சனி, 27 ஜூன், 2009

நாரதீயம்

மீண்டும் மதுரகவி ! நாரதீயம் என ஒரு நூல் அவர் இயற்றியது. சனக முனிவரிடம் நாரதர் கேட்டுத் தெரிந்து கொள்வதுபோல் சில புராண இதிஹாசங்களை நெஞ்சையள்ளும் கவிகளால் மதுரகவி ஆக்கியுள்ளார். நூலுக்கு ஒரு மதிப்பீடு. நூலைப் போன்றே அருமையாக உள்ளது. அனேகமாக அடுத்த வாரத்திலிருந்து 'நாரதீயத்'திலிருந்து வாமனாவதாரம் என்னும் பகுதியை இங்கோ அல்லது அடியேனது வேறு வலைப் பக்கங்களிலோ தினம் கொஞ்சமாக (அதற்கு திரு கம்பன் என்ற ராமன் எழுதியுள்ள உரையுடன்) இடலாம் என எண்ணியுள்ளேன். அதற்கும் ஒரு முன்னோட்டம் போல் நாரதீயத்துக்கு ...... எழுதியுள்ள ஆய்வினை இங்கு pdf ஆக இணைத்துள்ளேன். கீழே உள்ள சுட்டியில் க்ளிக்கி அதை ரசிக்கலாம். ஆய்வு செய்தவர்

ஆமத்தூர் சுதர்ஸன வெங்கட்ராம சுந்தரராஜ அப்பன் ஸ்ரீநிவாசன் (ஒருவர்தான். அடியேன் குமாரனுக்கு குடும்பத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த அவனுக்கு நான் வைத்த பெயரே இப்போது கே.பாலசந்தரின் 'இருகோடுகள்' தத்துவப்படி இவர் பெயரினால் சுருக்கமாகி விட்டது. என்னது ! பையன் பேர் என்னவா ? இப்போ அவன் தோளுக்கு மிஞ்சினவன். அவனிடம்தான் கேட்கவேண்டும்)

naratheeyamreview
naratheeyamreview....
Hosted by eSnips

மீண்டும் உ.வே.சா. பிறக்க வேண்டும்.

ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் ?
அதுவே கனிந்து அங்கிருந்து
அதுவே நழுவிஅது விழுந்து
அதுவே கவியாய் நற்சீராய்
அதுவே அமைந்ததென் றக்கால்
முதுமா மறைக்கு முதல்வோனும்
முகுந்தன் எனுமிந் திரனும்
புதிதாம் என்ன அதிசயிப்பார்
புத்தகத் தைக்கற் றோரே.
(விலக்ஷணானந்த ஸ்வாமிகள்)
அந்தக் கவிதை எப்படி உருவாகிறது? அதன் பயன் என்ன?
பாடிய பாடகன் ஓடி மறைந்தும்
பாட்டால் அவனை நாட்டார் அறிவார்
அதுவே கவியின் அழியா உயிராம்
..... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆர்வத் தீயால் அன்புள் ளுருகி
அருவி போல வருவது பாட்டாம் !
குரலும் சுருதியும் கூடிக் குழைந்து
கமகமும் தாளமுங் கனிவுறப் பொருந்தி
பாட்டின் கருத்துப் பளிச்சென விளங்கக்
கேட்டா டுள்ளங் கிளர்ச்சி கொள்ள
உணர்ச்சி ததும்ப உள்ளங் குழைய
நவரஸ பாவனை நயமுற நாட்டி
பரவையும் வசந்தப் பறவையும் போலக்
கலையின் னுள்ளம் கடவுளைக் காட்ட
வீடு திருந்த நாடு சிறக்கவே
இயல்பா யிசைத்தல் இசையென லாமே !
இன்பப் பொருளே இசையின் பயனாம் !
(கவியோகி சுத்தானந்த பாரதி)
எல்லாராலும் ஏற்றப் படும் கவிதை உலகிலே ஒப்பார் மிக்கார் இன்றி நினைத்தநேரத்திலே,நினைத்தபொருளைப்பற்றி அருவியாய், கவிதைகள் ஆயிரம் ஆயிரமாய்ப் பொழிந்தவர் கம்பம் அனுமந்தன்பட்டி மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார். (ஆசு கவி எனப் படாமல் மதுரகவி விருது மட்டும் கொடுத்ததும் ஏனோ தெரிய வில்லை. ) மேலே சொன்னபடி இவரது ஒரு லக்ஷத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் அமைந்திருப்பது பிரமிக்க வைப்பது. படைத்தவன் அவரை அந்த நாள் மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே படைத் திருந்தால் அவர் உலகப் பெருங் கவிகளுள் முதல்வராகி, இன்று நமக்குத் தெரிந்த சக்கரவர்த்திகளையும், பேரரசுகளையும் வெறும் குறுநில மன்னர்கள் ஆக்கியிருப்பார். ஆனால், இவர் பிறந்து வாழ்ந்ததோ, அவரே வருத்தப்பட்டபடி ஆங்கில மோகத்தால் நம்மவர்கள் தமிழைப் புறக்கணிக்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் ! பாடியவைகளோ படைத்தவனைப் பற்றியே ! அவ்வப்போது வைத்தியம், சோதிடம் பற்றியும் ! ஆனால் மறந்தும் மானிடர் பற்றிப் பாடவே யில்லை . பட்டங்கள் வேண்டிப் பாடினாரா என்றால் அதுவும் இல்லை! யாராவது அவரை அணுகி பெருமாளைப் பற்றிப் பாடச் சொன்னால் அந்த இடத்திலேயே பாடல்களை இயற்றி கேட்டவர்களிடமே கொடுத்து மகிழ்ந்த அற்புதர். தான் இயற்றியவற்றை நகலைக் கூடத் தன்னிடம் வைத்துக் கொள்ளாத விந்தைக் கவிஞர். அதனால், அவர் இயற்றிய பாடல்களில் பாதியைக் கூட அவர் வாரிசுகளால் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. கிடைத்தவற்றையும் முழுமையாக அச்சேற்ற இயல வில்லை. மத்திய அரசு உதவி பெற்று சில நூல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன. [மத்திய அரசின் உதவி பெறுவதற்கு யாஹூ குழுமங்களிலும், கூகுள் சந்தவசந்தம் குழுவிலும் நன்கு அறிமுகமான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி பங்கும் குறிப்பிடத் தக்கது]

அவர் இயற்றியதாகத் தெரிந்தவற்றுள் தங்களிடம் இல்லாதது அல்லது கிடைக்காதவை என்று அவர் வாரிசுகளுக்குத் தெரிந்திருப்பதன் பட்டியல் இது ! நூல் பெயருக்கு அருகில் இருப்பது நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

1. அயக்கிரீவர் மாலை 10
2. அலங்காரக் கிருஷ்ணன் பதிகம் 11
3. அலர்மேலு மங்கை நாச்சியார் மாலை 10
4. அவதார ரகசியங்கள் 20
5. அன்பில் மாலை 30
6. அனுமன் அந்தாதி 110
7. அனுஷ்டான மாலை 30
8. அஷ்ட ஐஸ்வர்ய மாலை 10
9. ஆசாரியன் அருளமுதம் 1250
10. ஆண்டாள் கல்யாணம் 10
11. ஆண்டாள் மாலை 10
12. ஆதிகேசவன் மாலை 10
13. ஆராவமுதன் மாலை 30
14. ஆழ்வார்கள் அமுதம் 4000
15. இரகுநாதன் தூதன் கோவை 100
16. இராசக் கிரீடை 16
17. இராதாகிருஷ்ண தத்துவமாலை 21
18. இருக்கை இருந்த பெருமாள் மாலை 10
19. உருக்குமணி கல்யாணம் 16
20 உலகளந்த உத்தமன் பதிகம் 15
21. ஒப்பில்லா அப்பன் மாலை 10
22. திரிகூடல் திரு அந்தாதி 105
23. திருக்கோஷ்டியூர் மாலை 10
24. திருத்தங்கல் அப்பன் மாலை 10
25. திருநாராயணபுரம் செல்லப் பிள்ளை பதிகம் 10
26. திருப்பதி மாலை 10
27. திருவில்லிப்புத்தூர் மாலை 10
28. திருமாலிருஞ்சோலைப் பலசந்தமாலை 110
29. திருவரங்கன் நீரோஷ்டக கொம்பில்லாயமகவந்தாதி 101
30. திருவரங்கப் பதிகம் 10
31. திருவள்ளூர்த் திருப்பதி மாலை 20
32. திருவில்லிபுத்தூர் மான்மியம் 1250
33. தினசரி வாழ்வு 200
34. தேர்வண்டிக்கால் சரித்திரம் 410
35 தேசிகன் மாலை 10
36. தேவநாதன் மாலை 10
37. நவதிருப்பதி மாலை 10
38. நாராயண வெண்பா 3000
39. நாரத கானம் 30
40. நாமக்கல் ஆஞ்சநேயர் பதிகம் 21
41. நூற்றெட்டுத் திருப்பதி சிலேடை வெண்பா 110
42. பத்மநாபன் மாலை 10
43. பத்திரிப் பதிகம் 10
44. பழமுதிர்ச் சோலைப் பதிகம் 10
45. பத்ராசலப் பெருமாள் பதிகம் 10
46. பரிமளரங்கன் பதிகம் 10
47. பக்தி யோகம் 50
48. பார்த்தசாரதி மாலை 10
49. பாகவத வெண்பா 3501
50. பிரபத்தி மார்க்கம் 50
51. பிரபந்த சாரம் 10
52. பிருந்தாவனப் பேறு 1250
53. புத்தூர்ப் புராணம் 1250
54. மதுராபுரி மாயக் கண்ணன் மாலை 10
55. மங்களா சாசன மகிமை 121
56. மகாபாரத சாரம் 501
57. வாக்குண்டாம் மாலை 103
58. விவாக மாலை 10
59. வில்லிபுத்தூர் வெண்பா 225
60. வியூக சுந்தர ராஜப் பெருமாள் சந்திரகலாமாலை 17
61. வைணவ வைபவம் 101
62. வைணவ இரகசியம் 401

இவை தவிர 1653 பாடல்கள் அடங்கிய 11 அனுபவ சோதிட நூல்கள், 8020 பாடல்கள் கொண்ட 21 சித்த வைத்திய நூல்கள் என இவர் இயற்றி இப்போது கிடக்காத நூல்களின் பட்டியல் விரிகிறது. மேலும் வடமொழியிலிருந்து தமிழாக்கிய பாதுகா சஹஸ்ரம் (506), கிருஷ்ண கர்ணாமிருதம் (105) , கோதாஸ்துதி(123), அஷ்டபதி (25), கீதை வெண்பா (601), தயாசதகம் (105) என இன்னொரு பட்டியல் .

இவையெல்லாம் யாரிடம் எங்கே உள்ளனவோ ? ஒருவேளை இதைப் படிக்கும் உங்கள் வீட்டுப் பரணில் கூட இருக்கலாம். ஆனால் யார் இவற்றின் பெருமை அறிந்து தேடி வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போகிறார்கள்! மீண்டும் தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்து வந்தால்தான் உண்டு. அவர் மீண்டும் பிறக்க தமிழ்த் தாயையே பிரார்த்திப்போம்.



வெள்ளி, 26 ஜூன், 2009

மதுரகவி திருப்புகழ்

ஏற்கனவே இங்கு மதுர கவி ஸ்ரீநிவாஸய்யங்கார் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். திருப்புகழ் என்றாலே நினைவுக்கு வருபவர் அருணகிரிநாதர். வைணவத்துக்கும் திருப்புகழ் உண்டு என நம் மதுர கவியார் 108 திவ்ய தேசங்கள் மீதும் அற்புதமாகத் திருப்புகழ் இயற்றியுள்ளார். அதிலிருந்து திருவேங்கடத் திருப்புகழ் ஒன்று இங்கே. 150 வருடங்களுக்கு முன்னேயே தமிழன் தமிழை மறக்க ஆரம்பித்து விட்டதை எவ்வளவு வேதனையோடு சாடுகிறார் பாருங்கள். பாடல்களுக்கு திரு கம்பன் என்பவர் சிறு குறிப்பு அளித்துள்ளார். அதையும் காணலாம்.
மதுரகவி திருப்புகழ்
திருவேங்கடம்

தானன தானன தானன தானன
தானன தானன தனதான

ஆங்கில பாடையின் மேம்பட லேபெரி
தாம்பல னாம்என அறியாதே
ஆன்றவ ரோதிய தீந்தமிழ் தேர்கிலர்
ஆய்ந்தறி யாரணு வளவேனும்

மாங்குயில் நேர்மொழி வாய்த்தவ ரோடிறு
மாந்தொரு வாகன மதினேறி
வாஞ்சையி னேகுதல் தான்தவ மாமென
மான்றவ ரோவுனை நினைவாரே

தேங்கிள நீர்முலை வாங்கிய நூலிடை
தேங்கமழ் தாமரை மயில்மார்பா
சேந்தனு மாதுமை காந்தனு மாலொடு
சேர்ந்தெமை யாள்கென அருள்வோனே

வேங்கையு நாகமு மான்களு மாடுற
வேங்கையு நாகமு மிடைவாகி
மீன்கண மேல்வளர் பூம்பொழில் மாமலை
வேங்கட மேவிய பெருமாளே!


திரு கம்பன் உரை:-
ஆங்கில பாடையின் -- இங்கிலாந்து நாட்டினரின் இங்கிலீசு மொழியில்; மேம்படலே -- மேலான புலமை பெறுதலே; பெரிதாம்பலன் ஆம்என -- (ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டு) மிகு பலன் தருவதாகும் என ; அறியாதே-- அறிவின்மையால்; ஆன்றவர் -- அறிவிற் சிறந்த பெரியார்கள்; ஓதிய -- கூறிவரும்; தீந்தமிழ் -- இனிய (தாய் மொழி) தமிழ் மொழியை;தேர்கிலர் -- பயிலாதிருக்கின்றனர் ; ஆய்ந்தறியார் அணுவளவேனும் -- மிகச் சிறிதளவுகூட ஆராய்ந்து அறிகிலர்; மாங்குயில் நேர்மொழி -- மாஞ்சோலையில் கூவும் குயிலனைய சொற்கள்; வாய்ந்தவரோடு -- இயல்பாகப் பெற்ற மாதர்களுடன் ; இறுமாந்து -- கருவமுடன் ; ஒருவாகனமதில் ஏறி -- ஒரு தேரில் (காரில்) ஏறியமர்ந்து; வாஞ்சையில் --அன்புடன் ; ஏகுதல்தான் -- செல்வது ஒன்றே; தவம் ஆமென -- தவமாகும் என்று; மான்றவரோ --மயங்கியவர்களோ; உனை நினைவாரே --உன்னை மனதில் நினைப்பார்கள்; தேங்கிள நீர்முலை -- தெங்கின் இளநீரனைய கொங்கைகளும்; வாங்கிய நூலிடை -- (அதன் பாரத்தால் ) வளைந்த நூல் போன்ற இடையும்; தேங்கமழ் -- வாசனை பொருந்திய ; தாமரை மயில் -- தாமரை மலரிலிருக்கும் மயிலனைய திருமகளை; மார்பா -- மார்பிற் கொண்டவனே; சேந்தனும் -- குமரக் கடவுளும்; மாதுமை காந்தனும் -- உமாதேவியின் கணவனாம் சிவனும்; மாலொடு சேர்ந்து-- அயர்வுடன் உன் திருமுன்பில் சேர்ந்து; எமையாள்கென -- எங்களை ஆண்டருள்க எனப் பிரார்த்திக்க ; அருள்வோனே -- அவ்வண்ணமே அருள் புரிபவனே; வேங்கையும்-- புலியும்; நாகமும்-- யானையும் ; மான்களும் -- மான் இனங்களும்; மாடுற -- பக்கலில் தங்கி இருக்க; வேங்கையும் -- வேங்கை மரமும்; நாகமும் -- நாவல் மரமும்; மிடைவாகு -- நெருங்கி; மீன்கண மேல் வளர் -- விண்மீன் கூட்டங்களுக்கு மேலும் வளர்ந்து வரும்; பூம்பொழில்-- பூஞ்சோலைகள் உடைய ; மாமலை வேங்கடம்-- திருவேங்கடமென்னும் பெரிய மலையில்; மேவிய -- பொருந்தி விளங்கிய; பெருமாளே -- திருமாலே;

பெருமாளே, அறியாதே மான்றவரோ உனை நினைவாரே -- என இயைக்க.

வியாழன், 25 ஜூன், 2009

தமிழில் ஒரு தேடுபொறி (Search Engine)

தமிழிலேயே இணையத்தில் தேடுவதற்கு ஒரு புதிய தேடுதளத்தை திரு பழநி் கண்ணன் மின் தமிழில் அறிமுகப் படுத்தியுள்ளார். அவரது பதிவை இங்கே காணலாம்.

முத்தமிழ் வளர்த்தான் பாண்டியன், இன்று செந்தமிழ் வளர்க்கிறான் இந்த இணைய நண்பன் www.searchko.in

எனதினிய தமிழ் நேசம் கொண்ட வலை நண்பர்களுக்கு வணக்கம்...

கூகிள் உலகையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் ஒரு இணைய வலை அரசன். என்னதான் அரசன் என்றாலும், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சுவை தரும் தமிழில் கூகிளால் உயரத்தை எட்ட முடியவில்லை. நான் வலையில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது நான் கண்ட இந்த அற்புதமான ஒரு தமிழ் இணைய வலை அரசன் தான் www.searchko.in

இந்த தமிழ் இணைய வலையரசனின் சிறப்புகளை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

1. செந்தமிழில் இணைய வலையினை தேட, செந்தமிழில் ஒரு தேடல் இயந்திரம்.
அ. செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடல்.
ஆ. சங்க கால இலக்கியங்கள் தேடல்.

2. கூட்டாக தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கலாம்
அ. பல தமிழ் செய்தித்தாள்களை ஒரே இடத்தில் அதன் தலைப்புச் செய்திகளை
உடன்மாறும் செய்திகளாக வாசிக்கலாம்.

3. நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்
அ. நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (குறுகிய மற்றும்
விவரமான நிலவரங்களுடன் காணலாம்).
ஆ. கூடிய விரைவில் தமிழில் நேரடி ஆட்ட விமர்சனங்களை காண வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

4. அகராதி சேவை
அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ்-ஆங்கில
அகராதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய
உலகத்தில், தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது
இந்த இணையம்.

5. மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது .

6. அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்து
பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது.

7. ஆங்கில தட்டச்சுப் பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும்
வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல்
உண்மைப்பலகையாக (virtual)உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் எண்ணம் கொண்ட உள்ளங்களுக்கு இது ஒரு வரப்பிர
சாதமாக இருக்குமென்று, என் இனிய இணைய வலை நண்பர்களுக்கு இதை
சமர்ப்பிக்கின்றேன்.

இணைய தமிழ் வளர்ப்போம் .....
மென்பொருள் உலகில் தமிழுக்கு ஒரு இடம் ஒதுக்குவோம் ....

--
தங்கள் அன்பு நண்பன்
பழநி கண்ணன். க

புதன், 24 ஜூன், 2009

ந்யாஸதசகம்

ந்யாஸதசகம் 3.

ஸ்வாமிந் ஸ்வசேஷம் ஸ்வவசம்
ஸ்வபரத்வேந நிர்ப்பரம்
ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்திந் நிஸ்யஸிமாம் ஸ்வயம். (3)

[ ஸ்வாமிந் -- ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே ! ஸ்வசேஷம் -- தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷபூதனாயும்; ஸ்வவசம் -- தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை; ஸ்வதத்த ஸ்வதியா -- தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால், தேவரீரால் அளிக்கப்பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீரப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணிவைத்து த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்; ஸ்வார்த்தம் -- தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே; நிர்ப்பரம் -- அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி; ஸ்வபரத்வேந -- செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே; ஸ்வஸ்மிந் -- தேவரீரிடத்தில்; ஸ்வயம் -- தேவரீரே; ந்யஸ்யஸி -- வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாகவுடைய பெருமாள், தனக்கு அடிமையானவனும், தன்வசமாயிருப்பவனும், தன்னிடம் பரத்தை வைத்துவிட்டபடி யாலே எல்லாவித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப்பற்றிய ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில்தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

முன் சுலோகத்திற் சொன்ன ஸாங்கமான பரஸமர்ப்பணமும் நிவ்ருத்திதர்மத்திற்கு உரியதான ஸாத்விகத்யாகம் என்கிற அங்கத்துடன் அநுஷ்டிப்பது என்று அருளிச் செய்கிறார் இதில்.

ஸர்வநியந்தாவாயாகிய திருநாராயணனே ! தேவரீருக்கு ஒரு மேன்மையைத் தருவதற்காகவே ஏற்பட்டவனாயும், தேவரீர் இட்ட வழக்காய் இருந்து அதீநனாயும் அடியேன் இருக்கின்றேன். இவ்வாறுள்ள அடியேனை தேவரீர் கொடுத்த தேவரீருக்குச் சேஷமான புத்தியாலே வேறொருவரின் பிரார்த்தனையின்றி தேவரீர் பிரயோஜநத்துக்காகவே அடியேனுக்கு ஒரு பரம் இல்லாமல் இருக்கும்படி தேவரீர் திருவடிகளில் வைத்துக் கொள்ளுகிறீர்.

தன்னதிகாராநுரூபமாக தவிர வேண்டுமவைதவிர்த்து, செய்யவேண்டுமவை செய்யுமிடத்தில் அடியேன் ஸ்வதந்த்ரனாய்ச் செய்கிறேன் அல்லேன். அடியேனுக்கு இக்கர்மம் சேஷபூதம் என்றும், அடியேனுக்கு இன்னபலத்துக்கு இதுவே ஸாதனம் என்றும் பிறக்கும் நினைவை மாற்றி ஸர்வேச்வரன் செய்விக்க அவனுக்குச் சேஷமான கைங்கரியத்தை அவன் உகப்பே பிரயோஜநமாக அநுஸந்தித்து அநுஷ்டிக்கை ஸாத்விகத்யாகம். இவ்வாறு அநுஷ்டிப்பது.

நிவ்ருத்தி தர்மங்களை அநுஷ்டிக்கும் ஜீவன் கர்த்ருத்வத்தையும், மமதையையும், பயனில் ஸம்பந்தத்தையும் விட்டுவிடவேண்டும். இதுவே ஸாத்விகத்யாகம். கர்த்ருத்வத்தை விடுகையாவது :-- இந்தக் காரியத்தை யான் செய்யவில்லை, எம்பெருமான்தான் என்னைக்கொண்டு செய்கிறான் என்று எண்ணுவது. மமதையை விடுகையாவது:-- எனக்குப் பிரயோஜநத்தைக் கொடுப்பதால் இந்தக் கர்மம் என்னுடையது என்கிற நினைவை விடுவது. பயனில் ஸம்பந்தத்தை விடுகையாவது:- இந்தக் கர்மத்தினால் வரும் பயனை வேண்டாமல் தன் ஸம்பந்தத்தை ஒழித்தல்.

ஸ்வவசம் -- என்பதால் தனக்கு ஸ்வதந்த்ரத்தன்மையின்மை சொல்லிற்று.

நிர்ப்பரம் -- என்பதால் ரக்ஷணப் பொறுப்பில் தனக்குச் சம்பந்தம் இல்லாமை அறிவிக்கப் பெற்றது.

ஸ்வதத்த -- என்கையால் அளிக்கப்பெற்ற புத்தி நான் ஸம்பாதித்தது அன்று; அவன்தந்து அருளியதே என்று அஹங்கார நிவ்ருத்தி கூறப் பெற்றது.

ஸ்வதியா -- என்பதால் எம்பெருமான் அநுக்ரஹித்த ஜ்ஞாநம் என்னுடையதன்று, அவனுடையதே என்று மமதாத்யாகம் பேசப் பெற்றது.

ஸ்வார்த்தம் --என்பதால் பலத்யாகம் உரைக்கப் பெற்றது.

ஸ்வயம் ஸ்வஸ்மின் ந்யஸ்யஸி -- என்பதால் கர்த்ருத்வத்யாகம் கூறியபடி.

"" கீழில் திருவாய்மொழியிலே " நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்" என்று இவர் தாமும் அருளிச்செய்து, ஸர்வேச்வரனும் இவர்க்கும் இவர் பரிகரத்துக்கும் மோக்ஷங் கொடுப்பானாகப் பாரிக்க, அத்தைக்கண்டு; தேவரீர் எனக்கு மோக்ஷம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது; அதாகிறது "உனக்கு மோக்ஷங்கொள்" என்று எனக்காகத் தருகை யன்றிக்கே, 'நமக்காகக்கொள்' என்று தேவர்க்கே யாம் படியாகத் தரவேணுமென்று தாம் நினைத்திருந்த படியை அவன் திரு முன்னே பிரார்த்திக்கிறார். **** எம்பார் இத்திருவாய்மொழி யருளிச் செய்யப்புக்கால், இருந்தவர்களை "யார்" என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச் செய்வது.' [ஈடு. ஒன்பதாந் திருவாய்மொழி -- எம்மாவீடு -- ப்ரவேசம்]

எனக்கே யாட்செய் எக்காலத்துமென்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளு மீதே
எனக்கே கண்ணனை யான் கொள்சிறப்பே.
(திருவாய்மொழி 2-9-4)

(ஈடு. நாலாம் பாட்டு. இத்திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யமாவது :-- ஸ்ரக்சந்தனாதிகளோபாதி தனக்கே எனைக்கொள்ளு மீதே என்றிறே; இவ்விடத்திலே எம்பார் அருளிச் செய்யும்படி :-- "ஸர்வேச்வரன் திரிவிதசேதநரையும் ஸ்வரூபாநு ரூபமாக அடிமைகொள்ளா நின்றான்; நாமும் இப்படிப் பெறுவோமேயென்று." முக்தரும், நித்யரும், தாங்களும் ஆநந்தித்து அவனையும் ஆநந்திப்பிப்ப வர்கள்; பத்தர் தாங்கள் ஆநந்தியாதே அவனை ஆநந்திப்பிப்பர்கள்; இன்புறும் இவ் விளையாட்டுடையானிறே;" மயர்வற மதிநலமருளப் பெற்றவர், 'தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே' என்று ப்ரார்த்திப்பானேன்? 'திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிராதே' என்று பிள்ளை திருநறையூரரையர் எம்பாரைக் கேட்க "அது கேளீர் ! முன்பு பிரிந்தன்று, பின்பு பிரிவுக்கு ப்ரஸங்கமுண்டாயன்று, இரண்டுமின்றியிருக்கச் செய்தே, 'அகலகில்லேன் அகலகில்லேன்' என்னப் பண்ணுகிறது விஷயஸ்வ பாவமிறே; அப்படியே ப்ராப்யருசி ப்ரார்த்திக்கப் பண்ணுகிறது" என்று அருளிச் செய்தார். எம்மாவீட்டிலெம்மாவீடாய், வைஷ்ணவஸர்வஸ்வமுமாய், உபநிஷத்குஹ்யமுமாய், ஸர்வேச்வரன் பக்கலிலே அபேக்ஷித்துப் பெறுமதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பாரதந்த்ர்யத்தை அவன் பக்கலிலே அபேக்ஷிக்கிறார். முதலிலேயே "ஆட்செய்" என்னவேணும்; ஆட்செய்யென்று -- ஸ்வாதந்த்ர்யத்தே வ்யாவர்த்திக்கிறது. அதில் "எனக்காட்செய்" என்னவேணும்; எனக்காட்செய் என்று -- அப்ராப்ம விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது. எனக்கேயாட்செய் என்று -- தனக்குமெனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து, "எனக்கேயாட்செய்" என்னவேணும். இதுதான் "ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி" நிற்கவேணும்; "க்ரியதாமிதி மாம்வத" என்கிறபடியே, "இன்னத்தைச் செய்" என்று ஏவிக்கொள்ள வேணும்; இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்கவொண்ணாது, என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுரவேணும்; புகுந்தாலும் போக்குவரத்துண்டாக வொண்ணாது, ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக எழுந்தருளியிருக்கவேணும். இருந்து கொள்ளும் கார்யமென்? என்றால்,

[தனக்கேயாக வெனைக் கொள்ளுமீதே] -- ஸ்ரக்சந்தநாதிகளோபாதியாகக் கொள்ள வேணும். அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கு முறுப்பாய் மிகுதி கழித்துப்போகடு மித்தனை யிறே. ஒரு மிதுநமாய்ப் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்திருக்குமிறே, அங்ஙன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அந்வயித்தவனாக வொண்ணாது, "நின்" என்றும், "அம்மா" என்றும் -- முன்னிலையாக ஸம்போதித்துக் கொண்டு போரா நிற்கச் செய்தே, இங்குப் படர்க்கையாகச் சொல்லுவானேன்? என்னில்; "ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற ஸமயத்திலே, திருமுகத்தைப் பார்க்கில் வ்யவஸாயங்குலையும்" என்று , கவிழ்ந்திருந்து கையோலை செய்து கொடுக்கிறார்.

[எனக்கே கண்ணனை] -- "தனக்கேயாக" என்ற பின்புத்தை, எனக்கேயிறே. புருஷார்த்தமாகைக்காகச் சொல்லுகிறார். ஒரு சேத நனிறே அபேக்ஷிப்பான். நீர் அபேக்ஷிக்கிற இது செய்வோமாகப் பார்த்தால் எல்லார்க்கும் செய்யவேணுங்காணுமென்ன, [யான்கொள்] --ஸ்வரூப ஜ்ஞாநத்தை நீ பிறப்பிக்க, அத்தாலே ஸ்வரூபஜ்ஞாநமுடைய நான் ஒருவனும் பெறும்படி பண்ணவேணும். உமக்கும் எப்போதும் நம்மாற் செய்யப்போகாதென்ன, [சிறப்பே]-- பலகால் வேண்டா, ஒருகால் அமையும்; அதுதன்னிலும், திருவாசலைத் திருக்காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாகச் செய்யவும் அமையும். சிறப்பாகிறது -- ஏற்றம். அதாவது புருஷார்த்தம். ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருளவேணுமென்ற படி. சிறப்பாவது -- முக்தியும் ஸம்பத்தும், நன்றியும். இவற்றில், நான் உன்பக்கல் கொள்ளும் மோக்ஷம் உனக்கேயாக எனைக்கொள்ளுமதுவே. உன்பக்கல் நான் கொள்ளும் ஸம்பத்தென்னவுமாம். நன்றியென்னவுமாம். என்பன இவண் அநுஸந்தேயம்.

["தமக்கேயா யெமைக் கொள்வார் வந்தார்தாமே" என்பது இம் மஹாதேசிகன் அருளிச் செய்த திருச்சின்னமாலை (4)ப்பாசுர ஈற்றடி]

செவ்வாய், 23 ஜூன், 2009

சரணாகதி


இங்கு இட்டுவரும் "ந்யாஸ தசகம்" இன்றைய தலைமுறை எளிதில் புரிந்து கொள்ள இயலாத கடின நடையில் உள்ளது, சற்று எளிமையாக இருந்தால் நல்லது என அடியேனுக்கு சில அஞ்சல்கள் வந்துள்ளன. இதை எளிமைப் படுத்துவது என்பது முடியாது மட்டுமல்ல, பழைய நூல்களை உள்ளது உள்ளபடி வலையில் ஏற்றவேண்டும் என்ற என் நோக்கத்துக்கும் மாறானது. ஆனால், சரணாகதி மேன்மை எல்லாருக்கும் புரியவேண்டும் ; அப்படிப் புரிந்து எல்லாரும் ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்று திரு ஆர். ஆர். ஸ்வாமி விடாமல் எழுதுகிறாரே! அவர் முயற்சிகளுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டுமே என்ற நினைப்புடன் என்னிடம் இருக்கும் புத்தகங்களை அலசிக் கொண்டிருந்தேன். எப்போதோ திருவல்லிக்கேணி நடைபாதையில் வாங்கிய ஒரு சிறு நூல் அகப்பட்டது. இன்றைய நிலையில் அனைவருக்கும் புரிகின்ற ஆங்கிலத்தில் ஸ்வாமி தேஜோமயானந்தா எழுதியுள்ள அந்த நூல் இங்கே . மூலைகளைப் பிடித்துப் புரட்டி படிக்கலாம். இதன் மூலம் ப.ரெ.திருமலை அய்யங்காரை இன்னும் ஆழமாக ரசிக்கலாம்.

திங்கள், 22 ஜூன், 2009

ந்யாஸ தசகம் 2 தொடர்ச்சி



ஸ்ரீமந் -- ஸ்ரீ மஹாலக்ஷ்மியோடு கூடிய நாராயணனே! லக்ஷ்மியோடு கூடின எம்பெருமானே ப்ரபத்திக்கு உத்தேச்யன் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றது. முதலில் புருஷகார ப்ரபத்தி பண்ணி, அம்முகத்தாலே வசீக்ருதனான எம்பெருமானிடத்தில் ப்ரபத்தி செய்யவேண்டும் என்பதும் ஸூசிக்கப் பெறுகின்றது.
இவ்வாசார்யசிரேஷ்டர் தெய்வநாயகனைச் சரணம் அடையத் திருவுள்ளங்கொண்டு முதலில் செங்கமலவல்லித் தாயாரிடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதற் பாசுரத்தால் வெளியிடுகிறார் "மும்மணிக்கோவை"யில்.

அருடரு மடியவர்பான் மெய்யை வைத்துத்
தெருடர நின்ற தெய்வ நாயகநின்
னருளெனுஞ் சீரோ ரரிவை யானதென
விருள்செக வெமக்கோ ரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன நின்றிரு வுருவி
லணியம ராகத் தலங்கலா யிலங்கி
நின்படிக் கெல்லாந் தன்படி யேற்க
வன்புட னின்னோ டவதரித் தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்
தீண்டிய வினைகண் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக
நின்னுடன் சேர்ந்து நிற்குநின் றிருவே.


[தேவரீரால் அருள்புரியப்பெற்ற அடியவர்கள்மீது மெய்யாக ஒழுகுந் தன்மையை இட்டு 'அடியவர்க்கு மெய்யன்' எனப் பெயர் பெற்று அடியோங்களுக்கு ஜ்ஞாநக்கண்ணை அருள்கின்ற தெய்வநாயகனே! எமக்கு அஜ்ஞாநமாகிய இருள் ஒழியும்படி ஒப்பற்ற இனிய பிரகாசத்தையுடைய தீபம் போன்றவளாய், இந்த்ரநீல பர்வதம் போன்ற தேவரீர் அழகிய திருமேனியில் திருவாபரணங்கள் அமர்ந்து நிற்கின்ற திருமார்பில் மாலையாகப் பிரகாசித்துக்கொண்டு, தேவரீர் ப்ரகாரங்களுக்கு எல்லாம் தன் பிரகாரங்கள் ஒத்திருக்குமாறு தேவரீரைப் பிரியமாட்டாத அன்புடன், தேவரீரோடு தானும் அவதரித்தருளி, ஆச்ரிதர்கள் பிரார்த்திக்கும் உரைகளைத்தான் முந்துறக் கேட்டு, மறுபடியும் அவ்வுரைகளைத் தேவரீர் கேட்குமாறு செய்து, திரண்ட கர்மங்கள் ஒழிந்து போகச் செய்ய முயன்று, தன் திருவடிகளை அடைந்த பாகவதர்கள் தேவரீரை அடையும்படி தேவரீர் கருணையெனும் குணமே ஒப்பற்ற பெண்வடிவு கொண்டது என்னலாம்படி தேவரீருக்கும் பெருமையைத் தருகின்ற பெரிய பிராட்டி தேவரீரோடு க்ஷணமும் பிரியாது சேர்ந்து நிற்கின்றாள்] என்ற தேசிகமாலைப் பாசுரமே அது.
எம்பெருமானுடைய குணங்களுக்கு அளவே இல்லை. ஒரு பொருளுக்கு உளதாகக் கூறும் குணமானது தன்னைப் பெற்றிருக்கும் மற்றொரு பொருளைக் காட்டிலும் ஒரு பேதத்தைக் காட்டுவதால் அக்குணம் விசேஷணம் என்னப் பெறும். இத்தகைய விசேஷணம் "ஸ்வரூபநிரூபக விசேஷணம்" என்றும், "நிரூபித ஸ்வரூப விசேஷணம்" என்றும் இருவகைப்படும். ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை எந்தக் குணத்தை உடையதாகக் கூறியே விளக்கினால் அன்றி அவ்வஸ்துவின் ஸ்வரூபத்தை அறியமுடியாதோ, அந்தக் குணம் ஸ்வரூபநிரூபக விசேஷணம் எனப்படும். ஒரு வஸ்துவின் ஸ்வரூபத்தை விளக்கியபின் அதன் பெருமை புலப்படுவதற்கு எந்தக் குணங்கள் வெளியிடப் பெறுகின்றனவோ, அவை நிரூபித ஸ்வரூப விசேஷணம் எனப்படும்.
எம்பெருமானுடைய ஸ்வரூபத்தை ஸத்யத்வம், ஜ்ஞாநத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்களை யிட்டே விளக்க வேண்டும். ஆதலின் இவ்வைந்தும் ஸ்வரூப நிரூபகம் ஆகும். இந்தக்குணங்கள் "அமலனவியாத சுடரளவில்லா வாரமுதம்" (தேசிகமாலை அருத்த பஞ்சகம் 1) என்ற வடியிற் கூறப்பெற்றுள்ளன.
(1) ஸத்யத்வம் -- எஞ்ஞான்றும் மாறுபடாத தன்மை. இது 'அவியாத' எனும் சொல்லாற் கூறப்பெற்றது.

(2) ஜ்ஞாநத்வம் -- எப்பொழுதும் குறைவுபடாத ஜ்ஞாந ஸ்வரூபனாந் தன்மை. இது 'சுடர்' என்ற சொல்லால் உணர்த்தப் பெற்றது.

(3) அநந்தத்வம் -- 'இங்குத்தான் இருக்கின்றான்' என்று தேசத்தாலும், 'இப்பொழுதுதான் இருக்கின்றான்' என்று காலத்தாலும், 'இந்த வஸ்துவின் ஸ்வரூபமாக இருக்கின்றான்' என்று வஸ்துவினாலும் அளவிடமுடியாதபடி எவ்விடத்திலும், எக்காலத்திலும், எந்த வஸ்து ஸ்வரூபனாகவும் நிற்கும் தன்மை. இது 'அளவில்லா' என்றதால் கூறப்பெற்றது.

(4) ஆநந்தத்வம் - தோஷங்கள் இல்லாத தன்மை. இது 'அமலன்' என்றதால் குறிக்கப்பெற்றது.

இவ்வைந்து குணங்களால் எம்பெருமானது ஸ்வரூபத்தை ஒருவாறு அறிந்தபின் ஸௌசீல்யம், காருண்யம், வாத்ஸல்யம் முதலிய அளவற்ற திருக்கல்யாண குணங்கள் அவன் பெருமையைக் காட்டுகின்றன. இவை நிரூபித ஸ்வரூப விசேஷணமாகும்.

"இப்படி ஸபத் நீகனாய்க்கொண்டு ஸர்வரக்ஷண தீக்ஷிதனாய் 'சாந்தானந்த' (சதுச்லோகீ 4) 'ஸ்வவைச்வரூப்யேண' (ஸ்தோத்ர ரத்நம் 38) இத்யாதிகளிற்படியே ஸ்வரூபத்தாலும், குணத்தாலும், ப்ரணயத்தாலும் ஸுச்லிஷ்டனான சரண்யனுக்கு 'தன்னடியார் திறத்தகத்து' (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) இத்யாதிகளில் அபிப்ரேதங்களாய் புருஷகாரமும் தன்னேற்ற மென்னலாம் படியான சரண்யத்வ உபயுக்தங்களான ஆகாராந்தரங்களைச் சொல்லுகிறது இங்குற்ற நாராயண சப்தம். அவையாவன :-- சரீராத்மபாவநியாமகங்களான சேஷசேஷித்வாதி ஸம்பந்தங்களும், ஆச்ரயணீயதைக்கும் பலப்ரதானத்துக்கும் உபயுக்தமான குணவர்க்கமும், ஸககாரி நிரபேக்ஷமாக ஸர்வத்தையும் நினைத்தபோதே தலைக்கட்டவல்ல ஸங்கல்பரூப வ்யாபாரமும், 'ஸ்வமுத்திச்ய ஸ்ரீமாந்' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-87) என்கிறபடியே ஆச்ரிதஸம்ரக்ஷணம் தானும் தன்பேறாக ரக்ஷிக்கிற ப்ரயோஜந விசேஷமும். இங்கு குணவர்க்கம் என்கிறது ;-- காருண்ய ஸௌலப்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய க்ருதஜ்ஞாதிகளும், ஸர்வஜ்ஞத்வஸர்வ சக்தித்வ ஸத்ய ஸங்கல்பத்வ பரிபூர்ணத்வ பரமோதாரத்வாதிகளும் ; காருண்யம் -- ஒரு வ்யாஜத்தை முன்னிட்டு நம்முடைய துக்கங்களைக் கழிக்கைக்கு தானே நினைத்திருக்கையாலே 'எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்கும்' (திருவாய்மொழி 5-1-7) என்று நம்புகைக்கு உறுப்பாம் ; ஸௌலப்யம் --'சேணுயர்வானத்திருக்கும் தேவபிரான்' (திருவாய்மொழி 5-3-9) என்று அகலாதபடி 'ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் நாராயணனே நமக்கே பறை தருவான்' (திருப்பாவை 1) என்று ஆபால கோபாலம் அணியனாய் அபேக்ஷிதம் தந்தருளும் என்கைக்கு உறுப்பாம்; ஸௌசீல்யம் --'அம்மானாழிப் பிரானவனெவ்விடத்தான்யானார்' (திருவாய்மொழி 5-1-7) என்று அகலாமைக்கு உறுப்பாம்; வாத்ஸல்யம் -- 'நீசனேன் நிறைவொன்றுமிலேன்'(திருவாய்மொழி 3-3-4) என்று ஸ்வதோஷத்தைக் கண்டு அவன் அநாதரிக்கிறான் என்று வெருவாமைக்கு உறுப்பாம்; க்ருதஜ்ஞத்வம் -- 'மாதவனென்றதே கொண்டு' (திருவாய்மொழி 2-7-4) 'திருமாலிருஞ்சோலைமலை யென்றேன்' (திருவாய்மொழி 10-8-1) என்கிறபடியே தன் பக்கலிலே அதிலகுவாயிருப்பதொரு வ்யாஜத்தைக் கண்டாலும் இனி நம்மைக் கைவிடான் என்கிற தேற்றத்திற்கு உறுப்பாம்; மார்தவார்ஜித வாதிகளுக்கும் இப்படியே உபயோகம் கண்டுகொள்வது. ஸர்வஜ்ஞத்வம் ---'எல்லாமறிவீர்' (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே ஆச்ரிதருடைய இஷ்டப்ராப்தி அநிஷ்டநிவ்ருத்தி உபாயங்களையும் விரோதிகளையும் அறிகைக்கு உறுப்பாம்; ஸர்வசக்தித்வம் -- 'கூட்டரிய திருவடிகட்கூட்டினை'(திருவாய்மொழி 4-9-9) என்கிறபடியே ஆச்ரிதர் மநோரதங்களைக் கடிப்பிக்கைக்கு உறுப்பாம்; ஸத்யஸங்கல்பத்வம் -- 'சன்மசன்மாந்திரங்காத்து' (திருவாய்மொழி 3-7-7) இத்யாதிகளிற்படியே 'மோக்ஷயிஷ்யாமி'(ஸ்ரீபகவத்கீதை 18-66) என்றது முடிவு செய்கைக்கு உறுப்பாம்; பரிபூர்ணத்வம் --- 'செல்வநாரணனென்று' (திருவாய்மொழி 1-10-8) இத்யாதிகளிற்படியே பாவ தாரதம்யம் பார்க்கும் அளவே ஆனாலும் நாம் செய்யும் கிஞ்சித்காரத்தில் கௌரவலாவகங்களைப் பாராமைக்கு உறுப்பாம்; பரமோதாரத்வம்--அல்பமான ஆத்மாத்மீயங்களை சோராநீத நூபுர ந்யாயத்தாலே ஸமர்ப்பித்தவர்களுக்குத்தான் 'எனக்கே தன்னைத் தந்த கற்பகம்' (திருவாய்மொழி 2-7-11) என்கிறபடியே, அநந்தமான ஆத்மாத்மீயங்களை வழங்குகைக்கு உறுப்பாம்; ஸ்தைர்ய தைர்யாதிகளுக்கும் இப்படி உபயோகம் கண்டுகொள்வது. " [ஸாரஸாரம் த்வயாதிகாரம்]

இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான -- ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்திதத்வம், ஸர்வஸ்வாமித்வம் முதலான குணங்கள் எல்லாம் "த்வயி" என்கிற பதத்தில் அநுஸந்தேயம். இவை முன்னர் விளக்கப் பெற்றிருத்தல் காண்க.

பகவானுடைய குணங்கள் எல்லாம் பரோபகாரார்த்தமாகவே (பிறருக்கு உதவுவதற்காகவே) யிருக்கிறபடியால் அவனைக் கல்யாண குணவான் என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன. ஸர்வஜ்ஞத்வம் மு.தலான குணங்களை இவ்வளவு என்று எண்ண முடியாது. ஸர்வஜ்ஞத்மாவது:-- எப்பொழுதும் எல்லா வஸ்துக்களையும் உள்ளது உள்ளபடியே பார்ப்பது. ஸர்வசக்தித்வமாவது :-- நினைத்ததை நினைத்தபடியே முடிக்க சக்தி யுண்டாயிருக்கை; இந்த சக்தி பலவிதம். ஸத்யகாமத்மாவது:-- போக்யமான வஸ்துக்கள் நினைத்தபோது ஸித்தமாயிருக்கை; ஸத்ய ஸங்கல்பத்வமாவது --தான் ஸங்கல்பித்ததற்கு (நினைத்ததற்கு) ஒருவராலும் தடையில்லாமல் ஸங்கல்பித்தபடியே நிறைவேற்றுகை. ஸர்வேச்வரன் விபீஷணாழ்வானை ரக்ஷிக்க ஸங்கல்பித்தபோது ஸுக்கிரீவன் அங்கதன் முதலான தம்முடைய அந்தரங்கமான மந்திரிகள் தடுத்தபோதிலும் அந்த ரக்ஷண ஸங்கல்பம் தடையில்லாமல் நிறைவேறிற்று. பாணாஸுரனை சிக்ஷிக்க (தண்டிக்க) ஸங்கல்பித்தபோது, சிவன், ஸுப்ரஹ்மண்யன் முதலானவர்கள் குறுக்கே விழுந்தபோதிலும் அவனைத் தண்டித்தே விட்டான். பரமோதாரத்வமாவது;-- ஆச்ரிதர்களுக்கு அவர்கள் அபேக்ஷித்ததற்கு அதிகமாகவே கொடுத்தும் 'நாமென்ன கொடுத்தோம்' என்றிருக்கை. க்ருதஜ்ஞதையாவது --- தன் விஷயத்தில் அல்பம் செய்தாலும் அதை எப்போதும் அதிகம் நினைத்திருக்கை. ஆச்ரிதவத்ஸலத்வமாவது -- ஆச்ரிதர்களிடத்தில் எவ்வளவு குற்றம் இருந்தாலும் அதைப் பாராததுபோல் இருக்கை. ஸௌசீல்யமாவது ;-- தான் எல்லாரையும்விட ஸர்வப்ரகாரத்தாலும் உத்தமனாயிருந்தும் , ஜாதி, குணம், நடத்தை இவை எல்லாவற்றிலும் மிகவும் தாழ்ந்தவர்களுடன், ஸஹோதரர்களோடுபோல் பிரியமாகப் பழகுந்தன்மை. ஸௌலப்யமாவது:-- ஆச்ரிதர்கள் நினைத்தமாத்திரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தானே வந்து கிட்டுகை. ஆச்ரிதபாரதந்த்ர்யமாவது :-- தான் ஸர்வேச்வரனாயிருந்தும் ஆச்ரிதர் இட்ட வழக்காக அவர்கள் இடும் ஏவல் தொழில்களைத் தன் மேன்மைக்குத் தகாததாயிருந்தும் மிக அன்புடன் இவ்வளவு கிடைத்ததே என்று செய்வது. இவை முதலான எண்ணிறந்த மஹா குணங்கள் ஸர்வேச்வரனுக்கு ஸ்வபாவ ஸித்தங்கள் என்று ச்வேதாச்வதரோபநிஷத்தில் சொல்லப் பெற்றிருக்கிறது. இவனுக்கு அஜ்ஞானம் ஒருகாலும் கிடையாது.

[ இப்பிரபத்தி வித்யைக்கு உபயுக்தங்களாய் அநுஸந்தேயங்களான, இங்கு விளக்கப் பெற்றுள்ள ஸர்வஜ்ஞத்வம் முதலான அகில குணங்களும் "த்வயி" என்ற பதத்தில் அநுஸந்தேயம்.]

ஞாயிறு, 21 ஜூன், 2009

எந்தன் மனம் நிறைந்த கண்ணன்.


அடியேனைப் போன்ற ஈஸிசேர் (55+ வயதானவர்கள்) நபர்களில் பெரும் பாலோருக்கு ஒரு நினைப்பு. இந்தக்காலத்து இளைஞர்களுக்கு நம் சம்ப்ரதாய விஷயங்கள் ஒன்றும் தெரியாது, அவர்கள் மேல்நாட்டு நாகரீகங்களில் மூழ்கி, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், ஒழுக்கங்கள் இல்லாமல் வாழ்கிறவர்கள் என்றெல்லாம் புலம்புவது வாடிக்கை. அப்படிப் புலம்புபவர்களில் பலருக்கு அவர்கள் உத்யோகத்தில் இருக்கும்போது பாவம் சந்த்யாவந்தனம் பண்ணக் கூட நேரம் இல்லாமல் போயிருக்கும். ஓய்வு பெற்றபிறகுதான் போகும் வழிக்கு ஏதாவது செய்யத் தோன்றும். அப்போதுகூட தனக்கு ஏதாவது வேண்டித் தான் அவர்கள் பெருமாளை ஸேவிப்பார்களே ஒழிய, சம்ப்ரதாயம் பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல், அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் இருக்காது.

ஆனால் இவர்கள் நினைப்புக்கு மாறாக, இணைய வெளியில் உலவும்போது இளைஞர்களால் நடத்தப் படும் பல வலைகள் இன்றைய இளைஞர்கள், அதிலும் குறிப்பாக software துறையில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு சம்ப்ரதாயத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள், எவ்வளவு ஆழமாக அதைப் புரிந்து கொண்டுள்ளார்கள், எவ்வளவு ஆர்வத்துடன் தாங்கள் கற்றவற்றை அழகாக மற்றவர் மனம் லயிக்கும் வகையிலே அவற்றை இனிய தமிழிலே எழுதிவருகிறார்கள் என்பவற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவ்வகையில் ஒன்று இந்த "கண்ணன் பாடல்கள்" ஒலி, ஒளி, பாடல் வரிவடிவம் என மிக அருமையாக உள்ளது.

http://kannansongs.blogspot.com

கொஞ்சம் relax

நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். எப்போ உன் ப்ளாக்ல வந்தாலும் ஒரே கனமான விஷயம்தானா ? கொஞ்சம் ரசிக்கற மாதிரி ஏதாவது எழுதேன் என்றார். வைத்துக் கொண்டா வஞ்சனை செய்யறேன்? அவர் சொன்னதுக்குத் தோதா இன்று ஒரு நண்பரிடமிருந்து வந்த ஒரு வீடியோ இங்கே. நீங்களும் கொஞ்சம் பாருங்கோளேன்.
http://video.yahoo.com/watch/3791438?fr=yvmtf