ஞாயிறு, 31 மே, 2009

எத்தனை எத்தனை இழந்தோம் நாம் !

31/5/2009 தேதியிட்ட "தினமணி கதிரில்" படித்தது.


மறையும் மரபு: கேட்கக் கூடலையே கெத்து வாத்தியம்!

நாம் நமது நெருங்கிய உறவினர்களையே பல நாட்களாகப் பார்க்க வாய்ப்பில்லாதபோது, சந்திக்கும் நம் சிறுவர்களுக்கு, ""இது நம்ம சித்தப்பாடா... அது நம்ம பெரியப்பாடா.. நீ பார்த்ததில்லை. அதனால்தான் உனக்குத் தெரியவில்லை'' என்று அறிமுகப்படுத்துவதுண்டு. அதுபோலத்தான் நாம் இப்போதைய சங்கீத ரசிகர்களுக்கு "கெத்து' வாத்தியம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதனை அகத்திய முனிவர் தனது வழிபாட்டின்போது வாசித்ததாகக் கூறுவர். இந்த கெத்து வாத்தியம் பண்டைக் காலத்தில் "ஜல்லிரி', "ஜல்லி' என்றெல்லாம் கூட அழைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ சுப்ரமண்ய சகஸ்ர நாமத்தில் "ஜல்லரி வாத்ய சுப்ரியாய நம' என்றும், முத்துசாமி தீட்சிதரின் கிருதியில் "ஜல்லி மத்தள ஜர்ஜர வாத்ய' (துவஜாவந்தி ராகம்) என்றும், பழைய குமாரதந்திரம் குறிப்புகளிலும் இப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோயில்களில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள்:

இடைக்காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கெத்து இசைக்கருவி திருக்கோயில்களில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாகத் திருக்கோயில்களின் வழிபாட்டில் ஒத்து, நாகசுரம், முகவீணை, திருச்சின்னம், எக்காளம், கெüரிகாளம், கொம்பு, நவுரி, துத்தரி, சங்கு, புல்லாங்குழல் போன்ற காற்றுக் கருவிகளும், பலி மத்தளம், கவணமத்தளம், சுத்த மத்தளம், தவில், பேரிகை, சந்திரப் பிறை, சூரியப் பிறை, செண்டை, இடக்கை, டமாரம், டங்கி, டமாரவாத்தியம், தவண்டை, ஜக்கி, ஜயபேரிகை, தப்பு, கனகதப்பட்டை, மிருதங்கம், மத்தளம் (முட்டு), நகார் (நகரா), பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், திமிலை, வீரகண்டி, வான்கா, தக்கை, கிடிகிட்டி போன்ற தோற்கருவிகளும், தாளம் பிரம்மதாளம், குழித்தாளம், மணி, கைமணி, கொத்துமணி, கோயில்மணி (ஓங்கார மணி), சேகண்டி (சேமக்கலம்) போன்ற உலோகக் கருவிகளும், வீணை, கெத்து போன்ற நரம்புக் கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. இதில் கெத்து இசைக் கருவியின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்ததாகும்.
அஷ்டாதச வாத்தியங்கள்

திருக்கோயில்களின் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 வகையான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். இவற்றில் மங்கள இசைக்கருவிகளில் 18 வகை உண்டு. அவை ஜோடி நாகசுரம், ஒத்து, சுற்றுத்தவில், மந்தத் தவில், டங்கா, கிடிகிட்டி, சக்கர வாத்தியம், பம்பை, மகா தமருகம், நகரா (முரசு), மகா, பேரி(உடல்), தவண்டை, மகா சங்கம் (சங்கு), சிகண்டி, சங்கீரணதாளம், நகரா தாளம், பேரி தாளம், பாணி (கைத்தாளம்) முதலியனவாகும். மேலும், செய்யூர் என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலில் "சர்வ வாத்தியம்' என்னும் பெயரில் 18 வகையான காற்றுக் கருவிகளும், தோல் கருவிகளும் இணைத்தும் தனித்தும் வாசிக்கப்படுகின்றன. அவை திருச்சின்னம், பூரி, தவளைச் சங்கு, நபூரி, முகவீணை, நாகசுரம், ஒத்து, பெரிய மேளம் (நாகசுரக் குழு), தகோர வாத்தியம் (நாகசுரமும், டமாரமும்), பங்கா (வங்கா), பஞ்சமுக வாத்தியம், டமாரம், ஜல்லரி, ஜெயபேரிகை (முரசு), நகரா (முரசு), டங்கா, தமுர் வாத்தியம், ராஜவாத்தியம், சர்வ வாத்தியம் (மேலே குறிப்பிட்ட அனைத்தும்) வாசிக்கப்படுகின்றன. இதில் செய்யூர் திருக்கோயிலில் வாசிக்கப்படும் சர்வ வாத்தியத்தில் "ஜல்லரி' என்று இந்த கெத்து வாத்தியம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இப்பொழுது வழிபாடுகளின் போது அவ்வளவாக வாசிக்கப்படுவதல்லை. மேலும் மறைந்து கொண்டும் இருக்கின்றன எனலாம்.

கோயிலில் கெத்து வாத்தியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் இந்த "கெத்து' வாத்தியம் தினசரி வாசிக்கப்படுகின்றது. அங்குள்ள ஸ்ரீ யோகாம்பிகை சந்நிதியில் தினசரி மாலை நேர பூஜையின் போது இதனை முறைப்படி வாசித்து வருகின்றனர். கி.பி.1600 ஆம் ஆண்டிற்குட்பட்ட ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இந்த ஜல்லரி வாசிக்கும் கைங்கர்யம் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குள்ள தெய்வம் ஸ்ரீ யோகாம்பிகை யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். எனவே, சாயங்கால பூஜையில் மென்மையான இசையைத் தரும் வீணையும் அதற்குப் பக்க வாத்தியமாக இந்த கெத்து வாத்தியமும் அங்கு வாசிக்கப்படுகின்றது. தஞ்சை சோழ மன்னர்களும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இதற்காக நிலங்களைத் தானமாக வழங்கி (சர்வ மான்ய தானம்) சன்னதி கைங்கர்யமாக இந்த ஜல்லரி கைங்கர்யம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கெத்து இசைக்கருவியின் அமைப்பு
இது வீணையைப் போன்றோ அல்லது தம்புராவைப் போன்றோ பார்வைக்கு இருக்கும். ஆனால் அமைப்பில் கோட்டு வாத்தியம் போன்று, அதாவது மெட்டுக்கள் (மேளம்) எதுவும் இல்லாமல் இருக்கும். வீணையை வாசிப்பவர் மடியின் மீது படுக்க வைத்த நிலையில் வைத்துக் கொண்டு வாசிப்பார். ஆனால் இந்த கெத்து வாத்தியத்தை தனக்கு முன்னால் சமதரையில் வைத்துக் கொண்டு வாசிக்கின்றனர். வீணையில் குடத்தைப் போன்றே அதன் மறுமுனையில் சுரைக்குடுக்கை தாங்கிக்காகப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் பின்பு யாளி முகம் கீழ்நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கெத்து இசைக்கருவியில் சுரைக்காய்க்குப் பதிலாக யாளி முகத்தின் பகுதி தண்டியிலிருந்து கீழ்நோக்கிச் சென்று தாங்கியாகவும் பின்பு மேல்நோக்கி யாளி முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும். இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறிய குச்சிகளை கையில் பிடித்துக் கொண்டு கம்பிகளின் மீது தட்டி இதனை வாசிப்பர். 2 குச்சிகளின் அடியிலும் 2 வெங்கல வெண்டயங்கள் பொருத்தப்பட்டு சலங்கை ஒலியையும் வெங்கல நாதத்தையும் குச்சிகள் உண்டாக்கும். இடது கைக்குச்சி (25 செ.மீ. நீளம்) மத்தியில் தட்டி வாசிப்பதற்கும் , வலது கைக்குச்சி (32செ.மீ. நீளம்) குடத்தின் மேலுள்ள குதிரையின் அருகில் தட்டி வாசிப்பதற்கும் ஏற்றார்போல் வாசிப்பவர் அமர்ந்திருப்பார். கச்சேரியில் மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்கட்டுகளும் ஜதிகளும் இந்த கெத்து வாத்தியத்தில் லாகவமாகத் தட்டி வாசிக்கப்படும். இக்கருவி லயச் சொற்களின் கன-நய-ஒலி வேறுபாடுகளுடன், தந்தியின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்பொழுது எவரையும் எளிதில் கவரும் தன்மையுடையதாக இருக்கும். இது பார்ப்பதற்குத் தந்திக் கருவியாக இருந்தாலும் வாசிக்கும் முறையில் ஒரு தாளவாத்தியக் கருவியாக உப பக்க வாத்தியமாகப் பயன்பட்டு வந்துள்ளது.
கெத்து வாசித்த இசைக் கலைஞர்கள்
இந்த கெத்து இசைக் கருவியை தஞ்சை சமஸ்தானக் கலைஞர்களான சேசையா சுப்பையா சகோதரர்களும் சுப்பையா குப்பையா சகோதரர்களும் பழங்காலத்தில் வாசித்துள்ளனர். மேலும் கிருஷ்ணபாகவதர்(கி.பி.1803), சுப்பராம ஐயர் (கி.பி.1906) போன்றோர்களும் இதனைச் சிறப்பாக இசைத்துள்ளனர். சமீப காலங்களில் சீத்தாராம பாகவதரும் அவர் மகன்களான வீராசாமி ஐயர் மற்றும் அரிகர பாகவதரும் (1895-1976) இதனை வாசித்துள்ளனர். தற்காலத்தில் அரிகர பாகவதரின் மகன்களான சீதாராம பாகவதர் மற்றும் சுப்ரமண்ய பாகவதர் இந்த "கெத்து' வாத்தியத்தை மிகவும் சிறப்பாக வாசித்து வருகின்றனர் என்றாலும், எதிர்காலத்தில் இந்த கெத்து இசைக் கருவியை வாசிக்க ஆள் இல்லை என்பதுடன், இசைக் கச்சேரிகளில் இந்த கெத்து இசைக்கருவி முற்றிலுமாக மறைந்தும் போய்விட்டது என்பதே உண்மை நிலையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக