சனி, 3 டிசம்பர், 2016

இராம‌ நாட‌க‌ம் பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்

ஒன்பதாங் களம்
இடம்: --      சீதையின் அந்தப்புரத்தினின்று வரும் வழி
காலம்:--      நண்பகல்
பாத்திரங்கள்:-  இராமர், இலக்ஷ்மணர், சீதை
       (இலக்ஷ்மணர், இராமர் வரவை எதிர்பார்த்து நிற்கிறார். சீதை பின்தொடர இராமர் வருகிறார்)
இராமர்: -- தம்பீ! இலக்ஷ்மணா! சீதையும் என்னுடன் வருவதாகக் கூறுகின்றாள். காட்டிலுள்ள துன்பங்களை அவளுக்கு எடுத்துச் சொல்லியும் கேளேனென்கிறாள். ஆதலால் நான் அவளை அழைத்துச் செல்லச் சம்மதித்தேன். இனி நானும் சீதையும் தந்தையிடம் விடை பெற்றுச் செல்ல வேண்டுவதொன்றே யுள்ளது. நாங்கள் சென்று வரும்வரை, தந்தை தாயர்களைப் பாதுகாத்து, பரதனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டு, உன் சௌக்கியத்திற்கும் குறை நேராது கவனித்து வா.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தங்களுக்கு அடியேன் செய்த பிழை என்ன? என்னை இங்குவிட்டுத் தாங்கள் கானகஞ் செல்வது தர்மமாகுமா? தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டியது இவ்வரசு. அதைத் தங்களுக்குக் கொடுக்க ஆற்றலில்லாது, ‘குங்குமம் சுமந்த கழுதைபோல் வில்லும், அம்பறாத்துணியும், தங்களுக்குத் தம்பியென்ற பெயருஞ் சுமந்து கொண்டிருக்கிறேன். தங்களுக்கு வனத்திலும் நான் கைங்கரியம் செய்ய ஏலாவிட்டால் இவைகளால் பயனென்ன? பிறகு இந்த வில்தான் எதற்கு? இவ்வம்பறாத் துணிதானெதற்கு? தங்கள் பின்பிறந்தவன் என்ற பெயரோடு திரியும் இச்சடலந்தானெதற்கு?
இராமர்:-- தம்பீ! தந்தையிருக்கும் நிலையில் நீ என்னைப் பின்தொடரல் நியாயமாகுமா?

அன்னைய ரனைவரு மாழி வேந்தனும்
முன்னைய ரல்லர்வெந் துயரின் மூழ்கினார்
என்னையும் பிரிந்தன ரிடரு றாவகை
உன்னைநீ யென்பொருட் டுதவுவா யையா.
நம்முடைய தாய்மாரும் தந்தையரும் முன் இருந்ததுபோல் இல்லை. எனக்குப் பட்டமாகாததை எண்ணி மிகவும் வருந்துவார்கள். அன்றியும் என்னைப் பிரிவதால் மிகவும் துயர முறுவார்கள். எனக்குப் பிரதிநிதியாக நீ இவ்விடமிருந்து அவர்கள் துயரத்தை ஆற்றித் தைரியம் சொல்லி அவர்களைத் தேற்றிக் கொண்டிரு. இதுவே தர்மநெறி. இதைவிட்டு என்னைத் தொடர்ந்து வருவது உனக்கும் அழகல்ல, உன்னை அழைத்துச் செல்வது எனக்கும் முறையல்ல.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தந்தைதாயர் துயரை ஆற்றுவதற்குப் பரதன் இருக்கின்றான். சத்துருக்நன் இருக்கின்றான். என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவையில்லை. காட்டில் உறையும் தாங்களே உதவியை வேண்டுவீர்கள். காட்டிலாயினும் தங்களுக்குத் துணையாயிருப்பேன் என்ற நம்பிக்கையால்தான் தாங்கள் வனஞ் செல்வதைத் தடுக்காமலிருக்கின்றேன். தாங்கள் துணையின்றி கானகஞ் செல்லச் சம்மதியேன். மேலும், தங்களைப் பிரிந்து நான் உயிர் தரித்திருக்க எவ்வாறு இயலும்?

நீருள வெனினுள மீனு நீலமும்
பாருள வெனினுள யாவும் பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானுஞ் சீதையும்
ஆருள ரெனினுளம் அருளு வாயண்ணா.
அண்ணா! நீருள்ளவரையிற்றானே நீலோற்பல மலரும், மீனினமும், தடாகத்தில் வாழும்! உலகமுள்ள வரையிற்றானே அதில் காணப்படும் சராசரப் பொருள்களும் இருக்கும்! அங்ஙனமே தாங்கள் இருக்குமிடத்தில்தானே சீதையும் நானும் இருக்கக் கூடும்? தங்களை நீங்கி அரை க்ஷணமேனும் நான் வாழ்வேனா? என்னை வரவேண்டாம் என்று சொல்லத் தங்களுக்கு எப்படி மனம் வந்தது? தாய் தேடிவைத்த இந்தப் பாரையாள பரதன் வருவான். அந்தப் பாவி முகத்தில் விழிப்பதற்கு முன் தங்கள் திருவடிக்குத் தொண்டு செய்யக் காட்டிற்குச் சென்றுவிடலாமென்றிருக்கும் என்னைத் தாங்கள் தடுப்பது எதுபற்றி?

பைந்தொடி யொருத்திசொற் கொண்டு பார்மகள்
நைந்துயிர் நடுங்கவு நடத்தி நானெனா
உய்ந்தன னிருந்தன னுண்மை காவலன்
மைந்தனென் றினையசொல் வழங்கி னாயலோ.
பெண் சொற்கேட்டுத் தங்களைக் கானேகுமா றுரைத்து இன்னமும் உயிர் தரித்திருக்கும் ஓர் அரசர் மகன் இவன். ஆதலால் இவனும் வன்னெஞ்சனா யிருப்பா னென்றோ தாங்கள் என்னை வரவேண்டாம் என்று கூறத் துணிந்தீர்கள்? கருணைக்கோர் இருப்பிடமாகிய தங்கள் நாவினின்று இவ்வளவு கொடிய மொழி வந்தபோது, அரசர் நாவினின்று அவ்வளவு கொடிய மொழி வந்தது ஆச்சரியமல்ல. அண்ணா! நமது சூரியகுலத்தின் குணம் ஏன் இவ்வாறு மாறியது? இயல்பாகவே மிருதுவசனிகளெனப் படுபவர் பெண்பாலர். அவர்களுள்ளும் அரச வம்சத்தில் பிறந்த மாதர் அதிமிருது வசனிகளாகவும், மெல்லென்ற நெஞ்சினராகவும் இருப்பது இயல்பு. அந்த இயல்பு மாறி, உரிமை மைந்தர்க்கு அரசை மறுத்து அவரை வனம்போக்குமாறு கூறிய கொடுமொழியாளும், வன்னெஞ்சினளுமாகிய ஒருத்தி பட்டத்தரசியென்று நம் குலத்திலன்றோ வந்து புகுந்தாள்! மனைவி சொற்படி மைந்தனை வனம் போகும்படி உரைத்த கொடியனும், அரசனென நம் குலத்திலன்றோ தோன்றினான்? தமையனுக்குரிய அரசைத் தனக்குரிமைப் படுத்திக்கொள்ளும் பாதகன் ஒருவனும் அரசகுமாரனென்று நம் குலத்திலன்றோ வந்துதித்தான்? இவ்வளவு அக்கிரமங்களைக் கண்டும் அழகுக்கு வில்லுங் கணையுஞ் சுமந்து பேடிபோற் பேசாதிருக்கும் நானும் இக்குலத்திலன்றோ வந்து பிறந்தேன்? இவ்வளவு கொடியவர்கள் சூழ்ந்த குடும்பத்தில் தங்கள் கருணை எவ்வாறு தலைகாட்டும்? ஆதலால் தாங்கள் என்னை வரவேண்டாம் என்று தடுப்பது தங்கள் குணமல்ல, தங்கள் குலத்தின் குணம் போலும்!
இராமர்:-- தம்பீ! தந்தைதாயர் நிலையைக் கருதி உன்னை நான் இங்கு இருக்குமாறு உரைத்தேன். உனக்கு இங்கிருக்க விருப்பமின்றாயின், உன் இஷ்டம்போல் என்னுடன் வரலாம். நீ என் உயிருக்குயிரானவன். உன் மனம் வருந்த நான் ஏதுஞ் செய்யேன். ஆதலால், இலக்ஷ்மணா! ஜனகமகராஜர் யாகத்தில் வருணபகவான், திவ்ய விற்களிரண்டு, வலிய கவசங்கள் இரண்டு, ஒளிபொருந்திய தங்க வாட்கள் இரண்டு இவைகளை எனக்குக் கொடுத்தாரல்லவா? அவைகள் பூஜாகிரகத்தில் இருக்கின்றன. அவைகளை எடுத்துக்கொண்டு, உன் நண்பர்களிடம் விடை பெற்று விரைவில் வா. நான் தந்தையாரைக் காணச் செல்கிறேன்.
இலக்ஷ்மணர்:-- அண்ணா! அகமகிழ்ந்தேன். நான் பிறந்ததாலடையக் கூடிய பேற்றைப் பெற்றேன். இதோ சென்று தங்கள் கட்டளைகளை நிறைவேற்றி நொடியில் வருகின்றேன். (நமஸ்கரித்துச் செல்ல யத்தனிக்கிறார்)
இராமர்:-- இலக்ஷ்மணா! மற்றொன்று கூற மறந்துவிட்டேன். நான் எனது பொருள்களை யெல்லாம் பிராமணர்களுக்கு தானஞ் செய்யக் கருதியுள்ளேன். சீதையும் தன் பட்டாடைகளையும், பெருமிதமான பூஷணங்களையும் சுமங்கலிகளுக்குத் தானஞ் செய்துவிடுவாள். ஆதலால் நீ முன்னதாகச் சென்று நமது குரு வசிஷ்டரின் புத்திரர், சுயஜ்ஞரையும், மற்ற பிராமணர்களையும் தவசிகளையும் அழைத்துக்கொண்டு வா. பிறகு மற்றக் காரியங்களைச் செய்யலாம்.
இலக்ஷ்மணர்:-- அப்படியே! (வணங்கிப் போகிறார்).  

திங்கள், 28 நவம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

இன்று (28-11-2016) நடந்த “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” 63ஆவது  டெலி உபந்யாஸம்.

இன்று முதல் கிஷ்கிந்தா காண்டம் ஆரம்பம்.

பகவத் கைங்கர்யம் தரும் பலன்கள் என்ன?

http://www.mediafire.com/file/b654h967f1cxseh/063_SSR_%2828-11-2016%29.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YklU3mnYezjldw8Z-B

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1  களம் 8 (தொடர்கிறது)

சீதை:-- நாதா! தங்கள் மொழியினும் கொடியதா அக்காடு? பிராணபதீ!

பரிவிகந்த மனத்தொடு பற்றிலா
தொருவு கின்றனை யூழிய ருக்கனும்
எரியு மென்பதி யாண்டைய தீண்டுநின்
பிரிவி னுஞ்சுடு மோபெருங் காடன்பா

என்னைச் சிறிதும் பற்றின்றி ஒதுக்குவதற்குக் காரணமாக, காட்டின் கொடுமையைப் பலவாறு விரித்துக் கூறினீர்கள். ஊழித்தீயும் வேகும்படியான அந்தக்காடு, சுடுமென்கிறீர்கள். தங்கள் பிரிவைப் பார்க்கிலும் அதிகமாகவா அது சுடும்? நாதா! தாங்கள் செல்லும் காடு, மகா கொடியதென்ற அந்தக் காரணத்தாலேயே நான் தங்களை அவசியம் பின்பற்றி வருவேன். அங்கேதான் தங்களுக்கு நான் பணிவிடை செய்வதவசியமாகும். நான் புற்களையும், முட்களையும், கற்களையும் மிதித்துக்கொண்டு தங்களுக்கு முன்னாகச் சென்று தாங்கள் செல்வதற்கு வழியைச் சுத்தப்படுத்தி வைப்பேன். தங்களுக்கு தாகமுண்டாகிய காலத்து, நான் நீர் தேடிக் கொண்டுவந்து கொடுத்து தங்கள் தாகத்தைச் சாந்தி செய்வேன். தாங்கள் கண்ணுறங்கும்போது, நான் தங்கள் அருகிருந்து, விஷ ஜந்துக்கள் முதலியவற்றால் தங்களுக்கு இடையூறு நேரிடாது பாதுகாப்பேன். தங்கள் உணவுக்கு வேண்டிய காய், கனி, கிழங்குகளைத் தேடிக் கொண்டுவந்து கொடுப்பேன். என் பிராணபதீ! ‘இவ்வகையான பணிவிடைகளையெல்லாம் செய்து, இவள் கிருதார்த்தையாய் விடுவாளே’ என்ற பொறாமையும், ‘நம் வார்த்தையைத் தட்டிப் பேசுகிறாளே’ என்ற கோபமும் கொள்ளாது, என்னையும் தங்களோடு அழைத்துச் செல்லுங்கள்.

இராமர்:-- சீதா! நீ உயர்குலத்திற் பிறந்த உத்தமி. மனம் போன போக்கெல்லாம் போகாதே. அரண்மனை வாசத்திற்கே நீ பிறந்தவள். எனக்குப் பணிவிடை செய்ய வேண்டுமென்ற ஆவல் உனக்கிருந்தபோதிலும், காட்டிற் சென்றபிறகு நேரும் கஷ்டங்களை நீ சகிக்க மாட்டாய். நான் உன்னுடைய நன்மையை நாடியே இவ்வளவு தூரம் சொல்லுகிறேன். என் பேச்சைத் தட்டாதே.

சீதை:-- அன்பா! தங்களுடனிருக்கும்வரையில் எனக்கு யாதொரு கஷ்டமும் நேராது. அன்றியும், நான் என் பிறந்தகத்திலிருந்தபொழுது, ‘நான் வாழ்க்கைப்பட்டபிறகு, கொஞ்ச காலம் வனத்தில் வசிக்க நேரும்’ என்று சோதிடர் என் தந்தைக்குச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நான் என்று கேட்டேனோ, அன்று முதல் ‘காட்டிற்குப் போகவேண்டும்’ என்ற ஆசையுடையவளாகவே இருக்கிறேன். சோதிடம் பொய்க்குமா? வனஞ் செல்ல வேண்டுமென்று விதியிருந்தால் அதை வெல்ல முடியுமா? நான் அவ்விதிப்படி தனியாகச் செல்வதினும் தங்களுடன் சேர்ந்தே செல்வேன். வனவாசத்திற் கஷ்டங்கள் பலவுள வென்பதை நான் அறிவேன். அவை யெல்லாம் திருத்தம் பெறாத மனத்தினர்க்கும், பொறுமையில்லாதவர்க்குமன்றோ? சோதிடர்கள் சொன்னது மாத்திரமல்ல, என் தாயாரிடத்தில், பிச்சையெடுக்க வந்த ஒரு குறிகாரி, என்னைச் சுட்டி, ‘இவள் சிறிது காலம் காட்டில் வசிப்பாள்’ என்று சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன். ஆதலால், நான் அவசியம் தங்களுடன் காட்டுக்கு வருவேன். ஒருத்தி, ஒழுக்கம் தவறாதவளாயிருப்பின், ‘இவ்வுலகத்தில் எந்தப் புருஷன் கையில் தகப்பனாதியோர் தீர்த்தத்தை வார்த்துக் கன்னிகாதானம் பண்ணிக் கொடுத்து விடுகின்றனரோ, அவனுக்கே அவள் மேலுலகத்திலும் மனைவியாவாள்’ என்று வேதங்கூறுவதாக பிராமணர்கள் சொல்லுகிறார்களன்றோ? அவ்வாறாக, ஒழுக்கந் தவறாதவளாயும், பதிவிரதையாயும், தங்களுக்குப் பணிவிடை செய்தலையே பெரும் பாக்கியமும் கடமையுமாகக் கொண்டிருப்பவளாயும், தங்களையே தஞ்சமாக எண்ணித் தங்களைத் தவிர வேறு சரணில்லாதவளாயும், தங்களுக்கு வரும் சுகதுக்கங்களைத் தனக்கு வரும் சுகதுக்கங்களாகக் கருதியிருப்ப வளாயும் இருக்கும் என்னை வெறுத்து, இங்கே விட்டுப் போகக் காரணமென்ன? என் காதலா! நான் காட்டில் தங்களோடு மாத்திரம் இருப்பேனாயின், முள்ளில் மிதிப்பது பஞ்சில் மிதிப்பது போலவும், காற்றில் புழுதி பறந்து மேனியிற் படிவது சந்தனம் பூசுவது போலவும் எனக்குத் தோற்றும். தங்களோடு வன மத்தியில் புல்லின் மீது படுத்து உறங்கினால் அதில் உண்டாகும் சுகம், அரண்மனைப் பள்ளியறையில், அம்சதூளிகா மஞ்சத்தின்மீது சயனிப்பதில் உண்டாகுமோ? தங்களோடு சேர்ந்து இருப்பதே எனக்குச் சுவர்க்கம். தங்களைப் பிரிந்திருப்பதே நரகம். தாங்கள் என்னைத் தங்களுடன் அழைத்துச் செல்லாவிடில், இன்றைத் தினமே உயிர் துறப்பேன். தாங்கள் என்னை விட்டுப் போனவுடன் என் உயிரும் என்னைவிட்டுப் போய்விடும். இத்துயரை ஒரு முகூர்த்தகாலம் சகிக்க என்னால் முடியவில்லையே, அப்படியிருக்க, பத்து வருஷம், அப்பால் ஒரு மூன்று வருஷம், அப்பாலும் ஒரு ஒரு வருஷமும் சகித்தல் முடியாதென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இராமர்:-- சீதா! உன்னை அழைத்துப் போவதற்கு வேறோர் இடையூறு மிருக்கிறதே. நான் செல்வது தவஞ்செய்வதற்கு. தவசிகளுக்கு சம்சார பந்தங்கள் கூடாதென்பதை நீ அறியாயோ? சம்சார பந்தம்,

புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
                         பொன்னாட்டும் வந்த தென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்தியிப்
                             பூமியி லிருந்துகாண
எத்தனைவி காதம்வரு மென்றுசுகர் சென்றநெறி
                              யிவ்வுலக மறியா ததோ?

என்றபடி சம்சாரபந்தம் என்று ஒன்று வந்துவிட்டால், தேவர்களுக்கும் தவஞ்செய்து பேறு பெறுதல் அரிது. அந்த ஒரு பந்தம் காரணமாக தவத்துக்குப் பல இடையூறுகளும் வந்து சேரும். தேவர்களுக்கே அங்ஙனமானால், மனிதர்களுக்குச் சொல்லவேண்டுமா? அதனாலல்லவா, சுகமுனிவர் பிறந்தவுடன் துறவடைந்து நிடதமலை மேலேறினார். அதை உலகமெல்லாம் அறியுமே. அவ்வாறாக, சிலகாலந் தவஞ் செய்வதற்கு உன்னை அழைத்துச் செல்லுதல் நியாயமாகுமா?

சீதை:-- ஒவ்வொருவரும் தங்களுக்கனுகூலமான பிரமாணங்களையே எடுத்துக் கூறுவது வழக்கம். அதனால் மற்றவைகளை மறந்து விடுகிறார்கள். சுகபிரமரிஷி உலகத்துக்கஞ்சி வனத்துக்கோடியதை மட்டும் எடுத்துச் சொன்னீர்களே யொழிய, மனைவியருடன் வனத்திலிருந்து மாதவஞ் செய்தோரைத் தாங்கள் மறைத்து விடுகிறீர்கள் அல்லது மறந்து விடுகிறீர்கள் போலிருக்கிறது. நால்வகை ஆச்சிரமங்களுள் வானப்பிரஸ்தமும் ஒன்றென்பது தங்களுக்கு நன்கு தெரியும். அவ்வாச்சிரம தர்மப்படி மனைவியுடனுந் தவஞ் செய்யலாமல்லவா? அதுவும் வேண்டாம். மகா தவசிரேஷ்டராகிய, காசியபர், கௌதமர், கண்வர் முதலியோர், தமது மனைவிகளோடு காட்டிலிருந்து தவஞ் செய்யவில்லையா? அந்த மனைவியர்களால் அவர்களுக்கு என்ன துன்பம் உண்டானது? தங்களுடைய வைதீக காரியங்களுக்கு நான் ஒரு நாளும் இடையூறா யிரேன். தங்களைப் போலவே நானும் விரதநெறிகளைப் பூண்டு, தாங்கள் செய்யும் தவத்திற்கு உதவியாகத் தங்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருப்பேன்.

இராமர்:-- என் கண்மணீ! நான் சொல்வதைக் கேள்.

சீதை:-- நாதா! என்னை அழைத்துப் போவதானால் எதுவும் சொல்லுங்கள். வேறு விஷயமானால் அதைச் சொல்லுந்துணையும் உயிர் வைத்திருப்பார்க்குச் சொல்லுங்கள்.

இராமர்:-- சீதா! உன் இஷ்டப்படியே உன்னையுமழைத்துப் போகிறேன். உனக்குத் துயரம் விளைவிப்பதாயின் நான் சொர்க்கத்தையும் விரும்பேன்.

(இராமர் சீதையை அழைத்துக்கொண்டு செல்கின்றனர்)