வியாழன், 5 நவம்பர், 2015

மும்மணிக்கோவை 5

திருமாலடியவர்க்கு மெய்யனார் செய்ய

திருமாமகள் என்றும் சேரும் -- திருமார்பில்

இம்மணிக்கோவையுடன் ஏற்கின்றார் என்றன்

மும்மணிக்கோவை மொழி. .2.

திருமால் ------ ஶ்ரிய:பதியான ஸர்வேச்வரன்; அடியவர்க்கு மெய்யனார் ---- தாஸ பூதர்களான பக்தர்கள் விஷயத்தில் ஸத்யம் தவறாதவர்; செய்ய --- சிவந்த (அல்லது நேர்மையையுடைய); திருமாமகள் -- பெரிய பிராட்டியார்;

என்றும் --- எப்போதும்; சேரும் --- சேர்ந்து நிற்கும்; திரு மார்பில் --- (தமது) அழகிய மார்பில்; இம்மணிக் கோவையுடன் --- இந்த மணிகளாலான ஹாரத்துடன்; என்தன் -- என்னுடையதான; மும்மணிக்கோவைமொழி -- மும்மணிக் கோவையாகிய சொல்லை; ஏற்கின்றார் --- ஏற்றுக் கொள்ளுகிறார்.

திருமால், அடியவர்க்கு மெய்யனார் -- திருமாலா யிருத்தல் பற்றி அவர் அடியவர்க்கு மெய்யனாராகிறார். அல்லது திருமாலடியவர்க்கு மெய்யனார்-- திருமாலுடைய அடியவர்க்கு மெய்யனார் என்று ஒரே பதமாகப் பொருள் கொள்ளலாம் -- அப்போது தத்வ, ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் திருவும் மாலும் சேர்ந்த ஒரு மிதுனமே என்று நிச்சய ஜ்ஞானமுடையவர் திறத்து மெய்யன் என்ற தாயிற்று.

செய்ய -- முன் பதங்களோடு சேர்த்து அந்வயித்து ஒரு பொருளும் கொள்ளும்படி இந்தப் பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. செய்ய -- பெருமாள் இந்தப் பிரபந்தத்தைத் தான் செய்துவிட்டு எனது பிரபந்தம் என்று பெயரிட்டார் என்று ஒரு பொருள் த்வனிக்கிறது. மேலே “என்றன்” என்ற பதமும் இதை உறுதிப் படுத்துகிறது. இது பிரபந்தாரம்பத்தில் செய்யும் ஸாத்விக த்யாகத்தைக் குறிக்கும் மனோபாவம். திருமால் செய்ய, செய்யுள் அவதரித்தபடி. “செய்ய திருமகள்” -- சிவந்த பிராட்டியார் அல்லது செம்மையுடைய திரு.

என்றும் சேரும் -- நித்யவாஸம் செய்யும்

திருமார்பில் -- திருவின் சேர்த்தியால் திருமார்பு: அன்றிக்கே ஸ்வயம் அழகையுடைய மார்பு. பொன்தோய் வரைமார்பின் போக்யதையை அன்று கண்டுகொண்டன்றோ அதைத் தனக்கு ஆலயமாக அமைத்துக் கொண்டாள் பிராட்டி

இம்மணிக்கோவை -- இது எதைக் குறிக்கிறது என்று ஆராய வேண்டியிருக்கிறது. “இந்த” என்று சுட்டிக் காட்டுவதால் இந்தப் பிரபந்தத்தை என்று பொருள் கொள்ளலாம். பெருமாள் திருமார்பில் இருக்கும் ரத்ன ஹாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். அது பொருந்துமா என்று ஆலோசிக்க வேண்டும். “இன்மணிக் கோவை” என்று பாடம் கொண்டு இனிமையான ரத்னங்கள் என்றும் பொருள் கொள்ளுகிறார்கள். ஆனால், “இன்மணி” எதுகைக்குப் பொருந்தாது.

ஏற்கின்றார் -- அடியேன் பணிவுடன் ஸமர்ப்பிப்பதை ப்ரீதியுடன் அங்கீகரிக்கிறார்.

என்றன் -- என்னுடையதான, அகங்காரமமகாரங்களையறவே யொழித்த ஆசார்யன் “என்றன்” என்று பேசினால் “என் சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்து” என்ற நம்மாழ்வார் அருளிச்செயலை அடியொற்றிப் பேசியதாகக் கொள்ள வேண்டும்.

மும்மணிக்கோவை மொழி -- இந்தப் பிரபந்தத்தின் பெயர் இருப்பதைக்கொண்டு ஓர் அர்த்தம் இருக்கவே இருக்கிறது. “மொழி” என்பது வடமொழி தென்மொழி என்ற பாஷைகளில் போல பாஷையைச் சொல்லும். நவ மணிமாலையின் கடைசிப் பாசுரத்தில்,

“அந்தமில் சீர் அயிந்தைநகர் அமர்ந்த நாதன்

அடியிணைமேல் அடியுரையால் ஐம்ப தேத்திச்

சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்

செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்து”

என்று அருளிச்செய்திருப்பதை நோக்கின், “ இம்மணிக் கோவை மொழி” என்றவிடத்து, ஸம்ஸ்கிருதம், பிராக்ருதம், தமிழ் என்ற மூன்று மணிகள் போன்ற மொழிகளின் கோவை யொன்று இப்பிரபந்த நிர்மாணத்தால் பூர்த்தியாயிற்று என்று பாசுரமிடுவதாகத் தெரிகிறது. (2)

செவ்வாய், 3 நவம்பர், 2015

மும்மணிக்கோவை 4

அணியமராக அலங்கலாய் இலங்கி -- “அணியமராகத்து அலங்கலாயிலங்” என்றும் பாடம் உண்டு. பொருளில் பேதமில்லை. “அணி” என்பதற்கு அழகு, ஆபரணம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. “ஆபரணங்கள் எல்லாம் அமர்ந்து நிறம் பெற விரும்பும் திருமார்பு” என்று பொருள் கொள்வது உசிதம். ஆகம் பிராட்டியின் அகம் வீடு, பெருமாளது ஆகம் (மார்பு). ஆகம் -- ஹ்ருதயஸ்தானம்.

அலங்கலாய் இலங்கி -- அலங்கல் -- ஓர் ஆபரணம். அலங்காரமாய் ஒளி கொடுத்துக்கொண்டு, ஆபரணங்களுக்கு மேல் ஆபரணமாய் விளங்கி; “உன் திருமார்வத்து நங்கை” என்கிறபடியே.

நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க -- உன் ரூப - குண ஸௌந்தர்ய - லீலாதி ஸர்வப்பிரகாரங்களுக்கும் ஒன்று விடாமல் தன் ரூபகுண ஸௌந்தர்ய லீலாதி ஸர்வப் பிரகாரங்களும் ஒத்திருக்கும்படி. “ஏற்க” என்பதால் பிராட்டி ஸ்வேச்சையாலே பெருமாளுக்கு ஒத்த பிரகாரங்களைக் கொண்டு அநுரூபையாய் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது. “யத் -- பாவேஷு ப்ருதக் -- விதேஷு அநுகுணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ”. “தன்படி” “நின்படி” என்று வேற்றுமை இருக்கச் செய்தேயும், அவற்றுள் ஒற்றுமையும் ஐகரஸ்யமும் “ஏற்க” என்பதால் கூறப் படுகின்றன. “ஸஹ - தர்ம -சரீ” என்றும், “துல்ய -- ஸீல வயோ - வ்ருத்தாம்” என்றும் மஹர்ஷிகள் கொண்டாடும் ஒற்றுமையன்றோ˜ கடலுக்கு இக்கரையிலிருந்து அவன் “மித்ர - பாவேந” என்றால், கடலுக்கு அக்கரையிலிருந்து அவள் “தேந மைத்ரீ பவது தே” என்று சொல்லும்படி ஒத்த மனோவியாபாரங்களையுடையவர்கள்.

அன்புடன் உன்னோடு அவதரித்தருளி -- அவன் அவதாரம்போல இவள் அவதாரமும் கிருபையின் கார்யம் என்று காட்ட “அருளி” என்று பிரயோகிக்கிறார். அவனுக்குப்போல இவளுக்கும் பூலோகத்திற்கு வருவது ஒரு அவதரணம் -- மேல் உலகத்திலிருந்து இழிதல். அன்புடன் -- அன்பினால்; அவனிடத்து அன்பினாலும் சேதனர்களான நம்மிடத்து அன்பினாலும் பிராட்டி அவதரித்தருளுகிறாள். இறையும் அகலகில்லாதவளாகையால் அவனை விட்டுப் பிரிந்திருக்க ஸஹியாதவளாய் அவதரிக்கிறாள். அவளும் வந்தால்தானே அவதார கார்யம் நிறைவேறும்˜ “உன்னோடு” என்னும் பதம் இருவரும் சேர்ந்து அவதரித்தபோதுதான் தத்துவபூர்த்தி என்பதைக் காட்டுகிறது. ஒருவர் மட்டும் அவதரித்தால் பரதத்வத்தின் ஏகதேசந்தான் அவதரித்ததாகும். ஆகையால் உன்னோடு அவதரித்தருளி.

வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து -- மிக ரஸமான சொற்றொடர். யாரிடம் கேட்டு யாரைக் கேட்பித்து என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன. இதற்கு மூன்று அர்த்தங்கள் கொள்ளக் கிடக்கின்றன. முதலாவது, சேதனன் வேண்டுரை (பிரார்த்தனையை) அவனிடம் கேட்டு, எம்பெருமான் திருச்செவிகளில் அவைகளைக் கேட்பித்து, என்பது; இரண்டாவது, எம்பெருமான் சேதனர்பக்கல் வேண்டும் (எதிர்பார்க்கும் நிலைகளைப் பற்றிய) உரையை அவனிடம் கேட்டுத் தன் பிரஜைகளான சேதனர்களுக்கு வாத்ஸல்யத்தால் அதை அறிவிக்கும்பொருட்டு அவர்களைக் கேட்பித்து என்பது; மூன்றாவது, எம்பெருமானிடம் கேட்ட வசனங்களையே அவன் அந்த நிஷ்டையினின்றும் தவறினதுபோல் காணும் ஸமயங்களில் அவனையே கேட்பித்து என்பது. இந்த மூன்றும் நம்மாசார்யோத் தமனது ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் பொதிந்து கிடக்கும் அர்த்த விசேஷங்கள். த்வயாதிகாரத்தில் இந்த பங்க்திகள் காணக்கிடக்கின்றன. “ஶ்ருணோதி -- ஶ்ராவயதி” என்கிற வ்யுத்பத்திகளில் “ஸாபராதரான அடியார்களை ஸர்வேச்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருளவேணும் என்று இப்புடை களிலே ஆச்ரிதர்களுடைய ஆர்த்தத்வனியைக் கேட்டு ஸர்வேச்வரனுக்கு விண்ணப்பம் செய்து, இவர்களுடைய ஆர்த்தியை சமிப்பிக்கும்” என்றதாம். *** “ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம:” இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு “ ச்ருணுசாவஹித: காந்த யத்தே வக்ஷ்யாம் -- யஹம் ஹிதம் ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம்ரக்ஷ்ய: சரணாகத:” என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாப்போலே அவஸரத்திலே கேட்பிக்கும் என்னவு மாம். ஸர்வேச்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு “மித்ரம் ஔபயிகம் கர்த்து”” இத்யாதி களிற்படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம்” பெருமாளிடத்தில் வால்லப்யத்தால் (சலுகையால்) அவனையும் நம்மிடம் வாத்ஸல்யத்தால் நம்மையும் பிராட்டி கேட்பிக்கிறாள் என்றதாயிற்று.

ஈண்டிய வினைகள் மாண்டிட --- ஜீவாத்மாக்களிடம் சேர்ந்துள்ள எல்லா வினைகளும் வேரோடு அழியும்படி, முயன்று -- ஸர்வப்ரகாரத்தாலும் எப்பாடு பட்டாயினும் வினைகளை மாள வைத்து, தன்னடி சேர்ந்த -- தனது, அதாவது பிராட்டியினுடைய சரணங்களை ஆச்ரயித்தவர்களான தமர் -- பாகவதர்கள்; பிராட்டியால் தன்னுடைய வர்கள் என அங்கீகரிக்கப் பட்டவர்கள்.

உனை அணுக -- “அணுக நிற்கு” என்றதால் பிராட்டி எம்பெருமானோடு இடைவிடாது நிற்பது அவனை ஆச்ரயிக்கிற வர்களை வாழ்விக்கவே. “அணுக” என்பதற்கு அணுகுவதற் காகவே என்று அர்த்தம்; அல்லது அவர்கள் உன்னை அணுகுங் கால் உன் பக்கத்தில் ப்ராப்யகோடியில் (அடையவேண்டிய நிலையில்) நிற்கிறாள் என்னவுமாம்.

நின்னுடன் சேர்ந்து -- உன்னோடு ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஒரு சேர்த்தியாய் இருந்து

நிற்கும் -- ஸ்திரமாய் எழுந்தருளியிருக்கும்

நின் திருவே -- உனது தேவியே, உன்னுடன் ஒருபடி யாய் நிற்கக் கூடியவள் பிராட்டி ஒருத்தியே தவிர வேறு எவருமில்லை என்றபடி.

“நின்திரு” -- உன்னையிட்டு அவள் திரு. உனக்கும் திருவாய் நிற்பவள்; திருவைத் தருபவள்.

நின் திருவே அருள்தரும் என்று (விற்பூட்டாக) அந்வயித்துக் கொள்வாருமுண்டு என்பது முன்பே கூறப்பட்டது. அருள் என்னும் சீர் வடிவெடுத்தாற்போன்ற திருவாலல்லது வேறு யாரால் அருள் தர முடியும்˜

(பாசுரம் 2 தொடரும்)

திங்கள், 2 நவம்பர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 15

இன்றைய (02-11-2015)"சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி விவரித்தது வால்மீகி வலியுறுத்தும் வர்ணாச்ரம தர்மம். வழக்கமாக, உபந்யாஸம் முடிந்ததும் அதன்பிறகு அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களைத் தவிர்ப்பது அடியேன் வழக்கம். ஆனால் இன்று அந்த உபந்யாஸத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு எழுந்த சில சந்தேகங்கள் மற்றவர்களுக்கும் தோன்றலாம் என்பதாலே எடிட் பண்ணாமல் முழுவதையும் இங்கே அப்லோட் செய்திருக்கிறேன்.

உபந்யாஸம்

http://1drv.ms/1WrDdwN 

http://www.mediafire.com/listen/wmocnklzbj26092/015_SSR_%2802-11-2015%29.mp3

என்ற இரு இடங்களிலும் இருக்கிறது.

All the 15 upanyasams so far are available for download at

https://www.mediafire.com/folder/o3d7a1sm0ryp0/Natteri_-_SSR 

and also at

http://1drv.ms/1PUEpUf

ஞாயிறு, 1 நவம்பர், 2015

மும்மணிக்கோவை 3

தெருள்தரநின்ற:-- இதுவும் ஓர் அர்ச்சாவதார ரஹஸ்யம். தன்னைக் கிட்டி வழிபடுவோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் திவ்யமங்கள விக்ரஹங்களை ஞானம் சிறிதுமின்றியே வந்து ஸேவிப்பவர்களுக்கும் அந்த ஸேவையினாலேயே ஞானம் உண்டாகிறது என்கிற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது. தர -- முக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்க ஸங்கல்பித்திருக்கிறான் என்று த்வனி.

நின்ற --- வந்துதோன்றி மறைந்துபோகும் ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் போலன்றிக்கே, ஞானம் நல்குவது என்ற த்ருடமான ஸங்கல்பத்துடன் ஸ்திரமாய் என்றென்றைக்கும் நிற்கிறான் என்று கூறப்படுகிறது.

தெய்வநாயக -- அவன் தெய்வக் குழாங்கள் கைதொழ நிற்கும் தனிப்பெரும் நாயகன். அப்படியே அழைக்கிறார்.

நின் -- “நின்னருள்” என்பதால் மற்றோர்களின் அருள் விலக்கப்படுகிறது. “அவ்வருளல்லன் அருளுமல்ல” (நம்மாழ்வார்). இதைக் குறிக்கவேண்டி பாசுரத்தில் இரண்டாவது அடியில் “நின்” என்னும் பதம் தனியான சொல்லாக விளங்குகிறது. “தெய்வநாயக நின்” என்று அசைக்கும் இசைக்கும் சேர நிறுத்தி அனுபவிப்பதில் ஒரு ரஸம் காண்கிறது.

அருள் -- வடமொழியில் “தயா”, “க்ருபா”, “கருணா” “அநுகம்பா” முதலான சொற்களின் பொருள்களை யெல்லாம் கொடுக்கவல்ல ஒரு தமிழ்ச் சொல் இது.

அருள் எனும் சீர் : சீர் என்றால் குணம். இந்த சொற்றொடரால் “அருள் ஒன்றுதான் குணம்; எம்பெருமானுடைய மற்ற குணங்களெல்லாம் அருளின் ஸம்பந்த மிராவிடில் தோஷங்களேயாவன” என்கிற தத்துவார்த்தத்தைக் காட்டுகிறார்.

ஓர் அரிவையானதென --- ஒப்பற்ற ஒரு ஸ்திரீ ரூபம் கொண்டதுபோல. குணம் வேறு, ரூபம் வேறு என்று தத்துவம் இருக்க, இங்கே குணமே ரூபமானது என்று ரஸமாகப் பேசுகிறார்.

என -- என்று சொல்லும்படியாக. பிராட்டி அருள் நிறைந்தவளோ அல்லது அருள் பிராட்டியாக வடிவு கொண்டதோ என்று தர்க்கிக்கும்படி இருக்கிற நிலை காட்டப்படுகிறது. ஸந்தேஹாலங்காரம் போலும் இது.

எமக்கு -- சேதனர்களுக்கு; மனுஷ்யர்களுக்கு. அவர்களுள் ஒருவராய்த் தம்மையும் கூட்டிக் கொண்டு பேசுகிறார்.

இருள் செக -- எல்லாவிதமான இருளும் நீங்க. உண்மையான தத்துவஹித புருஷார்த்தங்கள் எவை என்று தெரியாமல் துன்புறும் நிலை நீங்க. பிரகாசத்தினால் எப்படி இருள் இருந்தவிடம் தெரியாது போய் விடுகிறதோ அப்படியே நம்முடைய அஜ்ஞானமாகிற இருள் அடியோடு நீங்கும்படி செய்யவல்ல இன்னொளி விளக்கு பிராட்டி.

இன்னொளி விளக்கு -- கண்ணைக் கூசச் செய்யும் கொடுஞ் சுடரன்று; இனிமையான ஒளியுள்ளது. இருட்டில் தவிப்பவர்களுக்குத் தீபம் கிடைத்தால் என்ன ஸந்தோஷம் ஏற்படுமோ அதை “இன்” என்பதால் குறிப்பிடுகிறார்.

ஒளி விளக்கு -- மங்காத சுடர். “நந்துதலில்லா நல்விளக்கு” என்று நான்காவது பாசுரத்தில் கூறுகிறார். விளங்க வைப்பது விளக்கு.

ஒளி விளக்கு -- ஏற்றிய தீபம். அப்படிப்பட்ட தீபம் கிடைத்தபிறகு இருட்டைப் போக்குவதற்கு ஓர் உபாயம் தேடவேண்டியதில்லை. அதுபோலப் பிராட்டியின் கடாக்ஷம் பெற்றால் ஞானம் தானாக வரும் என்றபடி. அவள் “சைதன்ய - ஸ்தன்ய - தாயிநீ” அன்றோ˜ விளக்கு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுவது போலப் பிராட்டி தன்னையும் காட்டிக் கொண்டு எம் பெருமானையும் நமக்குக் காட்டிக்கொடுக்கிறாள்.

மணிவரையன்ன நின்திருவுருவில்---”பச்சைமா மலை போல் மேனி” என்றும் “கருமாணிக்கமலை” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்ததைச் சேர்த்து “மணி - வரை” என்று பாசுரமிடுகிறார். “திரு - உரு” “மணி - வரை” என்றபோது “திரு” மணியாகவும், “உரு” வரையாகவும் முறையே உத்ப்ரேக்ஷிக்கப்படுகின்றன. பெருமாளுக்குப் பிராட்டிதான் ஒளி பயக்கிறாள். “ப்ரபவாந் ஸீதயா தேவ்யா”, “தீபஸ்த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ் தே” என்று ஸ்வாமியின் அருளிச் செயல்கள்.

(தொடரும்)