புதன், 25 ஆகஸ்ட், 2010

தேசிகப்ரபந்தம்

ஸ்ரீ ஆர்.கேசவ அய்யங்கார் பதிப்பித்த “தேசிகப்ரபந்த”த்தின் முன்னுரை.

தேசிகப்ரபந்தம் : தேசிகமாலை

திருமாலடியார்களால் திரட்டித் தொகுக்கப் பெற்றுத் திருமுறையாய்த் திகழும் வேதாந்த தேசிகர் அருளிச் செய்த தமிழ்ப்பாடற்ப்ரபந்தங்களும் மணிப்பவளப்ரபந்தப்பாடல்களும் தேசிகப்ரபந்தம் என்னப்பெறும். இப்ரபந்தம் ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தத்தோடு சேர்த்து ஓதப்பெறும் சீர்மை உடையதால் தேசிகப்ரபந்தம் என்னும் திருநாமம் பெற்றுள்ளது. திருமால்தானே அருள்மிகுத்த தனது சிறந்த வடிவமாகிய தேசிக வடிவத்தில் இவரது மனத்திலும் வாக்கிலும் குடிகொண்டு இவர் வாயிலாகப் பாடியருளியதால் இது தேசிகப்ரபந்தம் என்று நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தோடொத்த சிறப்பு மறையாய்த் திகழாநின்றது. “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம், உள்ளத்தெழுதிய தோலையிலிட்டனம்”1 என்ற இம்மஹாதேசிகர் திருவாக்கால், தேசிகப்ரபந்தம் என்றது திருமாலார்தாமே தேசிகராய் உள்ளத்தில் எழுதியதை இத்தேசிகர் ஓலையிலிட்ட ப்ரபந்தம் என்ற சீரிய பொருள் காண்க. சடகோபரை “மாமறையை வினவாதுணர்ந்த விரகன்2 என்றார் கம்பர். இருமாலையிலும் “விரகு” என்றதன் பொருள் ஒன்றாதல் காண்க. “ஓதாதோதும் வேதாந்தாரிய னுதயம் செய்திடுநாள்”3 என்ற இம்மஹாதேசிகர் விஷயமான திருநாட்பாடலும் இப்பொருளதே. இப்பரபந்தம் தேசிகமாலை என்னவும் பெறும். வேதாந்த தேசிகர் பாடியருளிய செய்யதமிழ் மாலையாதலால் அப்பெயர் பெற்றது. ‘வேதாந்த தேசிகர்’ என்றதற்கு உபய வேதாந்ததேசிகர் என்று பொருள். உபநிடதமும் திருவாய்மொழியும் உபயவேதாந்தமாம். உபயம் என்றதற்கு இரண்டு என்று பொருள்.

             வேதாந்த தேசிகன் என்பது அத்தனுயர் வேங்கடமாலின் திருநாமம். அதை அன்னவன் இவர்க்கருளி இவர்வாயிலாய் உபயவேதாந்தத்தின் ஒருமை விளங்கப் புரிந்த பேரருளே இவரது ப்ரபந்த வடிவம் கொண்டுள்ளது. “நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி! காவல! தூப்புற் குலத்தரசே!”4 என்று பிள்ளையந்தாதிப்ரபந்தகாரர் இவரது உபயவேதாந்த தேசிகத் திருவைக் கண்டமை காட்டியபடி. “பாரினிலரங்கபதி யாரருளிற் பெற்ற, பேருபய வேதாந்த இறைமையுறு கீர்த்தி”5 என்று இவரது திருவருள் பெற்ற மெய்யடியாராகிய ஸப்ததிரத்நமாலிகாகாரர் இவருடைய இருமறை இறைமையைப் போற்றித் தொழுதவாறு. “பேசுபய வேதாந்த தேசிகன் தாள்தொழுவல் பேரழகனூல் தழையவே”6 என்றார் அழகர்பிள்ளைத் தமிழ்நூலார். இம்மஹாதேசிகரது உபயவேதாந்த தேசிக கீர்த்தியைப் பாடியுள்ள படிகள் பிறவும் கண்டுகொள்க. ஆதலால் தேசிகப்ரபந்தம் என்பது உபயவேதாந்த தேசிகப்ரபந்தம் என விரியும். இருமறையும் ஒன்றித் திகழும் ஒருமையும் இனிமையும் விளங்கும் சீர்மை இப்ரபந்தத்தின் தனிச்சிறப்பாகும். அஃதே இங்குச் சிறிது விளக்கப் பெறும். இதன் பரப்பு ‘ப்ரபந்தஸார’ உரையில் விரித்து விளக்கப் பெறும்.



1. தேசிகமாலை அதிகாரஸங்க்ரஹம் 56; 2 சடகோபரந்தாதி 44; 3 பிள்ளையந்தாதி 17;  

4 ஸப்ததிரத்நமாலிகா 31 (தமிழ் செய்தது) 5 திருமாலிருஞ்சோலை அழகர்பிள்ளைத் தமிழ் பழிச்சினர்ப் பரவல் 10.



                   …………………தொடர்வது --  ப்ரபந்த வுணர்வு : பொது: சிறப்பு :

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தேசிகப்ரபந்தம் ---

ஸ்ரீ ஆர்.கேசவ அய்யங்கார் பதிப்பித்த “தேசிகப்ரபந்தம்” நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை இங்கு தினமும் பகுதி பகுதியாக வெளிவரும். அதன் முதல் பகுதியான தேசிக மாலை இங்கே.

( ஒரு முக்கிய வேண்டுகோள். இதைத் தொடர்ந்து வரும் பாக்களின் கடின நடையைப் பார்த்து பயந்து படிப்பதைத் தவிர்த்து விடாதீர்கள்.அடியேனுக்கு முற்றும் புரிந்து இதை இங்கு எழுதுவதாகவும் நினைத்து விடாதீர்கள். தமிழில் ஆழங்கால் பட்டவர்கள் சிலர் ---- கடல் கடந்து வாழ்பவர்கள் --- கண்டிப்பாய் இதற்கு எளிய நடையில் விளக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தவிர, இந்த 21 பாட்டுக்களைத் தொடர்ந்து எளிய தமிழிலே தொடரும் ஸ்ரீ ஆர்.கே. ஸ்வாமியின் பார்வை பிரமிக்க வைக்கிறது. இந்த “தேசிகப்ரபந்தம்” வைணவர்களுக்கு மட்டும் உரியதன்று. இது ஒரு பொது மறை என அவர் நிலை நாட்டியுள்ளதை அறிஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் படித்து இன்புற்று ரஸிக்க வேண்டும். இதனாலேயே, அடியேன் குமாரன் திருமண வேலைகளுக்கு இடையிலும் கிடைக்கும் அவகாசத்தில் அந்த அற்புதமான முன்னுரையை இங்கு இட ஆரம்பித்திருக்கிறேன். மாறன் தாள் போற்றும் தேசிகனின் ப்ரபந்தமிதை மாறன் பெயருடையார் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதிடுவார் என்ற திடமான நம்பிக்கையுடன் தொடர்கிறேன்) 

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

தேசிகப்ரபந்தம்.

பேரிரும் புகழி னாமம் பெரியநம் பெருமாள் பாதம்
சீரிரும் புகலி னாமஞ் சீரிய சடகோ பன்தாள்
சேரிரும் புனித மூர்த்தஞ் செறிந்ததொல் செல்வப் பேறே
தேரிரும் புரிவொ லித்த தேசிக நாமம் போற்றி.                                        .1.

மறையேறு மெய்ய மதியேறு செய்ய மகிழேறு துய்ய மொழியி
னிறையேறு நீதி நிறையேறு நீடு நிலையேறு வீடு நிகழ
அறையேறு மார்வ முறைமங்கை யண்ண லடியாறு தேறு மறைமா
விறையேறு கந்த முமிழ்சந்த முந்த விரிமாலை வீறு பொலிக.                     .2.

ஓணப்பர னேறத்திரி கோணப்பெரு மாயன்
காணப்பர னேரிப்புவி காணக்கவி வாதித்
தூணப்பர னேரொப்புயர் தூப்புற்பர னெண்ணின்
மாணப்பர னாறுந்தமிழ் மாலைப்பரி யோர்வாம்.                                           .3.

வடமலையம் பதியனருள் வரதனடை வடமறையுஞ்
சடமுனியுந் தமிழினடைச் சடகோப முனிமறையுந்
திடமுடைய தனதருளெண் திகழடியி னொருநடையென்
றிடமறிய நிகமமுடி யிறைநடையில் விளங்கினனே.                                         .4.

சேமமதாந் திருமாறன் கருணையெனுந் திருக்கண்டு
பூமகளா ருறைமார்பன் பூங்கழலே தாங்குமுடி
நாமமதே சூடிமறை நாறியசெந் நாப்பகவர்
தோமறுதூ மாதவர்க ளோதுதமி ழோங்குகவே.                                              .5.

சாலுநால் வேத வுச்சிச் சாரமாய்ச் சமய நீதி
நூலுமாய் நிமல னோது நுடங்கிசைச் சுருதி யாகி
மூலமா மனுவு மாகி முத்தமிழ்ச் சித்தி யாகி
சீலமால் மல்கு செல்வத் தேசிக மாலை வாழி.                                              .6.

பண்புடைப் புனித வேதப் பயன்கொணா லாயி ரப்பே
ரெண்புகழ்ப் புனித னாறெண் ணிறுவிவண் திருவி னின்ப
னெண்பெருக் கந்ந லத்தா ளிறையரு ணிலையி லோங்கித்
தெண்புனற் பள்ளி நாறுந் தேசிக மாலை போற்றி.                                       .7.

கூவுபூங் குயிலின் கீதங் குலவுபூங் கலையி னாதம்
பாவுபூங் கவிக ணாறிப் பழமறை புதுமை பூக்கத்
தாவுபூங் கழலின் வண்ணத் தண்ணல்தாள் மருவி நாறு
மூவரோங் கொருவ ராகு முத்தமிழ்த் தலைவர் போற்றி.                                  .8.

கூட்டிய மறையி னுள்ளங் கூர்மதி யொளியிற் காட்டி
நாட்டிய நலங்கள் யாவும் நயந்தரு நடைகொ ணல்ல
பாட்டெனும் பழைய வேதப் பசுந்தமிழ் பயந்த வள்ளல்
ஊட்டிய நறுமை யூறு முத்தம மாலை காண்பாம்.                                             .9.

சித்தசித் தீச்சுரச் சீர்தரும் பேருடைப்
பத்துருப் பெற்றசம் பத்தெனுஞ் சித்தினேர்
முத்தமிழ் நித்தமும் புத்தெழில் பூத்தெழு
மித்தமிழ் நாறுநா வீறுநாந் தேறுவாம்.                                                           .10.

வேய்ங்குழ லூதிய வேதிய னோது
பூங்கழ லாயிரம் பூத்தபி ரானா
யாங்கரு ளாயிர நான்கும லர்ந்த
பாங்கிர தப்பிர பந்தம்பு ரந்தான்.                                                                  .11.

பேசிரு மாமறைத் தேசிக ராயே
தேசுய ராரணத் தேவது தானே
காசினி யோரிறை காணிறை நீதி
வாசக மாமொழி வாய்மொழி தந்தான்.                                                           .12.

ஆரரு ளேபொழி யாரற மென்னுந்
தேரரு ளூர்ந்துயர் தேவிது வென்றும்
பாரிரு ணீக்கொரு பாற்கர னென்றுஞ்
சீரியர் போற்றொரு தேசிகர் வாழி.                                                                 .13.

வித்தெனும் வேங்கட வித்தகன் தானே
யத்தனு யர்த்தத னத்தக வோக்கத்
தொத்தனெ னத்தன தொண்சர ணீதிச்
சித்தியி னத்திரு முத்திசி றந்தான்.                                                                 .14.

எந்தைதிரு வரங்கநக ரப்பன் தானே
    எண்ணியொரு பேருருவ மிவற்கே யாகத்
தந்துபய வேதாந்த குருவா மத்தன்
     தனியிறைமைப் பேரதனை மகிழ்ந்து புந்தி
முந்தைமறை மொய்யவழி மொழிநீ” யென்று
      முத்தமிழு முதுமறையுஞ் செறிய நல்குஞ்
சந்தமிகு தமிழ்மறையோன் தூப்பு லண்ணல்
     சகமகிழும் பசுந்தமிழா நந்தந் தந்தான்.                                                       .15.

முற்குரவர் சென்றவழி தான்பின் செல்லு
      முத்தமனாய் மறைவகுக்கு முரிமை சான்ற
நற்குருவெண் ணலந்திகழ்மா லுகந்த தீர்த்தர்
      நாவலர்செந் தமிழ்மறைநா லாயி ரந்தான்
பிற்குரவர் கடைப்பிடித்துப் பிறங்கு பண்பிற்
    பிறழ்வறவின் றளவுமதே யோது நீதி
சிற்குணர்கள் கொண்டுதொழு மாறு கண்டு
     சிந்தாதவ் வகைதொகையெண் சேமிப்பாரே.                                               .16.

ஆதிமுத லாழ்வார்கள் மூவ ரோடும்
     அலகிலிறை மழிசைவருஞ் சோதி யோடும்
ஓதுபுகழ் வேதமகிழ் மாற னோடும்
     ஒண்மதுர கவியொடுகோ ழியர்கோ னோடும்
சோதிதிகழ் விட்டுசித்தன் கோதை யோடும்
     தொண்டரடிப் பொடியொடுபாண் பெருமா ளோடும்
வேதவொலிக் கலியனொடு முத்தி நல்கும்
     எதிராச ரென்றிவர்தா ளெண்ணு வாமே.                                                         .17.

நலத்திரு வேதவி யாதபதம்
செலுத்தொரு கிழமைத் தலைமைதிகழ்
குலத்திரு கிளத்தோர் குருத்திருவாய்
நிலத்தொரு தூப்பு லிறைநிலைத்தான்.                                                              .18.

நண்ணிய மறைமுடி யண்ணலவன்
எண்ணொடு வகைதொகை யெண்ணுமுறைக்
கண்ணிய மதனிற் கருதமிகு
புண்ணிய வாய்மொழி பூத்தனவே.                                                                     .19.

மாமலர் மங்கைம ணாளன்பரன்
ஆமவ னற்சர ணாறுபயன்
தோமறு தொண்டதி னோயறுவார்
தூமதி யோர்களி தோர்வர்களே.                                                                          .20.

ஓர்ந்திவை யுண்மையொ ழுக்கமுறத்
தேர்ந்தரி திண்சரண் சேர்தவமே
கூர்ந்தவ னங்கிரி கூடிரதம்
மாந்துந லந்தரு மாலையிதாம்.
                                                                               .21.

 

………………………தொடர்வது………….. தேசிகப்ரபந்தம் : தேசிகமாலை …..

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஸ்ரீதேஶிகப்ரபந்தம்

அடியேன் குமாரனின் நூதன க்ருஹப்ரவேஸம் நேற்று சென்னை பெருங்களத்தூரில். ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. இன்னும் ஒரே வாரத்தில் அவனது கல்யாணம் என்பதால் அகத்து மட்டும் என முடிவு செய்து நடத்தினோம். எப்படியோ கேள்விப்பட்ட பெரியவர் ஒருவர் அங்கு வந்திருந்து வாழ்த்தி ஒரு அருமையான பரிசு ஒன்றையும் அளித்தார். விழாவில் பரிசளிப்பதில் என்ன ஆச்சரியம் ? அது 1952ல் அடியேனது அபிமான ஸ்ரீ ஆர். கேசவ ஐயங்கார் பதிப்பித்த "தேஶிக ப்ரபந்தம்" நூலில் அவர் எழுதிய முன்னுரை என்பது அந்தப் பரிசின் விசேஷம். 71 பக்கங்கள் உள்ள அந்த முன்னுரையை நேற்று இரவு படித்தேன். அதை உடனடியாக இங்கு வெளியிட ஆசை. ஆனாலும் கல்யாண வேலைகளால் அது செப்டம்பர் 15க்குப் பிறகு இங்கு ஒரே தவணையில் வரும்.

"பேரிரும் புகழி னாமம் பெரியநம் பெருமாள் பாதச்
சீரிரும் புகலி னாமஞ் சீரிய சடகோ பன்தாள்
சேரிரும் புனித மூர்த்தஞ் செறிந்ததொல் செல்வப் பேறே
தேரிரும் புரிவொ லித்த தேசிக நாமம் போற்றி.

மறையேறு மெய்ய மதியேறு செய்ய மகிழேறு துய்ய மொழியி
னிறையேறு நீதி நிறையேறு நீடு நிலையேறு வீடு நிகழ
அறையேறு மார்வ முறைமங்கை யண்ண லடியாறு தேறு மறைமா
விறையேறு கந்த முமிழ்சந்த முந்த விரிமாலை வீறு பொலிக.

என ஆரம்பித்து 21 பாடல்களில் நிறைவு பெறுகின்ற தேசிக மாலை யைத் தொடர்ந்து வரும் அற்புதமான விரிவுரையைப் பரிசாக அளித்தவருக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்?
இதைத் தட்டச்சிக் கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த  உறவினர் ஒருவர் "ஆர்.கே.ஸ்வாமி பதிப்பித்த "ப்ரபந்த ஸாரம்" நூலை எப்போதோ தேவகோட்டையில் வக்கீல் ஜகன்னாத அய்யங்கார் அகத்தில் படித்தேன். அதை தேடிப் பார்த்து எழுது. ஆர்.கே. எழுத்தில் அது மகுடம் " என்று சொல்கிறார். யாரிடமாவது இருக்கிறதோ?