வெள்ளி, 6 மே, 2011

யதிராஜ சந்திரன்

“ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” சம்புடம் 2 பிரமாதி வருஷம் சித்திரை மாதம் ஸஞ்சிகை 4ல் தி. ராமஸ்வாமி தாஸன் எழுதிய கட்டுரை

யதிராஜ சந்திரன்

     இன்புற்ற சீலத்தி ராமானுசன் இணையடிகளை இறைஞ்சுவோர்க்கு அவ்வள்ளல் புரிந்துள்ள பேருபகாரங்கள் பலவற்றுள் முக்கியமானது தாம் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியிருந்து அனைவரையும் வாழ்விப்பது. விபவத்தில் எழுந்தருளியிருக்கும்போதே “மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல்” என்று அருகிருந்தார் அனுஸந்திக்கும்படி திருப்பதிகளை அலங்கரித்தாயிற்று. இப்பொழுதும் அர்ச்சாரூபியாய் திருமால் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கிறபடியை அனைவரும் நேரில் கண்டு அனுபவிக்கலாம். பெரிய பிராட்டியாருக்கே தனிக்கோயிலுக் கிடங்கொடாத திருவேங்கடத்திலும் நம்மிராமானுசனுக்கு ஒரு தனிக்கோயி லுள்ளதென்றால் வேறு திருப்பதிகளைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.

     இப்படியிருக்கும்போது, ஸ்ரீரங்கம், திருநாராயணபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ பாஷ்யகாரருடைய அர்ச்சாமூர்த்தியின் பெருமையே வேறு. இம்மூன்று விக்ரஹங்கள் விஷயமாக ஸ்ரீரங்கத்தில் தாமான திருமேனியென்றும், ஸ்ரீபெரும்புதூரில் தாமுகந்த  திருமேனியென்றும், திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியென்றும் நடையாடிவரும் ஐதிஹ்யத்திற்கேற்ப, மிகுந்த விலக்ஷணமான தேஜஸ்ஸோடு எழுந்தருளியிருப்பதை அனேகர் அறிவர். அம்மூன்று திருமேனிகளுக்குள்ளும் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் ஸேவை ஸாதிக்கும் திருமேனி நேரில் உடையவராலே ஆலிங்கனம் செய்துகொள்ளப் பட்டது என்று பெரியோர் சொல்லுவர். அது உண்மையென்பது ஸேவித்தவர்களுக்குத் தோன்றாது போகாது.

      இந்த மாதத்தில் அதிவைபவத்துடன் உத்ஸவம் நடந்தேறும்போது ஸேவித்து எம்பெருமானார் வைபவம் இத்தன்மைத்து என்று ஒருவாறு உணரலாம். விபவத்தில் பரம விரக்தாக்ரேஸரராய்க் காஷாயமும் கமண்டலுவும் முக்கோலுமன்றிப் பிறிதொரு செல்வத்தை அனுபவியாது எழுந்தருளியிருந்த எம்பெருமானார் இப்பொழுது அர்ச்சையில் அடியார்களை ஆனந்திப்பிக்க அளவற்ற ஐச்வர்யத்திற்கு அதிபதியாயிருப்பதும் அவருக்கு அனுரூபமே. “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் அச்செல்வம்” செய்த தவத்தின் பயனாய் இன்று அது உடையவரை விரும்பி யடைந்திருக்கின்றது போலும். திருவாபரணங்களை நிறையச் சாற்றிக்கொண்டு பெரிய வாஹனாதிகளில் திருவீதிகளில் எழுந்தருளும் அழகும் வைபவமும் ஒருபுறம் நிற்க, திருமஞ்சனம் கண்டருளும் போதும் திருமஞ்சனமானவுடன் திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளியிருக்கும்போதும் ஸாதிக்கும் ஸேவையே ரஸிகர்களின் உள்ளத்தைப் பெரிதும் பிச்சேற்றுவது. “பஜதி யதிபதௌ பத்ரவேதீம்” என்று ஸ்வாமி தேசிகன் அனுபவித்திருப்பது இந்த திருமஞ்சன வேதிகை ஸேவைதான் போலும். அந்த ஸமயம் ஸேவித்த பிறகே, உள் அந்தகாரத்தை நிவர்த்திக்கும் ஞானத்தால் பாலஞானஸூர்யனாயும், ஆச்ரயித்தவர்களுக்கு ஆஹ்லாதமளிக்கும் குளிர்ச்சியால் சந்திரனாயும், வைராக்யாதி ஆத்மகுண மேன்மையால் ஜ்வலிக்கும் அக்னியாயும், இப்படி ஒன்றுசேர்ந்த ஒரு தேஜோரூபமாய் விளங்கும் ஸந்நிவேசம் மனத்தையும் கண்ணையும் பற்றி வாங்க ” ஜயதி ஸம்வலித த்ரிதாமா” என்று ஸ்வாமி தேசிகன் மங்களாசாஸனம் செய்தருளியிருக்க வேண்டும். “உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ரவந்தம்” முதலிய ச்லோகங்களும் அத்யந்தம் பொருத்தமுடையவையாய்க் காணும். இந்த ஸமயத்தில் ஸேவிப்போருக்கு, இப்படி இவ்வாசார்யோத்தமனுடைய அர்ச்சா திருமேனியும் அனைவராலும் அநுபாவ்யமாயிருப்பதால்தான் சிஷ்ய க்ருத்யாதிகாரத்தில் “பகவதனுபவம்போலே விலக்ஷணமான இவ்வனுபவம்” என்று ஆசார்யானுபாவ விஷயமாய் அறுதியிட்டாயிற்று.

           மூன்று தேஜஸ்ஸென்று வர்ணிக்கவல்லோமாகிலும் முக்கியமாக ஆனந்தம் பயக்குமியல்பால் யதிராஜ சந்திரனென்றே விசேஷித்துச் சொல்லலாம். “அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம் பஜே” என்கிற ச்லோகத்தில் நம் தேசிகோத்தமன் யதிராஜனை ஒரு விலக்ஷண சந்திரனாகவே வர்ணிக்கிறார். (அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம்) ஒருக்காலும் அபாயமில்லாத ச்ரிய:பதியின் திருவடிகளை ஆச்ரயித்து அபாயமுடைய (அழியக் கூடிய) விஷ்ணுபதத்தை (ஆகாசத்தை)  அடைந்த ஸாமான்ய சந்திரனைக் காட்டிலும் வேறுபட்டவராய், கலைகள் தேயும் இந்த சந்திரனைப் போலல்லாது (கலயா கயாயி கலயாப்யனுஜ்ஜிதம்) ஒரு கலை (சாஸ்திரத்தின்) லேசமும் விடாது  சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவராய், களங்கமுடைய சந்திரனைப் போலல்லாது (அகளங்கயோகம்) ஒரு தோஷ ஸம்பந்தமுமில்லாதவராய், ஜலாசயத்தில் (சமுத்திரத்தில்) உதிக்காமல், (அஜடாசயோதயம்) ஜடமாயில்லாத ரங்கேச பக்த ஜனங்களின்  மானஸத்தில் உதிக்குமவராய், (உபராகதுரகம்) க்ரஹணம் முதலிய பீடைகளுக்குள்ளாகாதவராயுள்ள இந்த (யதிராஜ சந்த்ரம்) யதிராஜ சந்திரனை பஜிக்கிறேன்” என்கிறார். இந்த சந்திரன் வீசும் நிலவு இவருடைய அருமையான ஸ்ரீபாஷ்யாதி ஸ்ரீஸூக்திகள். இந்த நிலவில் மலருவது முகுந்தாங்ரி ச்ரத்தா குமுதவனங்கள். (எம்பெருமானுடைய திருவடிகளில் ச்ரத்தையாகிய ஆம்பற் காடுகள்) இந்த சந்திரனைக் கண்டு பொங்குவது வேதங்களாகிற ஸமுத்திரங்கள். (நிகம ஜலதிவேலா பூர்ண சந்த்ரோ யதீந்த்ர: ) இவைகள் யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீதேசிகன் யதிராஜசந்திரனை அனுபவிக்கும் ப்ரகாரங்கள்.

        ஸ்ரீபாஷ்யகாரர் திருமேனியில் மேற்சொன்னபடி அழகான சோபை தோற்றுவதுபோல் அளவற்ற ஔதார்யமும் தோற்றுவது காணலாம். பௌமா: பிபந்து அந்வஹம் – என்ற உதார குணமும் பேரருளாளனுக்கும் அருளூட்டவல்ல பேரருளும் திருக்கண்களில் தோற்றி நம் துயர் துடைத் தனுக்ரஹிப்பன.

                                                               --தி. ராமஸ்வாமி தாஸன்.           

வியாழன், 5 மே, 2011

இவர் மட்டும் ஏன் பெரியாழ்வாரானார்?

இது ஸ்ரீ தி.இராஸ்வாமி ஸ்வாமி நோக்கில் எழுந்த ஒரு அற்புதமான கட்டுரை. “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணி” இதழில் அடியேன் படித்து இரஸித்த ஒன்று.

……………இவருக்குப் பெரியாழ்வார் என்று பெயர் ஏற்பட்டது மிகவும் பொருத்தமானதேயன்றோ! எல்லா ஆழ்வார்களும் அவரவர்கள் ஆரம்பித்த விதத்தை நோக்கினால் இப்பெரியாழ்வாரின் பெருமை புலப்படும். அனைவரும் தம்மை மறவாது முதல் பாசுரம் பாடியுள்ளார்கள். “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றார் நம்மாழ்வார். “நான் கண்டு கொண்டேன்” என்றார் கலியன். முதலாழ்வார்களும் “சூட்டினேன் சொன்மாலை” “ஞானத் தமிழ் புரிந்த நான்” “திருக்கண்டேன்” என்று ஒவ்வொருவரும் தமக்கே பாசுரமிட்டுக் கொண்டார்கள். திருமழிசைப் பிரானும் “அறிவித்தேன் ஆழ்பொருளை” எனப் பேசினார். குலசேகரப் பெருமாள் “என் கண்ணிணைகள்என்று கொலோ களிக்கும் நாளே”என்று தமக்காகப் பாடியிருக்கிறார்.தொண்டரடிப்பொடிகள் “நாவலிட்டுழிதருகின்றோம்” என்று தம்முள்ளிட்டாரையும் சேர்த்துப் பெருமையாய்ப் பாசுரம் பாடுகிறார். பாண்பெருமாளும் “என் கண்ணினுள்” என்று பேசி விட்டார். “தேவு மற்றறியேன்” என்ற நிலையில் நின்றவரும் “என் நாவுக்கே” என்றார். எல்லோருக்கும் பிரதம புருஷனனான பிரபுவைப் பாடத் துவக்கியோரெல்லாம் இங்ஙனே ப்ரதம புருஷனில் (தன்மை) அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள். “உன் சேவடி” யென்று பேசியவர் பெரியாழ்வார் ஒருவரே. இவருடன் பழகிய பூங்கோதைகூட “நமக்கே பறை தருவான்” என்றாள். இத்தலையை மறந்து அத்தலைக்கே  முதற் பாசுரம் பாடியவர் ஆழ்வார்களுக்குள் பெரியாராய் பெரியாழ்வாராயினர். அப்படியே இந்தப் பல்லாண்டுக்கு மேற்றம். வேதத்திற்குப் பிரணவம் போல, திவ்யப்பிரபந்தத்திற்குமுன்பும் பின்பும் திருப்பல்லாண்டு நாளைக்கும் அனுஸந்திக்கப் படுகிறது.

               இந்த மங்களாசாஸன மனோபாவம் பெரியாழ்வார் திருமொழி முற்றிலும் தொடர்ந்து வருவதைக் கவனிக்கவேணும். தாம் பெருமாளுக்குத் தாயாரான யசோதை என்று மனோரதித்து ப்ரபந்தம் பெரும்பாலும் அமைத்திருக்கிறார். “அழகனே காப்பிட வாராய்” என்று அங்கேயும் ரக்ஷகனை ஆசாஸிக்கிறார் அதிகம் பேசி யென்! இவரிருக்கும் நாட்டிலுள்ள குறவர்கூடப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்று இவர் மனோபாவம். “புனத்திணைக் கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனக்குறவர் புதியதுண்”பாராம் இவ்வாழ்வார் அவதரித்த நாட்டில். நாகரிகமறியாத மஹரிஷிகள் சக்கரவர்த்தித் திருமகனுக்கு “மங்களாநி ப்ரயுஞ்ஜாநா:” என்றாற்போல் இக்குறவரும் அழகருடைய அழகுக்குத் தோற்று அவனை வாழ்த்துகிறார்கள் போலும்.

              இவ்வாழ்வாருடைய மனம் வெகு விசாலம். அதனால் எம்பெருமான் தனக்கு ஸ்தானங்களென்று ஏற்பட்ட ‘வடதடமும் வைகுந்தமும் துவராபதியும்’ ஆகிய இடங்களை யிகழ்ந்து இவர்பால் இடங்கொண்டனன்.அதிலும் தனியாக  எழுந்தருளாமல் “அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்” இவர் அகம்படி (உள்ளத்தில்) வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளி கொண்டருளின பெருமையைப் பெரியதாய்க் கொண்டாடுகிறார். உவர்க் கடலை உட்கொண்ட அகஸ்திய முனிவரைக் காட்டிலும் அமுதக் கடலைப் பெண்ணமுது கலந்த ஆராவமுதத்துடன் தம்முள்ளடக்கிய இவ்வாழ்வாரின் ராஸிக்யம் பெரிதே போலும். அத்தனை ரஸமுணர்ந்தவரான படியால்தான்”அடியேன் நான் உண்ணாநாள் பசியாவது ஒன்றில்லை., ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளு மிருக்கெசுச் சாமவேத நாண்மலர்க்கொண்டுன பாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்றெனக்கவை பட்டினி நாளே” என்று அனுஸந்திக்க வல்லவரானார். எவ்வளவு உயர்ந்த மனோபாவம்! இப்படியன்றோ எம்பெருமானுக்குப் பசித்திருத்தல் வேண்டும்!

             இத்தனை மேன்மையோடும்கூட இவ்வாழ்வாருக்கு வேறு ஒரு மேன்மையும் சேர்ந்தது. பூங்கோதைக்குத் தகப்பனாராகவும் அதனால் பெருமாளுக்கு மாமனாராகவும் இவ்வாழ்வார் ஒருவரே யாயிற்று உயர்பதம் பெற்றபடி. ‘தாதஸ்து தே’ என்று இதற்கு வியந்தார் நம் ஸ்வாமி தேசிகன். ‘ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்’ என்றிறே இவருக்கு ஸ்ரீமந்நாதமுனிகள் தனியனிட்டபடி. ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் ஒருவரையிட்டு ஒருவருக்கு ஏற்றமென்று ஸ்வாமி தேசிகன் அனுபவம்.  “ஸ்ரீவிஷ்ணுசித்தகுல நந்தன கல்பவல்லீம்” என்பது அவளுக்கு ஏற்றம். “தாதஸ்து தே” என்பது அவருக்கு ஏற்றம். இதிலும் பெரியதொரு ஏற்றம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது. என்னவெனில், கோதை சூடிக்கொடுத்த மாலையை எம்பெருமானுக்கு உபஹரித்தது. இதை பேறாப் பேறாகக் கருதியவனாதலின் இந்த உபஹாரம் ஸமர்ப்பித்தமைக்கு ப்ரத்யுபகாரமாய் பெரியாழ்வார் என்ற பிருதை ஆழ்வாருக்களித்தான் ச்ரியபதி. பெரியாழ்வார் திருமொழி என்ற ப்ரபந்தம் பாடியதிலும் கிடைக்காத பெருமை கோதை நல்கிய கோதையை(மாலையை)க் கொடுத்ததால் கிடைத்தது.

              இவ்வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தத்தை “கர்ணாம்ருதை: ச்ருதிசதை:” என்று நம் தேசிகர் கொண்டாடுகிறார். ஸ்ரீமத் பாகவத அனுபவங்களெல்லாம் இதில் பொருந்தியிருக்கிறபடியால் இது ஒரு தமிழ் க்ருஷ்ண கர்ணாம்ருதம் என்பது ஸ்வாமி திருவுள்ளம். இந்த ப்ரபந்தத்தில் பாசுரங்களின் எண்ணிக்கை 473. பெரியாழ்வார் திருமொழியின் கடைசி தசகமான “சென்னியோங்கு” என்ற திருமொழியில் பெருமாளைத் தம்முள்ளத்தே அடைக்கிவிட்டதையே முக்த தசைக்குத் துல்யமாய்ப்பேசி முடிப்பதால் இவருக்கு விஷ்ணுசித்தர் என்னும் பெயர் மிகத் தகுதியே. “வேயர் தங்கள் குலத்துதித்த விஷ்ணுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்” என்பது அவனுக்குப் பெருமையாயிற்று. “உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே” என்பது இவருக்குப் பெருமையாயிற்று. சேஷியால் சேஷன் பெறும் பேறும் சேஷனால் சேஷி பெறும் பேறும் ஒருங்கே காட்டும். இவ்வாழ்வார் ப்ரபந்தத்திற்கு இணையுமுண்டோ? இவ்வாழ்வாருக்கு இணையுண்டானால் இவர் ப்ரபந்தத்திற்குமுண்டு.    (தி. இராமஸ்வாமி)    

ஸ்ரீதேசிகனும் ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹமும்

ஸ்ரீ தேசிகன் உலகத்திற்குச் செய்திருக்கும் உபகாரங்களைக் கணக்கிட ஸங்கியாவான்கள் (வித்வான்கள்) ஒருவராலும் இயலாது. ஆயினும், க்ருதக்னதை வாராமைக்காக சிறிது கடலைக் கையிட்டுக் காட்டுமாப்போலே குறிப்பிடுவோம். எம்மத த்திலும் ஸம்மதமாயிருப்பது ஜீவராசிகள் உலகவாழ்க்கையில் படும் துன்பங்களின்றி பேரின்பம் பெற்று வாழ்வதே பேறென்னும் புருஷார்த்தமாகும் என்பது.

அதைப் பெறுவதற்கு பக்தி யோகமெனும் உபாயமே ஸாதனமென்றும் இதைச் செய்வதற்கு த்ரைவர்ணிக புருஷரே (பிராமண க்ஷத்திரிய வைச்யர்) அதிகாரிகளென்றும் பெரிதும் வைதிக மதங்கள் பேசுகின்றன. இப்படியாகில் ஸ்திரீகள் சூத்ரர் முதலானவர்களின் கதியென்னவென்பதை அவைகள் கவனிக்கவில்லை. பரம வைதிகமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்திலோ “ச்ரௌதீ ஸர்வசரண்யதா பகவத:ஸ்ம்ருத்யாபி ஸத்யாபிதா ஸத்யாதிஷ்விவ நைகமேஷ்வதிகிருதிஸ் ஸர்வாஸ்பதே ஸத்பதே” எல்லோருக்கும் மோக்ஷோபாயமான தோழன் என்று வேதமோதியது. ‘ஸர்வலோக சரண்யாய’ என்று ஸ்ரீமத் இராமாயணத்தால் உறுதி செய்யப்பட்டதென்றும் யாவருக்கும் உண்மை பேசுவது முதலான வேதத்தில் ஓதப்பட்ட தர்மங்களிற்போல எல்லாருக்கும் இடமளிக்கும் சரணாகதியிலும் அதிகாரமுண்டென்று தேறுகிறதென்றும் பலப் பிரபல பிரமாணங்களைக்கொண்டு ஸம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் (ஸம்ஸ்கிருதமும் தமிழும்) தமிழிலும் சுருக்கமும் விரிவும், லளிதமும், (இலகு) கடினமும் வாக்கியமும் பத்தியமுமான பல கிரந்தங்களை இயற்றி பின்புள்ளார் பிழைக்கும்படி தார்மிகர்கள் தண்ணீர்பந்தல் வைக்குமாப்போலே ஸ்ரீதேசிகன் வைத்துப் போன இப்பேருதவி ஒன்றுக்கே இவ்வுலகம் என்றும் கடனாளியாகிறது. ஸ்ரீதேசிகனென்னும் கல்பக விருக்ஷத்தின் மலர்களான இக்கிரந்தங்களில் சரணாகதியின் மணம் வீசாத வாக்யம் ஒன்றேனும் காணக்கிடைக்குமோ? “ஸமீஹிதம் யத்ஸதநேஷுதுக்தே, நிக்ஷேபவித்யாநிபகாமதேனு” (இவர் திருமாளிகைகளில் பிரபத்தியெனும் காமதேனு கருதியதெல்லாம் கறக்கின்றது) என்றபடி புதுப்பொருள், இழந்த பொருள், கைவல்யம், மோக்ஷம் என்கிற நான்கும் இவ்வுபாயத்தால் கிடைக்கிறதெனவும், இதற்கு அபாயமொன்றில்லையெனவும், ஒரு க்ஷணத்தில் நிறைவேறிவிடுமென்றும் இப்படிப் பற்பல ஸௌகரியங்களைப் பிரமாணங்களால் காட்டித் தேற்றிய நம் தேசிகனுக்குத் தலையல்லால் கைம்மாறுண்டோ? பக்தியோகத்தில் நம் ஸித்தாந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் காலத்திலேயே உபதேச பரம்பரை நின்றுவிட்டதால் அதற்குரிய மந்த்ராதிகள் கிடைக்க வழியில்லை. அதன் அங்கங்களிலோ முதன்முதலில் யமமென்று கேட்டாலே பயமுண்டாகிறது. நம் பிரபத்திக்கோ ஆனுகூல்யம் அங்கமென்றால் ஆனந்தமுண்டாகிறது. பிராரப்தத்தின் பலமாக பல ஜன்மங்களிலும் தனக்குரிய தர்மங்களை வழுவாது அனுஷ்டிக்கத் தவறினால் பக்தி யோகமும் தளரும். பிரபத்தியோ ஒரு க்ஷணத்திலேயே முடிந்து விடுவதால் இதையழிப்பதற்கு ஒன்றுமே கிடையாது. இத்தகைய “கர்மயோகாதாச்சுத்தாஸ்ஸாங்கிய யோகவிதஸ்ததா| நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம்கோடிதமீமபி|| (கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், இவைகளையனுஷ்டிப்பவர்கள், சரணாகதர்களின் கோடியில் ஓரம்சம் பெறமாட்டார்கள்) என்றபடி ஏற்றம் பெற்ற அபாயமில்லாத இவ்வுபாயத்தைப் பற்றியதால் சரண்ய தம்பதிகள் அவதரித்துச் சேர்ந்திருந்தபோது காகஸுரனையும், பிரிந்தபோது விபீஷணனையும் ராக்ஷஸிகளையும் காப்பாற்றி “அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி” (அனைவர்க்கும் அனைவரிடமிருந்தும் அபயமளிக்கிறேன்) “ பவேயம் சரணம்ஹிவ:” ( உங்களைக் காப்பேன்), “நகச்சிந்நாபராத்யதி” (குற்றமில்லாதவரொருவருமில்லை) என்று பலரறியச் சொல்லியும் அடுத்த அவதாரத்தில் அனைத்தும் வினைகளை அழிக்கிறேன் உன்னை அளிக்கிறேன். என்னைச் சரணாகப் பற்று வருந்தாதே என்று அருளிச்செய்திருக்கச் செய்தேயும் நம்மாழ்வார் முதலான பூர்வர்களும் ஆசார்யர்களும் அனுஷ்டித்துவருமிச்சரணாகதியில் ஸம்சயமுண்டாகில் “விருதைவபவதோயாதா பூயஸீ ஜந்மஸந்ததி: தஸ்யாமன்யதமஞ்ஜன்மஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ:” பல ஜன்ம வரிசை வீணாகிவிட்டது. பிரத்தி செய்து இந்த ஜன்மமும் வீணானால் அதிலொன்றாயிருக்கட்டுமே உனக்கு நஷ்டமொன்றில்லையே, நான் சொல்லியபடி பலித்து விட்டால் பிழைத்துவிடுவாயே என்ற பொருளுள்ள மஹர்ஷிவசநத்தையெடுத்துக் காட்டியவழகை, ஆச்சரியத்தை, பரம தயையை, நம்மிடமுள்ள உள்ளன்பை, ஔதார்யத்தை என்னென்று சொல்வது? இங்ஙனமிருக்க, இவ்வாசாரியசிகாமணியிடமும் அவர் காட்டித்தந்த சரணாகதியிலும் நம்பிக்கையில்லாதவருக்கு எதை நம்பிக் கைகொடுப்பான் சரண்யன்? “லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ” (உலகமளந்த உன்னடிகளை உபாயமெனப் பற்றுவேன்) என்று இவன் கால் பிடிக்க, “ஹஸ்தாவலம்ப நோஹ்யேஷாம் பக்திக்ரீதோ ஜனார்த்தன:” அன்பினால் கிரையம் வாங்கப்பட்ட அச்யுதன் இவர்களை அங்கை கொடுத்து அருள்கிறானென்றன்றோ பூர்வர்களின் பாசுரம். இப்படி பிரபத்தியெனும் சிந்தாமணியை வைத்திருக்கும் பெட்டிகளான தஞ்சப் பரகதியைத் தந்தருளிய ஸ்ரீதேசிகன் ஸ்ரீஸூக்திகளை நாம் ரக்ஷிக்க ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ (தர்மத்தை நாம் காக்க அது நம்மையளிக்கும்) என்றபடி பரமதர்மமான ப்ரபத்தியைச் சொல்லுமவைகள் நம்மை ரக்ஷிக்கும். இதுதான் ஸ்ரீதேசிகனுக்கு நாம் செய்யும் பணிகளில் தலையணியாய் தலையணியில் நிற்பது. (தலையணி == சிரோபூஷணம், முன்வகுப்பு) 

(இது “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” இதழில் படித்தது) 

 

செவ்வாய், 3 மே, 2011

கீதைக் குறள்

சில தினங்களுக்கு முன் இங்கு திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த “கீதைக் குறள்” நூலைப் பற்றி எழுதியிருந்தேன். முழு நூலையும் வெளியிட  அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன். ஆனாலும் அதுவரை அந்நூலுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு அறிஞர் அதிலும் வைணவத்தின்பால் ஈடுபாடு உடைய ஒரு பெரியவர் அளித்துள்ள மதிப்புரையின் சுவை கருதி அதையும், நூன்முகமாக நூலாசிரியர் அளித்துள்ள குறிப்புரையையும் மட்டும் இங்கு மின் நூலாக இட்டிருக்கிறேன். மதிப்புரை அளித்துள்ள பெரியவர் திரு சுப்பு ரெட்டியார் அவர்கள்.  கீதைக்குறள் முழுவதையும் இங்கு எழுதக் கூடிய நாள் விரைவில் வரவேண்டும். அது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் கூட கீதையை அறிமுகப் படுத்த, அதனால் அவர்களுக்கு கீதையைக் கற்க ஆசையைத் தூண்டுவதாக அமையும். .இனி திரு சுப்பு ரெட்டியாரின் மதிப்புரை

Geethai