சனி, 9 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 4

Please note Sri NVS swamy’s comments are within the brackets

13ம் கண்டம்
ஆபஸ்தம்ப ரிஷி இம் மந்த்ரங்களுக்கு தம் க்ருஹ்ய சூத்ரத்தில் ப்ரயோகம் எழுதும்போது, கர்பாதானம் செய்வதற்கு முன்பு, தன் பத்நீ ருதுவாக (மாதவிடாய் காலங்களில்) இருக்கும்போது, ரஜஸ்வலா (விலக்கான ஸ்த்ரீ) நியமங்களை (யஜுர் ஸம்ஹிதை 2ம் கண்டம் - 5ம் ப்ரச்னம் - முதல் அநுவாகம் கடைசீ பஞ்சாசத் (பஞ்சாதி) உத்கோஷிப்பதை (கூறுவதை) உபதேசிக்க (கணவனால் மனைவிக்கு எடுத்துக் கூறப்படவேண்டும் என்று) விதிக்கிறார்.
    கர்பம் தரிக்க காலம் ருது ஸ்நாநம் ஆகி (தூரம் குளித்ததிலிருந்து) 12 தினங்களுக்குள் தான். அதிலும் சில திதி வார நட்சத்திரங்கள் நிஷேதம் (தவிர்கக்ப்படவேண்டியது) உண்டு. அதிலும் இரட்டைப்படை தினங்களில் கூடினால்தான் புருஷ ப்ரஜைக்கு (ஆண் குழந்தைக்கு) ஹேது (வாய்ப்பு)  என்றும், இல்லாவிடில் ஸ்த்ரீ ப்ரஜைதான் என்றும் விஷயங்களை நம் தர்ம சாஸ்த்ர சங்க்ரஹத்தில் விரிவாய்க் காணலாம்.
    ரஜஸ் தோன்றிய அன்று அவள் சண்டாளிக்கு ஸமம்
    இரண்டாம் நாள் ப்ரஹ்மஹத்தி (ப்ராம்மணணை கொன்ற) செய்தவளுக்குச் ஸமம்
    மூன்றாம் நாள் வண்ணாத்திக்குச் ஸமம்
    நாலாம் நாளும் ரஜஸ் ஸம்பந்தம் இருக்கும் ஆதலால் அவள் பாகம் (சமையல்) செய்வதற்கும், மற்ற வைதீக கர்மங்களுக்கோ உகந்தவளல்ல. அதேபோல் போகத்திற்கும் (உறவு கொள்வதற்கும்  ) கூடாதவளே. அப்படிக் கூடினால் அதன் மூலம் பிறப்பவன் பதிதன் ஆவான்.
    ஸ்நாநமாகியும் அரண்யத்தில் அவளோடு கூடி பிறப்பவன் திருடன் ஆவான்.
    ருதுகால 3 தினங்களிலும் அவளுக்கு ஸ்நாநம் கூடாது. அப்படிச் செய்பவளுக்கு பிறப்பவன் நீரில் மரிப்பான். 
    எண்ணை தேய்த்துக்கொள்ளல் ஆகாது. அப்படிச் செய்பவளுக்கு கெட்ட சருமம் (தோல்) உள்ளவன் பிறப்பான்.
    (மேலும் என்னென்ன செய்யத் தகாத செயலுக்கு எப்படிப்பட்ட பிள்ளை பிறப்பான் என பட்டியலிடுகிறார்).
    சீப்பு முதலியதால் தலைவாரிக்கொண்டால்    -    மயிரில்லாதவனும்
    மையிட்டுக்கொண்டால்                -    ஒரு கண்ணற்றவனும்
    பல் தேய்த்துக்கொண்டால்                -    கறுப்பு நிற பல்லுடையவனும்
    நகத்தைக் கிள்ளினால்                -    கெட்ட(ஒழுங்கற்ற) நகமுடையவனும்
    நூல் நூற்றால்                    -    ஆணும்-பெண்ணுமற்ற நபும்ஸகனும்
    கயிறு திரித்தால்                    -     கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்பவனும்
    பானங்களை இலையால் அருந்தினால்        -    பைத்தியக்காரனும்
    கைகளால் திரவம் அருந்தினாலும்
    உயரமற்ற சிறிய பாத்திரத்தால் அருந்தினாலும்    -    குள்ளனும்
    பிறப்பார்கள். நீண்ட பாத்திரத்தைத்தான் நீர் முதலிய பானங்களை அருந்த உபயோகிக்க வேண்டும். ரஜஸ்வலையான (விலக்கான) 3 தினங்களிலும் இந்த வ்ரதங்களை (ஒழுக்கத்தை) கடை பிடிக்கவேண்டும். மேலும் இதுபற்றிய விசேஷ அம்சங்களை எமது “ஸ்த்ரீ தர்மம்" என்கிற நூலினை படித்து அறியவும்.
மந்த்ர அர்த்தம் ஆரம்பம் (மந்திரங்களின் பொருள் விளக்கம் ஆரம்பமாகிறது).
கர்பாதானத்தில் தேவதா ப்ரஸாதம்
    1. பர்த்தா ப்ரார்த்திக்கிறான் (முதல் மந்திரத்தால் கணவன் கீழ்க்கண்டவாறு வேண்டுகிறான்):
    விஷ்ணு தேவதை (என் மனைவியாகிய) உன் பெண் குறியை கர்பாதானம் செய்வதற்கு ஏற்றதாகச் செய்யட்டும்.
    அப்படித் தயாரான யோநியில், என்னிடமுள்ள உயிரணுக்களை (ரேதஸை - படைப்புக் கடவுளான) ‘ப்ரஹ்மா" (அநுக்ரஹித்துச்) செலுத்தட்டும்.
    ‘தாதா" எனும் தேவன் அதை கர்பமாக மாற்றட்டும்.
    ‘த்வஷ்டா" எனும் தேவன் அந்த கர்பத்தில் அங்கங்களை (உடலுறுப்புகளை) ஏற்படச் செய்யட்டும்.
(இதன் மூலம் அறியவேண்டியது: மந்திரமின்றி புணர்பவனுக்கு இந்த தேவதைகளின் அநுக்ரஹம் கிட்ட வாய்ப்பில்லாததால் - (ஸத்புத்ரன் என்னும்) நல்ல ஸந்ததியை எதிர்பார்க்க இயலாது என்பது நன்கு விளங்குகிறது.)
    2. கர்பம் தரிக்க - ஸிநீவாலி - ஸரஸ்வதி முதலிய தேவதைகளும் உதவி புரியட்டும். தாமரை மாலையை அணிந்திருக்கும் அஸ்விநீ தேவர்கள், உனக்கு கர்பத்தை உண்டுபண்ணட்டும்.
    3. அழகு வாய்ந்த அச்விநீ தேவர்களால் ஆன, அழகான ஸந்ததியாய் நீ பத்தாம் மாதம் ப்ரஸவிப்பதை விரும்புகிறோம்.
    4. விசாலமான பூமி தேவியானவள் ஆகாசத்தில் மேகங்களால், மழையாகிற ரேதஸ்ஸை க்ரஹித்து நல்ல பயிரை எப்படி உண்டுபண்ணுகிறாளோ, அப்படி நீயும் பத்தாம் மாஸம் ப்ரஸவிக்க கர்பம் தரிப்பாயாக.
    5. பூமி அக்நியையும், த்யு லோகம் இந்த்ரனையும் கர்பத்தில் வைத்திருப்பதுபோல் நீயும் கர்பம் தரிப்பாயாக.
    6. ஹே விஷ்ணோ இவளிடம் பத்தாம் மாதம் கர்பத்தை உண்டுபண்ணும்.
    7. (கர்பத்தை சிதைப்பதை தொழிலாகக் கொண்டவரான) ஹே! நேஜமேஷ தேவனே, நீரிங்கு வரவேண்டாம். வருவதாயின் எமக்கு ஸத்புத்ர ஸந்ததியை அளிக்க வாரும்.
    8. (ஹே கல்யாணி! என்று இப்படித்தான் கணவன் மனைவியை அழைக்கவேண்டும்.) என்னால் வழங்கப்படும் ரேதஸ்ஸை க்ருஹித்துக்கொள்ள தக்க நிலையில் நீ உன் யோநியை பேணுவாயாக. இதனால் புருஷ ப்ரஜை (ஆண் குழந்தை) ஜநிக்கட்டும். அதை நீ பத்து மாதம் தாங்குக. பிறக்கும் பிள்ளை மிகவும் திறமைசாலியாக இருக்கட்டும்.
    9. அம்பு (அம்பராத்தோணி எனும் அம்புகளை வைக்கும்) அம்புப் பையில் புகுவதுபோல், எனது உயிரணுக்கள் உன் யோனியை அடையட்டும். நீ பத்துமாதத்தில் மிகவும் கெட்டிக்காரனான புத்ரனை ப்ரஸவிப்பாயாக.
14ம் கண்டம்
    1. ப்ரஹ்மாவின் கார்யமான சுக்ல விஸர்ஜனத்தை (உயிரணுவை விடுதல்) நான் உன்னிடம் செய்கிறேன். அது உன் கர்பப்பையை அடைந்து, அங்கு பழுதற்றதாய் பத்து மாதம் பூர்த்தியாக தங்கி, நொண்டி முதலிய தோஷமற்றதாயும், துர்தேவதைகளின் தொல்லையற்றதாயும் உள்ள நல்ல குழந்தை பிறக்கட்டும்.
    2. நல்ல பெண்மணியே! உனக்கு ஆண் குழந்தை பிறக்கட்டும். தொடர்ந்து (நீ விரும்பும்வரை)ஆண் குழந்தைகளே பிறக்கட்டும். ப்ரஜாபதி முதலிய தேவதைகள் நம் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கட்டும்.
    3. அவர்களால் (தேவதைகளால்) உண்டான வீர்யங்களால் (சக்திகளால்) நீ ஸந்ததிகளை அடைவாயாக. பசுவிடம் கன்றுகள் பால் அருந்துவதுபோல், நீயும் சிசுவுக்கு பால் அருந்தக்கொடுக்கும் பாக்யத்தைப் பெறுவாயாக.
    4. ஓ! வாயு தேவனே! எனக்கு மனைவியை மகிழ்விக்கும் சக்தி அதிகரிக்கும்படி அருள்வீராக. நான் விரும்பும் பலன் வீணாகாதபடி கை கூடட்டம் (பலிதமாகட்டும்). (அணுக்கள் பரிமாற்றத்தின்போது (ஆக்ஸிஜன் எனும்) ப்ராண வாயு கிரியா ஊக்கியாக செயல்படுவதால் வாயு தேவன் இம்மந்திரத்தால் ப்ரார்த்திக்கப் படுகிறான்.)
கர்பாதான ப்ரஹரணம் முடிவுற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக