சனி, 26 டிசம்பர், 2009

மயிலே ! வா; உன் மேகத்தைப் பாடுகிறோம்

11. ஊருக்கு ஒரு உத்தமி.

ஆய்ப்பாடியில் கண்ணன் 'நந்தகோபன் குமரன்' என்ற நிலையில் மட்டும் வளரவில்லை; 'ஊருக்கு ஒரு பிள்ளை' என்ற நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தான் அல்லவா? ஆனால் கண்ணன் உத்தமன் என்று பெயர் எடுக்கவில்லை. இவளோ உத்தமி என்றும் பெயர் பெற்று அந்தப் புருஷோத்தமனுக்கு இசைந்த பக்தமணியாக வளர்ந்து வருகிறாள். 'பக்தி வளர்ச்சியில் பாங்கான பருவம் உடையவள்' என்றும் கொண்டாடப் பெறுகிறாள். இவளை இப்பெண்கள், 'குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!' என்று கொண்டாடிக் கூப்பிடுகிறார்கள்.
இவளோ, "கடவுளை நம்மால் தேடிப் போகமுடியுமா? அவனல்லவா நம்மை நாடி நாம் இருக்கும் இடத்திற்கு இறங்கி வரவேணும்?" என்று இறுமாந்திருக்கும் பக்தமணிபோல், 'அவனை அடைவதற்கு நானோ நோற்பேன்? வேணுமானால் அவனே நோற்று வரட்டும்!' என்று இறுமாந்து படுக்கையில் படுத்த வண்ணம் ஆனந்தக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளாம்.
'அந்தக் கனவுலகத்தில்தான் இருக்கிறாளா? அல்லது அந்தக் கனவையும் விட்டுப் பேருறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாளா?' என்று அறியமுடியாத ஒருவகை நிலையில் இப்பெண் இருக்கும்போது, உறவினர் தோழிமார் ஆகியவர்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு இவள் வீட்டை முற்றுகை இட வந்தவர்கள்போல் வாசலில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
கண்ணனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டே நிற்கிறார்கள். உள்ளே இருப்பவளோ உடம்பிலும் அசைவில்லாமல், வாயிலும் அசைவில்லாமல் படுத்த படுக்கையாய் இருக்கிறாள். பெண்கள் பாடுகிறார்கள்:
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறல்அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!

கன்றுகளோடு கூடின பசுக் கூட்டங்களைக் கறக்கத் தெரியும் இக்கோவலர்களுக்கு, சத்துருக்களிடம் சண்டை போடவும் தெரியுமாம். மற்றைப்படி, குற்றம் ஒன்றும் அறியாதவர்கள்! இத்தகைய சாதுக்களுக்கும் பகைவர்கள் உண்டோ என்றால், கண்ணனுடைய மேன்மையைப் பொறாதவர்களை யெல்லாம் இவர்கள் பகைவர்களாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பு. வலுச்சண்டைக்குப் போகாமல், வந்த சண்டையை விடாத சாதுக்களும் உண்டு; அத்தகைய சாதுக்களுமல்லர் இக்கோவலர்கள்! கண்ணனுக்குத் தீங்கு இழைப்பவர்கள் மீது படையெடுத்தும் போவார்களாம். இத்தகைய 'கோவலர்தம் பொற்கொடியே!' என்று இவளை அழைக்கிறார்கள் இவர்கள்.
ஜனக குலத்தை ஜானகி விளக்கம் செய்ததுபோல் கோவலர் குடியை இவள் விளக்கம் செய்கிறாளாம். இவளைப் 'பொற்கொடி' என்று குறிப்பிடுவதன் உட்பொருள், கோல் தேடிப் படரும் கொடிபோல் இவள் உள்ளமும் கண்ணனைத் தேடிப் படரவேண்டும் என்பது. இவர்கள் குறிப்பு இது. ஆனால் இவள் மனநிலையோ இந்தக் குறிப்பிற்கு இசைவாக இல்லை இப்போது.
'பொற்கொடியே!' என்று இவளை அழைத்தவர்கள் 'புனமயிலே' என்றும் கூவி அழைக்கிறார்கள். 'நாங்கள் மேகத்தைப் பாடுகிறோம், மயில் ஆடிக்கொண்டு வரவேண்டாமா?' என்று ஆதுரத்துடன் எதிர்பார்க்கிறார்கள். புனமயிலே! போதராய் --- அதாவது காட்டில் இஷ்டப்படி திரிகிற மயில் போன்றவளே! எழுந்து வருவாயாக – என்கிறார்கள்.
'புனமயிலே' என்று கூறுவது மயிலின் தோகை போன்ற கூந்தல் அழகை உடையவள் இவள் என்பதையும் குறிப்பிடுகிறது.இந்தக் கூந்தல் அழகியின் சமுதாய அழகையும் ஒளியையும் சுட்டிக் காட்டுகிறது 'பொற்கொடி' என்ற பதம். தினைப்புனத்தை மயில் அழகு செய்வதுபோல் தங்கள் கூட்டத்தை இப்பெண் அழகு செய்யவேண்டும், அழகு செய்யக்கூடியவள் என்ற கருத்தும் புலப்பட இவளை அழைக்கிறார்கள் இவர்கள்.
'செல்வப் பெண்டாட்டி!' என்றும் இவளை அழைக்கிறார்கள்.பெண்மையைச் செல்வமாகக் கொண்டிருப்பவள் இவள் என்பது பொருள். 'கிருஷ்ண பக்திச் செல்வத்தை எங்களோடு சேர்ந்து அனுபவிக்க நீயும் எங்களுடன் வந்து கலந்துகொள்ள வேண்டும்' என்கிறார்கள்.
'சுற்றத்தாரும் தோழிமாரும், உறவுமுறை உள்ள தோழிமாரும், எல்லாரும் வந்து காத்திருக்கிறார்களே, மேகவண்ணனான கண்ணனது திருப் பெயரைப் பாடுகிறார்களே; நீ மட்டும் உடம்பையும் வாயையும் அசைத்துக் கொள்ளாமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கலாமா? இது தகுமா? இது தருமந்தானா? எந்தப் பயனை எண்ணி இப்படி அசைவற்றுக் கிடக்கிறாய், நிர்விகல்ப சமாதியில் இருப்பவரைப்போல?' என்றெல்லாம் பொருள்படப் பேசி முடிக்கிறார்கள்.
'பெண்மையை ஆளும் இந்தச் செல்வி பெண்மைக்கும் செல்வம்தான். எங்களுக்கும் செல்வம்தான். கண்ணனுக்கும் செல்வம்தான்!' என்ற குறிப்புடன் இவர்கள் அழைக்க, கடைசியாக இவளும் களித்துக் கூத்தாடும் மயில்போல் வெகு உற்சாகமாக வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாள் என்று கருதலாம். இந்தப் பொற்கொடியும் முடிவில் இசைந்த கோல் தேடிப் படர்கின்றது பிற கொடிகளுடன்.

மயிலே ! வா; உன் மேகத்தைப் பாடுகிறோம்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறம்அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 11.

விளக்கம்

எழுப்ப வந்திருப்பவர்களில் உறவினர்களும் தோழிமார்களுமாகிய பலர் காணப்படுகிறார்கள். அவர்கள் எழுப்பவும் இவள் உறங்குவது சரியல்ல என்கிறார்கள். சாளரத்தின் வழியாகப் பார்க்கிறார்கள். பேசாதது மட்டுமா? – உடம்பையும் அசைத்துக் கொடுக்காமலே கிடக்கிறாள். இப்படி உறங்கும் பொருள்தான் என்ன? பொருளும் பயனும் உறக்கம்தானா? கிருஷ்ண பக்தி என்ற அந்த உறக்கம்தானா? எந்த உறக்கமாயினும் அது பொருளல்ல என்கிறார்கள். தங்களுடன் வந்து கலந்துகொண்டு கண்ணனை அடைவதே நலம் என்பதை வற்புறுத்துகிறார்கள்.
பக்தி உலகிலும் சொந்த நலம் பிறர் நலத்துடன் கலந்து இருப்பதுதான். இங்கும் சமுதாய மனப்பான்மை இன்றியமையாதது. இது இப்பாசுரத்தின் உட்பொருள். உத்தம பக்தர்கள் இந்த உண்மையை நன்கு உணர்ந்து ஒழுகுவர் என்ற குறிப்பையும் இப்பாசுரத்தில் காண்கிறோம். பிறரையும் திருத்தி உடன் சேர்த்துக் கொள்ள முயலாமல் ஒருவன் தான் மட்டும் பக்திப் பேரின்ப நெறியில் செல்ல முடியும் என்பது வீண் கனவு.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

எது சொர்க்கம்?


10. கும்பகர்ணனை வென்றவள்.

               இவள் சாதாரண உக்கத்திற்கு உட்பட்டிருக்கவில்லை; கிருஷ்ண பக்தியில் மூழ்கி அந்தப் பரவசம் என்ற உறக்கத்தைத்தான் சொர்க்க போகமாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். இதைப் பெண்கள் அறிவார்கள். 'இப்படி இவள் தன்னலம் பாராட்டுவது தகாது' என்ற குறிப்புடன், இவளை எழுப்பித் தங்களுடன் கலந்து கிருஷ்ணாநுபவம் செய்யுமாறு வேண்டிக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள்.
               'நீ தவம் செய்தவள்; அந்தத் தவத்தின் பயனாக இப்போது பக்திக் காதல் என்ற சொர்க்கத்தை அநுபவித்துக் கொண்டிருக்கிறாய். இது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தலைவியாக மதித்திருக்கும் நீயே இப்படித் தன்னலம் கொண்டிருக்கலாமா? வெளியே வந்து எங்களுடன் கலந்துகொண்டு எங்களுக்குத் தலைமை வகித்து, பக்திச் செல்வத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாமா?' என்ற குறிப்புடன் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!" என்று முதல் முதல் கூப்பிடுகிறார்கள். பதில் இல்லை.
               வாசலைத்தான் திறக்கவில்லை; வாயைத் திறக்கவும் இல்லையே! இத்தகைய பரவசத்தால், 'எங்கள் கதிதான் என்ன?' என்பதை ஆலோசித்துப் பார்ப்பதற்கும் முடியாதே என்கிறார்கள். 'மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?" என்று கேட்கிறார்கள்.
               'இப்போது கதவைத் திறக்க அவகாசமில்லை' என்று ஒரு பேச்சு வாயைத் திறந்துகொண்டு வந்தாலும் போதுமே என்கிறார்கள். அப்படியானால் தங்களைப் பற்றிய நினைவு அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே!
               'இது பரவச நித்திரை அல்ல, சாதாரண நித்திரைதான்; அப்படியானால் இவ்வளவு ஆழ்ந்த தூக்கம் இவளுக்கு எப்படித்தான் வந்தது?' என்றும் எண்ணமிடுகிறார்கள். 'இது என்ன, கும்பகர்ண நித்திரையாக இருக்கிறதே!' என்று அதிசயப்படுகிறார்கள்.
               'வாலியும் போனான், வாலும் போச்சு!' என்று அனுமன் கூறினான். 'கும்பகர்ணன் போனான், அந்தக் கும்பகர்ண நித்திரையும் போச்சு!' என்று இவர்கள் எண்ணியிருந்தார்கள். பகவான் கும்பகர்ண வதம் செய்த அந்த இராமாயணக் கதையைக் கண்முன் நிகழ்ந்ததுபோல் இவர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்களே, அதைச் சொல்லிப் பார்க்கிறார்கள் இப்பொழுது; 'நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்"  
               கும்பகர்ணன் ராமனுக்குத் தோற்றான் என்பது இராமாயணப் பிரசித்தமான நிகழ்ச்சி. ஆனால் அவன் இராம பாணத்திற்குத்தான் தோற்றான்; உறக்கப் போட்டியில் இராமன் முதலான எத்தனை பேர்களையும் வென்றுவிடக் கூடியவன் தானே! போரில் இராமனுக்குத் தோற்ற கும்பகர்ணன் உறக்கத்தில் இவளுக்குத் தோற்றுப் போனான் என்கிறார்கள். தோற்றவர் பொருளை வென்றவர் கைப்பற்றிக் கொள்வதுண்டு. கும்பகர்ணனையும் இராவணனையும் வென்ற இராமன் இலங்கா ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டு விபீஷணனுக்குக் கொடுத்தான் என்பது பிரசித்தம். இவளோ உறக்கப் போட்டியில் தோற்றுப்போன கும்பகர்ணனது உறக்கத்தைக் கைப்பற்றிக்கொண்டு வேறொருவருக்கும் கொடுத்துவிடாமல், தனக்கே ஏகபோக உரிமை ஆக்கிக் கொண்டிருக்கிறாளாம்.
               இராமனுக்குத் தோற்ற கும்பகர்ணன் மனசோடு ஒன்றையும் இராமனுக்குக் கொடுக்கவில்லை. இவளுக்குத் தோற்றதும், தன் பெருந்துயிலை அப்படியே கொடுத்துவிட்டானாம். ஏற்கனவே கும்பகர்ணனை வென்ற துயிலுடன், அந்தப் பெருந்துயிலும் சேர்ந்து கொண்டது.! வாய்ச்சொல்லாகக் கொடுத்த்தில்லை; மரண சாசனம் பண்ணிக் கொடுத்துவிட்டது போல் சாட்சி சொல்லுகிறார்கள் பெண்கள்; "கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?" என்று கேட்ட போதிலும், அவன் கொடுத்து விட்டது போலவே துணிகிறார்கள் இவர்கள்.
               'மிகவும் சோம்பலை உடையவள்' என்றும் இவளை மதிப்பிடுகிறார்கள் கடைசியாக. அதே சமயத்தில் தங்களுக்கெல்லாம் ஆபரணமாக விளங்கும் தகுதி உடைய பக்தமணி இவள் என்பதையும் மறந்துவிட முடியவில்லை. ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! என்று முரண்பட்ட இருவகை உணர்ச்சிகளுடன் இவர்கள் இவளை அழைப்பதைத்தான் பாருங்கள்.
               'தேற்றமாய் வந்து திற' என்பது முடிவுரை. 'உறக்க மயக்கம் தெளிந்து, சோம்பல் தெளிந்து, கதவைத் திற' என்கிறார்கள். கிருஷ்ணாநுபவத்தில் மூழ்கிப் பரவசத்தில் தங்களை மறந்திருந்தாலும் அந்த நிலையும் தெளிந்து கதவைத் திறக்கச் சொல்லுகிறார்கள்.

எது சொர்க்கம் ? – உறக்கமா, காதலா?

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்
               இந்தப் பெண் கிருஷ்ண பக்தி என்ற சொர்க்கத்தில் ஆழ்ந்து மூழ்கிக் கிடக்க,'இவள் உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறாளே!' என்று கருதிப் பரிகசித்து மற்றைப் பெண்கள் இவளை எழுப்ப முயல்கிறார்கள். இவளும் எழுந்து வருகிறாள். உறக்கத்திலிருந்து அல்ல; அந்தக் கிருஷ்ண பக்தி என்ற காதலிலிருந்து! தனியாகக் கிருஷ்ணாநுபவம் செய்துகொண்டிருந்தவள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டு கிருஷ்ணாநுபவம் செய்யப் புறப்படுகிறாள். பக்தியிலும் தனியாகச் சுகம் அனுபவிப்பதைக் காட்டிலும் பிறருடன் கலந்துகொண்டு சுகத்தைப் பங்கு கொள்வதே பாகவதப் பெருமை என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
          இப்பாட்டிலே நகைச்சுவை பொங்கி வழிகிறது. கும்பகர்ணனும் உறக்கப் போட்டியில் இவளிடம் தோற்றுப் போவானாம். இராமனுடைய அம்பிற்குக் கும்பகர்ணன் தோற்றான் என்பது இராமாயணக் கதை. உறக்கப் போட்டியில் தோல்வியுற்றான் என்பது இப்பெண்கள் சொல்லும் புதுமை இராமாயணம். தோற்றவர் பொருளை வென்றவர் கைப்பற்றிக் கொள்ளும் அந்தப் பழைய சட்டத்திற்கு இணங்க, இவளும் கும்பகர்ண நித்திரையை மேற்கொண்டிருக்கிறாளாம்.

வியாழன், 24 டிசம்பர், 2009

துயில் மந்திரப்பட்டாளோ




9. வசீகரமான சூழலில் வசீகரமான நித்திரை

               சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது, உள்ளே விளக்குகள் எரிவது தெரிகிறது. சுத்தமான இரத்தினங்கள் அழுத்திச் செய்த வீடு.  இதை ஒரு மாளிகை என்று சொல்லலாம். இந்த மணிமாடத்தில் படுக்கை அறையில் நாற்புறமும் படுக்கையைச் சுற்றி விளக்குகள் தகதக என்று எரிந்துகொண்டிருப்பதை வெளியே இருப்பவர்கள் பார்த்துவிடுகிறார்கள். அகில் முதலியவற்றின் புகை கமகமவென்று வாசனை வீசுவதையும் உணர்ந்து கொள்கிறார்கள். ஜம்மென்று மென்மையான படுக்கைமீது படுத்துச் சுகமாகக் கண்வளரும் பெண்ணையும் பார்த்து விடுகிறார்கள்.
               இந்தப் பெண்ணுடன் எல்லாரும் உறவு கொண்டாடி உரையாடுவது வழக்கம். ‘மாமன் மகளே!’ என்று கூப்பிட்டுப் பேசுவார்கள். இப்போது, ‘மாமான் மகளே!’ என்று நீட்டி, முழக்கி அழைக்கிறார்கள்.இவளுடைய செல்வச் செழிப்பைச் சுட்டிக்காட்டி,’ மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று வேண்டிக் கொள்கிறார்கள்.
               இவளுடைய போக வாழ்க்கையையும் சுட்டிக் காட்டித்தான் இவளை அழைக்கிறார்கள். கதவு திறக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். ‘மணிமாடத்தில் வசிப்பவளே! உன் மணிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வா’ என்கிறார்கள். ‘தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில்அணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!’ என்று அழைப்பது எவ்வளவு வசீகரமாயிருக்கிறது!
               இந்தப்பெண்ணோ கண்ணன் வருகிறபோது வரட்டும் என்று ஆறி இருக்கிறாளாம். போகமயமான சூழ்நிலையில் படுத்திருப்பவளுக்கு, பனியில் நனைந்து வெளியில் நிற்பவர்கள் குரல் காட்டி அழைப்பது எப்படி வசீகரமாய்த் தோன்றக் கூடும்? மறுமொழி ஒன்றும் கூறாதவளாய்க் கிடக்கிறாள்.
               இந்த நிலையில் இவள் தாய், ‘இத்தனை பெண்பிள்ளைகள் தலைவாசலில் தலையில் பனிவிழ வருந்தி நின்று கொண்டு உன்னைக் கூவி அழைக்கிறார்களே? நீ ஒரு பேச்சும் பேசாமல் உறங்கிக்கொண்டிருப்பது நியாயமா?’ என்கிறாள். இப்படித் தாய்  பேசுவது வெளியில் நிற்பவர்கள்  காதில் விழுகிறது. சாளரத்தின் வழியாக உள்ளே எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளின் ஒளியில் இந்தத் தாயின் முகத்தையும் பார்த்து விடுகிறார்கள்.
               தங்களுக்காக அவள் நெஞ்சிலே கொண்ட இரக்கம் முகத்தில் பிரதிபலிப்பதையும் கண்டு கொள்கிறார்கள். ‘மாமீர்! அவளை எழுப்பீரோ!’ என்று கேட்கிறார்கள்.
               ‘எங்கள் கூட்டத்திலே அவள் ஒருத்தி இல்லாததால் நாங்கள் படுகிற பாட்டை நீர் உணர்ந்துகொண்டீரே மாமீர்! உம்முடைய மகளை எப்படியாவது எழுப்பலாகாதா?’ என்கிறார்கள். மாமி எழுப்பியும் மகள் எழுந்த பாடில்லை. பதிலும் சொல்லவில்லை. கொஞ்சம் ஆத்திரத்துடன் பெண்கள் ‘உம் மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ?’ என்று கேட்கிறார்கள். ‘அவ்வளவு சோர்வா அவளுக்கு?’ என்றும் கேட்கிறார்கள். ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ? என்றெல்லாம் கேட்டபின்பும் ஆத்திரம் ஆடங்கவில்லை.
               ‘ஒரே வசீகரமான சூழ்நிலையில் ஏதோ ஒருவகை வசிய நித்திரைக்கு உட்பட்டுக் கிடக்கிறாளோ அவள்? என்றும் தோன்றுகிறது, தலையில் பனி விழ வாசலில் நின்றுகொண்டிருப்பவர்களுக்கு. ஏம்பஃ பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? என்று மாமியைக் கேட்கிறார்கள்.
               ‘எழுந்திருக்க முடியாதபடி காவலைச் செய்கின்ற பெருந் துயிலில் சிக்கிக் கொண்டாளோ? எப்படிச் சிக்கிக் கொண்டாள்?’ என்று அதிசயிக்கிறார்கள். ‘மந்திரத்தில் கட்டுப்பட்டாளோ’ என்று சந்தேகப் படுகிறார்கள். இப்படித் துயில் மந்திரம் போட்டவர் யார்? பெருந்துயில் மந்திரமாக இருக்கிறதே! இவர்கள் உரக்கப் பேசுவதும், தாய் அருகிலிருந்து கூப்பிடுவதும் காதில் விழாதபடி காவலைச் செய்கின்ற மந்திரம் சாதாரண மந்திரமாக இருக்க முடியுமா? என்ன வசீகர மந்திரமோ?
                இப்படியெல்லாம் இவர்கள் கூறுவதைக் கேட்ட தாய், ‘நீங்கள் அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; இவள் உகக்கும் பகவந் நாமங்களைப் பாடத் தொடங்கினீர்களானால் இவள் தானே உணர்ந்து எழுந்து வருவாள்!’என்று சொல்லுகிறாள். உடனே பெண்களும் அவளைத் தடை செய்திருக்கும் மந்திரத்திற்கு எதிர் மந்திரம் போடுவதுபோல், ‘மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றுஎன்று’ நாமம் பலவும் சொல்லத் தொடங்குகிறார்கள். தங்கள் இசைக்குரலில் பகவானின் நாமங்களை இசைத்துப் பாடத் தொடங்குகிறார்கள்.
               இப்படிச் செய்தும் இன்னும் எழுந்திருக்கவில்லையே! என் செய்வோம்?’ என்று எய்த்துப் பேசும்போதே எழுந்து வருகிறாள் தோழி.

துயில் மந்திரப் பட்டாளோ!

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம்கமழ துயில்அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றுஎன்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்
               கண்ணன் வருகிறபோது வரட்டும் என்று சிறிதும் ஆத்திரம் இல்லாமல் ஆறியிருக்கும் ஒரு பெண்ணை எழுப்பும் பாசுரம் இது. ‘மாமான் மகளே! என்று உறவு கொண்டாடி அழைப்பவர்கள் மறுமொழி ஒன்றும் முதல் முதல் பெற்றுக் கொள்ளாததால் இந்தப் பெண்ணின் தாயாரை அழைத்து எழுப்பச் சொல்லுகிறார்கள். மாமி எழுப்பியும் எழுந்திருக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் ஊமையா செவிடா என்றெல்லாம் கேட்கிறார்கள். ‘எழுந்திருக்க முடியாதபடி யாராவது இவளை மந்திரவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்களா?’ என்றும் கேட்கிறார்கள்.
               ‘ஏமப் பெருந்துயில் மந்திரம்’ என்று கூறுவது இக்காலத்து ஹிப்னாடிஸ-மெஸ்மெரிஸ வசிய நித்திரையை நமக்கு நினைப்பூட்டுவதாகும். இத்தகைய ஒரு துயில் மந்திரத்தை அனுமனும் உபயோகப்படுத்தி சீதையைக் காவல் செய்துகொண்டிருந்த அரக்கிமாரை உறங்கச் செய்ததாகக் கம்பனும் பாடுகிறான். துர்மந்திரத்திற்கு எதிர் மந்திரமாகப் பகவானுடைய திருநாமங்களை இப் பாசுரம் குறிப்பிடுகிறது என்று கருதலாம்.





புதன், 23 டிசம்பர், 2009

கிழக்கு வெளுத்தது, உன் உள்ளம் போல!

8. கிழக்கு வெளுத்தது, உன் உள்ளம் போல!

அருணோதய காலத்தில் கிழக்குத் திசை வெளுத்து ஜோதிமயமாகக் காண்பதுபோல் உள்ளத்திலே தூய ஒளி பெற்றுக் கண்ணனுடைய அபிமானத்திற்கு விசேஷ உரிமை வாய்ந்தவளாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது பெண்களின் கூட்டம். இவள் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை? இவளுக்கும் பொழுது விடிந்தது தெரியவில்லையா?

‘பொழுது விடிந்ததம்மா! எங்களுக்கு மட்டுமா, உனக்கும்தான்!’ என்கிறார்கள். ‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று தொடங்குகிறாள் ஒருத்தி. ‘ஆகாயத்திலே கிழக்குப் பக்கம் வெள்ளென்று வெளுத்திருக்கிறதே!’ என்று ஒருத்தி பேசியதும் உள்ளே இருப்பவள் ஒன்றும் பதில் பேசாமல் சும்மா இருக்கிறாள்.

‘அதற்குள்ளே இராக்காலம் கழிந்துவிட்டதா என்ன? கீழ்வானம் வெளுத்துவிட்டதா? ஏன் அப்படி?’ என்று கருதியவள்போல் சும்மா இருக்கிறாள். ‘இது உங்களுடைய விபரீத ஞானம்!”திங்கள் திருமுகத்துச் சேயிழையார்” ஆகிய நீங்கள் நீண்ட பொழுதாக கீழ்த்திசையை நோக்கிக் கொண்டிருந்தீர்கள்.அதனால் உங்களுடைய முக சந்திரிகை கிழக்கே போய்த் தட்டிப் பிரதிபிம்பித்து ஒளி தோன்றவும் கூடும். ஆகவே கிழக்கு வெளுத்ததாக நீங்கள் பிரமிக்கவும் கூடும். வேறு அடையாளம் உண்டா?’ என்று உள்ளேஇருப்பவள் தன் மோன வாக்கினால் கேட்பதுபோலத் தோன்றுகிறதாம் வெளியே இருப்பவர்களுக்கு.

எனவே, வேறொரு அடையாளம் சொல்லுகிறாள் ஒருத்தி. எருமைகள் பனிப்புல் மேய்வதற்காகக் கிழக்கு வெளுக்கையில் கறப்பதற்கு முன்னே விடப்படும் வழக்கம் ஒன்று உண்டு. பால் மிகுதியாகக் கறக்கும் என்று இப்படிப் பனிப்புல் மேய விடுகிறார்களாம் ஆயர்கள். கறந்தபின் எருமைகளைப் பகலெல்லாம் மேய வெளியே விடுவதால், முதலில் பனிப்புல் மேய விடுவதைச் ‘சிறுவீடு’ என்று சொல்கிறார்கள்.இதை அடையாளமாகக் குறிப்பிடுகிறாள். ‘எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண்!’ என்று அடையாளம் சொல்வதும் உள்ளே இருப்பவள் காதில் விழத்தான் செய்கிறது. மந்தைக்காட்டில் மேய்வதற்கு முன்னே அவரவர் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் எருமைகளை மேய்கைக்கு விடுவதைக் குறிப்பிட்டதன் நோக்கம், இவள் வீட்டைச் சார்ந்த சிறு தோட்டத்தில் எருமைகள் மேய்வதைப் பார்த்தாவது இவள் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான்.

ஆனால் இவள் எழுந்து பார்த்தால்தானே? இவளோ கற்பனை உலகில் அல்லவா சஞ்சரிக்கிறாள்? ‘தோழிமாரகளே! உங்கள் முக ஒளிக்குமுன் சிதறிப்போகிற இருட்டின் கூறுகள் அல்லவா உங்களுக்கு எருமைகளாகத் தோன்றுகின்றன? இதுவும் உங்கள் விபரீத ஞானம்தான்!’ என்று கற்பனைச்செல்வி ஒரு கவி பாடக் கூடுமே!

இந்த நிலையில் இப்பெண்கள் ‘தோழி! பொழுது விடியவில்லை என்பதற்கு அடையாளம் ஏதாவது இருந்தால் நீதான் சொல்லு பார்க்கலாம்!’ என்று கூறுவதாக வைத்துக் கொள்ளலாம். அதற்குக் கற்பனை அரசி என்ன பதில் சொல்லக் கூடும் என்றும் பார்க்கலாம். ‘பெண்கள் பெருங்கூட்டமாய்த் துயிலுணர்ந்து வந்து விட்டதாகத் தெரியவில்லையே;என்னைப்போல் வேறு சிலர் துயில் உணர்ந்து எழுந்து வராமலிருப்பதுகூட ஒரு சான்றுதான்!’ என்று உள்ளே இருப்பவள் வாதஞ் செய்வதாகக் கருதுவோம்.

இதற்கு வெளியே இருப்பவர்கள் பதில் சொல்லுவதுபோல் அமைந்திருக்கிறது இச்செய்யுட்பகுதி. ‘மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்’ ‘பெண்கள் பெரும்பாலும் நோன்பிற்கு நீராடப் போகும் பொருட்டுப் புறப்பட்டு விட்டார்கள். அவர்களை நோக்கி நாங்கள் ‘உன்னை விட்டு விட்டுப் போவது உரியதன்று’ என்று சொல்லிப் போகவொட்டாமல் தடுத்து நிறுத்தினோம். பிறகு உன்னை அழைப்பதற்காக வந்து தலைவாசலில் காத்து நிற்கிறோம் என்று சொல்லுகிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதற்கும் காரணம் சொல்லுகிறார்கள். ‘கோது கலம்உடைய பாவாய்!’ என்ற அழைப்பிலேயே காரணத்தைக் கண்டு கொள்ளுகிறோம். கண்ணனால் கொண்டாடப் பெற்றவள் இவள். எனவே’கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்’ என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

‘அப்பால், பாடிப் பறைகொண்டு ……. தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்’ அந்தப் பெருமான் தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது திண்ணம். ‘கோதுகலமுடைய’ பாவை தங்கள் கூட்டத்திலிருக்கும்போது கண்ணன் அருள் புரிவதில் ஐயமும் உண்டோ என்பது குறிப்பு.

ஆதலால் பெண்ணே! அ ஆ என்று நீ அலறிக்கொண்டு விரைந்து புறப்படவேண்டுமல்லவா? என்று கூறி முடிக்கிறார்கள். நாங்கள் சொல்லுவதை நீ குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறார்கள்.’அ ஆ என்று ஆராய்ந்து அருள்ஏலோர் எம்பாவாய்’ என்ற முடிவுரை கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இவர்கள் சொல்லுவதை இவள் ஆராய்ந்து பார்த்து ஒப்புக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுகிறார்கள். எனினும், கண்ணனால் கொண்டாடப்பெறும் கற்பனைச் செல்வி ஆராய்ச்சியின் பெயராலும் பொழுது போக்கிவிடாமல் விரைந்து புறப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்துகிறார்கள்.

அருள் பெற்றவளே! எழுந்து எங்களுக்கு அருள்வாய்!

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாஎன்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கண்ணனுடைய அருளுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவள் என்று மதிக்கப் பெற்றவளை எழுப்பும் பாட்டு இது. இவளை முன்னிட்டுக் கொண்டு சென்றால் கண்ணனுடைய அருள் எளிதாக எல்லாருக்கும் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் திரண்டு வந்து அழைக்கிறார்கள் என்று கருதலாம்.

‘கோதுகலம்’ என்பது “கௌதூஹலம்” என்ற வடசொல்லின் விகாரம். ‘ஆசை’ என்று பொருள்.

வேதாந்த தேசிகர் ஊசல்

அடியேனது அபிமான ஸ்ரீ கேசவ அய்யங்கார் இயற்றி 1-6-1939ல் வெளியிடப்பட்ட “வேதாந்த தேசிகர் ஊசல்”  என்னும் ஒரு அருமையான, ஸ்வாமி தேசிகன் புகழ் பாடும் 20 பாக்கள் இங்கு உள்ளன. இதை மிக பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் திரு நாராயண அய்யங்கார் அவர்களுக்கும், அவரிடம் இருந்து பெற்று அடியேனுக்கு ஒரு நகல் அளித்த ஸ்ரீஹயக்ரீவ ஸேவக ஆசிரியர் ஸ்ரீ T.C.ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கும் என்ன சொல்லி அடியேனது நன்றியைத் தெரிவிப்பேன்! பாடவல்லார் யாராவது இதற்கு மெட்டமைத்து எல்லா தேசிக உத்ஸவங்களிலும் இதைப் பாட வழி செய்தார்களென்றால் அவர்கள் திருவடிகளெல்லாம் அடியேன் சென்னி மீதே! இன்று “ஊசல்” ! நாளைமுதல் ஸ்ரீ கேசவய்யங்கார் இந்நூலுக்கு எழுதியுள்ள குறிப்புரைகள் தினமும் ஒன்றாக இங்கு தொடரும்.!

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

“வகுளமாலை“ப் பத்திராசிரியர்

ஸ்ரீ ஆர். கேசவய்யங்கார், அட்வொகேட்

பாடிய

வேதாந்த தேசிகரூசல்

திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு

(6)

இது

பிரமாதி வருஷம் வைகாசித் திருவிழாவில் கருட ஸேவையன்று

முத்திதரு நகரேழில் முக்கியமாங்கச்சிக்குத் திலதமாய்

விளங்கும் அம்பூந்தேனிளஞ் சோலையிலமர்ந்

துள்ளதூப்புல் வள்ளலார்திருவடிவாரத்தில்

இடப்பெற்ற காணிக்கை

பதிப்பாசிரியன்

பந்தல்குடி பாரத்வாஜ மாடபூசி

ரெ. திருமலை அய்யங்கார்

1-6-1939

-----------------------------------------------------------------------------------------

ஸ்ரீ:

முகவுரை.

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாள்

தூமலர் சூடிய தொல்லருள் மாறன் துணையடிக்கீழ்

வாழ்வை யுகக்கு மிராமாநுச முநிவண்மை போற்றும்

சீர்மைய னெங்கள் தூப்புற் பிள்ளைபாதமென் சென்னியதே

                                                 --- பிள்ளையந்தாதி

பூவில் மன்னு மங்கைதாள் பொருந்துமார்பனாழ் புகழ்

பாவியங்கு வேதநான்கு பாடு மாறனாகமும்

மேனியோங்கு பாடியம் விதித்த யோகி நாமமே

நாவிலங்கு தூப்புலய்யர் பாதம் நண்ணு நெஞ்சமே

                                      --- தேசிகர் சந்தவிருத்தம்

வேதமுடித் தேசிகனே வேதியர்குலத்தரசே

சாதுசனங்களுக்குத் தாவளமே -- போதமரும்

நின்னடியை யென்றும் நினைந்திருப்பார் பாதமென்றன்

சென்னிதனிற் சூடுமலர்.

                                       --- தேசிகர் நூற்றந்தாதி

வேதாந்த விழுப்பொருளின் மேலிருக்கும் விளக்கே வேதாந்தவாரியன். திருமகட்குயில் திருமாற்பயோததித்திருமந்திரவமுதினைமுகந்து,சேனைமுதலிக்கோப்பெய, அதுகாரிசேய்ச்சுனைத் தங்கி, நாதமுனியாகும் அருமாற் கடம்வார்ந்து, உய்யக்கொண்டவள்ளல் மடுவார்ந்து, சீராமரென்வாயால்வழீஇ, யாமுனாரியவுந்தியூர்ந்து, பூர்ணாரியக்காலினொழுகிக், கருமாற்றிராமாநுசக் குளங் கழுமி,எழுபானான்கு மதகுகள் வழியாகப் புறப்பட்டு, சம்சாரிகளாகிற நிலங்களிற் பாய்ந்து உய்வித்தது. இக்காசினிப் பணையுயிர்க் கூழை மதக்காராக்கள் மேய்ந்தடாது பெருமாற்கு வினையுள் வீடடையப்புறந்தரும் பெருவேலியா மெம்பிரான் பேசுபயவேதாந்த தேசிகன். இவரது நற்றாள் தொழுதெழலே கற்றதனாலாயபயன். மன்னுமறையனைத்தும் மாகுருவின்பாற்கேட்டு ஆங்குன்னியதனுட் பொருள்களத்தனையுந் துன்னுபுகழ் பெற்றாலுந் தூப்புற் பெருமானை நண்ணாதார் கற்றாரே காசினியில் வம்பு. தேசுடைய வாழியுஞ் சங்கமுங்கையேந்தி வாசமலர்த்துழாய் வாழ்மார்பன் காசினியிற் காண நின்றாலும் கவிவாதி சிங்கனையே காணக்கருதும் கற்றுணர்ந்தார் கண்கள். மறப்பின்றி மன்னிய சீர்தூப்புல் வருமாமறையோன் பாதத்தைச் சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி.

“பெரியவிரிதிரைநீர்வையத்துள்ளே வேதாந்தவாரியனென்றியம்ப நின்றோம்“ என்ற நந்தூப்புல் வள்ளலார் தூமொழியின் உண்மை உணரற்பாற்று. "மாசில் மனந்தெளி முனிவர் வகுத்தவெல்லா மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா" என வாசியறிந்துரைக்கவல்லார் இவர் ஒருவரே. "தந்தையெனநின்றதனித்திருமால் தாளிற்றலை வைத்தோஞ் சடகோபனருளினாலே"என்றும், ".....மங்கையர்கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும், செய்ய தமிழ்மாலைகள் நாம்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" என்றும், "அன்பர்க்கேயவதரிக்கு மாயனிற் கவருமறைகள் தமிழ் செய்தான் தாளேகொண்டு, துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந்தொல்வழியே நல்வழிகள் துணிவோர்கட்கே" என்றும்,"பண்ணமருந்தமிழ் வேதமறிந்த பகவர்களே" என்றும், "பாவளருந் தமிழ்ப்பல்லாண்டிசையுடன் பாடுவமே" என்றும், "விண்ணவர்தங்குழாங்களுடன் வேதம்பாடிப், பண்ணுலகிற் படியாத விசையாற்பாடும் பல்லாண்டே பல்லாண்டும் பாடுவமே" என்றும், "கேளாத பழமறையின் கீதம்" என்றும் "வேதியர் தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம் விதையாகுமிது" என்றும், "பாண் பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள்" என்றும் தேசிகமாலையில் சந்தமிகு தமிழ்மறையோன் சங்கநாதம் செய்வதால் இச்சீரார் தூப்புல் திருவேங்கடமுடையானை தென் சொற் கடந்தான் வடசொற்கலைக் கெல்லை தேர்ந்தான் எனக் கூறுவது மிகையாகாது. அகில ஸ்ரீவைஷ்ணவர்கட்கும் ஆசாரிய சிகாமணியாய் விளங்குபவர் நந்தூப்புற்கோன். "வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம், உள்ளத்தெழுதிய தோலையிலிட்டனம்" என்றும், "பொங்கு புகழாகமங்கள் தெரியச் சொன்ன பொருளிவை நாம் புண்ணியர் பாற் கேட்டுச் சொன்னோம்" என்றும், "மறையோர் சொன்னார், ஆதலினாலோதியுணர்ந்தவர் பாலெல்லா மடிக்கடியுங் கேட்டயர்வு தீர்மினீரே" என்றும் அத்தேசிகமாலையிற் கூறியுள்ளமையால் நானில மடங்கக் கொண்டாடிய நாவலராய்த் திகழ்ந்த காலையும் இவரது அடக்கமும் அமைதியும் பொலிவுற்றிருப்பது கையிலங்குகனி. "செந்தமிழ் மும்மணிக்கோவை செறியச்சேர்த்துப், பந்துகழலம்மானை யூசலேசல் பரவு நவமணி மாலையிவையுஞ் சொன்னேன், முந்தைமறை மொய்யவழி மொழி நீ யென்று முகுந்தனருள் தந்த பயன் பெற்றேனானே" என்பனவற்றால் இப்பரமாசாரியன் ஆரியமார்க்கமான நல்வழித் தொல்வழியில் நின்று நம்மை உய்யக் கொள்பவர் என்பது கூறாமலே விளங்கும். இவரது அருமை பெருமைகளை ஆயிர நாப்படைத்த ஆதிசேடனும் முற்ற உரைக்க வல்லனாகானெனின் எம்போலியர் விளக்க முயல்வது என்னே!

      இத்தகைய சிறப்பெய்தி நிற்கும் தூப்புல் வள்ளலார் விஷயமாக இத் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத் தலைவரும், முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக்கவியாய் விளங்குபவரும், திருப்பாடியம் முதலான ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய கிரந்தங்களை நல்லோரிடம் முறைப்படி காலட்சேபம் செய்து அவ்விரதத்தை வழங்கி வரும் நல்லன்பரும், இச்சங்க வெளியீடான வகுளமாலைப் பத்திராசிரியருமான ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்காரவர்கள் எம்.ஏ.,பி.எல்., அட்வொகேட், வேதாந்த தேசிகரூசல் என மகுடமிட்ட ஒரு நன்னூலை வகுளமாலை (தொகுதி 1, பகுதி 6, பக்கங்கள் 100 - 105)யில் வெளியிட்டுதவினார்கள்.

       ஸ்ரீரங்கம் தசாவதார ஸந்நிதியில் ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ ஸந்நிதி ஆஸ்தானத்தில் நாற்பத்தொன்றாவது பட்டத்தில் மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ சடகோப யதீந்த்ர மஹாதேசிகரது எண்பத்து நாலாவது திருநக்ஷத்திரம் (சதாபிஷேகம்), ஈசுவர வருடம் மார்கழித் திங்கள் இருபத்து நான்காந்தேதி (7-1-1938) வெள்ளிக்கிழமை திருப்பூரட்டாதி நக்ஷத்திரத்தில் வெகு விமரிசையாய் நடந்து விளங்க, அன்றிரவில் ஸ்ரீகண்ணபிரானுக்கு டோலோத்ஸவம் அதி அற்புதமாய் நடைபெற, டோலையில் மாமாயன் அதிகம்பீரமாய் ஊஞ்சலாட ஸ்ரீ அழகியசிங்கர் துய்யதோர் தமது ஆசனத்தில் எழுந்தருளியிருக்க, சிஷ்யவருக்கங்கள் புடை சூழ்ந்து அமர்ந்து நிற்க இவ்வேதாந்த தேசிகரூசற்றீங்கவிகள் முழுமையும் செவிகளார அனைவரும் பருகச்செய்த பாக்கியம் அடியேனுக்குற்றது. இவ்வைபவத்தை,

மார்கழித் திங்களின்றா யிரத்தான்மதிச்

சீர் நிரைந்தோங்கு நம் சேமமாய்ச்செவ்வியார்

கார்முகில் கண்ணனுக்காசை யாலூசலே

பார்புகழ் நாநலப் புண்ணியர் பாடுவார்                       (15)

கேட்பவர் கேசவன் கீர்த்தியே கேட்டவர்க்

காட்படத் தேசிகர்க் காக்கியே யெம்மிறைத்

தாட்பெருஞ் சீர்த்தியே யாட்டு நம் மூசலே

கேட்ப நின்றெம்மை யாட்கொள்ளுமோர் வள்ளலார்.  (16)

----ஸ்ரீஅழகியசிங்கர் சதாபிஷேகமலர் (குருமலர்க்கலம்பகம்)

என்பனவற்றிலும் கண்டுகளிக்க. இத்திருநாளன்றுதான்ஸ்ரீஅழகியசிங்கரால் ஸ்ரீமத் பாஷ்யார்த்த மணிப் பிரவாள தீபிகையும், தமிழ் வித்துவான் என்ற பட்டமும் அடியேற்கு அருளப் பெற்றன.

           தமிழன்பரிற் பலர் இந்நூல் தனியாக வெளியிட வேண்டுமென்று வேண்டியதற்கிணங்க இஃது இச்சங்க வெளியீடாக நூலாசிரியரின் ஒரு சில விசேடக் குறிப்புகளுடன் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவில் கருடசேவையன்று தூப்புல் நகருக்கு வரும் நல்லன்பர்கட்கு வழங்கும் நோக்கத்தோடு வெளியிடலாயிற்று. இதனை அறிஞர் அன்புடன் ஏற்று அத்திகிரி அருளாளன், சந்தமிகு தமிழ்மறையோன், இவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்று மகிழ்வாராக. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

விளக்காகி வேங்கட வெற்பினில்வாழும் விரைமலராள்

வளக்காதல் கொண்டுறை மார்பன்திறத்துமுன தடியார்

துளக்காத லில்லவர்தங்கள் திறத்திலுந் தூய்மை யெண்ணிக்

களக்காதல் செய்யும்நிலை கடியாய் தூப்புற்காவலனே.

                                                    --- பிள்ளையந்தாதி.

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பக்தர்களும்

பூவின் மழைபொழிந்துபோற்றியே --- தாவி

யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந் தூப்புற்

குலகுருவே யெங்கள் குரு

                                               --- தேசிகர் நூற்றந்தாதி

பூவளருந் திருமாது புணர்ந்த நம் புண்ணியனார்

தாவளமான தனித்திவஞ் சேர்ந்து தமருடனே

நாவளரும் பெரு நான்மறையோதிய கீதமெல்லாம்

பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசை யுடன்பாடுவமே.

                                               ---- தேசிக மாலை

ஸ்ரீரங்கவிலாசம்                           ப.ரெ.திருமலை அய்யங்கார்

திருவல்லிக்கேணி                                    காரியதரிசி

1 - 6 - 1939.

----------------------------------------------------------------------------------

ஸ்ரீ:

வேதாந்ததேசிகரூசல்

காப்பு

விண்ணாகி இறையாகி விரசையாகி

            இசையாகி இருக்காகி இதயமாகி

மண்ணாகி மானாகி மனந்தானாகி

          மற்றாகி மனுவாகி மறந்தாராகி

எண்கடந்து கடைப்பட்ட யானுமாகிப்

பின்னாக விரகிலியாகிப் போந்தேஎன்கண்

கண்ணோக்கக் கடவதிருக் கடவுளாயே

காப்புயர்த்த கேசவனார்கழலே காப்பு.

நூல்

திருவாழத் திருவாழு மார்பர்வாழத்

திருமார்பர் திருவடியே வாழவன்னார்

திருவடிப்பூப் போத சடகோபர்வாழத்

தெள்ளியசீ ரெதிராசர் செங்கோல்வாழ

வருணநெறிச் செவ்விவளம் செழித்துவாழ

வைணவர்கள் குடிகுடியாய் வாழவாழச்

சுருதிமுடிக் குருப்புனித ராடிரூசல்

சீர்தூப்புல் வேங்கடவ ராடிரூசல்.                       .1.

பாங்கிலகு பாணிநியம் பொற்காலாக

வாங்கரிய யாக்கியமோர் விட்டமாக

ஓங்குபல பூங்கலைகள் பந்தலாக

ஆணிமறைச் சங்கிலிகள் நான்குமாக

ஆங்கு திருப்பாடியமே ஆட்டமாகப்

பாதுகை யாயிரமறையே போகமாக

ஓங்கர நாவொலிக் கோலராடிரூசல்

வேதசிரத் தேசிகனாராடி ரூசல்.                        .2.

மாற்றருசந்தருக் கணமே மராடியாக

மன்னுநெறிச் சைமிநியம் மணையுமாக

வீற்றுயர்ந்து வித்தகராய் ஒவ்வோராட்டால்

வழுத்தவழும் வாதவழி யொழியச்சாடிச்

சாற்றுமறை யாடுகொடி நாட்டிநல்லார்

காக்குமறை முடிமிளிர்ந்த குருவாயோங்கி

நாற்றிசைக் கோர்துளக்கறுதேசாடிரூசல்

நற்றவர்க் கோருற்றதுணையாடி ரூசல்.              .3.

காடெஞ்சிப் பொய்யர் புறங் காட்டியோடக்

கவடர் குழுகிடுகிடென நடுங்கியாட

நாடெங்கும் நான்மறையர் நாக்கொண்டாட

நல்லுலகு நலந்திகழ்ந்து குடக்கூத்தாட

ஏடெங்கும் நற்பொருளே நேயர்நாடக்

கேசவனார் வண்புகழே தேசம்பாட

ஆடெய்து மடியழகராடி ரூசல்

ஆரியர்கட் காசிரியராடி ரூசல்.                         .4.

நெற்றிமிசைத் திருநாமத் தேசுவீச

நூலெனமும் மறைநலமே உரம்குலாவ

ஒற்றிலகு முயர்சாற்றுப்படி துலங்கத்

தோள்மிசைச் சங்காழிதிருச் சின்னமின்ன

நற்றவர்கொள் நீள்கரத்துத் தூப்புல்துன்ன

நாமிசையே வழுவாதுநாத னோதச்

சுற்றிவரச் சூரியர்க ளாடிரூசல்

சோதியதா யோதுகுரு வாடிரூசல்.                  .5.

சரணொன்றே அரணாகு மன்பராடச்

சுருதியுறை நாவர்கநஞ்சடைதொடுக்க

வரகவியோர் வாழிதிகழ் மொழிவழங்க

ஓசையுயரிரு கலைஞரூசலேத்தச்

சுரமிசை நற்பதமிசையும் சுத்தர்பாடச்

சிட்டர்கரம் கிட்டுதவக் கவரிவீச

வரமருளும் திருவுருவே ஆடிரூசல்

வாழுதிரு மறைத்திருவே ஆடிரூசல்.              .6.

மும்மதமீமாஞ்சை பொழி வேழமாக

மிடற்றழுத்து மெழுத்துமறைக் கரடியாக

வம்பர்விழுந் தருக்கணவாய் வேங்கையாக

மறைமுடியாய்க் கவிமுழங்கு சிங்கமாகத்

துன்பமெலாந் துடைத்துத்தங் கேளிர்தாங்கும்

தூணெனவே தூயவராய்த் தோன்றியூன்றி

அன்பர்குலங் காக்குமிறை யாடிரூசல்

இன்ப மருளெம் பெருமானாடிரூசல்.              .7.

கழிபெருமா தேவரிடை கழியடைந்து

கார்மேனிக் கடவுளராய்க் கனத்துத்தொண்டர்

வழிதழைக்கும் தமிழ்ப்பகவர் விழியேயாகி

ஒளிவிடுமோர் முச்சுடராய் உடன்மிளிர்ந்து

செழுமறையே செந்தமிழாய்ச் சங்கநாதம்

செய்துதிருக் கண்டஒலி கொண்டகண்டம்

முழங்குமுதுத் தமிழ்மறைய ராடிரூசல்

முத்தமிழ் சேர்முது மறைய ராடிரூசல்.                    .8.

ஆசை மிசைத்தழையு மரித்தாளேபோல

ஆண்மைமிசை அறமன்னர் கோலேபோல

ஓசைமிசை உயர்செய்யுட் குணமேபோல

ஓமிசையோங் காரண நூலொலியேபோல

நேசமிசைக்கனிமாறன் பணியேபோல

நாதமிசை யூதுகுழல் சுரமேபோலத்

தேசுதிகழ் மங்கலமே ஆடிரூசல்

ஏவுமறை மாதவமே ஆடிரூசல்.                                .9.

பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார்தண்

பொருநல்வரும் குருகேசன் விட்டுசித்தன்

துய்யகுலசேகரனம் பாணநாதன்

தொண்டரடிப்பொடி மழிசை வந்தசோதி

செய்ய தமிழ் மங்கையர்கோன் செல்வக்கோதை

சீர்மதுரரோ ரமுதர் சேர்ந்துவந்து

பெய்யுமருள் மாரி வடிவாடிரூசல்

பொய்யாத மொழிப் பகவராடிரூசல்.                     .10.

முடிபொலிந்து துன்னுதிரு மறைகள்யாவும்

மறையாறா யங்கமென மிளிர்ந்தவாறும்

குடியேறு கோயிலென வந்தவெந்தை

உபநிடதக் கடல்கடைந்த அமுதேயான

படியோங்கி அவனோங்கு மதியாயோங்கிப்

பாடியமா யோங்குபுக ழுடையவர்க்கே

படிகிடக்கும் படைவீர ராடிரூசல்

மறைதாங்கு மதிப்பரம ராடிரூசல்.                         .11.

அந்தணரும் அந்தியரும் அரியடிக்கீழ்ச்

சந்தி செயச்சரண நெறித்திருவிளக்கை

நந்தாது நான்மறைநீண் முடிநிறுத்தி

நாதனடிச் சோதிமலர் நலம்துலங்கத்

தந்தருளித் திருவளர்க்கும் தகவேகொண்ட

கொண்டலென வந்துலகு கொள்ளும்வள்ளல்

சந்தமிகு தமிழ்மறைய ராடிரூசல்

சீர்கவிதார்க்கிக சிங்க ராடிரூசல்.                         .12.

தண்ணியரைத் தன்னவராய் நண்ணித்தன்னில்

திருவுடை யாரென்று திருவுள்ளத்துள்ளும்

புண்ணியனார் மன்னுபுகழ்ப் பதங்கணங்கள்

புந்தியிடை முளைத்தரும்பிப் பூத்தபான்மை

எண்ணியிது வென்னையென எண்ணவொண்ணா

தென்றுமொரு வள்ளலிவ ரென்றேகொள்ளப்

பன்னுமறைக் கண்ணழக ராடிரூசல்

பார்புகழு மோரொரு வராடிரூசல்.                           .13.

செய்தவரே யெய்துபயன் யாவும்சேர்க்கும்

சீரியரே யாரியரா யீண்டுத்தோன்றி

எய்தரிய பொறையொன்றே பூண்டுயாண்டும்

எம்மடி களென்றறிஞ ரேத்தநின்று

வைதவர்தம் வைவையெலாம் வாழ்த்தாயெண்ணும்

வைணவர்கோ னெனப்பெரியோர் பணிந்துபேணும்

கைதவ மானிடரெம்மா னாடிரூசல்

கண்ணொக்கும் கருணை முகிலாடிரூசல்.                  .14.

கண்ணாகிக் கருத்தாகிக் கருணையாகிச்

சொல்லாகிப் பொருளாகித் தொடர்ச்சியாகி

நுண்ணிய பல்லுயிராகி உடலுமாகி

நல்லுருவ உலகாகி நலமேயாகி

எண்ணரிய தனதாகித் தானேயாகி

எல்லாம் தன்னுடலென்ன விரிந்தநாதன்

கண்ணோட்டம் கனத்தகுரு ஆடிரூசல்

கண்ணாகு மெய்யடிய ராடிரூசல்.                             .15.

மண்மிசை மாமறை மணமேகமழுமாறு

மாதவனாரரு ளொன்றே பொருளாமாறு

விண்ணவரு மிங்குவர விரும்புமாறு

வேதியர்கள் வேள்வி விருந்தேற்குமாறு

கண்ணனருளுறுதி மறை கண்ணாமாறு

கதியெல்லாம் சடகோப னடியாமாறு

நண்ணு மறைத்தேசிகரே ஆடிரூசல்

நடையாடு மறைமுடியே ஆடிரூசல்.                         .16.

விண்மேவு பத்திநெறி விளங்குபத்தர்

வித்தகராயத்திகிரிச் சிரத்துறைந்த

வண்புகழோன் திருவுருவே யன்னானாமோ

அன்றி யருள்மாரி யெழிலவனதாமோ

திண்ணமெமக் கெவ்வாறென் றூசலாடும்

திருவுள்ள முள்ளுநலர் திண்ணம்தேறக்

கண்ணொளியாய் வந்த குருவாடிரூசல்

காவலரெம் தரும குருவாடிரூசல்.                            .17.

விளக்கொளி அத்திகிரிபதி வேங்கடக்கோன்

விண்ணாகு சிங்கமலை யோங்குசிங்கன்

துளக்கற்ற வருளமுதத் தென்னரங்கன்

துய்யதிருச் சோலைமலைச் சுந்தரத்தோள்

அளப்பரிய ஆரமுதப் பௌவமெங்கள்

குலக்கடவுள் கேசவனும் கடைக்கணித்தே

களித்துயர்த்தும் குருமூர்த்தி யாடிரூசல்

கலிதவிர்க்கு மாசிரியராடிரூசல்.                             .18.

உலகமெலா மன்புயர ஆடிரூசல்

ஊழியமே ஊதிய மென்றாடிரூசல்

கலகமெலாம் கலக்கழிய ஆடிரூசல்

ஞாலமெலாம் ஞானமெழ ஆடிரூசல்

குலநெறிகள் குணமுறவே ஆடிரூசல்

குரவர்குணக் கடலாட ஆடிரூசல்

நலமிங்கு தேசிகரே ஆடிரூசல்

நிலத்தேவர் குலத்தேவே ஆடிரூசல்.                       .19.

இருகலையு மொருகலை யென்றாடிரூசல்

ஈரடியு மோரடி யென்றாடிரூசல்

இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்

ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்

இருவழியு மொருவழி யென்றாடிரூசல்

ஈருலகு மோருலகென் றாடிரூசல்

பருமறையாம் திருமலையே ஆடிரூசல்

பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல்.                    .20.

செந்தமிழும் வடகலையும் சென்னிசேர்ந்து

செழுமறையின் செம்பொருளே சொரியவானோர்

புந்திமலர் மாதவனார் பதமலர்க்கே

பற்பணியும் சொற்பணியும் பரப்பிச்செய்து

சந்தமிகு சடகோபனடியே சூடிச்

சதுமறைக் கோர்முடிச் செல்வக்குருவாய்த்தூப்புல்

வந்தவிரு வேதகலைத் தலைவரூசல்

கேசவனோர் நாலைந்து கனிந்திசைத்தான்.

 

சுபம்.

---

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தாலாட்டு அல்ல, பள்ளியெழுச்சி!

7. தாலாட்டு அல்ல, பள்ளியெழுச்சி!

கிருஷ்ண பக்தியின் மயக்கத்தினால் ஒருத்தி மெய்ம்மறந்நு கிடக்கிறாள். பொழுது விடிந்தது என்று தெரியவில்லை. இவளும் ‘விடிந்ததற்கு அடையாளம் என்ன?’ என்று உள்ளே இருந்து கேள்வி போடுகிறாள். அதற்குக் பிரதிநிதியாக ஒரு பெண், ‘அந்த அடையாளத்தைத்தான் கீச்சாங்குருவி கீச்சுக் கீச்சு என்று பேசிக் கொண்டிருக்கிறதே!’ என்று பதில் சொல்கிறாள். கீச்சாங்குருவி பேடையுடன் சேர்ந்து பேசும் கீச்சுப் பேச்சு கேட்டும் கேளாதவள்போல் பதில் சொல்லாமல் கிடக்கிறாள் உள்ளே இருப்பவள்.

‘விழித்திருந்தும் பதில் சொல்லாமல் இருக்கிறாளே!’ என்று கோபம் வருகிறது வெளியே இருப்பவர்களுக்கு. இந்தக் கோபத்தைக் காட்ட விரும்பி, ‘பேய்ப் பெண்ணே!’ என்று கூப்பிடுகிறாள் கூட்டத்தில் ஒருத்தி. “ வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ” என்று கேட்கிறாள்.

அந்தக் காலை வேளையின் மோனத்தைக் கடைந்துகொண்டு எழுகிறதாம் தயிர் கடையும் ஓசை. ‘மலையிட்டுக் கடலைக் கலக்கினாற்போல’க் காதில் விழுகிறதே, உனக்குக் கேட்கவில்லையா என்று கேட்கிறார்கள். ‘செல்வச் செருக்கே இந்தச் செவிட்டுத்தனத்திற்குக் காரணமாயிருக்கலாமோ?’ என்று நினைக்கிறார்கள்.

‘பேய்ப் பெண்ணே!’ என்று அழைத்தவர்கள் இப்போது ‘நாயகப் பெண்பிள்ளாய்’ என்று கூப்பிடுகிறார்கள்.

“நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டோ கிடத்தியோ?” என்கிறாள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் பேசும் ஒருத்தி.

எப்படியாவது இவளை எழுப்பிக் கொண்டுதானே போகவேண்டும்? இவளுடைய பக்தி பரவசத்தை அறியாதவர்களா இவர்கள்? இவள் தங்கள் கூட்டத்தில் இல்லாததால்,பொழுது விடிந்தும் ‘இன்னும் இருண்டு கிடக்கிறதே!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறதாம் இவர்களுக்கு. ‘எங்கள் இருள் தீர நீ வந்து கதவைத் திற’ என்று கடைசியாக கொஞ்சுகிறார்கள்.

‘தேசம் உடையாய்’ என்று கடைசியாக அழைக்கிறார்கள். ‘தேஜஸ் அல்லது ஒளி உள்ளவளே!’ என்பது பொருள். இவள் வந்து சேர்ந்தால் இருட்டுக்கிடையே ஒரு மங்கள தீபம் நடையாடி வருவதுபோல் தோன்றுமாம். ‘அப்படி வந்து சேரவேணும் அம்மா! எங்களுக்கிடையே’ என்று கொஞ்சுகிறார்கள், கெஞ்சுகிறார்கள். “தேசம் உடையாய்! திற ஏலோர் எம்பாவாய்” என்று முடிகிறது இப் பள்ளியெழுச்சிப் பாட்டு.

இந்தப் பாட்டிலும் மூவகைக் காலை ஒலிகள் பிரஸ்தாபிக்கப் படுகின்றன. புள்ளின் சிலம்பல், பெருமாள் கோயிற் சங்கின் பேரரவம், ‘ஹரி: ஹரி:’ என்று பெரியோர் துயில் எழும்போது உச்சரிக்கும் ஓசை ஆகிய மூன்று ஒலிகளை முந்திய பாட்டில் கேட்டோம். இப்பாட்டிலோ, கீச்சாங்குருவியின் கீச்சொலி, ஆய்ச்சியர் காசு மாலையும் ஆமைத் தாலியும் கலகலக்கத் தயிர் கடையும் ஓசை, எல்லாவற்றுக்கும் மேலாகக் கண்ணனை இவர்கள் பாடிவரும் இசை ஒலி ஆகிய மூவகை ஒலிகளையும் கேட்கிறோம்.

இந்த வீட்டுக்காரியை இவர்கள் மூன்று வகையாக அழைப்பதையும் கேட்கிறோம். ‘ பேய்பெண்ணே” என்று முதல் முதல் சினந்து கூப்பிட்டார்கள். ‘உனக்குத்தான் என்ன செருக்கு? பெண்ணே!’ என்ற குறிப்புடன், “நாயகப் பெண்பிள்ளாய்” என்று அடுத்தபடியாகக் கூப்பிட்டார்கள்.

கோபம் தணிகிறது. ‘இவள் செருக்கு உடையவள் இல்லை’ என்பதும் உள்ளத்தில் புலனாகிறது. இவளுடைய அருமை பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. ‘உள்ளும் புறமும் வீசுமே இவள் வரும்போது!’ என்று அன்புடன் நினைத்துப் பார்க்கிறார்கள். “ தேசம் உடையாய்!” என்று நேசமாய் அழைக்கிறார்கள்.

முதலாவது அழைப்பு சினக் குறிப்பை வெளியிட்டது. இரண்டாவது அழைப்பு இகழ்ச்சிக் குறிப்பை புலப்படுத்தியது. மூன்றாவது அழைப்பு உண்மையான புகழ்ச்சிக் குறிப்பு -- அன்பு சூட்டும் பட்டம்.

நெடுநாளாகக் கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்திருக்கும் இவளை மற்றைப் பெண்கள் நன்றாக அறிவார்கள். இவளுடைய மனப்பான்மையையும் ஈடுபாட்டையும் நன்கு அறிவார்கள். எனினும் ‘இன்று புதிதாக அறிந்துகொண்டோம்!’ என்று உணர்கிறார்கள். உண்மையான நட்பும் காதலும் – உண்மையான அறிவும்கூட – என்றும் புதுமை வாய்ந்தவை!

அறிய அறிய முற்பட்ட அறிவை எல்லாம் அறியாமையாகத் தானே உணர்ந்து கொள்கிறான்? அப்படியேதான் இந்தத் தோழிமார்களும் இந்தப் பெண்மணியை ‘இதுவரை இப்படி அறிந்துகொண்டோ மில்லையே!’ என்ற உணர்ச்சியுடன், இவளைப் புதுமையாகவே கண்டுபிடித்துவிட்டதுபோல், இன்புற்று இவளுடன் அப்பால் போகிறார்கள்.

மூவகை ஒலி, மூவகை அழைப்பு

‘கீசுகீசு’என் றுஎங்கும் ஆனைச்சாத் தம்கலந்து

பேசின பேச்சுஅரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைபடுத்த தயிர்அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்.

பெண்களின் நாயகமணி என்று பேர் பெற்றிருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள். பேரொளி வாய்ந்த நாயகமணி இவள். நீண்ட நாளாகக் கண்ணனிடம் பக்தி கொண்டிருப்பவள். எனினும் மறந்து கிடப்பதுபோல் மெய்ம்மறந்து கிடக்கிறாள். சிறிது ஆத்திரமாக மற்றப் பெண்கள் இவளைப் ‘பேய்ப் பெண்ணே!’ அழைக்கிறார்கள். அழைப்பில் அன்பும் தொனிக்கத்தான் செய்கிறது.

இந்தப் பாட்டிலும் காலையின் சிறப்பொலிகளாக மூவகை ஒலிகள் குறிக்கப் படுகின்றன. முதலாவது கீச்சாங்குருவிகளின் ‘கீச்சுக் கீச்சு’ ஒலி. இரண்டாவது ஆய்ச்சியர் தயிர் கடையும் ஓசை. ‘இந்த இரண்டு ஒலிகளையும் கேட்டு விழித்துக் கொள்ளாவிட்டாலும், எங்கள் பாட்டொலியைக் கேட்டாவது எழுந்து வரவேண்டுமே; எங்கள் பக்திப் பாட்டைக் கேட்டும் உறங்குகிறாயோ?’ என்கிறார்கள். உண்மையில் இப்பெண், பக்தியில் ஈடுபட்டு மெய்ம்மறந்து கிடப்பவள்தான்.

திங்கள், 21 டிசம்பர், 2009

பிள்ளாய் ! எழுந்திராய் !

6. பிள்ளாய் ! எழுந்திராய் !

இனி இந்த ஆறாம் பாட்டுமுதல் பத்துப் பாசுரங்களால்- அதாவது பதினைந்தாம் பாசுரம் வரை –முற்பட எழுந்திராதவர்களை எழுப்புவதைக் காணப்போகிறோம். இந்தப் பாடல்கள் ஒருவகையில் திருப்பள்ளி யெழுச்சிப் பாடல்களே. அரசர்கள் முதலானவர்களைப் பாடித் துயில் உணர்த்துவதுண்டு. ராஜாதி ராஜனாகிய கடவுளையும் திருப்பள்ளியெழுச்சி பாடித் துயில் உணர்த்துவதுண்டு. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி இருக்கிறார். இங்கே ஏற்கனவே துயில் உணர்ந்து எழுந்தவர்கள் எழுந்திராதவர்களுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதுபோல் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.

முற்படத் துயில் உணர்ந்து வீதிவழியே வருகிறவர்களில் ஒருத்தி எழுந்திராத ஒருத்தியை எழுப்பும்போது, "புள்ளும் சிலம்பின காண்" என்று பள்ளியெழுச்சி பாடத் தொடங்குகிறாள். 'பொழுது விடிவதற்கு முன்னே என்னை எழுப்ப வந்துவிட்டீர்களே!' என்று இப்புதியவள் கேட்டதாக வைத்துக்கொண்டு, பொழுது விடிந்ததற்கு முதல் சாட்சியாகப் பறவைகள் கூவுதலைச் சுட்டிக் காட்டுகிறாள்.

பிறகு, 'சங்கு ஊதுகிறார்களே' என்று சொல்லி , 'அந்தப் பேரோசையும் உன் காதில் விழவில்லையா?' என்று கேட்கிறாள்: 'வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ?' பறவை கூவுதலாவது சற்றுக் கூர்ந்து கவனித்தால் காதில் விழும். 'அந்த வெள்ளைச் சங்கு போடுகிற கூச்சலோ காதைத் துளைக்கிறதே, உனக்கு மாத்திரம் கேட்கவில்லையா?' என்கிறாள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறவள்.

சங்கு 'வாருங்கள், கோவிலுக்கு வாருங்கள்' என்று கூவி அழைக்கிறதாம். எனவே, அழைக்கின்ற சங்கு என்ற பொருளில் 'விளிசங்கு' என்கிறாள். பறவை கூவுதலையும் சங்கு கூவி அழைப்பதையும் ஆகிய இரண்டு காலை ஒலிகளையும் குறிப்பிட்டபின், 'பிள்ளாய்! எழுந்திராய்!' என்கிறாள்.

பிறகு, மூன்றாவது சாட்சியாக, 'ஹரி:ஹரி:' என்று முனிவர்களும் யோகிகளும் (பெரியோர்கள்) சொல்லிக் கொண்டே துயிலுணர்ந்து எழுந்திருக்கும் அந்த ஓசையை அடையாளமாகக் கூறுகிறாள். இப்படி மூவகைக் காலை ஒலிகளையும் சான்றாகக் கூட்டத்தின் பிரதிநிதி காட்டியதும், இப்புதியவள் எழுந்துவந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறாள் என்பது குறிப்பு.

பக்தி அனுபவத்தில் இறங்கும்போது தனி அனுபவத்தைத்தானே பிரதானமாகக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். முற்படத் துயில் உணர்ந்தவர்கள் தாங்களே கிருஷ்ணபக்தியிலும் கிருஷ்ண குணாநுபவத்திலும் ஈடுபட வேண்டியிருக்க, அவர்கள் ஏன் மற்றவரை எழுப்பவேண்டும்? இது ஒரு முக்கியமான கேள்விதான். இதற்கு விடை: அமிர்தத்தையும் பிறருடன் பங்கிட்டுக் கொள்வதே நலம், இந்த விதிக்குப் பக்தி அனுபவமும் விலக்கன்று. ருசி உடையவர்கள் எல்லாரும் சேர்ந்து இறைவன் என்ற அமிர்தத்தை அனுபவிக்க வேண்டியதுதான் என்பது உத்தம பக்தர்களின் உறுதியான மன நிலை.

வேறொரு கேள்வி: இத்தகைய பக்த மணிகளான பெண்கள் சிலர் முன்கூட்டி எழுந்துவர, வேறு சிலர் உறங்கிக் கிடப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் தாமே எழுந்து வர, இவர்களை எழுப்ப வேண்டியிருக்கிறதே, ஏன்? இதற்கு விடை: பக்தி சிலரை மயக்கித் தள்ளி விடுகிறது. சிலரை இருந்த இடத்தில் இருக்க முடியாதபடி துள்ளியெழச் செய்கிறது என்பதுதான்.

நீராடப் போகும்போது பெண்கள் துணைதேடிப் பேசிக் கொண்டு போவது இயல்பு. புதுவெள்ளத்தில் நீந்தி நீராடுவார் பெரும்பாலும் துணையின்றி அந்தப் பெருவெள்ளத்தில் இறங்கத் துணிவதில்லை. அப்படியே 'கால் ஆழும், நெஞ்சு அழியும், கண் சுழலும்' என்று வருணிக்கப்படுகிற ஆழ்ந்த பக்தி அனுபவத்திற்குத் துணை அவசியம்தான் என்பர். தெரிந்த வாழ்க்கை இன்பத்திற்கு மேலானதும், என்றும் புதுமையாக உள்ளதுமான பேரின்ப உணர்ச்சி அச்சம் தருவதுதான் தொடக்கத்திலே! எனவே துணை தேடிக் கொண்டு இவர்கள் ஒரு கூட்டமாகப் போகிறார்கள்.

'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது உத்தம பக்தரின் உண்மை மனநிலை.

காலையின் மூவகை ஒலிகள்

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுஉண்டு

கள்ளச்சகடம் கலக்குஅழியக் கால்ஓச்சி

வெள்ளத்து அரவில் துயில்அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ளஎழுந்து அரிஎன்ற பேர்அரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்

பொழுது விடிந்துவிட்டது என்பதற்கு மூன்று சான்றுகள் காட்டுகிறார்கள் துயில் எழுப்பும் சிறுமியர். அதிகாலையில் கூவத் தொடங்கும் பறவைகளும், கோயிலில் காலை வேளையில் ஊதும் சங்குகளும், ஹரிநாமத்தைச் சொல்லிக்கொண்டே மெள்ள எழுந்திருக்கும் பெரியோர்களும் ஆகிய மூன்று சாட்சிகளைக் குறிப்பிட்டு ‘இனியாவது எழுந்திரு’ என்று ஒருத்தியைத் துயில் எழுப்புகிறார்கள்.

திருப்பாவையின் முதலாவது பள்ளியெழுச்சிப் பாட்டு இது. ‘ஹரி: ஹரி: என்று மனனசீலர்களான முனிவர்களும், கைங்கரிய சிஷ்டர்களான யோகிகளும் செய்கிற முழக்கம் உள்ளத்திலே புகுந்து குளிர்விக்க எழுந்து வா பிள்ளாய்!’ என்கிறார்கள்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.

5. இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.

எந்த நல்ல காரியத்துக்கும் இடையூறுகள் குறுக்கிடுவது உண்டு. பெரிய பெரிய காரியங்களுக்குப் பெரிய பெரிய இடையூறுகள் வந்து குறுக்கிடுவதையும் காண்கிறோம். எனவே இக்கன்னியருள் ஒருத்தி இத்தகைய கேள்வி ஒன்றை எழுப்பினாள். 'நாம் நெடுநாளாகச் செய்திருக்கும் பிழைகள் பாவங்கள் எல்லாம் இன்று நாம் செய்யக் கருதும் இந்த நல்ல காரியத்துக்கு இடையூறு விளைக்கலாமே!' என்றாள். அந்த இடையூறுகளை யெல்லாம் அநாயாசமாகத் தொலைத்து எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதற்கு ஒரு ராஜ வழி இருக்கிறது என்கிறாள் விசேஷ நம்பிக்கையுள்ள ஒரு பெண்.

சுருங்கச் சொன்னால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவதே அந்த வழி என்கிறாள். பகவத் நாம ஸங்கீர்த்தனமும் பண்ணிக் காட்டுகிறாள். பகவானைக் காட்டிலும் பகவானுடைய திருப்பெயர் நமக்குப் பக்கத்திலிருந்து பெற்ற தாய்போல் உபகரிக்கிறது என்று மட்டும் சொல்லவில்லை; நாம ஸங்கீர்த்தனத்திலிருந்து பிறக்கும் சக்தி சாமானியமல்ல என்கிறாள். அது தீயாகிப் பாவங்களை யெல்லாம் நீறாக்கிவிடும் என்கிறாள்.

எத்தகைய பாவத்தையும் எரித்துவிடுமா? இது ஒரு கேள்வி. காட்டுத் தீயைப் பற்றிக் கேட்டிருக்கிறீர் களா? அது பச்சை மரங்களையும் பஸ்மம் ஆக்கி விடுகிறதல்லவா? நாம ஸங்கீர்த்தனமும் பாவங்களனைத்தை யும் உருமாய்த்து ஒழியச் செய்துவிடும் என்கிறாள்.

நாம ஸங்கீர்த்தன வழிக்கு ஒரு முன்மாதிரியாகவும் பேசுகிறாள். "மாயனை" என்று தொடங்குகிறாள். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்று பாடுகிறாள்.

மேலும் நாம ஸங்கீர்த்தனம் செய்கிறாள். யமுனைத் துறைவன் என்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாமோதரன் என்கிறாள். இவை பொருள் பொதிந்த பெயர்கள் மட்டுமல்ல, பொருள் புதைந்த பெயர்களும்கூட. முதல் முதல் மாயன் என்ற பெயரைத்தான் பாருங்கள்: இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை – அதாவது ஆச்சரியமானவை.

'வடமதுரை மைந்தன்' என்ற திருப்பெயரைப் பாருங்கள். 'தந்தை காலின் பெருவிலங்க தாள் அவிழ, நள் இருட்கண் வந்த எந்தை' என்பதை மைந்தன் நினைவூட்டுகிறான். இவன் பிறக்கும்போதே தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று முறிந்து போய் விட்டனவாம். இது பிறந்த மிடுக்கு. பிறகு இம் மைந்தன் பருவம் நிரம்பு முன்னே அசுர மாமனாகிய கம்சனை வதைத்த மிடுக்கையும் காண்கிறோம்.

ஆயர்குல விளக்கு என்று பெயரிட்டு அழைப்பதிலும் புதை பொருள் உண்டு. வேதம் ஓதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்துக் கண்டுகொண்டார்களாம் ஆயர்கள். மறைக்கு முன்னே சென்று மறைந்தவன் மாட்டுக்குப் பின்னே ஆய்ப்பாடி காண நடந்து சென்றானாம். இத்தகைய எளிமையை உணர்த்துகிறது இப்பெயர்.

'தாமோதரன்' என்ற பெயரின் பொருள் மேலும் விசேஷமானது. 'கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது இப் பெயரின் பொருள். யசோதை கட்டிய கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவனாக இருந்தான் கண்ணன் என்றால், பகவானுடைய எளிமைக்கு எத்தகைய நினைவுச் சின்னம் பாருங்கள்! இந்தத் தாமோதரனை, "தாயைக் குடல் விளக்கம் செய்த்தா மோதரனை" என்கிறாள் கோபியருள் ஒருத்தி. தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்குப் பெருமை தந்தான்; தன் வயிற்றுத் தழும்பினால், தாயை வாழ்வித்தான்; உலகையும் வாழ்வித்தான்.

இனி, இப் பெயர்களைக் கோத்து இவள் நாம ஸங்கீர்த்தனம் செய்து காட்டுவதைப் பார்க்கலாம். "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினிற் தோன்றும் அணி விளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்ததா மோதரனை" .... இப்படி நாம ஸங்கீர்த்தனம் செய்யும்போது, மனத்தினால் சிந்தித்து வாயினால் பாடும்போது, ஒரு சக்தி பிறக்கிறது நெஞ்சினிலே; அது தீயாக ஜொலிக்கிறது; காட்டுத் தீயாகக் கனன்று நிமிர்ந்து பொங்குகிறது. இந்தத் தீக்கு முன் எந்தக் கடினமான பாவமும் நிற்க முடியாது; இவள் இதற்குமுன் செய்த பிழையும் பாவமும் பஞ்சாகித் தீய்ந்து ஒழிந்து போகும் என்கிறாள்.

இப்போது செய்ய வேண்டியது, அகத் தூய்மையுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்யவேண்டியதுதான். அகத் தூய்மைக்கு அறிகுறியாகத் தூய மலர்களையும் தூவித்தொழுது பேறுபெறக் கூடும் என்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" பிழையும் பாவமும் நீறாகிவிடும் என்கிறாள். சாம்பலுமின்றி மாய்ந்து போகும் என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.

முன்பு செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும் தீய்ந்து போகும் என்கிறாள். ஆகையால் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு அல்லது பாடிக் கொண்டு நோன்பிலே இறங்கி, இந்த வியாஜத்தாலே இறைவனை இடையூறின்றி அடைய முடியும் என்று கூறி முடிக்கிறாள்.

தீயினில் தூசு!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனை

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றளவும்

தீயினில் தூசு ஆகும் செப்பலோர் எம்பாவாய்.

விளக்கம்

இவர்கள் நோன்பில் இறங்கிக் கண்ணனை அடைய விரும்புகிறார்கள் அல்லவா? ஆனால் ஏற்கனவே செய்திருக்கும் பிழைகளின் விளைவு இந்த நற்செயலுக்கு இடையூறு ஆகாதா? இப்படி ஒரு வினா எழக்கூடுமல்லவா? பிழைகளாகிய விரோதிகளைப் போக்கிக் கொண்டு வந்துதான் இத்தகைய நோன்பினில் இறங்க வேண்டும் என்பதில்லை; அப்படிக் கூறுவதில் பொருளுமில்லை; பயனுமில்லை. நாம ஸங்கீர்த்தனத்தில் இன்புற்று ஈடுபடவே பிழைகள் எல்லாம் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகிவிடுமாம்.

ஏற்கனவே செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நேரக் கூடிய பிழைகளும் தீயினில் பஞ்சு படும்பாடு படும் என்கிறாள் ஞானம் உடைய சிறுமி.