வெள்ளி, 4 மார்ச், 2016

என்ன தவம் செய்தேன்!

அது 1971. அன்று DOT ஆக இருந்த தொலைபேசித்துறையில் தொலைபேசி இயக்குனர் ஆகத் தேர்வு செய்யப்பட்டு நான் திருச்சிக்குப் பயிற்சிக்குச் செல்கிறேன். என் அடுத்த வீட்டுக்காரர் திருச்சியில் தன் கம்பெனி ஓய்வறையில் பிற ஊழியர்களுடன் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி வரச் சொல்லியிருந்தார். கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு குடும்ப நண்பர் தன் உறவினர் ஒருவர் திருச்சியில் மிகப் புகழுடன் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மிக நெருக்கம் என்று சொல்ல முடியாதெனவும் வேண்டுமானால் அவரைப் போய்ப் பார்த்தால் ஒருவேளை உதவலாம் எனவும் கூறி அவர் விலாசத்தையும் கொடுத்திருந்தார். திருச்சிக்குப் போய் அடுத்த வீட்டுக்காரர் அறையில் ஓரிரு நாள்கள் தங்கிய பிறகு, ஒரு மாலை தேரத்தில் ஊர் சுற்றக் கிளம்பினேன். செல்லும் வழியில் குடும்ப நண்பர் கொடுத்த முகவரியைப் பார்த்தேன். போய்த்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன். அங்கிருந்தவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு நான் அங்கு வந்திருக்கும் நோக்கத்தைக் கூறினேன். “எங்கு தங்கியிருக்கிறாய்?” இது அவர் கேள்வி. இடத்தைச் சொன்னேன். “சரி, உன் பெட்டியை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து விடு” என்றார். “இல்லை, அது உங்களுக்கு சிரமமாக இருக்கும். இருக்கும் இடத்திலேயே அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறேன்” என்றேன். “சிரமம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நான். அதைச் சொல்ல நீ யார்?” என்று அவர் கர்ஜித்தார். அப்போதும் நான் தயங்கினேன். அப்போது கல்லூரி முடிந்து வந்த அவர் மூத்த பையனிடம் , இவன் பெட்டி இந்த இடத்தில் இருக்கிறது. அங்கு போய் அதை எடுத்துக்கொண்டு நம்மகத்தில் கொண்டுபோய் வைத்துவிடு என்று கூறி, எனக்கு இடம் கொடுத்தவரையும் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி விட்டார். ஆக, எனக்கு அவர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் ஆயிற்று. ஆனால், அது இறைவன் எனக்கு அந்த இள வயதில் கொடுத்த மகா பெரிய பாக்யம் என்பது அந்த நொடியில் தெரியவில்லை. அவர்தான் பெருந்தன்மையோடு எனக்கு இடம் கொடுத்தார் என்று நினைத்துச் சென்ற எனக்கு , வீட்டின் உள்ளே நுழைந்த நொடி முதல் தன் மூத்த பையனாகக் கருதி நடத்திய ஒரு அருமையான அன்னை, ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து அவர்களுடனேயே வாழ்ந்தவன்போல் தன்னை சொந்த சகோதரனாக நடத்திய நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் என என்னைப் பாச மழையில் நனைத்த ஒரு குடும்பம் உறவான பெரிய பேறு ஆண்டவன் அளித்தது. இரண்டு மாதங்கள்தான் அங்கிருந்தேன். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பம் என்மீது மாறாத பிரியம் காட்டி வருகிறது இன்னொரு பாக்யம். அவர்கள் மட்டுமல்ல, வீட்டிற்கு வந்த மருமகன்கள், மருமகள்கள் என எல்லோரும் ஒரே மாதிரி நடப்பது கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாத அதிசயம். அந்த மாமனிதர் விண்ணுலகம் சென்று 40 ஆண்டுகள் கழித்து அவரது புதல்வர்கள் அவரைப் பற்றி ஒரு அருமையான ஆவணப்படம் தயாரித்து அழகான விழாவாக நடத்தி சமீபத்தில் வெளியிட்டார்கள். ஸ்ரீமத் ஆண்டவன் திருப்புல்லாணி விஜயம் தொடர்பான காரியங்களாலும், சற்றே பாதித்த உடல்நிலையாலும் அந்த அருமையான சந்தர்ப்பத்தில் விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் என் மனைவி மட்டும் செல்லும் துர்பாக்யம் எனக்கு. விழாவில் வழங்கிய குறுந்தட்டை நேற்றுத்தான் பார்த்தேன். வாழ்வாங்கு வாழ்ந்த தந்தைக்கு இவ்வளவு சிறப்பாக ஒரு மரியாதையைச் செய்தவர்கள் விரல் விட்டு எண்ணும்படியே இருக்கும். அவர்களில்கூட இப்படிக் காலமெல்லாம் நிலைத்து பின்னாளில் வருவோர்கூட இவர் சிறப்பைப் புரிந்து கொள்ளும் வகையில் இப்படி ஒரு குறுந்தட்டை மூலம் ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்தவர் யாருமில்லை. இந்தக் குடும்பத்துடன் உறவு ஏற்பட என்ன தவம் செய்தேனோ என்று நொடிக்கு நொடி வியந்து கொண்டே இருக்கிறேன்.

யார் அவர்? இன்று ஊரெல்லாம் பாரதி பாடல்களை உற்சாகமாகப் பாடி வருகிறோமே அந்த பாரதி பாடல்கள் திரு ஏ.வி. எம். செட்டியாரின் தனி உடமையாக இருந்ததைப் போராடிப் பெற்று தேச உடமையாக மாற்ற வழி கண்டவர். பாரதியாரின் துணைவியார் உடல் நலம் குன்றியிருந்த கடைசி மூன்று ஆண்டுகளிலும் தன் சொந்தத் தாயைப் போல பாவித்து உடன் இருந்து , அவர் தன் மடிமீது தலைவைத்து உயிர் துறந்த பாக்யம் பெற்றவர். அக்ரஹாரத்து அதிசயம் என்று திரு அண்ணாவால் பாரட்டப் பட்டவர். பாரதிதாசனின் பேரன்புக்குப் பாத்தியப்பட்டவர். வாய் திறந்தால் கவிதை மழை காளமேகம் எனப் பொழியும் ஆற்றல் படைத்தவர். பல சிற்றிதழ்களுக்கு ஆசிரியராயிருந்து பின்னாளில் “சிவாஜி” என்ற சிறப்பான மாத இதழை நடத்தியவர். சுஜாதா போன்ற பிரபலங்களின் முதல் படைப்புகளெல்லாம் இவர் இதழில் வந்தவையே. அவர்தான்

திருலோக சீதாராம் என்ற மாபுருடர்.

New Doc 33_1

வியாழன், 3 மார்ச், 2016

பாதுகா சாம்ராஜ்யம் (நிறைவு)

51. ஸ்ரீபாதுகா ஸேவகத் திருநாமம்

ஸ்ரீதேசிகனுக்குப் பாதுகையின் தொடர்புள்ள பெயர் தமக்கு வாய்க்க வேண்டுமென்று ஒர் ஆசை. திருவரங்கனுக்கு அந்தரங்கரான அடியார்கள் தம்மைப் பாதுகா ஸேவகா என்ற பெயரைச் சொல்லி அழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றர். உண்மையில் தேசிகனைக் காட்டிலும் பாதுகைக்கு ஸேவை செய்தவர் யார்? அழகான பெயர். இனிய சொற்களின் சேர்த்தி. அக்ஷரவர்க்கங்களில் வலிய ஓசையுடைய இரண்டாவது நான்காவது எழுத்துக்களின் வாடையே இல்லாத பெயர். கூட்டெழுத்து ஒன்றுமில்லாத தனி எழுத்துக்களின் இணைப்பு. ஒசையும் இனியது. தேசிகனே பெற ஆசைப்பட்ட இத் திருநாமம் ஸ்ரீதேசிக தர்சந கோஷ்டியில் செல்வாக்குப் பெறாத காரணம் பாதுகையைத்தான் கேட்க வேண்டும். ஆனால் இரண்டு ஆசார்யர்கள் மட்டும் இத்திருநாமத்தைப் பெறும் பேறுடையர். முதலில் திருக்குடந்தை தேசிகனுக்குப் பகவத் விஷய ஆசார்யனான ஸ்வாமி. பின் ஸ்ரீமத் பெரியாண்டவன் திருவடிக்குப் பாதுகையாய் விளங்கிப் பல சாஸ்த்ரீய க்ரந்தங்களை அருளிச் செய்த ஸ்ரீமத் சின்னாண்டவன் ஸ்வாமி. இந்த இரண்டு ஆசார்யர்களே தேசிகன் ஆசைப்பட்ட திருநாமத்தைப் பெற்ற பாக்யவான்கள். இவர்களுக்கு முன்போ பின்போ ஒருவரும் இத்திருநாமத்தை ஏந்தியதாய்த் தெரியவில்லை.

52. பின்பு இத்திருநாமத்தைப் பற்றிய பிரஸ்தாபம்

பல்லாண்டுகட்கு முன் தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவன் திரு விண்ணகரப்பன் திருவடிவாரத்தில் சில மாதங்கள் எழுந்தருளியிருந்து காலசேஷபம் ஸாதித்துக் கொண்டிருக்க நேரிட்டது. பல சிஷ்யர்கள் அப்பொழுது இங்கு வந்து காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தனர். அடியேனுடைய குடிசைக்கு எதிரில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் அமைந்தது அடியேனது பாக்யம். அடியேனுடைய ஆசார்யனும் திருத்தகப்பனாருமாகிய ஸ்ரீ நவநீதம் ஸ்வாமி அடிக்கடி ஆச்ரமத்துக்கு எழுந்தருள்வதையும் ஸெளஹார்த்த பரிவாஹமாக இரண்டு மஹான்களும் உரையாடுவதையும் கண்டிருக்கிறேன். ஸ்ரீமத் ஆண்டவன் அடியேனிடம் வர்ஷித்த கிருபையை நினைந்து அடிக்கடி அங்கு விடை கொண்டு அடியேன் நெருங்கி வர்த்திக்கும் பாக்யமும் பெற்றேன். கனிந்த திருவுள்ளத்தோடு பல நல்லுரைகளை அருளக் கேட்டுப் பெருநலம் பெற்றேன். பரந்யாஸத்தை விளம்பிக்காமல் அடியேன் திருத்தகப்பனர் ஸந்நிதியில் செய்துகொள்ளும்படி அடியேனை வற்புறுத்தி நியமித்து அவ்வாறே நடத்தச் செய்து திருவுள்ளம் குளிர்ந்த ஸ்ரீமத் ஆண்டவனுடைய மஹோபகாரம் எந்நாளும் மறக்க முடியாது. ஒரு நாள் 'பாதுகாஸேவக' என்ற தேசிகன் ஆசைப்பட்ட திருநாமம் உரிய செல்வாக்கைப் பெறாததை அங்கு விண்ணப்பித்துக் காரணத்தை அறிய விரும்பினேன். அப்பொழுது ஸ்ரீமத் ஆண்டவன் அருளிய விடை --'என்னுடைய ஆசார்யனுக்கு அந்தத் திருநாமம் அமைந்ததற்கு ஸந்தோஷித்து தினந்தோறும் அநுஸந்தித்து வருகிறேன். எனக்கு அந்தத் திருநாமம் வரப்ரஸக்தியில்லை. உலகில் தகப்பனர் பெயரைப் புத்திரன் வைத்துக் கொள்வதில்லையே! இனி வரப்போகும் என் ஜ்ஞாநஸந்ததியாரைப் பற்றி நான் இப்பொழுது எதுவும் சொல்வதற்கில்லை. மற்ற ஆசார்ய பரம்பரையைப் பற்றி நான் சொல்வதற்கில்லை' என்று மிக அழகாய் ஸாதிக்கும்படி இருந்தது. அருகில் இருந்த அந்தத் திருவடியைச் சார்ந்த ஒருவர் தேசிகன் அத்திரு நாமத்தை ஆசைப்பட்டது தம் கடைசிக் காலத்தில் என்று தெரிவதால் அப்பெயரை வைத்துக்கொள்ள அஞ்சக்கூடும் என்றார். அதற்கு அடியேன் தேசிகனுக்குத் தம் வாழ்நாள் முழுதும் அப்பாக்கியம் கிட்டாவிட்டாலும் கடைசிக் காலத்திலாவது ஒரு முறையாவது அழைக்கப்பட்டால் திருப்தி பெறுவதாகத் தான் திருவுள்ளம் என்று விண்ணப்பித்தேன். திருவுள்ளம் மிகவும் உகந்தபடி,

53. இப்பொழுதைய ஸ்ரீமத் ஆண்டவன்

இப்பொழுது ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யகம் செய்துவரும் மஹாபுருஷரான ஸ்ரீமத் ஆண்டவனைப் பற்றிச் சில விஷயங்களை விண்ணப்பம் செய்ய முற்படுகின்றேன். பூர்வாச்ரமத்தில் பால்யம் முதலே , ஸ்வாமியும் அடியேனும் மிக நெருங்கிப் பழகியவர்கள். விண்ணகரும் குடந்தையும் அடுத்து உள்ளது தானே! பின்பு நேர்ந்துள்ள பந்துத்வமும் உண்டு. அடிக்கடி அருளிச் செயல் கோஷ்டியில் சேர்ந்து கைங்கர்யம் செய்யப் பெற்றதும் உண்டு. கலியன் திருநெடுந்தாண்டகத்திலும் பெரிய திருமடலிலும் திருவிண்ணகரப்பனை ஸேவித்துத்தான் அமுதனைப் போற்றியதாகப் பெருமையோடு பேசுவேன். ஸ்ரீஸ்வாமி, கலியன் திருவண்ணகரனை ஸேவித்து விட்டு அவனுக்கும் மேல் பரமப்ராப்யனாக அமுதனைப் பேசிப் பிறகு செல்லவேண்டிய இடமில்லையென்று பிரபந்தத்தைத் தலைக்கட்டி விட்டதாய் ஸாதித்து அடியேன் வாயை அடக்கி விடுவதுண்டு. மேலும் ஒருநாள் கோஷ்டியில் ஸ்ரீமதாண்டவன் மேற்கூறிய இரண்டு எம்பெருமான்களையும் சேர்த்துக் கலியன் பாடிய பாசுரங்களில் திரு விண்ணகர்ப் பெயர் வரும்போது அடியேனுடைய கைகள் குவிந்து அஞ்சலி செய்துவிட்டு, அடுத்துத் திருக்குடந்தைப் பெயர் வரும் போது அடியேன் கைகள் இறங்கி விடுமென்றும் வேடிக்கையாக ஸாதித்தாயிற்று. அதற்கு அடியேன் விண்ணப்பித்தது -- விண்ணகர்ப் பேச்சு வரும்போது செயலற்று இருந்த ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கைகள் குடந்தைப் பேச்சு வரும்போதே ஆர்வத்துடன் எழுந்து குவியும் என்று தத்தம் பெருமானிடத்தில் உள்ள ஈடுபாட்டின் விளைவாக வரும் பாஷணங்கள் இவை. நித்ய விபூதியில் கூட பகவத் குணாநுபவத்தில் பிணக்கு உண்டே. ஸ்ரீமத் ஆண்டவனோடு சுவையான சம்பவங்கள் இவ்வாறு பல.

54. அருளிச் செயலில் நோக்கு மிகுதி

ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்துக்கு அருளிச் செயலிலும் பகவத் விஷயத்திலும் மிகுதியான நோக்கும் ஆதரமும் உண்டென்பது பலர் கண்ட உண்மை. ஸ்ரீமத் பெரியாண்டவனுக்குப் பெரும்பாலும் பகவத் விஷய காலக்ஷேபத்திலேயே பொழுது போக்கென்று கேள்விப்பட்டுள்ளோம். பின்பு தேரெழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன் ஸாதாரண வார்த்தைகளில் கூட ஆழ்வார் ஸூக்தியைப் பயன் படுத்திப் பகவதநுபவத்தில் மூழ்கி மனமுருகிக் கண்ணீர் விட்டுத் தமக்கு இயற்கையாய் அமைந்த இன்சொற்களைக் கொண்டு கேட்பவர்களின் உள்ளத்தை உருக்கி அனுபவத்தில் ஆழ்விப்பது அடியேன் உள்பட பலரும் கண்கூடாகக் கண்ட உண்மை. அந்த ஸம்ப்ரதாயத்தில் அந்த ஸ்தாநத்தை அலங்கரித்துக் கொண்டு அவ்வாசார்யனுடைய திவ்ய கடாக்ஷத்தாலேயே தாம் ஸத்தை பெற்ற உணர்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் இப்பொழுதைய ஸ்ரீமத் ஆண்டவன் பால்யத்திலேயே ஸாமாந்ய சாஸ்த்ராப்யாஸம் செய்து நம்மாண்டவன் ஸ்ந்நிதியில் அத்யாத்ம ஜ்ஞாநத்தையும் விசேஷமாகப் பெற்று ப்ரவசநம் செய்துகொண்டு விளங்கிய போதிலும் அருளிச் செயலிலும் பகவத் விஷ்யத்திலுமே வலத் திருக்கண்ணோக்கு அதிகமென்பதை உலகமே அறியும்.ஸ்ரீமத் ஆண்டவன் சேதநர்கள் நல்வாழ்வு பெறுதலையே குறிக்கோளாகக் கொண்டு தம்முடைய சிரமத்தைச் சிறிதும் பொருட் படுத்தாமல் ஆங்காங்குத் தாமே எழுந்தருளி ஆயிரக் கணக்கான வைதிகர் -- லெளகிகர் -- பண்டிதர்-- பாமரர் ஆகிய அனைவருக்கும் உள்ளத்துப் பதியுமாறு தமக்குப் பாதுகைகள் அருளிய பேச்சுத் திறனைக் கொண்டு அருளிச் செயலையே முதல் துணையாகக்கொண்டு செய்தருளும் உபந்யாஸங்களால் பலரும் ஞானம் பெற்று ஆத்ம காரியங்களையும் செய்துகொள்வது ஸம்ப்ரதாயத்துக்கும் ஸித்தாந்தத்துக்கும் பரம லாபம். தம் திருமேனி நலிவைப் பெரிதாகக் கொள்ளாது மற்ற ஆசார்யர்களால் கனவிலும் கருத முடியாத பற்பல புண்ய க்ஷேத்திரங்களுக்கும் புண்யகிரிகளுக்கும் புண்யதீர்த்தங்களுக்கும் புண்யவனங்களுக்கும் பாதயாத்ரையாக எழுந்தருளி ஒவ்வோரிடத்திலும் பல்வேறு மக்களுக்குத் தம் இனிய சொற்பொழிவுகளால் அறிவூட்டி உய்விக்கச் செய்தது இந்த ஸ்ரீமத் ஆண்டவனுக்கு உள்ள தனிச் சிறப்பு.

55. ஸ்ரீமத் ஆண்டவன் எழுபது திருதக்ஷத்ரப் பூர்த்தி

புரீமத் ஆண்டவன் யாத்திரை முடிந்து திருமயிலை ஆச்சிரமத்துக்கு எழுந்தருளும் வாய்ப்பு வந்துள்ளது. இவ்வாண்டின் பங்குனி மாதத்துப் புஷ்யத்தில் 70வது திருநக்ஷத்ர பூர்த்தி மஹோத்ஸவம் நெருங்குகின்றது. இதனை மிக்க விபவத்துடன் நடத்திக் கண்குளிரக் கண்டு மகிழப் பல சிஷ்யர்களும் ஆப்தர்களும் பாரிக்கின்றனர். நம் தர்சநஸ்தாபகரான எம்பெருமானாரின் 16வது ஷஷ்ட்யப்த பூர்த்தி மஹோத்ஸவமும் பிங்கள ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் வருகின்றது. யதிராஜருடைய மஹோத்ஸவம் அணுகும்போது அதை மிக்க விபவத்துடன் நடத்திய பின்பே யதிவரரான தமது மஹோத்ஸவத்தை நடத்த வேண்டுமென்று தம் திருநகஷத்ரத்தை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைத்து நடத்தும்படி தம் சிஷ்யர்களுக்கும் கமிட்டியாருக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் நியமித்தது எம்பெருமானார் திருவடியில் உள்ள பரம பக்தியின் விளைவேயாகும். திருநக்ஷத்ரமஹோத்ஸவம் முதலிய சுப காரியங்களில் அருளிச் செயலின் ஓசையே கேட்கக் கூடாது என்று ஸ்ரீதேசிக ஸம்ப்ரதாயத்தில் ஊன்றிவிட்ட விபரீத நிர்ப்பந்தத்துக்கும் பங்கமின்றி எம்பெருமானாரை உத்ஸவத்துக்கு அங்கமாகவும் புஷ்யத் திருநக்ஷத்ரத்தன்று சேரும் ஸ்ரீமத் பெரியாண்டவன் திருநக்ஷத்ரத்துக்கு அங்கமாகவும் அருளிச் செயலின் அநுஸந்தாநத்துக்கு வாய்ப்பை அளித்தது பாதுகையின் ஸங்கல்பம். இத்துடன் வேத வேதாந்த பாராயண கோஷ்டியையும் ஸ்ரீபாஷ்யாதி வித்வத் ஸதஸ்ஸையும் ஸ்ரீபாஷ்யகாரர் திருவீதியில் எழுந்தருளி அநுக்ரஹிப்பதையும் ஸ்ரீமத் ஆண்டவனுடைய 70வது திருநகஷத்ர பூர்த்தி மஹோத்ஸவத்தையும் தலத்துப் பெருமாளாகிய ஸ்ரீநிவாஸனும் அலர் மேல் மங்கையும் தலத்துத் தோன்றிய பேயாழ்வாரும் திருக்கோயிலின் உரிமையாளரான ஸ்ரீதேசிகனும் கண்குளிரக் கடாக்ஷித்து மகிழப் போகின்றனர். மற்றுமொரு விசேஷம். ஸ்ரீமத் ஆண்டவனுக்கு வழி படும் குலதெய்வமாகிய ஆராவமுதனும் தான் பெற்றெடுத்து வளர்த்த குழந்தையின் 70வது திருநக்ஷத்ர பூர்த்தி மஹோத்ஸவத்தைத் தானும் கண்டருள விரும்பித் திருவனந்தாழ்வான்மீது பிராட்டியுடன் அமர்ந்து தன் வைச்வரூப்யத்துக்கேற்ற திருக்கண்களைத் திருமயிலைக்குச் செல்லவிட்டு மஹோத்ஸவத்தைக் கண்டு களித்து ஸ்ரீமத் ஆண்டவனைப் பரிபூர்ணமாய் அனுக்ரஹித்துச் சதாபிஷேக மஹோத்ஸவத்தை இன்னும் மிக்க விபவத்தோடு நடத்துவதற்கு இப்பொழுதே ஸங்கல்பம் கொள்ளப் போகின்றான். (70வது பூர்த்தியன்று அமுதனது சித்திரைத் திருநாள் முன்ருவது உத்ஸவம்-சேஷவாகனமென்பதை நோக்குக.) ஆயிரக்கணக்கான சிஷ்யர்களும் ஆப்தர்களும் ஆஸ்திகர்களும் இம்மஹோத்ஸவத்தில் கலந்து திருவயிறும் திருவுள்ளமும் திருக்கையும் நிரம்பப்பெற்று மகிழப் போகின்ருர்கள்.

56. அடியேனது முடிவுரை

இம்மஹோத்ஸவத்தின் பகுதியாகச் சித்திரை மாதத்தில் வெளிவரப்போகும் பாதுகையின் விசேஷ மலருக்கு ஒரு வியாசம் வரைந்து அனுப்புமாறு கமிட்டியைச் சார்ந்த ஆப்தர்கள் நியமித்தார்கள். அவர்கள் நியமநத்தை ஏற்று நடப்பது அடியேன் ஸ்வரூபம். பாதுகா ஸம்ப்ரதாயத்தில் பாதுகைகளின் திருமுன்பே பாதுகையின் ஸங்கல்பத்தால் நடக்கப்போகும் இம்மஹோத்ஸவத்தில் வெளிவரும் பாதுகை மலருக்கு பாதுகையைப்பற்றியே வியாசத்தை வரைய விரும்பினேன். இந்த வியாஜத்தாலாவது ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தை ஸேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதை ஸேவித்து வரும்போது அடியேனுடைய சிற்றறிவுக்கு மிகச் சுவையாய்த் தோற்றிய அம்சங்களை வியாசமாக வரைந்தேன். உள்ளவுணர்ச்சிகளால் வியாசம் பெரிதாய் அமைந்து விட்டது. வியாசம் வரைபவருக்குச் சுதந்திரம் இருப்பது போல் மலர் அச்சிடும் நிர்வாகிகளுக்கும் வியாசத்தின் அளவைக் குறைத்துக்கொள்ளும் சுதந்திரம் உலகில் நடையாடுகின்றது. ஆனல் பாதுகாமயமாகவே அமைந்துள்ள இந்த வியாசம் அப்படியே வெளி வருமென்ற தைரியமும் உண்டு. அடியேனுடைய அறிவுக் குறைக்கு ஏற்றவாறு வியாசம் எழுதுவதற்கே அடியேனுக்கு உரிமை உண்டு. இதைப் பற்றிய குணதோஷங்களே ஆராய்ந்து முடிவு செய்ய இதைக் கடாக்ஷிiப்பவர்க்கே உரிமை உண்டு. அநந்த ப்ரணாமங்களுடன் இந்த வியாசத்தைக் கமிட்டியாரிடம் ஸமர்ப்பிக்கின்றேன்.

---------------حس محماسه ح----------

பாதுகா சாம்ராஜ்யம் நிறைவு பெற்றது

திங்கள், 29 பிப்ரவரி, 2016

பாதுகா சாம்ராஜ்யம்

41. பாதுகை-திருவடி சேர்த்தியழகு

ஸ்ரீதேசிகனுக்குப் பாதுகையால் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஒடுகின்றது. ப்ரஹ்மாதிகளின் ஐச்வர்யத்தையும் துரும்பாய் எண்ணித் திருவரங்கனது திருவடி-பாதுகை இவற்றின் சேர்த்தியழகையே அனுபவித்துக்கொண்டு இவ்வுலகிலேயே வாழ ஆசைப்படுகின்றார். பாதுகை சேருவதால் திருவடிக்கு ஒர் அழகு. திருவடியில் சேர்ந்து அதைத் தாங்குவதால் பாதுகைக்கு ஒர் அழகு. இந்தச் சேர்த்தியழகு தம் திருவுள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது என்கிறார் தேசிகன்.

42. இந்நூல் அவதரித்தது பாதுகையாலேயே

எம்பெருமானுடைய பெருமையைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டுமானால் விசேஷ ஞானம் வேண்டும். வேதாந்தங்களில் சிறந்த அறிவு வேண்டும். இரத்தினங்கள் பொதிந்த பாதுகைகளின் செவிக்கினிய நாதங்கள் அவ்வறிவை ஊட்டச் சாதனமாய் உபநிஷத்துக்களின் ஸாரார்த்தங்களைப் போதிக்கும் முன்னுரையாய் விளங்குகின்றனவாம். அவ்வொலிகளைக் கேட்டுக் கேட்டுத் தம் திருவாக்கினின்று செவிக்கினிய செஞ்சொற்களாய் இன்பமாரியாய் எழுகின்றனவாம். அக் கவிகள் திராட்சை கலந்துபெருகித் தரும் இனிப்பைப் பெற்றுள்ளனவாம். இம்முறையில் பெருகியதாம் இந்தப் பாதுகா ஸஹஸ்ரமென்னும் அமுத வெள்ளம். இப்படி தேசிகன் தாமே போற்றுகின்ருர் பாதுகையின் அருளால் வந்த தம் வாக்விலாஸத்தை.

43. பாதுகையின் உயர்வும் தம் தாழ்வும்

இந்நூலை இயற்றும் சூழ்நிலையில் பாதுகையின் பெருமையை நினைக்கும்போதே ஸர்வஜ்ஞரான தேசிகனுக்கும் உள்ளம் நடுங்குகின்றது. இயற்றுமவர் எவ்வளவு தாழ்ந்தவராயினும் அதனுள் கூறப்படும் விஷயத்தின் பெருமையால் நூல் சிறந்ததாகி விடுமென்று உள்ள வழக்கைக் கொண்டு துணிந்து நூல் இயற்றுகின்றர் தேசிகன். தம் கிரந்தமும் பாதுகையைப் பற்றியே பிறப்பதால் வால்மீகியின் நூலை ஒத்ததாகி விடுமென்று நம்பித் தைரியமடைந்து உவமை கூறுகின்றர். தூய்மையான யமுநாஜலமும் அசுத்தமான தெருத் தண்ணீரும் சேர்ந்தே கங்கையில் விழுந்தாலும் வேற்றுமை காணமுடியாதபடி ஸமமாகி விடுவதை எடுத்துக் காட்டுகின்றர். மேலும் இழிவான தம் வாயினால் பாதுகையைத் துதித்தால் பாதுகையின் பெருமைக்குக் குறைவு வருமோ என்று அஞ்சி மிக இழிவான உவமையைக் காட்டி மனம் தேறுகின்றார் மஹாதேசிகன். அதாவது-கங்கை நதியின் நீரை நாய் தன் நாவினால் நக்கிப் பருகினாலும் அதனால் கங்கையின் பெருமை குறைவதில்லையென்றும் ஆனால் நாயின் விடாய் தீர்ந்து விடுகின்றதென்றும் உவமானமிட்டருள்கின்றார். மேலும் தம் தகுதியின்மையை அறிந்தும் பாதுகையின் மகிமையைப் புகழ்கின்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு முறைதப்பிச் செய்யும் பக்தியின் வன்மையால் தைரியம் ஏற்பட்டுப் பேசுவதாயும் குழந்தைகள் பல கேளிக்கைகளைச் செய்வதுபோல் தாமும் சிறுபிள்ளை வீட்டாக இந்த நூலைச் செய்வதாயும் தெளிவு படுத்தியருள்கின்ருர். எப்படியாயினும் பாதுகையின் அநுக்ரஹ விசேஷத்தால் அமுத வெள்ளமோ என்று ஐயுறும்படி கங்கை வெள்ளத்தையும் அதிசயித்த செவிக்கு இனிய செஞ்சொற்களாகத் தம் வாயினின்று பொங்கி வருமென்று நிச்சயத்துடன் தொடங்குகின்ருர், உள்ளவாறு பாதுகையின் பெருமையை நூல் வடிவில் கொண்டு வருவதானால் அதற்குக் கருவிகள் அமைய வேண்டிய முறையே வேறு என்கின்றார். ஆகாயம் முழுதும் எழுதும் காகிதமாய், ஏழு கடல்களும் ஒன்றுகூடி எழுதுவதற்கு மையாகி, கவி கூறுமவன் ஆயிரம் திருமுகம் கொண்ட பரம புருஷனாக வாய்த்தால் திருவரங்கன் பாதுகையின் பெருமையை ஒருவாறு எழுதப் பாரிக்கலாமென்கிறார் மஹாகவி ஸார்வ பெளமரான மஹாதேசிகன்.

44. பாதுகையே பெரும் பயன்

உலகில் எத்தனையோ வகைப் பலன்கள் உள்ளன. அவையெல்லாம் நிலை நிற்பனவாகா. சிறுபொழுதுக்கு இன்பம் தருவதாய்க் காட்டி மறைவன. எம்பெருமான்தான் நம்மால் அடையப்படும் பெரும்பயனாவான். அவனிலும் இனிய சிறந்த பயன் அவன் திருவடி. எல்லாப் பயன்களுக்கும் எல்லை நிலமாய்த் தனக்கு மேம்பட்டது இல்லையென்னும்படி உச்ச நிலையில் உள்ள பயன் பாதுகையே. எம்பெருமானுடைய திருவடித் தாமரையை எக்காலமும் தொட்டு இன்புறும் பெருமை பாதுகைக்கே உள்ளது. அதன் பெருமை பரதாழ்வானால் உலகுக்குத் தன் செயல் மூலமாய்த் தெளிவிக்கப் பெற்றது. பரதாழ்வான் பாதுகாபரமைகாந்தி. பாதுகையன்றி வேறு தெய்வத்தையும் வேறு பயனையும் நாடாத மனத்திடம் கொண்டவன். அவன் கண்டு வெளியிட்டது பாதுகா ஸித்தாந்தம். அதன் பெருமையை ஸ்தோத்ரவடிவும் காவ்யவுருவும் கொண்ட இந்த ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தில் அமைத்துக் கவி பாடினார் பெருங்கவிச் சிங்கமாகிய நம் தேசிகன். பாதுகையின் புகழையே போற்றுவதால் சிறந்த ஸ்தோத்ரமாகின்றது இநநூல். காவ்ய முறையில் இதைக் கற்பவர்களுக்கு வடமொழியில் சிறந்த வ்யுத்பத்தி ஏற்படுவதற்குப் பாங்காகப் புதிய சொற்களின் சேர்த்தியும் பல்வகை ஸமாஸங்களும் வெவ்வேறு அலங்காரங்களும் விசேஷமான பல வ்ருத்தங்களும் பல்வகை விசித்திர பந்தங்களும் கொண்டு ஒப்பற்ற காவ்யமாய்த் திகழ்கின்றது. ஸர்வதந்த்ரங்களிலும் சுதந்திரமாய் ஸஞ்சரிக்கும் திறம் பெற்ற நம் தேசிகனேயன்றி வேறு எவராலும் இத்தகைய, நூலை இயற்ற முடியாது. திருவரங்கத்தில் பாதுகையின் ஸந்நிதியிலேயே தம்மை எத்தனை நூற்றாண்டுகள் வாழச் செய்தாலும் நாளுக்கு ஒன்றாகப் பல பாதுகாஸஹஸ்ரங்களை இயற்றிக் கொண்டே நற்பொழுது போக்கிப் பக்தர்களின் உள்ளம் குளிரச் செய்வாராம். தம் மனம்வாக்கு-உடல் ஆகிய முக்கருவிகளையும் பாதுகை தன் வசமாக்கிக் கொண்ட சிறப்பை நினைத்துப் பெருமிதம் கொள்கின்றார். இப்படி அமைகின்றது ஸ்ரீதேசிகனது பக்தி ஸாம்ராஜ்யம். மேலும் ஸ்தோத்ரம் என்ற பெயரில் பாதுகை தம் திருவாக்கினின்று ஆயிரம் ஸூக்திகளை அவதரிப்பிக்கச் செய்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய தேசிகன் இதனாலேயே தாம் பெரும்பயனைப் பெற்று விட்டதாயும் இனித் தாம் உலகில் பெறவேண்டிய பயன் எதுவுமில்லை. யென்றும் முடிவு கூறி விடுகின்றார்.

45. நூலைத் தலைக்கட்டல்

ஸ்ரீமத் ராமாயணம் முழுதுமே பிராட்டியின் பெருமையைக் கூறவந்தது என்று வால்மீகி பகவானே கூறிவிட்டான். பிராட்டியும் வால்மீகியும் பூமியினின்று பிறந்தவர்களாதலின் உடன் பிறந்தவராவர். ஸஹோதரரான வால்மீகியைக் கொண்டு பிராட்டி தன் சரிதையை எழுத வைத்தாள். பெண்களுக்கே சாதுரியம் அதிகம். அவ்வாறே பாதுகாதேவி தம்மைக் கொண்டு தன் சரிதையை எழுத வைத்தாளென்கிறார் தேசிகன். எப்படி? துருவன் முகத்தில் எம்பெருமான் சங்கத்தால் தொட்டதும் ஞானம் உதயமாகிப் பல்வகையில் துதி செய்தான். அவ்வாறே பாதுகையின் பரிசம் தமது முடியில் பட்டதும் தாமும் அறிவு பெற்று நூலைத் தொடங்கியதாகக் கூறுகின்றார். மேலும் பக்தியுடையர் பாதுகையையே பற்றிய இந்த நூலைக் கற்று மனத்தில் கொள்ளவேண்டுமென்று கூறி உலகில் பித்துப் பிடிக்காத எந்த அறிஞனும் பாதுகையின் திவ்ய ஸங்கல்பத்தால் அமுதப் பெருக்காய் வந்த இந்த ஸ்தோத்ரத்தை ஆதரியாமல் இருக்கப் பெறான் என்று தைரியத்துடன் பேசுகின்றார். நூலைப் பூர்த்தி செய்யும் போது அதியற்புதமான ஒரு ஸூக்தி அவதரிக்கின்றது. வடமொழி மறைக்கு விளக்கம் தந்தருளிய எம்பெருமானார் திவ்யஸூக்தி சிறந்து விளங்குகின்றதாம். தமிழ் மறையைக் கண்ட ஆழ்வாரின் மறுவடிவமான பாதுகைகள் இரண்டும் உயர்ந்து பிரகாசிக்கின்றனவாம். இந்த இரண்டு வேதாந்தங்களையும் சிறந்த நிதியாகக் கொண்ட பெரியோர்கள் மூன்று வேதங்களுக்கும் விபரீத அர்த்தங்கள் தலைகாட்ட இடம் தராமல் பாதுகாத்துக் கொண்டு உலகில் மேம்பட்டு வாழ்வதாகக் கூறி மங்களாசாஸநம் செய்கின்றார். அந்தாதி முறையில் 'ஸந்த:' என்று தொடங்கி ஸந்த:' என்றே நூலைத் தலக்கட்டுகின்றார் நம் தேசிகர் பெருமான்.

46. தேசிகன் கூறிய அற்புதங்கள்

ஸ்ரீதேசிகன் ஸாரசாஸ்திரத்தில் தாம் கண்ட சில அற்புத நிகழ்ச்சிகளை அடுக்கிக் கூறுகின்றார். ஒரு கல் அகலிகை யென்னும் பெண்ணின் உருக்கொண்ட அற்புதம் ஒருபுறம் இருக்கட்டும். அங்காவது கல்லின் உருவம் அடியோடு நீங்கிய பின் பெண்ணுரு வந்தது. அதிலும் பெரிய ஆச்சர்யம் ஒன்று உள்ளது. அக்னியின் உருவம் மாறாமலிருந்தே பனிக்கட்டியின் தன்மையைப் பெற்றது. அதிலும் பெரிய அற்புதமன்றோ? அனுமானது வாலில் அரக்கர் வைத்த தீ எரிந்துகொண்டே பிராட்டியின் சொல்லால் பனிக்கட்டியின் தன்மையைப் பெறவில்லையா? மற்றோர் அற்புதம் உள்ளது. இராமன் விடுத்த ஒரு துரும்பு காகத்தின் விஷயத்தில் ப்ரஹ்மாஸ்த்ரமாகி வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை வாங்கித் தரவில்லையா? மற்றொன்று - பகைவரைச் செய்த வதமே அவர்களுக்கு அனுகூலமாகி விடவில்லையா? விராதன் கபந்தன் முதலிய எதிரிகளைக் கொன்றதும் அவர்களுக்கு தேவவிமானம் வந்து நற்கதி பெறவன்றோ வாய்த்தது! இந்த அற்புதங்கள் அனைத்திலும் பெரியதோர் அற்புதம் --- பாதுகை மூன்று உலகங்களையும் நீதிமுறை வழுவாது ஆண்டு முழுமையான வெற்றியைப் பெற்றது. இதனிலும் பெரியதோர் அற்புதம் உலகில் உண்டா? என்று வினவுகின்றார் ஸ்ரீதேசிகன். இந்த அற்புதச் செயலைச் சிந்தித்தே ஸ்வாமி பாதுகையிடம் பரமபக்தி கொண்டு அந்தப் பாதுகையைப் பற்றிய ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரத்தை இயற்றித் தாமும் பெரியதோர் அற்புதத்தை நிகழ்த்தியருளினார்.

47. ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயமும் பாதுகையும்

திருவரங்கத்தில் பெரிய பெருமாள் திருவடி நிழலிலே தோன்றி அங்கேயே அவனது திருவருளால் வளர்ந்து அவன் பாதுகைகளை அனுதினமும் வழிபட்டு அனுபவித்துத் திளைத்து வந்த ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயம் இன்றளவும் பாதுகையைத் திருவரங்கனைக் காட்டிலும், ஏன்? அவன் திருவடிகளையும் காட்டிலும் மேம்பட்டதாய் அனு ஸந்தித்து விசேஷ முறையில் போற்றிவரும் பாதுகாபரமைகாந்தியாய் விளங்கி வருவது நாடறிந்ததொன்றாகும். இக்ஷ்வாகு வம்சத்துக்குக் குலதனமாய் ஸ்ரீரங்கவிமானம் அமைந்தது போல் திருவரங்கன் பாதுகை ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்துக்கு இன்றளவும் பரம் பரையாய் வரும் குலதன மென்னுதல் மிகையாகாது. சக்கரவர்த்தித் திருமகன் ஆட்சியில் எங்குச் சென்றாலும் இராமன் -- இராமன்-- இராமன் என்ற சொல்லே செவியில் புகுவதாகவும் உலகமே இராம மயமாக ஆகிவிட்டதெனவும் வால்மீகி கண்ட முறையில் ஸ்ரீமத் ஆண்ட வன் ஸம்ப்ரதாயத்தினுள் புகுந்து பாதுகை செய்யும் ஆட்சியில் எங்கும் பாதுகாசப்தமே முழங்குவதையும் அந்த ஸம்ப்ரதாயம் பரவுமிடமெல்லாம் பாதுகாமயமாகவே காட்சியளிப்பதையும் இன்று கண் கூடாகக் காணலாம். இந்த ஸம்ப்ரதாயத்தில் ஆச்ரமம் --பாதுகாச்ரமம், பாடசாலை -- பாதுகா வித்யாலயம், கல்யாண மண்டபம் -- பாதுகா மண்டபம், ஆராதநம் -- பாதுகாராதநம், பவனம் -- பாதுகா பவனம், தர்ம நிர்வாஹம் -- பாதுகாசாரிடீஸ், ராஜ்யம் -- பாதுகாராஜ்யம், பத்திரிகை -- ரங்கநாத பாதுகா என்ற முறையில் எம்பெருமான் படைப்பு அனைத்தையுமே பாதுகா மயமாகக் காண்கின்ற சிறப்பு வேறெங்கும் காணக் கிடைக்காது. ஆழ்வார் நிற்கின்றதெல்லாம் நெடுமாலாகக் கண்டதை அடியொற்றியதோ இம்முறை!

48. பாதுகை என்ற சொல்லே போதுமே!

பாதுகை என்ற சொல்லே ஈரரசு படாததாகும். திருவரங்கன் பெயரைக் கூடச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பாதுகை என்ற சொல் அவன் பாதுகையைத் தான் குறிப்பிட்டுத் தீரும். அர்ச்சை வடிவிலேயே ஈடுபட்டு நிற்கும் நமக்கு இராமபிரானது பாதுகையின் நினைவு வருவதற்கு இடமில்லை. அப்படியே வந்தாலும் திருவரங்கன் பாதுகைதானே அது. திருவரங்கனையன்றி மற்ற அர்ச்சைத் திருமேனிகளுக்குப் பாதுகையைக் குறிப்பிட்டு யாரும் அனுபவிக்கவில்லை. ஆகவே பாதுகை என்று வழங்குவதே போதுமானது. இதைக் கருதியே ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தில் பாதுகை என்ற தனிச் சொல்லாலேயே எல்லாம் வழங்குகின்றது. ஆனால் பத்திரிகையில் மட்டும் திருவரங்கன் தன் பெயரைச் சேர்த்துக் கொண்ட காரணம் அவனையே கேட்க வேண்டும்.

49. இந்த ஸம்ப்ரதாயத்தில் பாதுகாஸஹஸ்ரத்தின் செல்வாக்கு

ஸ்ரீதேசிகன் திருவாக்கினின்று அற்புத முறையில் அவதரித்த ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்திற்கு ஸ்ரீமத் ஆண்டவன் பரம்பரையில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதை மறுக்க முடியாது. ஸ்வாமியின் மற்ற எல்லா ஸூக்திகளையும் விஞ்சிய சிறப்பும் மற்ற ஆசார்ய ஸூக்திகளினும்கூட மேம்பாடும் வழங்குகின்றது. பூர்வாசார்யர்களின் திருநக்ஷத்திரங்களிலோ ஆச்ரமத்தைச் சார்ந்த ஸந்நிதி உத்ஸவங்களிலோ வேத பாராயண -- அருளிச் செயல் கோஷ்டி தொடங்குமுன், கிரந்தாரம்ப காலத்தில், க்ரந்த சதுஷ்டயத்துக்குப் பின் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தையும் தொடங்குவதையும் பின் இதையும் முழுதும் பாராயணம் செய்வதையும் அவ்வாறே சாத்துமுறை ஸமயத்தில் இதன் கடைசி சுலோகத்தையும் அனுஸந்திப்பதையும் இந்த ஸம்ப்ரதாயத்துக்கே உள்ள தனிச் சிறப்பாக எல்லாரும் உணருவர். ஸ்ரீதேசிகன் தாமே ஸகல பலன்களையும் அளிக்கவல்லதென்று போற்றிய ஸ்ரீபாதுகாஸஹஸ்ரத்தைத் தவறாது தினந்தோறும் பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் கூடப் பெரும்பாலும் ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்தவராகவே இருப்பர். இவ்வாறு பல்வகையிலும் இந்த ஸம்ப்ரதாயத்துக்கும் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரே மறுக்க முடியும்?

50. பாதுகைச் சிறப்புப் பரவ மூலகாரணமான மஹான்

ஸ்ரீமத் ஆண்டவன் ஸம்ப்ரதாயத்தைப் பாதுகாஸம்ப்ரதாயமென வழங்குவது மிகப் பொருத்தமே. ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் மற்ற ஸம்ப்ரதாயங்களிலெல்லாம் பெற முடியாத சிறப்பையும் செல்வாக்கையும் இந்த ஸம்ப்ரதாயத்தில் மட்டும் பெற்று விளங்குவதற்கு மூலகாரணமா யிருந்த மஹானுபாவர் யார்? பாதுகையும் அதன் ஸஹஸ்ரமும் இந்த ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த முந்திய ஆசார்யர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்ட போதிலும் இதன் பிரசாரம் வலிமையடையாது அனுஸந்தாநத்தில் மட்டுமே இருந்து வந்தது. இதற்காகவே திருவரங்கன் ஓர் ஆசார்யனை அவதரிப்பித்தான். அவ்வாசார்யனே தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவனெனப்படும் மஹாபுருஷர். முன் பின் காண முடியாத ஒரு விலக்ஷண அவதாரம். பஹுசாஸ்திர நிஷ்ணாதராய் க்ரந்த நிர்மாண சக்தியையும் மிகுதியாகப் பெற்ற ஸ்ரீமத் சின்னாண்டவன் திருவடி நிழலில் குருகுல வாஸம் செய்து விசேஷமான ஞானச் செல்வத்தையும் அனுஷ்டானஸம்பத்தையும் பெற்று எல்லோருடைய மதிப்புக்கும் உரியராய் விளங்கினர் இந்த மஹான். திருவரங்கன் வாலிப தசையிலேயே இம்மஹாகனைப் பற்றற்ற துறவியாக்கியருளினான். தேரழுந்துார் ஸ்ரீமத் ஆண்டவன் என்ற திருநாமத்துடன் ஸௌசீல்யம் ஸௌலப்யம் முதலிய ஆத்ம குணங்கள் நிரம்பப் பெற்று மேதாவியாய் விளங்கிய இவ்வாசார்யன் தம்மை வந்து அண்டியவர்களுக்குப் பரம கிருபையுடன் ஆத்மகார்யங்களைச் செய்து வைத்து முக்கியமாய் ப்ரபத்தியின் சிறப்பையும் ஸூக்ஷ்மாம்சங்களையும் போதித்து நல்வாழ்வளிக்கும் திறமுடையராய் விளங்கினார். இப்புண்ய புருஷருடைய பகவத் பக்தியும் குளிர்ந்த திருவுள்ளமும் விசால மனப்பாங்கும் இனிய சொல்லும் ஆசார்ய பக்தியும் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தன. எம்பெருமானார் திருமுடிஸம்பந்தத்தால் முந்திய ஆசார்யர்களும் திருவடி ஸம்பந்தத்தால் பிந்திய ஆசார்யர்களும் நிறம் பெற்றதாக ஸ்ரீதேசிகன் அருளிய முறைக்கு இந்த ஸ்ரீஆண்டவனை இலக்காக்கிச் சிலர் பேசுவதுண்டு.

அக்காலத்தில் பாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீகோசம் கிடைப்பதே அரிது. எத்தனையோ வருஷங்களுக்குமுன் வடமொழி தென்மொழி உரைகளுடன் அச்சிடப்பட்ட பாதுகாஸஹஸ்ரம் கிடைப்பதே அரிதாயிருந்த சூழ்நிலை. கிடைத்தாலும் கையில் எடுத்தால் காகிதங்கள் ஒடிந்து தூளாகுமேயன்றி வளைந்து கொடுக்க மாட்டாத நிலை. இந்த ஸ்ரீமத் ஆண்டவன் எல்லோரும் பாராயணம் செய்தற்குப் பாங்காகப் பாதுகா ஸஹஸ்ரம் மூலத்தையும் அதன் ரஸத்தைச் சுவைத்தற்கு ஏற்பத் தாமே எளிய தமிழில் ஒர் உரையை இயற்றி அதையும் அச்சிட்டு வெளியிடச் செய்தருளும்படியிருந்தது. ஆச்ரமத்தினின்று விலையின்றி அந்த ஸ்ரீகோசங்களைப் பெற்றவரே பெரும்பாலார். ஸ்ரீமத் ஆண்டவன் அதற்கு இட்ட விதையே பின் அந்த ஸ்ரீஸூக்தி பல பதிப்புக்களாய் வெளிவந்து நாடு முழுவதும் பரவிப் பாதுகாமயமாக்கி இன்றளவும் பாதுகா ஸம்ப்ரதாயமென்னும் திருநாமத்தையும் காத்துத் தருகின்றது. இந்த ஆசார்ய ச்ரேஷ்டருடைய பெருமைகளையெல்லாம் அந்தத் திருவடிவாரத்திலேயே ஆத்மலாபம் பெற்றுச் சிறந்த ஞானியாய் ஆத்மகுண பரிபூர்ணராய் ஸ்ரீவைஷ்ணவ ஸமுதாய திலகமாய் பெரிய வழக்கறிஞராய் அசீதிவ்ருத்தராய் இன்று சென்னையில் பிரகாசிக்கும் ஸ்ரீ உப. வே. விளக்குடி ஈயுண்ணி R. கோபாலஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி போன்ற பெரியார்களே அறிவர்.