சனி, 4 ஜூலை, 2009

தாழ்வது ஏன்?

இன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். நிறையப் படிப்பவர். படித்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை ஆழமாக அலசுவதும், அவற்றை அடுத்தவர்கள் ரசித்துக் கேட்கும் வகையில் சொல்வதிலும் வெகு சமர்த்தர். எதையும் மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எங்களுடன் பகிர்ந்து கொள்வது அவர் வழக்கம்.
பேச்சு பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
" நமது மதம் சனாதன மதம். இல்லாதவை எதுவும் இல்லை. இந்து மகா சமுத்திரம் என திரு சோ அவர்கள் ஏராளமான தகவல்களை வாரம்தோறும் தருகிறார். எத்தனையோ மகான்கள் அவதரித்து மக்களைப் பண்படுத்தி நல்வழி காட்டி உய்வித்த அற்புத வாழ்க்கை நெறி இது. இன்றும் ஏராளமான அருளாளர்கள் வாழ்ந்து வழிகாட்டுகின்ற ஒரு உன்னத மார்க்கம். ஆனால், இன்று இந்து என்பவனின் நிலை எப்படி இருக்கிறது? எல்லாவற்றிலும் தாழ்ச்சி (ஒரு பெரிய லிஸ்ட் சொன்னார்) ஒரு காலத்தில் மிலேச்சர்கள் என்று சொல்லப் பட்ட மாற்று மதத்தார்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வசதியாகிக் கொண்டே போகிறார்களே ? இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் "என்றார்.
எப்போதும் இப்படித்தான். என்ன கேட்பாரோ என எதிர்பார்த்து அவருடைய "பேருரைகளை"க் கேட்பது வழக்கமானது.
கேள்விகள் கேட்பார். ஆனால் என்ன பதில் சொன்னாலும் அதை ஏற்காமல் தான் சிந்திக்கும் கோணங்களிலிருந்து அவரே எதிர்பாராத பதிலும் தருவார்.
அதனால் "நீங்களே சொல்லிவிடுங்கள்" என்றேன்.
"கொஞ்சம் யோசி" என்றார்.
"யோசிப்பதா? நானா? அதற்கெல்லாம் மூளை வேண்டாமா? எனக்கு அது இல்லை என்று நன்கு தெரிந்தும் இப்படிக் கேட்கலாமா" என்று ஜகா வாங்கினேன்.
அவர் ஆரம்பித்தார்.
"திவ்ய தேசங்கள், அபிமான ஸ்தலங்கள், எத்தனையோ சிவ க்ஷேத்திரங்கள் --- எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இல்லை வெள்ளம் இல்லையா ? அப்படிக் குவிகின்ற மக்கள் செய்வது என்ன? ஆழ்வார்களும் நாயன்மார்களும் உள்ளம் உருகிப் பாடி வைத்தார்களே அதில் ஒன்றையாவது சொல்லி அங்கிருக்கும் இறைவனைப் போற்றித் துதிக்கிறார்களா? ஆசார்யர்கள் எத்தனை அற்புதமாய் ஸ்தோத்திரங்கள் சொல்லி பெருமாளையும், சிவனையும் போற்றிப் பரவசப் பட்டிருக்கிறார்கள் அதில் ஏதாவது ஒன்றையாவது அவன் முன் சொல்லி அவன் பெருமை பேசி அவனே தஞ்சம் என உளமார சரண் அடைகிறார்களா? கோவிலுக்குப் போகிறார்கள். எதற்கு ? பெருமாளே ! எனக்கு வீடு வாங்க வேண்டும், என் பிள்ளை நல்ல மார்க் வாங்கி நல்ல உத்யோகம் கிடைக்க வேண்டும் இத்யாதி இத்யாதி வேண்டுதல்களுக்குத் தானே பெரும்பாலானோர் செல்வது? இன்னும் ஒருபடி மேலே போய், அவனுடன் பேரம் வேறு பேசுகிறோம் இதைப் பண்ணினால் இத்தனை தேங்காய் உடைக்கிறேன், திருமஞ்சனம் பண்ணுகிறேன், வெள்ளி தங்கத்தால் எதையெதையோ பண்ணுகிறேன் என்று பிரார்த்தனைகள் . ஆக நம்மில் பலர் அவனை நம்முடைய wish fulfiller ஆக இருக்க வேண்டுகிறோமே தவிர அவன் தஞ்சம் என்றால் நம்மைக் காத்து நமக்கு எது நல்லதோ அதை அவன் செய்வான் என்ற நம்பிக்கை -- வேண்டாம் நினைப்பு---- இல்லாமல்தான் கோவிலகளுக்கு சென்று வருகிறோம்.
சரி ! கோவில்களில் கைங்கர்யம் செய்கிறார்களே ! அவர்களாவது அவர்களுக்குப் படியளப்பவனைப் போற்றுகிறார்களா? அர்ச்சனை என்று ஒன்று எல்லாக் கோவில்களிலும் உண்டு. அர்ச்சகர்களில் பலருக்கு அஷ்டோத்தர அர்ச்சனை என்றால் அஷ்ட நாமாவளி அர்ச்சனை (8 நாமங்கள்) என்றாகிப் போனது. அங்கு நடக்கும் லக்ஷார்ச்சனைகள், கோடி அர்ச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு லக்ஷமும், கோடியும் கிடைப்பதற்காகச் செய்யப் படுபவையே தவிர நாம் நினைப்பது போல் இறைவன் திருநாமங்களை அத்தனை முறை சொல்லி ஆனந்தப் படுவதற்காக அல்ல.
ஆனால், அவர்கள் வழிபாட்டைப் பார். அவர்களது அல்லாவைப் போற்றுதல் மட்டுமே அவர்கள் தொழுகை . இறைவன்மீது அவர்கள் நம்பிக்கை அசைக்க முடியாதது. துன்பம் வந்தபோது நம்மில் பலர் "பெருமாள் மீது நம்பிக்கையே போயிடுத்து. எத்தனை கோவில் போகிறேன். அப்படி இருந்தும் இப்படி சோதிக்கிறாரே !அவருக்குக் கண்ணில்லையா" என்றெல்லாம் புலம்புவதைப் போல் அவர்கள் என்றாவது அவர்கள் நம்புகிற இறைவனைச் சொல்லிப் பார்த்திருக்கிறாயா? அங்கு ஏதாவது பேரம் உண்டோ? இறை அனுபவத்தை உணர்வதற்கு நம் பெரியவர்கள் காட்டி வைத்ததுபோல் அங்கு ஒன்றுமில்லைதான். ஆனாலும் அந்த அசைக்க முடியாத இறை நம்பிக்கை நம்மிடம் உண்டோ?

பெருமாள் தன்னை பரிபூரணமாக நம்பி தஞ்சம் அடைந்தவர்களைத் தானே அபயம் கொடுத்து உய்விப்பார்?
அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் நலியத் தானே வேண்டும்?
ஆக அந்த முழு இறை நம்பிக்கை அவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாம் தாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று தனது கேள்விக்கு அவரே ஒரு பதிலும் அளித்தார்.
"என்ன மறுபேச்சில்லாமல் இருக்கிறாயே!நான் சொன்னதை ஏற்கிறாயா மறுக்கிறாயா சொல்" என்று ஆரம்பித்தார்.
"ஆரம்பத்திலேயே சொன்னேனே! இதற்கெல்லாம் தனி மூளை வேண்டுமென்று. இந்த வாதம் சரியா தவறா எனத் தீர்மானிக்க அடியேனால் இயலுமோ? ஆனாலும் கற்றறிந்தவர்களிடம் இதைக் கேட்டுச் சொல்கிறேன்" என்று முடித்து அந்த வாதத்தை இங்கு வைத்திருக்கிறேன். நண்பர் கருத்துக்கள் சரிதானா? கீழே இருக்கும் commentல் உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்களா?



1 கருத்து:

  1. அற்புதம் ஸ்வாமி. அவன் செய்வது எல்லாம் நன்மையே என்ற எண்ணம் வந்து விட்டால். என்ன கேட்க இருக்கிறது?

    பதிலளிநீக்கு