் மாண்டனர். அப்பால் பரதன் மிகவும் செழிப்புள்ளவைகளான கந்தருவதேசத்திலும், காந்தார தேசத்திலும் ஒன்றுக்கொன்று ஏற்றத் தாழ்வின்றி சகல சம்பத்துக்களும் நிறைந்த தக்ஷசீலமென்றும் புஷ்கலாவர்த்தமென்றும் பெயர் பெற்ற இரண்டு அற்புதமான நகரங்களை நிருமித்து அவற்றிற்கு முறையே தக்ஷனையும், புஷ்கலனையும் அரசர்களாக்கினான். தேவ மாளிகை போல் மிகவும் அற்புதமாய் ஏழெட்டு அடுக்குள்ள மாளிகைகள் நிறைந்து பெரிய வீதிகளும், எல்லாப் பண்டங்களும் குறைவற நிறைந்த கடைவீதிகளும், ரமணீயமான உத்யானவனங்களும் அமைந்து அந்நகரங்கள் எவரும் வியக்கத் தக்கவைகளாய் விளங்கின. அங்கு எல்லா விவரங்களும் நீதிமுறைப்படி நன்கு நிறைவேறி வருமாறு தன்குமாரர்கள் அரசு புரியும் அதிசயத்தைக் கண்டு களிப்புற்று பரதன்: ஐயாண்டளவு அவ்விடத்தே வசித்திருந்து அப்பால் அயோத்திக்குச் சென்று ராமனை வணங்கி கந்தருவர்களை வதைத்த வரலாறுகளையும், தமது ஆட்சியை அங்கு ஸ்தாபித்த விதத்தையும் விண்ணப்பஞ் செய்ய, ராமன் அதுகேட்டு மிகவும் களிப்புற்றான்.

நூற்றிப் பதினாலாவது ஸர்க்கம்

(காருபத தேசத்தில் அங்கதன், சந்திரகேது களுக்கு மகுடாபிஷேகம் செய்தது.)

            அப்பால் ஸ்ரீராமன் லக்ஷ்மணனைப் பார்த்து "லஷ்மணா! உளது குமாரர்களான அங்கதன் சந்திரகேது என்னுமிருவரும் இராஜ்ய பரிபாலனஞ்செய்யும் திறமையுடையவர்களாய் விளங்குகின்றனர். ஆதலால் அவர்களையும் ஓரிடத்தில் அரசர்களாக நியமிக்க வேண்டும். அதற்குத் தகுந்ததான தேசமொன்றை தெரிந்து சொல்’’ என்று கூறினான். அதுகேட்டு பரதன் "அண்ணா காருபதமென்கிற மிகவும் அழகான தேசமென்று உளதன்றோ? அஃது அரசாளுதற்கு ஏற்ற இடமாகையால் ஆங்கு அங்கதனுக்கும் சந்திரகேதுவுக்கும் அற்புதமான நகரங்கள் நிருபிக்கலாம்” என விண்ணப்பஞ் செய்தான். ராமன் அஃது உசிதமேயென்று கருதி அத்தேசத்தில் அங்கதீயை என்கிற பட்டணம் ப்ரதிஷ்டை செய்து அதில் அங்கதனை அரசு செலுத்தி வருமாறு நியமித்து, பிறகு வடக்கே மல்ல பூமியென்னுமிடத்தில் சுந்தரக்ரந்தை யென்ற திவ்யமான நகரமொன்றை நிருமித்து அதில் ஆட்சி புரியுமாறு சந்திரகேதுவுக்கு அபிஷேகஞ் செய்வித்து சந்தோஷமடைந்தான். லக்ஷ்மணன் அவர்களுடன் கூட சென்று அவர்கள் அரசாட்சி செய்யும் திறத்தைக் கண்டு வியந்து ஓராண்டு அளவு அங்கேயே இருந்து அப்பால் அயோத்தியை அடைந்து ராமனை வணங்கினான். பிறகு லக்ஷ்மணனும் பரதனும் ராமனுக்கு சகலவிதமான பணிவிடைகளையும் செய்துகொண்டு காலஞ் செல்வது தெரியாமலே பதினாயிர மாண்டுகளைக் கழித்தனர்.

புதன், 12 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 47

நூற்றேழாவது ஸர்க்கம்

[சீதை சபதஞ் செய்ய வருவதை ராமன் அறிதல்]

            அன்று முதல் ராமன் நாள் தோறும் பல ரிஷிகளும் மன்னர்களும். வானரர்களும் புடைசூழச் சபையின் நடுவே முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமானதுமான அவர்களது சங்கீதத்தைக் கேட்டுக் களி கூர்ந்தனன். இவ்ஙனம் பல நாள் நடந்து வருகையில் அக்காட்டிலேயே அக் குச லவர்கள் ஜானகியிடம் பிறந்த தனது புதல்வர்கள் என அறிந்து அகமகிழ்ந்து ராமன் ஒரு நாள் சபை நடுவே சிறந்த தூதர்களை விளித்து, 'நீங்கள் உடனே வால்மீகி முனிவரிடம் சென்று சீதை குற்றமில்லாத நல்லொழுக்கமுள்ளவளாயின் அம்முனிவரது அனுமதி பெற்று இச் சபையிலுள்ள அனைவர்க்கும் நம்பிக்கையுண்டாகும்படி அவள் தான் மிகப் பரிசுத்தமானவள் எனப் பிரமாணஞ் செய்யக் கடவள், என யான் சொன்னதாய் அம் முனிவரிடம் அறிவித்து இது விஷயத்தில் அவரது கருத்தும், சீதையின் கருத்தும் இத் தன்மையதெனத் தெரிந்து கொண்டு தீவிரமாக வருக’. என நியமித்தான். அத்தூதர்கள் வேகமாக வால்மீகி முனிவரிடஞ் சென்று ராமனுடைய கருத்தை வெளியிட்டனர். அது கேட்டு வால்மீகி முனிவர் 'தூதர்களே! உங்களுக்கு மங்களமுண்டாகுக. சீதாதேவி அப்படியே ப்ரமாணஞ் செய்வாள். குலமகட்குத் தெய்வம் கொழுநனே யன்றோ’ என்று அருளிச் செய்ய அவர்கள் ராமனிடஞ் சென்று அதை அறிவித்தனர். ராமன் மஹரிஷியின் சொல் கேட்டு மகிழ்ச்சி கொண்டு ஆங்கு வந்து கூடிய சபையோர்களையும், அரசர்களையும் பார்த்து, ‘சபையோர்களே! நாளைய தினம் தனது நல்லொழுக்கந்திற்கு நிதர்சனமாகப் ப்ரமாணஞ் செய்யப் போகின்றாள் -- சிஷ்யர்களுடன் கூடின எல்லா முனிவர்களும் பரிஜனங்களுடன் கூடின அரசர்களும் அதனை வந்து நேரில் பார்க்கலரம். இன்னும் எவனேனும் காணக் கருத்துடையனாயின் அவனும் அதனை வந்து காணலாம்’, என யாவருமறிய எடுத்துக் கூறினான். மன்னவனது மொழியைச் செவியுற்ற அனைவரும் நன்று நன்று. இங்ஙன முரைப்பது இப்புவியில் ராமன் ஒருவனுக்கே தகும்; மற்ற எவர்க்கும் தகாது' என்று கூறி ராமனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

நூற்றெட்டாவது ஸர்க்கம்

[சீதையின் தூய்மையை வால்மீகி வெளியிட்டது]

            அப்பால் மறுநாள் பொழுது விடிந்ததும் எல்லோரும் தத்தம் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ராஜஸபைக்கு வந்து சேர்ந்தனர். ராமன் அனைவர்க்கும் முன்னமே தனது சகோதரர்களுடன் வந்து சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அங்கு அப்பொழுது எல்லா ரிஷிகளும், ராக்ஷஸர்களும், வானரர்களும் சீதையைக் காண பேராவல் கொண்டவர்களாகி வந்து நிறைந்தனர். இவ்விதமாகவே அனேக தேசங்களிலிருந்து க்ஷத்ரியர்களும், வைச்யர்களும் சூத்ரர்களும் ஆயிரமாயிரமாக வந்து கூடினர். அப்பொழுது வால்மீகி முனிவர் சீதாதேவியுடன் ராஜசபைக்கு வெகு சீக்கிரமாக எழுந்தருளினார. அவரது பின்புறத்தில் சீதை ராமனையே தன் மனதில் த்யானித்தவண்ணம் குனிந்த சென்னியும் குவித்த கையுமாய்க் கண்களில் நீர் ததும்ப அவரைத் தொடர்ந்து சென்றாள். மைதிலியினது மகத்தான துயரத்தைக் கண்டு சபையிலுள்ள பலரும் ஒருவர்க்கொருவர் கலகலவெனப் பலவாறு பேசிக்கொள்ளலாயினர். ராமன் இவ்வாறு செய்யத் தகுமோ எனச் சொல்லிச் சோகமுற்றனர். சீதையினுடைய பொறுமையை யாம் என்னென்று சொல்வது எனப பலர் புகழ்ந்தனர்.  இங்ஙனமொழுகுதல் இவர்கள் இருவர்க்குமே தகும் என வேறு சிலர் வியந்தனர். அப்பொழுது வால்மீகி முனிவர் ராமனைப் பார்த்து,’ ஹே, ரகுநந்தனா! இதோ நிற்கிற சீதா தேவி மஹா பதிவ்ரதை. எந்நாளும் மேலான தர்மங்களையே அநுஷ்டித்து வருபவள். அவள் தனது கற்பு நிலைமை நன்கு விளங்க இன்று இச்சபை நடுவே சபதம் செய்ய வந்திருக்கின்றாள். பாடுகின்ற இச்சிறுவர்கள் இருவரும் உன்னுடைய புத்திரர்களேயென்று ப்ரமாணமாகச் சொல்கிறேன். யான் எப்பொழுதும் பொய் பேசாதவன். வருண பகவானது பத்தாவது புதல்வன். யான் பல்லாயிரமாண்டுகள் பெருந்தவம் புரிந்திருக்கின்றேன். இந்தச் சீதை குற்றமுள்ளவளாயின் அநேகமாயிரம் ஆண்டுகள் இயற்றிய தவங்களின் பயனை இழக்கக் கடவேன். யான் எனது பஞ்சேந்த்ரிய சாக்ஷியாகவும், மிகப் புனிதமானவள் என்று ஆய்ந்துணர்ந்தே வனத்தில் தனியே நின்று புலம்பிய இப்பதிவ்ரதையை அழைத்து ஆதரித்து வந்தேன். இவளை நீ காட்டில் விட்ட காலத்திலேயே யான் இவளைச் சிறிதும் களங்கமற்ற குணபூஷணியெனவும், இவளது தூய்மை உன் மனதிற்கே தெரிந்திருக்கையிலும் லோகாபவதாதத்தைக் கேட்டு மனங்கலங்கியே நீ இவளை அவ்வாறு துறந்தாய் எனவும் யோகத்ருஷ்டியால் அறிந்துகொண்டேன்’ என எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கூறினார்.    

நூற்றியொன்பதாவது ஸர்க்கம்

(சீதை ப்ரமாணஞ்செய்து பூமியில் புகுதல்)

 

                அதுகேட்டு, ஶ்ரீராமன் சபையின் நடுவில் கைகூப்பி நின்று, வால்மீகி முனிவரைப் பார்த்து, ‘தபோநிதியே! தேவரீர் உறுதியாகச் சொன்ன சத்யவாக்கினாலேயே அடியேனுக்கு நம்பிக்கை உண்டாகிவிட்டது. அன்றியும் முன் ராவண ஸம்ஹாரத்திற்குப் பின் தேவதைகளின் முன்னிலையில் நடந்த கார்யத்தினாலேயே இவளிடத்இல் சந்தேகம் நீங்கியது.

                இவள் சிறிதும் குற்றமில்லாதவள் என யான் நன்கு அறிந்தவனாயினும், உலக நிந்தைக்கு பயந்து இவளைக் கைவிட வேண்டியதாயிற்று. தேவரீர் அப்பிழையை பொறுத்தருள வேண்டுகிறேன். சீதை இப்பொழுது இச் சபையில் தான் மிகப் புனிதமானவன் என்பதை வெளியிட்டு எனக்கு தன்னிடம் விசுவாசம் உண்டாகுமாறு செய்து கொள்ளக் கடவள்” என்றனன். அப்பொழுது சீதாப்பிராட்டியார் சபதம் செய்வதைக் காணும் பொருட்டு இந்த்ராதி எல்லா தேவர்களும் நான்முகனை முன்னிட்டு ஆங்கு வந்து கூடினர் பன்னிரண்டு ஆதித்யர், எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், அச்வினி தேவதைகள், மருத்துக்கள், கந்தர்வர், விச்வே தேவர்கள், ரிஷிகள், ஆகிய அனைவரும் வந்து சேர்ந்தனர். அந்த சமயம் வாயு பகவான் திடீரென்று திவ்யமான பரிமளத்துடன் மனோஹரமாயும், மங்களமாயும் வீசி சபையோர் அனைவரும் மகிழுமாறு செய்தான். அவ்வத்புதத்தை கண்டு மண்ணவரும் விண்ணவரும் இஃதென்ன க்ருத யுகமோ என்று ஆச்சர்யமுற்று நின்றனர். இவ்வாறு மண்ணவரும் விண்ணோரும் வந்து குழுமியிருக்கும் மிக்க பெருஞ்சபை நடுவில் அரையில் காஷாய வஸ்த்ரம் தரித்த வைதேஹி சபையோரனைவரையும் பார்த்து கை கூப்பிக் கொண்டு தலையைக் குனிந்து தரையை நோக்கிய வண்ணமாய், “யான் மன மொழி மெய்களால் என்றும் ராமனையை பூஜித்திருப்பவளாயின், இப் பூமாதேவி எனக்கு இடங் கொடுக்கக் கடவள். யான் ராமனையன்றி மற்ற எவரையும் மனத்தாலும் சிந்தியாதவளாயின் இப் பூமாதேவி எனக்கு இடம் கொடுக்கக் கடவள். யான் உரைத்தவை யாவும் உண்மையேயாயின், ராமனையன்றி மற்ற எவரையும் அறியாதவளாயின் என்னைப் பெற்ற பூமா தேவி எனக்குத் தன்னுள் இடங்கொடுக்கக் கடவள்,” என மூன்று தரம் சபதம் செய்தாள். உடனே திடீரென்று பூமியினின்றும் ஒப்புவுமை இல்லாத திவ்யமான சிங்காசனமொன்று திவ்யசரீரமுள்ள நாகங்களால் முடிகளில் தாங்கப் பெற்று வெளித் தோற்றியது. உடனே பூமாதேவி தோன்றி சீதாப் பிராட்டியை நல்வரவு கொண்டாடி அன்புடன் போற்றிப் புகழ்ந்து தனது இரண்டு கைகளாலும் அணைத்து எடுத்து அச் சிங்காசனத்தின் மீது வைத்துக் கொண்டாள்.

                அவ்வாசனத்தில் வீற்றிருந்தவாறே பூதலத்தினுள் ப்ரவேசிக்க அது கண்டு விண்ணவர்கள் சீதையின் மீது பூமாரி பொழிந்து 'நன்று நன்று’, எனப் புகழ்ந்தார்கள். அவ்வதிசயத்தைக் கண்டு யாகசாலையில் வந்து கூடிய முனிவர்களும், மன்னர்களும், மற்றுமுள்ள பலரும் வெகுநேரம் யாதும் தோன்றாமல் ஆனந்தித்துக் கொண்டிருந்தனர். மண்ணிலும் விண்ணிலுமுள்ள சராசரங்கள் அனைத்தும் ஆகாயத்தில் நின்ற அசுரர்களும், பாதாளத்திலிருந்த பன்னகர்களுமாகிய யாவரும் சீதைக்குண்டான அபவாதம் தொலைந்தது என மகிழ்ந்து ஆனந்தக் கூச்சலிட்டனர். மைதிலி மஹீதலத்தில் புகுந்தது கண்டவளவிலே எல்லோரும் அதிக ஆச்சர்யமடைந்தவர்களாக ஒரு முகூர்த்த காலம் இவ்வுலகம் முழுமையுமே மோகத்தில் மூழ்கியது போலாகி விட்டது.

நூற்றிப் பத்தாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமனைப் பிரம்மதேவன் தேற்றியது.)

                வைதேகி வஸுதாதலத்தில் புகுந்த பொழுது எல்லா வானரர்களும் ஆஆ! எனக் கூச்சலிட்டனர். முனிவர்கள் எல்லோரும் ஸ்ரீராமபிரானது சந்நிதானஞ் சேர்ந்து இதென்ன ஆச்சர்யம்? என்று கூறி ப்ரமித்து நின்றனர். ராமன் ஒரு தண்டத்தை யூன்றித் தலை குனிந்து கண்ணீர் மல்கி மனஞ் சோர நின்று அழுதரற்றிக் கோபமும் சோகமும் விஞ்ச பூமி தேவியைப் பார்த்து, "நிலமகளே! ஸ்ரீதேவி யெனச் சிறந்த ரூபவதியாய் விளங்கும் வைதேகி என் கண்ணெதிரிலேயே காணாமற் போனதால் ஒரு நாளும் உண்டாகாத விசனம் இப்பொழுது உண்டாகி என் மனத்தை மிக வருத்துகின்றது. முன் நெடுங் கடலுக்கு அப்பால் இலங்காபுரியிற் சென்றிருந்த சீதையை சிறை நீக்கி கொணர்ந்த எனக்கு இப்பொழுது உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டு விடுவது நலம். அங்ஙனம் செய்கின்றனையா? என் கோபத்தை யான் உன் மேல் செலுத்துவதா? சீக்கிரம் உனது மகளான சீதையை என்னிடம் அழைத்து வருக; இல்லையேல் அவளுக்கு இடங் கொடுத்தது போல் எனக்கும் உள்ளே போக இடங் கொடு. பாதாளத்திலோ, நரகத்திலோ வைதேகியுடன் கூடி யானும் வஸிக்கின்றேன். அவள்பொருட்டு நான் அதிகமாக மோகங் கொண்டிருக்கிறேன். அங்ஙனம் இல்லையாயின் நீ நிலை குலையுமாறு இந்நாளில் முழுமையும் நாசமாக்கி விடுகிறேன் பார்," என்றான். ஸ்ரீராமன் இவ்வாறு கோபமும், சோகமும் மேலிட்டுக் கதறுமளவில் ஸகல தேவதைகளுடன் பிரம்மதேவன் அவ்விடத்திற்கு வந்து ரகுவீரனைப் பார்த்து "ஹே ராமா! நீ இவ்வாறு வருந்தலாகுமா? உனது பூர்வ ஸ்வரூபமான விஷ்ணுபாவத்தையும் நீ தேவதைகளுடன் கூடி நிகரற்ற நாராயண ரூபத்தை நினைத்து சோகந்தணிக. அணுவளவும் இழுக்கில்லாத சீதாப்பிராட்டி உனது ஆதியுருவத்தை அணுக ஆவல்கொண்டு இப்பொழுது ஸ்ரீவைகுண்டத்தில் இனிது வீற்றிருக்கின்றாள் நீ பரமபதத்தில் அப்பிராட்டியுடன் சேரலாகும். இதில் சந்தேகமில்லை. ஹே ராமா! காவ்யங்கள் பலவற்றிலும் சிறந்த உனது சரித்ரமான இம் மஹா காவ்யமே முழுமையும் கேட்கப்படுமாயின் எல்லாவற்றையும் உனக்கு விளங்க நினைப்பூட்டு மென்பதற்குச் சந்தேகமிலது வீரனே! உனது திரு அவதாரம் முதற் கொண்டு சுக துக்க ரூபமாக நடந்த நினது சரித்ரமும், இனி நடக்கப்போகிற உத்தர சரித்திரமுமாகிய யாவும் வால்மீகி முனி எனது அநுக்ரஹத்தினால் அற்புதமாகச் செய்திருக்கின்றர். இதுவே ஆதி காவ்யம் எனப்படும். ரகு குலதிலகனான நீ யொருவன் தவிர மற்ற எவரும் இக்காவியத்திற்கு கதாநாயகன் ஆகின்ற பெருமை வாய்ந்தவனல்லன். மிகவும் அத்புதமாயிருக்கின்ற சத்யமாகிய நினது திவ்ய சரிதத்தை யான் முன்னமே ஸகல தேவதைகளுடனும் ஸந்தேகமறக் கேட்டுக் களித்திருக்கின்றேன். ஆதலின் ஹே ராகவா! உனது மிகுந்துள்ள கதையை விளக்கும் உத்தர ராமாயணத்தையும் முனிவர்களுடனே கூடிக் கேட்டருள்க,'' என்று கூறி ராமனை சமாதானப்படுத்தி பிரம்மதேவன் தேவர்களுடன் கூடி விடை பெற்று விண்ணுலகம் சென்றான். பிரம்ம லோகத்தவர்களான மஹரிஷிகள் இனி நடக்கப் போகின்ற ஸ்ரீராகவனது சரிதமாகிய உத்தர ராமாயணத்தைக் கேட்க ஆசை கொண்டவர்களாகி அம்புயத்தோனிடம் அனுமதி பெற்று அவ்விடம் திரும்பி வந்தனர். அச் சமயம் அவனியினின்றும் அசரீரி வாக்கொன்று உண்டாகி, “ஹே ராமா வீணான வருத்தத்தை மேற்கொள்ளாது மகிழ்க. பிரம்மதேவன் கூறியது யாவும் உண்மையே அதன்படி நடப்பாயாக” என்று கூறியது. உடனே ராமன் வால்மீகியைப் பார்த்து ‘முனிவர் பெருமானே எனது உத்தர சரிதத்தைச் செவிக் கொள்ளுமாறு பிரம்ம லோகத்து முனிவர்களும் வந்து காத்திருக்கின்றனர். நாளைய தினம் அதனை நடத்தல் வேண்டும்’, என மொழிந்து அங்குள்ள யாவருக்கும் விடை கொடுத்து குமாரர்களை கையில் பிடித்துக் கொண்டு பர்ண சாலைக்கு எழுந்தருளினான்

சனி, 1 ஏப்ரல், 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம் --- உத்தர ராமாயணக் கதைகள் 46

நூற்று மூன்றாவது ஸர்க்கம்

[யாகம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வித்தல்.]

            இங்ஙனம் அத்புதமான இளன் கதையைக் கூறி முடித்த பின் ஸ்ரீராமன் லஷ்மணனைப் பார்த்து “லக்ஷ்மணா! நீ கூறியபடி அசுவ மேதமே புரிய விரும்புகின்றேன். ஆதலின் அதன் ப்ரயோகங்களை நன்கு அறிந்தவர்களான வஸிஷ்டர், வாமதேவர், ஜாபாலி முதலான அந்தணர்களை வரவழைத்து அவர்களுடன் ஆராய்ந்து தெரிந்து யாகஞ் செய்யத் தொடங்கி சிறந்த லக்ஷணங்களுடன் கூடிய குதிரையை விடுவேன்” என்றான். அங்ஙனமே ஸௌமித்ரி அன்னவர்களை வரவழைத்துவர, ரகுநந்தனன் அவர்களைப் பூஜித்து தனது விருப்பத்தை அவர்களுக்கு அறிவித்தான். அது கேட்ட அவர்கள் நல்லது, என்று ஸ்ரீராமனைப் புகழ்ந்தனர். பின்பு ராமன் லக்ஷ்மணனை விளித்து “தம்பி! நாம் செய்யும் அத்புதமான யாகத்தைக் கண்டு மகிழுமாறு எல்லா வானரர்களுடனும் இங்கு அதி சீக்ரத்தில் வந்து சேரும்படி சுக்ரீவ மஹாராஜனுக்கு தூது அனுப்பவும். விபீஷணனையும் எல்லா ராக்ஷஸர்களுடன் வந்து சேரும்படி அவனுக்கும் தூது அனுப்புக, நமது நன்மையை நாடுகின்றவர்களாய் இப் பூமண்டலத்திலுள்ள மன்னர்கள் பலரும் தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் நமது யாகத்தைக் காண வியக்குமாறு வந்து சேரும்படி ஓலைகள் அனுப்பவும். தேசாந்தரங்களிலுள்ள வேதியர்களையும், ரிஷிக்களையும் தபஸ்விகளையும் தங்கள் குடும்பத்துடன் நமது யாகத்திற்கு வரவழைப்பாயாக. கீத வாத்யங்களில் வல்லவர்களையும், நடனத்தில் தேர்ந்தவர்களையும் விசேஷமாக வரவழைக்க வேண்டும். யாம் யாகம் புரிவதற்குக் கோமதீ தீரத்தில் நைமிசாரண்யத்திலே மிகப் பெரியதான யாகசாலை அமைக்குமாறு கட்டளையிட வேண்டும். இப்பொழுதே அதற்கு வேண்டிய சாந்தி சுர்மங்களைச் செய்யுமாறு உத்திரவிடுக. லக்ஷக்கணக்கான வண்டிகளில் சிறந்த அரிசி, எள், பயிறு, கடலை, கொள்ளு, உளுந்து முதலான தான்ய வர்க்கங்களும், உப்பும், இவைகளுக்கு ஏற்றபடி நெய், எண்ணெய், பால்,தயிர் முதலிவைகளும், பலவகை வாசனாதித் திரவ்யங்களும், சந்தனக்கட்டைகளும், கோடிக் கணக்கான தங்க நாணயங்களும, பல கோடிக்கணக்கான வெள்ளி நாணயங்களுமாகிய பலவற்றையும் வெகு சாவதானமாக சேகரித்துக் கொண்டு பரதன் முன்னே செல்வானாக. அநேகமான சமையல்காரர்களும், பருவமுள்ள பணிப் பெண்களும், பரதனோடு கூட புறப்பட்டுச் செல்லட்டும். அநேகம் சேனைகளும் வேதம் தெரிந்த வேதியர்களும் வெகு சீக்கிரமாக முன்னதாகச் செல்லுக, அநேக வேலையாட்களையும், நமது தாய்மார்களையும், பரதன் முதலியோருடைய அந்தப்புர ஸ்த்ரீகளையும், சீதைக்கு ப்ரதியாக நிர்மித்து வைத்திருக் கின்ற ஸ்வர்ண சீதையையும் யாகம் செய்யும் முறைகளை நன்கறிந்த பல அந்தணர்களையும் முன்னிட்டுக் கொண்டு பரதன் முன்னெழுந்து செல்க. தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் கூடி வரும் வேந்தர்கள் பலருக்கும் ஆங்கு உத்தமமான விடுதிகள் அநேகம் அமைத்து வைக்க வேண்டும்”. என்று உத்திரவிட்டான்.

நூற்றிநாலாவது ஸர்க்கம்

[ராமன் அசுவமேத யாகம் செய்தல்.)

            அங்ஙனமே அசுவமேத யாகத்திற்கு வேண்டிய எல்லா கார்யங்களும் க்ரமப்படி மிகவும் அத்புதமாக நடந்து வருகையில் ஸ்ரீராமன் ரித்விக்குகளைக் கொண்டு விதிப்படி சிறந்த லக்ஷணமுள்ள ஒரு கருப்புக் குதிரையை லக்ஷ்மணனது காவலில் வைத்து விடுத்து எல்லா சேனைகளும் புடைசூழப் புறப்பட்டு நைமிசாரண்யம் போய்ச் சேர்ந்து அங்கு அற்புதமான யாக சாலையைக் கண்டு மகிழ்ந்தனர். எல்லா அரசர்களும், வானரர்களும், அரக்கர்களும் அங்கு வந்து சேர்ந்து அயோத்தி மன்னனை வணங்கி நிற்க, அவ்வரசர் பெருமான் அவர்களை வரவேற்று அவரவர்க்கு ஏற்படுத்திய இடங்களில் இறங்குமாறு கட்டளையிட்டான். அவர்களுக்கு வேண்டிய அன்னபானங்கள் ஆடையாபரணங்கள் ஆகியவற்றையும் பரதன் சத்ருக்னனோடு கூடி உடனுக்குடன் கொடுத்து ஒன்றில் ஒன்று குறைவின்றி வேண்டியபடி உபசரித்தான். சுக்ரீவ மஹாராஜனும் மற்றுமுள்ள வானரர்களும் அங்குள்ள வேதியர்கட்கு வணக்கத்துடன் அடிசில் முதலான பரிமாறி உபசரித்தனர். விபீஷணன் தன் துணைவரான மன்னர்களுடன் கூடி அங்குள்ள முனிவர்கட்குச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தான். அசுவமேத யாகம் எல்லோரும் கொண்டாடும்படி அத்புதமாக நடந்தது. லக்ஷ்மணனால் பாதுகாக்கப் பட்ட மிகப் பெரிய பாய்மாவினது செய்கையும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. அந்த யாகத்தில் யாசகர்களுக்குத் திருப்தி உண்டாகுமளவும் எல்லாப் பொருட்களும் அவர்களுக்கு அளிக்கப் பட்டன. அங்குச் சென்றவர்களில் ஒருவராயினும் தமக்கு இது குறை யென்று கூற விடமின்றி வேண்டியவைகள் எல்லாவற்றையும் பெற்று,யாவரும் பெருமகிழ்ச்சி கொண்டு ஆனந்தமடைந்தனர், அங்கு எழுந்தருளியிருந்த நெடுங்காலங் கண்ட நன் முனிவர் பலரும், இத்துணைச் சிறந்த யாகம் நடக்க நாங்கள் எந்நாளும், கண்டிலோம், இத்தன்மையன எந்நாளும் நடக்கவில்லை என வியந்து கொண்டாடினர். இந்திரன், குபேரன், யமன், வருணன் ஆகிய லோகபாலகர்கள் செய்த யாகங்களும், இங்ஙனம் சிறக்கக் கண்டதில்லையெனத் தபோதனர்கள் போற்றிப் புகழ்ந்தனர். ராமன் செய்த அசுவமேத யாகம் இவ்வண்ணமாகவே யாவும் குறைவற நடந்து ஓராண்டளவேயன்றி அதற்கு மேலும் ஓயாது நடந்து கொண்டிருந்தது.

நூற்றியைந்தாவது ஸர்க்கம்

(வால்மீகி குசலவருக்கு ராமாயணம் பாடக் கட்டளை இடுதல்)

            இவ்வாறு சிறந்த வைபவத்துடன் நடக்கும் அத்புதமான அசுவ மேத யாகத்திற்கு வால்மீகி முனிவர் தமது சிஷ்யர்களுடன் எழுந்தருளி அதைக் கண்டு ஆச்சர்யமடைந்து யாகசாலைக்கருகில் ஒரு பா்ணசாலை நிர்மாணித்து அதில் தங்கினார். மஹாராஜனான தாசரதியும், மற்றுமுள்ள ரிஷிகளும் அவரை நல்வரவு கொண்டாடி விசாரித்து அவருக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் யாவும் செய்தனர். அப்பொழுது அமமுனிவர், தமது சிஷ்யர்களான செல்வச் சிறுவர்களை அழைத்து, “என் கண்மணிகளே! நீங்கள் இருவரும் கூடி வெகு ஜாக்ரதையுடன் புறப்பட்டு யான் கற்பித்த இராமாயணத்தை பெரு மகிழ்ச்சியுடனே பாடிக் கொண்டு ரிஷிகளின் வாசஸ்தானங்களிலும் வினோதமாகச் செல்க. யாகம் நடக்குமிடமான ஸ்ரீராமபிரானது சந்நிதானத்திலும், ரிதவிக்குகளின் எதிரிலும், இதனை விசேஷமாகப் பாடுக. இதோ யதேஷ்டமான இனிய கனி கிழங்குகள் இருக்கின்றன. இவற்றைப் புசிப்பீர்களாயின் உங்களுக்குச் சிறிதும் இளைப்பு தோற்றாது. ரிஷிகளுடைய மத்தியில் ராமன் உங்களுடைய பாட்டைக் கேட்க சமீபத்தில் வரவழைப்பானாயின் அவ்விடஞ் சென்று நீங்கள் கானஞ் செய்யலாம். யான் உங்களுக்கு முன்னம் போதித்தவாறே சுலக்ஷணமாக மிகவும் மதுரமாய்க் கேட்போர்க்கு கானாம்ருதமாய் இருக்கும்படி ப்ரதி தினம்  இருபது ஸா்க்கம் வீதமாகக் கானஞ் செய்து வருக. யாவரேனும் உங்களுக்குப் பொருள் கொடுப்பதாக ஆசைகாட்டி அழைத்தால் பல மூலமுண்டு ஜீவிக்கும் ஆச்ரமவாஸிகளுக்கு தனமெதற்கு என்று சொல்லி நீங்கள் அங்கு செல்ல வேண்டாம். நீங்கள் யாருடைய குமாரர்களென்று ராமன் கேட்பானாயின் வால்மீகி முனிவரின் சிஷ்யர்கள் என்று அவனுக்கு விடை சொல்லவும்.

                இந்த இராமாயணத்தை யாழின் தந்தி ஸ்வரத்துடனே அதிமதுரமாகச் செவிக்கின்பமாய் ஆதி தொடங்கியே வெகுதீரமாய்ப் பாடுவீர்களாக. நாளை காலை தொடங்கி நீங்கள் யான் சொன்ன வண்ணம் சரியாக வீணையை, மீட்டிக் கொண்டு செவிக்கின்பமாக இராமாயணத்தைப் பாடி வருக,” எனக் கட்டளையிட்டனர்.

நூற்றியாறாவது ஸர்க்கம்

[குமாரர்கள் பாடுவது கேட்டு சபையோர் மகிழ்தல்]

            பிறகு அன்றிரவு நீங்கி பொழுது புலர்ந்ததும் அவ்விரட்டையர் காலையிலெழுந்து நீராடிச் சந்த்யா வந்தனமும், ஸமிதாதானமும் செய்து முனிவர் கூறிய வண்ணம் இராமாயணததை கானஞ் செய்து கொண்டே சென்றனர். அக்காலையில் ஸ்ரீராமன் அதைக் கேட்டு மிகவும் வியந்து மகிழ்ச்சியடைந்தான். அப்பால் ராமன் தனது வைதிக காரியங்களைச் செய்து முடித்துக் கொண்டு கற்றுணர்ந்த பெரியொர்களையும் விருத்த சூத்திரமறிந்தவர்களையும், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்தவர்களையும், வ்யாகரணம், நீதி சாஸ்த்ரம் முதலிய சாஸ்த்ரங்களில் பாண்டித்யமுடையோரையும், முனிவர்களையும், மற்றும் பலரையும் வரவழைத்துச் சபை கூட்டி மிக்க பெருஞ்சபை நடுவே இந்தச் சிறிய பாடகர்களை (லவகுசர்களை) வந்து உட்காரும்படி நியமித்தான். அப்பொழுது அச் சபையில் வந்து கூடிய ரிஷிகளும், அரசர்களும, ராமனையும், அச் சிறுவர்களையும், தமது கண்களால் பானம் பண்ணுகின்றவரெனச் சிறிது நேரம் இமை கொட்டாது நோக்கி ஆ! இக் குமாரர்கள் இருவரும் ரூப ஸௌந்தர்யங்களில் ராமனுக்கு முற்றும சமானமாய் இருக்கின்றனர். ஒரு பிம்பத்தினது ப்ரதிபிமபம் எனவே தோற்றுகின்றனர். இச் சிறுவர்களுக்குச் சடை முடியும், மரவுரியும் மாத்திரம் இல்லாதிருக்குமாயின் இப் பாடும் பிள்ளைகளுக்கும் நம் அரசனுக்கும் பேதமே தோற்றாது என்று ஆங்காங்கு பேசிக் கொள்ளலாயினர் அக் காலையில் முனி குமாரர்கள் கேட்டோர்க்கு ஆனந்தம் மேன்மேலும் விளைவிக்குமாறு மதுரமாகப் பாடத் தொடங்கினா. அதுவரையில் மானிட உலகத்தவர்களால் எந்நாளும் பாடப்படாத திவ்யமான அவர்களது கானத்தைக் கேட்டவர்கள் எல்லோரும் கேட்கக் கேட்க ஆனந்தம் அதிகரித்தவர்களாகிச் சிறிதும் திருப்தியடையாதவராயினர். முதல் இருபது ஸர்க்கங்களைக் கேட்ட ராமன் அச் சிறுவர்களுக்குத் தனித் தனிப் பதினெண்ணாயிரம் பொன்னும் பின்னும் அவர்கள் யாது வேண்டினும் கொடுக்கும்படி தனது சகோதரர்களுக்கு கட்டளை யிட்டான். அப் பொருள்களை அங்ஙனமே வெகு சீக்ரத்தில் லக்ஷ்மணன் கொண்டு கொடுக்க அப் பாடகர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் காட்டிலுள்ள கனி கிழங்குகளையே ஆகாரமாகக் கொண்டு வசிக்கும் நாங்கள் இவற்றைப் பெற்று யாது செய்வோம? எமக்குப் பொன்னும் பொருளும எதுக்கு' எனச் சிறிதும் பொருளாசை இல்லாதவர்களாய்ப் பணித்தனர். அது கேட்டு அவையில் உள்ள எல்லோரும் ஸ்ரீராமபிரானும் மிக்க வியப்புற்றவர்களாகி அச்சிறுவர்களை மேலாகக் கொண்டாடினர். பிறகு ராமன் அந்தக் காவ்யத்தின் சரிதத்தைக் கேட்க ஆவல் கொண்டு அக் குமாரர்களைப் பார்த்து “சிறுவர்களே நீங்கள் பாடும் இக்காவ்யம் எவ்வளவு பெரியது? எது வரையில் இயற்றப்பட்டுள்ளது? இம்மஹா காவ்யத்தை இயற்றியவர் யார்? அவர் இப்பொழுது எங்கு எழுந்தருளியிருக்கின்றார்?” என வினவ, அக் குழந்தைகள் “மஹா ப்ரபுவே இக காவ்யத்தை இயற்றியது வால்மீகி பகவான். இபபொழுது அவர் இந்த யாகத்திற்கு இவ்விடம் எழுந்தருளியிருக்கின்றார். இப் ப்ரபந்தம் இருபந்தினாலாயிரம் சுலோகங்களும் நூறு உபாக்யானங்களும அடங்கியது. இதனை ஆதி முதல் ஐந்நூறு ஸர்க்கங்களாகவும், ஆறு காண்டங்களாகவும் வகுத்து இவற்றுடன் உத்தரகாண்டமும் சேர்த்துச் செய்தருளியிருக்கிறார். இந்தக் கதாநாயகர் ஜீவிததிருக்குமளவும் நடக்கும் அவரது சரித்ரம் யரவும் இதில் கூறப்பட்டுள்ளது. ராஜனே! தேவரீருக்கு இஷ்டமாயின் வைதிக கார்யங்களொழிந்து சாவகாசமாக இருக்கையில் சகோதரர்களுடனே தேவரீர் கேட்டருளலாம்,” என்று விணணப்பஞ் செய்தனர். ‘அப்படியே செய்க’ என்று ராமன் அனுமதி கொடுக்க அக் குமாரர்கள் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வால்மீகி முனிவரிடம் போய்ச் சேர்ந்தனர். ராமனும் அக் குழந்தைகள் தாள லயங்களுக்கு இசைய வீணை மீட்டி இனிய குரலுடன் பாடிய கானத்தின் இனிமையைக் கேட்டு மகிழ்ச்சியை அடைந்தவனாகி யாகசாலைக்கு எழுந்தருளினான்.