ஞாயிறு, 31 மே, 2009

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபானம்



அடியேனது வழக்கம்போல, திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க பதிப்பொன்றில் படித்து ரஸித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபாநம்.

[ இது 41ம் பட்டம் அழகிய சிங்கர் அருள்மொழிகளுள் ஒன்று. இதற்கு 43ம் பட்டத்து அழகிய சிங்கர் மணிப்பவள உரை ஒன்று அருளிச் செய்துள்ளார். இவ்விரண்டும் அம்பத்தூர் அறநெறி அரங்கம் வெளியீட்டில் காணலாம். இத்த
மிழாக்கம் ஸ்ரீமான் திருப்பூந்துருத்தி கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களது.]

வெள்ளிய தோர்தெய்வ மண்டபமாம் -- அதில்
விளங்குந் தூண்களோர் நான்குளவாம்
ஒள்ளிய பொன்றிக ழூசலுண்டாம் -- அது
ஒளிவிடும் நவமணி குயின்றதுவாம். (1)

பொன்றிகழ் பீடமும் சேர்த்துளதாம் - அதில்
பூமக ளார்வன் வீற்றுளராம்.
தன்சரண் சார்வதோ ராசையினால் - சாரும்
தமர்கள்தாம் பற்றுதற் கேற்றவண்ணம் (2)

நீட்டிய பாதத்திற் பாதுகையாம் -- அதை
நேசமாய்க் கருடன்றான் தாங்கிநிற்பான்.
தேட்டமா மிவ்வலத் திருவடியை -- எண்ணும்
திருவுடை யார்பவக் கடல்கடந்தார். (3)

மடக்கிய திருவடி மற்றொன்றது -- செழு
மலர்மக ளெழுந்தருள் பீடமாகும்.
கடக்கரும் பவக்கடல் கடப்பதற்கு -- அவர்
கணுக்கால்கள் வாய்த்ததோர் தெப்பமாகும். (4)

முழந்தாள்க ளிரண்டும்மிக் கெழிலுடைத்தாம் -- அவர்
முன்றொடை கதலியின் தண்டுநிகர்.
மழுங்காத வழகுடன் கடிவிளங்கும் -- பொன்
மணிக்காஞ்சி பீதக வாடைசூழ. (5)

புரைதீர்ந்து விளங்கிடும் நாபிமலர் - இப்
புவனிக்கெ லாமது பிறந்தகமாம்.
திரையாடு கடல்தந்த மாமகள்வாழ் - அவன்
திருமார்வுக் கலங்காரம் திருமறுவாம். (6)

நரசிங்கன் கண்டத்துக் கலங்காரம் -- ஒளி
நலமிக்க கௌஸ்துப மாமணியாம்.
திருவங்கு மடிதன்னி லிடப்பாகத்தில் -- வீற்றுத்
தேவனார் அணைந்திட மகிழ்ந்திடுவாள் (7)

மார்புற வணைந்தங்கு வீற்றிருப்பாள் -- அலை
மாக்கடல் பூத்ததோர் மடக்கொடிதாள்.
சார்புறத் தானின்ற வண்ணமதை அவர்
சரணக்கு றிகாட்டுங் கையுணர்த்தும். (8)

அங்கையொன் றபயத்தைக் காட்டிநிற்கும் -- இரு
அழகிய நீண்டபெ ரும்புயங்கள்.
சங்கமும் சக்கரமும் தாங்கிநிற்கும் -- முகம்
தாமரை நாண்மலர் போன்றுளதாம். (9)

பற்பல வண்ணவில் வீசுமணி -- அங்குப்
பகலவன் காந்திபோல் சோதிதிகழ்
நற்கன கம்முடி சாற்றினராம் -- திரு
நரசிங்க னெழிலுடை முடிக்கணியா. (10)

மேற்புறம் பொன்மயப் பணியரசாம் --அவர்
மிக்கசெஞ் சோதிநற் பணிமுடியால்
நாற்புறமும் விரிந்துநற் குடைகவிப்பார் -- மேலே
நலமிகப் பொற்ப்ரபை விளங்கிடுமாம். (11)

பொன்மய மாம்சத்ரம் மேலுண்டு --அது
புரையற்று நலமிக்கு விளங்கிடுமாம்.
தன்மடி மேற்றிரு மாமகளை -- இடத்
தாமரைத் திருக்கண்ணால் நோக்கிடுவார். (12)


வலதுதி ருக்கண்ணால் பத்தியொடு -- ஆங்கே
வந்தெதிர் நிற்பாரை யாதரிப்பார்.
பொலன்மாலை கண்டத்திற் பூண்டிருப்பார் -- மற்றும்
பூஷணம் பற்பல தரித்திருப்பார். (13)

சாலக்ரா மத்தாலே மாலையுண்டாம் -- இன்னும்
ஸ்வர்ணத்தால் யஜ்ஞோப வீதமுண்டாம்
மாலுக்க லங்காரம் காசுமாலை -- முத்து
மாலைகள் சம்பக மாலையுண்டாம். (14)

மதிப்புக் கடங்காத விலைபெற்றதாம் -- காஞ்சி
மட்டற்ற மாணிக்க மிழைத்துளதாம்.
துதிப்பார்க் கநுகூலம் செய்பவராம் -- ஹரி
தொண்டரைப் புரப்பதில் தீக்ஷிதராம். (15)

மாலோல தேவனைக் கருதுவார்க்கு --அடி
மலர்முதல் முடிவரை யெண்ணுவார்க்கு
மாலோலன் திருவடிப் பத்திதன்னை -- மிக
மட்டற்று வளர்த்திடும் பெற்றியதாய்
மாலோல சடகோப யோகிவரர் -- பெரு
மகிழ்ச்சியால் ஸோபான மியற்றித்தந்தார். (16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக