சனி, 9 ஜனவரி, 2010

மாலே! மணிவண்ணா!

26. பண்டைத் தமிழ் நோன்பு

கண்ணன் சிங்காசனத்தில் வீற்றிருக்கின்றான் – சிங்கத்தின் மேல் சிங்கம் வீற்றிருப்பதுபோல. 'நீங்கள் "பறை தருதியாகில்" என்று வேண்டுகிறீர்களே, அது எதற்காக? எந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்கப் போகிறீர்கள்' என்று கேட்கிறான் பெண்களை நோக்கி. அதற்குப் பெண்கள் பதில் சொல்லும் பாசுரம் இது.

ஆய்ச்சியர் இப்பொழுது 'மாலே!' என்று கண்ணனை விளிக்கிறார்கள். இதுவரை அவனிடம் தங்களுக்குள்ள ஆசையைத்தான் பிரஸ்தாபித்தார்கள். இப்போது சிங்காசனத்திலே யசோதை இளஞ்சிங்கத்தைக் கண்டதும், தங்கள் மீது கண்ணன் கொண்டிருக்கும் காதலே ஒரு கடல் என்பதையும், கடல் குடத்திற்குள் அடங்கிக் கிடப்பது போல் அந்தக் காதல் வடிவுகொண்டு வீற்றிருப்பதையும் உணருகிறார்கள். 'நாம் வரும்வரை இவன் தன் ஆசையை எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ? அந்த ஆசைக்கு என்ன சமாதானம் சொல்லி வந்தானோ? என்ன நம்பிக்கை காட்டி வந்தானோ?' என்றெல்லாம் எண்ணத் தொடங்குகிறார்கள்.

இவ்வளவு உணர்ச்சியையும் உள்ளத்திலே கொண்டுதான் 'மாலே!' என்கிறார்கள்;'மணிவண்ணா!' என்றும் அழைக்கிறார்கள். இதற்குமுன் நாராயணன், பரமன், தேவாதிதேவன் என்றெல்லாம் அழைத்தார்கள். அந்தப் பெயர்கள் எல்லாம் பகவானுடைய பரத்துவம் என்ற மேலான நிலையைச் சுட்டிக் காட்டின. ஆனால் இப்போது கண்ணனுடைய எளிமையும் காதலுமே இவர்களை மோகிக்கச் செய்கின்றன.

இவர்களது அழைப்பைப் பேரன்புடன் செவியில் போட்டுக்கொண்ட பெருமான் இவர்களை நோக்கி, "நான் என் தாய்க்கு மணிவண்ணன்தான்; 'என் மணிவண்ணன்' என்று யசோதை அம்மா என்னைப் பாராட்டுவது உண்டு. இப்போது உங்களுக்கும் இனிய மணிவண்ணனாகி விட்டேன்; நல்லது, இனி உங்கள் மணிவண்ணனிடம் வந்த காரியத்தைத் தாராளமாகச் சொல்லலாமே; அந்தப் பறை குறித்த விவரங்களைச் சொல்லலாமே இப்போது" என்கிறான்.

உடனே இவர்கள் 'மார்கழி நீராடுவான்' என்று தொடங்குகிறார்கள். கண்ணன் குறுக்கிட்டு, 'அது என்ன, மார்கழியாவது, நீராட்டமாவது?' என்று கேட்கிறான். இவர்கள் செய்ய விரும்பிய காரியத்திற்கு ஆதாரம் கேட்கிறான். பெண்கள்,

மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

என்று மேலே சொல்லுகிறார்கள்.

முதல் முதல் சங்குகள் வேண்டும் என்கிறார்கள்; பிறகு பறை வேண்டும் என்கிறார்கள். அப்பால் பல்லாண்டு பாடுவாரும் தேவை என்கிறார்கள். மேலும், விளக்கு கொடி விதானம் முதலியவை வேண்டும் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள். இவையெல்லாம் ஏன் தேவைப்படுகின்றன?

நல்ல சங்குகள் வேண்டும் என்கிறார்கள். நடுங்க ஒலி செய்யும் பாஞ்சசன்னியம் என்ற கண்ணன் சங்கை ஒத்த சங்குகள் வேண்டும் என்கிறார்கள்.

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள்

தங்களுக்குத் தேவை என்று இவர்கள் சொன்ன போதிலும் பிறரை நடுங்கச் செய்வதற்காக இவர்கள் அத்தகைய சங்குகள் வேண்டுமென்று சொல்லவில்லை. உறங்குபவர்களை விழிக்கச் செய்யும் பள்ளியெழுச்சிச் சங்குகளே வேண்டும் என்கிறார்கள்.

ஏற்கனவே பறையைத் தான் இந்த நோன்பிற்குச் சிறப்பான உபகரணமாகக் குறிப்பிட்டார்கள். அந்தப் பறைகளை பெரும் பறைகள், மிகவும் பெரிய பறைகள் என்று குறிப்பிடுகிறார்கள். பேரோசை உடைய பறைகள் வேண்டும் என்கிறார்கள். பள்ளியெழுச்சிச் சங்குகள் வேண்டும் என்றவர்களுக்குப் புறப்பாட்டுப் பறைகளும் வேண்டும் என்கிறார்கள். இந்தச் சங்குகளும் பறைகளும் அன்பர்களுக்கு --- மார்கழி நீராட்டத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு --- ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பதுபோல், மார்கழி நீராட்டத்திற்கு எதிரிகளாய் இருப்பவர்களை ஒரு கலக்குக் கலக்கி விடும் என்று இந்தச் சிறுமியர்கள் கருதுகிறார்கள் என்று கொள்வதும் தவறாகாது.

பறைகளை முழக்கிக் கொண்டு புறப்படும்போது எதிரே நின்று பல்லாண்டு பாடுகிறவர்களும் வேண்டும்; அவர்களையும் அனுப்பிவைக்க வேணும் என்று கண்ணனைப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் இவர்கள். எதிரே நின்று பல்லாண்டு பாடுகிறவர்கள் இந்த நோன்பு கொண்டாடுபவர்களுக்கு மங்களம் உண்டாகும்படி வாழ்த்துகிறவர்கள் ஆவர் என்பது குறிப்பு.

மங்கள தீபம் வேண்டும் என்கிறார்கள்; அதிகாலை இருட்டில் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்காகத்தான். கொடி வேண்டுமாம்; தூரத்திலே இருப்பவர்களுக்கும் இந்தப் பெண்கள் கூட்டம் வருவது தெரிய வேண்டுமல்லவா? விதானம் என்ற மேற்கட்டி வேண்டுமாம்; அதிகாலையில் புறப்பட்டுப் போகும்போது தலைமேல் பனி விழாமல் தடுப்பதற்குத்தான்.

இவற்றையெல்லாம் கண்ணன் அருள்கூர்ந்து தரவேணும் என்கிறார்கள்.


நோன்பிற்கு வேண்டியவை

மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


விளக்கம்

        கண்ணன் ராஜசிங்கம் போல் சிங்காசனத்தில் வீற்றிருந்து, 'பெண்களே, நீங்கள் பறை என்று சொல்லி வேறொன்றை வேண்டுகிறீர்களே, அதைத் தெளிவுபடுத்த வேண்டும்' என்று கேட்கிறான். அது குறித்து விவரிப்பதுதான் இந்தப் பாசுரம்.

            கண்ணனுடைய கேள்வியிலிருந்தே அவனுக்கு அன்பர்கள் மீதுள்ள ஆசை புலனாகிறது என்பதை இப்பெண்கள் தெரிந்து கொள்கிறார்களாம். எனவே 'மாலே! மணிவண்ணா!' என்று அழைத்துப் பதில் சொல்லுகிறார்கள்.

        முன்னோர்கள் அனுஷ்டித்த மார்கழி நோன்பு குறித்துப் பேசுகிறார்கள். மார்கழி நீராட்டத்தை முக்கிய அம்சமாக உடைய இது ஒரு வைதிக நோன்பு அல்ல, தமிழகத்தில் முன்னோர்கள் சிஷ்டாசாரமாக அனுஷ்டித்து வந்தது என்று கூறிப் பின் விவரிக்கிறார்கள்.

செல்வமும் சேவகமும்

25. அன்பர் துயரத்திற்கும் நெருப்பு

                 முந்திய பாட்டில் தன்னை வாழ்த்தித் தனக்கு ஜயமங்களம் பாடிய பெண்களை நோக்கிக் கண்ணன் 'பெண்களே! நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடியது பொருத்தம்தான்; ஆனால் இதற்கா இந்தக் குளிரிலே வருந்தி வந்தீர்கள்?' என்று கேட்டதாக ஊகிக்கலாம். அந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த இருபத்தைந்தாவது பாசுரம்.

                          'எம்பெருமானே, எங்களுக்காவது, வருத்தமாவது! உன்னுடைய திருப்பெயர்களையும் குணங்களையும் பாடிக்கொண்டே வரும்போது குளிர் எங்கே? வருத்தம் எங்கே? கொஞ்சமும் சிரமம் என்ற உணர்ச்சி இல்லாமல் சுகமாகவே வந்து சேர்ந்தோம்' என்கிறார்கள். 'நாங்கள் பறை என்று சொல்லிக்கொண்டு ஒரு முக்கியமான வேண்டுகோளுடன் வந்திருக்கிறோம்' என்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள்.

                          தங்கள் வேண்டுகோளை விண்ணப்பம் செய்துகொள்வதற்குப் பொருத்தமாகக் கண்ணனை விளித்துப் பேச விரும்புகிறார்கள். செயற்கருஞ் செயல்களையும் எளிதாகச் செய்து முடித்தவன் கண்ணன் என்கிறார்கள். துளசி பரிமளத்துடன் தோன்றுவதுபோல் இத்தகைய ஆச்சரிய சக்தியுடன் பிறந்த மேதைக்குப் பெயர்தான் கண்ணன் என்கிறார்கள்.. இத்தகைய கண்ணனுக்குத் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிக் கொடுப்பது அரிதாகுமா என்கிறார்கள்.

                      ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த அதிசயத்தைக் குறிப்பிடுகிறார்கள். தேவகி மகனாய்ப் பிறந்து யசோதை மகனாய் வளர்ந்துவரும் பிரசித்தமான கதைதான் இது. ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்று தொடங்குகிறார்கள்.

                         இப்படி ஒளித்து வளரும் கண்ணனைக் கம்சன் மறந்துவிட வில்லையாம். 'நம்முடைய கண் வட்டத்தில்தான் இல்லையே; நம்முடைய பலத்திற்கும் செல்வத்திற்கும் இப்போது ஒரு குறையும் இல்லையே; ஒளித்து வளரும் குழந்தை நம்மை என்ன செய்துவிடப் போகிறது?' என்று ஆறியிருக்கவில்லையாம் கம்சன். பொறாமை இம்சிக்கிறது; பொறுக்க முடியவில்லை.

               பொறாமையில் என்ன என்ன செய்துவிட்டான் பாருங்கள்! வண்டி, கொக்கு, கழுதை, குதிரை, கன்று, மரம் என்று இப்படிப் பல பொருள்களில் கம்ச கிங்கரர்களான அசுரர்கள் ஆவேசித்துக் கண்ணனைக் கொல்ல வந்தார்கள். பூதனை என்ற பேய் வந்தது; குவலயாபீடம் என்ற யானை வந்தது. இப்படியெல்லாம் கம்சன் கருதிய தீங்கிற்கு எல்லையுண்டோ? எப்படியாவது கண்ணனை ஒழித்துவிட வேண்டுமென்று கருதியிருந்தான். ஒழித்துவிட்டு, 'என் மருமகன் ஐயோ! செத்துப் போய்விட்டானே' என்று அலறியடித்துக்கொண்டு அழுது புலம்பித் துக்கம் கொண்டாடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தானாம்.

                      ஆனால் நடந்ததென்ன? கம்சனுடைய கொடுங்கோன்மையும் சூழ்ச்சிகளும் ஆண்களோடு பெண்களுக்கும் ஒரே வயிற்றெரிச்சலை உண்டாக்கின அல்லவா? அந்த வயிற்று நெருப்பை யெல்லாம் கண்ணன வாரிக் கம்சன் வயிற்றில் இட்டான் என்கிறார்கள்.

தருக்கிலன் ஆகி,தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடு மாலே!

என்று அழைக்கிறார்கள்.

                    இப்படி ஆய்ச்சியர் கண்ணனை அழைத்ததும், அவன் 'பெண்களே, அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்காக? உங்களுக்கு நான் செய்யவேண்டியது என்ன?' என்று கேட்கிறான். அதற்கு மறுமொழியாக இவர்கள், 'உன்னை அருத்தித்து வந்தோம்' என்று பதில சொல்லுகிறார்கள். அதாவது 'உன்னை யாசித்து வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

                  'என்னையா? ஏதோ பறைகேட்டு வந்ததாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? அப்படியல்லவா நீங்கள் விரும்புவதாக ஞாபகம்?' என்கிறான் கண்ணன். அதற்கு இவர்கள் இப்போது முடிவாக ஒன்றும் பதில் சொல்லாமல் 'பறை தருதி ஆகில் அதனைப் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். கண்ணனது செல்வத்தையும் சேவகத்தையும் பாடி வருத்தம் தீருவோம், மகிழ்ச்சி அடைவோம் என்கிறார்கள்.

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

என்று பாடுகிறார்கள்.

           ஏற்கனவே கண்ணன் பெயரையும் குணங்களையும் பாடிக் கொண்டு வந்தபோதே இவர்களுக்கு வருத்தம் ஒன்றும் தெரியவில்லை. ஆகையால் இப்போது இவர்கள் வருத்தம் என்று வந்த சிரமத்தைக் குறிப்பிடவில்லை. என்பது தெளிவு. அவனைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைவோம் என்றுதான் சொல்லுகிறார்கள். 'திருத்தக்க செல்வம்' அல்லவா இவர்கள் இப்போது விரும்புவது? இதை மேலும் தெளிவுபடுத்துவது இறுதிப் பாட்டுக்கு முந்திய பாசுரத்தில்தான்.

செல்வமும் சேவகமும்

ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி ஆகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்

வடிவழகையும் நடையழகையும் குண அழகையும் அனுபவித்த பின் – அனுபவித்து வெறி தீர்ந்தபின் –வந்த காரியம் ஒன்று உண்டு என்பதை நினைவூட்டிக் கொண்டார்கள். நோன்பிற்குப் பறை கொள்ளும் காரியம் அது என்று தெரிவித்து, இரங்கவேண்டும் என்றார்கள் முந்தின பாட்டிலே. இந்தப் பாட்டிலே 'கண்ணா, உன்னிடம் யாசித்து வந்தோம்' என்கிறார்கள். 'பறை' என்பதில் புதைபொருளாகிய தங்கள் மனோரதம் ஒன்று உண்டு என்பதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார்கள்.

'திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி' என்று கூறுவதில் கண்ணனிடம் ஒன்றைப் பெறுவதைக் காட்டிலும் கண்ணனைப் பெறுவதே தங்கள் அந்தரங்க நோக்கம் என்ற குறிப்பையும் ஒளித்துக் காட்டுகிறார்கள்.

பிராட்டியும் விரும்பத்தக்க செல்வத்தை இவர்களும் விரும்புகிறார்கள். பிராட்டி காதலித்த வீரத்தை இவர்களும் காதலிக்கிறார்கள். 'உன்னை அடைவதற்குத் தடையாக இருப்பது எதுவோ அதையெல்லாம் போக்கி அருளவேணும்' என்கிறார்கள். 'நாங்கள் பிரிந்து படுகிற வருத்தமெல்லாம் தீர்ந்து மகிழ்ச்சியிலே நாங்கள் வளர்ச்சி பெறுமாறு நீ எங்களை அங்கீகரிக்க வேணும்' என்று பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி'

24. போற்றிப் பாட்டு




ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு பெண்கள் எல்லோரும் திரண்டு வந்தார்கள். வாசல் காப்பவனை எழுப்பி, நந்தகோபனை எழுப்பி, யசோதையை எழுப்பினார்கள். கண்ணனை எழுப்ப முயன்று அண்ணனையும் எழுப்பினார்கள். மீண்டும் கண்ணனை எழுப்பினார்கள். இப்போது கண்ணன் பெண்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, 'இதோ புறப்பட்டு வருகிறேன்' என்று சொல்லிப் பள்ளியறையிலிருந்து சிங்காசனம் இருக்குமிடத்திற்கு வரத் தொடங்குகிறான்.

கண்ணனது வடிவழகையும் நடையழகையும் கண்டதும் பெண்கள் தங்கள் மனோரதங்களையெல்லாம் மறந்துவிட்டதுபோல், 'இந்த அடிமலர்களைக் கொண்டா இவனை நாம் நடக்கச் சொல்லி விட்டோம்?' என்று பரிந்து வருந்தினார்களாம். பிறகு 'அந்த அடிமலர்களைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா? முடிமேல் சூட்டிக் கொள்ளலாமா?' என்றெல்லாம் பித்தம் கொண்டதுபோல் எண்ணமிடுகிறார்கள். 'ஐயோ! இந்த அடிகளா உலகம் அளந்தன? இந்த அடிகளா சகடம் உதைத்து அசுரனை அழித்தன?' என்று பரிந்து வருந்துகிறார்கள். இந்தத் திருவடிகளைப் போற்றி, 'இந்த அடிமலர்களுக்கு ஒரு தீங்கும் நேராதொழிய வேணும்' என்று வாழ்த்துகிறார்கள்.

வாழ்வு பெற வந்தவர்களால் வாழ்த்தப் பெறுகின்றான் கண்ணன். இந்த அதிசயத்தைச் சொல்லுகிறது இந்தப் போற்றிப் பாட்டு. 'மங்களம், மங்களம், ஜயமங்களம்' என்று கண்ணனுடைய திருவடிகளுக்கும் கைத்திறனுக்கும் கைவேலுக்கும் வீரத்திற்கும் மங்களம் பாடுகிறது இந்தப் பாசுரம்.

கண்ணனைக் கண்டு தங்களுக்கு மங்களங்களைப் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் இவர்கள். இப்பொழுது வந்த காரியத்தை மறந்துவிட்டவர்கள்போல் 'போற்றி, போற்றி, பொன்னடிக்குப் போற்றி' என்றெல்லாம் கண்ணனுக்கே மங்களம் வழங்கத் தொடங்கிவிட்டார்களே, இது தகுமா? தங்கள் இரட்சகனையா இவர்கள் இரட்சிக்கப் போகிறார்கள்? இது கண்ணனது வடிவழகு படுத்தும் பாடு. சௌந்தர்யத்திலே சக்தி மறைந்திருப்பதால், பக்தி பரவசமாக இருக்கும் இவர்கள் இந்தப் பாடுபடுகிறார்கள்! இப்படிப் பொங்கும் பரிவை ஆண்டாள் தன் தந்தையான பெரியாழ்வாரிடத்திலே கண்டிருக்க வேண்டும்.

பெரியாழ்வார் தம் அன்புக் கடவுளைத் தரிசித்ததும், தாம் வாழ்வு பெற நினைக்கவில்லை; எம்பெருமான் தீங்கின்றி வாழவேணுமென்று வாழ்த்திப் பல்லாண்டு பாடினார். இது சாதாரண பக்தியன்று; பரம பக்தி. இத்தகைய பரம பக்தியைத் தம் தந்தையாரிடம் புற உலகில் கண்டு கொண்டதுபோல், அக உலகிலும் – பாவனை முதிர்ச்சியால் தான் படைத்துக் கொண்ட ஆய்ப்பாடியிலும் – கண்டு கொண்டாள்.

இந்த ஆய்ச்சியர் கண்ணனைக் கண்டதும், அந்த நடையழகைப் பார்த்ததும், அன்றுஇவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி என்று வாழ்த்துகிறார்கள். கண்ணனுடைய மென்மையான அழகினைப் பார்த்து 'இந்த அடிகளைக்கொண்டு எப்படித்தான் காடு மேடுகள் நிறைந்த மண்ணையும் விண்ணையும் அளந்தானோ இவன்!' என்று இவர்கள் ஆச்சரியப்படவில்லை; வயிறு எரிந்து வேதனைப்பட்டு அந்தத் திருவடிகளை வாயார வாழ்த்துகிறார்கள்!

கண்ணனுடைய கையழகைக் கண்டதும் 'இந்தக் கைத்திறன்தானோ ராட்சச பூமியாகிய இலங்கையை அழித்தது? எப்படித்தான் அழித்ததோ?' என்று பரிந்து இந்தக் கைகளையும் வாழ்த்துகிறார்கள். அந்த ராட்சச பூமியில் நடந்துபோன அந்த அடிகளைமட்டும் வாழ்த்தியதுடன் திருப்தி அடையவில்லை. சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறம்போற்றி.

சகடாசுரனை உதைத்து வதைத்த திருவடிக்குத் திருப்புகழ் பாடிய பின்பும், கண்ணனுடைய கைத்திறனைப் பாடுகிறார்கள். கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய்க் கண்ணன் வரும்போது மேலே விழுந்து கொல்ல விரும்பி நின்று கொண்டிருந்தான். வேறொரு அசுரன் கன்றின் வடிவம் கொண்டு குழந்தைக் கண்ணனை முட்டிக் கொல்ல வந்தான். கண்ணன் கன்றால் விளாமரத்தை அடித்து வீழ்த்த, இரண்டு அசுரர்களும் மாண்டு ஒழிந்தனர். அப்படி முள்ளைக் கொண்டு முள்ளைக் களைவதுபோல் துஷ்ட நிக்கிரகம் செய்த கைத்திறனையும் ஆய்ச்சியர் போற்றினார்கள். அப்படிக் கன்றை எறி கருவியாக (குணிலாக) வீசும்போது அந்த இடத்திற்கு நடந்து சென்றான் அல்லவா? அந்த அடிகளை வாழ்த்தினார்கள் ஆய்ச்சியர் என்றும் கூறுவதுண்டு. கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி என்ற வாக்கின் போக்கிலே திருவடியைப் போற்றும் பொருள்தான் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது.

கண்ணனுடைய கைத்திறன் கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்து உலகத்திற்கு அருள் புரிந்தது என்பதையும் அறிந்திருக்கிறார்கள் ஆய்ச்சியர்கள். குன்று குடையாக எடுத்த அந்தப் பெருங் குணத்தையும் போற்றுகிறார்கள். குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி என்கிறார்கள்.

வெற்றி தரும் கைவேலையும் போற்றுகிறார்கள். கண்ணன் கையில் வேல் பிடித்திருக்கும் அழகும் இவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. 'அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி' என்று இவர்கள் தங்கள் நாக்குக்கு அறுசுவை உண்டி அளித்து மகிழ்கிறார்கள்.


வடிவழகும் நடை அழகும் கண்டு போற்றுவது

அன்றுஇவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுமுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
விளக்கம்

இப்பெண்களின் வேண்டுகோளுக் கிணங்கிக் கண்ணபிரான் படுக்கையைவிட்டு எழுந்து வெளிப்பட்டு வருகிறான்; வெளி மண்டபத்திற்கு வந்து விடுகிறான். அந்த வடிவழகிற்கும் நடை அழகிற்கும் உள்ளத்தைப் பறிகொடுத்தவர்களால் வந்த காரியத்தைப் பளிச்சென்று விண்ணப்பம் செய்துகொள்ள முடியவில்லையாம். இந்த அழகிலே வந்த காரியத்தையும் சற்று மறந்து விடுகிறார்களாம்.

நடந்து வந்த அந்த அடிமலர்களின் அழகைப் போற்றுகிறார்கள். இலங்கையை வென்ற திறமையைப் போற்றுகிறார்கள். குழந்தைக் கண்ணனின் லீலைகள் நினைவிற்கு வர, அந்த அற்புதச் செயல்களையும் போற்றுகிறார்கள். அவற்றால் ஏற்பட்ட புகழையும் அந்தச் செயல்களில் வெளிப்பட்ட குணத்தையும் போற்றுகிறார்கள். வெற்றியையும் வீரத்தையும் இப்படியெல்லாம் போற்றியபின் கடைசியாக வந்த காரியத்தையும் நினைத்துக் கொள்கிறார்கள்.

புதன், 6 ஜனவரி, 2010

அன்பிற்கு அடி பணிந்தார்கள்! சிங்கம் தோன்றியது!

22. குறைகளுக்கு மூடிக் கூக்குரலுக்குத் திறவாய் !


  'வேறு போக்கு இல்லாது வந்து சேர்ந்தோம்' என்று ஆய்ச்சியர் முந்திய பாட்டில் கூறினார்கள். கண்ணன் 'இன்னமும் இவர்களைச் சோதிப்போம்' என்று பேசாமல் கிடக்கிறானாம். அது கண்ட ஆய்ச்சியர், 'எம்பெருமானே! எங்களுக்கு நீ புகல் ஆகாது இருந்து விட்டாலும் நாங்கள் வேறொரு புகலைத் தேடி ஓடப் போவதில்லை; அடிபணிந்த எங்களைக் கடாட்சிக்க வேணும்' என்று பிரார்த்திக்கிறார்கள் இப்பாசுரத்திலே.

            நாம் சாதாரணமாக 'என் வீடு, என் பொருள், என் பூமி' என்றெல்லாம் அபிமானம் கொண்டு பேசுகிறோம். இத்தகைய அபிமானம் அரசர்களுக்கு அதிகமாகத்தானே இருக்கும்? 'என் இராச்சியம், என் பூமி' என்ற அகங்காரத்தால் பெரிய பெரிய போர்கள் எல்லாம் அரசர்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. பெருங் கொடை வள்ளலான மகாபலியும் 'வாமனன் மண் இது' என்று தெரிந்து கொள்ளாமல் வாமனனுக்கே நிலத்தைத் தானம் கொடுப்பதாக நினைத்துவிட்டான் அல்லவா?

                   இத்தகைய அபிமானம் போய் அரசர்களுக்கு அபிமான பங்கம் (அகப்பற்று, புறப்பற்றுக்களின் நீக்கம்) வந்துவிட்டால் அவர்கள் எப்படி நடந்துகொள்ளக்கூடும்? 'ஒரு நாயகமாய் உலகை ஆண்டோம்!' என்று இருந்தவர்கள் நாடு காணப் பிச்சை எடுப்பதும் உண்டு என்றார் நம்மாழ்வார். அவர்களும் அபிமான பங்கம் ஆனவர்கள். அத்தகைய அரசர்கள் வைராக்கியம் உற்றுக் கடவுளையே சரணமாக அடையவும் கூடுமல்லவா?

வறுமையும் கஷ்டமும் செல்வ நஷ்டமும் தத்துவ ஞானம் தலையெடுப்பதற்குக் காரணமாகவும் கூடும்; 'ஆண்டவனே நமக்குப் புகல்; செல்வமல்ல, பதவி அல்ல, புகழ் அல்ல' என்று மனம் திருந்துவதற்கும் திரும்புவதற்கும் காரணமாவதையும் கண்டு கொள்ளலாம். இந்த நிலையை அடைந்த அரசர்கள் அபிமான பங்கமாகி வந்து, கண்ணன் ஏகாந்தமாக எழுந்தருளியிருக்கும் இடத்திலும் வந்து கிடப்பார்களாம். இதை ஆய்ச்சியர் கேள்விப் பட்டிருக்க வேண்டும்; பார்த்தும் இருக்கலாம்.

'எவ்வளவு அழகான, விஸ்தாரமான, பூமியை ஆண்டு கொண்டு வணங்காமுடியராக இருந்தார்கள்! அத்தகைய அரசர் அபிமான பங்கமாய் வந்து கண்ணன் பள்ளிகொண்டிருக்கிற கட்டிலண்டை உட்கார்ந்திருக்கிறார்களே; கீழே உட்கார்ந்திருக்கிறார்களே; திரள் திரளாக உட்கார்ந்திருக்கிறார்களே!' என்று கண்ணாரக் கண்டு அதிசயிப்பதுபோல் ஆய்ச்சியர்கள் பேசுகிறார்கள்.

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

'அந்த அரசர்களைப் போல் நாங்களும் தோற்று வந்தவர்கள்!' என்கிறார்கள். 'இராச்சியத்தையும் இழந்து வந்தவர்கள் நாங்கள்!' என்கிறார்கள். 'அவர்கள் எதிரிகளுக்குத் தோற்று வந்தார்கள்; நாங்களோ உன் குணங்களுக்கே தோற்று வந்தோம்; எங்களுடைய அகங்கார இராச்சியத்தை இழந்து வந்தோம்!' என்கிறார்கள். 'இந்த நிலையில் நாங்களும் உன்னைக் கிட்டப் பெற்றோம்' என்கிறார்கள்.

அது கேட்ட கண்ணபிரான், 'பெண்களே! இனி ஒரு குறையும் இல்லையே!' என்று கேட்கக்கூடுமல்லவா? அதற்கும் இவர்கள் பதில் சொல்லுகிறார்கள். 'உன்னுடைய கடாட்சம் பெறவேண்டாமா? அதற்குத் தானே வந்திருக்கிறோம்' என்கிறார்கள்.

இந்தக் கடாட்சத்தைக் குறித்துப் பேசுவதுதான் இந்தப் பாசுரத்தின் பெரும்பகுதியும். கண்ணனுடைய கண்கள் உள்ளே இருக்கும் அன்பு தோன்றுமாறு சிறிது சிறிதாகத் தங்கள் மேல் விழித்துப் பார்க்கவேணும் என்கிறார்கள். இப்படி ஏன் பார்க்கவேணும்? பூரண கடாட்சம் வேண்டும் என்று உடனே தெரிவித்துக் கொள்ளாததற்குக் காரணம்தான் என்ன?

முதல் முதல் இருட்டிலிருந்து வந்தவன்முன்னே பேரொளியை வீசினால் கண்கூசிப் போகுமல்லவா? இப்பெண்களும், 'முதலிலேயே பூரண கடாட்சம் செய்துவிட்டால் தாங்க முடியாதே!' என்கிறார்கள். நாங்கள் பொறுக்கப் பொறுக்கக் கடாட்சித்து அருளவேணும்' என்கிறார்கள். 'சிறுச் சிறிதே' என்று இவர்கள் கூறுவது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

குற்றங் குறைகளை நினைத்துப் பாதி மூடியிருக்க வேணுமாம் கண்கள்; கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்க வேணுமாம். செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? என்கிறார்கள்.

இப்படிக் கடாட்சிக்க வேணும் என்பதற்கு ஓர் உபமானமும் காட்டுகிறார்கள். 'கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல' என்பது இவர்கள் வாக்கு. வாய்ப்பக்கம் கொஞ்சம் திறந்த ஒரு வகைச் சதங்கை இங்கே கிங்கிணி என்று குறிக்கப்படுகிறது.

இரண்டு கண்களுக்கும் சந்திர சூரியர்களை உபமானமாகவும் காட்டுகிறார்கள். சூரியன் உதிக்கத் தாமரை மலரத் தொடங்குமல்லவா? சந்திரன் உதித்தால் மூடிக்கொள்ளுமல்லவா? ஏககாலத்தில் இரண்டும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும் பாதி திறந்தும் இருக்குமென்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படி இரண்டு கண்களாலும் கண்ணன் கடாட்சிக்க வேணும் என்கிறார்கள்.


அன்பிற்குத் தோற்று அன்பனுக்குப் பணி புரிவது


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின்பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


விளக்கம்

எதிரிகளுக்குத் தோற்று 'இராச்சியம் நம்முடையது' என்ற புறப்பற்று நீங்கி இறைவனைச் சரணமாக அடையவும் கூடும்; 'அப்படியே நாங்களும் உன் அன்பு முதலான குணங்களுக்குத் தோற்று எங்கள் அபிமானம் தொலைந்து உன்னிடம் அந்தரங்கமாக வந்து விட்டோம்' என்கிறார்கள். கண்ணனோடு எதிர்த்துத் தோற்ற எதிரிகளில் சரணமாக அடைந்தவர்களை இந்தப் பாட்டின் முற்பகுதி குறிப்பிடுகிறது என்றும் கருதலாம்.

அம்புக்குத் தோற்றவர்கள் வேறு போக்கு இல்லாமல் சரணமடைவதுபோல், அன்பிற்குத் தோற்றவர்கள் அன்பனுக்குப் பணி செய்யச் சித்தமாகிறார்கள்.


23. சிங்கப் பாட்டு.

மழைக்காலம். மலைக் குகையிலே படுத்துக் கிடக்கிறது சிங்கம். உறங்கிக் கிடக்கிறது. சிங்கம் இருக்கும் குகை என்றால் எந்தப் பிராணிதான் அங்கே வரத் துணியும்? ஆனால் சிங்கமோ யானைகள் வந்து பிளிறினாலும் அந்த ஒலியையும் கேட்க இயலாத நிலையில் கிடந்து உறங்குகிறதாம். மழைக் காலமானதால் வழிகளும் சேறாகி, திரிவதற்கும் வசதியாக இல்லை. அரசன் போர் புரிவதை விட்டு அரண்மனையில் கிடப்பதுபோல் சிங்கமும் தன் குகையில் பொருந்திக் கிடக்கிறதாம், பேடையும் தானுமாக.

மழை ஓய்ந்துவிட்டது. வழிகளெல்லாம் வெள்ளம் வடிந்து நடக்க இசைவாகி விட்டன. சிங்கம் உறக்கத்தை விட்டு எழுகின்றது. 'நம் எல்லைக்குள் புகுந்தவர் யார்?' என்று சீறி நோக்குவதுபோல் தீப்பொறி பறக்க நாலுபுறமும் நோக்குகிறது. பிடரி மயிர் சிலும்பும்படி அங்கும் இங்கும் உடம்பை அசைத்துக் கொடுக்கிறது. முடங்கிக் கிடந்த அவயவங்களை உதறுகிறது. பெருமை தோன்ற --- தன் மாட்சி தோன்ற --- சோம்பல் முறித்து நிமிர்ந்து நிற்கிறது. இடிபோல் கர்ச்சிக்கிறது. இப்படி நிமிர்ந்து முழங்கிக்கொண்டே தன் குகையை விட்டு வெளிப்படுகிறது.

இப்படிக் கண்ணபிரானும் கம்பீரமாகப் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் ராஜசிங்கம் வீற்றிருப்பதுபோல எழுந்தருளிக் காட்சி தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள் ஆய்ச்சியர்கள். தங்கள் தலைவனின் காம்பீர்யம் நிறைந்த அழகு – மாட்சியைக் காண ஆசைப் படுகிறார்கள். அப்படி மாட்சியுடன் அமர்ந்து தாங்கள் வந்த காரியத்தை ஆலோசித்து முடிவு செய்யவேண்டும் என்கிறார்கள்.

* * * * *

'வேறு புகல் அற்று உன்னை நோக்கி வந்து விழுந்தோம்; சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்' என்று சொன்னவர்களை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவதன்றோ என் கடமை? அதுதானே என் சொருபம்?' என்கிறானாம். இப்படித் தன்னுடைய தத்துவத்தையும் தகவையும் (சொரூபத்தையும் சுபாவத்தையும்) கண்ணன் தெரிவித்து, 'இனி நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன?' என்று கேட்பதாகக் கருதலாம். அதுகேட்ட ஆய்ச்சியர், 'இப்படி இரகசியமாக விண்ணப்பம் செய்யக்கூடியதன்று எங்கள் காரியம்' என்கிறார்கள். 'யசோதை இளஞ்சிங்கமாகிய நீ உறங்கும் இடத்தை விட்டு வரவேணும்; திருமேனி நிமிர்ந்து கம்பீரமாக விழித்துப் புறப்பட்டு வரவேணும். அப்படி வந்து வீர சிங்காசனத்தில் மாட்சி பொருந்த வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து பார்க்க வேணும்' என்கிறார்கள்.

இந்தப் பாசுரத்திலே முற்பகுதி சிங்கத்தை வருணிக்கிறது. எவ்வளவு கம்பீரமாக வருணிக்கிறார்கள் சிங்கத்தை இந்த ஆய்ச்சியர்கள்!

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போல

என்பதை உணர்ச்சியுடன் ஓத ஓதச் சொற்கள் மறைந்து, சிங்கமே அனல் பறக்கக் கண் திறந்து பிடரி ரோமம் சிலிர்க்க உதறிக் கொண்டு நிமிர்ந்து கர்ச்சித்துப் பாய்ந்து வருவது போன்ற உயிர்ச் சித்திரம் அப்படியே நம் அகக்கண் முன் தோன்றக் காண்கிறோம்.

இப்படி வரவேணுமாம் பூவைப் பூவண்ணனாகிய கண்ணனும். இவனது காயாம்பூ மேனி சௌந்தர்யத்திற்கு அறிகுறி. 'கண்ணா, உன் சக்தியை மறைத்திருக்கிறது சௌந்தர்யம். நாங்கள் உன் சௌந்தர்யத்தை மட்டுமா காதலிக்கிறோம்? நீறுபூத்த நெருப்பைப் போலிருக்கும் உன் சக்தியையும் காண ஆசைப் படுகிறோம்' என்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.

'பூவைப் பூவண்ணா, உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி' – அதாவது உன் இருப்பிடத்திலிருந்து நாங்கள் இருக்கிற இங்கே ராஜசிங்கம் போல் வந்தருளவேணும் – என்கிறார்கள். வேலைப்பாடுகள் அமைந்த சிறந்த சிங்காசனத்தில் வீற்றிருக்கவேணும் என்கிறார்கள்.

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
என்கிறார்கள்.

வந்த காரியம் இன்னதென்று இப்போதே இவர்கள் சொல்லி விட விரும்பவில்லை. 'கேட்கும் முறைப்படி சிங்காசனத்திலிருந்து கேள்; நாங்கள் விண்ணப்பம் செய்வோம்' என்கிறார்கள். இந்த விண்ணப்பத்தைத் திருப்பாவையின் இறுதிப் பாட்டிற்கு முந்தைய பாட்டில்தான் வெளியிடுகிறார்கள்.

இந்த விண்ணப்பத்தைக் கண்ணனும் பொறுத்திருந்து கேட்பான். நாமும் பொறுத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.


சிங்கமும் சிங்காசனமும்

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்த்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புஉடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

விளக்கம்

கண்ணன் பெண்களின் வேண்டுகோளைக் காதில் போட்டுக் கொண்டு,'நீங்கள் என்னைத் துயிலுணர்த்துவது ஏன்?' என்று ஒரு கேள்வி கேட்டதாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஆய்க்குலச் சிறுமியர் சொல்லும் பதிலாக அமைந்திருக்கிறது இச்செய்யுள்.

சிங்கம் கம்பீரமாகப் புறப்பட்டு வருவதுபோல் யசோதை இளஞ்சிங்கமும் புறப்பட்டு வரவேண்டும் என்கிறார்கள். படுத்தபடியே 'ஏன் வந்தீர்கள்?' என்று கேட்டால் போதாது. ராஜசிங்கமாக நிமிர்ந்து 'வந்தீர்களா? வாருங்கள், வாருங்கள்' என்று வினவிக்கொண்டே புறப்பட்டு வரவேண்டும் என்கிறார்கள். அப்படி வந்து சிங்காசனத்தில் ஒரு சிங்கமாக வீற்றிருந்து வந்த காரியத்தை விசாரிக்க வேண்டுமாம்.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

அடி பணிய வந்தோம்

21. தோற்றவர் பேறு.

நப்பின்னையைத் துயில் உணர்த்திய பின், அவள் எழுந்து வந்து ‘தோழிகளே’ என்று இவர்களைப் பேரன்புடன் அழைக்கிறாள். ‘நானும் உங்களில் ஒருத்தி அன்றோ!’ என்கிறாள். ‘நீங்கள் கொஞ்சமும் வருந்த வேண்டாம்; நான் உங்களுக்கு உதவி செய்ய எப்போதும் சித்தமாகவே இருக்கிறேன்’ என்கிறாள். கடைசியாக, ‘நாம் எல்லோரும் கூடிக் கண்ணபிரானை வேண்டிக் கொள்வோம், வாருங்கள்’ என்று சொல்லுகிறாள்.

பிறகு நப்பின்னைப் பிராட்டி உள்ளிட்ட அனைவரும் ஒரு முகமாய்க் கூடிக் கண்ணபிரானுடைய வீரம் பாடி அவனைத் துயில் உணர்த்துகிறார்கள் என்பது இப்பாசுரத்தின் அமைப்பு முறை.

கண்ணனுடைய வீரத்தைப் புகழ்வதற்கு முன் கண்ணன் தந்தையாகிய நந்தகோபனின் செல்வத்தைப் புகழ்கிறார்கள் --- பசுச்செல்வத்தைத்தான், பால்வளத்தைத்தான். ஏற்கனவே நந்தகோபனின் அறப் பற்றைப் பாராட்டிவிட்டார்கள், தோள்வலியையும் பேசி விட்டார்கள். இந்தப் பாசுரத்திலே அவனுடைய கறவைச் செல்வம்தான் எவ்வளவு வசீகரமாய் வருணிக்கப் படுகிறது பாருங்கள்!

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான்

கலம் இடுவார் குறையேயன்றி, பசுக்கள் இட்ட கலங்களை நிறைக்கத் தட்டில்லை என்கிறார்கள். சிறிய கலம் பெரிய கலம் என்ற வேற்றுமையின்றி எந்தக் கலத்தையும் நிறைத்து விடுகிறதாம் நந்தகோபனின் பசு. மாற்றாதே பால் சொரியும் பெரும் பசுக்கள் என்கிறார்கள். ‘இட்ட கலங்கள் நிரம்பின; இனிக் கலம் இடுவார் இல்லை’ என்பது குறிப்பு.

ஏற்கனவே, ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்றார்கள். இப்போதோ, ‘எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்கிறார்கள். கலம் நிறைந்து எதிராகப் பொங்கி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பாலைச் சொரிகிற பசு இங்கே நல்லாசிரியருக்கு அறிகுறி. ஏற்ற கலங்கள் உபதேசத்திற்குப் பாத்திரமான உத்தம சீடர்களுக்கும் அறிகுறி. ஏற்ற கலங்கள் நிறைந்து எதிர் பொங்குவது போல், சீடர்களும் நிறைந்த ஞானம் பெற்று ஆசாரியனுக்கும் யுக்தி உபதேசம் செய்ய வல்லவர்கள் ஆகிறார்களாம்.

பெரும் பசுக்களாகிய செல்வத்தைச் சிறப்பாகப் படைத்திருக்கும் நந்தகோபன் மகன் கண்ணன் என்பதை முதல் பெருமையாகக் குறிப்பிட்ட பின்பே இந்த மகனுடைய பெருமையைப் பேசுகிறார்கள். மகனே! அறிவுறாய் என்று சொன்ன பின்பே அடியவரைக் காப்பதில் கண்ணனுக்கு உள்ள ஊற்றம் அல்லது சிரத்தையைப் பேசுகிறார்கள். ஊற்றம் உடையாய்! பெரியாய்! என்கிறார்கள். அன்பர்களைக் காக்கவல்ல ஆண்டவன்தானே உண்மையிற் பெரியவன்?

பிறகு கண்ணனை ‘உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!’ என்று அழைக்கிறார்கள். ‘இருள் தரு மாஞாலம்’ என்று சொல்லப்படும் இந்த உலகத்திலே இறங்கி வந்திருக்கும் ஜோதி கண்ணன் என்பது குறிப்பு. தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

கடைசியாக, தாங்கள் கண்ணபிரான் திருவடிகளைப் போற்ற வந்திருப்பதைத் தெரிவிக்கிறார்கள். எப்படி அடிபணிந்து போற்ற வந்திருக்கிறார்கள் என்பதையும் விரித்து உரைக்கிறார்கள். கதியற்றவர்களாக வந்திருக்கிறோம் என்கிறார்கள். ‘உன்னைத் தவிர வேறு கதி இல்லை எங்களுக்கு என்று சரணாகதி பண்ணிக் கிடக்க வந்திருக்கிறோம்’ என்கிறார்கள்.

தங்கள் சரணாகதிக்கு இவர்கள் இப்போது காட்டும் உபமானம் இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது.

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து
என்கிறார்கள்.

பகைவர்கள் வலிமை ஒழிந்து – அதாவது, கண்ணனுக்குத் தோற்று --- கதியற்றவர்களாய்க் கண்ணனின் வாசலில் வந்து அடிபணிவதுபோல், இவர்களும் சரணாகதி செய்ய வந்திருக்கிறார்களாம். இராமனைக் காகாசுரன் சரணமடைந்த கதையை இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். ’எத்திசையும் உழன்று ஓடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம்’ என்று காகாசுரனைக் குறிப்பிடுவதுண்டு. ‘அப்படி நாங்களும் சரணாகதி செய்யவந்தோம்’ என்கிறார்கள்.

மாற்றார் தோற்று வந்தார், இவர்களுக்கு என்ன தோல்வி? கண்ணனுடைய அழகிற்கும் அழகிய குணங்களுக்கும் தோற்றவர்களாய் ஆற்றாது வந்திருக்கிறார்களாம் இவர்கள்.


ஆற்றாது அடிபணிய வந்தோம்


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்



விளக்கம்

கண்ணனுடைய வலிமைக்குத் தோற்ற பகைவர்களும் உண்டு, குணங்களுக்குத் தோற்ற அன்பர்களும் உண்டு. வலிமைக்குத் தோற்றவர்கள் காலில் விழுவதுபோல் குணத்திற்குத் தோற்றவர்களும் காலில் விழுகிறார்கள்; சரணாகதி செய்கிறார்கள். எப்படியும் சரணாகதி செய்வது பாக்கியம்தான். குணத்திற்குத் தோற்றுச் சரணாகதி செய்வது பெரும் பேறு. இந்த நிலையில் வந்திருக்கிறார்கள் இப்பெண்கள்.

இப்பாட்டில் வரும் பெரும் பசுக்கள் ஞானாசிரியனை நினைவூட்டுகின்றன. ‘ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப’ என்பது உபதேசத்திற்குப் பாத்திரமாக வந்தவர்கள் குருவுக்கும் யுக்தி சொல்ல வல்லவர் ஆகிறார்கள் என்பதை நினைவூட்டி, மெய்யறிவின் தனிப் பெருஞ் சிறப்பை உணர்த்துகிறது.

‘உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்’ என்பதில் ‘பல பிறப்பாய் ஒளிவரு முழுநலம்’ கடவுளுக்கு உரியது என்ற பேருண்மையைக் காண்கிறோம்.

திங்கள், 4 ஜனவரி, 2010

பாவை 19ம் 20ம்

19. எளிய பாஷை, அரிய பொருள்

நப்பின்னையை முற்பட எழுந்திருக்கவொட்டாமல் கண்ணன் தடுக்கக் கூடும் என்று கருதும் பெண்கள் கண்ணனை மீண்டும் எழுப்ப முயல்கிறார்கள். நப்பின்னையோ கண்ணனிடம், 'கதவைத் திறக்கவேண்டாம்' என்று மட்டும் சொல்லவில்லையாம்; 'வாய் திறவாதே' என்றும் சொல்லுகிறாளாம். எனவே, கண்ணன் வாய் திறவாமல் இருக்கிறான் என்று கருதும் பெண்கள், கண்ணனை எழுப்புமாறு மீண்டும் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பப் பார்க்கிறார்கள்.

இப்படி மீண்டும் நப்பின்னைப் பிராட்டியை உணர்த்துவது கண்ணபிரானை உணர்த்துவதற்கேதான். பிராட்டியும் பெருமாளும் அன்பர்களுக்குக் கருணை புரிவதில் போட்டியிடுகிறார்கள் என்பது கருத்து. 'இந்த ஆய்ச்சிகள் மிகவும் நொந்தனர் போலும்; இதோ போய்க் கதவைத் திறப்போம்; அல்லது திறப்பதாக ஒரு வார்த்தை சொல்லுவோம்' என்ற முயற்சியில் நப்பின்னைப் பிராட்டியும் கண்ணபிரானும் போட்டியிடுவதாகக் குறிப்பிடுவது அம்மையப்பனாகிய இறைவன் நமக்கு இரங்கி அருள் புரியும் அதிசய வைபவத்தை வீட்டிலும் நாட்டிலுமுள்ள இல்லற அனுபவத்தைக்கொண்டு சுட்டிக் காட்ட முயல்வதுதான்.

'குத்துவிளக்குஎரிய' என்று தொடங்கும் இப்பாட்டில் லௌகிக அனுபவமும் சமய தத்துவமும் கலந்து பரிமளிக்கின்றன.

குத்து விளக்குஎரிய
    கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச
    சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல்
    நப்பின்னை .........

என்று வாசித்துக்கொண்டு வரும்போது 'இதில் என்ன தத்துவத்தைக் காணப் போகிறோம்?' என்றுதான் தோன்றும். ஆனால் 'அம்மையப்பன்' (லட்சுமி நாராயணமூர்த்தி) என்ற கொள்கையின் அடிப்படைத் தத்துவம் இனிது புலனாகின்றது; சிந்திக்கச் சிந்திக்கத் தெவிட்டாத இனிமையுடன் அந்தத் தத்துவம் இங்கே புலனாகக் காண்கிறோம்.

'மலர் மார்பா! வாய் திறவாய்' என்ற சாதாரண வாக்கிலேதான் எத்தகைய பேருண்மையைக் காண்கிறோம்! 'வாய் திறந்து, தத்துவத்தை --- இயற்கையின் மர்மமாகிய தனிப் பேருண்மையை – ஒரு வார்த்தை சொல்லி உணர்த்துவார் இல்லையே' என்று அந்தக் குரலை நாடி எத்தனை நல்லறிஞர்கள் அலைந்திருக்கிறார்கள்; வாய் திறந்து பேசவல்ல அந்த மெய்க் குரலைக் குருமூலமாகவும் கேட்டிருக்கிறார்கள். காந்தியடிகளைப் போல் இறைவன் அந்தராத்மாவாக இருந்து பேசுவதாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிராட்டி அழகால் இறைவனை வசீகரித்து மக்களிடம் கருணை புரியுமாறு தூண்டுகிறாள். தூண்டிய வண்ணமாய் இருக்கிறாள் என்று கூறுவதுண்டு. இத்தகைய பிராட்டியின் பேரழகை இந்தப் பாசுரம் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை என்றும் மைத்தடங் கண்ணினாய் என்றும் குறிப்பிடுகிறது.

பிராட்டி கூந்தல் அழகுள்ளவள்; அந்தக் கூந்தலை மலர்கள் சூட்டி மேலும் அழகு செய்து கொண்டிருக்கிறாள். பிராட்டி மைத்தடங் கண்ணினாள் --- அதாவது, மை தீட்டிய விசாலமான கண்களை உடையவள். ஸ்தூலமாகப் பார்க்கும்போது இதுதான் இங்கே பொருள். ஆனால் பிராட்டி நிலையிலுள்ள சூட்சுமமான தத்துவத்தை வேறு எப்படித்தான் உணர்த்திவிட முடியும்?

சாதாரணப் பெண் ஒருத்தியின் இயற்கை அழகையும் செயற்கை அழகையும் நினைவூட்டித்தான் 'பிராட்டி' என்ற தத்துவத்தின் அழகையும் சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது. இயற்கையாகவே கூந்தலழகி, கண்ணழகி, தன்னைச் செயற்கையாகவும் (கூந்தலில் மலர் சூட்டிக்கொண்டும், கண்களில் மை தீட்டிக்கொண்டும்) அழகு செய்துகொள்வதைச் சாதாரணமாய் நாடெங்கும் பார்க்கிறோம். அன்னையாகிய மகாலட்சுமியும் – உலக அன்னையல்லவா --- தன்னை இயற்கையாகவும் செயற்கையாகவும் அழகு செய்துகொண்டு அப்பனை மோகிப்பித்து மக்களுக்கு அருள் புரிய முற்படுகிறாளாம்.

இவர்களிடையே உள்ள காதல்தான் படைப்பிற்கு அடிப்படை என்று துணிந்து கூறுகிறது இந்து சமயம். இக்கொள்கை வைணவத்திற்கும் சைவத்திற்கும் பொதுவானது.

மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்!
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்
என்பதில் பெருமானுக்கும் பிராட்டிக்கும் உள்ள தெய்விகக் காதல் சாதாரண லௌகிக பாஷையில் சுட்டிக் காட்டப்படுகிறது.

'தத்துவம் அன்று தகவு' என்று ஒரு சூத்திரம் செய்து காட்டுவது போல் ஆய்ச்சியர் பேசி முடிக்கிறார்கள். உலக அன்னைக்கு உள்ள கிருபையே அவள் சுபாவம், தகவு. தந்தையின் அருளுக்கு மக்களை இலக்காக்குவது இவள் சொரூபம் அல்லது தத்துவம். இந்தப் பேருண்மை, சாதாரண லௌகிக அனுபவம்போல் அமைந்திருக்கும் இப்பாட்டின் தத்துவ சிகரம்.


கதவு திறக்காவிட்டாலும் வாய் திறக்கலாகாதா?


குத்து விளக்குஎரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயில்எழ ஒட்டாய்காண்!
எத்தனை ஏலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

விளக்கம்

'தத்துவம் அன்று தகவு' என்பதற்கு, 'தத்துவம் அன்று, தகவு அன்று' என்றும் பொருள் கொள்ளலாம். 'இப்படிச் செய்வது உன் தத்துவத்திற்கும் – அதாவது உன் சொரூபத்திற்கும் --- ஒத்ததில்லை; உன் தகவு அல்லது சுபாவத்திற்கும் ஒத்ததில்லை' என்பது உத்தமமான பொருள். வாயைத் திறந்து எங்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்லவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.



20. இப்போதே அருள் புரிய வேண்டும்


முந்திய பாட்டிலே, ‘தத்துவம் அன்று தகவு’ என்ற சூத்திரம் ஒரு தத்துவ சிகரத்தைச் சுட்டிக் காட்டியபோதிலும், ஆயர் மங்கையர் தங்கள் வருத்தம் தோன்றச் சொன்ன வார்த்தைகள்தானே. எனவே நப்பின்னை பேசாமல் கிடக்கிறாளாம். ஆய்ச்சியர் வருந்தச் சொன்ன வார்த்தையால் நப்பின்னைக்கு வருத்தமோ கோபமோ ஏற்பட்டதாகக் கருதவேண்டியதில்லை. பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து ஆய்ச்சியர் குறைகளை விண்ணப்பித்துக்கொள்வோம் என்று நினைத்துப் பேசாமலே இருந்தாள் எனக் கருதலாம்.

ஆய்ச்சியரோ, ‘பிராட்டிக்கும் சீற்றமோ?’ என்று மயங்குகிறார்கள். கண்ணபிரானும் கோபமாய் இருக்கக் கூடுமோ என்று கலங்குகிறார்கள். இந்த நிலையை ‘அதிசங்கை’ என்று கூறுவதுண்டு.

இந்த நிலையில், கண்ணனையாவது எழுப்பிப் பார்ப்போம் என்று நினைக்கிறார்கள். கண்ணனுடைய அருமை பெருமைகளை விரிவாகப் பேசிப் பார்ப்போம் எனத் துணிகிறார்கள். முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! என்று கண்ணனை முதல் முதல் கூவி அழைக்கிறார்கள். தேவர்களின் நடுக்கத்தைத் தீர்ப்பவன் அடியவர்களின் கலக்கத்தைத் தீர்க்க முற்படவேண்டாமா என்பது குறிப்பு.

இப்படிப் புகழ்ந்தபின், ‘செப்பம் உடையாய்’ என்று அழைக்கிறார்கள். முதலில் கண்ணனைக் கலி(மிடுக்கன்) என்று சொன்னவர்கள், ‘நேர்மையுள்ளவன்’ என்று இப்போது கூறுகிறார்கள். மிடுக்கு நேர்மையான வழியில் போகாவிட்டால் துடுக்கு. இங்கே ‘திறல் உடையாய்’ என்று மறுபடியும் கூறி அடியவரைக் காக்க வல்லமை உள்ளவன் கண்ணன் என்பதை வற்புறுத்துகிறார்கள்.

அண்பர்களுக்கு இன்பம் கொடுக்கும் வல்லமை உள்ளவன் பகைவர்களுக்கு வெப்பம் கொடுப்பவனாகவும் இருக்கிறானாம். ‘செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!’ என்கிறார்கள். கடவுளுக்கும் பகைவர் உண்டா? அடியவர்களின் பகைவர்களே ஆண்டவனுக்குப் பகைவர். அடியவரோ ஒருவரையும் தங்கள் பகைவர் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. ‘உலகைக் கெடுக்கிறார்களே ஆண்டவன் பகைவர்கள்’ என்றுதான் எண்ணுகிறார்கள். குளிர்ந்த அருளையுடைய கடவுள் இத்தகைய பகைவர்களுக்கு வெப்பம் கொடுக்கிறானாம். உண்மையில், வெப்பம் இங்கே இல்லை. பகைவனது பகைமை உள்ளத்திலிருந்து புகைந்தெழும் நெருப்பேதான்!

எனவே ‘வெப்பம் கொடுக்கும் விமலா’ என்று அழைக்கிறார்கள். பகைவர்கள் வெப்பத்தை அடைவதால் அன்புக் கடவுளுக்கு ஒரு குற்றமும் இல்லையாம்.இத்தகைய கண்ணன் துயில் எழுந்து அருள் புரிய வேணும் என்கிறார்கள். விமலா! துயில்எழாய் என்று கள்ளங் கவடற்ற நெஞ்சிலிருந்து வருகிறது வாக்கு.

இப்படியெல்லாம் புகழ்ந்து கண்ணனைத் துயில் எழுப்பியும் ‘அவன் வாய்திறந்து ஒரு பேச்சுப் பேசவும் வல்லமையற்றுக் கிடக்கிறானே,இதுஎன்ன அதிசயம்!’ என்று எண்ணமிடுகிறார்கள் ஆய்ச்சியர். ‘நப்பின்னையை நாம் வெறுத்துக் கூறவே அதற்காகக் கண்ணன் ஒருகால் ரோஷம் கொண்டு சும்மாக் கிடக்கிறானோ?’ என்று ஐயுறுகின்றனர். இந்த நிலையில், ‘பிராட்டியைப் புகழ்ந்து கோபம் தணிவித்து அவள் மூலமாகவே நம் இஷ்டத்தைப் பெறுவோம்’ என்று தீர்மானிக்கிறார்கள்.

இந்தத் தீர்மானத்தின் விளைவாகப் பிராட்டியைத் துயில் எழுப்புவது இப்பாசுரத்தின் பிற்பகுதியாக அமைந்திருக்கிறது. பிராட்டியின் பேரழகை வருணிக்கிறார்கள். பெருமானிடம் ‘சிபாரிசு’ செய்யக் கூடிய இவள் வாயைச் ‘செவ்வாய்’ (சிவந்த வாய்) என்று குறிப்பிடுகிறார்கள். அன்பர்களின் குறைகளை அப்பனிடம் விண்ணப்பம் செய்துகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கும் வாயல்லவா?

‘பெண்களில் சிறந்தவள் நீயே; மகாலட்சுமியும் நீயே!’ என்கிறார்கள் இந்த ஆய்ச்சியர் நப்பின்னையை நோக்கி, நப்பின்னை நங்காய்! திருவே துயிலெழாய் என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

இப்போது நப்பின்னை சொல்லுகிறாளாம். ‘சிறுமியர்களே! நான் உறங்குகிறேனா, என்ன? கண்ணபிரானால் நீங்கள் அடையவேண்டிய பாக்கியத்தைக் குறித்தல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்? நான் எழுந்து செய்யவேண்டியது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்’ இப்படி நப்பின்னை கேட்டதாக வைத்துக்கொண்டு சிறுமியர்கள் ‘நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை யெல்லாம் தரவேணும்’ என்கிறார்கள். விசிறி, கண்ணாடி முதலான நோன்பிற்கு உரிய கருவிகளை (சாதனங்களை)த் தந்தால் போதுமா? ‘உன் மணாளனையும், எங்களையும் மார்கழி நீர் ஆட்டுவிக்க வேணும்’ என்கிறார்கள். இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய் என்று முடிகிறது பாட்டு.

‘இப்போதே’ என்று இவர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது. நன்றே செய்யவும் வேண்டும், அதுவும் இன்றே, இப்போதே, செய்யவும் வேண்டுமல்லவா?



உன் தத்துவமும் தகவுமே எங்களுக்கு அரண்!


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்
செப்பம் உடையாய்! திறல்உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில்எழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மைநீர் ஆட்டேலோர் எம்பாவாய்

விளக்கம்

‘தத்துவம் அன்று தகவு’ என்று முந்திய பாட்டில் சற்றுக் கடுமையாகக் கூறிவிட்டோமே என்று கருதியவர்களைப்போல், நின்று கொண்டிருக்கும் சிறுமியர்கள் கண்ணனையே எழுப்பிப் பார்ப்போம் என்று தீர்மானிக்கிறார்கள். தாங்கள் தங்கள் வருத்தம் தோன்றப் பேசியது நப்பின்னைப் பிராட்டிக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்குமோ என்று நினைக்கிறார்கள். அதனால்தான் கதவைத் திறவாமலும் வாய் திறவாமலும் இருக்கிறாள் என்றுகூட எண்ணமிடுகிறார்கள்.

இந்த நினைப்புடன் கண்ணனை எழுப்பிப் பார்த்தும், அவனும் வாய்திறக்கவில்லை. நப்பின்னையைப் பற்றி இவர்கள் வருந்திக் கூறியது கண்ணனுக்கும் வருத்தம் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கிறார்கள். எனவே மறுபடியும் நப்பின்னைப் பிராட்டியைப் புகழ்ந்து தோத்திரம் செய்கிறார்கள். இவள் அழகையும் ஆத்ம குணங்களையும் பாராட்டுகிறார்கள். ;அம்மா! நீயே எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி யருளவேண்டும்’ என்று வேண்டிக்கொள்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.